Zoom டிடர்ஜென்ட் பவுடர் – Purple Cow மார்க்கெட்டிங் – Zoom மீட்டிங்

Zoom டிடர்ஜென்ட் பவுடர்.

Purple Cow என்று ஒரு மார்க்கெட்டிங் தொடர்பான புத்தகத்தை Seth Godins எழுதியிருக்கிறார். மேற்குலகின் குறிப்பிடத்தக்க மார்க்கெட்டிங் ஜீனியஸ்களுள் ஒருவர்.

ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் பண்ணையில் ஒருமுறை சுற்றி வந்துவிட்டாலே அலுப்புத் தட்டிவிடும். மறுபடியும் வெவ்வேறு வகையான மாட்டினங்கள் இருக்கும் பண்ணையில் சுற்றினாலும் எல்லாமே மாடுதானே என்று ஒருவித சலிப்பு வந்துவிடும். ஆனால் ஊதா நிறத்தில் ஒரு மாட்டைப் பார்த்தால் அஃது என்ன புதிதாக இருக்கிறது என்று ஆர்வத்துடன் அதைப் பார்வையிடுவோம், பால் வாங்கக்கூட முயல்வோம் அல்லவா? அந்த மாதிரி, வாடிக்கையாளர்களுக்குப் புதிய ஒன்றை அலுப்பூட்டாதவண்ணம் தர வேண்டும் என்பதையும் அமெரிக்காவின் ஏகப்பட்ட ஊதா மாடு மார்க்கெட்டிங் உதாரணங்களையும், அதன் வெற்றி தோல்விகளை அலசுகிறார்.

நம்மூர் சந்தையிலும் பலதரப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். கும்பகோணம் டிகிரி பில்டர் காபி என்று சில வருடங்களுக்கு முன்னர் பிரபலமான காப்பிக்கடை இருந்தது. மேற்கு மாவட்டங்களில் பேக்கரி ஆரம்பிக்கவே 20 இலட்சம் முதலீடு செய்வார்கள். இவை எல்லாமே ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பது வழக்கம். கோவையில் பேக்கரி என்றும் திண்டுக்கல்லில் ரிலாக்ஸ் என்றும் சேலத்தில் காபி பார் என்றும் பெயரிட்டிருப்பார்கள். சுவையும் பெரும்பாலும் ஒரே மாதிரியே இருக்கும். தொழிலில் எவ்வித புதிய அணுகுமுறையும் இருக்காது.

அப்போது டிகிரி பில்டர் காபி என்ற பெயரில் செப்பு டம்ளரில் காபி போட்டுக்கொடுத்த கும்பகோணம் டிகிரி பில்டர் காபி கடைகள் பிரபலம் ஆனது. பலர் ஃபிரான்ச்சைசீ எடுத்தார்கள். (அந்தக் கடைகளின் ஊதா நிறத்துக்கும், Purple Cow புத்தகத்துக்கும் தொடர்பில்லை). ஒரே வருடத்தில் பல கடைகள் மூடப்பட்டன. காரணம், டிகிரி காபி என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். வாயில் வைக்க முடியாத மொக்கையான சுவை. ஆனால் பழைய டீகபடை மாடல் பேக்கரிகள் அப்படியேதான் இருக்கின்றன; புதிய பேக்கரிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

பெயரை மாற்றுவது, பெயிண்ட்டை மாற்றுவது, பெயர்ப் பலகையை மாற்றுவது போன்றவை ஒருபோதும் innovation என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஒரு business layer-ஐ உண்டாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். அதில் ஆரம்பத்தில் இருந்து இருந்தவர்கள் தாக்குப்பிடிப்பதோடு அது என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்பதையும் அறிவார்கள். அதற்கு பல்கலைக்கழக படிப்பெல்லாம் தேவையில்லை. அதில் frugal management இருக்கும்வரை மட்டுமே இலாபகரமான தொழில். ஏகப்பட்ட அடுக்கு நிர்வாகம் உள்ளே நுழையும்போது அதன் திறன் குறைவதோடு organic growth என்பது அப்படியே நிற்க ஆரம்பிக்கும். அதை சரிகட்ட கிடைப்பதையெல்லாம் வாங்கிப்போடுவது, தள்ளுபடி விற்பனை என ‘எண் விளையாட்டுகள்’ ஆரம்பமாகும்.

கும்பகோணம், மாயவரம் ஊரகப் பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு கரூர், நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர கிராமங்களே சந்தை. உள்ளூர் உற்பத்தி போதாத காரணத்தால் அங்கிருந்து வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இரு மாவட்டங்களில் மட்டும் வாரத்துக்கு ஒரு இலட்சம் வாத்துகளுக்கு மேல் விற்பனையாகிறது. இதன் மதிப்பு தோராயமாக 2.5 கோடி. இதில் எந்த பிராண்டும் கிடையாது. எல்லாமே சாலையோர கறிக்கடைகள், வறுவல் உணவகங்கள் மூலமே விற்பனை. வாத்து முட்டை பற்றாக்குறை காரணமாக ஆந்திரா நெல்லூரில் இருந்து பேருந்துகளில் வருகிறது. நான்கு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்கும் தொழில். இதிலும் பிராண்டு எதுவும் கிடையாது. தனிநபர்களின் வார்த்தைகள் வழியாகவே வியாபாரம்.

ஒருகாலத்தில் கவுச்சி அடிக்கிறது என்று நாமக்கல், கரூர் பகுதிகளில் வாத்துக்கறியை யாரும் சாப்பிட மாட்டார்கள். இன்று வாரம் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை என்கிற நிலை வர கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆட்டுக்கறி விலையேற்றமும் இதன் வளர்ச்சிக்கு ஒரு மறைமுக காரணம். ஒரு புதிய இறைச்சி சுவை வியாபாரம் அதாவது ஒரு business layer உருவாக தேவைப்பட்ட காலத்தை நாம் நவீன வியாபார பாடங்களில் அளப்பதே இல்லை.

ஓரளவுக்குப் பெரிய கறிக்கடைகளில் வாத்தின் இறக்கையில் உள்ள பெரிய இறகுகளைத் தனியாகப் பிடுங்கி சேகரித்து வைத்து கிலோ 2000 ரூபாய்க்கு சில முகவர்களிடம் விற்கிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவையே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெள்ளைச் சாயமிடப்பட்ட இறகுப்பந்து பூவாக (shuttle cock) வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வளவு பேர் இறகுப்பந்தாட்ட மட்டையை முதுகில் மாட்டிக்கொண்டு காலையில் விளையாடப் போனார்கள், இன்று எவ்வளவு பேர் போகிறார்கள் என்பதை வைத்து அந்த சந்தையின் வளர்ச்சியையும் அளவிடலாம்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பல புதிய தக்காளி இரகங்களை ஒரு தோட்டத்தில் நடவு செய்துவிட்டு வாரம் ஒருநாள் அங்கு செல்வது, மதியம் சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதியில் சுற்றுவதுமாக இருந்தோம். அந்த தோட்டத்திற்கு அடுத்து ஒரு அட்டை போடப்பட்ட கட்டிடம். உள்ளே என்ன தயாரிக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு லாரியில் வரும் திரவத்தை கேன்களில் பிடித்து வைத்து சோப் பவுடராக்கி பொட்டலம் போட்டு பெட்டியில் அடைத்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

புதுகோட்டை அருகே ஒருநாள் மக்காச்சோளம் விதைப்புக்குச் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை அருகே கீற்றுச் சாமியார் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லக்கூடிய சித்தர், அவரைப் பார்க்காமல் திரும்பக்கூடாது என்று ஒரு நண்பர் அழைத்துச் சென்றார். அந்த சித்தர் Zoom டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தியே ஆடைகளை வெளுக்கிறார் என்பதைப் பார்த்தபோது அந்த மார்க்கெட்டிங் சேனல் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிந்தது.

இன்று தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடக விளம்பரம் இல்லாமல் சோப்பு, வாசிங் பவுடர்களை விற்க எம்பிஏ படித்த மேனேஜர்களால் முடியாது. இன்று இருக்கும் பிரபல பிராண்டுகள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டுகளால் தூக்கி நிறுத்தப்பட்டவையே. ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லாமல் ஜூம் டிடர்ஜென்ட் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்கள் நம்மிடையே கோடிகளில் விற்கின்றன.

இந்த விற்பனைச் சங்கிலியை அவ்வளவு எளிதாக Merger & Acquisition மூலமாகப் பெற்றுவிட முடியாது. Zoom பவுடர் போனால் யாராவது Doom டிடர்ஜென்ட் பவுடர் என்று கொண்டுவருவார்கள்.

மாதம் பத்து கோடிக்கு இரண்டு மாவட்டங்களில் வாத்துக்கறி விற்கிறது என்பதற்காக ஒரு பெரிய நிறுவனம் நுழைந்து சந்தையைக் கைப்பற்ற நினைக்கிறது என்றால் அதற்கு கீழே ஒரு business layer உண்டாகும். அதுவும் பெரும்பாலும் பார்வைக்கே தெரியாத ஒன்றாகவே இருக்கும். வெண்பன்றிக்கறி வியாபாரமும் அப்படித்தான். இதில் தனிநபர்களின் பெயர்களே பிராண்டு. எத்தனை கோடி வியாபாரம் என்பது அரசாங்கத்தின், வங்கிகளின் எந்த ஒரு measurable கணக்கிலும் கொண்டுவரவே முடியாது.

கடந்த இரண்டு வருடங்களில் முலாம்பழம் ஆண்டு முழுவதும் சாலையோரக் கடைகளில்கூடக் கிடைக்கிறது. கோடை காலத்திக்கான ஒரு பழம் எப்படி ஆண்டு முழுவதும் கிடைக்கிறது, யார் பயிரிட்டு விற்பனைக்கு அனுப்புகிறார்கள், விதை எங்கிருந்து வருகிறது என்று யோசித்திருக்கிறோமா?

கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றபோது பெரிய அதிர்வுகள் ஏதும் வரவில்லை. ஆனால் வால்மார்ட் இந்தியாவில் கடை போடுகிறது என்றதும் லபோதிபோவென குதித்தவர்கள் பலர் (ஆனால் அவர்கள் IKEA கடையை சிலாகித்தது வேறு கதை. அது வேற வாய், இது வேற வாய் மொமென்ட்). ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கண்ணன் டிபார்ட்மென்ட்டல் கடையைவிட வால்மார்ட்டில் பலன் அதிகம் என்பது தெரியாததல்ல.

நாளையே சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், டி-மார்ட் கடைகளை ரிலையன்சோ, வால்மார்ட்டோ வாங்கிவிட்டாலும் அவற்றின் வாடிக்கையாளர்களிடத்தில் பெரிய அதிர்வுகள் வராது. இணையதளங்களில் புழங்கும் 50+ வயது கட்டுரையாளர்களது உலகம் வேறு.

இரவில் ஒரு கம்பியில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துவிட்டு அடியில் துணிகளைப் பரப்பி ஏலம் விட்டவர்களிடம் எடுத்துத்தான் நமது ‘ஆடையுடுத்தும் மகிழ்வான தருணங்கள்’ கிடைக்கப்பெற்றன. பகல் நேரங்களில் மிதிவண்டியில் கொண்டுவந்து துணி விற்றவர்களிடம் பாவாடை, இரவிக்கைத் துணி வாங்கிக் கட்டிய நம் முன்னோர்கள் இப்போது ஒரு ஜாக்கெட்பிட் எடுக்க டிரைவர் வைத்து இன்னோவா எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து கோயமுத்தூருக்குப் போகிறார்கள். இடைப்பட்ட காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே.

இதில் எத்தனை மாறுதல்கள் வந்தாலும், business layers தோன்றி மறைந்தாலும் வாடிக்கையாளர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொத்தாம்பொதுவான ஆலோசனை சொல்லப்பட்டாலும், நுகர்வோர் ஒன்றைக் கைவிட்டு விடுகிறார்கள் என்னும்போது அரசாங்கம் எப்படிக் காப்பாற்றும் என்பதற்கு பதிலில்லை.

Zoom மீட்டிங் என்று இப்போது எல்லா பக்கமும் நடக்கிறது. காணொளி மீட்டிங் செயலி என்பது இன்று எல்லா மென்பொருள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு default option-ஆகத் தருகிறது. நம்மூர் Zoho உட்பட கூகுள் வரைக்கும் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் செயலி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype for Business என்பதை பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் மென்பொருள் பேக்கஜில் சேர்த்தே கொடுக்கிறது. இருப்பினும் பல நிறுவனங்கள் Zoom நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி மீட்டிங் நடத்த இடவசதி பெற்றிருக்கின்றன.

ஆர்குட் போய் பேஸ்புக் வந்தது. ஐயகோ ஆர்குட் போய்விட்டதே, அங்கிருந்து மென்பொருள் வேலை செய்யும் ஆட்கள் என்ன ஆவார்கள் என்று வாடிக்கையாளர்கள் கவலைப்படுவதில்லை. பிளாக்பெர்ரி போய் ஆப்பிள் வந்தபோதும் இதே கதைதான்.

அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்படுவது மிகவும் தட்டையான generic statement. தொழில்கள் அப்படியேதான் இருக்கும். அது செய்யப்படும் முறை, பாணி, உத்தி மட்டுமே மாறுபடும். அது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான skill set தேவை. மேலை நாட்டு வணிகப் பள்ளிகளில் சொல்லப்படும் consolidation of businesses என்பதை இங்கே பயமுறுத்தும் சொல்லாக மாற்றிவிட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், லைசன்ஸ், பெர்மிட் போன்றவற்றைத் தாண்டி தொழில்நுட்பம், business layer என்று வரும்போது தனிநபர்களின் திறமையே செல்லுபடியாகும்.

இன்றைய லாக்டவுன் காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் Zoom டிடர்ஜென்ட் பவுடர் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை Zoom மீட்டிங் app மூலமாக செய்யச்சொல்லி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுதான். நாம் என்ன மாதிரியான வியாபாரத்தில் எந்த மாதிரியான விற்பனை சங்கிலியில் இருக்கிறோம் என்பதையே புரிந்துகொள்ளாத பலர் மேலாளர்களாக இருக்கிறார்கள் என்பது பல நிறுவனங்களில் நடக்கும் Zoom meeting மூலமாகத் தெரிய வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைத் தடுப்பதைத் தவிர காற்று மாசு அளவைக் குறைப்பதில் எந்த வகையிலும் பயன்படுவதாகத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் அரளிச்செடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைக்கிறது என்பதற்கு வலுவான ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. யாராவது ஒரு அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ இராசியான வண்ணமாக, பிடித்த செடியாக இருந்திருக்கக்கூடும் என்ற அளவில் அதை முடித்துக்கொள்வோம்.

காற்றில் கார்பன் மோனாக்சைடு, தூசிகளின் அளவு அதிகரிக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது இலைகளில் உள்ள பசுங்கனிகம் (குளோரோபிளாஸ்ட்). அதிலுள்ள பச்சையம் (குளோரோஃபில்) அளவு குறையும்போது ஒளிச்சேர்க்கை குறைவதால் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் வெளியிடும் திறன் குறைகிறது.

ஒப்பீட்டளவில் காகிதப்பூ செடி அரளியைவிட காற்று மாசு அளவு கூடும்போது நன்றாக தாக்குப்பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். காகிதப்பூச்செடியை விடவும் காற்று மாசைத் தாங்கக்கூடிய செடிகள் சில உண்டு என்றாலும் அவை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல என்பதால் மேற்கொண்டு அலசத் தேவையில்லை.

அரளிச்செடியின் எந்த ஒரு பாகத்தையும் காய வைத்துக்கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவே கூடாது. தொழில்முறை சித்த மருத்துவர்கள் விதிவிலக்கு. அரளிக் குச்சிகளை வைத்து அடுப்பு எரிக்கவோ, கறி வறுக்கும்போது கிளறவோ பயன்படுத்தக்கூடாது.

நல்லவேளையாக அரளிச்செடியில் (Nerium oleander) மதுரமும், மகரந்தமும் பெரிய அளவில் கிடையாது என்பதால் தேனீக்கள் சீண்டுவதில்லை. பல தேனீ பண்ணைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன.

சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களின் அடையாள மலர் ரோடோடென்ரான் (Rhododendron). நேபாளத்தின் இமயமலை அடிவாரத்தில் பூக்கக்கூடிய அழகான மலர்கள் இவை. இந்த ரோடோடென்ரான் மலர்கள் பூத்துள்ள பகுதியில் மட்டும் தேனீ பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறார்கள். இது உலக அளவில் Mad Honey என்ற பெயரில் பிரபலமானது. இதைக் குடித்தால் சில மணி நேரங்களுக்கு மனப்பிரள்வு (Hallucination – தமிழில் என்ன பொருள்?) ஏற்படுவதால் இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கையில் ஊற்றி நக்குகிறார்கள்.

Mad Honey அப்படியொன்றும் அற்புத மருந்தெல்லாம் அல்ல. அதைக் குடித்தால் ஆண்மை பெருகிறது என்ற நம்பிக்கை காரணமாக 40+ வயது ஆண்களே இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இது ஆன்ட்ரோமீடோடாக்சின் (Andromedotoxin) வகையில் வரும்.

Mad Honey மட்டுமல்லாது அமுக்கிராங்கிழங்கு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள், புனுகுப்பூனை, மான்கொம்பு, புலியின் விதைப்பை என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் “ஆண்மையைப் பெருக்கும்” சந்தையில் உண்டு. ஷிலஜித் எடுக்கிறோம் என்றபெயரில் இமயமலையைச் சுரண்டி விற்கிறார்கள். ஆனால் சந்தையில் இருக்கும் முக்கால்வாசி ஷிலஜித் போலியானவை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அண்மையில் சித்த மருத்துவர் என்ற பெயரில் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரை டம்ளர் மோரில் இரண்டு சொட்டு ஊமத்தை இலைச்சாற்றை விட்டுக் குடித்தால் பேதி நிற்கும் என்று சொன்னதாகத் தெரியவந்தது. இந்த மாதிரியான ஆலோசனைகளை உண்மையான மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் வழங்குவது சந்தேகமே.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது வகை வகையான கொள்ளைக்கூட்டங்கள். அதில் ஊமத்தைக் கொள்ளையர்கள் என்று ஒரு வகை. வெளியூர் சென்றுவரும் வியாபாரிகள், அரண்மனை ஊழியர்கள், கோவிலுக்கு புனித யாத்திரை செல்பவர்களிடம் சாதாரண வழிப்போக்கர்கள் போலப் பழகி தண்ணீர் அல்லது பாலில் ஊமத்தை (Datura) விதைப் பொடியை கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் மயங்கியதும் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தேடித்தேடி பிடித்து தூக்கில் போட்டிருக்கின்றனர். Datura poisoning என்று கூகுலிட்டுப் பார்க்கலாம்.

ஊமத்தை இலை, விதைச் சாறு, பொடி போன்றவை மட்டுமல்ல, எருக்கு, அரளி என பலவகையான செடிகளும் மருந்துப் பொருட்கள் செய்ய உகந்தவை. ஆனால் அதற்குக் கடுமையான பயிற்சியும் அனுபவமும் தேவை. சும்மானாச்சிக்கி பேஸ்புக் பதிவில் ஊமத்தைச் சாறு குடியுங்கள், கள்ளிப்பாலை கண்ணில் இரண்டு சொட்டு விட்டால் சாலேஸ்திரம் குறையும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் போலி மருத்துவர்களே.

செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் அடையாள மலர். விடுதலைப் புலிகளின் அடையாள மலரும் இதேதான். கண்வலிக் கிழங்கு என்று சொல்வார்கள். அதன் விதை இன்று பல கோடிக்கு ஏற்றுமதியாகிறது. அதிலிருந்தும் மருந்துதான் எடுக்கிறார்கள். ஆனால் அந்த விதையை அரைத்துக் கொஞ்சம் குடித்தாலும் சாவுதான்.

இன்று எங்கு திரும்பினாலும் பாரம்பரிய அறிவு நிபுணர்கள். இவர்கள் சொல்வதெல்லாம் அதை அரைத்துக் குடி, இதை காயவைத்து சாப்பிடு, அதைப் பிழிந்து பூசு, இதை இடித்துக் கலக்கி விழுங்கு என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள். கொஞ்சம் எகிறினாலும் கிட்னி போய்விடும், அப்புறம் ஒவ்வொறு உறுப்பாக ஒத்துழையாமை செய்யும் என்கிற எச்சரிக்கை வாசகம் கூட சொல்வதில்லை. செடிகொடிகளிலிருந்து வருவதை அப்படியே கொடுத்தால் பின்விளைவுகளே இருக்காது என்று அப்படியே நம்புகிறார்கள் நம் மக்கள்.

இந்தியாவிலிருந்து சில நூறு கோடிகளுக்கு ஏற்றுமதியாகும் பல்வேறு தாவரங்கள் மருந்துப் பொருட்களாகி சில ஆயிரம் கோடி மதிப்பில் திரும்ப வருகின்றன. இங்கே அவற்றை ஆராய்ச்சி செய்வதுகூட வேண்டாம். அப்படியே reverse engineering செய்து அதே மருந்துகளை சீனா போல அப்படியே உற்பத்தி செய்யக்கூட நாம் தயாரில்லை. Ayush என்கிற ஆமை டிபார்ட்மெண்ட்க்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தைத் பத்து கம்பெனிகளுக்கு மானியமாக வழங்கினாலே பெரிய புரட்சி ஏற்பட்டுவிடும்.

Coming back to the அரளிச்செடி. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை மறைக்க ஆமணக்குச் செடியும், ஐந்தடிக்கு ஒரு பனை மரமும் நட்டு வைத்தால் நாட்டில் விளக்கெண்ணைப் புரட்சியும், வாகனங்கள் center median-த் தாண்டி வந்து விபத்து ஏற்படுவதுமாவது தடுக்கப்படும். லாரி வைத்து அரளிச்செடிகளுக்கு ஊற்றப்படும் பல இலட்சம் லிட்டர் தண்ணீருக்கும் தேவையிருக்காது.

சுளுந்தீ – நாவல் – விமர்சனம்

சுளுந்தீ – நாவல்
ஆசிரியர்: இரா. முத்துநாகு
ஆதி பதிப்பகம் வெளியீடு.
விலை ரூ 450, பக்கங்கள்: 472

நாவலாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை ஒன்றே போதும். ஓர் அற்புதமான கட்டுரையை அதாவது வரலாற்றின் போக்கை எழுதி நம் முன்னால் வைத்துவிடுகிறார். 472 பக்கங்கள் எல்லாம் படிக்க முடியாது என்று கருதுபவர்கள் அவசியம் அந்த முன்னுரையையாவது படிக்க வேண்டும்.

தொ. பரமசிவன் நூல்கள், வேல இராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ யுவல் நோவா ஹராரியின் Sapiens, Homo Deus போன்ற நூல்களை வாசித்திருந்து சுளுந்தீ வாசித்தால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்வுக்கும், இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்குக் கிடைத்திருந்த வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை, உயிர் பாதுகாப்பை, சமத்துவத்தை மிகச் சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

பண்டுவம் எனப்படும் வைத்திய முறைகள் நாவிதர்களிடமே அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது; பண்டுவம் பார்க்கத் தெரிந்த ஆண் நாவிதன் – பண்டுவன் எனவும் பெண், மருத்துவச்சி எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு வைத்தியம் பார்த்து உயிர்காக்கத் தெரிந்தவர்களே பண்டிதன் என்பதாக இருந்து பிற்காலத்தில் மந்திரம் ஓதும் மந்திரவாதிகளைப் பண்டிதன் என்று அழைக்க நேரிட்டது இயல்பாக நடந்த நிகழ்வன்று.

சுளுந்தீ நாவலைப் பொறுத்தவரை கதை மாந்தர்களின் கலக சிந்தனைக்கான கருத்தாழம், படிமம், நுண்கரு, மையப் புள்ளி, விழுமியம், சமூகப் படிமங்களின் ஒத்திசைவு, அகவொளி தரிசன தற்சார்புக் கோட்பாடு, மைட்டோகாண்டிரியா, கோல்கி அப்பேரட்டஸ், ஹேபர்-பாஸ்ச் கோட்பாடு என்றெல்லாம் தேடக்கூடாது. அச்சுப்பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகள் பல உண்டு. இருப்பினும் வாசகத்தை அவை சிதைக்கவில்லை என்பதோடு பொருள்மயக்கம் தரவில்லை என்பதால் அப்படியே கடந்துவிடலாம். அவற்றை அடுத்த பதிப்பில் ஆசிரியர் திருத்தி விடக்கூடும்.

சுளுந்தீ, மக்களின் மரபான வைத்திய முறைகளில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலிலும் உள்ள survival skills எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது அதில் என்னென்ன மாற்றங்கள் புதிய குடியேற்றங்களாலும், அரசியல் காரணங்களும் ஏற்படுகின்றன என்பதைப் பதிவு செய்கிறது. இந்த Skills எல்லாமே பெரிய அளவில் பொருளீட்ட, அது சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரப் பயன்படவில்லை. காரணம், அவை சாதிக் கட்டமைப்புக்குள் இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. அதை இந்து ஞான மரபு என்று புனிதப்படுத்தாமல் பளிச்சென உடைத்துக் காட்டுவதே இந்நாவல்.

ஏகப்பட்ட பண்டுவ தகவல்களை நாவலாசிரியர் கதைமாந்தர்களை வைத்து சொல்லிக்கொண்டே வருகிறார். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால் முப்பது நாற்பது வகையான தகவல்கள் என்பதால் அவற்றை திரும்பப் பதிவு செய்வது கடினமான ஒன்று. களப் பணியாளர்களிடம் எப்போதுமே ஒரு தெளிவான பார்வையும், இது இப்படி ஆரம்பித்தால் இப்படித்தான் வந்துசேரும் என்ற லாஜிக்கும் இருக்கும். அந்த அற்புதமான லாஜிக்கை ஓரிடத்தில் காட்டும் ஆசிரியர் இன்னோரிடத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்.

சித்த மருத்துவ முறையில் சாதாரண ஒன்றைக்கூட வேண்டுமென்றே வேறு பெயர்களில் சொல்லி அலைய விடுவதில் ஆரம்பித்து இரகசியம் என்ற பெயரில் அதை நாசம் செய்வதும் நமது மரபு. உதாரணமாக, அண்மையில் சிறியாநங்கைச் செடியை நிலவேம்பு என்று சொல்லி கல்லா கட்டியது!

நாவலாசிரியர் அறிவியல் ஆராய்ச்சியாளரோ தொழில் முறை தாவரவியலாளரோ அல்லர் என்பதால் அவரிடம் reference கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் சில தகவல்களை வெளிப்படையாக வைத்தால்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும், ஆராய்ச்சியாளர்கள் அதை மக்களுக்குப் பயன்படும்வண்ணம் விரைந்து தயாரிக்க இயலும். என்றைக்கு கார்ப்பரேட்டுகள் நமது பாரம்பரிய சொத்தைக் களவாண்டு விடுவார்கள் என்ற முட்டாள்தனம் ஒழிகிறதோ அன்றுதான் சர்வதேச அளவில் நாம் வேற லெவல் இடத்தைப் பெற முடியும்.

அந்த காலத்தில் வெள்ளாவி வைக்க துணி எடுத்துச் செல்கையில் ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இட்டு அடையாளம் போட்டுவிடுவர். துணி அழிந்தாலும் அந்த குறியீடு போகாது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே அது இரசாயன மை. அதற்கு முன்னர் சேந்தங்கொட்டையை வேக வைத்து எடுக்கும் சாயமே பயன்பட்டது. மிக ஆபத்தான சாயம், கையில் பட்டால் வெந்துவிடும் என்பதால் ஆய்வகங்களில் அமிலத்தைக் கையாள்வது போன்ற கவனம் தேவை. அதே நேரத்தில் பல மருந்துப்பொருட்களில் சேந்தங்கொட்டை சேர்க்கப்படுகிறது. Semecarpus anacardium என்று NCBI-இல் தேடினால் ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்கும். மருத்துவ ஆராய்ச்சிகளில் பல இருந்தாலும் அந்த சாயத்தை எப்படி ஆடைகளுக்கு வண்ணமேற்றும் இயற்கை சாயமாக மாற்றுவது என்ற ஆய்வு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய முதலீட்டிய காலகட்டத்தில் பொருட்களை உண்டாக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சியும், பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சியும் முற்றிலும் வேறான பார்வை கொண்டவை. ஒரு சாதாரண தகவலைப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றக்கூடிய திறன் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவராது. சேந்தங்கொட்டை குறித்த தகவல் இருக்கும் சுளுந்தீ பக்கத்தை வாட்சப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர் ஒருவர் அந்த சாயம் குறித்தான அத்தனை தகவல்களையும் அலசிவிட்டு ‘லாக் டவுன் முடிந்தவுடன் இரண்டு கிலோ வாங்கி அனுப்பி வை. அந்த சாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வோம்’ என்று அனுப்பிய தகவல் ஆச்சரியம் அளிக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒன்றை அவர்கள் சந்தைப்படுத்தும்போது ‘ஐயகோ பார்த்தாயா, நமது பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிக்காரன் கொண்டுபோய்விட்டான். அன்னிக்கே ஐயா இதைத்தான் சொன்னாரு’ என்று ஒப்பாரி வைப்பார்கள். இன்டிகோ சாய வரலாறு தெரியுமா என்பார்கள்.

ஒரு கிடாரிக்குப் பிறக்கும் முதல் காளைக் கன்று ஒன்றை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதற்கு ஒரு கதையை நாவலாசிரியர் வைத்திருக்கிறார். மிகச் சிறப்பான விளக்கம். ஏதாவது ஒரு காரணத்தால் காளை இறந்துவிட்டால் இடையர்கள், குடியானவர்கள் இடையே ஏற்படும் தொழில் போட்டியின் காரணமாக பொலிச்சலுக்கு காளை இல்லாதபட்சத்தில் வரும் பிரச்சினையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒரு காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும் என்று அரண்மனை தீர்ப்பு சொல்லி ஆரம்பித்து வைத்த வழக்கம் அது.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் சொக்காயி என்ற பெயரில் இருக்கும் நாட்டார் தெய்வம் ஒன்றுக்கு எல்லா சாதியினரும் தங்களது எருமைக் கிடாக்கன்றை நேர்ந்துவிட்டு கட்டுத்தறியை விட்டு துரத்திவிடுவார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சுற்றுவட்டாரத்தில் திரியும் நூறு, இருநூறு எருமைக் கிடாக்களைப் பிடித்துவந்து நோம்பி போட்டு, வெட்டி ஒரு குழிக்குள் போட்டு மூடி விடுவார்கள். அந்த குழி அக்ரஹாரத்துக்கு வெகு அருகில் இருந்ததால் பலருக்கு அருள் வந்தும், சொக்காயி கனவில் வந்தும் ‘எனக்கு எருமை இரத்தக் கவுச்சி பிடிக்கலடா, நெய்வேத்தியம் மட்டும் பண்ணுங்கோ’ என்று சொல்லிவிட்டது.

அதனால் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அந்த பழக்கம் நிறுத்தப்பட்டது. அப்படியே யாராவது எருமைக் கிடாவை நேர்ந்துவிட்டாலும் அதை விற்று, பணத்தை அந்த உண்டியலில் போட்டுவிடுவது வழக்கமாக்கப்பட்டது. முதல் பலி கொடுப்பது அந்த ஊர் அருந்ததியரின் எருமைக் கிடா. அதுவும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இப்போது சொக்காயி சாமியானது ஸ்ரீ சொக்கநாயகி அம்மன் ஆகிவிட்டது. படிப்படியாக பொலிச்சலுக்கு எருமைக் கிடா இல்லாமல் ஆனதால் இன்று திரவ நைட்ரஜன் கேன்களை பைக்குகளில் கட்டிக்கொண்டு சினை ஊசிகளுடன் இளைஞர்கள் போய் வருகின்றனர். இதன் நீட்சியை சமீபத்திய தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க அபிவிருத்தி சட்டம் வரைக்கும் பார்க்க வேண்டும். இந்த கிளைக் கதை எதற்காக என்றால் ஒரு பண்பாட்டு அசைவு என்பது எங்கு ஆரம்பித்து எது வரைக்கும் போகிறது என்பதற்காக.

கடும் பஞ்சத்தில் மக்கள் கோரைக்கிழங்கு, மூங்கில் அரிசி, கரையான் புற்றுக்குள் உள்ள அரிசி வரைக்கும் எடுத்து உண்டு உயிர் பிழைத்திருக்கையில் இடையர்களுக்கு தண்ணீர் இருக்கும் பகுதியை அரண்மனை ஒதுக்கித் தருவதின் பின்னணியில் அக்ரகாரத்துக்கும், புலவர்களுக்கும் பால், தயிர், வெண்ணைக்கு எந்த பஞ்சமும் கிடையாது என்பதையும் நாவல் காட்டுகிறது.

அதற்காக நஞ்சை நலங்களை உழுதவர்களை குலநீக்கம் என்ற பெயரில் ஊரைவிட்டு காட்டுக்குள் துரத்தியடிப்பது, மறுப்பவர்களைக் கொலை செய்து அரண்மனை தனக்கான இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகளைத் தருவித்து குடியேற்றம் செய்ய பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டு துரத்தப்பட்ட கதைகள் புத்தகத்தில் கடப்பதற்கு கனமானவை. அதன் நவீன வடிவமாக இன்றைய குடியுரிமைச் சட்ட திருத்தங்களைப் ஒப்பிடலாம்.

சாதாரண சமையல் உப்பு கூட வெடி மருந்துதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் கதையின் நாயகனான நாவிதன் இராமனிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பண்டுவர்களிடம் இருந்த மருந்துப்பொருட்களை குல நீக்கமானவர்கள் பெற்று வெடி செய்து அரண்மனைப் படையினரைக் கொன்றுவிட்டனர் என்பதற்காக பண்டுவம் பார்க்கும் நாவிதர்களைக் கொலை செய்து முச்சந்தியில் வீசி விடுகின்றனர். பழநி அடிவாரத்தில் இருந்த பண்டாரங்கள் சிலர் பண்டுவம் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களையும் கொன்று விடுகின்றனர். மீதமிருந்தவர்கள் பண்டுவ ஓலைச்சுவடிகளை அதிகாரத்தில இருந்த பிராமணர்களிடம் சரணடைந்து ஒப்படைத்துவிட்டு உயிர் பிழைத்துக் கொண்டனர். சிலர் சேது சீமை எல்லைக்கு ஓடி விட்டனர்.

பழநி கோவில் நிர்வாகம் பண்டாரங்களின் கையில் இருந்தது. அங்கு கொடுமுடி ஐயர் ஒருவரை பூசைக்கு வரவழைக்கப்பட்டதும், பின்னர் அவர்கள் எப்படி கோவிலைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. நவபாஷான மூலவர் சிலை சுரண்டி விற்கப்பட்டது எப்போது ஆரம்பித்தது என்கிற வரலாற்று ஆராய்ச்சி இந்த இடத்தில் தேவையற்றது.

மதுரை மன்னரிடம் அனுமதி பெற்று மதப் பிரச்சாரம் செய்ய வந்த ஏசு சபையினர் சமஸ்கிருதம் பயின்றுவிட்டு, இங்கு வந்து பார்த்தால் யாருமே சமஸ்கிருதம் பேசவில்லை என்பதால் பின்னர் தமிழ் கற்றுக்கொண்டதும் நாவலில் வருகிறது. அவர்கள் குலநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் மட்டும் மன்னருக்கு எதிராக கலகம் செய்யாதிருக்கும் வண்ணம் ஜெபக்கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றனர். குலநீக்கம் செய்யப்பட்டவர்களது வாழ்வு, வாழ்வியல் முறை எல்லாம் அரண்மனைத் தெருவில் திரியும் நாய்களைவிட பலமடங்கு கீழே இருந்திருக்கிறது.

அப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள், போரில் தோல்வி ஏற்படும்போது சிக்கினால் கொன்றுவிடுவார்கள் அல்லது அடிமையாக்கி விடுவார்கள் என்ற நிலையில் காட்டுக்குள் ஓடி விடுவதும் பின்னர் அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக களவு செய்ய ஆரம்பித்தது, ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்த குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றவற்றை வேல இராம மூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலும், 1839-இல் Philip Meadows Taylor எழுதிய Confessions of a Thug-உம் நமக்கு அப்படியே வரலாற்றைக் காட்டிச் செல்கிறது.

மக்கள் பஞ்சத்தினால் அரண்மனைக்கு வரி கட்டி வாழ முடியாது என்று முடிவெடுத்து ஊரைக் காலி செய்து ஓட்டம் பிடிப்பது, அந்த பஞ்சத்தினால் கிணறு வெட்டி விவசாயம் செய்வதைக் கற்றுக்கொள்வதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்தவர்கள் செஞ்சி சென்று சுல்தான் படையுடன் இணைந்து பண்டாரப் படை என்று அழைக்கப்படுவதும் அவர்கள் ஏன் ஒரு முஸ்லிம் மன்னனுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நியாயமும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பஞ்சத்தினால் ‘பலருக்கு மைனா குஞ்சு போல கடவா வெந்து, வாய் துர்நாற்றம் பொணமா வீசுது’ என்று நாவலில் சொல்லப்படுவது ஸ்கர்வி. 90-கள் வரைக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணக்கர் பலரை வாய் ஓரத்தில், ஈறுகளில் புண்ணுடன் காணலாம். இன்று அப்படிப்பட்ட ஸ்கர்வி அறிகுறியுடன் குழந்தைகளைத் தமிழகத்தில் காண்பது மிக அரிது. கேப்டன் ஜேம்ஸ் குக், வைட்டமின் சி குறித்த ஆய்வு அவரது ஆஸ்திரேலிய பயணத்தை எப்படி புரட்டிப் போட்டது என்பதையும், பின்னர் உலக நாடுகள் கண்டுபிடிப்பு+காலனி+கடல் வணிகத்தை அப்படியே புரட்டிப்போட்டு உலக வரைபடத்தை மாற்றிய நிகழ்வு அது. Sapiens நூலில் இது விரிவாகக் கூறப்பட்டிருக்கும்.

நாவிதன் இராமனின் மகன் மாடன் அரண்மனை நாவிதனாகாமல் குடியானவர்களுக்கு சவரம் செய்ய அனுப்பப்படுவது குறித்து அவனது தாய் வல்லத்தாரை புலம்புவது எல்லாம் அந்தக்காலத்தில் இருந்து அரசாங்க உத்தியோகம் என்பது ஏன் மக்களால் விரும்பப்படுகிறது என்பதற்கு நாவலின் பிற்பகுதியில் மாடனுக்கு நேரும் எல்லா சம்பவங்களுமே சாட்சி.

அந்தந்த சாதியினர் வேறு தொழிலுக்குப் போகவே முடியாத கட்டுப்பாடு, மீறினால் கடும் தண்டனை போன்றவையே அரண்மனைகளை சொகுசாக வைத்திருக்கின்றன.

பெற்றோர்களின் உழைப்பின் உபரியானது சொத்தாகவோ, சமூக அந்தஸ்தாகவோ, பதவியாகவோ வாரிசுகளுக்குக் கடத்தப்படும்போதுதான் சாதியும், குலத்தொழில் மீதான பெருமையும் பற்றும் அப்படியே அடுத்த சந்ததியினரிடம் இருக்கும். வெறும் கையும் காலுமாக குலத்தொழில் ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ‘எப்படியோ போய் பிழைத்துக்கொள்’ என்று ஒருவன் வீதியில் விடப்படும்போது குலத்தொழில், சாதி மீதான எந்தப் பற்றும் இருக்காது. ஊரெல்லாம் அலைந்தும், கெஞ்சியும் பார்த்துவிட்டு ‘இனிமேல் ஒருபயலுக்கும் நான் சிரைக்க மாட்டேன்’ என்று மாடன் தனது குலத்தொழிலைத் தூக்கி எறிந்துவிடுவதன் நியாயத்தை இவ்வாறாகப் புரிந்து கொள்ளலாம்.

ஈத்தரக் கழுதை, வெங்கம் பயல், வெங்கமேடு, குரளி வித்தை, பேய் பிடிப்பது, முனி பிடிப்பது என்பதற்கான விளக்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தக் காலத்திலும் இப்போது போலவே பண்டுவர்களிடம் முலை பெருக்க, தண்டு நீள வைத்தியம் கேட்டிருக்கிறார்கள்!

சிறியாநங்கைச் சாறு, வீர, பூரச் செந்தூரம் இருந்தாலும் நாகப் பாம்பு கடிக்கு பண்டுவத்தில் மருந்தில்லை என்பதை நாவலாசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இதுபோன்ற இடைவெளிகளில் எல்லாம் ஏசு சபை மூலமாக வந்த ஆங்கில மருந்து மக்களைக் காப்பாற்றியதையும் உரையாடலின் போக்கில் தெரிவிக்கிறார்.

சித்து வேலை என்பது பெரும்பாலும் மக்கள் அறியாமையை வைத்து ஏமாற்றுவது, சில இடங்களில் சின்னச்சின்ன trick என்பதை ஒப்புக்கொள்ளும் ஆசிரியர் பூசணிக்காயை வைத்து திருடர்களை விரட்டும் வித்தையில் கொஞ்சம் ஏமாந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நாகப்பாம்பு வாயில் பூசணி விதையை வைத்துத் தைத்து தலைகீழாக இரண்டு நாட்கள் தொங்கவிட்டால் விஷம் அதில் இறங்கிவிடும். அதை நட்டுவைத்தால் வரும் பூசணிக்காயில் குறைந்த அளவு விஷம் இருக்கும், அதனால் அதைத் திருடிச்சென்று உண்பவர்களுக்கு குறைந்த அளவில் உடல் நலக்குறைவு ஏற்படும், அதனால் களவு போவது நின்றுவிடும் என்று இராமன் சொல்கிறார். உண்மையில் அப்படி எல்லாம் சாத்தியமே இல்லை.

மாடன் மல்யுத்தப் போட்டியில் இறந்துவிட, பிணத்தை எரிக்கையில் அங்கு கழுதைப்புலிகள் ஏதாவது இருந்தால் அவை சேற்றுத் தண்ணீரில் புரண்டுவிட்டு வந்து சிதையின்மீது கூட்டமாக குதித்து நெருப்பை அணைத்துவிட்டு பிணத்தை இழுத்துச் சென்று (கிரில் சிக்கன் போல நினைத்து) சாப்பிட்டுவிடும் என்று வருகிறது. நெஞ்சுக்கூட்டின் மீது பெரிய மரத்துண்டுகளை வைக்காவிட்டால் உடலிலுள்ள கொழுப்பு எரியும்போது நீர் வற்றி நரம்புகள் இழுக்க பிணம் சுருள ஆரம்பிக்கும். அப்படி நடந்தால் குச்சியால் அடித்து திரும்பவும் தள்ளி மரத்துண்டுகளை மேலே போடுவார்கள். அப்படியும் சில நேரங்களில் கையோ, காலோ எரியாமல் அப்படியே வெளியே விழுந்துவிடும்.

அதை நாயோ, கழுதைப்புலியோ இழுத்துச் சென்றுவிடும். அதை துரத்திச் சென்று மீட்டுவந்து எரிப்பார்கள் (நாமக்கல் மாவட்டத்தில் ஒருகாலத்தில் எய்ட்ஸ் மிக அதிகமாக இருந்தபோது யாராவது இறந்தால் பலர் தனக்கும் வந்துவிடுமோ என்று பிணம் எடுக்கையில் வர மாட்டார்கள். அப்போது சிலரது பிணங்களை கடைசி வரைக்கும் எரித்த அனுபவம் உண்டு). கழுதைப்புலி ஆரம்பத்திலேயே வந்துவிடும் என்பது கொம்பேறி மூக்கன் பாம்பு ஆள் செத்தபிறகு மரத்தில் ஏறி பார்த்து உறுதி செய்துகொண்டுதான் புறப்படும் என்பது மாதிரியாகத் தோன்றுகிறது.

நாவலில் வரும் பலவற்றுக்கு புழக்கத்தில் உள்ள பெயர்கள், தாவரங்களின் அறிவியற் பெயர்கள் போன்றவற்றை தனி இணைப்பாகவாவது கொடுத்திருக்கலாம். விகுளிச்சாறு, விகுளிச் செடி என்று வருகிறது. ஆனால் சரியான விகுளிச்செடி எது என்கிற தகவல் இணையத்தில் சுத்தமாக இல்லை.

பதார்த்த குண சிந்தாமணி வரைக்கும் OK. ஆரோக்ய நிகேதினி என்று ஆரம்பித்து சமஸ்கிருத வார்த்தைகள் வரும் நூல்களில் புகுந்தால் திரும்பி வர முடியாது. இங்குள்ள நூல்களை சமஸ்கிருத்ததில் எழுதி, அவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர் வந்த புதிதில் கல்கத்தாவுக்கு ஓடி இதுதான் இந்தியா என்று அவர்களைப் பிராமணர்கள் நம்ப வைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வைத்தது வரலாறு. சமஸ்கிருதம் கலவாத தனித்த மொழிக்குடும்பம் தென்னிந்தியாவில் உண்டு என்று அதற்கு மிகப்பெரிய ground work செய்த எல்லிஸ் துரை அதை வெளியிடுவதற்கு முன்னரே விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதும் வரலாறு. ஆயுர்வேத நூல்களின் மூலம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிகளின் survival medicine ஞானம் மட்டுமே.

பிராமணீயம் என்பது சக மனிதர்களிக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலியத்துக்கும் கேடு என்பதை வரலாற்று நூல்கள், நாவல்கள் போன்றவற்றை சமூக நிகழ்வுகளோடு இணைத்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

வேடசந்தூரில் கிணறு வெட்டி உப்புத் தண்ணீர் வந்ததால் என்ன செய்வது என்று புரியாத நிலையில் சேது சீமையில் ஆங்கிலேய, டச்சுக்கார வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு புகையிலை என்ற செடி பயிரிடுவதை அறிந்து ஆட்களை அனுப்பி பயிற்சி பெற்றுவரச் செய்து புகையிலையை அறிமுகம் செய்கின்ற தகவல், அரண்மனைகளில் மூக்குபொடி பயன்பாடு, சுருட்டு பிடித்தல் எல்லாம் முறையான கால இடைவெளியில் நாவலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மலைவாழ் பளியர் மக்கள், விவசாயம் செய்யும் குடியானவர்கள், இராவுத்தர்கள் என்கிற முஸ்லிம் படையினர், ஏசு சபை பாதிரிகள், இடையர்கள், விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்ட தெலுங்கு பேசும் குடிகள் என பலதரப்பட்ட மக்களும் நாவலில் வந்துபோனாலும் பஞ்ச காலத்திலும் கூட யாரும் மல்லாட்ட (நிலக்கடலை) சாப்பிட்டார்கள், தக்காளி உருளைக்கிழங்கு சாப்பிட்டார்கள் என்று வரலாற்றுக்கு முரண்பட்ட தகவல்கள் ஏதும் ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதைப் பார்க்கும்போது அவரது வரலாற்று ஞானத்தின் மீதான grip சிறப்பு.

விஷ்ணுபுரம் என்கிற பண்டைய வரலாற்று நாவலில் ஜெயமோகனார் கதைமாந்தர்கள் மிளகாய் பயன்படுத்தியதாக எழுதியதும் பின்னர் அதை அவரது சீடர்கள் மகாபாரத்ததில் வரும் காந்தாரி மிளகாய் என்று முட்டுக் கொடுத்ததும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெக்சிகோவில் தோன்றிய மிளகாய் உலகம் முழுக்க பரவிய வரலாறும், வடகிழக்கு மாநிலங்களில் வளரும் ‘பூத் ஜோலோக்கியா’ மிளகாய்க்கும் காந்தாரி மிளகாய் எனப்படும் சீனி மிளகாய்க்கும் விஷ்ணுபுரம் கதைக்கும் உள்ள தொடர்பை அவரது தற்கொலைப்படையினரால் மட்டுமே நம்ப முடியும்.

சுளுந்தீ விமர்சனம் என்ற பெயரில் தனியாக கிண்டிலில் ஒரு புத்தகமே வெளியிடலாம். அந்த அளவுக்கு எழுத வேண்டியது இருக்கிறது. பன்றிமலைச் சித்தர் குறித்தும் நிறைய சொல்ல வேண்டிவரும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.