Zoom டிடர்ஜென்ட் பவுடர் – Purple Cow மார்க்கெட்டிங் – Zoom மீட்டிங்

Zoom டிடர்ஜென்ட் பவுடர்.

Purple Cow என்று ஒரு மார்க்கெட்டிங் தொடர்பான புத்தகத்தை Seth Godins எழுதியிருக்கிறார். மேற்குலகின் குறிப்பிடத்தக்க மார்க்கெட்டிங் ஜீனியஸ்களுள் ஒருவர்.

ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் பண்ணையில் ஒருமுறை சுற்றி வந்துவிட்டாலே அலுப்புத் தட்டிவிடும். மறுபடியும் வெவ்வேறு வகையான மாட்டினங்கள் இருக்கும் பண்ணையில் சுற்றினாலும் எல்லாமே மாடுதானே என்று ஒருவித சலிப்பு வந்துவிடும். ஆனால் ஊதா நிறத்தில் ஒரு மாட்டைப் பார்த்தால் அஃது என்ன புதிதாக இருக்கிறது என்று ஆர்வத்துடன் அதைப் பார்வையிடுவோம், பால் வாங்கக்கூட முயல்வோம் அல்லவா? அந்த மாதிரி, வாடிக்கையாளர்களுக்குப் புதிய ஒன்றை அலுப்பூட்டாதவண்ணம் தர வேண்டும் என்பதையும் அமெரிக்காவின் ஏகப்பட்ட ஊதா மாடு மார்க்கெட்டிங் உதாரணங்களையும், அதன் வெற்றி தோல்விகளை அலசுகிறார்.

நம்மூர் சந்தையிலும் பலதரப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். கும்பகோணம் டிகிரி பில்டர் காபி என்று சில வருடங்களுக்கு முன்னர் பிரபலமான காப்பிக்கடை இருந்தது. மேற்கு மாவட்டங்களில் பேக்கரி ஆரம்பிக்கவே 20 இலட்சம் முதலீடு செய்வார்கள். இவை எல்லாமே ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பது வழக்கம். கோவையில் பேக்கரி என்றும் திண்டுக்கல்லில் ரிலாக்ஸ் என்றும் சேலத்தில் காபி பார் என்றும் பெயரிட்டிருப்பார்கள். சுவையும் பெரும்பாலும் ஒரே மாதிரியே இருக்கும். தொழிலில் எவ்வித புதிய அணுகுமுறையும் இருக்காது.

அப்போது டிகிரி பில்டர் காபி என்ற பெயரில் செப்பு டம்ளரில் காபி போட்டுக்கொடுத்த கும்பகோணம் டிகிரி பில்டர் காபி கடைகள் பிரபலம் ஆனது. பலர் ஃபிரான்ச்சைசீ எடுத்தார்கள். (அந்தக் கடைகளின் ஊதா நிறத்துக்கும், Purple Cow புத்தகத்துக்கும் தொடர்பில்லை). ஒரே வருடத்தில் பல கடைகள் மூடப்பட்டன. காரணம், டிகிரி காபி என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். வாயில் வைக்க முடியாத மொக்கையான சுவை. ஆனால் பழைய டீகபடை மாடல் பேக்கரிகள் அப்படியேதான் இருக்கின்றன; புதிய பேக்கரிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

பெயரை மாற்றுவது, பெயிண்ட்டை மாற்றுவது, பெயர்ப் பலகையை மாற்றுவது போன்றவை ஒருபோதும் innovation என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஒரு business layer-ஐ உண்டாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். அதில் ஆரம்பத்தில் இருந்து இருந்தவர்கள் தாக்குப்பிடிப்பதோடு அது என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்பதையும் அறிவார்கள். அதற்கு பல்கலைக்கழக படிப்பெல்லாம் தேவையில்லை. அதில் frugal management இருக்கும்வரை மட்டுமே இலாபகரமான தொழில். ஏகப்பட்ட அடுக்கு நிர்வாகம் உள்ளே நுழையும்போது அதன் திறன் குறைவதோடு organic growth என்பது அப்படியே நிற்க ஆரம்பிக்கும். அதை சரிகட்ட கிடைப்பதையெல்லாம் வாங்கிப்போடுவது, தள்ளுபடி விற்பனை என ‘எண் விளையாட்டுகள்’ ஆரம்பமாகும்.

கும்பகோணம், மாயவரம் ஊரகப் பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு கரூர், நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர கிராமங்களே சந்தை. உள்ளூர் உற்பத்தி போதாத காரணத்தால் அங்கிருந்து வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இரு மாவட்டங்களில் மட்டும் வாரத்துக்கு ஒரு இலட்சம் வாத்துகளுக்கு மேல் விற்பனையாகிறது. இதன் மதிப்பு தோராயமாக 2.5 கோடி. இதில் எந்த பிராண்டும் கிடையாது. எல்லாமே சாலையோர கறிக்கடைகள், வறுவல் உணவகங்கள் மூலமே விற்பனை. வாத்து முட்டை பற்றாக்குறை காரணமாக ஆந்திரா நெல்லூரில் இருந்து பேருந்துகளில் வருகிறது. நான்கு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்கும் தொழில். இதிலும் பிராண்டு எதுவும் கிடையாது. தனிநபர்களின் வார்த்தைகள் வழியாகவே வியாபாரம்.

ஒருகாலத்தில் கவுச்சி அடிக்கிறது என்று நாமக்கல், கரூர் பகுதிகளில் வாத்துக்கறியை யாரும் சாப்பிட மாட்டார்கள். இன்று வாரம் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை என்கிற நிலை வர கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆட்டுக்கறி விலையேற்றமும் இதன் வளர்ச்சிக்கு ஒரு மறைமுக காரணம். ஒரு புதிய இறைச்சி சுவை வியாபாரம் அதாவது ஒரு business layer உருவாக தேவைப்பட்ட காலத்தை நாம் நவீன வியாபார பாடங்களில் அளப்பதே இல்லை.

ஓரளவுக்குப் பெரிய கறிக்கடைகளில் வாத்தின் இறக்கையில் உள்ள பெரிய இறகுகளைத் தனியாகப் பிடுங்கி சேகரித்து வைத்து கிலோ 2000 ரூபாய்க்கு சில முகவர்களிடம் விற்கிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவையே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெள்ளைச் சாயமிடப்பட்ட இறகுப்பந்து பூவாக (shuttle cock) வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வளவு பேர் இறகுப்பந்தாட்ட மட்டையை முதுகில் மாட்டிக்கொண்டு காலையில் விளையாடப் போனார்கள், இன்று எவ்வளவு பேர் போகிறார்கள் என்பதை வைத்து அந்த சந்தையின் வளர்ச்சியையும் அளவிடலாம்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பல புதிய தக்காளி இரகங்களை ஒரு தோட்டத்தில் நடவு செய்துவிட்டு வாரம் ஒருநாள் அங்கு செல்வது, மதியம் சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதியில் சுற்றுவதுமாக இருந்தோம். அந்த தோட்டத்திற்கு அடுத்து ஒரு அட்டை போடப்பட்ட கட்டிடம். உள்ளே என்ன தயாரிக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு லாரியில் வரும் திரவத்தை கேன்களில் பிடித்து வைத்து சோப் பவுடராக்கி பொட்டலம் போட்டு பெட்டியில் அடைத்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

புதுகோட்டை அருகே ஒருநாள் மக்காச்சோளம் விதைப்புக்குச் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை அருகே கீற்றுச் சாமியார் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லக்கூடிய சித்தர், அவரைப் பார்க்காமல் திரும்பக்கூடாது என்று ஒரு நண்பர் அழைத்துச் சென்றார். அந்த சித்தர் Zoom டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தியே ஆடைகளை வெளுக்கிறார் என்பதைப் பார்த்தபோது அந்த மார்க்கெட்டிங் சேனல் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிந்தது.

இன்று தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடக விளம்பரம் இல்லாமல் சோப்பு, வாசிங் பவுடர்களை விற்க எம்பிஏ படித்த மேனேஜர்களால் முடியாது. இன்று இருக்கும் பிரபல பிராண்டுகள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டுகளால் தூக்கி நிறுத்தப்பட்டவையே. ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லாமல் ஜூம் டிடர்ஜென்ட் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்கள் நம்மிடையே கோடிகளில் விற்கின்றன.

இந்த விற்பனைச் சங்கிலியை அவ்வளவு எளிதாக Merger & Acquisition மூலமாகப் பெற்றுவிட முடியாது. Zoom பவுடர் போனால் யாராவது Doom டிடர்ஜென்ட் பவுடர் என்று கொண்டுவருவார்கள்.

மாதம் பத்து கோடிக்கு இரண்டு மாவட்டங்களில் வாத்துக்கறி விற்கிறது என்பதற்காக ஒரு பெரிய நிறுவனம் நுழைந்து சந்தையைக் கைப்பற்ற நினைக்கிறது என்றால் அதற்கு கீழே ஒரு business layer உண்டாகும். அதுவும் பெரும்பாலும் பார்வைக்கே தெரியாத ஒன்றாகவே இருக்கும். வெண்பன்றிக்கறி வியாபாரமும் அப்படித்தான். இதில் தனிநபர்களின் பெயர்களே பிராண்டு. எத்தனை கோடி வியாபாரம் என்பது அரசாங்கத்தின், வங்கிகளின் எந்த ஒரு measurable கணக்கிலும் கொண்டுவரவே முடியாது.

கடந்த இரண்டு வருடங்களில் முலாம்பழம் ஆண்டு முழுவதும் சாலையோரக் கடைகளில்கூடக் கிடைக்கிறது. கோடை காலத்திக்கான ஒரு பழம் எப்படி ஆண்டு முழுவதும் கிடைக்கிறது, யார் பயிரிட்டு விற்பனைக்கு அனுப்புகிறார்கள், விதை எங்கிருந்து வருகிறது என்று யோசித்திருக்கிறோமா?

கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றபோது பெரிய அதிர்வுகள் ஏதும் வரவில்லை. ஆனால் வால்மார்ட் இந்தியாவில் கடை போடுகிறது என்றதும் லபோதிபோவென குதித்தவர்கள் பலர் (ஆனால் அவர்கள் IKEA கடையை சிலாகித்தது வேறு கதை. அது வேற வாய், இது வேற வாய் மொமென்ட்). ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கண்ணன் டிபார்ட்மென்ட்டல் கடையைவிட வால்மார்ட்டில் பலன் அதிகம் என்பது தெரியாததல்ல.

நாளையே சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், டி-மார்ட் கடைகளை ரிலையன்சோ, வால்மார்ட்டோ வாங்கிவிட்டாலும் அவற்றின் வாடிக்கையாளர்களிடத்தில் பெரிய அதிர்வுகள் வராது. இணையதளங்களில் புழங்கும் 50+ வயது கட்டுரையாளர்களது உலகம் வேறு.

இரவில் ஒரு கம்பியில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துவிட்டு அடியில் துணிகளைப் பரப்பி ஏலம் விட்டவர்களிடம் எடுத்துத்தான் நமது ‘ஆடையுடுத்தும் மகிழ்வான தருணங்கள்’ கிடைக்கப்பெற்றன. பகல் நேரங்களில் மிதிவண்டியில் கொண்டுவந்து துணி விற்றவர்களிடம் பாவாடை, இரவிக்கைத் துணி வாங்கிக் கட்டிய நம் முன்னோர்கள் இப்போது ஒரு ஜாக்கெட்பிட் எடுக்க டிரைவர் வைத்து இன்னோவா எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து கோயமுத்தூருக்குப் போகிறார்கள். இடைப்பட்ட காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே.

இதில் எத்தனை மாறுதல்கள் வந்தாலும், business layers தோன்றி மறைந்தாலும் வாடிக்கையாளர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொத்தாம்பொதுவான ஆலோசனை சொல்லப்பட்டாலும், நுகர்வோர் ஒன்றைக் கைவிட்டு விடுகிறார்கள் என்னும்போது அரசாங்கம் எப்படிக் காப்பாற்றும் என்பதற்கு பதிலில்லை.

Zoom மீட்டிங் என்று இப்போது எல்லா பக்கமும் நடக்கிறது. காணொளி மீட்டிங் செயலி என்பது இன்று எல்லா மென்பொருள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு default option-ஆகத் தருகிறது. நம்மூர் Zoho உட்பட கூகுள் வரைக்கும் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் செயலி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype for Business என்பதை பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் மென்பொருள் பேக்கஜில் சேர்த்தே கொடுக்கிறது. இருப்பினும் பல நிறுவனங்கள் Zoom நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி மீட்டிங் நடத்த இடவசதி பெற்றிருக்கின்றன.

ஆர்குட் போய் பேஸ்புக் வந்தது. ஐயகோ ஆர்குட் போய்விட்டதே, அங்கிருந்து மென்பொருள் வேலை செய்யும் ஆட்கள் என்ன ஆவார்கள் என்று வாடிக்கையாளர்கள் கவலைப்படுவதில்லை. பிளாக்பெர்ரி போய் ஆப்பிள் வந்தபோதும் இதே கதைதான்.

அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்படுவது மிகவும் தட்டையான generic statement. தொழில்கள் அப்படியேதான் இருக்கும். அது செய்யப்படும் முறை, பாணி, உத்தி மட்டுமே மாறுபடும். அது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான skill set தேவை. மேலை நாட்டு வணிகப் பள்ளிகளில் சொல்லப்படும் consolidation of businesses என்பதை இங்கே பயமுறுத்தும் சொல்லாக மாற்றிவிட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், லைசன்ஸ், பெர்மிட் போன்றவற்றைத் தாண்டி தொழில்நுட்பம், business layer என்று வரும்போது தனிநபர்களின் திறமையே செல்லுபடியாகும்.

இன்றைய லாக்டவுன் காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் Zoom டிடர்ஜென்ட் பவுடர் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை Zoom மீட்டிங் app மூலமாக செய்யச்சொல்லி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுதான். நாம் என்ன மாதிரியான வியாபாரத்தில் எந்த மாதிரியான விற்பனை சங்கிலியில் இருக்கிறோம் என்பதையே புரிந்துகொள்ளாத பலர் மேலாளர்களாக இருக்கிறார்கள் என்பது பல நிறுவனங்களில் நடக்கும் Zoom meeting மூலமாகத் தெரிய வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைத் தடுப்பதைத் தவிர காற்று மாசு அளவைக் குறைப்பதில் எந்த வகையிலும் பயன்படுவதாகத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் அரளிச்செடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைக்கிறது என்பதற்கு வலுவான ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. யாராவது ஒரு அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ இராசியான வண்ணமாக, பிடித்த செடியாக இருந்திருக்கக்கூடும் என்ற அளவில் அதை முடித்துக்கொள்வோம்.

காற்றில் கார்பன் மோனாக்சைடு, தூசிகளின் அளவு அதிகரிக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது இலைகளில் உள்ள பசுங்கனிகம் (குளோரோபிளாஸ்ட்). அதிலுள்ள பச்சையம் (குளோரோஃபில்) அளவு குறையும்போது ஒளிச்சேர்க்கை குறைவதால் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் வெளியிடும் திறன் குறைகிறது.

ஒப்பீட்டளவில் காகிதப்பூ செடி அரளியைவிட காற்று மாசு அளவு கூடும்போது நன்றாக தாக்குப்பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். காகிதப்பூச்செடியை விடவும் காற்று மாசைத் தாங்கக்கூடிய செடிகள் சில உண்டு என்றாலும் அவை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல என்பதால் மேற்கொண்டு அலசத் தேவையில்லை.

அரளிச்செடியின் எந்த ஒரு பாகத்தையும் காய வைத்துக்கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவே கூடாது. தொழில்முறை சித்த மருத்துவர்கள் விதிவிலக்கு. அரளிக் குச்சிகளை வைத்து அடுப்பு எரிக்கவோ, கறி வறுக்கும்போது கிளறவோ பயன்படுத்தக்கூடாது.

நல்லவேளையாக அரளிச்செடியில் (Nerium oleander) மதுரமும், மகரந்தமும் பெரிய அளவில் கிடையாது என்பதால் தேனீக்கள் சீண்டுவதில்லை. பல தேனீ பண்ணைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன.

சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களின் அடையாள மலர் ரோடோடென்ரான் (Rhododendron). நேபாளத்தின் இமயமலை அடிவாரத்தில் பூக்கக்கூடிய அழகான மலர்கள் இவை. இந்த ரோடோடென்ரான் மலர்கள் பூத்துள்ள பகுதியில் மட்டும் தேனீ பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறார்கள். இது உலக அளவில் Mad Honey என்ற பெயரில் பிரபலமானது. இதைக் குடித்தால் சில மணி நேரங்களுக்கு மனப்பிரள்வு (Hallucination – தமிழில் என்ன பொருள்?) ஏற்படுவதால் இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கையில் ஊற்றி நக்குகிறார்கள்.

Mad Honey அப்படியொன்றும் அற்புத மருந்தெல்லாம் அல்ல. அதைக் குடித்தால் ஆண்மை பெருகிறது என்ற நம்பிக்கை காரணமாக 40+ வயது ஆண்களே இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இது ஆன்ட்ரோமீடோடாக்சின் (Andromedotoxin) வகையில் வரும்.

Mad Honey மட்டுமல்லாது அமுக்கிராங்கிழங்கு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள், புனுகுப்பூனை, மான்கொம்பு, புலியின் விதைப்பை என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் “ஆண்மையைப் பெருக்கும்” சந்தையில் உண்டு. ஷிலஜித் எடுக்கிறோம் என்றபெயரில் இமயமலையைச் சுரண்டி விற்கிறார்கள். ஆனால் சந்தையில் இருக்கும் முக்கால்வாசி ஷிலஜித் போலியானவை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அண்மையில் சித்த மருத்துவர் என்ற பெயரில் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரை டம்ளர் மோரில் இரண்டு சொட்டு ஊமத்தை இலைச்சாற்றை விட்டுக் குடித்தால் பேதி நிற்கும் என்று சொன்னதாகத் தெரியவந்தது. இந்த மாதிரியான ஆலோசனைகளை உண்மையான மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் வழங்குவது சந்தேகமே.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது வகை வகையான கொள்ளைக்கூட்டங்கள். அதில் ஊமத்தைக் கொள்ளையர்கள் என்று ஒரு வகை. வெளியூர் சென்றுவரும் வியாபாரிகள், அரண்மனை ஊழியர்கள், கோவிலுக்கு புனித யாத்திரை செல்பவர்களிடம் சாதாரண வழிப்போக்கர்கள் போலப் பழகி தண்ணீர் அல்லது பாலில் ஊமத்தை (Datura) விதைப் பொடியை கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் மயங்கியதும் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தேடித்தேடி பிடித்து தூக்கில் போட்டிருக்கின்றனர். Datura poisoning என்று கூகுலிட்டுப் பார்க்கலாம்.

ஊமத்தை இலை, விதைச் சாறு, பொடி போன்றவை மட்டுமல்ல, எருக்கு, அரளி என பலவகையான செடிகளும் மருந்துப் பொருட்கள் செய்ய உகந்தவை. ஆனால் அதற்குக் கடுமையான பயிற்சியும் அனுபவமும் தேவை. சும்மானாச்சிக்கி பேஸ்புக் பதிவில் ஊமத்தைச் சாறு குடியுங்கள், கள்ளிப்பாலை கண்ணில் இரண்டு சொட்டு விட்டால் சாலேஸ்திரம் குறையும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் போலி மருத்துவர்களே.

செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் அடையாள மலர். விடுதலைப் புலிகளின் அடையாள மலரும் இதேதான். கண்வலிக் கிழங்கு என்று சொல்வார்கள். அதன் விதை இன்று பல கோடிக்கு ஏற்றுமதியாகிறது. அதிலிருந்தும் மருந்துதான் எடுக்கிறார்கள். ஆனால் அந்த விதையை அரைத்துக் கொஞ்சம் குடித்தாலும் சாவுதான்.

இன்று எங்கு திரும்பினாலும் பாரம்பரிய அறிவு நிபுணர்கள். இவர்கள் சொல்வதெல்லாம் அதை அரைத்துக் குடி, இதை காயவைத்து சாப்பிடு, அதைப் பிழிந்து பூசு, இதை இடித்துக் கலக்கி விழுங்கு என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள். கொஞ்சம் எகிறினாலும் கிட்னி போய்விடும், அப்புறம் ஒவ்வொறு உறுப்பாக ஒத்துழையாமை செய்யும் என்கிற எச்சரிக்கை வாசகம் கூட சொல்வதில்லை. செடிகொடிகளிலிருந்து வருவதை அப்படியே கொடுத்தால் பின்விளைவுகளே இருக்காது என்று அப்படியே நம்புகிறார்கள் நம் மக்கள்.

இந்தியாவிலிருந்து சில நூறு கோடிகளுக்கு ஏற்றுமதியாகும் பல்வேறு தாவரங்கள் மருந்துப் பொருட்களாகி சில ஆயிரம் கோடி மதிப்பில் திரும்ப வருகின்றன. இங்கே அவற்றை ஆராய்ச்சி செய்வதுகூட வேண்டாம். அப்படியே reverse engineering செய்து அதே மருந்துகளை சீனா போல அப்படியே உற்பத்தி செய்யக்கூட நாம் தயாரில்லை. Ayush என்கிற ஆமை டிபார்ட்மெண்ட்க்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தைத் பத்து கம்பெனிகளுக்கு மானியமாக வழங்கினாலே பெரிய புரட்சி ஏற்பட்டுவிடும்.

Coming back to the அரளிச்செடி. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை மறைக்க ஆமணக்குச் செடியும், ஐந்தடிக்கு ஒரு பனை மரமும் நட்டு வைத்தால் நாட்டில் விளக்கெண்ணைப் புரட்சியும், வாகனங்கள் center median-த் தாண்டி வந்து விபத்து ஏற்படுவதுமாவது தடுக்கப்படும். லாரி வைத்து அரளிச்செடிகளுக்கு ஊற்றப்படும் பல இலட்சம் லிட்டர் தண்ணீருக்கும் தேவையிருக்காது.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஐஏஎஸ் என்ற பதவியும் தேவையே இல்லாமல் சும்மா அலங்காரத்துக்குத் தொங்கிக் கொண்டிருப்பவையா?

ஆளுநர் என்ற ஒரு பதவி எதற்காக இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத மாதிரி சமகாலத்துக்குப் பொருந்தாத, தேவையே இல்லாத, outdated பதவிகளில் ஐஏஎஸ் என்ற பதவியும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமல் அப்படியே இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு relevance இல்லாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

என்பதுகள் வரைக்கும் படித்த, பல்துறை ஞானம் நிறைந்த இளைஞர்கள் நிர்வாகத்திற்கு கிடைப்பது அரிதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழங்கள் பல வந்த பிறகு, இட ஒதுக்கீட்டு முறை புகுத்தப்பட்ட பிறகு சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலிருந்தும், வெவ்வேறு பின்புலங்களிலிருந்து இளைஞர்கள் நிர்வாகத்துக்கு வர ஆரம்பித்தனர்.

தொன்னூறுகளில் சந்தை திறந்துவிடப்பட்ட போதும், 2000-க்கு பிறகான ஐ.டி. புரட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று உட்கார்ந்திருக்கிறது இந்த நிர்வாக அமைப்பு முறை.

ஒரு தேர்வில் 80 மதிப்பெண் வாங்குபவருக்கும், 85 மதிப்பெண் வாங்குபவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடும் என்று நம்புகிறீர்கள்? ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு நபருடைய கடின உழைப்பு, நீதி, நேர்மை, திட்டமிடல், நேரந்தவறாமை லஜக், மொஜக், பஜக் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அவை 49%-உம், அதிர்ஷ்டம் என்பது 51%-உம் உண்டு. குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெறுவதிலும் 49% உழைப்பு, 51% அதிர்ஷ்டம் என்ற லாஜிக்-தான் வேலை செய்கிறது.

ஐந்து நேர்முகத்தேர்வுக்குச் சென்று தோற்றவர்களும் உண்டு. முதல் தேர்விலேயே வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆனவர்களும் உண்டு. ஒரே ஒரு கேள்வி சரியாக உட்கார்ந்த காரணத்தினால் ஒருவர் பத்து இருபது மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று ஐஏஎஸ் ஆகிறார் என்றால், காலத்திற்கும் அவர்தான் திறமையின் மறுவடிவம் என்று அத்தனை துறைகளுக்குமான முதன்மை அதிகாரியாகப் போடுவதுதான் நமது நிர்வாகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனம். (இந்த இடத்தில், அந்த ஒரு கேள்விக்கு சரியாக பதில் எழுத அவர் போட்ட உழைப்பு எவ்வளவு தெரியுமா என்று முட்டுக்கொடுப்பது, தான் எவ்வளவு பாசிடிவ் திங்கிங் உள்ள நபர் என்று காட்டிக்கொள்ளத்தானே அன்றி வேறில்லை).

மொத்தமுள்ள 24 பணிகளில் ஐஏஎஸ் தவிர மீதமுள்ள அனைத்தும் Speciality வகையைச் சேர்ந்தவை. காவல்துறை அதிகாரியாக, தபால்துறை அதிகாரியாக, etc என அதில் சேருபவர்கள் கடைசிவரைக்கும் அதிலேயே இருக்கின்றனர். அதனால் அந்தத் துறையின் ஆழமான ஞானத்துடன் விற்பன்னராகின்றனர்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி – படிப்பு/பயிற்சிக் காலம் முடிந்த பிறகு – வாரத்துக்கு ஒரு புதிய விஷயம்தான் கற்க முடியும். நான் தினசரி புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சும்மா கதைவிடுவது வேறு. பத்து வருடங்களில் விடுமுறை எல்லாம் போகப் பார்த்தால் (10×50=500) ஒரு நபர் 500 விஷயங்களைக் கற்றிருக்க முடியும். அவர்கள்தான் ஒரு துறையின் expert category. 15-20 வருடங்களில் அவர்கள் veteran வகையினர். சும்மா சீட்டைத் தேய்த்திருந்தாலும் கூட அந்தந்த்த் துறை சார்ந்த குறைந்தபட்ச ஞானம் வந்திருக்கும்.

ஐஏஎஸ்-ஐப் பொறுத்த வரையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு துறைகளுக்கு மாறிவிடுவதால் இந்தப் பிரிவினர் எதிலுமே எக்ஸ்பர்ட் ஆவதில்லை. Career beaureucrat என்று அழைக்கப்படும் குடிமைப் பணி அதிகாரிகளில் ஐஏஎஸ்-கள் Cocktail beaureucrat வகையினர். அதாவது எல்லாம் தெரியும் ஆனால் எதுவும் முழுமையாகவோ ஆழமாகவோ தெரியாது வகையறா.

தமிழில் இவர்களைப் புரோட்டோகால் புகுத்திகள் என்று அழைக்கலாம். புரோட்டோகால் என்பதைத் தாண்டி வேறு உலகமே கிடையாது. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று பேட்டி கொடுத்தாலும் மக்களுக்கும் இவர்களுக்கும் சுமார் பத்து மட்டங்களில் இடைவெளி பராமரிக்கப்படும். Feedback mechanism என்பது குடிமைப்பணி அதிகாரிகளுக்குக் குறிப்பாக ஐஏஎஸ் ஆபிசர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

சக அதிகாரிகளின் friendly comment-ஐக்கூட offensive எடுத்துக்கொள்ளுமளவுக்கு ‘உங்கள மாதிரி திறமையான ஆபிசர் இன்னிக்கு வரைக்கும் இங்க வந்ததே இல்ல சார்’ என்று அலுவலக சிஸ்டம் அவர்களுக்கு வெற்று கெளரவத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக அகங்காரத்தையும் புகுத்தி விடுகிறது. அப்படி ஒரு சூழலில் இருந்து பழகியவர்களால் கீழே உள்ள அதிகாரிகளோ பொதுமக்களோ ஏதாவது சொல்லிவிட்டால் தாங்கமுடியாத ஈகோ பிரச்சினை ஆகிவிடுகிறது.

இதற்குக் காரணம் முசெளரி, டேராடூன், நாக்பூர், ஐதராபாத் என அந்தந்த சர்வீஸின் பயிற்சிக் காலத்தில் Officer Like Qualities (OLQ) என்று சொல்லித் தரப்படுபவைகளை 99% அதிகாரிகள் கேடருக்கு வந்தபிறகு மறுசீராய்வு செய்வதில்லை. அதை மனப்பூர்வமாக நம்பி தங்களை ஒரு புதிய species ஆக மனதுக்குள் கற்பிதம் செய்து அதிலேயே இருந்துவிடுகின்றனர். பல்வேறு வகையான சாதி, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் உள்ள, ஏகப்பட்ட யூனியன் இரவுடித்தனத்தைக் கொண்ட Subordinate ஊழியர்கள் பட்டாளத்தை நிர்வகிக்க கடுமையான தொணியும், சற்று அதிகாரத் தோரணையும் அகங்காரப் பார்வையும் தேவைதான்.

ஆனால் அதிகப்படியான OLQ சின்ட்ரோம் காரணமாக மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், சிறிய விசயங்களைக்கூட எவ்வளவு ஆணவத்துடனும், ஈகோவுடனும் அணுகுகின்றோம் என்பதையும் அறியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

பாடத்துக்குப் பத்து மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டதற்காக ஓய்வுபெறும் வரைக்கும் எல்லாத் துறைக்கும் உயரதிகாரியாக ஐஏஎஸ் ஆபிசர்தான் இருக்கவேண்டும் என்ற புரோட்டோகால் இன்றைய காலகட்டத்துக்கு outdated. மற்ற நாடுகளில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்தத் துறையின் எக்ஸ்பர்ட் நபர்களை அழைப்பார்கள். நம் ஊரில்தான் போர்வெல்லில் குழந்தை விழுந்துவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியை அழைக்கிறார்கள். அவர் வந்து கை காட்டும் திசையில்தான் அரசு இயந்திரம் பயணிக்கும். அதிகாரம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளை வெறும் ஏவல் ஆட்களாகவே வைத்திருப்பதன் சாபக்கேடு இது.

மாநில காவல்துறை தலைமை அதிகாரியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் கீழே இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான team morale இருக்கும்? ”இந்தாளுக்கு Policing பத்தி ஒரு எழவும் தெரியாது, பத்து பேர்கிட்ட தனித்தனியா ஓப்பீனியன் கேட்டுட்டு ஒரு முடிவு பண்ணிக்குவாப்ல, மீட்டிங்ல அதே கேள்விய கேப்பாரு. இவர் ஏற்கனவே முடிவு பண்ணுனத யாராவது சொன்னா அதை சூப்பர் ஐடியான்னு சொல்லி implement பண்ணச் சொல்லுவாரு. அதே ஆதிகாலத்து மேனேஜ்மெண்ட் உத்தி. இவரால எதுவும் முடிவு பண்ண முடியலன்னா கீழ இருக்கற விவரம் தெரிஞ்ச ஆபிசரக் கூப்பிட்டு ‘துரைசிங்கம் இந்த புராஜக்ட்ல உங்களுக்கு முழு சுதந்திரம் தர்றேன், சிறப்பா முடிச்சிட்டு வாங்க’னு சொல்லிடுவாப்ல. சும்மா தெண்டத்துக்கு சம்பளம் குடுத்து எங்கள மாதிரி அஞ்சாரு பேர அல்லைக்கை வேலைக்கு நிறுத்தியிருக்காங்க” என்று மகிழுந்து ஓட்டுநர் கூட சிரிப்பார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற species-இல் நிறைய sub species மற்றும் biotype-களும் உண்டு. அதில் நேர்மையான அதிகாரிகள் என்ற sub species வகையினர் மிகவும் notorious and naughty ஆவர். விளம்பர, புகழ் மோகிகள் என்பதெல்லாம் biotype மட்டுமே. நேர்மையாக இருக்க வேண்டும், ஏமாற்றக்கூடாது, பொய் பேசக்கூடாது, வார்த்தை தவறக்கூடாது என்பதெல்லாம் குழந்தையாக இருக்கும்போதிருந்தே நமக்கெல்லாம் கற்பிக்கப்படுபவைதான். இவர்தான் என் மனைவி என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக இவர்தான் என் பத்தினி மனைவி என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? அவர் ரொம்ப நேர்மையான அதிகாரி என்றால் மற்ற அதிகாரியெல்லாம்??!!

இரண்டு ஆண்டுகள் மீன்வளத்துறை விற்பன்னர், மூன்று ஆண்டுகள் வேளாண்துறை விற்பன்னர், இரண்டு ஆண்டுகள் கதர் வாரிய விற்பன்னர், மூன்று ஆண்டுகள் கல்வியியல் துறைக்கு விற்பன்னர், மறுபடியும் இரண்டு ஆண்டுகள் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் என்று ஒரு நபர் எப்படி எல்லா துறைகளுக்கும் விற்பன்னராக இருக்க முடியும்?

ஒவ்வொரு துறையிலும் ஐஏஎஸ் ஆபிசர்கள் நிர்வாக நடைமுறைகளைக் கண்காணிக்கும் அதிகாரியாகத்தானே இருக்கிறார்கள், கீழே டெக்னிக்கல் ஆட்கள் இருக்கிறார்களே என்று தோன்றலாம். ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை நடத்துபவரையும், ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி நடத்துபவரையும் மேல்மட்டத்தில் மாற்றிப் போட்டால் நிர்வாகம் எப்படி நடக்கும்? Cross functional changes என்ற எம்பிஏ வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஒரே நிறுவனத்துக்குள் பேச வேண்டியவை. நூறு கோடி வியாபாரம் பண்ணும் வங்கிக் கிளைக்கு மேலாளராக இருப்பதும், சீட்டுக் கம்பெனி நிர்வாகியாக இருப்பதும் ஒன்றல்ல. இரண்டுமே பண நிர்வாகம் சார்ந்ததுதானே என்று பொதுமைப்படுத்த முடியாது/கூடாது.

உலகச்சந்தை நம் படுக்கையறை வரைக்கும் வந்துவிட்ட காலத்தில் இன்னமும் மாறாத விக்டோரியா மகாராணி காலத்து நிர்வாக முறையில் ஐஏஎஸ் என்பதுதான் முதலில் அகற்றப்பட வேண்டியது. இன்றைய தேவை ஒவ்வொரு துறைக்கும் ஆழமான அகலமான ஞானமுடைய நபர்கள்தான். அவர்களுக்கு நிர்வாகம் தெரியாது ஐஏஎஸ் ஆபிசர்தான் வழிகாட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இல்லாமல் எப்படி நிர்வாகம் நடக்கும் என்று அபத்தமாக கேள்வி கேட்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. புதிய நிர்வாக முறையைத் தேடினால்தானே கிடைக்கும். அப்படி ஒன்று வருவதற்கு இந்த அதிகாரிகள் குழாம் எப்போதுமே ஒப்புக்கொள்ளாது என்பதுதானே உண்மை.

நாங்க எவ்வளவு உழைக்கிறோம் தெரியுமா, எவ்வளவு பிரஷர் இருக்கு தெரியுமா, எவ்வளவு வேலைப்பளு இருக்குது தெரியுமா என்பது ஒவ்வொரு அரசு ஊழியரும் சொல்வதுதான். வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே தனியார் நிறுவனங்களில் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியவோ புரியவோ போவதில்லை. மாதத்தில் 15 நாட்கள் இந்தியா முழுவதும் இரவு விமானப் பயணங்களிலும், டேக்சியிலும் தூங்கியவாறேதான் தனியார் நிறுவன நடுமட்ட, உயர் மட்ட அதிகாரிகள் கழிக்கின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம் என்றாலும் ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கிவிட முடியாத அழுத்தம் சந்தையில் புராடக்ட் விற்கும் ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் உண்டு. இரண்டு வருடங்கள் இலாபம் காட்டவில்லையென்றால் வேலை போய்விடும் என்ற யதார்த்தமெல்லாம் மேல்மட்ட அரசு அதிகாரிகளுக்குப் புரியாது.

Peepli Live என்ற ஒரு படத்தில் ஓர் இளம் அதிகாரி ஒரு பிரச்சினையான சூழ்நிலையில் உடனடியாக முடிவெடுத்து எதையாவது செய்யத் துடிக்கையில் அவரது உயரதிகாரி எப்படி coach செய்கிறார் என்பதை அற்புதமாக அமைத்திருப்பார்கள். “இதெல்லாம் எதுக்கு நாம செஞ்சுகிட்டு, அந்த சான்மான்ட்டோ கம்பெனிக்காரன்கிட்ட குடுத்துடு, வா டீ சாப்பிடு” என்று சொல்லுவார். அதாவது எதற்குமே சுரணையில்லாத, மழுங்கிய உயிரினமாக காயடிப்பதுதான் அந்த coaching. பயிற்சி அதிகாரிகளுக்கு முசெளரி அகாடமியிலேயே இந்தப் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்களாம்!

Indian Forest Service என்று தனியாக ஒரு தேர்வில் உயிரியல் பின்புலமுடையவர்களை மூன்றாண்டுகள் பயிற்சி அளித்து வனத்துறை உயரதிகாரிகளாக இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். கேடருக்குச் சென்ற அதிகாரிகள் எப்படியாவது காக்கா பிடித்து சொந்த மாநிலத்துக்கு வந்து பாஸ்போர்ட் அதிகாரி, கவர்னர் குதிரைக்கு முடிவெட்டிவிடும் இலாகா இயக்குநர் என்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? பாஸ்போர்ட் ஆபிசர் வேலைக்கு IFS ஆபிசர் எதற்கு? அப்புறம் ஸ்பெஷாலிட்டி என்பது எங்கிருந்து வரும்? கடைசிவரைக்கும் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க் ஓநாய் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். குறைந்தபட்சம் இத்தகைய லோலாக்கு டோல் டப்பிமா போஸ்ட்டிங்குகளை அதிகாரிகளது பதவி உயர்வு சீனியாரிட்டியில் சேர்க்காமலாவது இருக்க வேண்டும். அப்படி நடக்க விட்டுவிடுவார்களா என்ன?

அரசு அதிகாரிகளாக வேலைக்குச் சேரும்போது எல்லோருமே மிகத் திறமையான நபர்கள்தான். நடுமட்டத்திலும், மேல்மட்டத்திலும் சேரும் அதிகாரிகளை வீணடித்து, மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தி, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே வைத்திருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்லைக்கை பட்டாளம். ஓட்டுநர், வீட்டு வேலைக்கு, அலுவலக வேலைக்கு என கிட்டத்தட்ட 10 பேர் சும்மாவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில் எப்பேர்ப்பட்ட நபரும் அந்த அதிகார போதையில் மயங்கி சோம்பேறியாகிவிடுவர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்பதே பேரவலம்.

அதனால்தான் பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு எளிமை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டு ஆரம்பிக்கின்றனர். இது முற்றிய நிலையில் கவிதை எழுதி ஃபோலோயர்களை கும்மி எடுக்கின்றார்கள். சமத்துவம் மிகுந்த உரையாடல்கள் புழங்கும் சிவில் சமூகத்திலிருந்து ஆரம்பத்திலேயே இவர்கள் விலகி விடுவதால் “டேய் ங்கோத்தா, நீ ட்ரெயினிங்ல இருந்தது ரெண்டு வருசம், கேடருக்கு வந்து மூணு வருசம், அதுக்குள்ள என்ன மயிற கண்டுட்டன்னு மேனேஜ்மெண்ட் கிளாசெல்லாம் எடுக்கற?” என்பது போன்ற கமென்டுகளை யாரும் போடுவதில்லை. இவர்களும் அதை விரும்புவதில்லை. Excessive OLQ Syndrome-இன் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கார் டிரைவர் என்பதை முதலில் நிறுத்த வேண்டும். காவல்துறை, மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மை போன்ற எமர்ஜென்சி தேவைகள் இருக்கும் துறைகள், மாற்றுத் திறனாளி அதிகாரிகள் தவிர மற்ற அனைவருக்கும் ஓட்டுநர் என்ற தனி ஊழியரை அகற்றுவதே அரசாங்க அதிகாரிகள் என்ற தனி வர்க்கத்தை ஜனநாயகப்படுத்துவதன் முதல் படி.

வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் இரவு கொண்டுவந்து இறக்கி விடப்படும்வரை அதிகாரி அப்படியே நாட்டைத் தூக்கி நிறுத்துவது குறித்துதான் யோசிக்கிறார் என்று முட்டு கொடுக்கக்கூடாது. இதே ஊரில் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தினசரி 200 கிலோமீட்டருக்கு குறைவில்லாமல் self driving-இல்தான் செல்கிறார்கள்.

ஆண்டுக்கு 500 கோடிக்கு வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் சிஈஓ-க்கள் கூட தானேதான் கார் ஓட்டுகிறார்கள். இந்தக் குறைந்தபட்ச ஃபிட்னெஸ் கூட இல்லாத அதிகாரிகளுக்கு அலுவலகப்பணி போதுமே, களப்பணி எதற்கு? அவர்கள் சொந்த செலவில் ஓட்டுநர் வைத்துக்கொண்டால் 15000 சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் அரசாங்கம் 50000 கொடுக்க வேண்டும். அப்போதாவது தங்களையும் தொழிலாளி வர்க்கம் என்று நினைத்துக்கொண்டு வறட்டு தொழிற்சங்கவாதம் பேசாமல் இருப்பார்கள்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, சாலை வடிவமைப்பில் உள்ள பிரச்சினையில் ஆரம்பித்து கார் சர்வீஸ் சென்டர் அனுபவம், எங்காவது இடித்துவிட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்துக்குச் செல்லுதல், இத்தனைக்கும் இடையில் பணியாற்றி நாட்டை முன்னேற்றுதல் என்கிற first hand அனுபவம் அதிகாரிகளுக்கே தேவை. அப்போதாவது இந்த நாட்டில் பைக், காரில் சென்று வேலை செய்து மாத சம்பளம் வாங்குவது எவ்வளவு கேடுகெட்ட நரகமான வாழ்க்கையாக இருக்கிறது என்று புரியும்.

தினசரி கார் ஓட்டி அலுவலகம் செல்லும் ஒரு அதிகாரியாவது Fastag திட்டமிடல் குழுவில் இருந்திருந்தால் இத்தனை சொதப்பல்கள் நடக்குமா? எத்தனை இலட்சம் மக்களின் நேரத்தை வீணடித்து, பணத்தைக் காணாமல் போகச் செய்துவிட்டிருக்கிறார்கள்?

மேலைநாடுகளில் பொதுமக்கள் நடப்பதற்கு, சைக்கிள் ஓட்டுவதற்கு தனித்தனி நடைபாதைகள் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து இங்கே ஸ்மார்ட் சிட்டி அமைத்து இருந்த பிளாட்பாரங்கள் மீதும் தார் ஊற்றுகிறார்கள். ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி முன்னர் நடைபாதை கிடையாது. வாகனங்களுக்குள் புகுந்து ஓடி, வருடம் ஒருவராவது ஊனமாகிறார்கள். இதுதான் நமது வருங்கால மனிதவள ஆற்றலுக்கு நாம் செய்யும் தொண்டு. சாலை வடிவமைப்பதை அந்தந்த துறை அதிகாரிகளிடமாவது விட வேண்டும். டிரைவர் இல்லாமல் peak hour-களில் அதிகாரிகளே கார் ஓட்டினால்தானே இதெல்லாம் தெரியும்.

அந்த காலத்திலே பல்லக்கில் அமர்ந்து, யானைமீது அமர்ந்து நகர்வலம் செல்வது மாதிரி டிரைவர் வைத்து சைரன் பொறுத்திய கார்களில் செல்பவர்களுக்கு சாலைகளில் பைக்கில் செல்பவனது கஷ்டத்தையும், நடந்து செல்பவனது வாழ்வா சாவா மரணப் போராட்டத்தைப் பற்றியும் எப்படி புரியும்?

உணவகங்களிலும், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் நடுவில் நிறுத்தி வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளின் கார் ஓட்டுநர்கள் செய்யும் இடையூறுகள் எத்தனை? அப்படி அவர்கள் செய்வதை சட்டையே செய்யாத அதிகாரிகளை என்னவென்று சொல்வது? நீதிபதிகளுக்கு டோல் கேட்டுகளில் தனி வழி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அதிகார மமதையில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

Secrecy broods corruption. நமது நிர்வாக சீர்திருத்தம் என்பது சிவில் சர்வீஸ் மற்றும் நீநிமன்ற மட்டங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களது பணிகளில் வெளிப்படைத்தன்மையும், தேவையற்ற அடிமை முறையை ஊக்குவிக்கும் ஆங்கிலேயர் காலத்து அதிகார படிநிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழலில் ஐஏஎஸ் என்ற பதவியும், அரசாங்கத்தில் கார் ஓட்டுநர் என்ற பணியிடமும் நீக்கப்பட வேண்டியவை. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டுமானால் சீர்திருத்தம் என்பது அதிகாரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதை rubbish என்று ஒதுக்கித் தள்ளுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…

வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…

வடமாநில வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்படுகிறதா தமிழக வியாபாரம்?

வட இந்திய வியாபாரிகள் தமிழகத்தின் பெருவாரியான வியாபாரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டனர் என்று அவ்வப்போது சிலர் அறச்சீற்றம் அடைவதைக் காண முடிகிறது. உண்மைதான், கணிசமான எண்ணிக்கையில் வடமாநில வியாபாரிகள் தமிழகத்தின் சின்னச்சின்ன ஊர்கள் வரைக்கும் வந்து கடை போட்டிருக்கின்றனர். மேற்கு மாவட்டங்களில் ஒவ்வொரு நான்கு ரோடு சந்திப்பிலும் மலையாளிகள் பத்தாண்டுகளுக்கு முன்னரே பேக்கரி போட்டுவிட்டனர். தின்பண்டங்களில் இன்று சொந்த பிராண்டுகளில் வந்துவிட்டனர்.

தமிழகத்தில் எந்த கட்டிட உரிமையாளரும் சேட்டுபசங்களுக்குத்தான் கடை வாடகைக்குத் தருவேன் என்று சொல்வதில்லை. கம்பெனிகள், சூப்பர் ஸ்டாக்கிஸ்ட்டுகள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் யாரும் ‘இந்திக்கார கடை ஓனர்களுக்கு மட்டும் சப்ளை செய்யப்படும்’ என்று போர்டு மாட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவும் இல்லை. ஆமை போன பாதையை வைத்து கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்து வாணிபம் செய்த்தாகச் சொல்லப்படும் இந்த தமிழ்குடிக்கு என்னதான் ஆயிற்று?

கணிசமாக படித்து வேலைக்குப் போன பெற்றோர்கள் தங்களது வாரிசுகள் வியாபாரம் என்ற பெயரில் தங்களது பணத்தை ரிஸ்க் எடுக்க அனுமதிப்பதில்லை. எப்படியும் ஒரு வேலை கிடைத்துவிடும் என்ற சூழல் இருப்பதால் வியாபாரம் பண்ணித்தான் பிழைக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாததால் பாதுகாப்பான வருமானத்துக்கு வழி தேடுவது இளைஞர்களின் வழக்கமாகவே ஆகிவிட்டது. ஓர் ஊழியருக்கான திறன்களை வளர்ப்பதில் நாம் படிக்கும் பள்ளி, கல்லூரிகள் காட்டும் ஆர்வத்தில் 10% கூட தொழில் முனைவோரை உருவாக்க காட்டுவதில்லை. கேம்பஸ் இன்டர்வியூக்களில் வேலை பெற்றவர்களை, அதன்பின்னரும் பிரபல நிறுவனங்களில் சம்பளம் வாங்கும் ஊழியர்களை அடையாளம் கண்டு விளம்பரப்படுத்திக்கொள்ளும் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கங்களுக்கு எத்தனை பேர் தொழில் முனைவோர் ஆனார்கள் என்றே பெரும்பாலும் தெரிவதில்லை.

படித்து முடித்ததும் வேலை கிடைக்கவில்லை என்றால் உயர்கல்வி படிப்பது, திருமணமாகும்வரை உயர்கல்வி கற்பது என பொழுதை ஓட்ட படிக்கப்போவது தமிழகத்தில் இப்போது ஃபேஷனாகி வருகிறது. இந்தப் பிரிவினர் ஒருபோதும் தொழில் தொடங்குவதில்லை.

ஒருத்தர்கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கக்கூடாது, எனக்கு நான்தான் பாஸ், இன்னொருத்தன் எனக்கு வேலை சொல்ற நிலைமைல நான் இருக்ககூடாது என்றெல்லாம் சுயதொழில் செய்வது குறித்து இருக்கும் மாயை. இந்த நினைப்பில் தொழில் ஆரம்பிப்பவர்கள் வெகுசீக்கிரம் மண்ணைக் கவ்வுவதுடன் மற்றவர்களின் உற்சாகத்தைக் குறைக்கும் கல்லுக்கட்டு சித்தர்களாகிவிடுகின்றனர். ஊரில் எவனாவது தொழில் செய்ய ஆரம்பித்தால் இத்தகைய நபர்களுடைய கதைகளைச் சொல்லி பலரும் பயமுறுத்துவது வழக்கம்.

வியாபாரத்துக்கு வந்துவிட்டால் நாலு காசு போட்டு நாலு காசு சம்பாதிக்கத்தான் வந்திருக்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் ஆண்டசாதி பெருமை பேசிக்கொண்டு ஒரு மொக்கையான வட்டத்தை மட்டும் வைத்துக்கொள்வதும் ஒரு காரணம்.

உள்ளூரில் உள்ள நபரால் தொடங்கி நடத்த முடியாத கடைகளை எப்படி சின்னச்சின்ன சேட்டு பையன்கள் எடுத்து வெற்றிகரமாக நடத்துகின்றனர் என்பதை விரிவாக அலசாமல் ‘அவனுங்கள்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர்’ என்று எளிதாக முடித்துக்கொள்கிறோம். எந்த தொழிலுக்கும் சிக்கனம் என்பது மிக முக்கியமான ஒன்று. Frugal management என்று எம்பிஏ-க்களில் படிப்பார்கள். மற்றவர்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாக கடை திறக்கும் அவர்கள் ஒரு மணிநேரம் பின்னதாக சாத்துவதில் ஆரம்பித்து, மதிய உணவைக்கூட கல்லாவுக்கு கீழே அமர்ந்து பதினைந்து நிமிடத்தில் முடித்துக்வொள்வது முதல் குறைவான இலாபத்தில் நிறைய விற்கும் கலை வரை பலவற்றை அந்தந்த ஊர் மக்களின் பழக்கவழக்கங்களை, தேவைகளைப் பார்த்து கற்றுக்கொள்கின்றனர்.

நல்ல அனுபவமிக்க வியாபாரிகளுடன் பழகும்போது அவர்களிடமிருந்து கிடைக்கும் தொழில் நுணுக்கங்கள், அணுகுமுறைகள் விலை மதிப்பற்றவை. கல்லாவில் உட்கார்ந்திருக்கும் நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போது வாடிக்கையாளர் வந்தால் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் உட்காருங்கள் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன் என்றுதானே சொல்வீர்கள். அப்படி சொல்லி, சாப்பிட்டு முடித்து கை கழுவிவிட்டுச் சென்று வியாபாரத்தை முடிக்கும்போது அந்த வாடிக்கையாளரையும் கை கழுவுகிறீர்கள். சாப்பாட்டைப் பாதியில் மூடி வைத்துவிட்டு வாடிக்கையாளரைக் கவனிக்கையில் உளவியல் ரீதியாக மிகச்சிறந்த பிணைப்பையும், நம்பிக்கையையும் உண்டாக்க முடியும் எனபது அனுபவஸ்தர்களுக்குத் தெரியும். போட்டிக்கு ஆள் இல்லாதவரை நமக்காக வாடிக்கையாளர் காத்திருப்பார். நாலு காசு சம்பாதிக்கத்தானே கடை போட்டு/கம்பெனி ஆரம்பித்து உட்கார்ந்திருக்கிறோம் என்று எளிமையாக எடுத்துக்கொண்டு மார்வாடி, சேட்டு பையன்கள் நடத்தும் கடைகளைக் கவனமாகப் பார்த்தால் இவையெல்லாம் ஒவ்வொன்றாக பிடிபடும்.

ஓரளவுக்கு வியாபாரம் சூடு பிடித்து நாலு காசு புரள ஆரம்பித்தவுடன் ஏலச்சீட்டு பிடிக்கிறேன், ரியல் எஸ்டேட், நாட்டுமாடு வளர்க்கிறேன் என்று லினன் சட்டை மடிப்பு கலையாமல் சப்ளையர்களுக்குக் கட்ட வேண்டிய பணத்தை எடுத்து ரொட்டேஷனில் விடுவது. வார இறுதியில் சீமைச் சாராயத்துடன் தோப்புகளில் கேளிக்கை, கோச்சைக் கறி விருந்து, மாதக்கடைசி பில்லிங் முடித்தவுடன் ‘ஹேப்பி எண்டிங்’ கொண்டாட்டம், சிறப்பு ஸ்கீம் விற்பனைகள் மூலம் வருடத்துக்கு இரண்டுமுறை வெளிநாட்டுப் பயணம் என திரிந்து 5-10 வருடங்களில் பெரும் நட்டத்தைச் சந்தித்து அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்களுக்கு, இளைஞர்களுக்கு சொந்தத்தொழில் என்றாலே பெரும் பீதியை உண்டாக்கிவிடுவது. ஆனால் மார்வாடிகள் சிறப்பு ஸ்கீம்களில் விற்ற புள்ளிகளை கிரெடிட் நோட் போட்டு சரக்காக எடுத்து காசாக்குவார்களே தவிர தாய்லாந்து பயணம் மேற்கொள்ள மாட்டார்கள். நம்மவர்கள் அவர்களது ஒட்டுமொத்த நடத்தை, சமூகத்தில் இயங்கும் விதம், பணத்தையும் நேரத்தையும் உறவுகளையும் கையாளும் விதம் என எதையுமே பார்க்காமல் அவர்களது கல்லாவில் காசு விழுவதை மட்டுமே பார்ப்பதில்தான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

இந்தியாவில் தமிழகமும், குஜராத்தும்தான் பெண்களின் பெயரில் அதிக தொழில்முனைவோர்களைக் கொண்டவை. ஏகப்பட்ட இளைஞர்கள் பணிபுரிந்தவாறே மனைவி பெயரில் தொழில் நடத்துவது தமிழகத்தில் மிக இயல்பான ஒன்று. அவ்வாறு இல்லையே என்று தோன்றினால் நீங்கள் வேறு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள்.

கார்ப்பரேட் எதிர்ப்பு என்றபெயரில் சில லெட்டர் பேடு டம்ளர் கட்சிகள் இளைஞர்களை படுமுட்டாளுக்கும் செயல்களைச் செய்துகொண்டிருக்கின்றன. உரிமையாளர் நிறுவனம், பங்காளி நிறுவனம், பிரைவேட் லிமிடெட் போன்றவை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் உளறிக்கொண்டிருக்கின்றனர். கஷ்டப்பட்டு தொழில் நடத்தி வெற்றிகரமாக நடத்துகையில் சர்வதேச சூழல் அல்லது உள்ளூர் விதிமுறைகள் காரணமாக தொழில் நொடித்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது என்ற புரிதல் இல்லாமல் பன்னாட்டு மாஃபியா, பனியா மாஃபியா, கார்ப்பரேட் மாஃபியா என கற்பனை பயங்களை மற்றவர்களுக்கும் பரப்புவது இவர்களது வேலை.

உதாரணமாக பிளாஸ்டிக் கவர் செய்யும் இயந்திரங்களை இரண்டு கோடி ரூபாய்க்கு சொத்தை வங்கியில் அடகு வைத்து வியாபாரம் செய்கிறீர்கள். Break even இன்னும் ஒரு வருடத்தில் வந்துவிடும் என்ற சூழலில் அரசாங்கம் பிளாஸ்டிக்கைத் தடை செய்கிறது. பக்கத்து மாநிலத்துக்கு செல்வது அல்லது இங்கிருந்து விற்பது என எந்த முடிவு எடுத்தாலும் தொழிலை தொடர்வதற்கு மாதம் மூன்று நான்கு இலட்சம் ரூபாயை உள்ளே இறக்கிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் தொழில் நடத்த முடியாது எனும்போது Proprietor எனப்படும் முதலாளியாக பதிவு செய்து தொழில் நடத்தியவர் படிப்படியாக வளர்ந்திருந்தாலும் சொத்து முழுவதும் வங்கிக் கடனுடன் இணைக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்படுவார். அதேநேரத்தில் படிப்படியாக வளர்ந்து பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக பதிவு செய்து நடத்தியவரது வீடு வாசலாவது மிஞ்சும். இந்த மாதிரியான விரும்பத்தகாத சூழல்களில் சட்டப்பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் கார்ப்பரேட் எதிர்ப்பு பேசிக்கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு மத்தியில் சேட்டான்கள் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் பதிவு செய்ய ஆரம்பித்து இன்று அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வீரமிகு ஒறவுகள் விரைவில் அவர்களது கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் நாள் வரத்தான் போகிறது.

நமது இளைஞர்களின் மிகப்பெரிய பிரச்சினை சோம்பேறித்தனம். எதாச்சும் பண்ணனும் பாஸ் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்களே தவிர எதையும் ஆரம்பிக்கவே மாட்டார்கள். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது. ஆரம்பித்தால்தானே எப்படி இருக்கும் என்று தெரியும். சில பல இலட்சங்களை ஒரு தொழில் ஆரம்பித்து இழந்தால்தான் என்ன? அந்த அனுபவத்தில் கிடைக்கும் புத்திகொள்முதலுக்கு விலையே கிடையாது.

காமசூத்ரா படித்துக்கொண்டும் அதைப்பற்றி நாலு பேர் சொல்லும் கதைகளைப் கேட்டுக்கொண்டே இருந்தால் என்ன பயன் உண்டாகும்? அதே போல்தான் அளவுக்கதிகமான சுய முன்னேற்ற நூல்களைப் படிப்பதும், வருவோர் போவோரிடமெல்லாம் ஆலோசனை கேட்டுக்கொண்டே இருப்பதும்.

பணம் இல்லாதது ஒரு பெரிய தடையே அல்ல. மனம் இல்லாததுதான் ஆகச்சிறந்த தடை. If you don’t do it, you won’t learn it.

நம் ஊரில் அவ்வளவு வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் கண்ட வடக்கத்தியர்கள் இங்கே கடை விரிக்கும்போது நம்மைத் தடுப்பது எது?

விழித்துக்கொள் தமிழா!!

பசுமை ஆர்வலர், இயற்கை ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற ஒரு மேட்டிமைத்தனமான புதிய சாதி

கேள்வி: பசுமைப் போராளி, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராளி, இயற்கை விவசாயப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அடையாளங்களின் பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா?

பதில்: கிராமப்புறத்தின் பழைமை மாறாமல் இயற்கைக்குத் திரும்புதல் என்பதே சாதிய அடுக்குகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அழைப்புதான். பசுமைப் போராளி ஆவதிலும், இயக்கம் அல்லது அமைப்பு நடத்திவதிலும் சாதிய படிநிலைகள் தெளிவாக உண்டு.

இயற்கை விவசாயம் + கார்ப்பரேட் எதிர்ப்பு குறித்த அமைப்புகளில் சாதிக்கு ஏற்பவே பிரபலத்தன்மையும், வசூலும் அமைகிறது.
உங்களுக்குத் தெரிந்த பிரபலமான ஐந்து ஆர்கானிக் ஆக்டிவிஸ்ட் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் அதன் நிறுவனர்கள் அல்லது பெருந்தலைகள் பிராமணர்களாக இருப்பதைக் காணலாம். அபூர்வமாக அப்படி இல்லாவிட்டாலும் அசைவ உணவு எதிர்ப்பு, கோசாலை, விவசாயத்தைக் காப்பதில் கோவில்களில் இருக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம், நீட் தேர்வு ஆதரவு, மெரிட் சிஸ்டம் போன்ற கருத்துகளில் தாராளமாகப் புழங்குபவர்களாக இருப்பர்.

அத்தகைய பிராமணப் பின்புலமுள்ள அமைப்புகளுக்கே பெரும்பாலான நன்கொடை வருவாய்கள், புகழ், பெருமை எல்லாம் கிடைக்கும். தோற்றாலும் வென்றாலும் நல்ல விளம்பரமும், நன்கொடைகளும் கணிசமாக கிடைக்கும் என்பது மாதிரியான ஏரியா எனில் இந்த அமைப்புகள் இறங்கிவந்து வழக்குத் தொடுக்கும். பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளை இவை வழக்குக்கு இழுக்குமே தவிர அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடருவதைக் கவனமாகத் தவிர்க்கும்.

பிராமண அடையாளங்களைத் தாங்கிய இந்த அமைப்புகள் அப்பழுக்கற்ற தங்கங்களாக உருவகப்படுத்துப்பட்டு சூத்திர வேசிமகன்களிடம் விளம்பரப்படுத்தப்படும். மனுஸ்மிரிதியால் தேவடியாப்பயல் என்று விளிக்கப்படும் சூத்திர ஆக்டிவிஸ்டுகள் நடத்தும் ஒன்றிரண்டு அமைப்புகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் வழக்குகள், பெரிய கவனம் கிடைக்காத ஆனால் நீதிமன்றங்களுக்கு செருப்புத் தேய நடக்கவேண்டிய விவகாரங்களை எல்லாம் கொடுத்து வழக்குத் தொடரும்படி, பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். இவர்களும் செருப்பைத் தூக்கி தலையில் வைத்து விட்டிருக்கிறார்கள் என்றே புரியாமல் தமக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாகப் போராளி ஆகிவிடுவார்கள்.

மஞ்சளுக்கும், வேம்புக்கும் அமெரிக்கா காப்புரிமை பெற்ற விவகாரத்தில் வந்தனா சிவா அம்மையாருடன் நம்மாழ்வார் இணைந்து போராடி வென்றதாக ஐயாவின் வானகம் ரிசார்ட்டில் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் Azadirachtin என்ற பூச்சிக்கொல்லியின் ஒரு பகுதி காப்புரிமையை ஜெர்மானிய கம்பெனி ஒன்றிடம் இராயல்ட்டி கட்டியே இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் வாங்கி விற்பனை செய்கின்றன என்பதைத் துறையில் புழங்குபவர்கள் அறிவர்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மை பிரச்சாரகர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சூத்திரர் ஆன நம்மாழ்வாரின் வானகம் ரிசார்ட் ஆனது சமகாலத்திய வேளாண் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவல்லதாக நிறுவப்பட்டிருப்பது பெரிய நகைமுரண் கிடையாது. ஐயாவின் கோசாலை, கோசாணம், பாரம்பரிய மருத்துவ ஞானம் குறித்த உரைகளைக் கேட்டவர்களுக்கு வர்ணாசிரம அமைப்பின்மீது அவருக்கு உள்ள அன்பை அறிவார்கள்.

இயற்கை வேளாண்மை சார்பான அமைப்புகள் மட்டுமல்லாது விவசாயிகளின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே சாதிய ஆதரவாளர்களாவர். மரபுக்குத் திரும்புதல், பாரம்பரிய வாழ்வியல் முறை என்றாலே சாதிக்குத் தக்க வாழ்வியல் முறை என்பதே இந்தியாவில் பொருளாகும். விவசாயத்தைக் காப்போம் என்பதற்கும் “விவசாயிகளைக் காப்போம்” என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பதை உணர்வது முக்கியமானதாகும்.

விவசாயப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஏன் சொல்லிக்கொள்ளும்படியாக தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெறுவதில்லை?

விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.

2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.

4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.

5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.

6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.

7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).

படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.

வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.

எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.

அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.

மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.

அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.

அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!

முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்

புத்தக விமர்சனம் என்று எளிதாக ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு வரலாற்று ஆவணம் மாதிரியான நூலாக இருப்பதால் முகிலினி நாவலை வெறும் புத்தக விமர்சனமாக சொல்லி கடந்துபோக முடியாது. நாவலாசிரியர் முருகவேள் வழக்குரைஞர் என்பதால் எல்லா தரப்பு நியாயங்களையும் பதிவு செய்திருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட பாத்திரம் என்று எதுவுமே இந்த நாவலில் கிடையாது.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் பவானிசாகர் அணை கட்டும் வேலை ஆரம்பித்த காலத்திலிருந்து புரூக்ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலில் காஃபி டே-வில் செல்ஃபி எடுப்பது, நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் செல்வது வரைக்குமான காலம் வரைக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜக்கி வாசுதேவன் வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெயர்களை மாற்றி எழுதியிருப்பதால் முதலில் அதன் உண்மையான பின்னணியை தெரிந்துகொண்டு ஆரம்பித்தால் ஒவ்வொரு நிகழ்வுகளின் காரணமும், அழுத்தமும், அதன் நியாயமும் புரியும்.

விஸ்கோஸ் எனப்படும் ரேயான் தயாரிக்கும் ஆலை உருவாகி, வளர்ந்து வீழ்ந்த வரலாறுதான் கதைதான் இந்த முகிலினி நாவல்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பருத்தி விளையும் பெரும் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட தென்னிந்திய ஆலைகளுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் தேடிய திரு ஆர். வெங்கடசாமி நாயுடு ரேயான் அதற்கு ஒரு மாற்றாக அமையும் என்பதை உணர்ந்து அதற்கான ஆலை அமைக்கும் பணியில் இறங்குகிறார். இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா (SNiA Viscosa) உதவியுடன் ஆலை அமைக்கப்படுகிறது. சவுத் இண்டியா விஸ்கோஸ் கம்பெனியின் 24.5% பங்குகளை மிலன் நகரில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனி, மஸ்கட்டில் சப்பினா (Sapina) என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தனது துணை நிறுவனம் மூலமாக கையில் வைத்திருந்தது. இந்தியா, பிரேசில், தென் அமெரிக்க நாடுகளில் ஸ்நியா கம்பெனியின் சொத்துகளை நிர்வாகம் செய்துவந்த இந்த சப்பினா லக்ஸம்பர்க்கில் (Luxumburg) பதிவு செய்யப்பட்ட கம்பெனி.

விஸ்கோஸ் கம்பெனிக்கு மரங்களை கூழாக்கி பெரிய ஏடுகளாக மாற்றி கச்சாப்பொருளாக ஸ்நியா இத்தாலியிலிருந்து ஏற்றுமதி செய்து வருமானம் பார்த்தது. சிறுமுகையில் பவானிசாகர் அணைக்கு மேலே 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் விஸ்கோஸ் ஆலை அணையலிருந்து தண்ணீரையும், பைக்காரா நீர்மின்நிலையத்திலிருந்து மின்சாரத்தையும் பெற்று நேரடியாக 10000 பேருக்கு வேலை கொடுத்து வந்தது. அப்போது தினசரி 60 டன் ரேயான் உற்பத்தி செய்து, கழிவுநீரை அணைக்குள்ளேயே நேரடியாக திறந்துவிட்டாலும் dilution ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் அணையின் மீன்களுக்கோ, விவசாயத்திற்கோ பெரிய பாதிப்பில்லாத அளவில் இருந்து வந்திருக்கிறது.

வட இந்தியாவில் ஆதித்யா பிர்லாவின் கிராசிம் நிறுவனம் மிகப்பெரிய ரேயான் உற்பத்தியாளர் என்பதால் விஸ்கோஸை வாங்கிவிட பல வழிகளில் நெருக்கடி கொடுத்து வந்தது. அந்த போட்டியை எளிதாக சமாளித்த வெங்கடசாமி நாயுடு குடும்பத்தினர் கோவையின் அடையாளமாக விளங்கும் பல நிறுவனங்களை தொடர்ந்து ஆரம்பித்து வளர்ந்து வந்தனர். லஷ்மி மில்ஸ், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல், CIT கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை என்பதோடு உரம், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஆட்டோமொபைல் டூலர்ஷிப் என அவர்களது பெரிய குடும்பத்தினை நீக்கிவிட்டு பார்த்தால் கோயமுத்தூர் வெறும் விவசாய பூமியாகத்தான் இருந்திருக்கும்.

அந்த இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஃபேமிலியில் ஒருவர் மட்டும் (கரிவரதன் என்று நினைக்கிறேன்) கார் ரேஸ், விமானி என வேறு பாதையில் பயணித்தார். அவரிடம் தானமாக கொஞ்சம் நிலத்தைப் பெற்று ஆசிரமம் அமைத்தவர்தான் ஜாவா ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ். (ஆரம்ப காலத்தில் ஜாவா ஜெகதீஷ் காட்டூர், பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு பொட்டலம் சப்ளை செய்து வந்தார் என்பது செவிவழிச் செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை). அவரை ஆஸ்மான் ஸ்வாமிகள் என்று ஏகத்துக்கும் காலாய்த்திருக்கிறார் நாவலாசிரியர்! ஆஸ்மான் ஸ்வாமிகளின் எழுச்சியை நக்கலாக பதிவு செய்திருக்கும் ஒரே நாவல் முகிலினி மட்டும்தான்.

அறுபதுகளில் மோசமாக இருந்த அந்நிய செலாவணி தட்டுபாடு காரணமாக அரசு இத்தாலியில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதற்கு இணையாக ஊட்டி, கூடலூரில் மரம் வெட்டிக்கொள்ளவும், அரியலூர் சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்பு போன்றவற்றை மலிவு விலையில் அரசாங்கம் தந்தது.

அன்றைய லைசன்ஸ் ராஜ் காலத்தில் 10000 பேருக்கு வேலை தருவது சாதாரண விசயமல்ல. இன்று உலகமயமாக்கம் இல்லாமல் ஐ.டி. தொழில் வேலைகள், வெளிநாட்டு இயந்திரங்கள்+தொழில்நுட்பங்கள் இல்லாமல் வெறும் ஆலை சார்ந்த உற்பத்தித் தொழில்களும், விவசாயமும் மட்டும் இருந்தால் வேலைக்காக தெருத்தெருவாக அலைவதோடு, பெரும் உள்நாட்டுக் கலவரங்கள் பஞ்சம், பட்டினி சாவுகள் என்று ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இந்தியாவும் இருந்திருக்கும்.

விஸ்கோஸ் ஒரு ரூபாய் செலவு செய்து பத்து ரூபாய் இலாபம் பார்க்கும் நிறுவனமாகி வெற்றிகரமாக நடந்துவருகையில் இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனியில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

அண்மையில் டாடா நிறுவன சேர்மனாக இருந்து தூக்கியடிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் அப்பாவுக்கு விஸ்கோஸ் ஆலை மீது ஒரு கண். அவரது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் டாடா டிரஸ்ட்டில் 18% பங்கு வைத்திருக்கும் மிக மிகப்பெரிய கோடிசுவர கம்பெனி. சவுத் இந்தியா விஸ்கோசின் இலாபம் பிர்லா குழுமம், ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் என பல நிறுவனங்களில் கண்களை உறுத்தியது. விஸ்கோசின் வெற்றிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட உரத் தொழிற்சாலையும் அப்போதைய பெரிய ஆலைகளுள் ஒன்று. அதன் பின்னரே ஸ்பிக் வளர்ச்சி கண்டது.

நிதி நெருக்கடியில் சிக்கிய ஸ்நியா விஸ்கோசாவின் துணை நிறுவனமான சப்பினாவை பி. எஸ். மிஸ்த்ரியின் Look Health Properties Thirty Ltd என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் கையகப்படுத்தியதில் விஸ்கோசின் 24.5% பங்குகள் ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் வசம் சென்றது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் 49% பங்குகளில் கணிசமான அளவை வாங்க மிஸ்த்ரி முற்படுகிறார். வெங்கடசாமி நாயுடுவும் அதற்கு போட்டியில் இறங்குகிறார்.

அந்நேரத்தில் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியை முறைகேடாக வாங்கி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக விஸ்கோஸ் சார்பில் வெங்கடசாமி நாயுடு வழக்கு தொடர்கிறார். நளினி சிதம்பரம் உட்பட பல பெரிய வழக்குரைஞர்கள் விஸ்கோசுக்காக வழக்காடினர். விஸ்கோஸ் கம்பெனி பங்குகள் எதையும் தாங்கள் வாங்கவில்லை எனவும் லக்ஸம்பர்க்கில் பதிவு செய்யப்பட்ட சப்பினா கம்பெனியை மட்டுமே வாங்கியதாகவும் அதனால் சப்பினா வசம் இருந்த விஸ்கோஸ் பங்குகளின்மீது எந்த வியாபாரமும் நடக்கவில்லை எனவே அந்நிய செலாவணி மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் தெரிவித்தது; வழக்கில் விஸ்கோஸ் தோற்றது.

இன்று வோடபோன் இதே மாடலில்தான் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றியது. இந்தியாவில் உள்ள பங்குகளை வாங்கவில்லை, மொரீஷியஸில் உள்ள கம்பெனியை மட்டுமே வாங்கினோம், அதனால் இந்தியாவில் உள்ள கம்பெனி பங்குகள் தானாக கிடைத்துவிட்டது என்றது. இந்த டகால்ட்டி வேலைக்கெல்லாம் அப்பன் என்பது போன்றது ஸ்நியா>சப்பினா>விஸ்கோஸ்>ஷப்பூர்ஜி பலோன்ஜி குழும வழக்கு.

பின்னர் வெங்கடசாமி நாயுடு இறந்துவிட அவரது இளையமகன் விஸ்கோஸ் சேர்மன் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று அடம்பிடித்து ஒரு கட்டத்தில் அவரது பங்குகளை மிஸ்த்ரி குழுமத்திடமே விற்றுவிட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் மிஸ்த்ரி நேராக கோவைக்கு வந்து மிகவும் மரியாதையாக அவர்களது வீட்டுக்கே சென்று மிகப்பெரிய தொகைக்கு கம்பெனியைக் கேட்க வெங்கடசாமி நாயுடுவின் குடும்பம் அதை விற்றுவிட்டு மொத்தமாக ரேயான் தொழிலிருந்து வெளியேறியது.

தொழிலை வெறும் முதலீடாக பார்ப்பவர்கள் போட்ட பணத்துக்கு ரிட்டர்ன் மட்டுமே பார்ப்பார்கள். அந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தைக் குச்சியை விட்டு குத்தும் வேலைகளைச் செய்து அதை கொல்வார்கள். சொத்தை வச்சு தின்னு பாக்க மாண்டாத திருவாத்தான் என்று கோவைப் பக்கம் சொல்வார்கள். கம்பெனி ஆரம்பித்து, கஷ்டப்பட்டு, அதனுடன் சேர்ந்து வளர்ந்த யாரும் தன் கண் முன் கம்பெனி அழிவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இடையில் வந்து சேர்ந்துகொண்டவர்களுக்கு அப்படி உணர்ச்சிப்பூர்வமான ௮ணுகுமுறைகள் இருப்பதில்லை; கிடைத்தவரைக்கும் இலாபம் என்று சுரண்டித் தின்பார்கள்.

கார்ப்பரேட் சதி, முதலாளித்துவ பம்மாத்து வேலைகள் என கற்பிக்க வேண்டியவற்றை விடுத்து தேவையில்லாதவற்றை இன்றைய இளைஞர்களுக்கு கற்பித்து வருகிறோம். அதனால்தான் ஆன்சைட்டில் சம்பாரிக்கும் வேலைகள் எப்படி இந்தியாவிக்குள் வந்தது என்ற தெளிவே இல்லாத ஒரு மொன்னை தலைமுறை உண்டாகியிருக்கிறது.

Yuval Noah Harari எழுதிய Money என்ற புத்தகம் joint stock company என்பது எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, அவற்றின் பின்னணி, கடந்து வந்த பாதை என பலவற்றையும் அற்புதமாக சொல்கிறது. Wall Street என்ற பெயற்காரணம் அதன் வரலாற்றைத் தெரிவிக்கிறது. தொழில் நடத்துவதற்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர Money-யை வாசிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 60 டன் ரேயான் உற்பத்தி என்ற அளவில் வெங்கடசாமி நாயுடு விட்டுச்சென்ற கம்பெனியை 250 டன் அளவுக்கு உயர்த்தியது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம். நான்கடி விட்டமுள்ள குழாயில் கழிவுநீர் அப்படியே அணைக்குள் வெளியேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அதிகமாகி மக்கள் போராட்டத்தில் இறங்கி கடைசியில் ஆலை இழுத்து மூடப்பட்டது.

நாவலில் வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு பாத்திரங்களான ராஜு, ஆரான் இருவரும் கோயமுத்தூரின் வரலாற்றுக்கு சாட்சியாக நாவல் முழுவதும் வருகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படையில் இத்தாலி நாட்டுக்குச் சென்று வந்ததில் சில இத்தாலிய மொழி வார்த்தைகள் தெரியும் என்ற அடிப்படையில் விஸ்கோசில் பேச்சிலராக வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறுகிறார் ராஜு. அவரது மகளுக்கு பவானிசாகர் அணையில் சூப்பிரண்டன்டாக வேலை செய்யும் இளைஞருடன் திருமணமாகிறது. ராஜுவின் பேரன் கெளதம் வழக்குரைஞராகி மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் திருடிய நண்பன் ஒருவன் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் வெற்றிபெறுவது சிறப்பான கதையமைப்பு.

வெள்ளலூரைச் சேர்ந்த ஆரான் தொழிறசங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு, பிளேக் நோய் என பலவற்றையும் பார்த்து ஊரைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருக்கிறார். வசந்தா மில் மூடப்பட்ட பின் வாழ்க்கையை ஓட்ட கஷ்டப்படும் ஆரானின் வழ்க்கையைப் போல பல ஆயிரம் கதைகள் கோவையில் உண்டு. சின்னியம்பாளையம் கொலை வழக்குகள், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூடு என சமீபத்திய பிரிக்கால் ஊழியர் கொலை வழக்கு வரை கோவைக்கு மிக நீண்ட தொழிற்சங்க வரலாறு இருக்கிறது.
ஊதிய உயர்வு கேட்டதற்காக ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் ஏழு பேர் புரூக்பாண்ட் டீ கம்பெனி சாலையில் சுடப்பட்டு இறந்தனர். Work from home போட்டுவிட்டு இன்று அந்த சாலையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உட்கார்ந்து தொழிற்சங்கங்கள், திராவிட கட்சிகள் என்ன கிழித்தன என்று வாட்சப்பில் வரலாறு ஃபார்வர்டு செய்யும் இளைய சமுதாயத்திற்கு கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது என்பது காலக்கொடுமை.

வழக்குரைஞர் கெளதம் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு திருநாவுக்கரசு என்ற நண்பருடன் இணைந்து புளியம்பட்டி அருகே இயற்கை விவசாயம் செய்வதும், அவருக்கும் திருநாவுக்கரசுக்கும் நடக்கும் உரையாடல்கள் அருமையான எழுத்து. ஒருகட்டத்தில் காந்தியவதியாக மாறி சட்டை அணிவதைக் கூட துறக்கும் திருநாவுக்கரசு நுகர்வைக் குறைத்துக் கொள்வது பற்றியும், மனிதர்களின் மனப்பாங்கை உணர்ந்து அடையும் முதிர்ச்சியையும் நாவலில் தெளிவாக உணர முடிகிறது.

இயற்கை விவசாயம் செய்து கத்தரிக்காய் விளைவித்த கெளதம் ஆசையாக கேர்ள்ஃபிரண்டுக்கு போன்போட்டு ஆர்கானிக் கத்தரிக்காய் கொண்டுவரவ என கேட்ட, ‘நீ அதை காரமடை அண்ணாச்சி கடையில் போட்டுவிட்டு காசை எடுத்துக்கொண்டு புரூக்ஃபீல்ட்ஸ்ல இருக்கற CCD-க்கு வந்துரு’ என்று சொல்வது epic!

திருநாவுக்கரசு பாத்திரம் சட்டையணியா சாமியப்பன் என்பவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம்மாழ்வாருக்கு விகடன் மூலம் கிடைத்த விளம்பரம் சாமியப்பனுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விகடனின் வியாபார நோக்கம் தெளிவானது. அப்படி எல்லாம் எல்லை நம்மாழ்வரைக் குறை சொல்வதே உனக்கு வேலையாகப் போய்விட்டது என்பவர்கள் ஸ்டெர்லைட் பிரச்சினையை எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி தினமலர் எப்படி வெளியிட்டது என்பதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம். விஸ்கோஸ் பிரச்சினைக்கு நம்மாழ்வார் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டதைச் சொல்லும் அத்தியாயங்கள் நல்லவேளையாக அவரை வராதுவந்த மாமணி என்றெல்லாம் சித்தரிக்கவில்லை.

தொண்டு நிறுவனம் மூலம் சொல்லித்தரப்படும் வாழ்வியல் விவசாய வியாபாரத்தின் பின்னணி, மாடித்தோட்டம், பிராண்டட் சங்கிலித்தொடர் ஆர்கானிக் கடைகள், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் சாப்பிடும் எல்லாம் விஷம் என பயமுறுத்தும் கும்பல் என எதையுமே நாவலாசிரியர் விட்டுவைக்கவில்லை என்பது சிறப்பு. பத்து ரூபாய் நிலவேம்பு பொடியை 120 ரூபாய்க்கு விற்கும் ஆர்கானிக் கடைகள் மீதான திருநாவுக்கரசின் கோபம் நியாயமான ஒன்று. அண்மையில் டெங்கு வந்தபோது நிலவேம்பு விற்ற டுபாக்கூர் மருத்துவ கும்பல் நீலவேம்புக்கு ஆதரவாக போலி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளிவந்தவற்றக ஆதாரமாகக் காட்டி காசு பார்த்தன. நம்மாழ்வார் அதன் பிரச்சாரக் என்பது முக்கியமான ஒன்று.

சிங்காநல்லூர் குளக்கரை, காரமடை செல்லும் வழியில் ஓரிடத்தில் என ஆறேழு இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில் உண்டு. ஒரு காலத்தில் கோயமுத்தூர் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சபிக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக பிளேக் நோயால் இறந்தவர்கள் பலர். அத்தோடு நிலவிய கடும் உணவுப் பஞ்சம், அரிசித் தட்டுப்பாடு என பலவற்றையும் நாவல் பதிவு செய்திருக்கிறது. பயந்து பயந்து அரிசியைப் பையில் எடுத்தச்சென்ற காலங்கள், கோரைக் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்ட பசியை அறிந்தவர்கள் இன்று பசுமை விகடன், நம்மாழ்வார் போன்றவர்களின் முட்டாள்தனமான வெடிமருந்தை உரமாக்கிய கதைகளை, பசுமைப் புரட்சி குறித்த எதிர்மறையான கதைகளுக்கு விலைபோக மாட்டார்கள்.

விஸ்கோஸ், ஸ்டெர்லைட் என சுற்றுச்சூழல் பிரச்சினையால் மூடப்பட்ட ஆலைகள் அனைத்தும் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான். Productivity என்ற பெயரில் குருட்டுத்தனமான வெறியில் இலாபம், இலாபம் என தம்மைச் சுற்றியுள்ள சூழலை, சமூகத்தை மதிக்காமல் இயங்க இந்தியா அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு அல்ல.

மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் இயந்திரங்களைத் திருடி கோடீசுவரனானவர் பலர். அதில் வரும் கோவிந்து என்று திருடன் கொலைவழக்கில் இருந்து வெளியே வந்தபின் குதிரைமீது அமர்ந்து கத்தியை உயர்த்தியபடி இருக்கும் தீரன் ஒருவரது படத்தை வைத்துக்கொண்டு சாதிச் சங்கம் ஆரம்பிப்பது குறித்த அத்தியாயத்தில் நாவலாசிரியர் முருகவேள் மிளிர்கிறார்!

திண்டுக்கல்லின் தோல் ஷாப்புகளின் தொழிலாளர் போராட்டங்களை டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவல் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவு செய்திருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற அது NCBH வெளியீடு என்பதால் தொழிற்சங்கம் என்பது அப்பழுக்கற்ற பத்தரைமாற்றுத் தங்கம் என்ற தொணி இருக்கும். முகிலினியில் விஸ்கோஸ் போராட்டத்துக்காக களமிறங்கும் வக்கீல் பழனிசாமி அவரது அலுவலகத்தில் வழக்குரைஞர் பழனிசாமியாக எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பதிவு செய்திருப்பதெல்லாம் நாவலாசிரியர் முருகவேளின் நேர்மையான, தைரியமான எழுத்து நடைக்கு சாட்சி.

நாவலில் வரும் இளம் வழக்குரைஞர் கெளதம் என்ற இளைஞரது பாத்திரம் நீங்கள்தானே என்று அவரிடம் நேரில் சந்தித்தபோது கேட்காமல் விட்டுவிட்டேன்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்: மாணாக்கர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேசத் தரத்திலான சஞ்சிகைகளில் வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் நிர்வாக சீர்திருத்தத்தை மேலிருந்து தொடங்கவேண்டும்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரது ஓய்வுபெறும் வயது 70 என நிர்ணயித்து திருத்தம் வெளியிடப்பட்டிருப்பது மிக விரிவான ஊழல்களுக்கு கால்கோள்விழா நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓய்வுபெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டியவர்களை அழைத்துவந்து நிர்வாகத்தை நடத்துவதற்கு விடுவது தற்போது பணியிலிருப்பவர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகும். என்னவோ இவர்களை விட்டால் பணியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தை நடத்தவே தெரியாத மாதிரியும், ஆராய்ச்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆளே இல்லாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்பது மாதிரியும் பில்டப் கொடுத்து வாழும் வாஸ்கோடகாமாவே, நடமாடும் ஐன்ஸ்டைனே என்று புகழ்மாலை பாடுவதுற்கு ஒரு கூட்டம் இருப்பதும் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு சொம்புகலைக்கழகமாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

பணி ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சிகளைத் தொடரும் பேராசிரியர்களுக்குப் பல்கலையில் இடமும் ஆய்வகமும் வழங்குவது உலகெங்கிலும் நடைமுறையில் உண்டு. பல பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பின் பல்கலையைவிட்டு வெளியேறி தத்தம் துறைகளில் ஆலோசகர்களாகவோ, நிறுவனங்களில் அதிகாரிகளாகவோ, தனியார் கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களாகவோ, தனியாக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்யவதோ உண்டு. அவர்களெல்லாம் உண்மையில் வணங்கத் தக்கவர்கள்.

சில பேராசிரியர்கள் ஏதாவது மந்திரிமார்கள், ஆட்சியாளர்கள் காலில் விழுந்து பணி நீட்டிப்பு வாங்குவதோடு துணைவேந்தர் பதவி வாங்கி வந்து உட்கார்ந்துகொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. போதாக்குறைக்கு அண்டை மாதிலங்களில் ஆள்பிடித்து வந்து துணைவேந்தனாக்கும் அவல நிலைக்கு அண்ணா பல்கலை வந்தமாதிரி தநாவேப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓய்வுபெற்று பல்கலையை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கிவிடும்போது அவர்களுக்கான accountability என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போகிறது. அவர்கள் போட்ட காசை எடுப்பதிலும், பதவிக்காலம் முடிவதற்குள் பை நிறைய சில்லறைகளைத் தேற்றிவிடலாம் என கண்ணில் பட்டவைகளையெல்லாம் விலைபேசி விற்கும் அவலமும் நடப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ, அரசாங்கப் பதவிகளிலோ இல்லாத ஊழல் குற்றவாளிகளைக் கண்டு கைகட்டி நின்று ‘பதவில இருக்கனும்னா இப்படிலாம் நக்கித்தான் ஆகனும்’ என்று மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். அண்மையில் இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தன் ஒரு துணைவேந்தன்கள் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டுபோய் ஊழல் குற்றவாளி சசிகலாவைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தநாவேப சர்வதேச தரத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சர்வதேசத் தரத்திலான நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண், பெண் பாலின பேதமில்லாத வளாகம் உருவாகவேண்டும் என கொள்கை முடிவுகளை எடுத்து 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆய்வகங்களோடு முதுநிலை, ஆராய்ச்சி மாணவிகள் 24 மணிநேரமும் சென்றுவரும்வண்ணம் விடுதிகள் நிர்வகிக்கப்பட்டதும் இதே வேளாண் பல்கலையில்தான். தமிழகத்திலேயே 24 மணிநேரமும் ஆராய்ச்சிகளுக்காகத் திறந்திருந்த ஒரே பல்கலைக்கழகமாக ஒருகாலத்தில் இருந்தது.

இன்று தாவரவியல் பூங்காவுக்கு ஜோடியாக வருபவர்கள் திருமணச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நவீன இந்துத்வா கும்பலின் கூடாரமாக மாறியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் இயற்கை விவசாயம் என படம் காட்டிவிட்டு மறுபக்கம் எட்டாம்கிளாஸ் படித்தவர்களெல்லாம் பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கொண்டுவந்த தடைச்சட்டத்துக்கு ஓட்டை ஏற்படுத்தும்விதமாக ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி நுகர்வோருக்கோ, விவசாயிகளுக்கோ, விவசாயப் பட்டதாரிகளுக்கோ எந்த பலனையும் தராத, காசு கொடுத்தால் எதை வேண்டுமானலும் செய்து தருகின்ற போலி ஆராய்ச்சி நிலையமாக மாறியதும் ஓய்வுபெற்ற துணைவேந்தன்களாலேயே நடந்து வருகிறது.

பல பாராட்டுகளையும், முன்னெடுப்புகளையும் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற பல்வேறு சான்றுகளையும் உடைய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ICAR இரத்து செய்தது மிகவும் கேவலமான ஒரு நிகழ்வாகும். அங்கீகாரம் இரத்தாகும் அளவுக்கு போர்டு நட்டு அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்குக் காரணம் எந்த accountability-யும் இல்லாத ஓய்வுபெற்ற நபர்களைத் துணைவேந்தன் என நியமிக்கும் அரசியல் போக்கும் அதற்கு துணைபோகும் ஆசிரியர் சங்கங்களுமே இதற்கு காரணமாகும். தற்போது 70 வயதுவரை துணைவேந்தன் பதவி என சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது மிகவும் அபாயகரமான சீரழிவின் ஆரம்பமுமாகும்.

தநாவேப உருப்பட வேண்டும் எனில் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு பதவிக்காலத்திலேயே துணைவேந்தர், முதல்வர், பதிவளர் போன்ற பதவிகள் கொடுக்கப்படவேண்டும். ஓய்வுபெற்ற பின் துணைவேந்தன் பதவி “வாங்கி” வந்து சில்லறைகளைத் தேற்றி சொத்து சேர்க்க முயற்சிக்கும் அல்ப கேஸ்களை தவிர்த்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும். அப்போதுதான் திறமைக்கு மதிப்பு கிடைப்பதோடு உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு, நிர்வாகத் திறமையுடைய பேராசிரியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதுடன் மாணாக்கர்களின் தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என விவசாயிகளுக்கும் பலன் ஏற்படுவதோடு ஆண்டுக்கு நூறு கோடி அளவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்படும். அப்போதுதான் உதவிப் பேராசிரியர் பதவியில் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை ஏற்படும்; எங்குமே வெளியில் சென்று பிழைக்க வழிதெரியாதவர்களெல்லாம் உதவிப் பேராசிரியராகி விடுகின்றனர் என்ற அவச்சொல்லும் நீங்கும்.

ஏனெனில் ஆராய்ச்சியிலோ, நிர்வாகத்திறமையோ இல்லாமல் ஓய்வுபெற்றபின் துணைவேந்தன் ஆனவர்களும் அவர்களது சொம்புகளும் ”இன்னிக்கு வர்ற பசங்களுக்கு ஒரு மண்ணும் தெரியறதில்லப்பா. எப்படித்தான் படிச்சு பாஸ் பண்ணித் தொலைச்சிட்டு வர்றானுங்களோ. இந்த கூமுட்டைங்கள வச்சிகிட்டு எப்படி நாங்க ரிசர்ச் புரோகிராம் நடத்தறதுன்னே தெரியல. அந்த காலத்துல நாங்கள்லாம் படிச்சப்போ பாத்தீங்கன்னா…” என்று இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், நடுவயதில் இருக்கும் பேராசிரியர்கள் கூட்டத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி பிரச்சாரம் செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பிரச்சார யுக்திகளை நம்பும் மாணாக்கர் கூட்டம் தவறான முன்னுதாரணங்களால் கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, வர்த்தகம் என எதிலுமே ஒரு நிறைவான ஆளுமையாக மாறாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு சதி என வாட்சப் பார்வர்டுகளில் அரசியல் பயிலுகின்றனர்.

ஆகவே, தநாவேப முன்னோக்கிச் செல்லவேண்டும் எனில் ஓய்வுபெற்ற பின் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கும் நபர்களையெல்லாம் பெரிய ஆளுமை என்று நம்பும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கு ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் அமைப்பே இதற்கான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அல்லது அதை கலைத்துவிட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்.