ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்குத் தடை என்பது எல்லோருக்குமான மதிப்பீடா?

கேள்வி:
ஐரோப்பிய யூனியனில் உள்ள 19 நாடுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை விளைவிக்க தடை செய்திருப்பதை அடிக்கடி ஆர்வலர்கள் மேற்கோள் காட்டி இந்தியாவிலும் தடை வேண்டும் என்கின்றனரே. அறிவியல்பூர்வமாக கூகிளில் தேடிக்கொள்ளலாம் என்பதால் அதன் அரசியல் பின்னணியில் கொஞ்சம் விளக்கமுடியுமா?

பதில்:
முதலில் அவை எந்தெந்த நாடுகள் என்று தெரிந்துகொள்ளுங்கள். Austria, Belgium, Britain, Bulgaria, Croatia, Cyprus, Denmark, France, Germany, Greece, Hungary, Italy, Latvia, Lithuania, Luxembourg, Malta, the Netherlands, Poland and Slovenia. இதில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் Tax Heaven என்று அழைக்கப்படும் வரியில்லா சொர்க்கங்கள். ஜேம்ஸ் பாண்டு தன்னுடைய high-profile எதிரிகளின் பணபரிவர்த்தனையை அறிய மேற்கண்ட நாடுகளுக்கு அடிக்கடி பயணிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த நாடுகள் ஒவ்வொன்றின் பரப்பளவு சராசரியாக தமிழகத்தின் பாதிதான், மக்கள்தொகையும் மீறிப்போனால் சில கோடிகள். மீதமுள்ளவை உலகப்போர் காலத்திலிருந்தே வலுவான பொருளாதார கட்டமைப்பைக் கொண்டவை.

அந்த நாடுகளின் தேவைகள், மக்கள்தொகை, எதிர்காலம் குறித்த திட்டங்கள் அடிப்படையில் எடுக்கப்பாட்டிருக்கும் முடிவை இங்கே செயபடுத்த நினைப்பது முட்டாள்தனம். நமக்கெல்லாம் அடிப்படை வசதியான கக்கூஸ்கூட கிடையாது. மரத்தடியில் நின்றுதான் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம். அந்த நாடுகளில் ஒரு சராசரி குடிமகனின் கேரேஜ் என்பது நம் ஊரில் நடுத்தர மக்களின் அபார்ட்மெண்ட்/வீட்டு அளவான 800 சதுர அடியைக் கொண்டது என்கிறார்கள். தொட்டதுக்கெல்லாம் மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுவது ஒருவித மனநோய்.

இங்கே பசியில் மக்கள் சாகும்போது அவர்களுக்கு உணவு கிடைத்தால் போதும் என்பதே நமது நோக்கமாக இருக்கும்போது, மரபணு மாற்றப்பட்ட உணவாக இருந்தால்தான் என்ன? பட்டினியால் சாவதைவிட பிழைத்திருப்பதே வரலாறில் சாட்சியாக நிற்கும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நடக்கும் செயல்பாடுகள் ஒருபுறம் நடக்கட்டும். இதன் பின்னணியில் நடப்பது என்னவென்று இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் ஆங்காங்கே தனி நாடு கோஷங்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் அதுபோன்ற தனி நாடு கோஷம் வலுத்து உணவுக்கு, நீருக்கு பஞ்சம் ஏற்ப்பட்டு, நம் இளைஞர்களிடம் ஆயுதங்கள் வழங்கப்படும்போது தமிழ்நாடும் – ஏன் இந்தியாவும் – சோமாலியா போன்ற உள்நாட்டு கலவரங்களை சந்திக்க நேரிடும். உண்மையில் நம் கண்முன்னே நடக்கும் சுரண்டல்களை மறைக்கவே மரபணு பயிர்களுக்கு தடை, தடுப்பூசிகள் கூடாது போன்ற கருத்தாக்கங்கள் விதைக்கப்படுகிறது. உதாரணமாக 2008-இல் இந்தியாவின் பஹாமாஸ் தீவுக்கான ஏற்றுமதி 22 லட்சம் டாலர். 2010-இல் 280 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. பின்னணியில் ரிலையன்ஸ், எஸ்ஸார் நிறுவனங்கள் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்ததாக கணக்கு காட்டியிருந்தன. வெறும் 3.5 லட்சம் மக்கள்தொகை கொண்ட தீவில் அனைவரும் பெட்ரோலில் குளித்து, அதையே குடித்திருந்தாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு பெட்ரோல் வாங்கியிருக்க வேண்டியதில்லை (நன்றி: கருப்புப்பணம் நூல், ஆசிரியர் ரமணன், கிழக்கு பதிப்பகம் வெளியீடு).

தமிழக இளைஞர்களை திசைதிருப்பும் பொருட்டு பரப்பப்படும் மரபணு மாற்ற/இயற்கை விவசாய சித்தாந்தங்கள், தனி நாடு, ஆண்ட பரம்பரை பரப்புரைகளில் இருந்து விலகி அம்பானி, அடானி, டாடா, கோயங்கா போன்ற அசைக்கமுடியாத தொழில் சாம்ராஜ்யங்களை நிறுவி தமிழகத்தை வரியில்லா சொர்க்கமாக மாற்றிவிட்டு பின்னர் பொழுதுபோகட்டுமே என்று சித்தாந்தங்களை பரிசோதித்துப்பார்ப்பது அறிவான செயலாகும். தனிநாடு இல்லாமல் இந்திய யூனியனில் இருந்துகொண்டு Tax Heaven உண்டாக்க முடியாது என்பவர்கள் அமெரிக்காவின் Delaware மாகாணத்தில் இருக்கும் வடக்கு ஆரஞ்ச் தெருவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், கொக்க கோலா, போர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், கே.எப்.சி., கூகுள், உள்ளிட்ட 21700 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நினைவில் கொள்க.

அமாவாசை சூத்திரமும்*, ஆல்-இன்-ஆல் அழகுராஜா உரக்கடைகளும்

இன்று பெரும்பாலான பூச்சிமருந்து, உரக்கடைகள் மற்றும் ஹார்ட்வேர், சிமெண்ட் கடைகள் தனியாக தொழில்முறையில் நடத்தப்படுகின்றன என்றாலும் ஒன்றிரண்டு பழைய கடைகள் அப்படியேதான் இருக்கின்றன. அங்கே விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, மாட்டுத்தீவனம், புண்ணாக்கு, சிமெண்ட், எலெக்ட்ரிகல், ஹார்ட்வேர் சாமான்கள், ஆஸ்பெஸ்டாஸ் அட்டை முதல் மூக்கணாங்கயிறு வரை சகலமும் கிடைக்கும். அவர்களின் ஸ்டைல்-தான் உண்மையான Brick & Mortar format. தேவையான சரக்குகளை பணம்செலுத்தி எடுத்துக்கொள்வார்கள். எவ்வளவு விற்கமுடியுமோ அவ்வளவு மட்டுமே ஆர்டர் கொடுப்பார்கள், கம்பெனி விற்பனை பிரதிநிதிகள் மாத இறுதி டார்கெட்டை நிறைவுசெய்ய டம்பிங் செய்தால் தைரியமாக NO சொல்லுவார்கள். விவசாய இடுபொருட்கள், ஹார்ட்வேர் சாமான்கள், எலெக்ரிகல் சாமான்கள் என அனைத்திலும் 10-15% லாபத்துடன் அந்த சுற்றுவட்டாரத்திலேயே குறைவான விலையில் தருவார்கள். தமிழ் தேதி, மாதம், அஷ்டமி, நவமி, அமாவசை, பவுர்ணமி என கலந்துகட்டி அடிப்பார்கள். அதில் பூச்சிமருந்துகளை எப்படி பேலன்ஸ் செய்கிறார்கள் என்று பார்த்தோமானால் முப்பது வருடங்களுக்கு முன்னரே சந்தையில் வந்த மருந்துகளை விற்பதோடு, புதிய தலைமுறை மருந்துகளையும் கணிசமான அளவுக்கு விற்பார்கள். அது எப்படி?

பயிர்களைத் தாக்கும் முக்கியமான நாசகார பூச்சிகள் எல்லாம் Lepidoptera என்ற ஆர்டருக்குக்கீழே Noctuidae என்ற குடும்பத்தில்தான் இருக்கின்றன. இதன் வாழ்க்கைச்சரிதம் 30 நாட்கள்தான் (முட்டை->லார்வா(புழுப்பருவம்)->ப்யூப்பா(கூட்டுப்புழு)->அடல்ட்(பட்டாம்பூச்சி). இந்த பட்டாம்பூச்சிகள் நல்ல காரிருள் சமயத்தில்தான் mating-இல் ஈடுபடும், அதாவது அமாவாசை சமயத்தில். அடுத்த அமாவாசைக்குள் ஒரு life cycle முடிந்துவிடும். ஆய்வகத்தில் வளர்க்கும்போதுகூட rearing chamber-ஐ கறுப்புத்துணியால் மூடி வைக்காவிட்டால் sterile முட்டைகள் மட்டுமே கிடைக்கும். அதன் புழுக்களின் வளர்ச்சி மொத்தம் ஆறு instar-கள். முதல் இரண்டு இன்ஸ்டார்களின்போது எதையாவது பக்கத்தில் காட்டினாலே செத்துவிடும். கோக், பெப்சி, பிராந்தி அடித்து கன்ட்ரோல் செய்வது, வேப்பிலை, நொச்சி இலைச்சாறு அடிப்பது குறித்து “இயற்கை விஞ்ஞானிகள்” சொல்வது எல்லாமே இந்த டைமிங் சென்ஸ்-தான். மூன்றாவது இன்ஸ்டாருக்கு மேல் இந்த சித்துவேலையெல்லாம் காட்டினால் ‘மூடிட்டு போடா’ என்று சொல்லாதகுறையாக மொத்த காட்டையும் இரண்டு நாளில் தின்று தீர்த்துவிடும். வேறுசில பூஞ்சான, வைரஸ் காரணிகள் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் என்றாலும் அது இந்த இடத்தில் தேவையில்லாதது.

இங்கேதான் நமது ஆல்-இன்-ஆல் அழகுராஜா பிசினெஸ் மாடல் வருகிறது. அமாவாசைக்கு முதல் இரண்டு நாட்களிலிருந்து ஏழெட்டு நாட்களுக்கு விலை குறைந்த generic மருந்துகளை விற்பார்கள். அதனுடன் ஏதாவது 100% லாபமுடைய பயிர் வளர்ச்சி டானிக்குகளை அள்ளிபோட்டு கொடுத்துவிடுவார்கள். பவுர்ணமிக்கு ஒருவாரம் இருக்கவே புதிய தலைமுறை மருந்துகளுக்கு மாறிவிடுவார்கள். அப்போது டானிக்குகளின் அளவை குறைத்தோ அல்லது விற்காமலோ விட்டுவிடுவார்கள். மொத்தத்தில் எல்லாநாளும் ‘எல்லா பூச்சிமருந்துகளும் நியாயமான விலையில் கிடைக்கும்’ என்று ரொக்க பில்லில் எழுதியிருப்பதுபடியே நடந்துகொள்வார்கள். அந்த 10-15% இலாபம் அவர்களுக்கு நிறைவானதாக இருக்கும். மக்களும் அதற்கு இராசியான கடை என்று நற்பெயர் வைத்திருப்பார்கள். அந்த விற்பனைக்கேற்ப வரும் தங்கக்காசுகள், பரிசுப்பொருட்களை பெற்றுக்கொள்வார்களேதவிர இந்த ஆண்டு இந்தனை கிராம் காயின் வாங்க வேண்டும், பாங்காக் டூர் போகவேண்டும் என்று டார்கெட் வைத்து எதையும் விற்கமாட்டார்கள். Peach of mind – Guaranteed!

ஒரு குரூப் இருக்கிறது. இந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாம் எதற்குமே உருப்படாதவை, எல்லாமே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டர்கள், உறுப்புமாற்று அறுவைசிகிச்சைகூட விநாயகருக்கு தலை மாற்றியபோதே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது, புஷ்பக விமானத்திலிருந்தான் இன்றைய விமானம் கண்டுபிடித்தார்கள் நீங்கள் எதுவுமே புதிதாக செய்யவில்லை என்று எதற்கெடுத்தாலும் நொட்டம் சொல்லிக்கொண்டே இருப்பது. அவர்களை திருப்திபடுத்தவே முடியாது. ஆராய்ச்சிகளின்மீது, ஆராய்ச்சியாளர்களின்மீது விமர்சனங்கள் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக simply waste என்று ஒதுக்கிவிட முடியாது என்ற குறைந்தபட்ச அறிவுகூட இருக்காது. அவர்களுக்காக எப்படியெல்லாம் கிளாஸ் எடுக்க வேண்டியிருக்கிறது!

* – இந்த darkness related to the reproduction of Noctuidae insects குறித்து இரண்டு தரப்புகள் இருக்கிறது. ஒரு தரப்பு அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம், எனவே இது வெறும் hypothesis என்று சொல்லி ஆய்வு முடிவுகளைக் காட்டுகிறது. மற்றொரு தரப்பு நிரூபித்து காட்டுகிறது. பூச்சிகளைக் கொல்வது மட்டும்தான் நானறிந்த கலை, எனவே உங்களுக்கு தெரிந்த ஒரு பூச்சியியல் நிபுணரிடம் கேட்டுப்பாருங்கள். அப்போது நான்கு வகையான நிகழ்தகவுகள் வரலாம். ஒன்று, அதை சரியென சொல்லலாம். இரண்டு, அதை தவறென சொல்லலாம், மூன்று, தெரியாது என சொல்லலாம். நான்கு, ஒருவேளை அவருக்கு தெரியாது என்றாலும் அவரது நிபுணத்துவத்தை விட்டுக்கொடுக்காமல் எனக்கு எல்லாம் தெரியும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எனவும் சொல்லலாம்.

சரி, இதைவைத்து நீங்கள் என்ன செய்யலாம். அலுவலகத்தில் நேரம் போகவில்லையெனில் அந்த முடிவுகளை Poisson distribution – இல் உள்ளே நுழைக்கமுடியுமா என்று கோடு போட்டு பார்க்கலாம். அதற்கு வாய்ப்பே இல்லையெனில் மறந்துவிட்டு வேலையை பார்க்கலாம்!!

தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

கேள்வி: தனியார் வேளாண்மைக் கல்லூரிகள் தமிழகத்தில் பரவலாக தொடங்கப்படுவதுகுறித்து ஒரு பிரிவினர் அதிருப்தி தெரிவிப்பதேன்? அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக சொல்ல இயலுமா?

பதில்:
Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

தனியார்மய எதிர்ப்பு அல்லது ஆதரவு என்பது சிக்கலான ஒன்று என்றாலும் பெரும்பாலானவை ஒட்டுமொத்த தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, சந்தர்ப்பவாத எதிர்ப்பு, கண்மூடித்தனமான ஆதரிப்பு மற்றும் நட்டநடு சென்டர் நடுநிலைமை என நான்குவகையே.

தனியார்மய அதிருப்தியாளர்கள் சொல்லும் முக்கியமான காரணம் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்பதாகும். இங்குதான் பூனைக்குட்டி வெளியே வருகிறது. இன்றுவரை வேளாண்துறையில் முனைவர்களை, ஆராய்ச்சியாளர்களை, வல்லுனர்களை உருவாக்குவதாகச் சொல்லும் த.நா.வே. பல்கலையில் பட்டம் பெற்றவர்களே உதவிப்பேராசிரியர்களாக தனியார் கல்லூரிகளில் பணியாற்றச்செல்கின்றனர். தனியார் கல்லூரி முதல்வர்களும் நேரடியாக த.நா.வேளாண் பல்கலைக்கழகத்தால் நிரப்பப்பட்டு கல்வி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளின் தரம் கண்காணிக்கப்படுகிறது. கல்வி பயில வெறும் கட்டிடங்கள், ஆய்வகங்களைத் தாண்டி தகுதியான ஆசிரியர்களும், முதல்வரும் அறிவுஜீவிகள், மெத்தப்படித்த, நாலும் தெரிந்த நல்லவர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் வேளாண் பல்கலையிலிருந்தே சென்றிருக்கும்போது கல்வியின் தரம் நீரத்துப்போகுமென்பது நகைமுரண். தேர்வுக்கு வினாத்தாள்களை வடிவமைப்பது, விடைத்தாள்களை மதிப்பிடுவது என ஒட்டுமொத்த குடுமியையும் அரசு வைத்திருக்கிறது. BSc agri மாணாக்கர்களுக்கு வகுப்பெடுக்க MSc agri பட்டத்துடன் NET தகுதி போதுமானது என்பது நடைமுறை. ஆனால் இன்றைய தேதியில் PhD பட்டமுடைய முனைவர்களே வகுப்பெடுக்கச் செல்கின்றனர்.
இப்படியிருக்கையில் கல்வியின் தரம் குறைகிறது என்றால் வகுப்பெடுக்கச்செல்பவர்களின் தராதரம் என்னவென்பது தீவிரமாக கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

தனியார்மயத்தால் பாலாறும் தேனாறும் ஒடுமா என்றால் நிச்சயமாக ஓடாது. ஆனால் ஒருவருக்குக் கிடைக்கும் வாய்ப்பை தடுப்பது என்பதே வன்முறை. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெளிவரும் மருத்துவர்களைக் காட்டிலும் குறைவாகவே வேளாண் பட்டதாரிகள் வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. எண்ணிக்கை அதிகமாக இல்லாத இன்றைய சூழலில் விவசாயிகளிடம் தொழில்நுட்பங்களை கொண்டுசேர்க்க மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. நூறுபேர் வெளியில் வந்தால் பத்துப்பேராவது அதே துறையில் இருப்பார்கள், அதில் ஐந்து பேர் விற்பன்னர்களாக விரிவடைவார்கள் என்பது இயல்பு. அதற்கான வாய்ப்பையே உண்டாக்கவிடாமல் செய்வது முறையற்ற செயலாகும்.

கணிசமான எண்ணிக்கையிலான ஆட்கள் இருக்கும்போதுதான் தரமான ஒன்றை/ஒரு ஆலோசகரை நாடுவதற்கு விவசாயிகளுக்கு options இருக்கும். தமிழகத்தில் தினசரி மருத்துவ உதவிகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஏதோவொரு காரணத்துக்காக வேளாண் நிபுணர்களின் ஆலோசனையை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம். அப்படியிருக்கையில் ஆட்களை இல்லாத ஒரு செயற்கையான பற்றாக்குறையை வைத்திருக்கவேண்டிய அவசியம் என்ன?

தற்சமயம் நிபுணத்துவம் என்பது மாட்டுச்சாணியின்மூலம் மட்டுமே மாற்றம் வரும் என்று நம்பும் இயற்கை விவசாய ஆரவலர்களிடமும், இரசாயனங்கள் மட்டுமே ஏற்றம் தரும் என்று மூளைச்சலவை செய்யப்பட்ட நிபுணர்களிடமும், உயிரியல் முறையில் பயிர்மேளாண்மை சிறப்பாக செய்யலாம் என்றாலும் பணபலத்தால், ஆள் அம்புகளால் பயோ புராடக்ட்கள் என்ற பெயரில் போலிகளை விற்கும் ஆசாமிகளிடமும் சுருங்கி சின்னாபின்னமாகி நிற்கிறது. இந்த மூன்றையும் பேலன்ஸ் செய்து பயனாளிகளுக்குக் கொண்டுசேர்க்க வேண்டிய வேளாண்துறையும் தேங்கிக்கிடக்கும் கோப்புகளிலில் ஆட்கள் பற்றாக்குறையால் முடங்கியிருக்கிறது.

ஆக, Type One Error occurs when a correct hypothesis is rejected. Type Two Error occurs when a wrong hypothesis is NOT rejected.

விவசாயப் பல்கலைக்கழகம் உண்டாக்கும் Inbreeding Depression

எப்படியாச்சும் பி.எஸ்.சி அக்ரி முடிச்சிடனும். ஒரு டிபார்ட்மெண்ட்ல ஸ்பெசிலைஸ் பண்ணுவோமேன்னு எம்.எஸ்.சி சேரனும். அந்த ரெண்டு வருசத்துலயாவது எதாச்சும் படிச்சு பரீட்சை எழுதி பல்கலைகழத்தவிட்டு இடத்தை காலி பண்ணனும். இல்லன்னா சொந்தமா பிராக்டீஸ் (இதெல்லாம் டாக்டருங்க, வெட்னரி டாக்டருங்க பண்றதாச்சே!) பண்ணனும். குறைந்தபட்சம் ஒரு தனியார் நிறுவனத்துலயாவது வேலைக்கு போயிடனும்.

இன்னும் கொஞ்சம் நாள் எடுத்து யோசிப்போமேன்னு பி.எச்.டி சேரனும். அப்படியே அந்த NET எழுதி சர்டிபிகேட் வாங்கிடனும் (பத்து வருசமா ஒரே மேட்டர படிச்சு நெட்-கூட வாங்கலன்னா எப்படி?!). அங்கேயே காதலன்/காதலியை ரெடிபண்ணி முடிஞ்சவரைக்கும் சொந்த சாதிலயே பாத்து கல்யாணமும் பண்ணிக்கனும். அங்கேயே ஏதாச்சும் தற்காலிக ஆராய்ச்சி வேலைல சேர்ந்து அடுத்த உதவிப்பேராசிரியர் வேலைக்கு எப்ப எடுப்பாங்கன்னு வருசக்கணக்குல நாள் எண்ணிட்டு இருக்கனும்.

ரொம்ப வருசம் ஆகும்னு தெரிஞ்சா அப்டியே ஒரு போஸ்ட்-டாக் பண்ண எதோ ஒரு நாட்டுக்கு போகனும். சரி, அவ்ளோதூரம் போயிட்டோமே அங்கேயே இருந்து கொஞ்சம் முன்னுக்கு வருவோமேன்னு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. எப்படா AP கால்ஃபெர் வரும்னு பாத்துட்டே இருந்து ஓடியாந்தரனும்.

இங்கவந்து சேரை தேச்சுகிட்டு யுனிவர்சிட்டிக்குள்ளயே ஓட்டனும். வெளிய போனவனுங்க கொஞ்சம் உருப்பட்டுட்டதா தெரிஞ்சா ‘அவனெல்லாம் அந்த காலத்துல’ என்று பழம்பெருமை பேசனும். எதுக்கெடுத்தாலும் ‘நான் விஞ்ஞானி, சைன்டிஸ்ட்டு’னு பேசிப்பேசி சைன்டிஸ்ட்டு ஆகாதவன்லாம் அக்யூஸ்ட்னு நெனச்சிட்டு சுத்தறதா நெனப்புல திரியணும்.

இவனுங்க இப்படியே ஆயுசுக்கும் யுனிவர்சிட்டிய விட்டே வெளிய போகாம விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவரேன்னு மிக்சர் தின்னுட்டே சுத்தறானுங்களேன்னு தற்காலிக ஆராய்ச்சி வேலையெல்லாம் மூணு வருசத்துக்குமேல செய்யக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு அப்பவாச்சும் வெளில போவானுங்களேன்னு பாத்தா ரூல்ஸ் போட்ட அதிகாரி என்ன சாதி, அடுத்தவாட்டி இந்தாளு திரும்பவும் பதவிக்கு வருவாரா, ஒருவேலை தனியார் கல்லூரிங்ககிட்ட காசு வாங்கிட்டு இங்க இருக்கறவனயெல்லாம் அங்கபோயி வேலை செய்யட்டும்னு துரத்தி விடறாரான்னு யோசிச்சிட்டு இருக்கானுங்க.

நான் பி.எஸ்.சி முதலாமாண்டு படிக்கும்போது தமிழில் மேடையில் சிறப்பாக பேசக்கூடிய ஆராய்ச்சிமாணவர் ஒருவர் பல்கலைக்கழக விழா ஒன்றில் ஆங்கிலத்தில் சொன்னது:

Those who exit the university after BSc are the Real Products,

Those who exit the university after MSc are the Byproducts,

Those who complete PhD and seek employment in the same university the Waste products.

அவர் இப்போது பல்கலைகழகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!

பத்து வருடங்கள் அங்கேயே படிச்சிட்டு, அங்கேயே வேலையும் வாங்கிட்டு மாசத்துக்கு ஒருவாட்டி ஏதாச்சும் ஒரு விவசாயி தோட்டத்துலபோயி இளநீர் குடித்துவிட்டு நான் சைன்டிஸ்ட்டு, விவசாயிகளைப்பத்தி, விவசாயத்தைப்பத்தி எனக்கு தெரியாததே இல்லன்னு சொன்னா அங்க ஸடூடன்டா இருக்கறவன் வேணும்னா கேட்டுக்கிட்டு ‘ஆமா சார், நீங்க பெரிய ஆளு’ என்று சொல்லலாம். தினமும் இருநூறு, முன்னூறு கிலோமீட்டர் போயி விவசாயிகள், விற்பனையாளர்கள், புரோக்கர்கள், கொள்முதல் ஆலை அதிபர்கள்னு பலதரப்பட்ட ஆட்களையும் சந்திச்சு win-win டீலிங் பண்றவன்கிட்டலாம் ‘நான் சைன்டிஸ்ட்டு’னு சொன்னா ‘போ தம்பி, போயி வீட்ல பெரியவங்க இருந்தா வரச்சொல்லு’னு சொல்லாம வேற என்ன சொல்லுவான்?

சுமார் 20 சதவீத ஆட்கள்தான் உண்மையான ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானி என்று கொண்டாட தகுதியானவர்கள். இன்றும் அதுபோன்ற பேராசிரியர்களிடமிருந்து ஒரு போன் வந்தால்கூட எழுந்து நின்று பேசக்கூடிய அளவில் உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவர்களை போன்றவர்களால்தான் ஏதோ கொஞ்சம் இருக்கிறது.

பேஸ்புக்ல தான் சொன்ன கருத்துக்கு மாற்றுக்கருத்து சொன்னா பதில் சொல்றதுக்குப்பதிலா டெலீட் பண்ணி, பிளாக் பண்ணிட்டு சொம்படிக்கிற கூட்டத்தை மட்டும் வெச்சுகிட்டா ஒரு பத்து வருசத்துல நாமளும் பெரிய சொம்பாத்தான் இருப்போம்.

இதையெல்லாம் படிச்சிட்டு ஒரு கணிசமான எண்ணிக்கைல பல்கலைக்கழக மக்கள் என்னை unfriend செய்யக்கூடும். போனா போகட்டும். சொம்புமேல கோபப்பட்டு குண்டி கழுவாம போன கதைதான்! (நண்பர் ஒருவர் அண்மையில் அறிமுகப்படுத்திய பழமொழி!).

முற்றும்.

விவசாய இடுபொருள் விற்பனை சங்கங்கள் – Modus operandi

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூன்று பேர் நம்மை தேடிவந்து தூரத்து சொந்தம் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு ஆரம்பித்தனர்.

“தம்பி, எதோ பெரிய மருந்து கம்பெனி, ஆங் அதான் மான்ஜாண்ட. அதுல வேல செய்றதா சொன்னாங்க”

“அது மான்ஜாண்ட இல்லீங்ணா, மான்சாண்டோ”

“ஆங், அதான் கழுத, அந்த பேரு கெரகம் வாய்ல வந்து தொலைய மாட்டேங்குது” என்று ஆரம்பித்து விசயத்துக்கு வந்தார்கள்.

“தம்பி, நம்மூர்ல ஒரு சங்கம் ஆரம்பிச்சு அதுல ஒரக்கடை, பூச்சிமருந்துக்கடை போட்ரலாம்னு இருக்கோம். தம்பி, நெறயா வெளியூர்லாம் போரீங்கலாம், நாலு கம்பெனிக்காரங்கலோட பழக்கம் இருக்கும். நீங்க நம்ம சங்கத்துக்கு ஒரு கன்ஜல்டன்ட்டா (consultant!) இருந்து எந்த பொருள் வெல ஏறுது, எரங்குதுன்னு கொஞ்சம் முன்னாடியே தகவல் குடுத்துட்டீங்கன்னா நாமளும் அத நெறையா எறக்கிவச்சு நாலு காசு பாக்கலாம். என்னடா அண்ணன் இப்படி உள்ளடி வேல செய்யச்சொல்லி கேக்கறேனேன்னு தப்பா எடுத்துக்க வேண்டாம். தம்பிக்கு பீஸ் (fees!) தனியா பண்ணிக்குடுத்தர்றோம். என்ன நாஞ்சொல்றது?” என்று தன் அடிபொடிகளை பார்த்தார்.

அவர்களும் “கரெட்டுங் மாமா” என்று கோரஸ் சொன்னார்கள்.

ஒருவழியாக அவர்களுக்கு conflict of interest, code of conduct, ethics, integrity பற்றியெல்லாம் வகுப்பெடுத்துவிட்டு, விட்டால்போதும் என்று ஓட்டம் பிடித்தேன். நான் நினைத்தாலும் அவ்வாறு செய்யமுடியாது என்பதையோ, நேரடியாக விற்பனைத்துறையில் இல்லை என்று சொன்னாலோ அடுத்தமுறை நம்மை எங்காவது பார்த்தால் எப்படியெல்லாம் உதாசீனப்படுத்துவார்கள் என்ற பயமும் ஒரு காரணம்

இப்போது அவர் ஒரு விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கத்தின் தலைவர். அண்ணன் Scorpio வாங்கிவிட்டார். நான் பேஸ்புக்கில் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்!

ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ‘விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கம்’ என்ற பெயரில் தொழில் செய்வதுதான் லேட்டஸ்ட் ட்ரென்ட். அதாவது, நூறு இருநூறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ஆளுக்கு இருபதாயிரமோ, முப்பதாயிரமோ சந்தா கட்டச்செய்து உறுப்பினராக்கி, சங்கத்தின்மூலம் அனைத்து விவசாய இடுபொருள்களையும் சந்தை விலையில் அங்கேயே வாங்கச்செய்ய வேண்டும். வரும் லாபத்தில் dividend கொடுத்துவிடுவதுதான் இந்த மாடல் (கணக்கு பார்த்தால் ஒன்னு வட்டிக்குக்கூட டிவிடெண்ட் வராது!).

இங்குள்ள தொழில் முனைவோர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்லாது கொஞ்சம் புத்திசாலித்தனமாக தொழிலை தேர்ந்தெடுப்பார்கள். அதாவது, மற்றவர்களுக்கு தொழிலாகவே தெரியாத ஒன்றை எடுத்து லாபமீட்டும் தொழிலாக்கி கூட்டத்தை ஈர்ப்பார்கள். நிறையபேர் வந்து ஆரம்பிக்கும்போது அதில் ulta intensive business model உண்டாக்கி கடைசியாக வந்தவர்களுக்கு நட்டம் வரச்செய்து, தொடர்ந்து லாபகரமான crowd attracting தொழிலாக நடத்திக்கொண்டிருப்பார்கள். ஜவுளி, லாரி, போர்வெல், கோழிப்பண்ணை, அறுவடை இயந்திரங்கள் என்று ஆரம்பித்து கல்வியை மிகவும் இலாபகரமான தொழிலாக மாற்றியதும் இந்த பகுதியினரே.

கூட்டுறவே நாட்டுயர்வு. கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் விவசாயிகள் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்துள்ளன. இந்த கார்ப்பரேட் அடிமைகள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள். இதுகுறித்த தரவுகளை ஆராய்ந்ததுண்டா என்றெல்லாம் நீங்கள் என்மீது பாய்ந்தீர்களேயனால் ‘நீங்க இன்னும் வளரனுந்தம்பி’ என்று மட்டுமே இப்போதைக்கு நம்மால் சொல்ல இயலும்.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மிகக்குறைந்த சந்தா தொகையை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் விளைபொருளை நல்ல விலையில் அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டு கடன் மற்றும் பிற advisory உதவிகளை செய்கின்றன. ஆனால் நாம் இங்கே பார்ப்பது விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சந்தை விலையில் இடுபொருளை சந்தா வாங்கிக்கொண்டு விற்கும் மாடல்.

தனியார் கடைகள் பெரும்பாலும் நிறுவனங்களின் நேரடி விற்பனை மையமாக அதாவது Preferred Dealer (PD) ஆக செயல்படுகிறார்கள். தங்களின் விற்பனையை அதிகரிக்க, சந்தையில் நிலைத்து நிற்க சரியான, தரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை கொடுத்தே ஆக வேண்டும். இல்லாவிடில் விவசாயிகள் மத்தியில் உள்ள பாக்கித்தொகை வந்து சேராது. அவர்களைப் பொறுத்தவரை perform or perish நிலைமைதான்.

சங்கங்கள் அப்படியில்லை. பெரும்பாலான பெரிய விவசாயிகளை உறுப்பினராக்கி விடுவதால் peer pressure காரணமாக அவர்கள் அங்கு வாங்கியே ஆக வேண்டிய நிலைமை. அவர்களை மறைமுகமாக சார்ந்திருக்கும் சிறு விவசாயிகள் யாரோ சிலரை வசிகரிக்கவேண்டி (to please) அங்கு போயாக வேண்டும். இந்த சங்கங்கள் எப்போதுமே மொத்த விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே வாங்குவார்கள். Preferred Dealer or Direct Dealer என்ற சிஸ்டம் இருக்கவே இருக்காது. சங்கத்தின் முன்னோடி ஆட்கள் தங்களுக்கு சேர வேண்டிய கமிசன் தொகையை மொத்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். பாங்காக் trip-ம் இதில் அடக்கம்! டிவிடெண்ட் என்பதெல்லாம் சங்கத்தில் வரவுசெலவு கணக்குப்பார்த்து எட்டணா வட்டிக்கு கொடுக்கப்படும்.

அப்படியெல்லாம் கிடையாது. நிரூபிக்க ஆதாரம் இருக்கிறதா, தேவையில்லாமல் பொத்தாம்பொதுவாக சேற்றை வாரி இறைக்காதீர்கள் என்றெல்லாம் நீங்கள் சொல்லக்கூடும். உங்கள் நம்பிக்கை உங்களுக்கானது. ஊர் உலகத்தில் இந்த modus operandi மூலம் நடப்பது என்னவென்று நன்றாக நமக்கு தெரியும். அதை சொல்ல முயற்சித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆகவே மக்களே, இது ஓர் அறிய வாய்ப்பு. சரியான தருணமும்கூட. உங்கள் ஊர்ப்பக்கம் ஏதேனும் விவசாயிகள் இடுபொருள் விற்பனை சங்கங்கள் உண்டாகும் நிலைமை தெரிந்தால், நீங்கள் அங்குள்ள பெருவாரியான ஜாதியை சேர்ந்தவராக இருந்தால், யோசிக்கவே வேண்டாம். தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், இயக்குனர், கணக்காளர் போன்ற பதவிகளில் ஒன்றை அடித்துபிடித்து வாங்கிவிடுங்கள். உறவுக்கார பையன்கள் யாரேனும் சும்மா இருந்தால் ஸ்டோர் கீப்பராகவாவது சேர்த்துவிட்டுவிடுங்கள்.

அவ்வளவுதான்! கமிசன் கொட்டும். நீங்கள்பாட்டுக்கு பேஸ்புக்கில் கவிதை, இலக்கியச்சண்டை போட்டுக்கொண்டிருக்கலாம். மூன்று மாதத்துக்கு ஒருமுறை 😉 banging in Bangkok -in Bangkok என்று ஸ்டேட்டஸ் போடுவதும் உறுதி.

ஒரு பாட்டுல முன்னேற All the best மக்களே!

“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்”

“நா பாக்கற இந்த பொழப்புக்கு பேசாம, நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்” என்று அடிக்கடி உங்களுக்கு தோன்றுகிறதா? அப்படியெனில் உங்களுக்காகத்தான் இந்த அப்டேட்.

காடை, கவுதாரி, கோழி, ஈமு கோழி, ஆடு என இறைச்சிக்காக வளர்க்கபடுபவைகளில் வெண்பன்றி வளர்ப்பு மிக லாபகரமானது. 150 – 200 பன்றிகளையுடைய பண்ணையை வைத்திருந்தால் நிகர லாபமாக தினசரி 5000 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ கறி பண்ணைவிலை ரூ 220. ஒரு பன்றியின் சராசரி எடை 400 கிலோ. இதில் தினசரி ஏற்ற இறக்கங்கள் கிடையாது. எல்லாமே ஸ்ரீ குமரன் தங்க மாளிகைபோல Fixed Rate. கடந்த ஐந்து ஆண்டுகளாக விலை ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது.

வெண்பன்றியில் ‘சௌபாக்கியவதி’ (Yorkshire) என்று ஒரு ரகம் உண்டு, அது ஒருமுறை 8 – 12 குட்டிகள் ஈனும். உங்களிடம் 10 சௌபாக்கியவதிகள் இருந்தால் ஒரே ஆண்டில் பண்ணையின் அளவை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதற்கான கொட்டகை, தண்ணீர் வசதி, 2 ஆட்கள் மற்றும் இதர இத்யாதிகள் இருந்தால் போதும். காலையில் அலுவலகம் செல்வதற்கு முன்பும், அங்கிருந்து வந்தபின் தினமும் ஒரு மணிநேரம் செலவிட்டால்கூட போதுமானது (இடைப்பட்ட நேரங்களில் நீங்கள் உங்களை பெரிய அதிகாரிபோல் உணருகிறீர்களா இல்லையா என்பது உங்கள் பணிச்சூழலை பொருத்தது!).

‘நா யாரு, என்னோட பேக்ரவுண்ட், கவுரவம் என்ன, நான் போய் பன்னி வளத்தறதா’ என்று நீங்கள் எண்ணினால் கொஞ்சம் கஷ்டம். “இப்பமட்டும் என்ன வாழுதாக்கும், அதுக்கு அந்த பன்னிகளோடையே நாள்முழுக்க இருந்தர்லாம்” என்று உங்களுக்கு தோன்றினால் டபுள் அட்வான்டேஜ்!!

பண்ணை ஆரம்பித்த மூன்று ஆண்டுகளில் நீங்கள் எங்கேயோ போய்விடுவீர்கள் என்பது உறுதி. ‘தம்பி பன்னிதான மேய்க்குது’ என்று சொன்னவர்களெல்லாம் ‘எனக்கு அப்பவே தெரியும், தம்பி பெரிய ஆளா வருவாப்லனு’ என்று உங்கள் பின்னால் வருவார்கள். நீங்களும் ஒருசில ஜென் கதைகளை சுட்டு, மசாலா போட்டு ‘ஒரு முனிவரும் அவரது சீடர்களும் ஆற்றை கடக்க முயன்றபோது ஓர் அழகான இளம்பெண் lift கேட்டாள். குரு அவளை தூக்க மறுத்தபோது ஒரு சீடன் அவளை தூக்கி, ஆற்றை கடந்து இறக்கிவிட்டான். etc., etc., பின்னர் அவன் குருவிடம் சொன்னான் ‘குருவே நீங்கள்தான் அவளை இன்னும் மனதில் வைத்திருக்கிறீர்கள், நான் எப்போதே அவளை நம் ஆசிரமத்தில் விட்டுவிட்டேன்’ என்று சொல்லி பெரிய ஞானியாக காட்டிக்கொள்ளலாம். தம்பிக்கு எலக்கிய அறிவும், ஒலக அனுபவமும் ஜாஸ்தி என்று அதற்கும் நாலுபேர் ஜால்ரா போடுவார்கள்.

ஒக்காந்து சீட்டை தேச்சிட்டு இருக்காம, ஒரே பாட்டுல பெரிய்ய ஆளா வரணும்னு நெனச்சிட்டே மோட்டுவளையை பார்த்து யோசித்து கொண்டிருக்கிறீர்களா? எப்படி ஆரம்பிக்கரதுன்னே தெரியலையா? சாரி ஜென்டில்மேன், வேறு குறுக்குவழி எதுவும் கிடையாது. நீங்கதான் இறங்கி செய்யணும். ஆல் தி பெஸ்ட்