அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்களைவிட கீழான தற்குறிகள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் சமூக இயக்கத்தைப் பற்றிய புரிதல் துளியும் கிடையாது என்றே சொல்லலாம்.

ஓட்டுனர், நடத்துனர் அத்தனைபேரும் தங்களது குலத்தொழிலைவிட்டு வெளியேறி ஏற்றுக்கொண்ட ஒரு நாகரிகமான ஆரம்பகட்ட தொழில். ஏதாவது ஒரு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் படிப்பை முடித்தோ முடிக்காமலோ தட்டுத்தடுமாறி அடைந்த தொழில். யாருக்கும் டிரைவர் ஆகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் இருக்காது; ஒரு வேலைக்கு அலைமோதுபவர்களை தானாகவே இழுத்துக்கொள்ளும் தொழில்.

இன்றைய தேதியில் போர்வெல் லாரிகளில் பணிபுரியும் டிரில்லருக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம். குறைந்தது ஒரு இலட்சம் அட்வான்ஸ்; கார்ப்பரேட் வார்த்தையில் சொன்னால் அது இம்ப்ரெஸ்ட் கேஷ். வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் (இதன் டெக்னிகல் டெர்ம் லைன் வண்டி) கேஸ்/பெட்ரோல் டேங்கர், டிரைலர், காற்றாலை விசிறி லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் இருபதாயிரம். BE படித்தவனுக்கு 10000 சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது டிரைவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 20000 என்பது போதாதா என்ற கேள்வி எழக்கூடும்.

வேறு தொழிலில் புகாமல் குலத்தொழில் செய்யும்போது எப்படி ஒரு இழிவான பார்வை சொந்த சாதிக்காரர்களாலேயே வைக்கப்படுகிறதோ அதே பார்வைதான் லைன் வண்டி ஓட்டுனர்களுக்கும். விவசாயந்தான் பண்றான், சலூன்கடைதான் வச்சிருக்கான், ஸ்வீப்பராத்தான் இருக்கான் என்ற அளவில்தான் டிரைவராத்தான் போறான் என்ற அங்கீகாரமும். கல்யாண சந்தையில் ஒரு VAO சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஓட்டுனர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் ஆகும்வரை CL Driver-ஆக லாரி கிளீனர் சம்பாதிப்பதைவிட குறைவான சம்பளத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் மினி ஆட்டோ ஓட்டுவது, ஜேசிபி, பால்வண்டி, டேக்ஸி என நாட்களைக் கடத்துகின்றனர்.

நல்ல வேலையும் அமையாமல், திருமணமும் செய்யமுடியாமல், சொற்ப சம்பளத்தில் படிக்கவும், வேலைக்கும் செல்லும் பெண்களை எந்நேரமும் பார்த்துக்கொண்டே பணிபுரிவது முப்பதைத் தொடும் இளைஞர்களுக்கு நரகம். PhD முடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக பல்கலைக்கழகமே வேலைபோட்டுத் தரவேண்டும், வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் போகமாட்டேன் என்று தடித்தனத்துடன் பொழுதைக்கழிப்பவர்களுடன் ஓட்டுனர், நடத்தனர்களை ஒப்பிடுவது சாடிஸ்ட் மனநிலை.

பி. எஃப், கிரிஜுட்டி, படி என்பதெல்லாம் தொழிலாளர்களின் உரிமை. ஒரு நல்ல முதலாளிக்கு தெரியும் திறமையான ஊழியர்கள் இருக்கும்வரைதான் தனக்கு ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை என்று. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு தட்டையான மனநிலை கொண்ட ஒருசாரார் நம்மிடையே இருப்பது குறித்து அதிர்ச்சியடைய தேவையில்லை. கடைநிலை மக்களின் உபரியைச் சுரண்டி வளர்ந்த ஆண்டபரம்பரை சிந்தனை அவ்வாறுதானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து பேசும்போதெல்லாம் எல்லா உயர்சாதியினரும் பணக்காரர்கள் அல்லர்; பல பிராமணர்கள் வறுமையில் உழல்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கடி கேட்டிருக்கலாம். வறுமையில் உழன்றாலும் லாரி டிரைவராக, கிளீனராக இருக்கும் பிராமணரைக் கண்டதுண்டா? அப்படியெனில் அந்த தொழில் யாருக்கானது, ஏன் அதன்மீது இவ்வளவு வன்மம் என்பது எளிதாக விளங்கும்.

பவர் ஸ்டியரிங் இல்லாத டிராக்டரை ஓட்டிய அனுபவமிருந்தால் சாதாரண ஸ்டிரியங் உள்ள பேருந்தை ஓட்டுபவர்களின் உழைப்புகுறித்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். லைன் வண்டி ஓட்டுனர்களுக்காவது தூக்கம் வந்தாலோ, வயிற்று உபாதைகள் ஏற்பட்டாலோ தங்கள் விருப்பப்படி வண்டியை நிறுத்தமுடியும். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பஸ் ஸ்டாண்டு ஓட்டல், கக்கூஸ் தாண்டி எதையும் கற்பனைகூட பண்ணமுடியாது. சம்பளம் கொடுக்கவே வழி இல்லாததால் அளவுக்கதிகமாக ஓவர்டைம் பார்க்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் படும் பாடு ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருமண அழைப்பிதழ்களில் TNSTC நடத்துனர், TNSTC ஓட்டுனர் என்று பெருமையாக போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு கிடைக்காத கல்வியும், நல்ல வேலையும் அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்திருப்பதை அந்த அழைப்பிதழே சொல்லும். அதைத் தாண்டி கான்ட்ராக்டுகளில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஓட்டுனர், நடத்துனர், டிக்கெட் செக்கர் போன்றவர்களுக்கும் கட்டிங் உண்டு என்பதெல்லாம் அளவுக்கதிமான இன்டெலெக்சுவல் ஹேவிளம்பியின் பின்விளைவுகள்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கேட்பது அவர்களுக்கு முறைப்படி வந்து சேரவேண்டிய பணத்தை. இன்று அதிமுக தொழிற்சங்க அணி சார்பாக பேருந்துகளை இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உரிமைக்கும் சேர்த்துதான் இந்த பணிநிறுத்தம். ஏதோ ஒரு விமான நிலையத்தை இராஜ்கோட் பஸ் ஸ்டேன்ட் என்று போட்டோஷாப் செய்து போட்டு ஹேவிளம்பி செய்யும் கூட்டத்துக்கு இதெல்லாம் புரியாது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *