உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம் – அதில் ஓட்டை போடும் சில்லறைத்தனங்கள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக டிப்ளமோ அக்ரியாவது முழுநேரப் பாடத்திட்டத்தில் படித்திருக்கவேண்டும். இதுவரை குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற எதுவுமே இல்லாததால் எஸ்எஸ்எல்சி பெயிலானவர்கள்கூட உரிமம் வாங்கிக்கொண்டு புண்ணாக்கு, தவிடு, மூக்கணாங்கயிறு போல ஒரு சாதாரண சரக்காகவே விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் பல்வேறு வகையில் கோரிக்கையாகவும், நெருக்கடியாகவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாக ஐதரபாத்திலுள்ள MANAGE வாயிலாக Diploma in Agricultural Extension Services for Input Dealers என்ற பட்டயப்படிப்பு வழங்க ஏற்பாடானது. இதன்படி பிரதி ஞாயிறு ஒரு வகுப்பு என்றவீதம் 48 நாட்கள் ஓராண்டில் முடித்து தேர்வெழுதினால் பட்டயம் வழங்கப்படும்; இதன்மூலம் அவர்களது உரிம நீட்டிப்பு செல்லுபடியாகும் என்பது ஏற்பாடு.

நஞ்சில்லா உணவு, மரபுவழி மாண்பு, சிறுதானிய சிற்றுண்டி என்றெல்லாம் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மாழ்வாரியம் பேசும் மூடர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழத்தை இழுத்து மூடவேண்டும் என்கிற தொணியிலும் பேசிவருகின்றனர். ஜெயமோகன் போன்ற இந்துத்வா ஆதரவு எழுத்தாளர்கள் விவசாய பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவாக்கறைகள் என்று நம்மாழ்வார் புகழ்பாடும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதிக்கொடுத்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றனர். ஆனால் நஞ்சில்லா உணவு என்பது எப்படி திடீரென்று சாத்தியமாகும், அதற்கான முதற்படி எது, படிப்படியாக எப்படி, எந்த திசையில் அரசாங்க திட்டங்கள், வேளாண்மைத்துறை கொள்கை முடிவுகள், தனியார் இடுபொருள் நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் பயணிக்கவேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாமல் Cow excreta மூலம் வல்லரசாகிவிடலாம் என்று கனவுகாணும் அவர்களது அறியாமையையும் நாம் அரவணைத்தே செல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண் கவுன்சில் சட்டம் 2009 முன்மொழிந்தது இத்தகைய பல சீர்திருத்தங்களைத்தான். ஆனால் அஃது இங்கே கிடப்பில் போடப்பட்டாலும் மத்திய அரசால் வேறு பெயரில் கொஞ்சம் உயிரூட்டப்பட்டது. அதை முடக்கும் முயற்சியில ஈடுபட்ட வியாபாரிகள் சங்கங்கள் பின்வாசல் வழியாக நுழைந்தது இருக்கட்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இத்தகைய வகுப்புகளை நடத்திவருவது அங்கிருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதற்கு, அரசின் கொள்கை முடிவுகளுக்கு பல்கலைக்கழகம் கட்டுப்பட்டாகவேண்டும் என்று கொடுக்கப்படும் வழவழா கொழகொழா விளக்கங்களைக் கேட்டு பச்சைக்குழந்தைகூட சிரிக்கக்கூடும்.

இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ அல்லது நான்கு ஆண்டுகள் பி. எஸ். சி விவசாயம் முழுநேரக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு போதுமான ஞானம் இருக்காது என்றால் வாரம் ஒரு வகுப்பு வீதம் 48 வாரங்கள் முடித்த ஒரு நபரால் என்ன செய்துவிட முடியும்? 45 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த 48 மணிநேர படிப்புகூட தேவையில்லை என்பது எவ்வளவுதூரம் இந்தியர்களுக்கு Regulatory Compliance குறித்து எத்தகைய புரிதல் இருக்கிறது என்பதற்கு ஒரு கேவலமான உதாரணமாகும். மாற்றங்கள் மேஜிக் மூலம் வராது. அதற்கு ஒரு துறைசார்ந்த ஆழ்ந்த புரிதல்கள், அதற்கான வழிமுறைகள், செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் வேண்டும். அக்ரி படித்தவர்கள் மட்டும் லைசன்ஸ் வாங்குமளவுக்கு வந்தால் அவர்கள் மட்டுமே லாபி அமைத்து சம்பாதிப்பார்கள், விவசாயிகளுக்கு இதனால் என்ன இலாபம் என்று சிலர் கேட்கக்கூடும்.

பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் – இந்தியாவில் அனுமதிக்கப்படாத – பூச்சிக்கொல்லி மருந்துகள் 200 லிட்டர் பேரல்களில் மதுரைக்கு பல்வேறு பெயர்களில் கடத்திக் கொண்டுவரப்பட்டு Bio-pesticide என்றபெயரில் பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது அவ்வளவாக விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை. காலவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துச்சென்று உண்மை எது, போலி எது என்றே தெரியாத அளவுக்கு போலி லேபிள்களை ஒட்டித்தரும் கும்பல்கள் கோயமுத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளில் புழங்குவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.

உரிமம் இரத்து செய்யப்பட்டாலும் மறுபடியும் வேறு யாராவது பெயரில் வாங்கிக்கொள்ளலாம் என்ற இன்றைய நிலை மாறாதவரை விவசாயிகளுக்கு விடிவில்லை. முறையாக கல்லூரி வாயிலாக அக்ரிக்கல்ச்சர், ஹார்ட்டிக்கல்ச்சர் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே உரிமம் பெறமுடியும், முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆயுட்காலத்துக்கும் வேளாண் இடுபொருள் செய்வதிலிருந்து blacklist செய்யப்படுவார்கள் என்பது மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

சிக்கினால் பிளாக்லிஸ்ட் செய்யப்படுவார்கள் என்பதால் லாபி அமைத்து விலையை செயற்கையாக உயர்த்துவது, போலிகளை விற்பது இருக்காது என்றாலும் படித்தவர்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளாக்கி விடுவார்கள் அல்லவா என்ற கேள்வி வாட்சப், பேஸ்புக் வழியாக விவசாயத்தைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு தமிழனுக்கும் தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சந்தா வசூல்செய்து, கால்நடை மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தியதற்கு பிறகு தமிழக அரசு வேளாண் அலுவலர் சங்கம், துறைசார்பாக சொல்லிக்கொள்ளும்படியாக ஏதாவது அதிரடியைச் செய்திருக்கிறதா, நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ள இயைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் 5-வது இலக்கமிட்ட இடத்தில் பதில் இருக்கிறது. உரிமம் புதிதாக வழங்குவது, புதுப்பிப்பது, மாறுதல்கள் செய்வது என எல்லாவற்றிலும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையோ, கால வரையறையோ இல்லாமல் பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பின்தேதியிட்டு கையொப்பமிட்டுக் கொடுப்பதுதான் 99% அலுவங்களில் நடைபெறுகிறது. பாலிதீன் பைகள்கூட 50 மைக்ரான் தடிமனில் கிடைக்கையில், வேளாண்துறையின் விண்ணப்பங்கள் 40 மைக்ரான் மாதிரியான தடிமனுள்ள ஒரு தினுசான காகிதத்தில் இருக்கிறது; இந்நிலையில் கணினி மூலம் விண்ணப்பித்து டிஜிட்டல் சிக்நேச்சர் மூலம் ஒப்புகை வாங்கி, உரம் பூச்சிக்கொல்லி இருப்பு நிலவரத்தை அலைபேசி செயலிமூலம் இடுபொருள் விற்பனையாளர்கள் துறைக்கு தினசரி தெரியப்படுத்துவது நடைமுறைக்கு வரும்போது இதைப் படிக்கும் அத்துனைபேரும் ஓய்வு பெற்றிருப்பார்கள். மேலே உள்ள பத்தியில் எழும்பிய ஐயத்துக்கான விளக்கம் இந்த பத்தியில் விலகியிருக்கக்கூடும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான உரிமங்களை பட்டதாரிகளைக்கொண்டு replace செய்ய போதுமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் இருக்கிறார்கள். இந்த துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்தாமல் இருப்பதாலும், தொழில் ஆரம்பிக்க போதுமான வழிகாட்டுதல் இல்லாததாலும் வேறு வழியில்லாமல் திறமையான பலர் வங்கிகளில் தங்களை சுருக்கிக்கொள்கின்றனர். மாணக்கர்களுக்கு ஏன் போதுமான தொழில்முனைவு குறித்த திறமையில்லை என்ற கேள்விக்கான பதில் இந்த சுட்டியில் இருக்கிறது. https://www.rsprabu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/58/

தனியார் வேளாண்கல்லூரிகள் பலவும் அக்ரி சீட்டுகளை கூவிக்கூவி விற்பதை பொறியியல் கல்லூரியோடு ஒப்பிட்டு வேளாண்மைக்கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற பீதியை சிலர் தொடர்ந்து கிளப்பிவருகின்றனர். அதற்கான பதில் இந்த சுட்டியில்: https://www.rsprabu.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/52/

2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் மோடி அவர்களின் நோக்கத்தைத் தகர்த்து அவப்பெயர் ஏற்படுத்த செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் Droneகளை பரீட்சார்த்தமுறையில் வயல்களில் பயன்படுத்தி ஆய்வுகளை செய்ய ஆரம்பித்திருக்கும் சூழலில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமெனில் நமக்கு எதற்கு வம்பு என்றிருக்கும் ஒரு comfort zone-ஐ விட்டு வெளியே வந்து சிந்திப்பதும், செயல்படுவதும் அவசியமாகும். ஏன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்ற பொதுவான தலைப்பைத்தவிர பொதுவெளியில் சொல்லிக்கொள்ளும்படியான உரையாடல்களை காணமுடிவதில்லை. மானியம் வழங்குவது, கடன் வழங்குவது, பின்னர் தள்ளுபடி செய்வது, ஏரி குளம் தூர்வாருவதைத் தாண்டி அரசாங்க அமைப்புகள் செய்யவேண்டிய பல விசயங்கள் பேசப்படாமலேயே இருக்கிறது. அதை முன்னெடுக்கும் பொறுப்பு – சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழும்வரை – இதைப் படித்துக்கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

லிப்ஸ்டிக் மிளகாய்!

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்திலுள்ள பியாடகி (Byadagi) நகரைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அங்கு நடைபெறும வறமிளகாய் வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 300 கோடி. பியாட்கி லோக்கல் என்றழைக்கப்படும் அந்த உள்ளூர் மிளகாய் இரகத்துக்கு Geographical Indicator மதிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த காரத்தையும், அதீத சிவப்பு வண்ணத்தையும் உடையது. காரத்தை SHU (Scoville Heat Units) என்ற அலகாலும், வண்ணத்தை ASTA value (American Spice Trade Association) என்ற அலகாலும் அளக்கிறார்கள்.

இந்த வறமிளகாய்களில் இருந்து குறைந்த வெப்பநிலையில் பல்வேறு படிநிலைகளின் மூலம் எடுக்கப்படும் ‘ஒலியோரெசின்’தான் லிப்ஸ்டிக், நெய்ல் பாலிஷ் போன்றவற்றின் வண்ணத்துக்கான அடிப்படைப் பொருள். பல கோடி ரூபாய் வர்த்தகம் இதில் உண்டு.
எதற்காக இந்த முன்னுரை என்றால் இவ்வளவு மதிப்புள்ள இந்த மிளகாய் வர்த்தகத்தில் ஹைப்ரிட் இரகங்களைப் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தைக் கூட்ட, பெண்களுக்கு தரமான லிப்ஸ்டிக்கைத் தர ஒருசாரார் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக்வாழ் சமூகத்துக்கு தெரிவிப்பதற்காகத்தான்.

ஓர் இந்திய நிறுவனமும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் ஹைபிரிட் இரகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் உள்ளூர் இரகத்தின் அடர் சிவப்பு வண்ணமளவுக்கு வர இயலவில்லை. இதனால் லிப்ஸ்டிக், நக பாலிஷ் தயாரிப்புக்கு ஏதாவது பங்கம் வருமா என முப்பதுக்கும் மேற்பட்ட தடிதடியான ஆண்கள் உட்கார்ந்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையை உணரமுடிந்தது.

விரைவில் திருமணமாகவிருக்கும் ஒரு சகா, ”பாத்தவுடனே கிஸ் பண்ணனும்னு தோணற மாதிரி கலர், பிளேவர் எதுனா மார்க்கெட்ல இருக்கா, அதுக்கு சப்போர்ட் பண்ற ஆஸ்பெக்ட்ல நம்மகிட்ட புராஜெக்ட் எதாச்சும் ஆன்கோயிங்ல இருக்கா?” என்று கேட்டார். நாம விதை விற்க போறோமா, உறை விற்க போறோமா என்று தொண்டைவரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு ‘அப்படி ஏதும் இருக்கறதா எனக்கு தெரியல’ என்று முடித்துக்கொண்டேன்.

#நெடுஞ்சாலை #பார் #தடை #பின்விளைவுகள்

குளத்தில் தாமரை வளர்த்து தண்ணீரைச் சேமித்த தமிழன் – வாட்சப் பார்வர்டு முட்டாள்கள் சூழ் உலகு

குளங்களில் தாமரை, அல்லி போன்ற தாவரங்களை வளர்த்து நீர் ஆவியாவதைத் தடுத்த நம் முன்னோர்களின் பெருமையை தெர்மாகோல் சோதனை சிறுமைப்படுத்திவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் ஆதங்கப்படுகின்றனர். அதைப் பார்க்கும்போது தாமரைக்கு தமிழகத்தில் எத்தனை சோதனைகள் என்று கவலை வந்துவிட்டது.

தாமரை குளங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏதாவது இருப்பின் தெரியப்படுத்துங்கள்; நானும் கற்றுக்கொள்கிறேன்.

Hydrological cycle மிகவும் பெரிய சப்ஜக்ட் என்றாலும் நமக்குத் தேவையான அடிப்படைகளைப் பார்ப்போம். மழையாக வரும் நீரானது ஆவியாகி (evaporation) வளிமண்டலத்தில் திரும்பவும் நுழைகிறது. தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது இலைகளின் மேல் உள்ள நுண்துளைகளான ஸ்டொமேட்டா (stomata) வழியாக பகல்நேரத்தில் ஆவியாகிக்கொண்டே இருக்கும் நிகழ்வு transpiration எனப்படுகிறது. இஃது இலைப்பரப்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து நீரை இழுப்பதால் மண்ணிலுள்ள சத்துக்கள் தாவரத்தை வந்தடைய உதவுகிறது. இந்த Evaporation, Transpiration, வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான நீர் மூன்றையும் சேர்த்து Consumptive Use (CU) என்கிறோம். இருந்தாலும் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான தண்ணீர் என்பது evaporation & transpiration-ஐ ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஒன்று என்பதால் மண்ணிலிருந்து ஏற்படும் நீர் இழப்பானது Evapotranspiration (ET) என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ET-யை அளவிடும் Lysimeter சோதனைகள், மண்ணுக்கு அடியில் நீர் கசிந்து செல்லும் Sub Surface Runoff போன்றவை இங்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடலாம்.

தாவரத்துக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து தருமளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருப்பது Field Capacity (FC) எனப்படும். ET மூலமாக நீரிழப்பு ஏற்படுகையில் மழையாலோ, பாசனத்தாலோ நீரானது replace செய்யப்படாதபோது மண்ணுக்குள் வறட்சி ஏற்படுகிறது. இருந்தாலும் ஸ்டொமேட்டாக்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றி இலைப்பரப்பின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன (மனித உடலின் வியர்வைச் சுரப்பிகளை ஓரளவுக்கு ஒப்பிடலாம்). இலைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவுக்கு வேர் வழியாக உறிஞ்சப்படும் நீர் இல்லாதபோது turgidity குறைந்து செடி வாடத்தொடங்குகிறது.

பயிர்களால் உறிஞ்சப்படும் நீரில் கிட்டத்தட்ட 99% transpiration மூலம் வெளியேறிவிடுகிறது என்பதால் இரசாயனங்கள் மூலம் ஸ்டொமேட்டா துளைகளை அடைப்பது அல்லது சூரிய ஒளியின் intensity-யைக் குறைப்பது போன்ற வகையிலான ஆய்வுகள் நிறைய உண்டு. ஒரு புதிய வகை anti-transpirant இரசாயனத்தைத் தெளிப்பதன் மூலம் இலைத்துளைகளை அடைத்து நீர்த்தேவை குறைகிறதா என அண்மையில் பல்வேறு dosage மூலம் நிறுவிக்கொண்டிருந்தோம். T. Stanes நிறுவனம்கூட சந்தையில் Green Miracle என்றபெயரில் ஒரு anti-transpirant திரவத்தை விற்கிறது; எங்கள் ஊர்ப்பக்கம் வெற்றிலை விவசாயிகளிடம் அது பிரபலம் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

பயிரில் செயற்கையாக உண்டாக்கப்படும் வறட்சி, கட்டுப்படுத்தப்பட்ட இலைத்துளை நீராவிப்போக்கு, வறட்சியைத் தாங்கும் இரகங்கள், மண்ணுக்கடியில் ஏற்படும் வறட்சியை Electrical Conductivity மூலம் அளவிட்டு வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், சூரிய ஒளி அளவு மற்றும் பல காரணிகளுடன் இணைத்து உண்டாக்கப்படும் சமன்பாடுகளின் மூலம் நிறுவி புதிய இரகங்களை இனங்காணும் ஓர் ஆய்வுத்திட்டத்தில் சிலபல ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றேன். ஒற்றை இலக்க Coefficient of Variation உள்ள தரவுகளை தருமளவுக்கு துல்லியமாக திட்டத்தை நடத்திய அனுபவமுண்டு என்பதோடு ஒரு சிப்பம் மிக்சர் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அளவுக்கு இது தொடர்பான பயிற்சி பட்டறைகளில் உட்கார்ந்திருந்ததால் இந்த தாமரை மேட்டர் ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது.

தாவரங்கள் வளரும் சூழலைக்கொண்டு மூன்று பெரும் வகையாக பிரிக்கலாம். 1) Hydrophytes – நீர் அதிகமாக உள்ள சூழலில் வளர்வன. 2) Mesophytes – போதுமான நீர் உள்ள பகுதிகளில் வளர்வன. அதாவது அதிக நீரும், அதிக வறட்சியும் இல்லாத சூழல். 3) Xerophyte – வறண்டநில/பாலைவனச் சூழலில் வளர்வன.

ஒவ்வொரு தாவரமும் வாழும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. தாமரையானது நீரில் மிதப்பதற்காக அகலமான இலையையும், நீர் ஒட்டாமல் இருக்க மெழுகுபோன்ற படலத்தையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கிறது. ஆனால் வேர், தண்டுப்பகுதிகளுக்கு தண்ணீருக்குள் போதுமான ஆக்சிஐன் கிடைக்காது என்பதால் ஸ்டொமேட்டா வாயிலாக காற்று உள்ளே சென்று வருவதையும், உள்ளே உண்டாகும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஏரன்கைமா செல்களில் சேமித்து வைக்கப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதால் Transpiration மற்ற தாவரங்களைக் காட்டிலும் தாமரை, அல்லிச் செடிகளில் அதிகமாகவே நடக்கிறது. மேலும் இந்த transpirationஆனது குளங்களில் இயல்பாகவே நடக்கும் evaporation-க்கு சமமானது என்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால் தாமரை இலைகளால் water conservation என்பது வெறும் நம்பிக்கை அளவிலான hypothesis என்ற அளவில்தான் தெரிகிறது.

அதிக நீர் உள்ள சூழலில் வளரும் தாமரையானது தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகத்தான் தண்ணீரில் வாழ்கிறதே தவிர தண்ணீரைச் சேமித்து மற்ற உயிரினங்களுக்கு அளிக்க அல்ல. பாலைவனத்தில் இருக்கும் கள்ளிச்செடி, தான் வளர்வதற்காகத்தான் போராடுகிறது என்பதோடு ஏதாவது விலங்குகள் கடித்து காயத்தை உண்டாக்கினால் நீர் இழப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் பரிணாமத்தில் முட்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உயிரி மற்ற உயிரியைச் சார்ந்து வாழும் symbiotic relationship வேறு கோணத்தில் வருகிறது. அதுவும் அந்த இரண்டு உயிரிகளின் நலனுக்குத்தானே தவிர மனிதனின் சுயநலத்துக்கு அல்ல.

தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக transpiration potential கொண்ட தாவர இனங்களை வளர்ப்பதன் மூலம் நீரை அப்புறப்படுத்துவது Bio-drainage எனப்படுகிறது. இவற்றின் ஆணிவேர்கள் வெகு ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சி ஆவியாக்குவதால் phreatophytes எனப்படுகின்றன. யூகலிப்டஸ் மரம் ஆரம்பத்தில் biodrainage-க்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சமீபத்திய ஆய்வுகள், அவை அதிக நீரை உறிஞ்சுபவை அல்ல என்று ‘நிறுவுகின்றன’. ஆனால் ICAR-இன் Handbook of Agriculture யூகலிப்டஸை இன்னமும் phreatophyteஆகவே வைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். அப்படின்னா சீமைக் கருவேலமரம் பற்றியும் சொல்லுங்கள் என தயவுசெய்து யாரும் கேட்டை ஆட்டவேண்டாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வேளாண்மையை உணர்ச்சிபூர்வமாக பார்ப்பதைத்தான் பாரம்பரியம் என்று பெரும்பாலோனோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை உடைக்கப்படுவதை பலரும் விரும்பாததால் ஏற்படும் வெற்றிடத்தை சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த எந்த அறிவும் இல்லாத நம்மாழ்வாரிய மூடர்கள் முன்னோர்களின் மரபுவழி ஞானம் என பல்வேறு பொய், புரட்டுகளை கலந்துகட்டி அடித்துவிட்டு நிரப்பி வருகின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறோம். ஆனால் எந்த கிராமமாவது காலியாகியிருக்கிறதா, உணவுப்பொருட்களின் விலை ஏறியிருக்கிறதா, அப்படியெனில் இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹிரியூர் மற்றும் மைசூர், மாண்டியா, ஷிமோகா பகுதிகளுக்கு 1960, 70-களில் தமிழர்கள் ஏன் குடியேறினார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்.

நம் முன்னோர்களின் ஞானம் மிக அற்புதமானது. ஏரிக்கரையில் குளிக்க வந்த பெண்ணிடம் “என்ன அருக்காணி, மச்சான் வெளியூர் போயிட்ட மாதிரி தெரியுது” என்று மைனர்கள் கேட்டுவைத்ததுகூட வருங்காலத்தில் மரபுவழி சிலேடை இலக்கியத்துக்கு உதாரணமாக வாட்சப்பில் வந்து தொலைக்கலாம்.