இடைத்தரகர்களால் வாழும் விவசாயம்

அந்திமழை – மார்ச் 2019 – இதழுக்காக எழுதிய கட்டுரையின் திருத்தப்படாத வடிவம்:

விவசாயக் குடும்பங்களிலிருந்து கல்வியால் வெளியேறி வேறு தொழில்களுக்குச் சென்ற இளைய தலைமுறையினரால் ஜீரணித்துக்கொள்ள முடியாத ஒன்று தங்களது பெற்றோர்களுக்கும் முதுமை வந்து சேரும், தமக்கும் வயதாகும் அதனால் உடல்வலு குறையும் என்பதைத்தான். வயதாகின்ற காரணத்தால் முழுநேர வெள்ளாமையைக் குறைத்துக்கொண்டு தென்னை, மா, மரவகைகளை நட்டுவிட்டு கால்நடைகளையும் குறைத்துக்கொள்வதை இன்டர்நேஷனல் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டு அவ்வப்போது கிராமத்துக்கு காரில் வரும் அடுத்த தலைமுறை, விவசாயம் அழிந்துவிட்டதைப்போல உணர ஆரம்பித்து சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் புலம்ப ஆரம்பிப்பதே விவசாயம் அழிந்து வருவதாக நாம் நினைத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

தொன்னூறுகளில் வந்த ஐ.டி. வளரச்சியை ஒட்டி வேலைவாய்ப்பைப் பெற்று நாற்பதுகளில் நகரங்களில், வெளிநாடுகளில் வாழும் புதிய தலைமுறையினர் பெற்றோர்களுக்கு உடல்நிலை சரியில்லாதபோது மருத்துவமனைக்கு அடிக்கடி அழைத்துச்செல்லும் நிலை வரும்போது தமது பெற்றோர்களுக்கும் வயதாகும் என்கிற யதார்த்தத்தை மறந்து உணவு சரியில்லை, பால் சரியில்லை, நாட்டுச்சர்க்கரை பயன்படுத்தவில்லை, ஆர்கானிக் உணவு சாப்பிட்ட என் பாட்டி நூறாண்டுகள் நோய்நொடியில்லாமல் வாழ்ந்தார் என்று பலவாறாக குழப்பங்களில் ஆழ்ந்துவிடுவதும் இன்றைய விவசாயம் குறித்து பல தவறான புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயி என்பதற்கான வரையறையே இன்னும் ஐயத்துக்கு உரியதாக நம் நாட்டில் இருக்கிறது. நிலம் வைத்திருக்கும் அனைவரும் விவசாயி என்று சொல்லிக்கொள்கின்றனர். இன்று கணிசமான நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நகரத்தில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நில உரிமையாளர்கள் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கிறது என்பதற்காக விவசாய தங்க நகைக்கடன், சிட்டா அடங்கலைக் காட்டி பயிர்க்கடன் பெற்றுக்கொள்கின்றனர். வங்கிகளுக்கு இஃது எல்லாம் நன்றாகத் தெரியும் என்றாலும் தங்களது கடன் வழங்கல் இலக்கு எட்டப்படுவதோடு, கடனுக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதால் கண்டுகொள்வதில்லை.

பருவமழை சரியாக பொழியாததற்கு தீர்வு யாரிடமும் இல்லை. அண்டை மாநிலங்களிலிருந்து வரவேண்டிய ஆற்றுநீர் வரவில்லை என்பது மேல்மட்ட அளவில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகிவிட்டது.

விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. உற்பத்தியைக் கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு எந்த உரிமையையும் வழங்காத விவசாயிகள், விலையையும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் சரக்கையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று நாம் பேசுவதற்கு தயாரில்லை. உதாரணமாக அதிக தண்ணீர் தேவைப்படக்கூடிய தென்னை, வாழை போன்ற பயிர்களைப் பயிரிடுவதைக் கட்டுப்படுத்தினால் பல ஆயிரம் ஏக்கர்களில் மற்ற விவசாயிகள் மேட்டாங்காட்டுப் பயிர்களைச் சாகுபடி செய்ய இயலும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கிராமத்துக்கு இத்தனை ஏக்கர் தென்னை, வாழை மட்டுமே பயிரிட அனுமதி என்று அரசு சொன்னால் கேட்டுக்கொள்ள விவசாயிகள் ஆயத்தமாக இருந்தால்தானே வரக்கூடிய விளைபொருளுக்கான சந்தையையும், தேவையையும் கணித்து விலை நிர்ணயம் செய்ய ஒரு மாடலை ஏற்படுத்த முடியும்.

தொழில்நுட்பங்களும், சாலை வசதிகளும் பெருகுவதால் நுகர்வோருக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைத்துள்ளன என்பதை மறுக்க இயலாது. ஆன்லைனில் ஒரு பொருள் வாங்கினால் எப்படி இரண்டு நாட்களில் மும்பையில் இருந்து திருச்சிக்கு டெலிவரி செய்யப்படுகிறது என்பதை மக்கள் அறிவர். அதேபோல் தக்காளி இங்கே கிலோ நாற்பது ரூபாயைத் தொடும்போது, சட்டீஸ்கரில் பதினைந்து ரூபாய்க்கு கிடைத்தால் இங்குள்ள வியாபாரிகள் பெரும்பணத்தை – எந்த காப்பீடும் இல்லாமல் தனிநபர்களுக்கு இடையேயான பரஸ்பர நம்பிக்கையில் – இறக்கி பத்து, பத்து டன்னாக அதிகரிக்கின்றனர். கிலோ பதினைந்து ரூபாய்க்கு சட்டீஸ்கரில் வண்டியேறும் தக்காளிக்கு போக்குவரத்து செலவையும் சேர்த்து இருபத்தைந்து ரூபாய்க்கு இங்கு வந்து சேர்கிறது. பத்து ரூபாய் இலாபத்துடன் முப்பத்தைந்து ரூபாய்க்கு சந்தையை வந்தடையும்போது நாற்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்த நுகர்வோருக்கு ஐந்து ரூபாய் குறைவாகக் கிடைத்துவிடுகிறது.

உள்ளூர் விவசாயிக்கு இதில் இலாபம் குறைவதையோ, நட்டப்படுவதையோ நுகர்வோர் ஒருபோதும் கவலைப்படுவதில்லை. விவசாயிகளைக் பாகாப்போம் என்று சொல்பவர்கள் ஆண்டு முழுவதும் தக்காளி ஐம்பது ரூபாய்க்குத்தான் கிடைக்கும் என்றால் அறச்சீற்றம் கொண்டு அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பார்கள். Free market trade-இல் உள்ள பலன்களை அனுபவிக்கையில் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளத்தானே வேண்டும்.

பலராலும் மாற்றுப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து ஆலோசனை சொல்லப்பட்டு வருகிறது. இதில் நகரத்தில் வாழ்ந்துகொண்டு அல்லது கிராமத்தில் இருந்தவாறே கூடுதலாக சில தொழில்களில் ஈடுபட்டு வருபவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள், முழுநேர விவசாயம் செய்பவர்கள் முன்னெடுக்கும் மாற்றுப்பயிர்கள் என இரண்டுவகை உண்டு.

தென்னை, மா, மாதுளை, கொய்யா, வாழை, முருங்கை, சவுக்கு, யூகலிப்டஸ், மலைவேம்பு போன்றவற்றை பெரும்பாலும் absentee landlords எனப்படும் நகரவாழ் விவசாயிகள் விரும்புகின்றனர். அரசாங்கத்தின் கணிசமான மானியங்களை உறிஞ்சிக்கொள்ளும் செல்வாக்குப் பெற்றவர்களும் இப்பிரிவினரே.

மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்), செங்காந்தள் மலர் (கண்ணுவலிக் கிழங்கு), பூனைமீசைச் செடி, கீரைகள் போன்றவற்றை ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்கும் முழுநேர விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். சந்தை ஏறி இறங்கும் என்பதைத் தெரிந்தே இதில் ஈடுபடுவதால் பெரும் இலாபம் கிடைத்தாலும் சரி, நட்டமானாலும் சரி, அடக்கி வாசிக்கின்றனர்.

உலக வர்த்தக மையத்துடன் இந்தியாவும் இணைந்திருப்பதால் பல விளைபொருட்கள் சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொப்பரை விலையைவிட சாலமன் தீவுகளில் இருந்து வரும் கொப்பரை நம்மைவிட நான்கில் ஒருபங்கு விலைக்கே கிடைக்கிறது. எங்கு மிகக்குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் விளைபொருட்களை இறக்குமதி வரி விதித்து தடுக்க முடியாது என்பதால் உள்ளூர் கொப்பரையின் விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியாது. உள்நாட்டு விவசாயிகளைக் காப்பதாக நினைத்து நாம் இறக்குமதியைத் தடுத்து நிறுத்தினால் ஏலக்காய், மஞ்சள் போன்ற வாசனைத் திரவியப் பயிர்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் உலக வர்த்தக மையத்தின் வாயிலாக விதிக்கப்படும்.

இது புலி வாலைப் பிடித்த கதை மாதிரி தெரிந்தாலும் macro level-இல் புரிந்தகொள்ள வேண்டியது என்னவென்றால் மிக்குறைந்த செலவில் உற்பத்தி செய்ய வேண்டும், விவசாயி என்ற போர்வையில் உட்கார்ந்திருக்கும் நில உரிமையாளர்களைக் கட்டடங்களை வாடகைக்கு விட்டுள்ள ஓனர் போலவே கருதி அவர்களது வருமானத்துக்கு வரி விதிப்பதும், மானியங்களை நேரடியாக விவசாயம் செய்பவர்களுக்கு வழங்குவதுமே நம் முன்னர் இருக்கும் பெரிய சவால் என்பதே. இப்படியெல்லாம் சொன்னாலே ‘அப்ப, நிலம் வச்சிருக்கற நான் விவசாயி கிடையாது, எனக்கு எந்த சலுகையும் அரசாங்கத்துல இருந்து கிடைக்காது, அப்படித்தானே?’ என்று பலர் சீறுவதைப் பார்க்க முடியும்.

வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதியில் உலக வர்த்தக மையத் தலையீடுகள் (இடுபொருட்களுக்கான மானியம் வழங்குவதில் உள்ள சிக்கலான கணக்கீடுகள் காரணமாக) மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு குறைவு. உதாரணமாகத் தேங்காய் ஏற்றுமதி, இறக்குமதியைக் காட்டிலும் தேங்காய் எண்ணெயில் கட்டுப்பாடுகள் குறைவு. இந்தியாவிலிருந்த பல ஆயிரம் கோடிகளுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் சீனாவைக் காட்டிலும் நாம் வெகுதூரம் பின்னே இருக்கிறோம்.

மூலிகைப் பயிர்களுக்கான சர்வதேச டிமாண்ட் வருடந்தோறும் அதிகமாகி வருகிறது. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக ஏற்றுமதியாவது இசப்கோல் என்ற மூலிகை குஜராத், இராஜஸ்தானிலிருந்து என்றால் அதற்கடுத்த இடத்தில் இருந்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது தமிழகத்தில் இருந்து செல்லும் சென்னா இலைகள்தான்.

மருந்துக்கூர்க்கன், முருங்கை இலைப் பொடி, பூனைமீசைச் செடி, ஃபேசிஃபுளோரா செடி, வல்லாரை, அமுக்கராங்கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு என பலவும் விவசாயிகளால் பயிரிடப்பட்டு ஏற்றுமதியாகிறது. நம்மிடம் ஒவ்வொரு பயிர்களிலும் உள்ள முக்கிய செயல்படு மூலப்பொருளை (active principle) பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்யும் தொழில்நுட்பம் இல்லாததால் பல அரிய வேளாண் விளைபொருட்கள் அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

சிறு விவசாயிகள் இடைத் தரகர்களைத் தவிர்த்து நுகர்வோருக்கு நேரடியாக சந்தைப்படுத்துதலில் இந்தியாவில் உள்ள the best மாடல் நமது உழவர் சந்தைதான். இதன் எண்ணிக்கையை அதிகரித்து அதிலுள்ள சிறுசிறு குறைகளை நிவர்த்தி செய்து விற்பனை நேரத்தை மதியத்துக்கு மேல் ஆரம்பித்து இரவு எட்டு மணி வரைக்குமாக செய்தால் நுகர்வோருக்கும், சிறு குறு விவசாயிகளுக்கும் மிகச்சிறந்த பயன் தரும். சிறு விவசாயிகளும் பல புதிய வெள்ளாமையை ஆரம்பித்து அந்தந்த ஊரில் உள்ள வரவேற்புக்குத் தக்கபடி சாகுபடியைத் தகவமைத்துக்கொள்வார்கள்.

அரசாங்க விழாக்கள், பள்ளி கல்லூரி விடுதிகள் உழவர் சந்தைகளிலிருந்தே காய்கறிகளை வாங்க வேண்டும் என்ற அழுத்தம் தரப்பட்டால் சிறு குறு விவசாயிகள் – அதாவது நேரடியாக உழவில் ஈடுபட்டிருக்கும் குடும்பங்கள் – வேறு தொழில்களுக்குச் செல்லும் எண்ணிக்கை குறையும். இத்தகைய முன்னெடுப்புகள் win win சூழலையே உண்டாக்கும். இராணுவத்தின் தேவைகளில் குறிப்பிடத்தக்க அளவு உழவர் சந்தைகளில் இருந்து செல்கிறது என்பதை இங்கு நினைவுகூர வேண்டும். அதிக எண்ணிக்கையில் உழவர் சந்தையில் கடை போட விவசாயிகள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தைப் பின்பற்றும்போது அனைத்து சமூகத்தினரும் ஏற்றமடைய முடியும்.

உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற மாடலை நபார்டு வங்கி மூலம் அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு உ.உ.க-வுக்கும் நபார்டு வங்கி பின்வாசல் மானியமாக பத்து இலட்ச ரூபாயை வழங்கும். அது தவிர சில இலட்சம் செலவினங்களை நபார்டு ஏற்கிறது. ஆயிரம் விவசாயிகள் சேர்ந்து தங்களது விளைபொருட்களை நேரடியாகவோ மதிப்பு கூட்டியோ, தங்களது கம்பெனி பெயரில் சந்தைப்படுத்தும் மாடல் என்பதால் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இது தோல்வியுறும் மாடல் ஆகும். சாதி இல்லாமல் இந்திய கிராமமும், விவசாயமும் இல்லை என்பதால் இந்த உஉக மாடலில் சாதி நுண்ணிய அளவில் நுழைந்து பெரும் பிளவு சக்தியாக நிற்கிறது. பல உஉக-கள் மூடுவிழா காணும் நிலையில் உள்ளன.

உஉக-களை ஆரம்பிப்பதற்கும், தொடர்ந்து நடத்துவதற்கும் மூலதனமும், overhead செலவினங்களும் அதிகம். அடுத்தடுத்த விரிவாக்கத்தின்போது அரசாங்க மானியத்தை எதிர்பார்த்து நிற்கும் சவலைப்பிள்ளையாகவே ஒவ்வொரு ஊரிலும் வளர்ந்து வருகிறது. உஉக என்பது கம்பெனி அமைப்புக்குள் செல்வதால் அதிகாரம் மேல்மட்டத்தில் குவிவதுடன், தேன் எடுத்தவன் புறங்கையை நக்குவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

இதை ஒப்பிடுகையில் உழவர் சந்தை என்பது decentralized, lean management மாடல். உற்பத்தி, விற்பனை குறித்த முடிவு எடுத்தல் அத்தனையும் அந்தந்த விவசாயி கையிலேயே இருப்பதால் நேரமும், அலைச்சலும், தேவையில்லாத சர்ச்சைகளும் தவிர்க்கப்படுகிறது.

நூறு விவசாயிகளிடம் தேங்காய் வாங்கி எண்ணெய் ஆட்டி விற்று இலாபத்தைப் பிரித்து அளிக்கும்போது அதில் இயக்குநர் மட்டத்தில் உள்ளவர்கள் இதை நாமே தனியாகச் செய்தால் என்ன என்று நினைப்பது இயல்புதானே. அப்படி யாராவது ஒரு இயக்குநர் எண்ணெய் ஆலை அமைத்து விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கும்போது அங்குள்ள உஉக மூடுவிழா கண்டுவிடும். பல ஊர்களில் அப்படித்தான் நடந்து கொண்டுள்ளது.

இன்று venture capital உதவியுடன் B2B, B2C மாடலில் அலைபேசி செயலி வழியாக வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்த பல நிறுவனங்கள் கார்ப்பரேட் கம்பெனி மாடலில் சந்தையில் நுழைந்துள்ளன. ஜெனரல் மேனேஜர், வேலை செய்யும் வைஸ் பிரசிடென்ட், ஜெனரல் மேனேஜருக்கு கொளுந்தியா புருசன் என்பதால் வைஸ் பிரசிடென்ட், வைஸ் பிரசிடென்ட்டின் தோழி என்பதால் சும்மா சம்பளம் வாங்கும் HR கன்சல்டன்ட் என பலருக்குமான சம்பளமும், இதர செலவினங்களும் அவர்கள் வாங்கி விற்கும் மாங்காய், தேங்காயிலிருந்தே வரவேண்டும் என்பதோடு பணம் போட்ட முதலீட்டாளருக்கும் இலாபத்தையும் காட்ட வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு இலாபம் எங்கிருந்து வரும் என்பதை யோசித்தால் இந்த கம்பெனிகள் கையிருப்பு கரையும்வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. சூப்பர் மார்க்கெட்டுகளின் F&V (Fruits & Vegetables) பிரிவுகளும் கிட்டத்தட்ட இதே நிலையில்தான் உள்ளன. இவை அதிலுள்ள மற்ற பிரிவுகளுடன் செலவினங்களைப் பகிர்ந்துகொள்வதால் பார்ப்பதற்கு கொஞ்சம் வெற்றிகரமாகத் தோன்றலாம்.

பொதுவாக வறட்டு கம்யூனிசம் பேசிப்பேசியே நாம் யதார்த்தத்தை மறந்து வீணாகப் போகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். தரகு முதலாளிகள், புரோக்கர்கள், கமிஷன் மாமாக்கள் என்று விற்பனைச் சங்கிலியில் உள்ள தவிர்க்க முடியாத ஒரு பிரிவினரைத் தொடர்ந்து அசிங்கப்படுத்தும் செயலையே மக்கள் செய்கின்றனர். இடைத்தரகர்கள் என்பவர்கள் தங்களது முதலை இறக்கி விற்பனைச் சங்கிலியில் ஒரு சிறிய அளவிலான ரிஸ்க்கை ஏற்றுக்கொள்கின்றனர். தினசரி ஐம்பது கிலோ பப்பாளி உற்பத்தி செய்யும் விவசாயி உழவர் சந்தை வாயிலாக விற்கலாம். ஆனால் தினசரி ஒரு டன் உற்பத்தி செய்பவர் அதை எப்படி அழிப்பார்?

அரசாங்கம் perishable commodity விற்பனையில் ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட என்றைக்குமே முடியாது. இலாபம், நட்டத்தை யார் ஏற்றுக்கொள்வது என்பதைப் பதினைந்து நிமிடங்களில் முடிவுசெய்து அதை அமுல்படுத்தியாக வேண்டும். நான்கு மட்டங்களில் ஒப்புதல் பெற்று நடத்தப்படும் காரியமல்ல என்பதால் இடைத்தரகர்கள் தவிர்க்க முடியாத சக்திகள் ஆகிவிடுகின்றனர். கேரளாவிற்கு பத்து டன் பப்பாளி வாங்கி அனுப்பும் தரகர், பப்பாளியை அனுப்பும் லாரி விபத்தில் சிக்கினாலும் சரி, அங்குள்ள வியாபாரி பணம் தராமல் ஏமாற்றினாலும் சரி, இழுத்தடித்தாலும் சரி, பேசியபடி இங்குள்ள விவசாயிக்கு செட்டில் செய்தாக வேண்டும். இந்த ரிஸ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் புரோக்கர் ஆகலாம். பல விவசாயிகள் புரோக்கர்களாக பகுதிநேர வேலை செய்துவருவது எல்லா கிராமங்களிலும் உண்டு.

ஒரு ஊரில் ஒரு ஹார்டுவேர் கடை மட்டும் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கூடுதலாக இரண்டு கடைகள் திறக்கப்படும்போது போட்டி காரணமாக நுகர்வோருக்கு விலையைக் குறைத்து விற்றாக வேண்டும். சப்ளையர்களுக்கு உடனடியாக செட்டில் செய்தால் விலை குறையும் என்பதால் அவர்களும் அதிக மூலதனத்தைப் போட்டு தொழிலில் தீவிரமாக ஈடுபடுவர். கம்பெனிக்கு விரைவாகப் பணம் கிடைக்கிறது, நுகர்வோருக்கும் கடைகள் அதிகமாக இருப்பதால் குறைந்த விலையில் பொருள் கிடைக்கிறது. உடனே, இந்த வியாபாரிகள் இரகசியமாக சங்கம் அமைத்து cartel செய்து அதிக விலைக்கு விற்பார்கள் என்ற ஸ்டேண்டர்டு வசனம் வரும்.

அங்குதான் நமது சாதி அமைப்பு நுண்ணியமாக செயல்படுகிறது. கடைக்காரர்கள் வெவ்வேறு சாதியாக இருந்தால் நிச்சயம் இரகசியக்குழு அமைக்க மாட்டார்கள். என்னதான் சொந்த சாதிக்காரனாகவே இருந்தாலும் மூட்டைக்குப் பத்து ரூபாய் அதிகம் கொடுத்து சிமென்ட் வாங்கி வீடு கட்ட யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

இதையே வேளாண் விளைபொருட்கள் விற்பனையில் பொறுத்திப் பாருங்கள். சொந்த சாதிக்காரன் வியாபாரி என்பதற்காக உங்களிடம் ஓர் ஏக்கர் பரப்பளவில் இருபது டன் தர்பூசணி விளைந்து நிற்கையில் கிலோவுக்கு ஒரு ரூபாய் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று கொடுப்பீர்களா அல்லது ஸ்பாட் பேமன்ட் கொடுத்து எடுக்கத் தயாராக இருக்கும் வேறு சாதிக்கார வியாபாரிக்குக் கொடுப்பீர்களா?

இடைத்தரகர்களுக்கு கொழுத்த பணம் இலாபமாகச் செல்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படியெனில் நாம் அதிகமான இடைத்தரகர்களை உண்டாக்கும்போது மட்டுமே அவர்களுக்கிடையிலான survival போட்டியில் உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்கும் கணிசமான இலாபம் கிட்டும். அதை விடுத்து இடைத்தரகர்களை ஒழிக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும். புதுப்புது format-இல் இடைத்தரகர்கள் தோன்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.

இன்று venture capital பணத்துடன் களமிறங்கியிருக்கும் அத்தனை கம்பெனிகளும் இடைத்தரகர்களே. Perishable commodity தரகு தொழிலில் கம்பெனியைக் காட்டிலும் தனிநபர்களின் செயல்திறனே அதிகமாக இருக்கும். கம்பெனிகள் விலை குறைவாக கிடைக்கும் காலத்தில் அதிகளவில் வாங்கி, கிட்டங்கிகளில் வைத்து விலை ஏறும்போது விற்று காசு பார்த்தால் மட்டுமே உண்டு. அதுவும் ஒருவகையில் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் ஒரு buffer-தான். விலை சரிந்த காலங்களில் அந்த கம்பெனிகள் அடிமாட்டு விலைக்காவது வாங்காவிடில், விளைபொருட்களை வயலிலேயே வீசி எறிய வேண்டிய நிலைமைதான் விவசாயிகளுக்கு. விலை ஏறும்போது சந்தை விலையைக் காட்டிலும் ஐந்து, பத்து குறைவாக விலை வைத்து கிட்டங்கிகளில் உள்ள சரக்கைக் கம்பெனிகள் தள்ளிவிடுவதால் நுகர்வோருக்கும் சிறிது இலாபமே.

சந்தைப்படுத்துதலில் நிறைய இளைஞர்கள் இடைத்தரகர்களாக நுழைய வேண்டும். இந்தக் கருத்து அதிர்ச்சிகரமாகவும், அசிங்கமாகவும் தோன்றினால் யதார்த்தத்தைப் பக்கத்திலிருந்து பார்க்கவும், பிரச்சினைக்குத் தீர்வு எதுவுமே கைவசம் இல்லாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்பி வந்திருக்கிறீர்கள் என்றுதான் பொருள். வெறும் செல்போனை வைத்துக்கொண்டு தினசரி ஐம்பதாயிரம் இலாபம் பார்க்கும் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள் எனில் எத்தனை இளைஞர்கள் இதில் நுழைந்து இலாபத்தைப் பிரித்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

சந்தைப்படுத்துதல் என்றதும் வீடுகளுக்கு காய்கறி, மளிகைச் சாமான்களை டெலிவரி செய்வதையே பெரிதாக ஊடகங்களில் பேசுகின்றனர். ஆனால் அதில் ஒன்றுமே இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கும் இந்திய குடும்பத்தலைவிகளுக்கு சூப்பர் மார்க்கெட்டுக்கோ, சந்தைக்கோ, அருகிலுள்ள கடைக்கோ சென்று வருவது ஒரு stress relief factor. அதை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கினாலே போதும் என்று சொல்லி, செய்துகாட்டிய பிக் பஜார் கிஷோர் பியானி போன்றவர்களும் இதே சந்தையில்தான் உள்ளனர் என்பதை மறந்துவிடக்கூடாது.

‘வானம் வசப்படும்’ – புத்தக விமர்சனம் என்று எப்படிச் சொல்ல முடியும்?

‘வானம் வசப்படும்’ நாவலை புதுச்சேரி குவர்னர் டுய்ப்லெக்ஸ் வசம் துபாஷியாக (மொழிபெயர்ப்பாளர்) இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரது நாட்குறிப்பின் அடியொட்டி பிரபஞ்சன் எழுதியிருப்பதைப் படிக்கப்படிக்க புதுச்சேரியின் வரலாறும், இந்தியா என்பது சாதிகளின் தொகுப்பு என்பதும் கிறித்தவமும், இசுலாமும் உள்ளே நுழைந்தபிறகு இந்து என்ற மதம் என்ற ஒன்று போலியாகக் கட்டமைக்கப்பட்டது என்பதையும், அந்த காலத்தில் மக்கள் மிகவும் மகிழ்ச்சிபொங்க வாழ்ந்ததாகச் சொல்லப்படுவதும் எப்பேர்ப்பட்ட பொய் என்பதும் தானாகவே விளங்கிக்கொள்ளலாம்.

பிரான்சுக்காரர்கள் வியாபாரத்துக்காக வந்திருந்தாலும் இங்குள்ள மக்களை கிறித்துவத்துக்கு மாற்றுவதும், நிலங்களின் மீதான அதிகாரத்தைப் பெற்று பிரான்ஸ் அரசருக்கு சமர்ப்பிப்பதும் அடுத்தடுத்த கடமையாக பாவித்திருக்கின்றனர்.

ஊழல் என்பது பிரான்சு குவர்னரில் ஆரம்பித்து கடைநிலை சொல்தாது (சிப்பாய்) வரைக்கும் இயல்பான ஒன்றாக இருந்திருக்கிறது. இலஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக்கொள்வதும் சாதாரணமாகவே இருந்திருக்கிறது. இரண்டு கப்பல்களில் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு சரக்கு பிடித்து அனுப்பும் குவர்னர், ஒரு கப்பலில் தனக்காக வியாபாரமும் நடத்துகிறார்.

பிராமணர், முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர் சாதியினரே பிரான்சு, இங்கிலாந்து ஆட்சி அதிகாரத்தில் முதல்மட்ட பதவிகளை அனுபவித்திருக்கின்றனர். அவர்களது உறவினர்களுக்குப் பதவிகளை வாங்கித்தர கடும் முயற்சி எடுத்துக்கொள்வதோடு மேல்மட்டத்துக்கு அன்பளிப்பு என்றபெயரில் இலஞ்சம் கொடுத்து பதவிகளை வாங்கியே இரண்டு மூன்று தலைமுறைகள் வாழ்ந்திருக்கின்றனர். நில உரிமை, குத்தகை உரிமை, மண்டி, தரகு, வர்த்தகம் என அத்தனை தொழில்களுமே பிறப்பால் கிடைத்திருக்கின்றதே தவிர திறமை என்று சொல்லிக்கொள்வதற்கெல்லாம் எந்த இடமும் அந்தக்காலத்தில் இருந்திருக்கவில்லை.

குவர்னர் மாளிகையில் கிடைக்கும் பணிகளைப் பெற மேற்கண்ட சாதியினருக்குள் ஏற்பட்ட கடும் போட்டியின் காரணமாக பலர் கிறித்துவத்துக்கு மாறியுள்ளனர். அவ்வாறு செய்தால் பதவிகளுக்கு சர்ச் மூலம் சிபாரிசு பிடித்து வேலைக்குச் சேரலாம் என்பதால் சர்ச் என்பது கிறித்துவத்துக்கு மாறியவர்களுக்கு மிக முக்கிய இடமாக இருந்திருக்கிறது.

ஆதிஷேஷய்யர் தனது பூணூலை அறுத்துவிட்டு துய்ப்லெக்ஸ் துரையின் மனைவி மேடேம் ழான் அம்மையாரின் ஆசீர்வாத்தில் பாதிரியாரிடம் ஞானஸ்னானம் பெற்று ஜீவப்பிரகாசம் ஐயராக மாறுகிறார். பசு மாமிசம் தின்னும் பரங்கிப்பயல்களின் மதத்துக்கு மாறுவதா என்று அவரைப் புறக்கணிக்கும் குடும்பம் நாளடைவில் தானாகவே வந்து ஒட்டிக்கொள்வதும், மற்ற உறவுமுறைகளுக்கு பதவி வாங்கித்தரச்சொல்லி சிபாரிசு கேட்பதும் விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அடித்தட்டு மக்களுக்கு இந்த ஆண்டைகளுக்கு உழைப்பதைத் தவிர வேறெதுவுமில்லை. சைக்கிள் கூட இல்லாத காலம் (1750-கள்). மாட்டுவண்டி, குதிரை, பல்லக்கு மட்டுமே போக்குவரத்து சாதனம் – மேல்சாதிகளுக்கு மட்டும். கீழ்சாதிகளுக்கு நடந்து செல்வது மட்டுமே ஒரே வழி. விவசாயம், நெசவு சார்ந்த தொழில்களைத் தவிர வேறெதுவும் கிடையாது, எங்கு சென்றாலும் சோறு கட்டிக்கொண்டு நடந்தே சென்று சத்திரங்களில் தங்கி இளைப்பாறிச் செல்ல வேண்டும். வழியெங்கும் திருட்டு பயம். இப்படி ஒரு காலகட்டத்தில் நடந்த சம்பவங்களே இந்த நாவல்.

செயின்ட் ஜார்ஜ் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் தாக்கும்போது அங்கிருந்து புதர்கள், வயல்கள், சதுப்பு நிலங்களுக்குள் புகுந்து திருவல்லிக்கேணிவரை ஒரு பெண் மழைக்காலத்தில் மகளின் திருமண ஏற்பாட்டுக்கு சென்று வருவதையும், சண்டை உக்கிரமடைந்தவுடன் பல குடும்பங்கள் ஆடுமாடுகளை ஒட்டிக்கொண்டு செங்கழுநீர்ப்பட்டுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதையெல்லாம் படிக்கும்போது அந்தக்காலத்தில் எங்கே பாலாறும் தேனாறும் ஓடியது என்று தெரியவில்லை.

சாணார், பறையர், பள்ளர் என கீழ்தட்டு மக்களாக விதிக்கப்பட்டவர்கள் தீண்டாமைக் கொடுமையிலிருந்து ஓரளவு மீட்சியும், வயிற்றுப்பாட்டுக்கு ஆண்டைகளிடம் படும் பாட்டைக்காட்டிலும் கொஞ்சம் நியாயமான உழைப்பின் மூலம் ஈட்டிக்கொள்ளலாம் என்பதற்காக கிறித்தவத்துக்கு மாறியிருக்கின்றனர். ஆனால் முதலி, ரெட்டி, செட்டி, நாயக்கர், பார்ப்பனர் என அனைவரும் கிறித்துவத்துக்குச் சென்று சர்ச்சுக்கு நடுவேயும் சாதி பிரிக்கச் சுவர் வைத்துவிட்டிருக்கின்றனர்.

சர்ச்சில் இருக்கும் தீண்டாமைச் சுவரை உடைத்து அனைவரையும் ஏசுவின் குழந்தைகளாகப் பாவிக்க நினைக்கும் பாதிரிகளும் இருந்திருக்கின்றனர். கும்பனி படைகளைப் பயன்படுத்தித் தமிழர் கோவில்களை இடித்துவிடத் துடித்த பாதிரிகளும் இருந்திருக்கின்றனர்.

1750-களில் கிறித்தவர், துலுக்கர், தமிழர் என்றே மக்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர். இந்து என்ற மதமே இருந்திருக்கவில்லை என்பது ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பு மூலம் தெரிகிறது.

மேடேம் ழான் அம்மையாரின் பலத்த ஆதரவுடன் டுய்ப்லெக்ஸ் துரை புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலை வெள்ளைக்கார, காபிரிச் சிப்பாய்களை அனுப்பி உடைத்துப் போடுகிறார். அதைத் தடுக்க தமிழர்கள் பலர் (இந்துக்கள் அல்லர்) குவர்னருக்கு அடுத்தபடியாக இருக்கும் துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளையிடம் முறையிட்டபோதும் அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவர் வைணவர் என்பதாலும் தமது பதவிக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அடக்கி வாசிக்கிறார்.

தமிழர்களுக்கு சாதிதான் பிரதானம் என்று நாம் நினைக்கும்படி இருந்தாலும், சாதி அமைப்பில் உயர்மட்டத்தில் இருக்கும் பிராமணர்களின் முடிவுக்குக் கட்டுப்பட்டே வந்துள்ளனர். எந்த காரணத்துக்காகவும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து பிராமணர்கள் சிறு ஓசை கூட எழுப்பாமல் இருப்பதைப் பார்க்கும்போது கப்பல்களில் வந்து இறங்கிய ஒவ்வொரு நாட்டுக்காரனும் இங்கு கோட்டை கட்டிக்கொண்டதில் ஆச்சரியம் எதுவும் ஏற்படுவதில்லை.

ஈசுவரன் கோவிலை இடித்த கையோடு மசூதி ஒன்றையும் இடிக்க குவர்னர் துய்ப்லெக்ஸ் உத்தாரம் (ஆணை) இடுகிறார். இரண்டு செங்கல் விழுந்தவுடன் துலுக்கர் படையின் தலைவன் அப்துல்ரகுமான் தான் குவர்னரைப் பார்த்துவிட்டு வரும்வரை ஒருவரும் மசூதியைத் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்று துய்ப்லெக்ஸ் துரையைப் பேட்டி கண்டு இடிப்பதற்கு காரணம் கேட்க அது குவர்னர் உத்தாரம் என்று சொல்கிறார். ‘கடைசித் துலுக்கன் உயிரோடு இருக்கும்வரை அந்த மசூதியை இடிக்க முடியாது, நாங்கள் உயிரை விட்டாவது போராடுவோம்’ என்று சொன்னதன் மன உறுதியைக் கண்டு குவர்னர் தனது உத்தரவைத் திரும்பப் பெறுகிறார்.

ஐதராபாத் நிஜாம், ஆற்காட்டு நவாப் பதவிகளை யார் வைத்துக்கொள்வது என்று நடக்கும் சண்டைகள், உள்குத்துகள் காலங்காலமாக நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. மராத்தியர் ஒருபுறம், ஆலந்துக்காரர்கள் ஒருபுறம் என இந்தியா பிய்த்துத் துண்டாடப்பட்டிருக்கிறது.

பிராமணர்கள் ஆற்காட்டு நவாப், ஐதராபாத் நிஜாம், பிரெஞ்சு, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அத்துனை பேரிடமும் முதல்மட்ட ஊழியர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். பணிபுரியும் அரசாங்கத்துக்கே ரெண்டகம் விளைவிக்கும் விதமாக எதிரி அரசாங்கத்துக்கு உளவு சொல்பவர்களாகவும், ஆட்சியாளருக்குத் தக்கபடி நிறம் மாறுபவர்களாகவும் இருந்திருக்கின்றனர். சுகபோகத்துக்காக யாரையும் காட்டிக்கொடுக்கத் தயங்காதவர்களாகவே இருந்திருப்பது வானம் வசப்படும் மூலமாகவும் வெளிப்படுகிறது.

கிழக்கான் என்ற பள்ளர் சாதி நபர் அந்த ஊர் ஆண்டையிடம் பண்ணை வேலை செய்து வருகிறார். அப்போது ஊரில் மாட்டுத் தோலை உரித்து எடுத்துச்செல்லும் கும்பல் பண்ணையார் தொழுவத்தில் மாட்டை உரித்து தோலைத் திருடிச்சென்றுவிட்டது. பண்ணையார் கிழக்கானைக் கட்டிவைத்து சாட்டையால் அடித்து வாயில் சாணியைக் கரைத்து ஊற்றி, மூத்திரத்தையும் ஊற்றுவதைப் பார்த்த அவரது எட்டு வயது மகன் ஓடிச்சென்று அடிப்பவனைப் பிடிக்க, அவன் உதைத்துவிடுகிறான். அந்தக் குழந்தை ஒரு கல்லை எடுத்து எரிய அது அடிப்பவன் நெற்றியில் பட்டு காயமாக, அடுத்த சில நிமிடங்களில் கிழக்கானின் குழந்தை கொல்லப்படுகிறது.

கல்லை எடுத்து குழந்தை அடித்தது தன்னை அவமானப்படுத்தியதாகக் கருதிய பண்ணையார் கிழக்கானின் மனைவி மாரியாயியை உயிருடன் தீ வைத்து அனைவரின் முன்னிலையில் கொளுத்திவிடுகிறார். மகனையும், மனைவியையும் அடக்கம் செய்த கையோடு பிரெஞ்சுத் துரை ஒருவனிடம் தன்னைத்தானே அடிமையாக விற்றுக்கொண்டு கப்பலேறிவிடும் கிழக்கானின் கனமே 495 பக்க நாவலின் மொத்த கனமுமாகத் தோன்றுகிறது.

வங்கிகள், கடன் வசதி என எதுவுமே இல்லாததால் காசுகளை மண்ணில் புதைத்து வைப்பது மட்டுமே மக்களுக்குத் தெரிந்த ஒரே சேமிப்புப் பழக்கமாக இருந்திருக்கிறது.

கோவில்கள்தோறும் தாசிகள் பரம்பரை பரம்பரையாக இருந்துள்ளனர். ஊரில் உள்ள பணக்காரர்கள் சதிர் ஆட்டத்தை வீடுகளிலேயே நடத்துவதுடன் தாசிகளுக்கு செலவிடுவதை ஒரு சமூக அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். ஒவ்வொரு முக்கிய அரசாங்க விழாககளின்போதும் தேவடியாள் ஆட்டம் என நடன நிகழ்ச்சிகள் தாசிகள் மூலமாகவே நடந்து வந்திருக்கிறதும் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இன்று நாம் மக்களாட்சி என்ற பெயரில் எவ்வளவு சுதந்திரத்தை அனுபவிக்கிறோம், ஆட்சியாளர்கள் அதிகாரம் எந்த அளவுக்கு ஒழுங்குபடுத்தப்பட்டு மக்களுக்காகவே அவர்கள் என்ற அமைப்புமுறை இருக்கிறது, உழைப்புக்கான ஊதியம், ஓய்வு, மருத்துவ வசதிகள் என மக்கள் மனிதர்களாக மதிக்கப்படுகின்றனர் என்பதை அறிய வானம் வசப்படும் நாவலை அவசியம் வாசிக்கவேண்டும். இரயில் வந்தபிறகுதான் இராஜாவும், குடிமகனும் – முதல் வகுப்பு, மூன்றாம் வகுப்பும் பொருளாதார இடைவெளி மட்டுமே – ஒரே வேகத்தில் பயணிக்க முடிந்தது.

அறிவியல் மட்டுமே மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முடியும். அந்தக்காலத்தில் என்று ஆரம்பித்து பழைய காலத்துக்கு வாழ்வியலுக்கு நம்மை அழைப்பவர்கள் எல்லோருமே அறிவியலுக்கு எதிரானவர்களாக இருப்பதும், அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாமே கேள்விகளே இல்லாத பண்ணையார், கூலிக்காரன் என்ற அமைப்புக்கு மூளைச்சலவை செய்யும் பிரச்சாரமாகவும், உயர்வு என்பது பிறப்பால் வருவது என்ற கோட்பாட்டைத் திணிப்பதுமேயாகும்.

வாசிக்கவும், பரிசளிக்கவும் ஏற்ற நூல்களுள் ‘வானம் வசப்படும்’ மிகவும் முக்கியமானது.