இன்றைய தமிழக சூழலில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆகத் துடிப்பவனுக்கான புத்திமதிக் குறிப்பு எண் 17:

1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.

தொழிலாளி வர்க்கம், ஏழைப் பாட்டாளி, உழைக்கும் எளிய மாந்தர் என்று சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வரும் பிம்பங்களை முற்றிலுமாகப் புறக்கணி. அதில் வரும் கதை மாந்தர் போல் யதார்த்த உலகில் ஒரு தொழிலாளியும் கிடையாது.

அட்வான்ஸ் பணம் ஒருபோதும் கொடுக்காதே. வேலை ஆரம்பிக்கும் முன்னரே கூலியைப் பேசிவிடு; ஆனால் வேலை முடிந்த பிறகே கூலியைக் கொடு. வேலை தொடர்ந்து இருக்குமானால் கொஞ்சமாவது கூலிப்பணத்தை நிறுத்தி வை. மொத்தமாக முடித்த பின்னரே கணக்கை முடி.

வேலையை விட்டு நிற்கலாம் என்று இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொண்டு அவர்களை வேலையை விட்டு அனுப்பிவிடு. ‘உனக்கு இங்க என்னப்பா குறைச்சல்’ என்று கேட்டு யாரையும் தொங்காதே. அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

சாராயத்துக்கு தினசரி எவ்வளவு என்று வேலை ஆரம்பிக்கும் முன்னரே கேட்டுக்கொள். வேலை ஒழுங்காக நடக்க வேண்டுமானால் ஒருபோதும் தொழிலாளியுடன் அமர்ந்து உணவு உண்ணாதே, மது அருந்தாதே. இதை நவீன தீண்டாமை என்று 1970-களில் தொழிலாளியாக இருந்தவர்கள் சொல்வார்கள். அதைக் கண்டுகொள்ளாதே. சொல்பவனுக்கு என்ன, பணம் போட்டவன் நீயல்லவா?

நானும் ஒருகாலத்தில் தொழிலாளியாக இருந்து ஆரம்பித்தவன்தான் என்று புரட்சி பேசிக்கொண்டு தொழிலாளர்களுடன் தோளில் கைபோட்டு பழகாதே. ஈவு, இரக்கம், தயவு, தாட்சண்யம், கரிசனம் எல்லாம் வாயளவு வார்த்தைகளாக மட்டுமே இருக்கட்டும். அவர்களிடம் அளந்து பேசாத வார்த்தையும், எண்ணிக் கொடுக்காத பணமும் உன்னை தெருவுக்குக் கொண்டுவந்துவிடும்.

சூப்பர்வைசர், மேலாளர் என ஊழியர் அடுக்குமுறை இருந்தால் வேலை வழங்குவதில் அதை அப்படியே பின்பற்று. நேரடியாகத் தொழிலாளர்களுடன் உரையாடாதே.

தொழிலாளர்கள் கேட்டதும் பணம் கொடுக்காதே. இரண்டு மூன்று முறையாவது நடக்க விடு. அவர்களது கூலியைவிட ஐந்து மடங்குக்கு அதிகமான தொகையாக இருந்தால் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக தொழிலாளர்களை நேரில் வைத்துக் கொடு. பணத்தை எண்ணிப்பார்த்து வாங்கிடச் சொல்; அப்படியே வாங்கி பையில் வைத்துச் செல்ல ஒருபோதும் அனுமதியாதே.

Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

வேலையை விட்டுச்சென்ற பழைய தொழிலாளி திரும்ப வந்தால் பழைய கூலியே கொடு. சீனியாரிட்டி, புண்ணாக்கு, புடலங்காய் என்று அன்றைய தினம் பணியில் இருப்பவர்களை உதாசீனப்படுத்தாதே.

மேற்கண்டவற்றைப் பின்பற்றும் உன்னைக் கல்நெஞ்சக்காரன், உழைப்புறுஞ்சி, கார்ப்பரேட் கால்நக்கி என்று சில சீமான்களும், சீமாட்டிகளும் சொல்லக்கூடும். அதை அப்படியே புறந்தள்ளு. தொழிலாளியாக இருந்து முதலாளியாக ஆன உனக்கு இந்த படிப்பினைகளைக் கற்றுத் தந்ததே அந்த தொழிலாளர்கள்தானே.

அடுத்தவன் தாடியில் தீப்பிடித்தால் உன்னுடைய தாடியை முதலில் தண்ணீரில் நனைத்துக்கொள் என்று ஒரு கிரேக்க சொலவடை உண்டு. அக்கம்பக்கத்தில் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் முதலாளியைக் காலி பண்ணினார்கள் என்று காற்றில் வரும் கதைகளைக் கவனமாகக் கேட்டு அசைபோட்டுக்கொண்டே இரு.

Say again: 1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.

‘அடேய் உழைப்புறுஞ்சியே’ என்று யாராவது எகிறிக்கொண்டு வந்தால் பதில் சொல்லாமல் அடக்கி வாசி. ‘அப்படியே மூடிக்கிட்டு போயிடு, நானெல்லாம் ஒருகாலத்துல பேசாத பொதுவுடைமை டயலாக்கா?’ என்று எதையும் புரிய வைக்க முயற்சிக்காதே. சீறுபவன் எல்லாம் ஒரு பெட்டிக்கடை கூட வைத்து நடத்தியிருக்க மாட்டான்.

‘குறைஞ்ச கூலிக்கு இந்திக்கார லேபர் வந்தப்புறம் இங்க இருக்கற லேபர யாருமே மதிக்கறதில்ல, வேலை குடுக்கறதில்ல’ என்று சொல்பவனிடம் ஒருபோதும் உரையாடாதே. தமிழகத்தில் இருக்கற லேபர் என்ன இலட்சணத்தில் வேலை செய்கிறார்கள், ஏன் இந்திக்கார்ர்கள் இங்கு வருகிறார்கள் என்று அவர்களுக்குக் கடைசிவரைக்கும் புரியாது.

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்த தொழிலாளர் வர்க்கமும், 2020-இல் இருக்கும் தொழிலாளர் வர்க்கமும் முற்றிலும் வேறு என்பதை உணர். ஏழைப் பாட்டாளி என்று கதைகள், நாவல்கள் எழுதுபவர்கள் எல்லாம் 50 வயதைத் தாண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்.

Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஐஏஎஸ் என்ற பதவியும் தேவையே இல்லாமல் சும்மா அலங்காரத்துக்குத் தொங்கிக் கொண்டிருப்பவையா?

ஆளுநர் என்ற ஒரு பதவி எதற்காக இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத மாதிரி சமகாலத்துக்குப் பொருந்தாத, தேவையே இல்லாத, outdated பதவிகளில் ஐஏஎஸ் என்ற பதவியும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமல் அப்படியே இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு relevance இல்லாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

என்பதுகள் வரைக்கும் படித்த, பல்துறை ஞானம் நிறைந்த இளைஞர்கள் நிர்வாகத்திற்கு கிடைப்பது அரிதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழங்கள் பல வந்த பிறகு, இட ஒதுக்கீட்டு முறை புகுத்தப்பட்ட பிறகு சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலிருந்தும், வெவ்வேறு பின்புலங்களிலிருந்து இளைஞர்கள் நிர்வாகத்துக்கு வர ஆரம்பித்தனர்.

தொன்னூறுகளில் சந்தை திறந்துவிடப்பட்ட போதும், 2000-க்கு பிறகான ஐ.டி. புரட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று உட்கார்ந்திருக்கிறது இந்த நிர்வாக அமைப்பு முறை.

ஒரு தேர்வில் 80 மதிப்பெண் வாங்குபவருக்கும், 85 மதிப்பெண் வாங்குபவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடும் என்று நம்புகிறீர்கள்? ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு நபருடைய கடின உழைப்பு, நீதி, நேர்மை, திட்டமிடல், நேரந்தவறாமை லஜக், மொஜக், பஜக் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அவை 49%-உம், அதிர்ஷ்டம் என்பது 51%-உம் உண்டு. குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெறுவதிலும் 49% உழைப்பு, 51% அதிர்ஷ்டம் என்ற லாஜிக்-தான் வேலை செய்கிறது.

ஐந்து நேர்முகத்தேர்வுக்குச் சென்று தோற்றவர்களும் உண்டு. முதல் தேர்விலேயே வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆனவர்களும் உண்டு. ஒரே ஒரு கேள்வி சரியாக உட்கார்ந்த காரணத்தினால் ஒருவர் பத்து இருபது மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று ஐஏஎஸ் ஆகிறார் என்றால், காலத்திற்கும் அவர்தான் திறமையின் மறுவடிவம் என்று அத்தனை துறைகளுக்குமான முதன்மை அதிகாரியாகப் போடுவதுதான் நமது நிர்வாகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனம். (இந்த இடத்தில், அந்த ஒரு கேள்விக்கு சரியாக பதில் எழுத அவர் போட்ட உழைப்பு எவ்வளவு தெரியுமா என்று முட்டுக்கொடுப்பது, தான் எவ்வளவு பாசிடிவ் திங்கிங் உள்ள நபர் என்று காட்டிக்கொள்ளத்தானே அன்றி வேறில்லை).

மொத்தமுள்ள 24 பணிகளில் ஐஏஎஸ் தவிர மீதமுள்ள அனைத்தும் Speciality வகையைச் சேர்ந்தவை. காவல்துறை அதிகாரியாக, தபால்துறை அதிகாரியாக, etc என அதில் சேருபவர்கள் கடைசிவரைக்கும் அதிலேயே இருக்கின்றனர். அதனால் அந்தத் துறையின் ஆழமான ஞானத்துடன் விற்பன்னராகின்றனர்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி – படிப்பு/பயிற்சிக் காலம் முடிந்த பிறகு – வாரத்துக்கு ஒரு புதிய விஷயம்தான் கற்க முடியும். நான் தினசரி புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சும்மா கதைவிடுவது வேறு. பத்து வருடங்களில் விடுமுறை எல்லாம் போகப் பார்த்தால் (10×50=500) ஒரு நபர் 500 விஷயங்களைக் கற்றிருக்க முடியும். அவர்கள்தான் ஒரு துறையின் expert category. 15-20 வருடங்களில் அவர்கள் veteran வகையினர். சும்மா சீட்டைத் தேய்த்திருந்தாலும் கூட அந்தந்த்த் துறை சார்ந்த குறைந்தபட்ச ஞானம் வந்திருக்கும்.

ஐஏஎஸ்-ஐப் பொறுத்த வரையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு துறைகளுக்கு மாறிவிடுவதால் இந்தப் பிரிவினர் எதிலுமே எக்ஸ்பர்ட் ஆவதில்லை. Career beaureucrat என்று அழைக்கப்படும் குடிமைப் பணி அதிகாரிகளில் ஐஏஎஸ்-கள் Cocktail beaureucrat வகையினர். அதாவது எல்லாம் தெரியும் ஆனால் எதுவும் முழுமையாகவோ ஆழமாகவோ தெரியாது வகையறா.

தமிழில் இவர்களைப் புரோட்டோகால் புகுத்திகள் என்று அழைக்கலாம். புரோட்டோகால் என்பதைத் தாண்டி வேறு உலகமே கிடையாது. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று பேட்டி கொடுத்தாலும் மக்களுக்கும் இவர்களுக்கும் சுமார் பத்து மட்டங்களில் இடைவெளி பராமரிக்கப்படும். Feedback mechanism என்பது குடிமைப்பணி அதிகாரிகளுக்குக் குறிப்பாக ஐஏஎஸ் ஆபிசர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

சக அதிகாரிகளின் friendly comment-ஐக்கூட offensive எடுத்துக்கொள்ளுமளவுக்கு ‘உங்கள மாதிரி திறமையான ஆபிசர் இன்னிக்கு வரைக்கும் இங்க வந்ததே இல்ல சார்’ என்று அலுவலக சிஸ்டம் அவர்களுக்கு வெற்று கெளரவத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக அகங்காரத்தையும் புகுத்தி விடுகிறது. அப்படி ஒரு சூழலில் இருந்து பழகியவர்களால் கீழே உள்ள அதிகாரிகளோ பொதுமக்களோ ஏதாவது சொல்லிவிட்டால் தாங்கமுடியாத ஈகோ பிரச்சினை ஆகிவிடுகிறது.

இதற்குக் காரணம் முசெளரி, டேராடூன், நாக்பூர், ஐதராபாத் என அந்தந்த சர்வீஸின் பயிற்சிக் காலத்தில் Officer Like Qualities (OLQ) என்று சொல்லித் தரப்படுபவைகளை 99% அதிகாரிகள் கேடருக்கு வந்தபிறகு மறுசீராய்வு செய்வதில்லை. அதை மனப்பூர்வமாக நம்பி தங்களை ஒரு புதிய species ஆக மனதுக்குள் கற்பிதம் செய்து அதிலேயே இருந்துவிடுகின்றனர். பல்வேறு வகையான சாதி, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் உள்ள, ஏகப்பட்ட யூனியன் இரவுடித்தனத்தைக் கொண்ட Subordinate ஊழியர்கள் பட்டாளத்தை நிர்வகிக்க கடுமையான தொணியும், சற்று அதிகாரத் தோரணையும் அகங்காரப் பார்வையும் தேவைதான்.

ஆனால் அதிகப்படியான OLQ சின்ட்ரோம் காரணமாக மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், சிறிய விசயங்களைக்கூட எவ்வளவு ஆணவத்துடனும், ஈகோவுடனும் அணுகுகின்றோம் என்பதையும் அறியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

பாடத்துக்குப் பத்து மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டதற்காக ஓய்வுபெறும் வரைக்கும் எல்லாத் துறைக்கும் உயரதிகாரியாக ஐஏஎஸ் ஆபிசர்தான் இருக்கவேண்டும் என்ற புரோட்டோகால் இன்றைய காலகட்டத்துக்கு outdated. மற்ற நாடுகளில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்தத் துறையின் எக்ஸ்பர்ட் நபர்களை அழைப்பார்கள். நம் ஊரில்தான் போர்வெல்லில் குழந்தை விழுந்துவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியை அழைக்கிறார்கள். அவர் வந்து கை காட்டும் திசையில்தான் அரசு இயந்திரம் பயணிக்கும். அதிகாரம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளை வெறும் ஏவல் ஆட்களாகவே வைத்திருப்பதன் சாபக்கேடு இது.

மாநில காவல்துறை தலைமை அதிகாரியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் கீழே இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான team morale இருக்கும்? ”இந்தாளுக்கு Policing பத்தி ஒரு எழவும் தெரியாது, பத்து பேர்கிட்ட தனித்தனியா ஓப்பீனியன் கேட்டுட்டு ஒரு முடிவு பண்ணிக்குவாப்ல, மீட்டிங்ல அதே கேள்விய கேப்பாரு. இவர் ஏற்கனவே முடிவு பண்ணுனத யாராவது சொன்னா அதை சூப்பர் ஐடியான்னு சொல்லி implement பண்ணச் சொல்லுவாரு. அதே ஆதிகாலத்து மேனேஜ்மெண்ட் உத்தி. இவரால எதுவும் முடிவு பண்ண முடியலன்னா கீழ இருக்கற விவரம் தெரிஞ்ச ஆபிசரக் கூப்பிட்டு ‘துரைசிங்கம் இந்த புராஜக்ட்ல உங்களுக்கு முழு சுதந்திரம் தர்றேன், சிறப்பா முடிச்சிட்டு வாங்க’னு சொல்லிடுவாப்ல. சும்மா தெண்டத்துக்கு சம்பளம் குடுத்து எங்கள மாதிரி அஞ்சாரு பேர அல்லைக்கை வேலைக்கு நிறுத்தியிருக்காங்க” என்று மகிழுந்து ஓட்டுநர் கூட சிரிப்பார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற species-இல் நிறைய sub species மற்றும் biotype-களும் உண்டு. அதில் நேர்மையான அதிகாரிகள் என்ற sub species வகையினர் மிகவும் notorious and naughty ஆவர். விளம்பர, புகழ் மோகிகள் என்பதெல்லாம் biotype மட்டுமே. நேர்மையாக இருக்க வேண்டும், ஏமாற்றக்கூடாது, பொய் பேசக்கூடாது, வார்த்தை தவறக்கூடாது என்பதெல்லாம் குழந்தையாக இருக்கும்போதிருந்தே நமக்கெல்லாம் கற்பிக்கப்படுபவைதான். இவர்தான் என் மனைவி என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக இவர்தான் என் பத்தினி மனைவி என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? அவர் ரொம்ப நேர்மையான அதிகாரி என்றால் மற்ற அதிகாரியெல்லாம்??!!

இரண்டு ஆண்டுகள் மீன்வளத்துறை விற்பன்னர், மூன்று ஆண்டுகள் வேளாண்துறை விற்பன்னர், இரண்டு ஆண்டுகள் கதர் வாரிய விற்பன்னர், மூன்று ஆண்டுகள் கல்வியியல் துறைக்கு விற்பன்னர், மறுபடியும் இரண்டு ஆண்டுகள் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் என்று ஒரு நபர் எப்படி எல்லா துறைகளுக்கும் விற்பன்னராக இருக்க முடியும்?

ஒவ்வொரு துறையிலும் ஐஏஎஸ் ஆபிசர்கள் நிர்வாக நடைமுறைகளைக் கண்காணிக்கும் அதிகாரியாகத்தானே இருக்கிறார்கள், கீழே டெக்னிக்கல் ஆட்கள் இருக்கிறார்களே என்று தோன்றலாம். ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை நடத்துபவரையும், ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி நடத்துபவரையும் மேல்மட்டத்தில் மாற்றிப் போட்டால் நிர்வாகம் எப்படி நடக்கும்? Cross functional changes என்ற எம்பிஏ வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஒரே நிறுவனத்துக்குள் பேச வேண்டியவை. நூறு கோடி வியாபாரம் பண்ணும் வங்கிக் கிளைக்கு மேலாளராக இருப்பதும், சீட்டுக் கம்பெனி நிர்வாகியாக இருப்பதும் ஒன்றல்ல. இரண்டுமே பண நிர்வாகம் சார்ந்ததுதானே என்று பொதுமைப்படுத்த முடியாது/கூடாது.

உலகச்சந்தை நம் படுக்கையறை வரைக்கும் வந்துவிட்ட காலத்தில் இன்னமும் மாறாத விக்டோரியா மகாராணி காலத்து நிர்வாக முறையில் ஐஏஎஸ் என்பதுதான் முதலில் அகற்றப்பட வேண்டியது. இன்றைய தேவை ஒவ்வொரு துறைக்கும் ஆழமான அகலமான ஞானமுடைய நபர்கள்தான். அவர்களுக்கு நிர்வாகம் தெரியாது ஐஏஎஸ் ஆபிசர்தான் வழிகாட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இல்லாமல் எப்படி நிர்வாகம் நடக்கும் என்று அபத்தமாக கேள்வி கேட்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. புதிய நிர்வாக முறையைத் தேடினால்தானே கிடைக்கும். அப்படி ஒன்று வருவதற்கு இந்த அதிகாரிகள் குழாம் எப்போதுமே ஒப்புக்கொள்ளாது என்பதுதானே உண்மை.

நாங்க எவ்வளவு உழைக்கிறோம் தெரியுமா, எவ்வளவு பிரஷர் இருக்கு தெரியுமா, எவ்வளவு வேலைப்பளு இருக்குது தெரியுமா என்பது ஒவ்வொரு அரசு ஊழியரும் சொல்வதுதான். வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே தனியார் நிறுவனங்களில் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியவோ புரியவோ போவதில்லை. மாதத்தில் 15 நாட்கள் இந்தியா முழுவதும் இரவு விமானப் பயணங்களிலும், டேக்சியிலும் தூங்கியவாறேதான் தனியார் நிறுவன நடுமட்ட, உயர் மட்ட அதிகாரிகள் கழிக்கின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம் என்றாலும் ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கிவிட முடியாத அழுத்தம் சந்தையில் புராடக்ட் விற்கும் ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் உண்டு. இரண்டு வருடங்கள் இலாபம் காட்டவில்லையென்றால் வேலை போய்விடும் என்ற யதார்த்தமெல்லாம் மேல்மட்ட அரசு அதிகாரிகளுக்குப் புரியாது.

Peepli Live என்ற ஒரு படத்தில் ஓர் இளம் அதிகாரி ஒரு பிரச்சினையான சூழ்நிலையில் உடனடியாக முடிவெடுத்து எதையாவது செய்யத் துடிக்கையில் அவரது உயரதிகாரி எப்படி coach செய்கிறார் என்பதை அற்புதமாக அமைத்திருப்பார்கள். “இதெல்லாம் எதுக்கு நாம செஞ்சுகிட்டு, அந்த சான்மான்ட்டோ கம்பெனிக்காரன்கிட்ட குடுத்துடு, வா டீ சாப்பிடு” என்று சொல்லுவார். அதாவது எதற்குமே சுரணையில்லாத, மழுங்கிய உயிரினமாக காயடிப்பதுதான் அந்த coaching. பயிற்சி அதிகாரிகளுக்கு முசெளரி அகாடமியிலேயே இந்தப் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்களாம்!

Indian Forest Service என்று தனியாக ஒரு தேர்வில் உயிரியல் பின்புலமுடையவர்களை மூன்றாண்டுகள் பயிற்சி அளித்து வனத்துறை உயரதிகாரிகளாக இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். கேடருக்குச் சென்ற அதிகாரிகள் எப்படியாவது காக்கா பிடித்து சொந்த மாநிலத்துக்கு வந்து பாஸ்போர்ட் அதிகாரி, கவர்னர் குதிரைக்கு முடிவெட்டிவிடும் இலாகா இயக்குநர் என்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? பாஸ்போர்ட் ஆபிசர் வேலைக்கு IFS ஆபிசர் எதற்கு? அப்புறம் ஸ்பெஷாலிட்டி என்பது எங்கிருந்து வரும்? கடைசிவரைக்கும் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க் ஓநாய் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். குறைந்தபட்சம் இத்தகைய லோலாக்கு டோல் டப்பிமா போஸ்ட்டிங்குகளை அதிகாரிகளது பதவி உயர்வு சீனியாரிட்டியில் சேர்க்காமலாவது இருக்க வேண்டும். அப்படி நடக்க விட்டுவிடுவார்களா என்ன?

அரசு அதிகாரிகளாக வேலைக்குச் சேரும்போது எல்லோருமே மிகத் திறமையான நபர்கள்தான். நடுமட்டத்திலும், மேல்மட்டத்திலும் சேரும் அதிகாரிகளை வீணடித்து, மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தி, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே வைத்திருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்லைக்கை பட்டாளம். ஓட்டுநர், வீட்டு வேலைக்கு, அலுவலக வேலைக்கு என கிட்டத்தட்ட 10 பேர் சும்மாவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில் எப்பேர்ப்பட்ட நபரும் அந்த அதிகார போதையில் மயங்கி சோம்பேறியாகிவிடுவர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்பதே பேரவலம்.

அதனால்தான் பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு எளிமை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டு ஆரம்பிக்கின்றனர். இது முற்றிய நிலையில் கவிதை எழுதி ஃபோலோயர்களை கும்மி எடுக்கின்றார்கள். சமத்துவம் மிகுந்த உரையாடல்கள் புழங்கும் சிவில் சமூகத்திலிருந்து ஆரம்பத்திலேயே இவர்கள் விலகி விடுவதால் “டேய் ங்கோத்தா, நீ ட்ரெயினிங்ல இருந்தது ரெண்டு வருசம், கேடருக்கு வந்து மூணு வருசம், அதுக்குள்ள என்ன மயிற கண்டுட்டன்னு மேனேஜ்மெண்ட் கிளாசெல்லாம் எடுக்கற?” என்பது போன்ற கமென்டுகளை யாரும் போடுவதில்லை. இவர்களும் அதை விரும்புவதில்லை. Excessive OLQ Syndrome-இன் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கார் டிரைவர் என்பதை முதலில் நிறுத்த வேண்டும். காவல்துறை, மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மை போன்ற எமர்ஜென்சி தேவைகள் இருக்கும் துறைகள், மாற்றுத் திறனாளி அதிகாரிகள் தவிர மற்ற அனைவருக்கும் ஓட்டுநர் என்ற தனி ஊழியரை அகற்றுவதே அரசாங்க அதிகாரிகள் என்ற தனி வர்க்கத்தை ஜனநாயகப்படுத்துவதன் முதல் படி.

வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் இரவு கொண்டுவந்து இறக்கி விடப்படும்வரை அதிகாரி அப்படியே நாட்டைத் தூக்கி நிறுத்துவது குறித்துதான் யோசிக்கிறார் என்று முட்டு கொடுக்கக்கூடாது. இதே ஊரில் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தினசரி 200 கிலோமீட்டருக்கு குறைவில்லாமல் self driving-இல்தான் செல்கிறார்கள்.

ஆண்டுக்கு 500 கோடிக்கு வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் சிஈஓ-க்கள் கூட தானேதான் கார் ஓட்டுகிறார்கள். இந்தக் குறைந்தபட்ச ஃபிட்னெஸ் கூட இல்லாத அதிகாரிகளுக்கு அலுவலகப்பணி போதுமே, களப்பணி எதற்கு? அவர்கள் சொந்த செலவில் ஓட்டுநர் வைத்துக்கொண்டால் 15000 சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் அரசாங்கம் 50000 கொடுக்க வேண்டும். அப்போதாவது தங்களையும் தொழிலாளி வர்க்கம் என்று நினைத்துக்கொண்டு வறட்டு தொழிற்சங்கவாதம் பேசாமல் இருப்பார்கள்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, சாலை வடிவமைப்பில் உள்ள பிரச்சினையில் ஆரம்பித்து கார் சர்வீஸ் சென்டர் அனுபவம், எங்காவது இடித்துவிட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்துக்குச் செல்லுதல், இத்தனைக்கும் இடையில் பணியாற்றி நாட்டை முன்னேற்றுதல் என்கிற first hand அனுபவம் அதிகாரிகளுக்கே தேவை. அப்போதாவது இந்த நாட்டில் பைக், காரில் சென்று வேலை செய்து மாத சம்பளம் வாங்குவது எவ்வளவு கேடுகெட்ட நரகமான வாழ்க்கையாக இருக்கிறது என்று புரியும்.

தினசரி கார் ஓட்டி அலுவலகம் செல்லும் ஒரு அதிகாரியாவது Fastag திட்டமிடல் குழுவில் இருந்திருந்தால் இத்தனை சொதப்பல்கள் நடக்குமா? எத்தனை இலட்சம் மக்களின் நேரத்தை வீணடித்து, பணத்தைக் காணாமல் போகச் செய்துவிட்டிருக்கிறார்கள்?

மேலைநாடுகளில் பொதுமக்கள் நடப்பதற்கு, சைக்கிள் ஓட்டுவதற்கு தனித்தனி நடைபாதைகள் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து இங்கே ஸ்மார்ட் சிட்டி அமைத்து இருந்த பிளாட்பாரங்கள் மீதும் தார் ஊற்றுகிறார்கள். ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி முன்னர் நடைபாதை கிடையாது. வாகனங்களுக்குள் புகுந்து ஓடி, வருடம் ஒருவராவது ஊனமாகிறார்கள். இதுதான் நமது வருங்கால மனிதவள ஆற்றலுக்கு நாம் செய்யும் தொண்டு. சாலை வடிவமைப்பதை அந்தந்த துறை அதிகாரிகளிடமாவது விட வேண்டும். டிரைவர் இல்லாமல் peak hour-களில் அதிகாரிகளே கார் ஓட்டினால்தானே இதெல்லாம் தெரியும்.

அந்த காலத்திலே பல்லக்கில் அமர்ந்து, யானைமீது அமர்ந்து நகர்வலம் செல்வது மாதிரி டிரைவர் வைத்து சைரன் பொறுத்திய கார்களில் செல்பவர்களுக்கு சாலைகளில் பைக்கில் செல்பவனது கஷ்டத்தையும், நடந்து செல்பவனது வாழ்வா சாவா மரணப் போராட்டத்தைப் பற்றியும் எப்படி புரியும்?

உணவகங்களிலும், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் நடுவில் நிறுத்தி வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளின் கார் ஓட்டுநர்கள் செய்யும் இடையூறுகள் எத்தனை? அப்படி அவர்கள் செய்வதை சட்டையே செய்யாத அதிகாரிகளை என்னவென்று சொல்வது? நீதிபதிகளுக்கு டோல் கேட்டுகளில் தனி வழி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அதிகார மமதையில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

Secrecy broods corruption. நமது நிர்வாக சீர்திருத்தம் என்பது சிவில் சர்வீஸ் மற்றும் நீநிமன்ற மட்டங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களது பணிகளில் வெளிப்படைத்தன்மையும், தேவையற்ற அடிமை முறையை ஊக்குவிக்கும் ஆங்கிலேயர் காலத்து அதிகார படிநிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழலில் ஐஏஎஸ் என்ற பதவியும், அரசாங்கத்தில் கார் ஓட்டுநர் என்ற பணியிடமும் நீக்கப்பட வேண்டியவை. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டுமானால் சீர்திருத்தம் என்பது அதிகாரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதை rubbish என்று ஒதுக்கித் தள்ளுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…

வடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்?

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் சேட்டுபசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை. கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் ‘இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை. ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்த தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

கணிசமாக படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது. ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும்வரை உயர்கல்வி கற்பது என பொழுதை ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக்கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்ககூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை. இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகிவிடுகின்றனர். ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லி பலரும் பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படி சின்னச்சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல் ‘அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்’ என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம். எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாக சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூட கல்லாவுக்கு கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை. கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள். அப்படி சொல்லி, சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கை கழுவுகிறீர்கள். சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும். போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார். நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாக பிடிபடும்.

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டு பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்பு கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது. வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன் ‘ஹேப்பி எண்டிங்’ கொண்டாட்டம், சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம் வருடத்துக்கு இரண்டுமுறை வெளிநாட்டுப் பயணம் என திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்கு சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது. ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளை கிரெடிட் நோட் போட்டு சரக்காக எடுத்து காசாக்குவார்களே தவிர தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்டவை. ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

கார்ப்பரேட் எதிர்ப்பு என்றபெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களை படுமுட்டாளுக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன. உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். கஷ்டப்பட்டு தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா என கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாக பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது. பக்கத்து மாநிலத்துக்கு செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலை தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாக பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார். அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும். இந்த மாதிரியான விரும்பத்தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம். எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்திகொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப்பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்? அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை. If you don’t do it, you won’t learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!

விவசாயப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஏன் சொல்லிக்கொள்ளும்படியாக தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெறுவதில்லை?

விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.

2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.

4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.

5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.

6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.

7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).

படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.

வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.

எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.

அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.

மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.

அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.

அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!

வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்வது சாத்தியமா?

கேள்வி: வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்க செய்திட வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அது சாத்தியமா? ஏன் எந்த அரசாங்கமும் அதை செய்ய முன்வரவில்லை?

பதில்: அந்த, இந்த, எந்த அரசாங்கத்தாலும் அதை செய்ய முடியாது. அடுத்த 20 வருடங்களில் அதற்கான உட்கட்டமைப்பில் பாதி ஏற்படுத்தினாலே மாபெரும் சாதனையே.

விவசாயம் இன்னும் முறைப்படுத்தப்படாத, போதுமான எந்த தரவுகளும் இல்லாத, வரி இல்லாத வருமானமுடைய கடைநிலைத் தொழிலாகவே இருக்கிறது. அதில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல், சூழ்ச்சிகள் என எல்லாம் உண்டு. ஜாதி இல்லாமல் இந்தியாவில் விவசாயம் என்ற தொழில் இல்லை. அதனுடன் இணைந்த வர்ணாசிரம பேதங்களும் அதனடிப்படையில் இருக்கும் சுரண்டல்களும் கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் என்ற பெயரில் தாக்குப்பிடிக்க வைத்தன.

இன்று கல்வி அனைவருக்குமானது என்றாகிவிட்டபடியால் பல்வேறு தொழில் வாய்ப்புகள் – கோவில் அர்ச்சகர் தவிர்த்து – அனைத்து சாதியினருக்கும் கிடைப்பதால் விவசாயத் தொழிலிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி ஆட்கள் குறைகிறார்கள் என்றால் இயந்திரங்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பல சிறு, குறு
விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் விவசாயிகளின் எண்ணிக்கை குறையத்தானே வேண்டும். குறைவான விவசாயிகள் நிறைய மக்களுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்து தருகிறார்கள் என்றால் இலாபம் அதிகரிக்கத்தானே வேண்டும்? அப்படியும் நடக்கவில்லையே ஏன்?

காரணம், நம்மிடம் வேளாண்மை குறித்த data என்ற ஒன்று உருப்படியாக இல்லை. பொய்த் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது. அவை வெறும் ஊகங்களாகவே இருக்கும். ஊகங்கள் எதிர்மறை விளைவுகளையும் தரும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலைப்பேட்டை, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் அரசு வேளாண்மைத்துறை சமர்ப்பித்த பரப்பளவு கணக்கின்படி தோராயமாக 200 டன் மக்காச்சோள விதைகளே விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நண்பர் ஒருவர் மேலாளராக பணிபுரிந்த நிறுவனம் மட்டும் 600 டன் விதைகளை விற்றது. மற்ற முன்னணி நிறுவனங்கள், லெட்டர்பேட் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து 800 டன் விதைகள் விற்றிருக்கும். ஆனால் அரசாங்க கணக்கீட்டின்படி இத்தனை ஆயிரம் டன் மகசூல் வரும் என்று ஊகித்து இன்ன விலைக்கு மக்காச்சோளம் விற்கும் என்று எதையாவது சொல்வதும், actual மகசூல் பலமடங்கு அதிகமாக வந்து விலை அதளபாதாளத்திற்கு போவதும் இப்படித்தான்.

சிலநேரங்களில் அரசாங்கப் புள்ளிவிவரம் ஒன்றைச் சொல்லும். ஆனால் அந்த பயிருக்கான பரப்பளவு அதில் பாதிகூட இருக்காது. சில வருடங்களுக்கு முன்னர் பருப்பு விலை எகிறியதை நினைவில் கொள்க. சின்னச்சின்ன வியாபாரிகள் முதல் பெரிய சேட்ஜீக்கள் வரை தங்களால் இயன்ற அளவு சரக்கை இருப்பு வைத்திருப்பார்கள். அஃது எந்த டேட்டாவிலும் வராது. உண்மையில் விலை ஏறினால் இந்த சரக்குகள் அந்த இழுவையில் வெளியேறி சந்தையில் கலக்கும். அதனால் நுகர்வோருக்கு ஓரளவுக்கு இலாபமே. இதைப் பதுக்கல் என்று கூற முடியாது. ஒரு பொருள் அடிமாட்டு விலைக்கு விற்கும்போது நிறைய வாங்கி இருப்பு வைத்து விலை ஏறும்போது விற்பதைப் பதுக்கல் என்று அழைப்பதே தவறு. உற்பத்தி அளவுக்கதிகமாக இருக்கும் பொருட்களில் எல்லாவற்றையும் வாங்கி இருப்பு வைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க முடியாது. அடிமாட்டு விலையில் அவர்கள் வாங்கவில்லை என்றால் அவற்றை உற்பத்தி செய்தவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குப்பையில்தான் கொட்ட வேண்டும். அதே பொருள் விலை ஏறுகையில் இந்த so called பதுக்கல் சரக்கு என்ற ஒன்றும் இல்லாவிட்டால் நுகர்வோருக்கு பெரும் செலவு ஏற்படும். கையிலிருக்கும் உபரி குறைவதால் ஒட்டுமொத்த வாங்கும் திறன் குறையும்; மேற்கொண்டு என்ன ஆகும் என்பதை பல பொருளாதார நிபுணர்கள் அவ்வப்போது விளக்கி வருகிறார்கள். ஆனால் நமக்கு வறட்டு கம்யூனிசம் அல்லது முரட்டு முதலாளித்துவம்தான் பிடிக்கிறது!

காய்கறிகள் விலை ஏறும்போதெல்லாம் குளிர்பதன கிட்டங்கிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. நமக்கு உற்பத்தியின்மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் குளிர்பதன கிட்டங்கி கான்செப்ட் எப்படி எடுபடும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிலோ பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பதற்காக மிளகாயைக் குளிர்பதனக் கிடங்கில் போட்டு மூன்று மாதம் வைத்திருந்து எடுக்க நினைக்கையில் வெளிச்சந்தையில் பத்து ரூபாய்க்கே விற்பதாக வைத்துக்கொள்வோம். மேலும் இரண்டு மூன்று மாதங்கள் பொறுமையாக கிடங்கிலேயே வைத்திருக்கலாம். வெளிச்சந்தையில் பத்து, பன்னிரெண்டு ரூபாய்க்கே விற்றால் ஐந்தாறு மாதங்கள் கிடங்கில் வைத்திருந்த வாடகைக்கு என்ன செய்வது? இதில் எல்லாமே ஊகத்தின் அடிப்படையிலான ரிஸ்க்-தான். டேட்டா என்ற ஒன்று இருந்தால்தானே! இரண்டு மாதம் கழித்து விலை ஏறும் என்றால் விவசாயிகளும் உற்பத்தி செய்து குவித்துவிடுவார்களே.

விவசாயிகளும் எதிலும் முறையாக பதிவு செய்துகொள்வதெல்லாம் கிடையாது. அப்படியே ஏதாவது சங்கம், சொசைட்டி என்று ஏதாவது வந்தாலும் சில வருடங்களிலேயே அந்த பகுதியில் உள்ள பெருவாரியான சாதியினரால் அவை hijack செய்யப்படுவதால் பலர் உதிரிகளாகவே நின்றுவிடுகிறார்கள். உழவு ஓட்டி, பார் அமைத்து லேட்டரல் குழாய்களை இழுத்துவிட்ட பின்னர்தான் பல விவசாயிகள் என்ன வெள்ளாமை வைப்பது என்றே முடிவு செய்கின்றனர். ஊரில் எல்லோரும் வாழை என்றால் நாமும் வாழை, எல்லோரும் வெங்காயம் என்றால் நாமும் வெங்காயம், எல்லாரும் தக்காளி என்றால் நாமும் தக்காளி. இல்லாவிட்டால் சந்தையில் அப்போதைக்கு எதற்கு விலை இருக்கிறதோ அதையே நாமும் பயிர் செய்வோம் என பலரும் இறங்குவார்கள். என்ன பயிர் சாகுபடி செய்யப் போகிறோம் என்று கடைசிநேரம் வரைக்கும் ஏகப்பட்ட விவசாயிகள் முடிவே செய்வதில்லை என்பதால் எந்த commodity என்ன விலைக்கு விற்கும் என்று யாராலும் ஊகிக்க முடிவதில்லை.

பண்டிகைகளை ஒட்டி சில பண்டங்கள் நல்ல விலைக்கு விற்கும் என்பது நீண்டகாலமாக புழங்கிவரும் ஒரு கருதுகோள் (hypothesis). உதாரணமாக, ஓணம் பண்டிகைக்கு வாழை, செண்டுமல்லி என சிலவற்றுக்கு விலையேற்றம் இருக்கும். அதையும் இன்று பல விவசாயிகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள்; எந்த பண்டிகையையும் விட்டு வைப்பதில்லை.

வட இந்தியாவில் ஜூன் மாதம் கரிஃப் பருவம் தொடங்குவதால் அறுவடை சமயத்தில் இருக்கும் பயிர்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பள்ளி, கல்லூரிகள் திறப்பதாலும், வைகாசி மாதத்தில் பல முகூர்த்தங்கள் இருப்பதாலும் நல்ல விலை கிடைத்துவந்தது. அதை சரியாக புரிந்துகொண்ட கிழக்கிந்திய விவசாயிகள் முரட்டுத்தனமாக சாகுபடி செய்து இங்கே ஏற்றுமதி செய்து, ஜூன் மாதம் வருடந்தோறும் தமிழகத்தில் இயல்பாகவே விலையேற்றம் இருக்கும் என்ற கருதுகோளை இந்த ஆண்டு உடைத்து விட்டனர்.

சாலை வசதிகள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று பலமடங்கு உயர்ந்துவிட்டது என்பதை வெகுசன பத்திரிகைகளின் கட்டுரையாளர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்வதில்லை. வாகனங்களின் திறன்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. பத்து டன் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஓர் இரவில் 700 கிலோமீட்டரை ஒரு லாரி கடக்கிறது. 100 கிமீ வேகத்திலேயே இடைவிடாது இயக்குகிறார்கள். கார்களில்கூட இந்த காய்கறி லாரிகளுடன் போட்டியிட இயலாது. Fastag வில்லை ஒட்டப்பட்ட சரக்குந்துகள் வாட்சப்பில் கிடைக்கப்பெற்ற லொக்கேஷனை கூகுள் மேப்ஸில் அந்தந்த மாநில ஓட்டுநர்களின் மொழியிலேயே துரத்திவந்து விடியும்போது டெலிவரிக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒரிசா, சட்டீஸ்கரிலிருந்து கோயம்பேடு வருவதெல்லாம் இன்று சப்பை மேட்டர். இன்று நாசிக்கில் பறிக்கப்பட்ட தக்காளி நாளை மறுநாள் சென்னையிலுள்ள அபார்ட்மென்ட் ஏதாவது ஒன்றில் சாம்பாரில் கொதித்துக்கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் பட்டம் என்ற ஒன்று மிகவும் முக்கியமானது. இன்று வீரிய இரகங்களின் வருகையால் பட்டம் என்ற ஒரு வாரத்தையை உழவர்களே மறந்துவிட்டனர்! பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய இரகங்களை சந்தையின் தேவைக்கேற்ப உருவாக்குகிறார்கள். ஆனால் அவை மரபணு மாற்றப்பட்டவையோ, உடலுக்கு தீங்கு தருபவையோ என்று அச்சப்படத் தேவையில்லை. அந்தக் காலம் மாதிரி இல்லாமல் திறமையான ஆட்களைத் தக்க வைத்துக்கொள்ள தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வழங்குகின்றன. மென்பொருள் துறையினரை ஒப்பிட்டால் அதே வயதினர் வேளாண் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் முரட்டு சம்பளம் பெறுகின்றனர். எண்ணிக்கையில் இவர்கள் குறைவு என்றாலும் கூர்மதியும், அயராத தன்னூக்கமும் உடையவர்கள் என்பதால் சந்தையின் போக்கைக் கவனித்து அதை எப்படியாவது நிரப்பிவிடுகின்றனர்.

விதைகள் விற்கும் அளவினை வைத்து மகசூலைக் கணக்கிட முடியுமா என்றால் அதுவும் இல்லை. மகசூல் கூடவோ, குறையவோ செய்வதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதோடு அவை எவ்வாறு dispose செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாது என்பதால் இங்கும் ஊகமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கோயமுத்தூர், சேலம், திண்டுக்கல் பகுதிகளில் ஏக்கருக்கு இரண்டரை கிலோ வெண்டை விதை பயன்படுத்துவார்கள். விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறு கிலோ பயன்படுத்துவார்கள். ஆனால் கோயமுத்தூரில் எடுக்கும் மகசூலைக் காட்டிலும் விழுப்புரத்தில் குறைவாகவே எடுக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் புழங்காத பயிர்களில் அரசாங்கம் முரட்டுத்தனமான மானியம், இறக்குமதி, அந்த தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன், ஊக்கத்தொகை என வழங்கி சரிக்கட்டிவிடுகிறது. கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை என்பதால் அரசங்கமே அதை செய்துகொள்வதுடன் ஆலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிசெய்வது ஓர் உதாரணமாகும்.

உலக வர்த்தக மையத்தில் இந்தியாவும் உறுப்புநாடு என்பதால் பல நேரங்களில் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதி அடிவாங்கும், அந்நியச் செலாவணி வரத்து படுக்கும், டாலர் எகிறும் என்பதால் அரசாங்கம் கொஞ்சம் மென்மையாகவே நடந்துகொள்கிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நமக்கு மானியம் கொடுக்க இன்னும் நிறைய provision உள்ளது என்றாலும் பயனாளிகளை அடையாளங் காணுவதிலும், அதைக் கொண்டுபோய் சேர்ப்பதிலும், மானியத்தை வாங்குபவர்கள் நாணயமாக நடந்துகொள்வதிலும் மிகப்பெரிய சந்து இருப்பதால் உலக வர்த்தக மையத்தை இந்தியா கண்ணில் விரல்விட்டு ஆட்டும் சம்பவங்கள் நடக்க வேண்டுமெனில் மோடி கறுப்புப் பணத்தை மீட்டு 15 இலட்சம் நமது அக்கவுண்ட்டில் போடும் காலம் வரை காத்திருக்க வேண்டும். இரண்டும் நடப்பதற்குள் நாமெல்லாம் இயற்கை எய்திவிடுவோம்!

வங்கியாளர்கள் சொத்துப் பத்திரம் மாதிரி ஏதாவது எளிமையான கொல்லேட்டரலோ அல்லது அரசாங்க கியாரண்டியோ இருந்து குறைவான வட்டியில் கடன் வழங்கினால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார்கள். வங்கிகளுக்கு கொழுந்தியாள் முறையான காப்பீட்டுக் கம்பெனிகள் போதுமான இன்சூரன்ஸ் இல்லாததுதான் பிரச்சினை எனவே எங்களுக்கு பிரீமியத்தை வாரி வழங்கினால் பிரச்சினை ஓவர் என்கிறார்கள்.

Celebrity எழுத்தாளர்கள் என்ற அடைமொழியில் தேவையில்லாத அல்லது தொடர்பில்லாத விசயங்கள் ஊடகங்களின் பிரச்சார காரணங்களுக்காகப் பெரிதுபடுத்தப்படுகின்றன. அதனால் முக்கிய விவகாரங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். சாய்நாத் எழுதியதில் பாதி அவ்வகையில் வரும். நம்மாழ்வார் சொன்னதும் எந்த பிரச்சினையையும் தீர்க்காது; வர்ணாசிரம அமைப்பு முறைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதை நீட்டி முழக்கி பாரம்பரியம், இயற்கை என்று சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்தர் ஷர்மா என்பவரை உணவுக் கொள்கைகள் ஆராய்ச்சியாளர் என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறார்கள்; எட்டாம் வகுப்பு மாணவனின் வயதுக்கான IQ இருந்தாலே அவர் சொல்லும் எல்லாம் கதைகள் என்று புரியும்.

இந்தியா மாதிரி அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாத மக்கள்தொகை கொண்ட நாட்டில் அரசாங்கம் ஒரே நேரத்தில் pro-producer, pro-consumer ஆக நடந்துகொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நீக்கமற பின்னிப் பிணைந்திருக்கும் ஜாதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஜாதிகளின் வாழ்விடமான கிராமங்களின் தொழிலான விவசாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஜாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதிலும், இணக்கமான சூழ்நிலையையும் வைத்திருக்க முயற்சி செய்யும் மாநிலங்கள் மட்டுமே ஓரளவுக்கு விவசாயத்துறையை சீரமைக்க இயலும். மாடுகள் விவசாயத் தொழிலின் ஓர் அங்கம். அதை வளர்ப்பதும், விற்பதும் இயல்பானது. வளர்ப்பவன் புனிதமானவனாகவும், அவனுக்கு தேவையில்லாதவற்றை dispose செய்யும்போதும் புனிதமானவனாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றை வாங்கிச்செல்பவன் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் இடத்தில் சமநிலை எப்படி வரும்? மாடுகளை Dispose செய்யவே கூடாது என்றால் வேளாண்மையின் பொருளாதாரச் சங்கிலி என்ற ஒன்று அறுந்துவிடும் என்ற அடிப்படையே தெரியாத நம்மாழ்வார் போன்றவர்கள் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊரில் ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயத்தை உதாரணம் மட்டுமே காட்ட முடியும்.

ஆகவே, வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து நட்டம் ஏற்படாமல் விவசாயிகளைக் காப்பாற்றும் என்பதெல்லாம் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்

கோயமுத்தூரில் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை பிரான்சு நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.

அவ்வளவுதான், இனிமேல் அந்தக் கம்பெனி சொன்ன விலைக்குத்தான் தண்ணீர் வாங்கிக் குடிக்கவேண்டும், வீட்டில் போர்வெல் தண்ணியைக்கூட பயன்படுத்த முடியாது, மழைநீரை சேகரித்து வைத்திருந்தாலும் அந்த கம்பெனிக்காரன் காசு கேட்பான், கோவையின் குளங்களெல்லாம் CSR Fund மூலமாக பிரிக்கால் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, சுடுகாடெல்லாம் ஈஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது, பொலிவியா நாட்டில் சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்கலை எடுத்த பிறகுதான் உள்நாட்டுப் போரே மூண்டது என ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் கட்டுரை எழுத, உடனே பலரும் ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகள் துப்பாக்கிகளோடு திறந்த ஜீப்புகளில் செல்லும் காட்சிகளை கோயமுத்தூர் வீதிகளில் கற்பனை செய்துகொண்டு களமாடினார்கள். இப்படியெல்லாம் எழுதினால்தானே சுற்றுச்சூழல் ஆர்வலராக முடியும்! யதார்த்தத்திற்கு அருகில் போகும்போது ஏழை, பணக்காரன், ஆண்ட சாதி, அடிமைச் சாதி என்றெல்லாம் வந்துவிடுகிறது; இது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருப்பதால் சுகமாக இருக்கும்படி ஒரு சைடு வாதத்தை மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் ஏழைகளுக்குத் தண்ணீர் கிடைக்காது, காசு கொடுப்பவனுக்குக் கூடுதல் நீர் கிடைக்கும், பணக்காரன் வீட்டில் புல்தரைக்குக் கிட்டும் தண்ணீர் ஏழைக்குக் குடிக்க இருக்காது, கார்ப்பரேட் கம்பெனிக்கு அள்ளித்தருவார்கள், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதா, Welfare state-னா என்னான்னு தெரியுமா என்று எத்தனை விதமான விவாதங்கள்! 2017-இல் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வறட்சி. குடிதண்ணீர் வழங்க அணையில் தண்ணீர் இல்லை; அணைக்குள் ஆள்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. ரேஸ் கோர்ஸ் குடிமக்களுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் புலியகுளத்து குடிமக்களுக்கு இருபது நளைக்கு ஒருமுறை தண்ணீர்; அங்கிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாப்பாநாயக்கன்பாளையத்து குடிமக்களுக்கு மாதக்கணக்கில் தண்ணீரே வரவில்லை. லாரியில் பெயரளவுக்கு ஊற்றிவிட்டுப் போனார்கள். ஆமாம், ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஏழைபாழைகள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள், பாவம்! அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் நினைவுக்கு வருகிறது. ஒருசாராருக்கு வாழ்க்கையில் பாதுகாப்பாக எல்லாம் கிட்டிவிடும்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது மட்டுமே வாழ்க்கையின் பெருந்துயரமாகத் தெரியும்.

ஏழைகள், விளிம்புநிலை மனிதர்கள் குடிநீருக்குத் தடுமாறுவார்களாம். கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் எளிய மனிதர்களைச் சுரண்டுகிறதாம். உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்காக டோபிகானா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை (தற்போது பட்டா வைத்திருக்கிறார்கள்) காலிசெய்ய 15 நாள் அவகாசம் வழங்கியிருக்கிறது மாநகராட்சி; மலுமிச்சம்பட்டியில் குடிசைமாற்று வாரிய வீடுகள் தரப்பட்டிருக்கின்றன. உக்கடம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் ஜஸ்ட் 20 கிலோமீட்டர் தள்ளி கீரநத்தத்தில் வீடு வழங்கியிக்கிறார்கள். ஆங், அப்புறம் விளிம்புநிலை மனிதர்களின் வேலைவாய்ப்பு? அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் பருத்தி, மக்காச்சோளம், கொண்டைக்கடலை விளையும் அற்புதமான கரிசல்மண் பூமியில் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வானுயர வீற்றிருக்கும் Cognizant, Bosch, Ford போன்ற மென்பொருள் நிறுவனங்களில் ஹவுஸ்கீப்பிங், செக்யூரிட்டி, டேக்சி ஓட்டுனர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற வேலைகளுக்குச் சென்றுவிடலாம். மென்பொருள் பொறியாளர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டுகளுக்கு வேலைக்காரம்மா, ஆயாம்மா போன்ற வேலைகளுக்குச் செல்வதன் மூலம் அவர்கள் அலுவலக cab-இல் அரை கிலோமீட்டர் பயணித்து வேலைக்குச் செல்கையில் ‘துடைத்தெரியப்படும் எளிய மக்கள்’ என்றெல்லாம் பேஸ்புக் பதிவு போட்டு உலகத்திற்கு புரிய வைப்பார்கள். அந்தப்பக்கம் ஜக்கி வாசுதேவன் என்றால் இந்தப்பக்கம் ஐ.டி. கம்பெனிகள். யார் எடுக்கிறார்கள் என்று தண்ணீருக்குத் தெரியவா போகிறது? எல்லோருமே ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றுபேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், ஏழைகளை ஏழைகளாகவே பாதுகாக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு வாய்ப்புகளோ, ஓய்வுநேரமோ, உபரி வருமானத்திற்கு வழிகளோ வந்துவிடக்கூடாது.

தற்போது கோவை மாநகராட்சி 1000 லிட்டர் தண்ணீரை 4.50 ரூபாய்க்கு வீடுகளுக்கு வழங்குகிறது. லிட்டருக்கு ஒரு பைசா கூட இல்லை. உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து நஞ்சப்பா சாலை, காட்டூர் பகுதியில் மட்டும் 1000 கடைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். ஒரு கடைக்கு நாளொன்றுக்கு ஒரு தண்ணீர் கேன் 40 ரூபாய் விலையில் என்று வைத்துக்கொண்டால்கூட 40000 ரூபாவை 20000 லிட்டர் தண்ணீருக்காக கடைக்காரர்கள் செலவிடுகிறார்கள். முறையாக விநியோகிக்கப்படும்பட்சத்தில் இந்த இருபதாயிரம் லிட்டர் குடிநீருக்கு மாநகராட்சி வாங்குவதோ வெறும் 90 ரூபாயாகத்தானே இருக்கும்?

மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரைத் தனியார்வசம் வழங்குவது தற்சார்பைக் குலைத்துவிடுமாம். இன்று குடிநீரை வழங்குவதற்கு காசு கேட்பவர்கள் நாளை கழிவுநீரை வெளியேற்றவும் காசு கேட்பார்களாம். ஆயிரம் அடிக்கு துளையிட்டு பிவிசி குழாயில் கட்டடத்தின் மேலே சைன்டிஃபிக் வாஸ்து சொன்னபடி தென்மேற்கு மூலையிலிருக்கும் சின்டெக்ஸ் தொட்டிக்கு ஏற்றி வெஸ்டர்ன் வாட்டர் குளோசெட்டில் உட்கார்ந்து அலசிவிடுவதை பாதாள சாக்கடையின் வாயிலாக பாதுகாப்பாக எடுத்துச்சென்று சூலூருக்கு அந்தப்பக்கமாக நொய்யலில் கலந்துவிட்டு அங்குள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்வது தற்சார்பு என்பதில் எந்த அத்தியாயத்தில் வரும்? ஆர். எஸ். புரத்திலும், சிங்காநல்லூரிலும், கவுண்டம்பாளையத்திலும் இருப்பவர்களுக்கு பாதாள சாக்கடை வசதிகளாவது இருக்கிறது. காளப்பட்டிக்கு அருகில், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகில் புதிதாக முளைத்திருக்கும் நகர்களுக்கு அடிப்படை சாக்கடை வசதியே இல்லை; குளியலறை, சமையலறைக் கழிவுநீரை ஒவ்வொரு வீட்டிலும் choke pit அமைத்து அங்கேயே நிலத்துக்குள் செலுத்தி அதையே திரும்ப எடுத்து பயன்படுத்துபவர்களும் அதே வரியைத்தானே செலுத்துகிறார்கள்?

சொல்லப்போனால் கோயமுத்தூரின் 90% வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி பெயரளவில்கூட இல்லை. கான்கிரீட்டால் மூடப்பட்ட நகரில் மழை பெய்தால் ஒருமணிநேரத்தில் வடிந்து விடும். நிலத்தடி நீர் recharge ஆனால்தானே நீர்மட்டம் உயரும். Glossy லுக் குறையாமல், சிறுசிறு திவலைப் படலங்கள் இல்லாமல் இருக்க பில்லூர்/சிறுவாணி அணையின் நீரில் கோவை நகர எல்லைக்குள் கழுவப்படும் ஒவ்வொரு ஃபார்ச்சூனர், பென்ஸ் கார்களுக்கும் பவானி ஆற்றின் கடைமடையில் இருக்கும் விவசாயி வருடம் கொஞ்சமாக முதலீடு செய்து குறைந்த மகசூலில் நிறைய சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்களுக்கு மாறவேண்டும். (இஃதெல்லாம் Participatory Irrigation Management- இல் வருகிறது. அதைத் தனியாக ஒருநாள் பர்ப்போம்).

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அரசாங்கம் மானியம் தருகிறது. ஆயிரம் யூனிட் பயன்படுத்துபவர்கள் தங்களது கட்டண விகிதம் மொத்தமாக மாறுகிறது என்பதற்காக மாதாமாதம் கணக்கெடுக்க வேண்டும் என்கிறார்கள், டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பங்களுக்கு வரிக் குறைப்பு அல்லது மானியம் வேண்டும் என்றெல்லாம் என்னென்னவோ சொல்லி லாபி செய்கிறார்கள். இந்த பணக்காரப் பிச்சைக்காரன்கள் இதையெல்லாம் நாளேடுகளில் எழுதி அதை புத்திசாலித்தனம் என்று நிறுவுகிறார்கள். இன்று பல வீடுகளில் தொட்டி நிறைந்து சாலைகளில் ஓடி சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி நீர். அட விடுப்பா,போனா போகட்டும் என்கிறார்கள்; அதை மூடுவதற்கு ஒரு கேட்வால்வு கூட பல வீடுகளில் இருப்பதில்லை. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் வீதம் கணக்கிட்டு மிகக்குறைந்த கட்டணமோ அல்லது இலவசமாகவோ வழங்கிவிட்டு மீதிக்கு மின்சார வாரியம் மாதிரி Slab rate போட்டு இழுத்தால் தண்ணீர் தட்டுப்பாடே வராது. மீதமிருக்கும் நீர் ஆற்றிலாவது ஓடிக்கொண்டிருக்கும். இன்றுதான் ஆதார் கார்டு, Big data, Artificial Intelligence என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கிறதே.

கார்ப்பரேட் கம்பெனியான சூயஸ், இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு ஏழைபாழைகளை நசுக்குமாம். ஆனால் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், கோவில்கள் போன்றவற்றிற்கு Bulk connection என்றபெயரில் இருக்கும் இணைப்புகளுக்கு இந்த டெண்டரில் இடமே இல்லை. பல்க் கனெக்‌ஷன் எல்லாமே கோவை மாநகராட்சி தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்ப சரி, மாநகராட்சி வசம் இருக்கிறது என்றால் அதில் ஊழல், குளறுபடி, லாபி என எதுவுமே இருக்காது என்றால் நம்பமாட்டார்கள் அஃதெப்படி, அரசாங்கம் எதையாவது உருப்படியாக நடத்தியிருக்கிறதா என்ற கேள்வி எக்கி நிற்கிறது.

2045-இல் கோவை நகர மக்கள்தொகையை கணக்கிட்டு 24 மணிநேரமும் தண்ணீர் வழங்கும்படியாக ஆயிரத்து சொச்சம் கோடிகளில் ஆங்கிலேயர் காலத்துக் குழாய்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அனைத்து இணைப்புகளிலும் மீட்டர் பொறுத்தி GIS மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் இந்த திட்டம், அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் என்றபெயரில் ஏற்படவிருந்த சுற்றுச்சூழல் சீ்ரழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவையும் வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும்போது மீட்டரில் காட்டும் அளவையும் ஒப்பிடும்போது 20% நீரைக் காணவில்லை என்று மாநகராட்சியே ஓப்புக்கொள்கிறது. மீட்டர் இல்லாமல், மாநகராட்சிக்கே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் திருட்டு இணைப்புகள் தெருவுக்கு இரண்டு இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

அறுபது வார்டுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் மாநகராட்சில் தீர்மானம் போடப்பட்டு கெஜட்டில் வெளியிடப்படும் விலைதான் மக்களிடம் சூயஸ் நிறுவனத்தால் வசூலிக்க முடியும். GIS மூலம் இணையத்தில் பிணைக்கப்படும் பயனர் விவரம் மூலம் தண்ணீர் பயன்பாடு குறித்த அனைத்து விவரங்களையும் ஒளிவுமறைவில்லாமல் பார்க்கமுடியும் எனபதோடு, கட்டணம் செலுத்துதல், புகார்கள் என அனைத்தும் டிஜிட்டலாகும்.

ஒருசாரார் அணைகள் எல்லாம் அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கதை விடுகிறார்கள். அணைகளில் நீர் எடுக்கும் தொட்டிகள், மின் எக்கிகள் (electric motors), குழாய்கள் போன்றவற்றின் பராமரிப்பு மட்டுமே அந்த நிறுவனத்தின் scope-இல் வருகிறது. அணைகளை அந்த நிறுவனம் எடுத்துப் பராமரிக்கும் எனபது கேட்பதற்கே முட்டாள்தனமாக இருக்கிறது.

ஏதோ இத்திட்டம் இரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாகவும் கதை உலவுகிறது. 2008-இல் திட்டமிடப்பட்டு, பலகட்ட ஆய்வுகள், விசாரணைகள், detailed project report என படிப்படியாக வளர்ந்து ஓப்பன் டெண்டருக்கு வந்துள்ளது. 500 கோடிக்கு மேல் டெண்டர் என்றால் சர்வதேச அளவிலான குளோபல் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது விதிமுறை. நீர் மேலாண்மையில் முறையான அனுபவமுடைய பிரான்சு நிறுவனம் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரி எடுத்திருக்கிறது. ஏப்ரல் மாதம் கம்பெனி பதிவுசெய்து ஜூன் மாதம் 15000 கோடிக்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத, மோடியின் நண்பரான அம்பானியின் கம்பெனிக்கு அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை பின்னுக்குத் தள்ளி டெண்டர் கிடைத்தபோது கமுக்கமாக இருந்த தேசபக்தர்கள் இப்போது குதிப்பதில் ஆச்சரியமில்லை.

மேற்கு மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்சினை திமுகவுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன்பின்னர் அதீத விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி மின்சார வாரியத்தை திவாலுகும் நிலைமைக்கு அதிமுக அரசு கொண்டுசென்றாலும் மக்களுக்கு அதைப்பற்றி கவலை இருந்ததில்லை. சமூக நீதி, உட்கட்டமைப்புகள், சட்டப் பாதிகாப்புகள், வேலைவாய்ப்புகள் என பல கோணங்களிலும் நல்ல எழுச்சி ஏறபட்டு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையும்போது நான் நன்றாக இருந்தால் போதும் என்கிற சராசரி நடுத்தர வர்க்க மனநிலைக்கு மக்கள் திரும்பி விடுகின்றனர். போராட்ட குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. கம்யூனிசம் கோயமுத்தூரில் காணாமல் போனதே சாட்சி. குடிநீர் வரிக் கட்டணம் ஏறாதபோது தினமும் தண்ணீர் வருகிறது என்றால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அஃது அரசாங்கத்தால் செய்யப்படுகிறதா, தனியாரால் செய்யப்படுகிறதா என்று பொதுசனம் கவலைப்படாது. இந்த திட்டத்தைத் திமுக எதிர்ப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியாக இருக்கிறது.

வீடுகளில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதையும் அந்த நிறுவனம் கட்டுப்படுத்திம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் போர்வெல் அமைப்பது மாநகராட்சி சட்டதிட்டத்தின் கீழ் வருகிறது. அந்நிறுவனத்துக்கும், போர்வெல்லுக்கும் எதுவுமில்லை. இன்று எல்லோரும் மாநகராட்சி சட்டத்தைக் கடுகளவும் மீறாத மாதிரியும், மக்களது நேர்மையை களங்கப்படுத்துவது மாதிரியும் ரொம்பத்தான் கூவுகிறார்கள்!

லைசன்ஸ் இராஜ்ஜியத்தில் வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சமூக மதிப்பீடுகள், மாறிவரும் வியாபார சூழல்களினால் ஏற்படும் அதிர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்தகைய எதிர்ப்புகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்: மாணாக்கர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேசத் தரத்திலான சஞ்சிகைகளில் வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் நிர்வாக சீர்திருத்தத்தை மேலிருந்து தொடங்கவேண்டும்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரது ஓய்வுபெறும் வயது 70 என நிர்ணயித்து திருத்தம் வெளியிடப்பட்டிருப்பது மிக விரிவான ஊழல்களுக்கு கால்கோள்விழா நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓய்வுபெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டியவர்களை அழைத்துவந்து நிர்வாகத்தை நடத்துவதற்கு விடுவது தற்போது பணியிலிருப்பவர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகும். என்னவோ இவர்களை விட்டால் பணியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தை நடத்தவே தெரியாத மாதிரியும், ஆராய்ச்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆளே இல்லாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்பது மாதிரியும் பில்டப் கொடுத்து வாழும் வாஸ்கோடகாமாவே, நடமாடும் ஐன்ஸ்டைனே என்று புகழ்மாலை பாடுவதுற்கு ஒரு கூட்டம் இருப்பதும் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு சொம்புகலைக்கழகமாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

பணி ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சிகளைத் தொடரும் பேராசிரியர்களுக்குப் பல்கலையில் இடமும் ஆய்வகமும் வழங்குவது உலகெங்கிலும் நடைமுறையில் உண்டு. பல பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பின் பல்கலையைவிட்டு வெளியேறி தத்தம் துறைகளில் ஆலோசகர்களாகவோ, நிறுவனங்களில் அதிகாரிகளாகவோ, தனியார் கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களாகவோ, தனியாக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்யவதோ உண்டு. அவர்களெல்லாம் உண்மையில் வணங்கத் தக்கவர்கள்.

சில பேராசிரியர்கள் ஏதாவது மந்திரிமார்கள், ஆட்சியாளர்கள் காலில் விழுந்து பணி நீட்டிப்பு வாங்குவதோடு துணைவேந்தர் பதவி வாங்கி வந்து உட்கார்ந்துகொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. போதாக்குறைக்கு அண்டை மாதிலங்களில் ஆள்பிடித்து வந்து துணைவேந்தனாக்கும் அவல நிலைக்கு அண்ணா பல்கலை வந்தமாதிரி தநாவேப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓய்வுபெற்று பல்கலையை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கிவிடும்போது அவர்களுக்கான accountability என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போகிறது. அவர்கள் போட்ட காசை எடுப்பதிலும், பதவிக்காலம் முடிவதற்குள் பை நிறைய சில்லறைகளைத் தேற்றிவிடலாம் என கண்ணில் பட்டவைகளையெல்லாம் விலைபேசி விற்கும் அவலமும் நடப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ, அரசாங்கப் பதவிகளிலோ இல்லாத ஊழல் குற்றவாளிகளைக் கண்டு கைகட்டி நின்று ‘பதவில இருக்கனும்னா இப்படிலாம் நக்கித்தான் ஆகனும்’ என்று மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். அண்மையில் இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தன் ஒரு துணைவேந்தன்கள் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டுபோய் ஊழல் குற்றவாளி சசிகலாவைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தநாவேப சர்வதேச தரத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சர்வதேசத் தரத்திலான நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண், பெண் பாலின பேதமில்லாத வளாகம் உருவாகவேண்டும் என கொள்கை முடிவுகளை எடுத்து 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆய்வகங்களோடு முதுநிலை, ஆராய்ச்சி மாணவிகள் 24 மணிநேரமும் சென்றுவரும்வண்ணம் விடுதிகள் நிர்வகிக்கப்பட்டதும் இதே வேளாண் பல்கலையில்தான். தமிழகத்திலேயே 24 மணிநேரமும் ஆராய்ச்சிகளுக்காகத் திறந்திருந்த ஒரே பல்கலைக்கழகமாக ஒருகாலத்தில் இருந்தது.

இன்று தாவரவியல் பூங்காவுக்கு ஜோடியாக வருபவர்கள் திருமணச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நவீன இந்துத்வா கும்பலின் கூடாரமாக மாறியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் இயற்கை விவசாயம் என படம் காட்டிவிட்டு மறுபக்கம் எட்டாம்கிளாஸ் படித்தவர்களெல்லாம் பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கொண்டுவந்த தடைச்சட்டத்துக்கு ஓட்டை ஏற்படுத்தும்விதமாக ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி நுகர்வோருக்கோ, விவசாயிகளுக்கோ, விவசாயப் பட்டதாரிகளுக்கோ எந்த பலனையும் தராத, காசு கொடுத்தால் எதை வேண்டுமானலும் செய்து தருகின்ற போலி ஆராய்ச்சி நிலையமாக மாறியதும் ஓய்வுபெற்ற துணைவேந்தன்களாலேயே நடந்து வருகிறது.

பல பாராட்டுகளையும், முன்னெடுப்புகளையும் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற பல்வேறு சான்றுகளையும் உடைய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ICAR இரத்து செய்தது மிகவும் கேவலமான ஒரு நிகழ்வாகும். அங்கீகாரம் இரத்தாகும் அளவுக்கு போர்டு நட்டு அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்குக் காரணம் எந்த accountability-யும் இல்லாத ஓய்வுபெற்ற நபர்களைத் துணைவேந்தன் என நியமிக்கும் அரசியல் போக்கும் அதற்கு துணைபோகும் ஆசிரியர் சங்கங்களுமே இதற்கு காரணமாகும். தற்போது 70 வயதுவரை துணைவேந்தன் பதவி என சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது மிகவும் அபாயகரமான சீரழிவின் ஆரம்பமுமாகும்.

தநாவேப உருப்பட வேண்டும் எனில் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு பதவிக்காலத்திலேயே துணைவேந்தர், முதல்வர், பதிவளர் போன்ற பதவிகள் கொடுக்கப்படவேண்டும். ஓய்வுபெற்ற பின் துணைவேந்தன் பதவி “வாங்கி” வந்து சில்லறைகளைத் தேற்றி சொத்து சேர்க்க முயற்சிக்கும் அல்ப கேஸ்களை தவிர்த்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும். அப்போதுதான் திறமைக்கு மதிப்பு கிடைப்பதோடு உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு, நிர்வாகத் திறமையுடைய பேராசிரியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதுடன் மாணாக்கர்களின் தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என விவசாயிகளுக்கும் பலன் ஏற்படுவதோடு ஆண்டுக்கு நூறு கோடி அளவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்படும். அப்போதுதான் உதவிப் பேராசிரியர் பதவியில் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை ஏற்படும்; எங்குமே வெளியில் சென்று பிழைக்க வழிதெரியாதவர்களெல்லாம் உதவிப் பேராசிரியராகி விடுகின்றனர் என்ற அவச்சொல்லும் நீங்கும்.

ஏனெனில் ஆராய்ச்சியிலோ, நிர்வாகத்திறமையோ இல்லாமல் ஓய்வுபெற்றபின் துணைவேந்தன் ஆனவர்களும் அவர்களது சொம்புகளும் ”இன்னிக்கு வர்ற பசங்களுக்கு ஒரு மண்ணும் தெரியறதில்லப்பா. எப்படித்தான் படிச்சு பாஸ் பண்ணித் தொலைச்சிட்டு வர்றானுங்களோ. இந்த கூமுட்டைங்கள வச்சிகிட்டு எப்படி நாங்க ரிசர்ச் புரோகிராம் நடத்தறதுன்னே தெரியல. அந்த காலத்துல நாங்கள்லாம் படிச்சப்போ பாத்தீங்கன்னா…” என்று இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், நடுவயதில் இருக்கும் பேராசிரியர்கள் கூட்டத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி பிரச்சாரம் செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பிரச்சார யுக்திகளை நம்பும் மாணாக்கர் கூட்டம் தவறான முன்னுதாரணங்களால் கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, வர்த்தகம் என எதிலுமே ஒரு நிறைவான ஆளுமையாக மாறாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு சதி என வாட்சப் பார்வர்டுகளில் அரசியல் பயிலுகின்றனர்.

ஆகவே, தநாவேப முன்னோக்கிச் செல்லவேண்டும் எனில் ஓய்வுபெற்ற பின் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கும் நபர்களையெல்லாம் பெரிய ஆளுமை என்று நம்பும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கு ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் அமைப்பே இதற்கான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அல்லது அதை கலைத்துவிட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்.