இணைய வணிகத்தின் தேனிலவு

சமகால வணிக சூழலில் அதிகம் தவறாக பயன்படுத்தப்பட்ட பதங்கள் என்றால் Asset light model மற்றும் Digital disruption -ஆகத்தான் இருக்கமுடியும். அமேசானும், பிளிப்கார்ட்டும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதற்காக பல “பொருளாதார நிபுணர்கள்” கோட்டு சூட்டோடு வந்து எல்லோருடைய காதிலும் அசெட் லைட் மாடல்தான் இனிமேல் எதிர்காலம்; நிலக்கரி, இரும்பு, டெலிகாம், உரம் போன்ற தொழில்களெல்லாம் அவ்வளவு இலாபகரமானதாக இருக்காது, RoI குறையும் என்றெல்லாம் எல்லோருடைய காதிலும் காய்ச்சி ஊத்தி நம்ப வைத்தார்கள். அதை கொஞ்சம் விரிவாக அலசலாம்; பொறுமை இல்லையெனில் இங்கேயே நிறுத்திவிடுங்கள்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் பல மாணவர்களின் கனவாக இருந்தாலும் அதில் ஒரு நவீன ஊழல் மறைந்திருக்கிறது என்பதும் நிதர்சனம். உண்மை, உழைப்பு, நம்பிக்கை, தன்னம்பிக்கை, நாணயம், சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். Start up என்பது ஒரு புதிய கோணத்திலான வணிக சிந்தனை அசுரத்தனமான வளர்ச்சிபெற்று கோடிகளைக் கொட்டும் என்பதால் venture capital funding செல்வதே சிறந்தது என்றும், Small business என்பது ஆண்டுதோறும் 15-50% வேகத்தில் வளரக்கூடிய time tested business process என்பதால் Bank Credit செல்வதே சிறந்தது என்றும் நிதி ஆலோசகர் Chellamuthu Kuppusamy தெரிவிக்கிறார்.

ஸ்டார்ட்அப்-களின் தோல்விக்கு முக்கிய காரணம் எந்த வழியாக இலாபம் வரும் என்றே தெரியாமல் இருப்பதும், எதிர்பார்த்தபடி வணிகம் வளராவிட்டால் தாக்குப்பிடிக்க Plan B என்னவென்று தெரியாமல் ஆரம்பிப்பதுதான். வணிகத்தின் சமூக dynamics குறித்த புரிதல் இல்லாமல், புத்தகத்தில் வரும் SWOT அனாலிசிஸ் போட்டுப் பார்த்துவிட்டு பெட் கட்டும் மனநிலையும் முக்கியமானது.

தற்போது Purple Squirrel என்ற ஸ்டார்ட்அப் 15 கோடியை செலவு செய்துவிட்டு, ஒன்றும் தேறாது என்று மூட இருக்கிறார்கள். இதன் கான்செப்ட் என்னவென்றால் கல்லூரி மாணவர்களுக்கு புராஜெக்ட் டூர், IV அழைத்துச்செல்ல திட்டமிடும் tool. ஹைதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லும் planner போன்ற ஒன்றை தயார் செய்தபிறகு மாணவர்களிடம் பேசினால் கோவா, குலு மணாலி, பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு IV செல்லவேண்டும், நீங்கள் சொல்லும் இடங்களுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் மாணவர்கள் நிராகரித்துவிட, Plan B இல்லாததால் மூடப்படுகிறது. http://www.business-standard.com/…/purple-squirrel-shuts-do… இந்த கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்-களின் ஆரம்பப்புள்ளி பிளிப்கார்ட் அல்லது ஸ்னாப்டீல் co-founder-ஆக இருந்த யாரோ ஒரு ஷர்மா. அவர் யாரென்று நினைவில்லை. பல கோடிகளுடன் மகிழ்ச்சியாக அதைவிட்டு விலகி யாரோ குருவிடம் யோகா கற்றுக்கொண்டு தியானத்தில் இருக்கும்போது அவரது உள்மனதில் வாத்தியாராக இருந்து செத்துப்போன தாத்தா வந்து கல்விமீது கவனம் செலுத்தத் சொன்னாராம். உடனே இவர் ஒரு கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க, இராசியான கைக்கு சொந்தக்காரர் என்று பலரும் பணம் போட வந்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதையொட்டி கசமுசவென்று கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்-கள் உண்டாயின. அதில் ஒன்றைத்தான் மேலே பார்த்தோம்.

ஒரு ஓட்டல்கூட இல்லாமல் உலகின் பல நாடுகளில் அறைகளை ஒருங்கிணைத்து வரும் நிறுவனம் Airbnb. அதாவது வாடகைக் கார் வணிகத்தின் Uber போல. அதே மாடலில் இந்தியாவில் உருவானதுதான் Oyo Rooms. ‘எங்களை காப்பியடித்து உண்டான பல நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை’ என்று சொல்லிவிட்டு இந்தியாவில் கடைதிறக்க வேலை செய்கிறார் Airbnb CEO. இந்தியாவில் தொழில்முறையில் நடத்தப்படும் பிராண்டு ஹோட்டல்கள் தாண்டி மற்றவை பெரும்பாலும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும், கருப்புப்பணத்தை அப்படியே பராமரிக்கவும் உண்டாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. அதனால் we are disrupting the hospitality industry for people’s needs என்று சொல்பவை சாதாரண டிக்கெட், ரூம் புக்கிங் போர்ட்டல்-களான yatra, makemytrip, tripadvisor போன்றவற்றின் போட்டியை எப்படி தாக்குபிடிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Uber மாடலில் உருவான Ola, பல புதுமைகளைப் புகுத்தி Fastrack, NTL, Meru போன்றவைகளுக்கு மரண அடி கொடுத்தாலும் அவர்கள் ஆரோக்கியமான லாபத்துடன் இயங்கியதால் சுதாரித்துக்கொண்டார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் கரையும்வரை அமைதிகாக்கிறார்கள். Uber, Ola-வின் தள்ளுபடிகள், டிரைவர் மற்றும் பேசன்ஜர் ரேட்டிங் குளறுபடிகள், இன்சென்டிவ் தகராறுகள், surge pricing போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. கார் வாடகைக்கு எடுப்பதுதான் சிரமம் ஆனால் ஆக்டிங் டிரைவர்கள் கிடைப்பது எளிது என்றுசொல்லி Zuver என்று ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் மணிக்கு 100 ருபாய் கட்டணம் என்றும் 20% கம்பெனி கமிஷன் என்று சொல்லுகிறார்கள். Ola–வும் 20% கமிஷன் என்றுதான் தற்சமயம் செயல்படுகிறது. வெளிநாட்டு முதலீடு கரைந்தபிறகு நடக்கப்போகும் போட்டிகள்தான் சுவாரசியமானவை.

Food tech start ups என்றபெயரில் வந்த food delivery கம்பனிகள் Foodpanda, Zomato, Swiggy மாடல் அலாதியானது. ஒவ்வொரு பெரிய உணவகமும் இலவச டெலிவரி கொடுக்கும் இடத்தில் தள்ளுபடியுடன், ஒரு ஆளுக்கு சம்பளமும் கொடுத்து டெலிவரியும் கொடுத்துவிட்டு வருவாய் எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் அல்லோலகல்லோலப்படுகிறது. உணவகத்துக்கு ரேட்டிங் கொடுக்கிறோம் அதனால் வாடிக்கையாளர்கள் சிறப்பான வரவேற்பு தருவார்கள் என்கிறார்கள். இந்த ரேட்டிங், சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் லோலாயிகள் குறித்து தனியாகவே ஒரு கட்டுரை எழுத முடியும். http://www.livemint.com/…/r…/The-trouble-with-Foodpanda.html

அடுத்து இத்தனை மில்லியன், அத்தனை மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட காய்கறி, மளிகை சாமான்கள் டெலிவரி. PepperTap, Grofers, BigBasket என வரிசையான வரவுகள். பிளிப்கார்ட்டின் NearBy ஆரம்பித்தவுடனே வரவேற்பு இல்லையென மூடப்பட்டது. இப்போது PepperTap ஒவ்வொரு ஊராக குடோனை சாத்துகிறது. “இந்திய மக்களுக்கு வாரயிறுதியில் மளிகை சாமான் வாங்கிவருவது ஒரு பிக்னிக் போன்றது, இல்லத்தரசிகள் கொஞ்சம் அடுப்படியில் இருந்து ரிலாக்ஸாக இருக்க மளிகை, காய்கறி வாங்கிக்கொண்டு, பிள்ளைகளுடன் வெளியே சுற்றிவிட்டு வருகிறார்கள்” என்று தனது அதிசய கண்டுபிடிப்பை இப்போது சொல்லியிருக்கிறார் PepperTap CEO. இதைத்தான் கிஷோர் பியானி காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது It Happened in India நூலை 200 ரூபாய்க்கு வாங்கி படித்திருந்தால் பல கோடி மிச்சமாகியிருக்கும்.

Brick & Mortar மாடல் எனப்படும் offline, retail channel based model. அதாவது நமது அண்ணாச்சி கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் போன்றவை. சுகுணா மட்டுமல்லாது ரிலையன்ஸ் நிறுவனமும் Frozen Chicken விற்பனையில் இறங்கி, போதிய வரவேற்பில்லாமல் மூடியது நினைவிருக்கலாம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது மளிகைக்கடையில் கறி விற்பது மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதால் மூடுவதாக அறிவித்தபோது மீசையில் மண் ஒட்டிக்கொண்டது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 70% விற்பனை அதன் துணை நிறுவனமான WS Retail என்ற நிறுவனத்திலிருந்து வருகிறது. அந்த WS Retail நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளது இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் Catamaran ventures. அமேசான் நிறுவனத்தின் 40% விற்பனையைத் தரும் Cloudtail நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் அதே நிறுவனம்தான். அண்மையில் மத்திய அரசு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் 25%-க்கு மேல் ஒரே நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கக்கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன.
http://www.livemint.com/…/Amazons-JV-Cloudtail-is-its-bigge…
இந்த களேபரத்துக்கு மத்தியில் Fidelity, Morgan Stanley போன்றவை பிளிப்கார்ட்டின் மதிப்பை 25-35% குறைத்துள்ளன. இந்த மதிப்பு குறைப்பு என்பது வெறும் theoretical exercise-தான், எங்கள் பரிவர்த்தனையின் மீது அல்ல என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் CEO சச்சின் பன்சால்.

வியாபார பரிவர்த்தனையில் இலாபம் எங்கே கிடைக்கும், தள்ளுபடியை நிறுத்தி பொருளோடு வரும் இலாபத்தில் நிறுவனத்தை நடத்தும்போது Brick & Mortar மாடல் கடைகளுடன் போட்டிட்டு தாக்குப்பிடிப்பது எப்படி என்ற தெளிவே இல்லாமல் இலாபம் வந்துவிடும் என்று வறட்டு நம்பிக்கையின் மீது வெறும் Number of Transactions என்ற அடிப்படையில் இணைய வணிகம் நடந்துகொண்டிருக்கிறது. மற்றபடி இங்கே வாடிக்கையாளர்களிடம் நன்றி உணர்வும் பெரிதாக கிடையாது, நிறுவனங்களிடம் professionalism என்பதும் சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிராண்டுக்கான மதிப்பை அந்த நிறுவனமே உண்டாக்கிக்கொள்ளவேண்டும், நாங்கள் வெறும் டீலர் என்ற அடிபடையில்தான் நமது வணிக புரிதல் இயங்குகிறது. ஒரு சிறிய ரன்னிங் ரிப்பேருக்காக மெர்சிடஸ் பணிமனைக்கு சென்றிருந்தேன். கோவையில் TVS Sundaram Motors-தான் மெர்சிடஸ் பென்ஸ் டீலர். அசோக் லேலண்ட் LCV லாரி, பஸ்களுக்கும் TVS-தான் டீலர். கோவை மாநகராட்சியின் குப்பை லாரிகள், மெர்சிடஸ் ஷோரூமின் வளாகத்திலுள்ள பணிமனையில்தான் சர்வீஸ் செய்யப்படுகிறது. அங்கே நிறுத்திவிட்டு சிறிதுநேரம் உள்ளே சென்றுவிட்டு வருவதற்குள் ஒரு குப்பைலாரி ஓட்டுனர் “குறுக்க ஏன் சார் வண்டிய போடறீங்க எனக்கு லேட் ஆகுதுல்ல” என்று சலித்துக்கொண்டே சென்றார். Brand Equity குறித்தெல்லாம் கோட்டுசூட்டு நிபுணர்கள் டிசைன் டிசைனாக பேசினாலும் அந்த பிராண்டு குறித்த புரிதல் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும் டீலர்களின் professionalism இல்லாமல் வெற்றியடையாது.

நமது மிகப்பெரிய சாபக்கேடு அவநம்பிக்கை, நாம் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்புவது இல்லை என்கிறார் FreeCharge நிறுவன CEO குணால் ஷா. ஒரு வண்டியை சர்வீஸுக்கு விடும்போது பெட்ரோல் அளவு எவ்வளவு இருக்கிறது என்றுதான் பார்க்கிறோம்; சர்வீஸ் அட்வைசர்கள் வண்டியை சுற்றிவந்து எத்தனை இடத்தில் ஒடுங்கியிருக்கிறது, பெய்ன்ட் போயிருக்கிறது, என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று குறித்துகொண்ட பின்னர்தான் என்ன பிரச்சினை என்றே கேட்க ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து அரசுகளையும், வணிக நிறுவனங்களையும் நம்பி கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்ற உணர்வுடன் திரும்புவதால் நமக்கு யார்மீதும் நம்பிக்கை கிடையாது. நமது வளரும் சூழலும் அப்படித்தான் இருக்கிறது. கல்விமுறையும் அதற்கான ஏற்பாடாகத்தான் இருக்கிறது.

ஒரேதிசையில் மந்தையாக சென்று இறங்குவது நமக்கு பழகிப்போன ஒன்று. பிளிப்கார்ட்டில் wellness products என்று ஆரம்பித்ததும் அதேபாணியில் பல தனி போர்ட்டல்கள் வந்தன. அதில் ஒன்று, Erotic section என்ற ஒன்று எங்களிடம் தனியாக இருக்கிறது என்று விளம்பரம் செய்தது. அடடா, பல பலான டில்டோ சமாச்சாரங்கள் இருக்கும், எப்படியும் ஒரு பாலியல் புரட்சி வரும் என்று நம்பி போய்ப் பார்த்தால் பலவித ஆணுறைகள் மட்டுமே இருந்தன. ஆணுறையை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு ‘காண்டம் வரட்டும்னு காத்துட்டு இருக்கோம்’ என்று சொல்லும் சுயகட்டுப்பாடுடைய தம்பதிகள் எப்படி இருப்பார்கள், எங்கே இருப்பார்கள் என்று பலவாறாக யோசித்துக்கொண்டு இருந்தகாலத்திலேயே அந்த போர்ட்டல் மூடப்பட்டது!

குத்து ரம்யா நமக்கெல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் austerity drive என்றபெயரில் செலவைக் குறைக்கவேண்டும் என்றபோதும் தாஜ் ஓட்டலின் சூட் அறையில்தான் தங்குவேன் என்று அடம்பிடித்து மருமகனின் கம்பெனி அக்கவுண்ட்டில் பில் செட்டில் செய்த எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தாவின் கம்பெனிகள் குறித்து இதில் பார்க்கவும். http://articles.economictimes.indiatimes.com/…/59339821_1_t…

இந்தியர்களின் அகவுரிமை (privacy) அலாதியானது. தனது வியாபாரம், வருமானம், செலவுகள் தன்னிடமே இருக்கவேண்டும், யாரையும் நம்பக்கூடாது போன்ற பாலபாடங்கள்தான் பிற்காலத்தில் நாம் ஆரம்பிக்கும் தொழில்களின் அடிப்படை. உதாரணமாக நாம் வாடிக்கையாளரிடம் செய்யும் வணிகம், அதன் லாப நட்டம், தகராறுகள் எல்லாமே மூன்றாவது நபர் குறுக்கிடாமல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கபடுமெனில் அது தாறுமாறான வெற்றியடையும். அதன் உதாரணம் JustDial. நாம் எவ்வளவுக்கு வாங்கினோம், அதில் கடைக்காரருக்கு லாபம் எவ்வளவு, கடனா ரொக்கமா என்றெல்லாம் நம் பரிவர்த்தனையில் மூக்கை நுழைக்காத லிஸ்டிங் மாடல் வெற்றிபெற்றது. ஆண்டுக்கு 20000 ருபாய் கட்டணம் செலுத்த வியாபாரிகள் தயாராக இருக்கிறார்கள். அதேநேரம் ஆன்லைனில் 30 Days Replacement Guarantee வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். நீங்கள் 25-ஆவது நாள் பொருளைத் திருப்பியனுப்பினால் பணம் இரண்டுநாளில் திரும்பி வருகிறது எனில் எத்தனை நாட்கள் கழித்து அந்த ஒரிஜினல் விற்பனையாளருக்கு பணம் போய்சேரும் என்பதை யோசிக்கவும். Number of Transactions-தான் இணைய வணிகத்தின் வெற்றி எனில் JustDial-இல் ஒருநாளைக்கு எத்தனை விசாரணைகள். கம்பெனி பல்லாயிரம் கோடிக்கு மதிப்பிடப்பட்டிருக்க வேண்டுமே.

நம்முடைய பணம், வியாபாரம் வேறு ஒருவரிடத்தில் போகக்கூடாது என்பது நம் அடிப்படை பாதுகாப்பு உணர்வு. ஒவ்வொரு வங்கிகளும், பல தனி நிறுவனங்களும் e-wallet என்றபெயரில் நமது பணத்தை அதில் சேமித்து வைக்கச்சொல்லி ஆலோசனை வழங்குவதும், அதன்வழியாக பரிவர்த்தனை செய்தால் தள்ளுபடிகள் வழங்குவதும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதாக கவருவதில்லை. E-wallet தயார் செய்ய, பல நிறுவனங்களை அதில் கொண்டுவர, ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதை தாங்கிப்பிடித்தவாறே ஏர்போர்ட்டுகளில் வாழும் நிறுவன உயரதிகாரிகளின் கடும் உழைப்பின் களைப்பைப் போக்க APAI பேக்கேஜில் ஆகும் ஸ்பா செலவுவரை எல்லாம் வாடிக்கையாளரே ஏற்கவேண்டும். அதற்கு என் பணம் வங்கிக் கணக்கிலேயே இருந்துவிட்டு போகட்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பது இயல்பு.

மாப்பிள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன, எனக்கு வேண்டியது மாலைப் பணம் என்று என்ன நடந்தாலும் வருமானம் பார்ப்பது, ஆடிட்டர்கள், வங்கிகள், வெப் டிசைன், ஹோஸ்டிங் ஆட்கள்தான். அமெரிக்காவில் தங்க வேட்டை நடந்த காலத்தில் அதிகம் சம்பாதித்தது ட்ரான்ஸ்போர்ட் ஆட்கள்தான் என்று சொல்வார்கள். மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மறைமுகமாக மக்களை மாறவிடாமல் செய்வது பெரும்பாலும் வங்கிகள்தான். ஒரு வங்கிகூட PoS பொறிகளை fixed rate-இல் வழங்குவதில்லை. RBI-யைகாட்டி நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிகர்களை வங்கிகள் சுரண்டுவது தலையில் இருக்கும் ஈரும், பேனும் போல. நம்மை ஒரேடியாக கொல்லாது, ஆனால் அரித்துக்கொண்டே இருக்கும்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் தரைதட்டிவிட்டதால் மும்பை IIT, இனிமேல் முதல் சுற்று placement-இல் asset light start up-களுக்கு எவ்வளவு சம்பளம் அறிவித்தாலும் இடமில்லை என்று போர்டு வைத்துவிட்டது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும்போது IIT, IIM முன்னாள் மாணவர் யாரேனுமிருந்தால் சீக்கிரம் பணம் கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வழக்கில் உள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் Fund manager-களின் உள்ளடி வேலைகள் இந்த ஆண்டு சில வெளியே வரும் என்று பேசிக்கொள்கிறார்கள். Ola, Flipkart போன்றவற்றில் பெருமளவு முதலீடு செய்த SoftBank-இன் CEO நிகேஷ் அரோராவுக்கு ஆண்டுக்கு 900 கோடி சம்பளம் எதற்கு, அவர் முதலீடு செய்த ஒரு நிறுவனமாவது break-even அடைந்திருக்கிறதா என்று வங்கியின் முதலீட்டாளர்கள் ஓலை அனுப்பியிருக்கின்றனர்.

Social entrepreneurship என்பது நமது சமூகத்தின் இன்றைய முக்கியமான தேவை. பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து வழங்கும் ஜெயாஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் பத்மஸ்ரீ முருகானந்தத்தின் வரலாறை கூகுளில் பார்க்கவும். Time இதழின் அட்டையில் வந்து இன்று பில் கேட்சுடன் சமமாக உட்கார்ந்து பேசும் முருகானந்தத்தின் கண்டுபிடிப்பின் பலனை ஊரகப்பகுதியில் விசாரித்துப்பார்க்கவும்.

எது எப்படி நடந்தாலும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும், ஆயிரம் பிசினஸ் மாடல் வந்தாலும் சம்பளம் என்பது அடிப்படை என்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி, அவர்களுக்கான payroll பராமரித்து வரும் staffing கம்பெனிகள் இன்று வளர்ச்சி கண்டுவருகின்றன. TeamLease பங்குச்சந்தைக்கு வந்துவிட்டது. கனடா வாழ் இந்தியரான பிரேம் வத்ஸாவின் Quess Corp விரைவில் பட்டியலிடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை இந்த நிறுவனங்கள் third-party employee, vendor employee என்ற பல பெயர்களில் முறைப்படுத்தி வருகின்றன. PF, ESI போன்றவை உறுதி செய்யப்படுவதால் விவசாயக்கூலியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்குப் போகலாம் என்று வருகிறார்கள். சாதி மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைப்பதோடு வேலையை விட்டு நிற்கும்பட்சத்தில் PF தொகை கொஞ்சம் மொத்தமாக கிடைக்கும் என்று நம்பித்தான் சேருகிறார்கள். அண்மையில் மோடி அரசு அதில் கை வைக்க நினைத்தபோதுதான் பெங்களூருவில் பேருந்துகளை எரித்து அடித்தட்டு ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இத்தகைய சூழலில் நாம் வாழும்போது அவநம்பிக்கைதானே முதலில் வரும்.

அவநம்பிக்கை, போட்டி, பொறாமை என வாழும் விவசாயிகளிடம் ஸ்டார்ட்-அப் கான்செப்ட்கள் வெற்றிபெற வேண்டுமெனில் அது ஒரு மேஜிக் ஐடியாவாக இருக்கவேண்டும். அல்லது ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைக்கும் தொழில்நுட்பமாக இருக்கவேண்டும். Bt பருத்தியின் வெற்றியே மருந்தடிக்க தேவையான செலவு மற்றும் ஆட்களை ஒரேடியாக குறைத்ததுதான். மான்சாண்டோவின் மார்கெடிங் பட்ஜெட்தான் காரணம் என்று ACAC Critics-தான்(Air Conditioned room Arm Chair Critics) சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இன்றும் களைக்கொல்லிகள் கன்னாபின்னாவென்று விற்க காரணம் ஆட்களின் தேவையைக் குறைப்பதுதான். விவசாயிகளைப் புனித பசுக்கள், வாழும் தெய்வங்கள் என்றெல்லாம் பேஸ்புக்கில் ‘நைஷ் பதிவு தோழி’ வகையறா ஆட்கள்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இயற்கை விவசாயம் தாண்டி ஏதேனும் புதிய முயற்சிகள் வெற்றிபெறுவதாக தெரிந்தால் கார்ப்பரேட் சதி என்று பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

விவசாயத்தில் சார்தொழில்களில் மண்டப முதலீட்டாளராக பல இடங்களில் முதலீடு செய்து வெற்றிகரமாகவும், சிலவற்றில் சில இலட்சங்களை இழந்தும், பல இடங்களில் பல்பு வாங்கியும், இன்னமும் தினசரி பல ஊர்களில், சாதிவாரியாக, சீசன்வாரியாக, பயிர்வாரியாக பலதரப்பட்ட தகவல்களோடு அதற்குள்ளேயே சுற்றி வருவதால் ஒரளவுக்கு நமக்கு நடைமுறை சிக்கல்களில் புரிதல் உண்டு. இடுபொருள் விற்பனை சங்கங்கள் நீண்டநாள் தாக்குபிடிக்காது என்று நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னபோது பலர் நம்பவில்லை. அதேபோல் இன்று Farmer Producer Company என்று ஆரம்பிக்கப்படும் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்கள் அதிலிருக்கும் முக்கிய புள்ளிகளின் vested interest காரணமாகவே இன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பது போல தெரிகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்ப்போம்.

இன்று சந்தைக்கு வரும் 90% விவசாய ஸ்டார்ட்-அப்-கள், IT-யின் ஒரு நீட்சியாகவே தெரிகிறது. இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு சொல்பவையாக இல்லாமல் கூடுதல் சுமையாகவே பெரும்பாலானவை வருகின்றன. அரிதாக சில ஸ்டார்ட்அப்-கள் நல்ல பொருள்+ஐடியாவுடன் இறங்கி ஒரு MSME நிறுவனமாக பரிணமிக்கின்றன. பல Marketing Innovation ஸ்டார்ட்அப்-கள் வந்து, காணாமல் போகின்றன. விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஒரு புரட்சியை செய்யப்போகிறோம் என்று இதுவரை ஏழெட்டு பேராவது வந்து சொல்லி சென்றிருப்பார்கள். நம்மிடம் ஒரு வலுவான வயல்வெளி உற்பத்தி அணி இருக்கிறது. வல்லாரை போன்ற கீரைகளைக்கூட தினசரி நூறு கிலோ வேண்டுமென்றாலும் தருகிறோம், ஆனால் போக்குவரத்து, சேமிப்பு உங்களை சேர்ந்தது, ஒரே விலையில் கடைசிவரை எடுத்துக்கொண்டால் போதும், சந்தையில் என்ன விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்றுகூட எங்களுக்கு சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு “அப்ப, நம்ம ப்ரொடக்சன் எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்?” என்றால் ஊருக்கு போயிட்டு சொந்தபந்தங்களிடம் கலந்துகிட்டு கடுதாசி போடறோம் என்று கிளம்புபவர்கள் திரும்ப வருவதேயில்லை. குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள், காபி டே-க்களில் உட்கார்ந்து SWOT analysis, Number of transactions, MoM growth, RoI, Break-even என்றெல்லாம் சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. இயற்கை விவசாயம் இன்னும் ஜோராக இருக்கிறது. யாராவது புரட்சிகரமான ஆட்கள் வரமாட்டார்களா, மேஜிக் நடக்காதா என்று என்னைப்போல பலர் காத்திருக்கிறோம்.

#Start_UP #Farming #Ventures

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது!

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் மிக அற்பமானவை. எளிதாக மக்களாட்சியில் சாதித்துக்கொள்ள முடிந்தவை. கடையேழு வள்ளல்களில் போரில் மடிந்தவர்களின் வரலாறு, அதன் தோற்றுவாய் என்னவென்பதை கொஞ்சம் பார்ப்போம்.

கடையேழு வள்ளல்களில் கொல்லிமலையை மையமாக வைத்து ஆண்டுவந்த ஓரியின் வில்வித்தைத் திறனை வன்பரணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வேழம் வீழ்த்த விழுத்தடை பகழி
பேழிவா யுளுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலை புகர்க்கலை யூருட்டி யுரற்றளைக்
கேழற்பன்றி வீழ வயலது
ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ?
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ!”

– புறநானூறு 152

ஒரு யானை, ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் சொருகி இருந்ததைக் காண நேர்ந்த ஒரு பாணர் கூட்டம், இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிரினங்களையும் கொல்லும் ஆற்றல் படைத்தவன் வல்வில் ஓரியோ? யாரோ? என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

அற்புதமான இயற்கை வளங்கள் நிரம்பிய மலையை ஆண்டுவந்த, வில்வித்தையில் சிறந்த மாவீரன் ஓரியின் கொல்லிமலையைக் கைப்பற்ற சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஆசை வருகிறது. இன்று தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூரை ஆண்டுவந்த காரி-மீது (மலையமான் திருமுடிக்காரி) படையெடுத்து வெல்கிறான். அப்போது பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அடைக்கலம் சென்ற காரி, ஒருகட்டத்தில் ஓரிமீது படையெடுத்துச்சென்று பெரும்போர் புரிகிறான். வில்வித்தையில் பெரும் சூரனான ஓரி, போரின்போது மார்பில் வில் துளைத்து உயிரை விடுகிறான். கொல்லிமலையைக் கைப்பற்ற உதவிய (கிட்டத்தட்ட கூலிப்படையாக சென்ற) மலையமான் திருமுடிக்காரிக்கு முள்ளூர் மலையை வழங்கிவிட்டு கொல்லிமலையை தன்வசம் வைத்துக்கொள்கிறான் பெருஞ்சேரல் இரும்பொறை.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் மணமுடித்து தரச்சொல்லிக் கேட்ட பாண்டிய மன்னருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் அந்த வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதனால் மூவேந்தர்களும் பாரியின் கோட்டையை முற்றுகையிட்டும் வெல்ல முடியாததால் பாணர்களைப்போல் வேடமிட்டு பாடல்களைப்பாடியும், இசை மீட்டியவாரும் கோட்டையினுள் சென்ற ஒற்றர்கள் கூர்வாளால் பாரி நெஞ்சில் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவரது மகள்களை அழைத்துசென்ற கபிலர், விச்சிக்கோன் என்னும் சிற்றரசனிடம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள அஞ்சிய விச்சிக்கோன் மறுத்துவிடவே, அவர்களை ஒரு அந்தனரிடத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விடுகிறார் கபிலர். பாரி மகளிர் இருப்பதையறிந்த ஒளவையார், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று திருக்கோவலூரை ஆண்டுவந்த மலையமான் திருமுடிக்காரிக்கு மணமுடித்து வைக்கிறார்.

தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொண்டைமான் இளந்திரையன் போருக்கு ஆயத்தமாகிறான். போரால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும் என்றெண்ணிய அதியமான், ஒளவையாரை தூதனுப்புகிறார். இளந்திரையனைச் சந்தித்த ஒளவை அவனது படைக்கலக் கொட்டிலைப் பார்வையிட்டுவிட்டு அவை வரிசையாக அடுக்கிவைத்து அழகாக இருப்பதாகவும் அதேநேரத்தில் அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் கொல்லர் பட்டறையில் கிடப்பதாகவும் கூறி இளந்திரையனுக்கு போரில் ஈடுபட்டால் தோல்விதான் ஏற்படும் என இடித்துரைத்துப் போரை தடுத்துவிடுகிறார். ஆனாலும் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தன்மீது போர் தொடுத்துவிடுவானோ என்று அஞ்சிய அதியமான், ஆயர் தலைவனான கழுவுள் என்பவனோடு இணைந்து இரும்பொறையின்மீது போர் தொடுக்கிறான்.

அரசன் உறங்கும் முரசுக்கட்டிலில் உறங்குவோருக்கு மரணதண்டனை உண்டென்றாலும் களைப்பினால் அதில் உறங்கிவிட்ட மோசிகீரனார் புலவர் என்பதால் அவரை எழுப்பாமல் கவரி வீசிய இரும்பொறைக்கு அதியமான் மீது சினமேற்பட்டு போருக்கு ஆயத்தமானான். இரும்பொறையின் அரசவையிலிருந்த புலவர் அரிசில்கிழார், அதியமானுக்கு நிச்சயமாக தோல்வி ஏற்படும் என்பதையறிந்து அவனைச் சந்தித்து போரை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கிறார். அதை புறந்தள்ளிய அதியமான் போரில் ஈடுபட்டு மடிகிறான்.

மயில் போர்த்திக்கொள்ளாது என்று தெரிந்தும் அதற்கு போர்வை தந்த பேகன் மனைவியை மதித்து வாழாததை கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் இடித்துரைத்தும் கேளாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து மடிகிறான்.

இதையெல்லாம் சமகால அரசியல் சூழலில் பொருத்திப்பார்த்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

நண்பர் ஜெயநாதன் எழுதியதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்

“படை பெருத்ததால் பார் சிறுத்ததோ
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ”

ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார், மேடைக்கு மேடை, பார்த்தாயா தமிழனின் புஜபல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும்.
விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன், குலோத்துங்கன். அவன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை. Iron Man, Hulk, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம் போரிற்கான விலையை யோசிப்பதில்லை. போர் என்பது ஏதோ, தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா, என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம் வளரும்பொழுது, நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள் அப்படி. அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது, நயமாய் பொய் சொன்னாலும், உரக்கச் சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது.
ஆக, குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான், யார் மீது போர் தொடுத்தான்?
அவன் போர் தொடுத்தது, ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால், ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன். காரணம், வரி கட்டாதது.
ஆக, இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு, பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ, பார் சிறுத்ததால் படை பெருத்ததோ என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என.
எனது கவலை, அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து, இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து.
இதை எழுதிய பின், வரும் பெருத்த பயம், கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும், அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும்.
யாருக்கு தெரியும். நாளையே தம்பிகளின் தம்பிகள், நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் – கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை. அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.
அதுவும் சரி தான். மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம்.

#அட்டகத்தி #மாமன்மருமகன்சண்டை #கலிங்கத்துப்பரணி

திருவோட்டுக்காய்

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பிச்சைப்பாத்திரம் ‘திருவோட்டுக்காய்’ எனப்படும் Beggar’s Bowl அல்லது Calabash tree மரத்தின் விதைதான். Crescentia cujete என்ற அறிவியல் பெயருடன் Bignoniacea குடும்பத்தை சேர்ந்தது. இதன் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு என்னவென்றால் Cauliflorus flowers – அதாவது வளரும் குருத்தில் பூ உண்டாகாமல் தண்டுப்பகுதியில் உண்டாகும். வௌவால் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று காய் உண்டாகிறது (பப்பாளி, பலா மரங்களும் தண்டுப்பகுதியில் காய் வைக்கக்கூடியவை என்றாலும் அதன் மகரந்தச்சேர்க்கைக்கு வௌவால்கள் தேவையில்லை).

நம்மூர் பருவநிலைக்கு சாதாரணமாக வளரக்கூடியது. அறிவியல் பெயருடன் இருக்கும் படம் பேராசிரியர் Balasubramani Venkatasamy அவர்களால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்டது. ஏனைய படங்கள் கோயமுத்தூரில் எடுக்கப்பட்டவை. காய்களை கிட்டத்தட்ட ஒருமாதம் காயவைத்து, அறுத்து விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். முளைக்கவைத்து பின்னர் தனியாக படத்தை ஏற்றுகிறேன். ஏதாவது வித்தியாசமான மரங்களை வளர்க்க விரும்பினால் முயற்சித்து பாருங்கள். வீட்டில் திருவோட்டுக்காய் விதை/மரங்கள் இருக்ககூடாது என்ற மூட நம்பிக்கையை யாரேனும் சொல்லக்கூடும். அதில் உண்மை ஏதுமில்லை. முருங்கை, இலவம்பஞ்சு போன்றவை வீட்டுக்கருகில் இருக்கக்கூடாது என்பதற்கு காரணம் அதன் கிளைகள் சாதாரணமாக காற்றடித்தாலே முறிந்துவிழுந்து ஆபத்தை உண்டாக்கும் என்ற காரணம்தான்.

தினத்தந்தியில் வந்த தகவல்களில் பாதி தவறானது. வேண்டுமானால் இந்த லிங்கில் பார்க்கலாம். https://www.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/1031777490172197/?type=3&theater
அப்புறம் உலகத்திலேயே பெரிய விதை எது என்ற சிறுவர்மலரில் அடிக்கடி வரும் பொது அறிவு கேள்விக்கான விடையும் ஒரு படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ‘லொடைசியா மால்தீவிக்கா’ விதை கோவையில் காஸ் வன அருங்காட்சியகத்தில் (Gass Forest Museum) இருக்கிறது.

மாமனார் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கடியில் உட்கார்ந்து அந்த காய்களை சுரண்டிக்கொண்டிருந்தபோது அந்தப்பக்கமாக வந்தவர் “என்ன பண்றீங்க” என்றார். “திருவோடு ரெடி பண்ணிட்டுருக்கிரனுங்” என்றதும் அமைதியாக சென்றுவிட்டார். சிலவினாடிகள் கழித்துதான் இடம், பொருள் அறியாமல் பேசக்கூடாது என்று புரிந்தது!

ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை என்பது எல்லோருக்குமான மதிப்பீடா?

கேள்வி:
ஐரோப்பிய யூனியனில் உள்ள 19 நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவிக்க தடை செய்திருப்பதை அடிக்கடி ஆர்வலர்கள் மேற்கோள் காட்டி இந்தியாவிலும் தடை வேண்டும் என்கின்றனரே. அறிவியல்பூர்வமாக கூகிளில் தேடிக்கொள்ளலாம் என்பதால் அதன் அரசியல் பின்னணியில் கொஞ்சம் விளக்கமுடியுமா?

பதில்:
முதலில் அவை எந்தெந்த நாடுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். Austria, Belgium, Britain, Bulgaria, Croatia, Cyprus, Denmark, France, Germany, Greece, Hungary, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Poland and Slovenia. இதில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் Tax Heaven என்று அழைக்கப்படும் வரியில்லா சொர்க்கங்கள். ஜேம்ஸ் பாண்டு தன்னுடைய high-profile எதிரிகளின் பணபரிவர்த்தனையை அறிய மேற்கண்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நாடுகள் ஒவ்வொன்றின் பரப்பளவு சராசரியாக தமிழகத்தின் பாதிதான், மக்கள்தொகையும் மீறிப்போனால் சில கோடிகள். மீதமுள்ளவை உலகப்போர் காலத்திலிருந்தே வலுவான பொருளாதார கட்டமைப்பைக் கொண்டவை.

அந்த நாடுகளின் தேவைகள், மக்கள்தொகை, எதிர்காலம் குறித்த திட்டங்கள் அடிப்படையில் எடுக்கப்பாட்டிருக்கும் முடிவை இங்கே செயபடுத்த நினைப்பது முட்டாள்தனம். நமக்கெல்லாம் அடிப்படை வசதியான கக்கூஸ்கூட கிடையாது. மரத்தடியில் நின்றுதான் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். அந்த நாடுகளில் ஒரு சராசரி குடிமகனின் கேரேஜ் என்பது நம் ஊரில் நடுத்தர மக்களின் அபார்ட்மெண்ட்/வீட்டு அளவான 800 சதுர அடியைக் கொண்டது என்கிறார்கள். தொட்டதுக்கெல்லாம் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுவது ஒருவித மனநோய்.

இங்கே பசியில் மக்கள் சாகும்போது அவர்களுக்கு உணவு கிடைத்தால் போதும் என்பதே நமது நோக்கமாக இருக்கும்போது, மரபணு மாற்றப்பட்ட உணவாக இருந்தால்தான் என்ன? பட்டினியால் சாவதைவிட பிழைத்திருப்பதே வரலாறில் சாட்சியாக நிற்கும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நடக்கும் செயல்பாடுகள் ஒருபுறம் நடக்கட்டும். இதன் பின்னணியில் நடப்பது என்னவென்று இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே தனி நாடு கோஷங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் அதுபோன்ற தனி நாடு கோஷம் வலுத்து உணவுக்கு, நீருக்கு பஞ்சம் ஏற்ப்பட்டு, நம் இளைஞர்களிடம் ஆயுதங்கள் வழங்கப்படும்போது தமிழ்நாடும் – ஏன் இந்தியாவும் – சோமாலியா போன்ற உள்நாட்டு கலவரங்களை சந்திக்க நேரிடும். உண்மையில் நம் கண்முன்னே நடக்கும் சுரண்டல்களை மறைக்கவே மரபணு பயிர்களுக்கு தடை, தடுப்பூசிகள் கூடாது போன்ற கருத்தாக்கங்கள் விதைக்கப்படுகிறது. உதாரணமாக 2008-இல் இந்தியாவின் பஹாமாஸ் தீவுக்கான ஏற்றுமதி 22 லட்சம் டாலர். 2010-இல் 280 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. பின்னணியில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்கள் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டியிருந்தன. வெறும் 3.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட தீவில் அனைவரும் பெட்ரோலில் குளித்து, அதையே குடித்திருந்தாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு பெட்ரோல் வாங்கியிருக்க வேண்டியதில்லை (நன்றி: கருப்புப்பணம் நூல், ஆசிரியர் ரமணன், கிழக்கு பதிப்பகம் வெளியீடு).

தமிழக இளைஞர்களை திசைதிருப்பும் பொருட்டு பரப்பப்படும் மரபணு மாற்ற/இயற்கை விவசாய சித்தாந்தங்கள், தனி நாடு, ஆண்ட பரம்பரை பரப்புரைகளில் இருந்து விலகி அம்பானி, அடானி, டாடா, கோயங்கா போன்ற அசைக்கமுடியாத தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவி தமிழகத்தை வரியில்லா சொர்க்கமாக மாற்றிவிட்டு பின்னர் பொழுதுபோகட்டுமே என்று சித்தாந்தங்களை பரிசோதித்துப்பார்ப்பது அறிவான செயலாகும். தனிநாடு இல்லாமல் இந்திய யூனியனில் இருந்துகொண்டு Tax Heaven உண்டாக்க முடியாது என்பவர்கள் அமெரிக்காவின் Delaware மாகாணத்தில் இருக்கும் வடக்கு ஆரஞ்ச் தெருவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கொக்க கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கே.எப்.சி., கூகுள், உள்ளிட்ட 21700 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்க.

அமாவாசை சூத்திரமும்*, ஆல்-இன்-ஆல் அழகுராஜா உரக்கடைகளும்

இன்று பெரும்பாலான பூச்சிமருந்து, உரக்கடைகள் மற்றும் ஹார்ட்வேர், சிமெண்ட் கடைகள் தனியாக தொழில்முறையில் நடத்தப்படுகின்றன என்றாலும் ஒன்றிரண்டு பழைய கடைகள் அப்படியேதான் இருக்கின்றன. அங்கே விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மாட்டுத்தீவனம், புண்ணாக்கு, சிமெண்ட், எலெக்ட்ரிகல், ஹார்ட்வேர் சாமான்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டை முதல் மூக்கணாங்கயிறு வரை சகலமும் கிடைக்கும். அவர்களின் ஸ்டைல்-தான் உண்மையான Brick & Mortar format. தேவையான சரக்குகளை பணம்செலுத்தி எடுத்துக்கொள்வார்கள். எவ்வளவு விற்கமுடியுமோ அவ்வளவு மட்டுமே ஆர்டர் கொடுப்பார்கள், கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் மாத இறுதி டார்கெட்டை நிறைவுசெய்ய டம்பிங் செய்தால் தைரியமாக NO சொல்லுவார்கள். விவசாய இடுபொருட்கள், ஹார்ட்வேர் சாமான்கள், எலெக்ரிகல் சாமான்கள் என அனைத்திலும் 10-15% லாபத்துடன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே குறைவான விலையில் தருவார்கள். தமிழ் தேதி, மாதம், அஷ்டமி, நவமி, அமாவசை, பவுர்ணமி என கலந்துகட்டி அடிப்பார்கள். அதில் பூச்சிமருந்துகளை எப்படி பேலன்ஸ் செய்கிறார்கள் என்று பார்த்தோமானால் முப்பது வருடங்களுக்கு முன்னரே சந்தையில் வந்த மருந்துகளை விற்பதோடு, புதிய தலைமுறை மருந்துகளையும் கணிசமான அளவுக்கு விற்பார்கள். அது எப்படி?

பயிர்களைத் தாக்கும் முக்கியமான நாசகார பூச்சிகள் எல்லாம் Lepidoptera என்ற ஆர்டருக்குக்கீழே Noctuidae என்ற குடும்பத்தில்தான் இருக்கின்றன. இதன் வாழ்க்கைச்சரிதம் 30 நாட்கள்தான் (முட்டை->லார்வா(புழுப்பருவம்)->ப்யூப்பா(கூட்டுப்புழு)->அடல்ட்(பட்டாம்பூச்சி). இந்த பட்டாம்பூச்சிகள் நல்ல காரிருள் சமயத்தில்தான் mating-இல் ஈடுபடும், அதாவது அமாவாசை சமயத்தில். அடுத்த அமாவாசைக்குள் ஒரு life cycle முடிந்துவிடும். ஆய்வகத்தில் வளர்க்கும்போதுகூட rearing chamber-ஐ கறுப்புத்துணியால் மூடி வைக்காவிட்டால் sterile முட்டைகள் மட்டுமே கிடைக்கும். அதன் புழுக்களின் வளர்ச்சி மொத்தம் ஆறு instar-கள். முதல் இரண்டு இன்ஸ்டார்களின்போது எதையாவது பக்கத்தில் காட்டினாலே செத்துவிடும். கோக், பெப்சி, பிராந்தி அடித்து கன்ட்ரோல் செய்வது, வேப்பிலை, நொச்சி இலைச்சாறு அடிப்பது குறித்து “இயற்கை விஞ்ஞானிகள்” சொல்வது எல்லாமே இந்த டைமிங் சென்ஸ்-தான். மூன்றாவது இன்ஸ்டாருக்கு மேல் இந்த சித்துவேலையெல்லாம் காட்டினால் ‘மூடிட்டு போடா’ என்று சொல்லாதகுறையாக மொத்த காட்டையும் இரண்டு நாளில் தின்று தீர்த்துவிடும். வேறுசில பூஞ்சான, வைரஸ் காரணிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அது இந்த இடத்தில் தேவையில்லாதது.

இங்கேதான் நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜா பிசினெஸ் மாடல் வருகிறது. அமாவாசைக்கு முதல் இரண்டு நாட்களிலிருந்து ஏழெட்டு நாட்களுக்கு விலை குறைந்த generic மருந்துகளை விற்பார்கள். அதனுடன் ஏதாவது 100% லாபமுடைய பயிர் வளர்ச்சி டானிக்குகளை அள்ளிபோட்டு கொடுத்துவிடுவார்கள். பவுர்ணமிக்கு ஒருவாரம் இருக்கவே புதிய தலைமுறை மருந்துகளுக்கு மாறிவிடுவார்கள். அப்போது டானிக்குகளின் அளவை குறைத்தோ அல்லது விற்காமலோ விட்டுவிடுவார்கள். மொத்தத்தில் எல்லாநாளும் ‘எல்லா பூச்சிமருந்துகளும் நியாயமான விலையில் கிடைக்கும்’ என்று ரொக்க பில்லில் எழுதியிருப்பதுபடியே நடந்துகொள்வார்கள். அந்த 10-15% இலாபம் அவர்களுக்கு நிறைவானதாக இருக்கும். மக்களும் அதற்கு இராசியான கடை என்று நற்பெயர் வைத்திருப்பார்கள். அந்த விற்பனைக்கேற்ப வரும் தங்கக்காசுகள், பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வார்களேதவிர இந்த ஆண்டு இந்தனை கிராம் காயின் வாங்க வேண்டும், பாங்காக் டூர் போகவேண்டும் என்று டார்கெட் வைத்து எதையும் விற்கமாட்டார்கள். Peach of mind – Guaranteed!

ஒரு குரூப் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாம் எதற்குமே உருப்படாதவை, எல்லாமே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டர்கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகூட விநாயகருக்கு தலை மாற்றியபோதே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, புஷ்பக விமானத்திலிருந்தான் இன்றைய விமானம் கண்டுபிடித்தார்கள் நீங்கள் எதுவுமே புதிதாக செய்யவில்லை என்று எதற்கெடுத்தாலும் நொட்டம் சொல்லிக்கொண்டே இருப்பது. அவர்களை திருப்திபடுத்தவே முடியாது. ஆராய்ச்சிகளின்மீது, ஆராய்ச்சியாளர்களின்மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக simply waste என்று ஒதுக்கிவிட முடியாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருக்காது. அவர்களுக்காக எப்படியெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது!

* – இந்த darkness related to the reproduction of Noctuidae insects குறித்து இரண்டு தரப்புகள் இருக்கிறது. ஒரு தரப்பு அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், எனவே இது வெறும் hypothesis என்று சொல்லி ஆய்வு முடிவுகளைக் காட்டுகிறது. மற்றொரு தரப்பு நிரூபித்து காட்டுகிறது. பூச்சிகளைக் கொல்வது மட்டும்தான் நானறிந்த கலை, எனவே உங்களுக்கு தெரிந்த ஒரு பூச்சியியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது நான்கு வகையான நிகழ்தகவுகள் வரலாம். ஒன்று, அதை சரியென சொல்லலாம். இரண்டு, அதை தவறென சொல்லலாம், மூன்று, தெரியாது என சொல்லலாம். நான்கு, ஒருவேளை அவருக்கு தெரியாது என்றாலும் அவரது நிபுணத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் எனக்கு எல்லாம் தெரியும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனவும் சொல்லலாம்.

சரி, இதைவைத்து நீங்கள் என்ன செய்யலாம். அலுவலகத்தில் நேரம் போகவில்லையெனில் அந்த முடிவுகளை Poisson distribution – இல் உள்ளே நுழைக்கமுடியுமா என்று கோடு போட்டு பார்க்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லையெனில் மறந்துவிட்டு வேலையை பார்க்கலாம்!!

தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

கேள்வி: தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

பதில்:
Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

தனியார்மய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது சிக்கலான ஒன்று என்றாலும் பெரும்பாலானவை ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, சந்தர்ப்பவாத எதிர்ப்பு, கண்மூடித்தனமான ஆதரிப்பு மற்றும் நட்டநடு சென்டர் நடுநிலைமை என நான்குவகையே.

தனியார்மய அதிருப்தியாளர்கள் சொல்லும் முக்கியமான காரணம் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்பதாகும். இங்குதான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. இன்றுவரை வேளாண்துறையில் முனைவர்களை, ஆராய்ச்சியாளர்களை, வல்லுனர்களை உருவாக்குவதாகச் சொல்லும் த.நா.வே. பல்கலையில் பட்டம் பெற்றவர்களே உதவிப்பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றச்செல்கின்றனர். தனியார் கல்லூரி முதல்வர்களும் நேரடியாக த.நா.வேளாண் பல்கலைக்கழகத்தால் நிரப்பப்பட்டு கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரம் கண்காணிக்கப்படுகிறது. கல்வி பயில வெறும் கட்டிடங்கள், ஆய்வகங்களைத் தாண்டி தகுதியான ஆசிரியர்களும், முதல்வரும் அறிவுஜீவிகள், மெத்தப்படித்த, நாலும் தெரிந்த நல்லவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வேளாண் பல்கலையிலிருந்தே சென்றிருக்கும்போது கல்வியின் தரம் நீரத்துப்போகுமென்பது நகைமுரண். தேர்வுக்கு வினாத்தாள்களை வடிவமைப்பது, விடைத்தாள்களை மதிப்பிடுவது என ஒட்டுமொத்த குடுமியையும் அரசு வைத்திருக்கிறது. BSc agri மாணாக்கர்களுக்கு வகுப்பெடுக்க MSc agri பட்டத்துடன் NET தகுதி போதுமானது என்பது நடைமுறை. ஆனால் இன்றைய தேதியில் PhD பட்டமுடைய முனைவர்களே வகுப்பெடுக்கச் செல்கின்றனர்.
இப்படியிருக்கையில் கல்வியின் தரம் குறைகிறது என்றால் வகுப்பெடுக்கச்செல்பவர்களின் தராதரம் என்னவென்பது தீவிரமாக கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

தனியார்மயத்தால் பாலாறும் தேனாறும் ஒடுமா என்றால் நிச்சயமாக ஓடாது. ஆனால் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பை தடுப்பது என்பதே வன்முறை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மருத்துவர்களைக் காட்டிலும் குறைவாகவே வேளாண் பட்டதாரிகள் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இல்லாத இன்றைய சூழலில் விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டுசேர்க்க மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. நூறுபேர் வெளியில் வந்தால் பத்துப்பேராவது அதே துறையில் இருப்பார்கள், அதில் ஐந்து பேர் விற்பன்னர்களாக விரிவடைவார்கள் என்பது இயல்பு. அதற்கான வாய்ப்பையே உண்டாக்கவிடாமல் செய்வது முறையற்ற செயலாகும்.

கணிசமான எண்ணிக்கையிலான ஆட்கள் இருக்கும்போதுதான் தரமான ஒன்றை/ஒரு ஆலோசகரை நாடுவதற்கு விவசாயிகளுக்கு options இருக்கும். தமிழகத்தில் தினசரி மருத்துவ உதவிகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏதோவொரு காரணத்துக்காக வேளாண் நிபுணர்களின் ஆலோசனையை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியிருக்கையில் ஆட்களை இல்லாத ஒரு செயற்கையான பற்றாக்குறையை வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

தற்சமயம் நிபுணத்துவம் என்பது மாட்டுச்சாணியின்மூலம் மட்டுமே மாற்றம் வரும் என்று நம்பும் இயற்கை விவசாய ஆரவலர்களிடமும், இரசாயனங்கள் மட்டுமே ஏற்றம் தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட நிபுணர்களிடமும், உயிரியல் முறையில் பயிர்மேளாண்மை சிறப்பாக செய்யலாம் என்றாலும் பணபலத்தால், ஆள் அம்புகளால் பயோ புராடக்ட்கள் என்ற பெயரில் போலிகளை விற்கும் ஆசாமிகளிடமும் சுருங்கி சின்னாபின்னமாகி நிற்கிறது. இந்த மூன்றையும் பேலன்ஸ் செய்து பயனாளிகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய வேளாண்துறையும் தேங்கிக்கிடக்கும் கோப்புகளிலில் ஆட்கள் பற்றாக்குறையால் முடங்கியிருக்கிறது.

ஆக, Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

விவசாயப் பல்கலைக்கழகம் உண்டாக்கும் Inbreeding Depression

எப்படியாச்சும் பி.எஸ்.சி அக்ரி முடிச்சிடனும். ஒரு டிபார்ட்மெண்ட்ல ஸ்பெசிலைஸ் பண்ணுவோமேன்னு எம்.எஸ்.சி சேரனும். அந்த ரெண்டு வருசத்துலயாவது எதாச்சும் படிச்சு பரீட்சை எழுதி பல்கலைகழத்தவிட்டு இடத்தை காலி பண்ணனும். இல்லன்னா சொந்தமா பிராக்டீஸ் (இதெல்லாம் டாக்டருங்க, வெட்னரி டாக்டருங்க பண்றதாச்சே!) பண்ணனும். குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்துலயாவது வேலைக்கு போயிடனும்.

இன்னும் கொஞ்சம் நாள் எடுத்து யோசிப்போமேன்னு பி.எச்.டி சேரனும். அப்படியே அந்த NET எழுதி சர்டிபிகேட் வாங்கிடனும் (பத்து வருசமா ஒரே மேட்டர படிச்சு நெட்-கூட வாங்கலன்னா எப்படி?!). அங்கேயே காதலன்/காதலியை ரெடிபண்ணி முடிஞ்சவரைக்கும் சொந்த சாதிலயே பாத்து கல்யாணமும் பண்ணிக்கனும். அங்கேயே ஏதாச்சும் தற்காலிக ஆராய்ச்சி வேலைல சேர்ந்து அடுத்த உதவிப்பேராசிரியர் வேலைக்கு எப்ப எடுப்பாங்கன்னு வருசக்கணக்குல நாள் எண்ணிட்டு இருக்கனும்.

ரொம்ப வருசம் ஆகும்னு தெரிஞ்சா அப்டியே ஒரு போஸ்ட்-டாக் பண்ண எதோ ஒரு நாட்டுக்கு போகனும். சரி, அவ்ளோதூரம் போயிட்டோமே அங்கேயே இருந்து கொஞ்சம் முன்னுக்கு வருவோமேன்னு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. எப்படா AP கால்ஃபெர் வரும்னு பாத்துட்டே இருந்து ஓடியாந்தரனும்.

இங்கவந்து சேரை தேச்சுகிட்டு யுனிவர்சிட்டிக்குள்ளயே ஓட்டனும். வெளிய போனவனுங்க கொஞ்சம் உருப்பட்டுட்டதா தெரிஞ்சா ‘அவனெல்லாம் அந்த காலத்துல’ என்று பழம்பெருமை பேசனும். எதுக்கெடுத்தாலும் ‘நான் விஞ்ஞானி, சைன்டிஸ்ட்டு’னு பேசிப்பேசி சைன்டிஸ்ட்டு ஆகாதவன்லாம் அக்யூஸ்ட்னு நெனச்சிட்டு சுத்தறதா நெனப்புல திரியணும்.

இவனுங்க இப்படியே ஆயுசுக்கும் யுனிவர்சிட்டிய விட்டே வெளிய போகாம விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவரேன்னு மிக்சர் தின்னுட்டே சுத்தறானுங்களேன்னு தற்காலிக ஆராய்ச்சி வேலையெல்லாம் மூணு வருசத்துக்குமேல செய்யக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு அப்பவாச்சும் வெளில போவானுங்களேன்னு பாத்தா ரூல்ஸ் போட்ட அதிகாரி என்ன சாதி, அடுத்தவாட்டி இந்தாளு திரும்பவும் பதவிக்கு வருவாரா, ஒருவேலை தனியார் கல்லூரிங்ககிட்ட காசு வாங்கிட்டு இங்க இருக்கறவனயெல்லாம் அங்கபோயி வேலை செய்யட்டும்னு துரத்தி விடறாரான்னு யோசிச்சிட்டு இருக்கானுங்க.

நான் பி.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும்போது தமிழில் மேடையில் சிறப்பாக பேசக்கூடிய ஆராய்ச்சிமாணவர் ஒருவர் பல்கலைக்கழக விழா ஒன்றில் ஆங்கிலத்தில் சொன்னது:

Those who exit the university after BSc are the Real Products,

Those who exit the university after MSc are the Byproducts,

Those who complete PhD and seek employment in the same university the Waste products.

அவர் இப்போது பல்கலைகழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பத்து வருடங்கள் அங்கேயே படிச்சிட்டு, அங்கேயே வேலையும் வாங்கிட்டு மாசத்துக்கு ஒருவாட்டி ஏதாச்சும் ஒரு விவசாயி தோட்டத்துலபோயி இளநீர் குடித்துவிட்டு நான் சைன்டிஸ்ட்டு, விவசாயிகளைப்பத்தி, விவசாயத்தைப்பத்தி எனக்கு தெரியாததே இல்லன்னு சொன்னா அங்க ஸடூடன்டா இருக்கறவன் வேணும்னா கேட்டுக்கிட்டு ‘ஆமா சார், நீங்க பெரிய ஆளு’ என்று சொல்லலாம். தினமும் இருநூறு, முன்னூறு கிலோமீட்டர் போயி விவசாயிகள், விற்பனையாளர்கள், புரோக்கர்கள், கொள்முதல் ஆலை அதிபர்கள்னு பலதரப்பட்ட ஆட்களையும் சந்திச்சு win-win டீலிங் பண்றவன்கிட்டலாம் ‘நான் சைன்டிஸ்ட்டு’னு சொன்னா ‘போ தம்பி, போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு’னு சொல்லாம வேற என்ன சொல்லுவான்?

சுமார் 20 சதவீத ஆட்கள்தான் உண்மையான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி என்று கொண்டாட தகுதியானவர்கள். இன்றும் அதுபோன்ற பேராசிரியர்களிடமிருந்து ஒரு போன் வந்தால்கூட எழுந்து நின்று பேசக்கூடிய அளவில் உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களால்தான் ஏதோ கொஞ்சம் இருக்கிறது.

பேஸ்புக்ல தான் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னா பதில் சொல்றதுக்குப்பதிலா டெலீட் பண்ணி, பிளாக் பண்ணிட்டு சொம்படிக்கிற கூட்டத்தை மட்டும் வெச்சுகிட்டா ஒரு பத்து வருசத்துல நாமளும் பெரிய சொம்பாத்தான் இருப்போம்.

இதையெல்லாம் படிச்சிட்டு ஒரு கணிசமான எண்ணிக்கைல பல்கலைக்கழக மக்கள் என்னை unfriend செய்யக்கூடும். போனா போகட்டும். சொம்புமேல கோபப்பட்டு குண்டி கழுவாம போன கதைதான்! (நண்பர் ஒருவர் அண்மையில் அறிமுகப்படுத்திய பழமொழி!).

முற்றும்.

விவசாய இடுபொருள் விற்பனை சங்கங்கள் – Modus operandi

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூன்று பேர் நம்மை தேடிவந்து தூரத்து சொந்தம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தனர்.

“தம்பி, எதோ பெரிய மருந்து கம்பெனி, ஆங் அதான் மான்ஜாண்ட. அதுல வேல செய்றதா சொன்னாங்க”

“அது மான்ஜாண்ட இல்லீங்ணா, மான்சாண்டோ”

“ஆங், அதான் கழுத, அந்த பேரு கெரகம் வாய்ல வந்து தொலைய மாட்டேங்குது” என்று ஆரம்பித்து விசயத்துக்கு வந்தார்கள்.

“தம்பி, நம்மூர்ல ஒரு சங்கம் ஆரம்பிச்சு அதுல ஒரக்கடை, பூச்சிமருந்துக்கடை போட்ரலாம்னு இருக்கோம். தம்பி, நெறயா வெளியூர்லாம் போரீங்கலாம், நாலு கம்பெனிக்காரங்கலோட பழக்கம் இருக்கும். நீங்க நம்ம சங்கத்துக்கு ஒரு கன்ஜல்டன்ட்டா (consultant!) இருந்து எந்த பொருள் வெல ஏறுது, எரங்குதுன்னு கொஞ்சம் முன்னாடியே தகவல் குடுத்துட்டீங்கன்னா நாமளும் அத நெறையா எறக்கிவச்சு நாலு காசு பாக்கலாம். என்னடா அண்ணன் இப்படி உள்ளடி வேல செய்யச்சொல்லி கேக்கறேனேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம். தம்பிக்கு பீஸ் (fees!) தனியா பண்ணிக்குடுத்தர்றோம். என்ன நாஞ்சொல்றது?” என்று தன் அடிபொடிகளை பார்த்தார்.

அவர்களும் “கரெட்டுங் மாமா” என்று கோரஸ் சொன்னார்கள்.

ஒருவழியாக அவர்களுக்கு conflict of interest, code of conduct, ethics, integrity பற்றியெல்லாம் வகுப்பெடுத்துவிட்டு, விட்டால்போதும் என்று ஓட்டம் பிடித்தேன். நான் நினைத்தாலும் அவ்வாறு செய்யமுடியாது என்பதையோ, நேரடியாக விற்பனைத்துறையில் இல்லை என்று சொன்னாலோ அடுத்தமுறை நம்மை எங்காவது பார்த்தால் எப்படியெல்லாம் உதாசீனப்படுத்துவார்கள் என்ற பயமும் ஒரு காரணம்

இப்போது அவர் ஒரு விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கத்தின் தலைவர். அண்ணன் Scorpio வாங்கிவிட்டார். நான் பேஸ்புக்கில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்!

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ‘விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கம்’ என்ற பெயரில் தொழில் செய்வதுதான் லேட்டஸ்ட் ட்ரென்ட். அதாவது, நூறு இருநூறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆளுக்கு இருபதாயிரமோ, முப்பதாயிரமோ சந்தா கட்டச்செய்து உறுப்பினராக்கி, சங்கத்தின்மூலம் அனைத்து விவசாய இடுபொருள்களையும் சந்தை விலையில் அங்கேயே வாங்கச்செய்ய வேண்டும். வரும் லாபத்தில் dividend கொடுத்துவிடுவதுதான் இந்த மாடல் (கணக்கு பார்த்தால் ஒன்னு வட்டிக்குக்கூட டிவிடெண்ட் வராது!).

இங்குள்ள தொழில் முனைவோர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்லாது கொஞ்சம் புத்திசாலித்தனமாக தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது, மற்றவர்களுக்கு தொழிலாகவே தெரியாத ஒன்றை எடுத்து லாபமீட்டும் தொழிலாக்கி கூட்டத்தை ஈர்ப்பார்கள். நிறையபேர் வந்து ஆரம்பிக்கும்போது அதில் ulta intensive business model உண்டாக்கி கடைசியாக வந்தவர்களுக்கு நட்டம் வரச்செய்து, தொடர்ந்து லாபகரமான crowd attracting தொழிலாக நடத்திக்கொண்டிருப்பார்கள். ஜவுளி, லாரி, போர்வெல், கோழிப்பண்ணை, அறுவடை இயந்திரங்கள் என்று ஆரம்பித்து கல்வியை மிகவும் இலாபகரமான தொழிலாக மாற்றியதும் இந்த பகுதியினரே.

கூட்டுறவே நாட்டுயர்வு. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. இந்த கார்ப்பரேட் அடிமைகள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இதுகுறித்த தரவுகளை ஆராய்ந்ததுண்டா என்றெல்லாம் நீங்கள் என்மீது பாய்ந்தீர்களேயனால் ‘நீங்க இன்னும் வளரனுந்தம்பி’ என்று மட்டுமே இப்போதைக்கு நம்மால் சொல்ல இயலும்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மிகக்குறைந்த சந்தா தொகையை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் விளைபொருளை நல்ல விலையில் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு கடன் மற்றும் பிற advisory உதவிகளை செய்கின்றன. ஆனால் நாம் இங்கே பார்ப்பது விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சந்தை விலையில் இடுபொருளை சந்தா வாங்கிக்கொண்டு விற்கும் மாடல்.

தனியார் கடைகள் பெரும்பாலும் நிறுவனங்களின் நேரடி விற்பனை மையமாக அதாவது Preferred Dealer (PD) ஆக செயல்படுகிறார்கள். தங்களின் விற்பனையை அதிகரிக்க, சந்தையில் நிலைத்து நிற்க சரியான, தரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிடில் விவசாயிகள் மத்தியில் உள்ள பாக்கித்தொகை வந்து சேராது. அவர்களைப் பொறுத்தவரை perform or perish நிலைமைதான்.

சங்கங்கள் அப்படியில்லை. பெரும்பாலான பெரிய விவசாயிகளை உறுப்பினராக்கி விடுவதால் peer pressure காரணமாக அவர்கள் அங்கு வாங்கியே ஆக வேண்டிய நிலைமை. அவர்களை மறைமுகமாக சார்ந்திருக்கும் சிறு விவசாயிகள் யாரோ சிலரை வசிகரிக்கவேண்டி (to please) அங்கு போயாக வேண்டும். இந்த சங்கங்கள் எப்போதுமே மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குவார்கள். Preferred Dealer or Direct Dealer என்ற சிஸ்டம் இருக்கவே இருக்காது. சங்கத்தின் முன்னோடி ஆட்கள் தங்களுக்கு சேர வேண்டிய கமிசன் தொகையை மொத்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். பாங்காக் trip-ம் இதில் அடக்கம்! டிவிடெண்ட் என்பதெல்லாம் சங்கத்தில் வரவுசெலவு கணக்குப்பார்த்து எட்டணா வட்டிக்கு கொடுக்கப்படும்.

அப்படியெல்லாம் கிடையாது. நிரூபிக்க ஆதாரம் இருக்கிறதா, தேவையில்லாமல் பொத்தாம்பொதுவாக சேற்றை வாரி இறைக்காதீர்கள் என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் நம்பிக்கை உங்களுக்கானது. ஊர் உலகத்தில் இந்த modus operandi மூலம் நடப்பது என்னவென்று நன்றாக நமக்கு தெரியும். அதை சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆகவே மக்களே, இது ஓர் அறிய வாய்ப்பு. சரியான தருணமும்கூட. உங்கள் ஊர்ப்பக்கம் ஏதேனும் விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கங்கள் உண்டாகும் நிலைமை தெரிந்தால், நீங்கள் அங்குள்ள பெருவாரியான ஜாதியை சேர்ந்தவராக இருந்தால், யோசிக்கவே வேண்டாம். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், இயக்குனர், கணக்காளர் போன்ற பதவிகளில் ஒன்றை அடித்துபிடித்து வாங்கிவிடுங்கள். உறவுக்கார பையன்கள் யாரேனும் சும்மா இருந்தால் ஸ்டோர் கீப்பராகவாவது சேர்த்துவிட்டுவிடுங்கள்.

அவ்வளவுதான்! கமிசன் கொட்டும். நீங்கள்பாட்டுக்கு பேஸ்புக்கில் கவிதை, இலக்கியச்சண்டை போட்டுக்கொண்டிருக்கலாம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை 😉 banging in Bangkok -in Bangkok என்று ஸ்டேட்டஸ் போடுவதும் உறுதி.

ஒரு பாட்டுல முன்னேற All the best மக்களே!

“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்”

“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்” என்று அடிக்கடி உங்களுக்கு தோன்றுகிறதா? அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த அப்டேட்.

காடை, கவுதாரி, கோழி, ஈமு கோழி, ஆடு என இறைச்சிக்காக வளர்க்கபடுபவைகளில் வெண்பன்றி வளர்ப்பு மிக லாபகரமானது. 150 – 200 பன்றிகளையுடைய பண்ணையை வைத்திருந்தால் நிகர லாபமாக தினசரி 5000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கறி பண்ணைவிலை ரூ 220. ஒரு பன்றியின் சராசரி எடை 400 கிலோ. இதில் தினசரி ஏற்ற இறக்கங்கள் கிடையாது. எல்லாமே ஸ்ரீ குமரன் தங்க மாளிகைபோல Fixed Rate. கடந்த ஐந்து ஆண்டுகளாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

வெண்பன்றியில் ‘சௌபாக்கியவதி’ (Yorkshire) என்று ஒரு ரகம் உண்டு, அது ஒருமுறை 8 – 12 குட்டிகள் ஈனும். உங்களிடம் 10 சௌபாக்கியவதிகள் இருந்தால் ஒரே ஆண்டில் பண்ணையின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதற்கான கொட்டகை, தண்ணீர் வசதி, 2 ஆட்கள் மற்றும் இதர இத்யாதிகள் இருந்தால் போதும். காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பும், அங்கிருந்து வந்தபின் தினமும் ஒரு மணிநேரம் செலவிட்டால்கூட போதுமானது (இடைப்பட்ட நேரங்களில் நீங்கள் உங்களை பெரிய அதிகாரிபோல் உணருகிறீர்களா இல்லையா என்பது உங்கள் பணிச்சூழலை பொருத்தது!).

‘நா யாரு, என்னோட பேக்ரவுண்ட், கவுரவம் என்ன, நான் போய் பன்னி வளத்தறதா’ என்று நீங்கள் எண்ணினால் கொஞ்சம் கஷ்டம். “இப்பமட்டும் என்ன வாழுதாக்கும், அதுக்கு அந்த பன்னிகளோடையே நாள்முழுக்க இருந்தர்லாம்” என்று உங்களுக்கு தோன்றினால் டபுள் அட்வான்டேஜ்!!

பண்ணை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள் என்பது உறுதி. ‘தம்பி பன்னிதான மேய்க்குது’ என்று சொன்னவர்களெல்லாம் ‘எனக்கு அப்பவே தெரியும், தம்பி பெரிய ஆளா வருவாப்லனு’ என்று உங்கள் பின்னால் வருவார்கள். நீங்களும் ஒருசில ஜென் கதைகளை சுட்டு, மசாலா போட்டு ‘ஒரு முனிவரும் அவரது சீடர்களும் ஆற்றை கடக்க முயன்றபோது ஓர் அழகான இளம்பெண் lift கேட்டாள். குரு அவளை தூக்க மறுத்தபோது ஒரு சீடன் அவளை தூக்கி, ஆற்றை கடந்து இறக்கிவிட்டான். etc., etc., பின்னர் அவன் குருவிடம் சொன்னான் ‘குருவே நீங்கள்தான் அவளை இன்னும் மனதில் வைத்திருக்கிறீர்கள், நான் எப்போதே அவளை நம் ஆசிரமத்தில் விட்டுவிட்டேன்’ என்று சொல்லி பெரிய ஞானியாக காட்டிக்கொள்ளலாம். தம்பிக்கு எலக்கிய அறிவும், ஒலக அனுபவமும் ஜாஸ்தி என்று அதற்கும் நாலுபேர் ஜால்ரா போடுவார்கள்.

ஒக்காந்து சீட்டை தேச்சிட்டு இருக்காம, ஒரே பாட்டுல பெரிய்ய ஆளா வரணும்னு நெனச்சிட்டே மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா? எப்படி ஆரம்பிக்கரதுன்னே தெரியலையா? சாரி ஜென்டில்மேன், வேறு குறுக்குவழி எதுவும் கிடையாது. நீங்கதான் இறங்கி செய்யணும். ஆல் தி பெஸ்ட்