தேங்காய் நார்த் தொழிற்சாலைகளினால் ஏற்படும் புதிய சூழலியல் சிக்கல்கள்

வழக்கமான உள்ளூர் செய்தியாக இதைக் கடந்து செல்ல முடியவில்லை. தேங்காய் நாரைப் பிரித்தெடுத்து சுத்திகரித்து ஏற்றுமதி செய்வது கடந்த பத்தாண்டுகளில் அதீத வளர்ச்சி கண்ட ஒரு துறை. தென்னிந்தியாவிலிருந்து பல நூறு கோடிக்கு ஏற்றுமதி வர்த்தகம் நடைபெறுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட விவகாரம் இப்போது நடக்க ஆரம்பித்துள்ளது.

மெத்தைகள், மகிழுந்து இருக்கைகளில் foam-க்கு பதிலீடாக தேங்காய் நார் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தேங்காய் மட்டையை அரைத்து – நாரையும், சோற்றையும் பிரிக்காமல் – அப்படியே லேசாக மக்கச்செய்து அதில் பயிர் வளர்க்க (மண்ணிற்கு மாற்றாக) உலகெங்கும் முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். ஆனால் தேங்காய் நாரிலுள்ள அதிக உப்புக்களின் செறிவு, அதீத கார்பன்: நைட்ரஜன் விகிதம் காரணமாக பயிர்கள் வளர்வதில்லை. அதைச் சமப்படுத்த பலமுறை தண்ணீர் விட்டு வடித்துவிட வேண்டியிருக்கிறது. அதன்மூலம் EC (Electrical Conductivity) குறைக்கப்படுகிறது. எளிதாகப் புரியும்படி சொல்வதானால் தேங்காய் நார்களின் TDS-ஐ குறைக்க பலமுறை தண்ணீரால் கழுவ வேண்டும்.

தேங்காய் மட்டைகள் சாலையோரங்களில் கொட்டி வைக்கப்பட்டிருந்தது ஒரு காலம். கடந்த ஆண்டின் கடும் வறட்சியின் காரணமாக இலங்கை, இந்தோனேசியாவிலிந்து தேங்காய் மட்டைகள் கப்பல்களில் வந்திறங்கியதாக தெரியவருகிறது. Coir Board என்ற ஒன்று இருந்தாலும் தென்னை மரங்களையே பார்த்திராத ஷர்மா, குப்தா, தாக்கூர்கள் காயர் வாரியத்திலும், நபார்டிலும் உட்கார்ந்துகொண்டு திட்டங்கள் மட்டுமே தீட்டி வந்த நிலையில் தென்னிந்திய தொழில்முனைவோரின் கடும் உழைப்பினால் மிகப்பெரிய இன்டஸ்ட்ரியாக இந்த நார்த்தொழில் வளர்ந்திருக்கிறது.

ஆர்டர் தரும் வெளிநாட்டினர் Low EC coir pithகளையே கேட்பதால் ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களால் இயன்ற அளவில் ஒரு கான்கிரீட் களம் அமைத்து நாரைப் பரப்பி தண்ணீர் விட்டு சுத்திகரிப்பு செய்ய ஆரம்பித்தனர். வடித்து விடப்படும் நீரின் TDS அளவு மிகவும் அதிகம் என்பதால் சுற்றுப்புறத்தில் உள்ள நிலங்களும், நீர் ஆதாரங்களும் மாசடைவது தவிர்க்க முடியாதது. சாயப்பட்டறை அளவுக்கு Heavy metals மற்றும் பல புரியாத இரசாயனங்கள் வருவதில்லை என்றாலும் மண் கெடத்தான் செய்யும்.

இதைத் தவிர்ப்பதற்கான திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ நம்மிடத்தில் இல்லை. இருந்தாலும் தாள்களிலேயே இருக்கிறது. சாயப்பட்டறைகளைப்போல் அல்லாமல் நார் ஆலைகள் ஆங்காங்கே பரவலாக தோட்டம், தோப்புகளுக்குள் பெயர்ப்பலகைகூட இல்லாமல் இயங்கிவருவதால் கண்டுபிடிப்பது/கட்டுப்படுத்துவது கடினம். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இப்படி ஒரு இன்டஸ்ட்ரி நடப்பதாகத் தெரிவதே அரிது. சோலார் பேனல்கள் வருகைக்குப் பிறகு சுற்றுச்சூழல் மாசு உண்டாக்கும் தொழில்களுக்கு மின்சார வாரியத்தின் தயவும் குறைந்துள்ளது. வாடகைக்கு ஓர் இடத்தை எடுத்து, வேலி அமைத்து, வட இந்திய தொழிலாளர்களை பணியிலமர்த்தி, வடித்து விடப்படும் நீரை காலியாக இருக்கும் போர்வெல்லுக்குள் செலுத்தி சர்வசாதாரணமாக ஐந்தாறு ஆண்டுகள் இயங்கமுடியும். அந்த பகுதியின் நீர் கெட்டுவிட்டால் எளிதாக வேறு பகுதிக்கு மாறிவிட முடியும்.

வேளாண் உற்பத்திச் சங்கிலியின் இறுதிப்பொருளாக சாலை ஓரங்களில் வீசப்பட்ட ஒரு பொருளுக்கு மதிப்பு கூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகையில் அதில் உண்டாகும் கழிவுகளைக் கையாள, மறுசுழற்சி செய்ய, உரிய திட்டங்களைத் தீட்டி, கருவிகளை கண்டுபிடித்து சந்தையில் விடவிம், அரசுக்கு ஆலோசனை சொல்லவும் பல்கலைக்கழகங்களுக்கும், பல்வேறு அரசுத் துறைகளுக்கும் மிகப்பெரிய சமூக பொறுப்புண்டு.

ஆனால் பெரும்பாலும் நமக்கு வாய்ந்த விஞ்ஞானிகள் வழக்கம்போல பாரம்பரியம், மரபு என்று சொறிந்துவிட்டுக் கொள்பவர்களாகவும் இந்தி படி, சமஸ்கிருதம் படி என்று ஆலோசனை வழங்குவதும், செய்ய வேண்டிய வேலை ஆயிரம் இருக்க எதற்காக சமஸ்கிருதம் பயிலவேண்டும் என்று கேட்டால் பதில் சொல்லாமல் என் சர்வீஸ் அளவுக்கு உனக்கு வயதில்லை என்று கூறி கருத்தியல் அடாவடித்தனமும், காலம் பதில் சொல்லும் என இன்டெலெக்சுவல் குண்டாயிசம் செய்வதுமாக அல்லவா இருக்கின்றனர்.

வேளாண் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் இந்த தேங்காய் நார்த் தொழில் இயல்பாக வளர்ந்த ஒன்று. ஏற்றுமதி வாய்ப்புகள் காரணமாக உண்டாகும் மாசு காரணமாக சாயப்பட்டறைகளைப் போல் ஒரு மோசமான தொழிலாக இன்னும் பத்தாண்டுகளில் விமர்சிக்கப்படலாம். வழக்கம்போல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கிளம்பிவந்து கார்ப்பரேட் எதிர்ப்பு புராணத்தில் ஆரம்பித்து மறைநீர், முன்னோர்கள் கற்றாழையில் கயிறு திரித்த வரலாறு, பனை மட்டையில் அவுனி கிழித்த நினைவலைகள் என பலவற்றை அவிழ்த்து விடுவார்கள். ஆனால் கள யதார்த்தம் என்னவென்றால் தேங்காய் நார் ஆலைகள் முற்றிலும் தனி நபர்களால் நடத்தப்படுவதால் ஏதாவது நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிட்டால் தேடி வந்து மிதிப்பார்கள். இப்போதெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களே கம்பெனி போட்டு லாபி செய்து வியாபாரம் செய்வதால் விமர்சனங்கள் எல்லாமே win win டீலாகத்தான் இருக்கும். அவர்களை நம்புபவர்களே மோசம் போவார்கள்.

தண்ணீர் சுத்திகரிப்பு, ETP தொழில்களுக்கு வருங்காலத்தில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், நகரமயமாதலில் தீர்வுகளுக்குத்தான் மதிப்பு இருக்கும். அந்த காலத்திலே என ஆரம்பிக்கும் அங்கலாய்ப்புகளுக்கு அல்ல.