பால் வியாபாரம் – மேலும் சில

பால் கறப்பது, குறிப்பாக அடைமழை காலங்களில் மிகவும் சிரமமான வேலை. காலையிலும், மாலையிலும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் கருமமே கண்ணாக செய்யவேண்டிய ஒன்று. நசநசவென்ற சூழல், கொசுக்கடி, ஈக்களின் தொந்தரவு, சாணியும் மூத்திரமும் உலராமல் ஏற்படும் துர்நாற்றம் எல்லாவற்றையும் தாங்கித்தான் மாடு வளர்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் பால்காரராக இருப்பதற்கு மிகவும் வலுவான உடல்நிலையும், மனநிலையும் கட்டாயம்.

புதிதாக சந்தைக்கு வரும் பால் கறக்கும் இயந்திரங்களைப் பார்த்துப்பார்த்து ஏமாற்றமடைவது பால்காரர்களாகத்தான் இருக்கும். விலைகுறைந்த portable models இயங்குவது வேக்குவம் சக்‌ஷன் அடிப்படையில் என்பதால் தொடர்ந்து பாலைக் காம்பிலிருந்து உறிஞ்சும்; ஆங்காங்கே, பாலில் இரத்தம் கலந்து வருகிறது என்பது மாதிரியான விவசாயிகளின் புகார்கள் இந்த வகையிலான ஆரம்பகட்ட கருவிகளால்தான். சில மாடுகள் பாலை அடக்கி வைத்துக்கொண்டு போக்கு காட்டி, கன்றுக்குட்டிக்குத் தரும், சில காம்புகளில் இயல்பாகவே பால் இல்லாமல் இருக்கும்; அதற்காக அதிகநேரம் கருவியை இயக்குவது, அழுத்தத்தைக் கூட்டுவது என செய்யப்படும் உத்திகள் நீண்டகால அடிப்படையில் மாட்டின் பால் உற்பத்தியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

விட்டுவிட்டு உறிஞ்சி இயங்கக்கூடிய pulsing type கறவை இயந்திரங்கள் 25000 ரூபாயில் ஆரம்பிக்கிறது. இந்த காசுக்கு இன்னொரு மாடு வாங்கலாமே என்று நினைப்பது விவசாயிகளின் இயல்பு. இதிலும் காம்பில் மாட்டக்கூடிய கறப்பான், பாலின் தரத்தை உள்ளீடு செய்து கறத்தலை நிறுத்தும் சென்சார், மதர் போர்டு என சில sensitive components அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வருகிறது.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாட்டில் 99.9 % பால் கைகளாலேயே கறக்கப்படுகிறது எனும்போது பால் கெட்டுப்போவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. பாலுடன் என்னென்ன இரசாயனங்கள் கலக்கும் என்பதற்கு கறப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்துவிட்டு வந்தனர் என்பதை ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். உற்பத்தியாகுமிடத்தில் அத்தகைய சூழலை வைத்துக்கொண்டு, பால்வளத்துறை அமைச்சர் ஒருவர் பாலில் இரசாயனம் இருக்கிறது என்று பேட்டி கொடுப்பதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

கிராமம் கிராமமாக சிதறிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறப்பதற்கு கையடக்க கருவிகள் ஏதும் இல்லாமல், நோயுற்றால் உடனே வந்து பார்ப்பதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லாமல், கிடைக்கும் விலையும் போதுமான அளவில் இல்லையென்றாலும் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்க காரணம் மாடுகள் குறித்த விவசாயிகளின் புரிதல்தான். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுசெய்யும் அவர்களுக்கு தரப்படும் சட்ட ரீதியிலான அழுத்தம் முட்டாள்தனமான ஒன்று.

ஜல்லிக்கட்டு மூலமாக சிறந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கடும் வறட்சி காலங்களில் கிடாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதும் உண்மை. நான்கு கறவைகள் இருக்கும்போது கடும் வறட்சி வந்தால் அதில் உள்ள ஒரு நல்ல மாட்டை வைத்துக்கொண்டு மற்றவைகளை கறிக்கு அனுப்புவது இயல்பு. மரபியிலில் இதை Pureline Selection என்பார்கள். வறட்சி, பஞ்சம் மிகுந்த காலங்கள் கால்நடைகளின் இனத்தூய்மை, விருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன. எதற்கெடுத்தாலும் நதிகளை இணைக்கவேண்டும், பார்க்கும் இடங்களிலெல்லாம் தடுப்பணை அமைக்கவேண்டும், குஜராத் மாதிரி ஆகவேண்டும் என்று கருத்துரைப்பவர்கள் சுற்றுச்சூழல் குறித்த கல்வியறிவோ பட்டறிவோ துளியும் இல்லாத மூடர்கள்.

சினை ஊசிகளில் காளைகளே இல்லாமல் கிடாரிகள் மட்டுமே உருவாக்கக்கூடிய (XX குரோமோசோம்) Sex selective semen மேலைநாடுகளில் உண்டு. அதன்மூலம் காளைக்கன்று பிறந்து அதை ஒரு வருடம் கழித்து கறிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லாமல் கிடைக்கும் அனைத்து கன்றுகளும் பெண் என்பதால் விரைவில் இனவிருத்திக்கு தயாராகி பண்ணையும், பால் உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களது நோக்கம்.

ஆண் கன்றுகளை உருவாக்கக்கூடிய Y குரோமோசோம்களை விந்தணுக்களுக்குள்ளேயே சென்று காயடிக்கும் chromosome washing செய்யும் Flow Cytometry போன்ற தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை இருப்பதால் உள்நாட்டு ஃபுளோ சைட்டோமெட்ரி தொழில்நுட்பத்தை உருவாக்க 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் பெரும் நிதி ஒதுக்கியது; அநேகமாக அஃது இந்நேரம் வர்த்தகரீதியில் தயாராகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

உள்நாட்டு மாட்டு, தாவர இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் ஜெர்சி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸியன் இன மாடுகளிலும் காளைகளே இல்லாத ஒரு சூழல் ethically சரியா என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. சங்கப்பரிவாரங்கள், விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் இன்னபிற வானரப்படைகள் இதுகுறித்து வாயே திறக்கவில்லை என்பதை மிக அழுத்தமாக இரண்டுமுறை அடிக்கோடிட்டு காட்டவேண்டியிருக்கிறது.

(தோல் பதனிடும் தொழில்களில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சுரண்டல்கள், கம்யுனிச எழுச்சியின் ஆரம்பகட்டங்களை புரிந்துகொள்ள திண்டுக்கல்லை மையமாக வைத்து எழுதப்பட்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவலை நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.)

ஆய்வுக்கூடங்களோடு முடிந்துவிட்ட டெர்மினேட்டர் டெக்னாலஜி குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சவுண்டு விடும் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் காளைக்கன்றுகள் இல்லாத ஒரு சூழல் உண்டாக இருப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை. RCEP கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் மூலம் விவசாயிகள் விதைகளை வைத்திருக்கவே முடியாது என்ற ஒரே பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றனர். ஆறாயிரம் பேர் கலந்துகொள்ளும் அந்த convention, வட இந்தியாவில் நடத்த இடமே இல்லாமல் ஐதராபாத்தில் நடத்த இருக்கிறார்கள். அதில் விவாதிக்கப்பட இருக்கும் கூறுகள் பொதுமக்களுக்கு சொல்லப்படவே இல்லை எனும்போது இவர்கள் கம்பு சுற்றுவது எதற்காக என்றும் தெரியவில்லை.

அப்படியே ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலும் அது பல்வேறுகட்ட ஒப்புதல்களை வாங்கி, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு வந்தால்தான் தெரியும். பொது இடங்களில் புகை பிடித்தால், எச்சில் துப்பினால் அபராதம் மாதிரியான சட்டம் போல அதுவும் ஒன்றாகிப் போகலாம். அண்மையில் பலர் ஒரே நேரத்தில் படையெடுத்ததால் இ-சேவை மையங்கள் முடங்கியதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘வருடத்தில் ஐந்து நாள்தான் இவ்வளவு டிராஃபிக் வரும், மீதி 360 நாட்கள் சும்மாதான் இருக்கும்; அதனால்தான் புதிய சர்வர்கள் நிறுவவில்லை’ என்று. இருபது முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் வெள்ளம் வருகிறது, அதற்காக பல ஆயிரம் டன் கான்கிரீட்டைக் கொட்டி மிகப்பெரிய வாய்க்கால்களை, மதகுகளைக் கட்டவேண்டிய அவசியம் இல்லை; தண்ணீர் வந்தால் அதாகவே போய்விடும் என்பது மாதிரியான தொலைநோக்குப் பார்வைதான் நமது சொத்து.

ஆட்டோமொபைல் துறைக்கான தொலைநோக்குப் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. நான்கு மீட்டர் நீளத்துக்கு குறைவான கார்களுக்கு 12.5% எக்ஸைஸ் டியூட்டி, அதைவிட நீளமான கார்களுக்கு 1500 cc-க்குள் இருந்தால் 24% வரி, 1500 cc-க்கு அதிகமாக இருந்தால் 27% வரி. 2000 CC க்கு மேலே இருந்தால் டில்லி போன்ற நகரங்களில் அதற்கு ஒரு வரி. தாடியின் நீளத்தைப் பொறுத்து வரி விதித்த மன்னர்கள் குறித்த கதைகளெல்லாம் இந்த இடத்தில் நினைவுக்கு வரக்கூடும்.

ரேடியோ ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் காரணமாக பல உயர்தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வரவே முடியாத நிலை இருக்கிறது. இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் முடியாத சூழ்நிலையே. 433 – 434 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்தான் சாவி தேவைப்படாத Keyless Entry சாத்தியமானது. ஆனால் இன்னமும் 434.79 MHz வரை உற்பத்தி, பயன்பாடு இரண்டுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் radar based automatic breaking, lane direction control போன்ற தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை. உதாரணமாக மெர்சிடஸ் S class கார்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும்போது இத்தகைய terrestrial transmission தொழில்நுட்பங்கள் தொடர்பான நுண்கருவிகள், ஒயரிங், மென்பொருள் என அனைத்தையும் கழட்டிப் போட்டுவிட்டுத்தான் இறக்குமதி செய்யமுடியும். அதனால் இங்கே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் உயர்தர சொகுசு கார்களுக்கு சாத்தியமே இல்லை.

ஒன்னேகால் கோடிக்கு S class கார் வாங்கும் கோடீசுவரர்களுக்குத்தானே அந்த தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு வசதிகள் என்ற அங்கலாய்க்கத் தேவையில்லை. ஒருகாலத்தில் ஏபிஎஸ், ஏர்பேக் என்பது சொகுசு கார்களில் மட்டுமே இருந்தது. வரும் அக்டோபர் முதல் அது எல்லா கார்களிலும் கட்டடாயமாகிறது. காலப்போக்கில் எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமே. போர்க்களத்தில் துப்பாக்கிகளின் கட்டைகள் அதிக சூடாவதால் சுடமுடியாமல் போவதை தவிர்க்கவே ஆரம்பத்தில் பேக்லைட் (Bakelite) கைப்பிடிகள் பயன்பட்டது; இன்று ஒவ்வொரு வீட்டின் பிரஷர் குக்கரிலும் அதுதான் இருக்கிறது.

Visionary என்ற வார்த்தையே பொருளற்ற ஒன்றாகிவிட்டது. அரசாங்கத்தின் லைசன்ஸ் முறைகளின் நீட்சி இன்னமும் இருப்பதோடு நிலையற்ற கொள்கை முடிவுகள் இந்தியாவை இன்னமும் banana republic தோற்றத்தில்தான் வைத்திருக்கிறது. இந்திய சூழலில் வியாபாரம் செய்ய முடியாது என்று 8000 கோடி நட்டத்துடன் செவர்லே பிராண்டை வைத்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. பல ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழக்கிறார்கள். இந்தியாவில் இனிமேல் ஒருபைசாகூட முதலீடு செய்யமுடியது என்று டொயோட்டா அறிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வசதிகள், சொகுசு தேவை என்பதை உற்பத்தி செய்யும் நிறுவனமும், வாடிக்கையாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்; ஆனால் இந்தியாவில் அரசாங்கம் முடிவு செய்கிறது என்பதால் இங்கு முதலீடு செய்வது தேவையில்லாத ஒன்று என்று ஹோண்டா அறிவித்திருக்கிறது.

பால்வளம், ஆட்டோமொபைல் மட்டுமல்லாது டெக்ஸ்டைல் துறைக்கும் இருண்டகாலம் ஆரம்பிக்கவிருக்கிறது. பி. டி. தொழில்நுட்பம் வந்தபிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பருத்தி வியாபாரத்துக்குள் புகுந்து தேன்கூட்டை கலைத்துவிட்டார்கள். மான்சான்டோ இந்தியாவுக்கான பருத்தி ஆராய்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தெரிகிறது. ஆங்காங்கே இந்த ஆண்டு பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆண்டு இது இன்னும் தீவிரமடையும். 2019-வாக்கில் புதிய தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத நிலையில் பருத்திக்கு பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டவேண்டிவரும். உலகின் தடை செய்யப்பட்ட அத்தனை வகையான பூச்சிக்கொல்லிகளும் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக மாறும். மான்சான்டோவை அடித்து விரட்டிவிட்டோம் பார்த்தாயா என்று நம்மாழ்வாரிய மூடர்கள் கொண்டாடக்கூடும். பேயர், மான்சான்டோவைக் கையகப்படுத்திவிட்டதால் இன்னும் சில மாதங்களில் மான்சான்டோ என்ற நிறுவனம் தானாகவே கரைந்துவிடும். பருத்தியில் பூச்சி எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாதபோது சந்தையில் பூச்சிக்கொல்லிகளின் ஜாம்பாவானான பேயர்-இன் வியாபாரம் எகிடுதகிடாக வளரும். அதனால் என்ன, சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டதாக நம்மாழ்வாரிய மூடர்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியே நமக்கு நிறைவானதாக இருக்கும்!

அச்சே தின் ஒவ்வொரு துறையிலும் வந்துகொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆகும் எண்ணமிருந்தால் உடனடியாக மறுபரிசீலனை செய்யவும்.

உர மானியம் தொடர்பான சர்ச்சைகள், சில நல்ல முன்னேற்றங்கள்

உர மானியமானது இவ்வளவு ஆண்டுகளாக இரயில்களில் ஏற்றியவுடனோ அல்லது மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிட்டங்கியை வந்தடைந்தவுடனோ தரப்படும் பில்களை வைத்து உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு உரம் வழங்கியதற்கான இரசீது ஆதார் எண்ணுடன் விவசாயினுடைய கைரேகையை வைத்து உறுதிப்படுத்திய பிறகே கம்பெனிகளுக்கு வழங்கப்படும். உர விற்பனையாளர்களுக்கு PoS கருவியை உரத் தயாரிப்பு கம்பெனிகளே வழங்குகிறது. அந்த கடைக்காரர்களுக்கான பயிற்சியை அரசு வேளாண்மைத்துறை வழங்குகிறது.

கேஸ் மானியம் மாதிரி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்காமல் பயனாளிகளை சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு கம்பெனிகளுக்கு வழங்குவது ஒரு நல்ல ஆரம்பம்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டுக்களை தடுக்கமுடியும் என்பதோடு உண்மையாகவே எத்தனைபேர் நேரடி விவசாயிகள், எத்தனைபேர் விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற மேப்பிங் செய்யவும் அரசுக்கு ஒரு வாய்ப்பு. கிடைக்கப்போகும் அந்த தரவுகளின் அடிப்படையில் 2019-வாக்கில் விவசாயிகளுக்கே நேரடி உர மானியம் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மானியங்களை ஒழித்து விவசாயத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட இஃது ஒரு ஆரம்பம் என்ற வழக்கமான பல்லவியை ஒருபக்கமாக வைத்துவிட்டு கடந்தகாலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உலகப்போர்களின்போது மிச்சமான வெடிமருந்துகளை விவசாயத்துக்கு திருப்பிவிட்டு பசுமைப்புரட்சி உண்டாக்கி விவசாயத்தைக் கெடுத்தார்கள் என்ற வசனம் ரொம்பவும் அறுவையாக இருக்கிறது. அதனால் அதுவும் இப்போது வேண்டாம்.

உர நிறுவனங்களுக்கு யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களில் 21 கிரேடுகள், ஆலைகளில் பலதரப்பட்ட எரிபொருட்கள் பயன்பாடு இருப்பதால் மானியமும் பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது. உதாரணமாக யூரியா தயாரிக்க 80% செலவு கேஸ் வாங்குவதற்கு மட்டுமே. அந்த கணக்குகளின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேசத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்குகள் பிரசித்தி பெற்றவை. சிட்டகாங் துறைமுகத்தில் நின்ற ஒரு கப்பலிலிருந்து 13500 டன் யூரியாவைக் காணவில்லை என்ற வழக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்று. தமிழகத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.

1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் மகன் பிரபாகர் ராவ் National Fertilizers Ltd நிறுவனத்தின் இரண்டு இலட்சம் டன் யூரியா இறக்குமதியில் ஊழலில் சிக்கி கைதானது ஒரு புகழ்பெற்ற வழக்கு. 2008-ஆம் ஆண்டு 3153 டன் பொட்டாஷ் சென்னை துறைமுகத்திலிருந்து ‘காணாமல் போன’ வழக்கை CB-CID விசாரித்தது மற்றொரு புகழ்பெற்ற வழக்கு. பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பொட்டாசியம் குளோரைடு மடைமாற்றம் செய்யப்படுவது சாதாரணமாக நடந்துவந்த ஒன்று. மானியவிலையில் ஒரு டன் பொட்டாஷ் 4500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைத்தபோது அதன் இண்டஸ்ட்ரியல் கிரேடு விலை 30000 ரூபாய்.

தனிநபர்கள்தான் என்றில்லை. அரசு நிறுவனங்களும் இத்தகைய மானிய உரங்களை ஆட்டையைப்போடுவது புதிதல்ல. TANFED மூலம் விவசாயிகளுக்கு வழங்கவிருந்த DAP உரத்தை TNPL நிறுவனமானது Sludge treatment-க்காக வாங்கியதும் மற்றொரு அரசுத்துறை நிறுவனமான பால்மர் லாரீ (Balmer Lawrie) உரங்களை ஒரு இரசாயன இடுபொருளாக ஆலைகளில் பயன்படுத்தியதுமாக ஒரு வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்தது துறைசார் மக்களுக்கு நினைவிருக்கும்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய உரச்சந்தை உலகளவில் பல கோடீசுவரர்களால் உற்றுநோக்கப்படும் ஒன்று. நார்வே நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற, மிகப்பெரிய உர நிறுவனமான யாரா (Yara) இந்தியாவில் அரசுத்துறை நிறுவனமான கிரிப்கோ (Krishak Bharathi Cooperative Ltd) உடன் ஒரு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட ஒரு மில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்து, பின்னர் அதை ஒப்புக்கொண்டு 48 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது வரலாறு.

உள்நாடு, வெளிநாடு என்றில்லை உள்ளூர் பிரமுகர்களும் உர மானியத்தை சாப்பிட ஊழலில் ஈடுபடுவது புதிதல்ல. கலப்பு உரம் தயாரிக்க மானியத்தில் வரும் நேரடி உரங்களை திருடும் பாணி அலாதியானது. பெரிய கிட்டங்கி உரிமம் வைத்திருக்கும் பலரும் கலப்பு உரத் தொழிற்சாலை வைத்திருப்பர். Use No Hooks என்று அத்தனை உரமூட்டைகளின் மீதும் எழுதியிருக்கும். ஆனால் லோடிங், அன்லோடிங் செய்யும்போது குத்தூசியைப் பயன்படுத்தி மூட்டைகளை கையாளுவதை ஊக்குவித்து கொஞ்சூண்டு உரம் சிந்திக்கொண்டே செல்லும்படி செய்யவேண்டியது; மூட்டைக்கு அரைகிலோவரை கொட்டிவிடும். அதைக் கூட்டி அள்ளி கலப்பு உரத்துடன் கலந்துவிட்டால் காசு!

வேப்பெண்ணெய் பூசப்பட்ட யூரியா வருவதற்குமுன் கோழித்தீவனம், டெக்ஸ்டைல், மீன்பண்ணை என பல இடங்களில் மானியவிலை யூரியா மடைமாற்றம் செய்யப்பட்டது வரலாறு.

விவசாயி என்ற போர்வையில் பல்லாயிரம்பேர் சுரண்டித்தின்று வயிறு வளர்க்கின்றனர். வெகுசிலர் அதன் உச்சகட்ட சுரண்டலின் அடையாளமாக திகழ்கின்றனர். ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டிய ஒரு புகழ்பெற்ற விவசாயி ஜெயலலிதா; வேட்புமனுவில்கூட தொழில் என்ற இடத்தில் விவசாயி என்று குறிப்பிட்டிருந்தார். சரத் பவார் மகள் கடலைமிட்டாய் புகழ் சுப்ரியா சூலே ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் மற்றொரு விவசாயி. வடக்கில் அமிதாப் பச்சன் என்ற இன்னொரு விவசாயிகூட இருக்கிறார்.

ஊழலை ஒழிப்பது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற வார்த்தைகள் பொத்தாம்பொதுவான ஒன்று. அதற்கு வழிமுறைகளோ, இலக்குகளோ கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் போடும்போதெல்லாம் ஒரு ரூபாயில் பத்துகாசு மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்கி, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி, பயனாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே உறவு இருக்கவேண்டும் ஏனையவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று மன்மோகன்சிங் என்ற ஒருவர் சொன்னபோது உலகவங்கியின் கைக்கூலி என்று வசைபாடப்பட்டார். இந்தியாவில் இதெல்லாம் வாய்ப்பேயில்லை என்று கெக்கலித்த அமாவாசைகள், நாகராஜசோழன்களாகி கடைசியில் அதே வழிமுறைகளை ஒரு சமஸ்கிருதப் பெயர்மட்டும் வைத்துவிட்டுப் பின்பற்றுவதையும் “வரலாறு என்னை மதிப்பிடட்டும்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப்பார்க்க வேண்டயிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்துக்கும் வரிவிதிக்கவேண்டும் என்று பிபேக் தேப்ராய் அண்மையில் சொன்னபோது அஃது அவருடைய சொந்தக்கருத்து என நிதி ஆயோக் கூட பின்வாங்கிக்கொண்டதும், அதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கருத்தலைகளையும் கண்டோம். விவசாயம் என்ற புனித பசுவைத் தொட யாரும் விரும்புவதில்லை. நிலம் வைத்திருந்தாலே விவசாயி என்ற அடைப்பு கிடைத்துவிடுகிறது. குத்தகை வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக்கூடாது என்ற கேள்வியைக்கூட கேட்க பயப்படவேண்டிய சூழலே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி விமான நிலைய வாசலை மிதித்தவுடன் விவசாயி ஆகிவிடுகின்றனர்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் பவர் புரோக்கரான நாயகன் ஒருமுறை விருது ஒன்றை ‘வாங்கித்தர’ டெல்லி போனவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பார். அங்கிருக்கும் கொள்கைப்பிடிப்புமிக்க அதீத தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணாக்கர்களுடன் உரையாடும்போது பல கருத்துக்களை நடகமுறைக்கு ஒவ்வாதவொன்று மனதளவில் புறக்கணிப்பார். ஆனாலும் ஆரம்பகாலத்தில் அவருடைய அம்மா நூறுநாள் திட்டத்துக்கு வேலைக்கு போனபோது கமிசன் இல்லாமல் சம்பளம் கிடைக்காததையும் அதற்கு அத்தகைய மாணக்கர்களே போராடி கமிசன் இல்லாமல் கூலி கிடைத்ததையும், அவர்களே சமூகத்தின் அடித்தளத்தில் ஒருவகையான சமநிலையைக் கொண்டுவருவதையும் நாவலாசிரியர் சரவணன் சந்திரன் அழகாக விளக்கியிருப்பார். மன்மோகன்சிங், பிபேக் தேப்ராய் போன்றவர்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

உர விற்பனையை குறைந்தபட்ச தொழிற்கல்வியறிவு உடையவர்கள் மட்டுமே நடத்தவேண்டும் என்று மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை பின்வாசல் மூலமாக உடைத்துவிட்டிருக்கும் உள்ளூர் பிரமுகர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. உபரிகளைச் சுரண்டித் தின்னத்தான் எவ்வளவு கூட்டம்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்களைவிட கீழான தற்குறிகள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் சமூக இயக்கத்தைப் பற்றிய புரிதல் துளியும் கிடையாது என்றே சொல்லலாம்.

ஓட்டுனர், நடத்துனர் அத்தனைபேரும் தங்களது குலத்தொழிலைவிட்டு வெளியேறி ஏற்றுக்கொண்ட ஒரு நாகரிகமான ஆரம்பகட்ட தொழில். ஏதாவது ஒரு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் படிப்பை முடித்தோ முடிக்காமலோ தட்டுத்தடுமாறி அடைந்த தொழில். யாருக்கும் டிரைவர் ஆகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் இருக்காது; ஒரு வேலைக்கு அலைமோதுபவர்களை தானாகவே இழுத்துக்கொள்ளும் தொழில்.

இன்றைய தேதியில் போர்வெல் லாரிகளில் பணிபுரியும் டிரில்லருக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம். குறைந்தது ஒரு இலட்சம் அட்வான்ஸ்; கார்ப்பரேட் வார்த்தையில் சொன்னால் அது இம்ப்ரெஸ்ட் கேஷ். வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் (இதன் டெக்னிகல் டெர்ம் லைன் வண்டி) கேஸ்/பெட்ரோல் டேங்கர், டிரைலர், காற்றாலை விசிறி லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் இருபதாயிரம். BE படித்தவனுக்கு 10000 சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது டிரைவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 20000 என்பது போதாதா என்ற கேள்வி எழக்கூடும்.

வேறு தொழிலில் புகாமல் குலத்தொழில் செய்யும்போது எப்படி ஒரு இழிவான பார்வை சொந்த சாதிக்காரர்களாலேயே வைக்கப்படுகிறதோ அதே பார்வைதான் லைன் வண்டி ஓட்டுனர்களுக்கும். விவசாயந்தான் பண்றான், சலூன்கடைதான் வச்சிருக்கான், ஸ்வீப்பராத்தான் இருக்கான் என்ற அளவில்தான் டிரைவராத்தான் போறான் என்ற அங்கீகாரமும். கல்யாண சந்தையில் ஒரு VAO சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஓட்டுனர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் ஆகும்வரை CL Driver-ஆக லாரி கிளீனர் சம்பாதிப்பதைவிட குறைவான சம்பளத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் மினி ஆட்டோ ஓட்டுவது, ஜேசிபி, பால்வண்டி, டேக்ஸி என நாட்களைக் கடத்துகின்றனர்.

நல்ல வேலையும் அமையாமல், திருமணமும் செய்யமுடியாமல், சொற்ப சம்பளத்தில் படிக்கவும், வேலைக்கும் செல்லும் பெண்களை எந்நேரமும் பார்த்துக்கொண்டே பணிபுரிவது முப்பதைத் தொடும் இளைஞர்களுக்கு நரகம். PhD முடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக பல்கலைக்கழகமே வேலைபோட்டுத் தரவேண்டும், வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் போகமாட்டேன் என்று தடித்தனத்துடன் பொழுதைக்கழிப்பவர்களுடன் ஓட்டுனர், நடத்தனர்களை ஒப்பிடுவது சாடிஸ்ட் மனநிலை.

பி. எஃப், கிரிஜுட்டி, படி என்பதெல்லாம் தொழிலாளர்களின் உரிமை. ஒரு நல்ல முதலாளிக்கு தெரியும் திறமையான ஊழியர்கள் இருக்கும்வரைதான் தனக்கு ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை என்று. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு தட்டையான மனநிலை கொண்ட ஒருசாரார் நம்மிடையே இருப்பது குறித்து அதிர்ச்சியடைய தேவையில்லை. கடைநிலை மக்களின் உபரியைச் சுரண்டி வளர்ந்த ஆண்டபரம்பரை சிந்தனை அவ்வாறுதானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து பேசும்போதெல்லாம் எல்லா உயர்சாதியினரும் பணக்காரர்கள் அல்லர்; பல பிராமணர்கள் வறுமையில் உழல்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கடி கேட்டிருக்கலாம். வறுமையில் உழன்றாலும் லாரி டிரைவராக, கிளீனராக இருக்கும் பிராமணரைக் கண்டதுண்டா? அப்படியெனில் அந்த தொழில் யாருக்கானது, ஏன் அதன்மீது இவ்வளவு வன்மம் என்பது எளிதாக விளங்கும்.

பவர் ஸ்டியரிங் இல்லாத டிராக்டரை ஓட்டிய அனுபவமிருந்தால் சாதாரண ஸ்டிரியங் உள்ள பேருந்தை ஓட்டுபவர்களின் உழைப்புகுறித்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். லைன் வண்டி ஓட்டுனர்களுக்காவது தூக்கம் வந்தாலோ, வயிற்று உபாதைகள் ஏற்பட்டாலோ தங்கள் விருப்பப்படி வண்டியை நிறுத்தமுடியும். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பஸ் ஸ்டாண்டு ஓட்டல், கக்கூஸ் தாண்டி எதையும் கற்பனைகூட பண்ணமுடியாது. சம்பளம் கொடுக்கவே வழி இல்லாததால் அளவுக்கதிகமாக ஓவர்டைம் பார்க்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் படும் பாடு ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருமண அழைப்பிதழ்களில் TNSTC நடத்துனர், TNSTC ஓட்டுனர் என்று பெருமையாக போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு கிடைக்காத கல்வியும், நல்ல வேலையும் அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்திருப்பதை அந்த அழைப்பிதழே சொல்லும். அதைத் தாண்டி கான்ட்ராக்டுகளில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஓட்டுனர், நடத்துனர், டிக்கெட் செக்கர் போன்றவர்களுக்கும் கட்டிங் உண்டு என்பதெல்லாம் அளவுக்கதிமான இன்டெலெக்சுவல் ஹேவிளம்பியின் பின்விளைவுகள்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கேட்பது அவர்களுக்கு முறைப்படி வந்து சேரவேண்டிய பணத்தை. இன்று அதிமுக தொழிற்சங்க அணி சார்பாக பேருந்துகளை இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உரிமைக்கும் சேர்த்துதான் இந்த பணிநிறுத்தம். ஏதோ ஒரு விமான நிலையத்தை இராஜ்கோட் பஸ் ஸ்டேன்ட் என்று போட்டோஷாப் செய்து போட்டு ஹேவிளம்பி செய்யும் கூட்டத்துக்கு இதெல்லாம் புரியாது.

வெற்று பந்தாவுக்காக எழுப்பப்படும் கல்விமுறை குறித்த கோஷங்கள்

ஒருசாரார் சமச்சீர் கல்விமுறையானது சிபிஎஸ்ஈ-க்கு குறைவான பாடத்திட்டத்தையே கொண்டிருக்கிறது என்ற பழைய பல்லவியை விடாது பாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட சமூக, பொருளாதார சூழலில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவது அரசின் கடமை; அதை செவ்வனே செய்கிறது அரசு இயந்திரம்.

ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சாதீய வெறி குறித்த நோக்கங்களை மறந்தும் தொடமாட்டார்கள்; சமச்சீர் கல்வித்திட்ட புத்தகங்கள் அச்சடிப்பதை, திருவள்ளுவர் படத்துக்குமேல் போஸ்டர் ஒட்டுவதை, நடுவணரசு நிதியிலிருந்து பள்ளிகளின் உள்கட்டமைப்பை உயர்த்த தரப்பட்ட பெருந்தொகையில் எட்டணா செலவு செய்யாமல் திருப்பியனுப்பி தனியார் பள்ளிகளின் வியாபாரத்துக்கு துணைபோவதை சிபிஎஸ்ஈ-தான் உசத்தி எனப் பாடும் அறிவுசீவிகள் மறந்தும் தொடமாட்டார்கள்.

பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்ந்து எப்படியாவது ஒரு பி. ஏ, ஒரு பிஎஸ்சி வாங்கிக்கொண்டு பெரும்பாலோனோர் நகர்ந்துவிடுகிறார்கள். பல தலைமுறைகள் கல்வி வாசனையே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஃது ஒரு சாதனை. அவனவன், அவனவன் குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம சிந்தனையை தகர்த்த முதல் அடி அனைவருக்குமான கல்வியில்தான் ஆரம்பமாயிருக்கிறது. அதை தாங்கமுடியாத ஒரு கூட்டம் குலக்கல்வியை ஒருவிதமான modernized protocol மூலம் நிறுவ முயற்சிப்பதன் நாகரிக வெளிப்பாடுதான் சிபிஎஸ்ஈ உசத்தி, நாட்டுமாடு, இயற்கை விவசாயம், எட்சட்ரா.

ஒரு பி.ஏ., பி.எஸ்.சி வரை நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கப்புறம் நடக்கும் கூத்துகளை அந்த சிபிஎஸ்ஈ உசத்தி எனப் பாடும் ஆர்வலர்கள் தொடக்கூட மாட்டார்கள்.

தமிழகத்தின் ஆறேழு பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர துணைவேந்தர்கள் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் கையொப்பம் இல்லாத பட்டங்களை வழங்கக்கூடாது என இரமதாசு அறிக்கை விட்டு கேட்டும் பதில் சொல்லும் நிலையில் உயர்கல்வித்துறை இல்லை.

பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்களைத்தான் துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்ற விதியைக் காற்றில்விட்டு இணைப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது ஒரு பல்கலை என்றால் உதவிப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது இன்னொரு பல்கலைக்கழகம்.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆளே கிடைக்காத பற்றாக்குறை நிலவுவதாகச் சொன்னால் பீகார், சட்டீஸ்கார் வரை சிரிப்பார்கள். ஓய்வுபெற்றவர்களை துணைவேந்தர்களாக்குவது, பதவிநீட்டிப்பு செய்வது எதனால் என்பது அவர்களது சாதிய பின்புலத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தமிழக பல்கலைகளுக்கு முழுநேர வேந்தரும் கிடையாது என்பது கொடுமைக்கு வந்த கொடுமை.

முழுநேர ஆய்வுப்பணிகளில் இருந்து விலகி பதிவாளர், முதல்வர், துணைவேந்தர், திட்டக்குழு போன்ற மாநில அரசுக்கான சிறப்பு திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பேராசிரியர்கள் PG, PhD மாணக்கர்களுக்கு எதற்காக கைடு ஆகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பாதிநாட்கள் கேம்ப், மீட்டிங் என்றபெயரில் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் மற்ற மீட்டிங்குகளில் பிசியாக இருப்பார்கள். ஏதேனும் ஒப்புதல் பெற, ஆய்வுமுடிவுகள் குறித்து கலந்துரையாட ஆள் இல்லாதபட்சத்தில் மாணாக்கர்கள் சும்மா நாட்களைக் கடத்துவது தவிர்க்க இயலாத்தாகிவிடுகிறது. கூடுதல் பதவிகளைக் கொண்டிருக்கும் பேராசிரியர்களை கைடு ஆகக் கொண்டிருக்கும் மாணாக்கர்கள் எத்தனைபேரால் சரியான நேரத்துக்கு கோர்ஸ் முடிக்க முடிந்த்து என்பதை பார்த்தாலே தெரியும்.

ஜெனரிக் மருந்துகள் குறித்த செய்திகளைப் படித்துவருகிறோம். இந்த ஜெனரிக் கெமிக்கல் மாதிரியான சிந்தனைதான் ஆய்வுகளுக்கு இருக்கும் பெரிய முட்டுக்கட்டை. சில நுண்ணிய ஆய்வுகளுக்கு உயர்தரமான high precision இரசாயனம், சாதனங்கள் இல்லாமல் செய்யமுடியாது. ஆனால் நடப்பது என்ன? Price contract அல்லது Rate Comparison List என்றபெயரில் மூன்று கொட்டேஷன் வாங்கி குறைவான விலையைக் குறிப்பிடும் முகவர்களிடமிருந்து ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்படும்.

உயரதிகாரிகளை அனுசரித்து மனம்கோணாமல் நடக்கும் சிலர் அத்தகைய கமிட்டியில் இருந்து இந்த கெமிக்கலை/சாதனத்தை இந்த கம்பெனியிலிருந்து இன்ன விலைக்குத்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். அதில் பெரும்பாலும் ஜெனரிக் வகைகளே இருக்கும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் லேப் கிரேடு என்றால் இருபது கம்பெனிகள் சப்ளை செய்யும். அதில் குறைவான விலையில் வருவதைத்தான் வாங்குவார்கள். அத்தகைய பொருட்களால் சில ஆய்வுகளின்போது எதிர்பார்த்த precision-ஐத் தர இயலாது. உனக்கு தேவை பொட்டாசியம் பெர்மாங்கனேட்தானே, இந்தா புடி, அந்த கம்பெனி இந்த கம்பெனின்னு கேக்கற வேலையெல்லாம் இருக்கப்படாது என்று சொல்லப்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பு இன்வாய்சில் இருந்தாலும் சப்ளை செய்யப்படுவது பெரும்பாலும் ஏதாவது குப்பையாகவே இருக்கும்.

இந்த சூழலில் Current Science சஞ்சிகையைத் தாண்டி Cell, Science, Nature-இல் ஆய்வுக்கட்டுரைகள் வரும் என்பதெல்லாம் சர்க்கரை என்று எழுதி தொட்டு நக்கிப் பார்ப்பது மாதிரிதான். பத்து இருபது இலட்சம் கொடுத்து வேலைக்கு சேர்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள்

குஜராத்தின் இராஜ்கோட் நகரை மையமாக வைத்து ஜுனாகத், பாவ்நகர், ஜாம்நகர், சுரேந்திரநகர், அம்ரேலி எல்லாம் சேர்த்து செளராஷ்ட்ரா பிராந்தியம் எனப்படுகிறது. அப்பகுதி மக்களின் பண்புக்கூறுகளுள் ஒன்று நன்றாக எண்ணெய்/நெய் வடிய வடிய மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார்கள். மதியம் 1 – 3 பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கும். போன் எடுக்க மாட்டார்கள்; சிலர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தூங்குவார்கள். வியாபார ரீதியாக வரும் வெளியூர்வாசிகள் அனுசரித்து போகவேண்டிய முக்கியமான நாகரிகம் இது.

அங்கிருந்த காலகட்டங்களில் மதிய உணவுக்குப் பிறகு எங்காவது மரத்தடி கடைகளில் உட்கார்ந்து மூலிகை பானம் பருகிக்கொண்டு ‘ஜீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்’ போன்ற கவித்துவமான பாடல்களைக் கேட்டவாறு அலைபேசி வழியாக காதலித்துக்கொண்டு நேரத்தைக் கொல்வது வாடிக்கையாக இருந்தது. 25 வயதுக்குள் கல்யாணமாகிவிடுவதை இயல்பாகக் கொண்டிருந்த சமூகத்தையும், கால்களில் காப்பு, வண்ணமயமான உடை, கைத்தடி, பெரிய மீசை, கடுக்கன் சகிதம் சுற்றிக்கொண்டிருக்கும் விவசாயிகளையும், பார்ப்பதற்கு எளிமையான வாழ்க்கை என்றாலும் ஷேர் ஆட்டோக்களில்கூட உயர்சாதி ஆட்களின் அருகில் உட்காராமல் தள்ளி உட்கார்ந்து செல்லும் மக்களைப் பார்த்து புரிந்துகொள்வதற்கு அந்த மதிய வேளைகள் உதவியது.

அப்போது, ஒரு வட இந்திய நிறுவனத்தின் பிரபலமான பருத்தி விதை இரகமாக “அக்கா” (Akka) இருந்தது. அந்த இரகத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி. MRP-க்கு மேல் கொடுத்து விவசாயிகள் வாங்கினார்கள். பல விவசாயிகள் தொலைதூரங்களில் இருந்து வந்து மார்க்கெட் முழுவதும் விசாரித்தும் விதை கிடைக்காமல் திரும்பிச் சென்றார்கள். விதைப்பெட்டிகளை ஏற்றிவரும் லாரி குஜராத் எல்லையைத் தொட்டுவிட்ட தகவல் வந்தாலே பரபரப்பு தொற்றிக்கொள்ளுமளவுக்கு இருந்தது.

பரிச்சயமான வியாபாரிகளின் கடைகளில் அமர்ந்திருக்கும்போது அங்கு வந்து விசாரிக்கும் விவசாயிகளைக் கூர்ந்து கவனித்து குஜராத்தியில் சில வார்த்தைகளைக் கற்க ஆரம்பித்திருந்தேன. “அக்கா பியாரன் ச்சே?” (அக்கா விதை இருக்கிறதா?) என்று கேட்டு பலர் தொலைதூர ஊர்ப்பெயர்களைச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளியில் பலர் வந்து சென்றார்கள். மதியம் ஒரு சாலையோரக் கடையில் மூலிகைப்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் தெரிந்த அந்த வண்ணமயமான உடையணிந்த விவசாயிகள் ஒரே வேனில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தநாள் இதே ஆட்களை பக்கத்து ஊர் மார்க்கெட்டில் பார்க்கையில் அடையாளம் தெரிந்தது; அவர்கள் வந்திருந்த வேன் உட்பட. சிலமாதங்கள் கழித்து அந்த கம்பெனியில் வேலை செய்த ஒருவர் நண்பரானார். நேரடியாக அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக டிமாண்டை கூட்டவும், கடைக்காரர்களிடம் இரகத்திற்கு டிமாண்ட் இருப்பதற்கான நம்பிக்கையை உண்டாக்கவும், மற்ற ஊர்களில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவும் கம்பெனி தரப்பில் ஒரு புதிய உபாயத்தைக் கையாண்டதாகவும் தெரிவித்தார்.

********************************************

திண்டுக்கல் அருகே ஒரு புதிய உணவகம் திறந்தார்கள். விசாலமான பார்க்கிங் வசதியுடன் பிரதான சாலையில் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் ஒரு திறமையான இளைஞர். அருகிலிருந்த ஆட்டோ பைனான்ஸ் கம்பெனி அதிபரிடம் ஒரு டீல் பேசியிருக்கிறார். அதன்படி தவணை கட்டாததால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்களை பைனான்ஸ் கம்பெனியின் இடத்திலிருந்து எடுத்துவந்து உணவகத்தின் முன்புறம் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திக்கொள்வது. கார், பைக் என எதை ஜப்தி செய்து எடுத்துவந்தாலும் உணவகத்தின் முன் நிறுத்தச்செய்து, அவற்றைத் துடைத்து சுத்தபத்தமாக பார்த்துக்கொண்டார்.

பளிச்சென்ற கார், பைக்குகள் நிறைய நிற்பதால் நிச்சயமாக நல்ல உணவகமாக இருக்கும் என்று காரோட்டிகள் நிறுத்தி, குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வோல்வோ பேருந்துகள்கூட நின்று செல்ல ஆரம்பித்தன. ஒரு செக்யூரிட்டி நிறுத்தி கார்களை ஒழுங்குபடுத்தி பார்க் செய்யுமளவுக்கு வியாபாரம் வளர்ந்துவிட்டது.

************************************

மேற்கண்ட இரண்டுமே விற்பனையை அதிகரிக்க செய்வதற்கான தந்திரோபாயங்கள். முன்னது ஒரு கார்ப்பரேட் கம்பெனியால் செய்யப்பட்டது. பின்னது ஒரு தனிநபரால் செய்யப்பட்டது. இரண்டிலுமே வாடிக்கையாளருக்கு பொருள் குறித்த தவறான தகவல்களைத் தந்தோ, தரக்குறைவான பொருளை விற்றோ ஏமாற்றவில்லை. இஃது ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் பொதுப்புத்தியில் தனிநபர் செய்தால் புத்திசாலித்தனம் என்றும், கம்பெனி செய்தால் ஏமாற்றுவேலை, சதி, தில்லுமுல்லு என்றும் சொல்லப்படுகிறது. தனிநபரின் face value-க்காக அனுசரித்துக்கொள்ளும் நாம், முகமில்லாத கம்பெனி என்பதால் முஷ்டியை மடக்குகிறோமா அல்லது different formats of business என்பது குறித்த புரிதல் இல்லையா? இது சரியா, தவறா, வேறு ஏதாவது வழிவகை உண்டா?

உங்களுக்கு தோன்றுவதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

ஹைபிரிட் தக்காளியும், மியூடன்ட் தக்காளியும் – சில முட்டாள் ஆர்வலர்களும்

தமிழகத்தில் ஹைபிரிட் தக்காளி விதைகள் ஆண்டுக்கு தோராயமாக ஐந்து டன் விற்கிறது. ஓர் ஏக்கர் நடவுசெய்ய 60 கிராம் மட்டுமே போதுமானது. ஏக்கருக்கு 20 டன் தக்காளிப்பழ மகசூல் கிடைக்கும். அப்படியேனில் ஓராண்டுக்கு எத்தனை ஏக்கர்களில் எத்தனை டன் தக்காளி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதில் கணிசமான அளவு கேரளாவுக்குச் செல்கிறது.

நாட்டுத் தக்காளி ஓர் ஏக்கர் நடவுசெய்ய 150 கிராம் விதை தேவைப்படும். ஓர் ஏக்கருக்கு தோராயமாக 10 டன் மகசூல் கிடைக்கும். இதன்படி எத்தனை டன் விதை ஆண்டுக்குத் தேவை, ஹைபிரிட் இரகங்களின் பாதி மகசூல் மட்டுமே ஏக்கருக்கு கிடைப்பதால் கூடுதலாக எத்தனை ஆயிரம் ஏக்கர் வேண்டும், அதற்கான தண்ணீர், இடுபொருட்கள், உடலுழைப்பு என ஆகும் கூடுதல் விரயம் எவ்வளவு என்ற கணக்கையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாட்டுத்தக்காளி இரகங்களை மட்டுமே உண்ணவேண்டும், ஹைபி்ரிட் இரகங்களை புறக்கணிக்கவேண்டும் என்று அவ்வப்போது சில நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்கள் கருத்து வெளியிடுவார்கள். அத்தகைய மூடத்தனத்தின் ஏகபோக குத்தகையை வைத்திருந்த பசுமை விகடனை விஞ்சுமளவுக்கு குமுதத்தின் ‘மண்வாசனை’ இப்போது களம் இறங்கியிருக்கிறது.

விவசாய ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே நாட்டுத்தக்காளி இரகம் பெரியகுளம் 1 எனப்படும் PKM 1. கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் இரகங்கள் அதிக வெயிலைத் தாங்கும் தன்மையற்றவை, செயற்கையாக விலையேற்றம் செய்ய விதைகளைப் பதுக்கிவிட்டார்கள், அரசு விதைப்பண்ணை அதிகாரிகளும் அதற்கு துணைபோகிறார்கள் என்று ஓர் ஆர்வலர் விகடனில் எழுதியதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடிப்பொடிகள் ஆடியதைப் பார்த்து தொழில்முறையில் விதை விற்பனையில் ஈடுபட்டுள்ள பலரும் முகம் சுழித்தனர்.

விஷயத்துக்கு வருகிறேன். நாட்டு, சுதேசி ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இரகமான PKM1 என்பது அன்னஞ்சி என்ற உள்ளூர் இரகத்தின் mutant ஆகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி mutants உண்டாக்கப்படுகிறது. ஹைபிரிட் இரகங்களில் ஒரு செடியிலுள்ள மகரந்தத்தூள் மற்றொரு செடியின் சூல்முடி மீது தூவப்பட்டு விதை உண்டாக்கப்படுகிறது. Mutant இரகங்களில் விளையும் காய்கள் எவ்வளவு பாதுகாப்பனவையோ அதே அளவுக்கு ஹைபிரிட் இரகங்களில் விளையும் காய்களும் பாதுகாப்பானவை. மியூடன்ட்-களை ஏற்றுக்கொள்பவர்கள், ஹைபிரிட்-களை அறிவியலுக்கு புறம்பாணது இயற்கைக்கு மாறானது எனும்போது மூடர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

பள்ளி, கல்லூரிகள் ஒரேநேரத்தில் திறக்கப்படுவதோடு வைகாசி மாதம் பல முகூர்த்தங்கள் இருப்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருக்கும். அதையொட்டி அடுத்தமாதம் பல ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப்போவதைக் காண தயாராகுங்கள்!