பெப்சி – உருளைக்கிழங்கு – காப்புரிமை வழக்கு விவகாரம்

பெப்சி – உருளைக்கிழங்கு – வழக்கு விவகாரம்.

நீங்க கஷ்டப்பட்டு வாயப்பொத்தி, வயித்தபொத்தி சம்பாரிச்சு ஒரு வீடு கட்டி வாடகைக்கு விட்டுட்டு வெளியூர் போயிடறீங்க. எனக்கு வாடகைக்கு விட்ட அதை நான் உள்வாடகைக்கு விட்டு நாலு காசு பாத்தா சரியா தப்பா?

மணல் ஆற்றிலிருந்து வந்தது. செங்கல், சிமெண்ட்டுக்கான கச்சாப்பொருள் எல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த காடுகளை, மலைகளைத் தோண்டி எடுத்துவரப்படுகிறது. பணம் என்பது வங்கி கடன் வழங்கியது. வங்கிக்கு அரசாங்க முதலீடும் பொதுமக்களின் முதலீடுமே மூலதனம். அதாவது வங்கி கடனாக அளிப்பது மக்களின் பணம். மின்சாரத்தை ஆற்று நீரிலிருந்தும் ஏன் காற்றிலிருந்தும் கூட இலவசமாகத்தான் இயற்கை அருள்கிறது.

அதாவது ஒரு வீடு என்பது நம் முன்னோர்கள் பாதுகாத்து வைத்த இயற்கை வளங்களாலேயே உண்டக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு அச்சடித்த ஸ்டாம்பு பேப்பரை வைத்திருக்கும் நபர் எப்படி இந்த நாட்டின் குடிமகனாகிய என் தார்மீக உரிமையை மறுக்கலாம்? அதாவது அந்த ஹவுஸ் ஓனர் எப்படி நான் உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்கலாம்?

இந்த நாட்டின் குடிமகனுக்கு ஒரு வீட்டை உள்வாடகைக்கு விட உரிமையில்லையா? ஓனருக்கு வாடகை கொடுத்த பிறகு நான் என்ன செய்தால் அவருக்கு என்ன?

ooooooo———————————–ooooooo

விதைகளுக்கு, பயிர் இரகங்களுக்கு இந்தியாவில் காப்புரிமை (patent) கிடையாது. அவை நாட்டின் சொத்து. யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் உழைத்து ஒரு குறிப்பிட்ட பயிர் இரகத்தை மேம்படுத்தியிருந்தால் அதன் மீது breeder rights உண்டு. மற்றவர்கள் வர்த்தக ரீதியாக அதைப் பயன்படுத்தி வியாபாரம் செய்தால் இராயல்ட்டி கேட்கலாம்.

அதேநேரத்தில் நீங்கள் உருவாக்கிய இரகத்தை மேற்கொண்டு மேம்படுத்தியோ, பிற இரகங்களுடன் கலக்கியோ ஒரு புதிய இரகத்தை உண்டாக்கி, உங்களுடைய இரகத்திலிருந்து அது வேறானது என்று நிரூபித்துவிட்டால் அந்த இரகம் மீது நீங்கள் உரிமை கோர முடியாது.

புழக்கத்தில் இருக்கும் ஒரு இரகத்தின் பண்புக்கூறுகளை (traits) உறுதிப்படுத்த DUS characters மற்றும் Grow Out Test (GoT) உடன் இன்று DNA fingerprinting-உம் சேர்ந்துவிட்டது. வீரிய இரக விதை வியாபாரத்தில் வழக்கமாக என்ன நடக்குமென்றால் ஒரு பெரிய கம்பெனி பெருத்த R&D பொருட்செலவுடன் ஒரு இரகத்தை சந்தைக்கு கொண்டுவரும். சில லெட்டர்பேடு கம்பெனிகள் அந்த இரகத்தை அதே கம்பெனியின் பழைய இரகம் ஒன்றுடன் கிராஸ் செய்து கிடைக்கும் இரகத்தைத் திரும்ப அந்த புதிய இரகத்துடன் கிராஸ் செய்து சந்தையில் வேறு பெயரில் இறக்கி விட்டுவிடுவார்கள். இந்த மாதிரி நிறைய தந்திரோபாயங்கள் இருந்தாலும் புரிதலுக்காக இங்கே மிக எளிமையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் DUS, GoT, DNA fingerprinting சோதனைகள் எல்லாவற்றையும் ஏமாற்றிவிடலாம். பெரிய கம்பெனியால் இதை சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்று அந்த லெட்டர்பேட் கம்பெனிக்குத் தெரியும். அதனால் பெரிய கம்பெனி சித்ரா என்று பெயரிட்டு விற்பனை செய்தால் இவர்கள் சுசித்ரா என்று பெயரிட்டு பொட்டலம் அடிப்பார்கள்.

சிம்லாவில் உள்ள உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தினால் வெளியிடப்பட்ட சில இரகங்கள் சிப்ஸ் வியாபாரத்துக்கு பேருதவி புரிந்தாலும் பின் கருகல் நோய் பாதிப்பு காரணமாகவும், சந்தையிலிருந்து தங்களது கம்பெனி தயாரிப்புகளின் தரம் வேறுபட்டு நிற்க வேண்டும் என்பதாலும் பெப்சி, ஐடிசி போன்ற பல நிறுவனங்கள் in-house reaserch -இல் இறங்கி புதிய இரகங்களை உருவாக்கும் பணியில் வெற்றியும் கண்டன.

அதாவது public domain-இல் உள்ள கருமூலப்பொருளில் (germplasm) இல்லாத சில பண்புக்கூறுகளை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த parent line-களைப் பயன்படுத்தி பல்வேறு உத்திகளின் மூலமாக மேம்படுத்தி ஒரு இரகத்தை வெளியிடும்போது அதை அரசாங்கத்திடம் எல்லா நிறுவனங்களும் பதிவு செய்துகொள்ளும். அதை மற்றவர்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவது குற்றமாகும். (Genetically Modified என்பது வேறு. மரபீனி மாற்றம் எனப்படும் அதை பருத்தி தவிர வேறு எந்த பயிரிலும் குழப்பிக்கொள்ள வேண்டாம்).

Protection of Plant Varieties and Farmers Rights Act இல் Breeders right என்ற ஒன்றும் உள்ளது. அதாவது பயிர் இரகங்களைப் பாதுகாத்து வைத்து அதைத் தொடர்ந்து நல்ல விதைகளை பிரித்தெடுத்து மேம்படுத்தி வருவதால் farmer-உம் ஒரு breeder ஆவார்.

உதாரணமாக கோயமுத்தூர் வரிக் கத்தரி என்ற ஒன்று உண்டு. CVK எனப்படும் ஊதா நிறத்தில் வெள்ளைக் கோடுகள் போட்ட கத்தரி கோயமுத்தூர் சுற்றுவட்டாரத்தில் இயல்பாகக் கிடைப்பது. இதில் வேறு சில இரங்களைக் கலக்கி அதே மாதிரி கத்திரியை உருவாக்கி வந்து இனிமேல் யாரும் CVK எனப்படும் கோயமுத்தூர் வரிக் கத்தரியைப் பயன்படுத்தினால் எங்கள் கம்பெனிக்கு இராயல்ட்டி தர வேண்டும் என்று கேட்க முடியாது. புதிய இரகமானது பொதுப் புழக்கத்தில் (Public domain) உள்ள இரகங்களைவிட முற்றிலும் வேறானது என்று நிரூபிக்க வேண்டும். ஒருவேளை காய்ப்புழுவுக்கு இயற்கையாகவே எதிரான ஒரு இரகத்தைக் கொண்டுவந்தால் (அதை முறையாக பதிவு செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது பொதுப் பொருளாகிவிடும்) அதற்கு மற்றவர்கள் விதைக்காகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

கரும்பில் இன்று 10% சர்க்கரை ரெக்கவரி மட்டுமே ஆலைகளுக்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டன் கரும்பைப் பிழிந்து காய்ச்சினால் நூறு கிலோ சர்க்கரை கிடைக்கும். நீங்கள் அரிதான ஏதாவது ஒரு wild இரகம் ஒன்றைப் பிடித்துவந்து ஏற்கனவே இருக்கும் இரகங்களுடன் கலப்பினங்களை உண்டாக்கி 25% சர்க்கரை ரெக்கவரி வருமளவுக்குச் செய்து அதை முறையாகப் பதிவு செய்துகொண்டால் அதை யாரேனும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தும்போது இராயல்ட்டி கோரலாம்.

அதே நேரத்தில் சாதாரண கரும்பில் 10% ரெக்கவரி எடுக்கும் ஆலை ஒன்று புதிதாக சில வடிப்பான்களையோ, வேறு கருவிகளையோ நிறுவி 25% ரெக்கவரி எடுத்தால் அந்த process -ஐ பேடன்ட் செய்ய முடியும். அதாவது சர்க்கரை எடுக்கும் process-க்கு patent. சர்க்கரை என்னும் product-க்கு patent அல்ல. ஆனால் இந்தியாவில் process patent-க்கு எந்த மதிப்பும் கிடையாது. ஒன்றுக்கு இரண்டு கருவிகளை நிறுவி அந்த process patent-ஐ பைபாஸ் செய்துவிடுவார்கள். நீதிமன்றங்களுக்கு இந்த டெக்னிக்கல் விவகாரங்கள் சுத்தமாக புரியாது. புரிந்தாலும் அரசியல் அழுத்தம் அல்லது உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் எந்தப் பக்கம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வரும்.

குஜராத்தைப் பொறுத்தமட்டில் நொறுக்குத்தீனி தயாரிப்பில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய கம்பெனிகள் உண்டு. மூன்று மாவட்டத்துக்கு ஒரு பிராண்ட் இராஜாவாக இருக்கும். அங்கே Lays, Kurkure, etc. போன்ற பன்னாட்டு நிறுவன பிராண்டு எல்லாம் சேர்ந்து 20% சந்தையை வைத்திருந்தாலே ஆச்சரியம்.

இந்த பிரச்சினையைப் பொறுத்தமட்டில் பெப்சியின் உருளைக்கிழங்கு இரகத்தை சாகுபடி செய்த்தற்காக மட்டுமே வழக்குத் தொடரப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் குஜராத்திகள் சிப்ஸ் போட்டு விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டதால்தான் “இதுவரை ஆன சேதத்துக்கும் சேர்த்து” என்று பெரிய தொகைக்கு வழக்கு போட்டிருக்கிறது பெப்சி.

வியாபாரத்தில் எந்த மனசாட்சியும் இல்லாதவர்கள் குஜராத்திகள். E-way bill உட்பட GST-யில் இத்தனை கிடுக்குப்பிடிகள் இருந்தும் வீடுகளுக்கு டைல்ஸ் வாங்கும்போது “பில் போட்டா ஜிஎஷ்டி 28% வரும் பையா” என்று சொல்லி தமிழகத்தில் எப்படி டைல்ஸ் வியாபாரம் நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும்.

பி.டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் முன்னரே சட்டைப் பாக்கெட், பேண்ட் பாக்கெட், செக்-இன் லக்கேஜ், ஹேண்ட் லக்கேஜ், குழந்தைகளின் ஹேண்ட்பேக் என எல்லாவற்றிலும் ஒவ்வொரு விதையை மட்டும் மட்டும் போட்டு அமெரிக்காவிலிருந்து எடுத்து வந்து இங்கே back cross செய்து அந்த பண்புக்கூறுகளை interogress செய்து விற்பனை செய்தது, ரவுண்டப் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் வாய்ந்த பருத்தி இரகம், பி.டி. கத்தரி இரகம் போன்ற அதிகாரப்பூர்வமாக விற்க அரசு அனுமதியே இல்லாதவற்றையும் விற்பனை செய்வது என நவீன fraud எல்லாமே குஜராத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும்.

இந்தியாவிலேயே தமிழகத்திலும், குஜராத்திலும்தான் மனைவி பெயரில் Firm-ஐப் பதிவு செய்து கணவர்கள் தொழில் நடத்துவது அதிகம். பெப்சி வழக்குத் தொடர்ந்திருக்கும் அந்த அப்பாவி விவசாயிகள் “மே பேகுன்னாரா சாப்” என்று சொல்லிக்கொண்டே இருந்தாலும் அவர்களது மனைவி, மகன், மகள் பெயரில் நடக்கும் வியாபாரத்தின் வீரியத்தை அறியாமல் ஒரு பன்னாட்டு கம்பெனி கோடை காலத்தில் நடக்கவிருக்கும் குளிர்பான விற்பனை பாதிக்கப்படலாம் என்று தெரிந்தும் இறங்குகிறது என்றால் அதன் முக்கியத்துவம் என்ன, வீரியம் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும்.

பெப்சி தனது பொருட்செலவில் உண்டாக்கிய இரகத்தை ஒப்பந்தம் போட்டு வாங்கி – ஏமாற்றிவிட்டு – இன்று உள்ளூர் சிப்ஸ் கம்பெனிகளுக்கு விற்பவர்கள் நாளை அதன் சர்வதேச போட்டியாளர்களுக்கும் விற்பார்கள். அந்த கம்பெனிக்காரன் கேள்வியே கேட்கக்கூடாது. ஏனென்றால் அவர்கள் அப்பாவி விவசாயிகள். பச்சையாக அடுத்தவன் உழைப்பைத் திருடித் தின்றுவிட்டு விவசாயி என்ற போர்வையில் ஒளிந்துகொள்ளும் அயோக்கியர்களை ஆதரிப்பது ஒரு குரூர மனநிலை.

நிலம் வைத்திருப்பவன் அடுத்தவன் உழைப்பை எவ்வளவு வேண்டுமானாலும் சுரண்டிக்கொள்ளலாம். அது மேலிருந்து பணத்தாலும், ஆராய்ச்சியாலும் வரும் இன்டெலெக்சுவல் உழைப்பாக இருந்தாலும் சரி, கீழிருந்து வரும் கூலிக்கார மக்களின் ஃபிஸிகல் உழைப்பாக இருந்தாலும் சரி.

சுற்றுச்சூழல் ஆர்வலர், இயற்கைப் போராளி, விவசாய செயற்பாட்டாளர் என்றாலே பாரம்பரியமான மரபுசார் முறைகள் கேள்வி கேட்கப்படவே கூடாது என்று கிராமப் பொருளாதாரத்தின் சாதிப் படிநிலைகளைப் பாதுகாப்பவர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள்தான். எனவே ஆர்வலர்கள் பெப்சியின் நிலையை நியாயப்படுத்தினால்தான் ஆச்சரியம்.

இது நில உரிமையாளர்கள் விவசாயி என்ற போர்வையில் செய்துகொண்டிருந்த அறிவுசார் சுரண்டலின் மீது வைக்கப்பட்டிருக்கும் முதல் அடி. இஃது எமோஷனலாகப் பார்க்கப்பட்டு பெப்சிக்கு பின்னடைவே ஏற்படும் என்றாலும் புதிய தொழில்நுட்பங்களுக்கும் அதன்மேல் இந்தியாவில் செய்யப்பபடும் முதலீட்டுக்கும் என்ன மதிப்பு இருக்கும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தும். மற்றபடி சும்மா கார்ப்பரேட் கம்பெனி, அப்பாவி விவசாயி லபோதிபோ என்று சில்லறைகளைச் சிந்தவிடாமல் வேடிக்கை பார்ப்பது இந்தத் தொழிலில் ஈடுபடாத பொதுமக்களின் உடம்புக்கு நல்லது. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம். உங்கள் வீட்டை ஒருவர் உள்வாடகைக்கு விடுவது போன்ற விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பீர்களோ அதேதான் பெப்சி-உருளைக்கிழங்கு விவகாரத்திலும் நியாயமாக இருக்கும்.

Professionally Managed Companies – நமது நிலைமை என்ன?

நிறுவனம் ஒன்றை உண்டாக்கி ஆரம்பகட்டத்தில் சிறப்பாக நடத்திச்செல்லும் புரமோட்டர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை Professionalism என்ற ஒன்றை கடைசி வரைக்கும் பின்பற்றாமல் வீட்டுக்குப் பின்னால் ஆடு மாடு கட்டும் தொண்டுப்பட்டி மாதிரியே கம்பெனி நடத்தி கடைசியில் அதைக் கொண்டுபோய் குப்புற கவிழ்த்து, தான் பாடையில் போகும்போது “சேர்மன், அ.ஆ.இ.ஈ. குரூப் ஆஃப் கம்பெனீஸ்” என்று மாலையாகப் போட்டுக்கொண்டு போய்விடுகின்றனர். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் படிப்படியாக கம்பெனி மூடப்பட்டு விடுவதோ அல்லது விற்கப்பட்டுவிடுவதோதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஆரம்பத்தில் பங்குதாரர்கள் சிலர் இணைந்து பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆரம்பிப்பது, மேற்கொண்டு முதலீடு போட்டு விரிவுபடுத்துவது இலாபத்தைக் கூட்டி புதிய அலகுகளை நிர்மானம் பண்ணுவது வரைக்கும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நடத்தை, சுய ஒழுக்கம், வெளியுலக பழக்கவழக்கங்களே நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விரிவுபடுத்தும்போதும், யாரேனும் ஒரு பங்குதாரர் ஒத்துழைப்பு தராமல் சொதப்பும்போதும் அவருடைய பங்குகளை மற்றவர்கள் வாங்கிக்கொண்டு வெளியேற்றும் கட்டம் வரைக்கும் கம்பெனி மீது பங்குதாரர்களுக்கு ஒரு intimate பற்று இருப்பதில் தவறேதுமில்லை.

என்னிடம் நல்ல வியாபார யோசனையும், சந்தை வாய்ப்பும் இருக்கிறது ஆனால் போதுமான மூலதனம் இல்லை என்று சொல்லி, பங்குகளை விற்று மற்றவர்களுடைய மூலதனத்தை உள்ளே கொண்டுவரும்போது கம்பெனி மீதான புரோமோட்டருடைய பற்று குறைந்து Professional Management-க்கு மாறும் பழக்கம் இந்தியாவைப் பொறுத்தவரை கிடையவே கிடையாது.

பணம் போட்டு பங்குகளை வாங்கியவன் தனது முதலீட்டுக்கு ஈவுத்தொகை எவ்வளவு வரும், பங்கு மதிப்பு எப்படி இருக்கும் என்று கணக்குப்போடுவது இயல்பு. அதிலும் 25%-க்கு கீழான பங்குகளை வைத்திருக்கும் புரமோட்டர் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது. என்றைக்கு முகம் தெரியாத நபர்களுக்கோ, முதலீட்டு நிறுவனங்களுக்கோ பங்குகளை விற்கிறோமோ அன்றே நம்முடைய தார்மீக உரிமை போய்விடுகிறது. பணம் போட்டவன் கேள்வி கேட்கத்தானே செய்வான்?

ஊரான் வீட்டுப் பணத்தை வாங்கி முதலீடு செய்துவிட்டு பின்புறமாக இலாபத்தை உருவி வாரிசுகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் காரியங்களில் இறங்கிய பெரிய மனிதர்கள் பலர் மேற்கு மாவட்டங்களில் உளர். ஆலை அங்கத்தினர்களுக்குப் போகவேண்டிய பணத்தில் பத்து பத்து ரூபாயாக பிடித்தம் செய்து கோவிலுக்கு ஜீரனோத்ர மஹா கும்பாபிஷேகம் செய்துவிட்டு பரிவட்டத்தையும் வாங்கிக்கொண்டதோடு ஒரு “சிறப்பு பட்டம்” ஒன்றையும் பெற்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட தொழிலதிபரின் கதை கோயமுத்தூர்ப் பக்கம் பிரபலம்.

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) என்ற பெயரில் எட்டணாவுக்கு சமூக சேவையும் அதற்கு இரண்டு ரூபாய்க்கு விளம்பரமும் பண்ணிக்கொண்டு இருப்பதோடு, கம்பெனி ஆரம்பித்த காலத்தில் இருந்த தனது எடுப்பு தொடுப்புகளின் வாரிசுகள் வைத்திருக்கும் Foundation-களுக்கு நிதி உதவி அளித்து கம்பெனி பேலன்ஸ் ஷீட்டிலேயே சின்ன வீட்டைப் பராமரித்துவந்த பெரிய முதலாளி வைகுண்ட பிராப்தி அடைந்த பிறகு நிர்வாகத்துக்கு வரும் வாரிசுகளுக்கு இந்த நுணுக்கங்களெல்லாம் புரியாது. மிக அதிக விலைக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து கச்சாப்பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவது ஒரு வெண்டர் என்ற பெயரில் மாதாமாதம் பில் பட்டுவாடா செய்யப்பட்டு வந்திருக்கும்.

பெரிய முதலாளியின் இரதசாரதிக்குத் தெரிந்த இந்த இரகசியங்களெல்லாம் சின்ன முதலாளிக்குத் தெரியாது அல்லது புரியாது. Restructuring என்ற பெயரில் பல செலவினங்களில் கிடுக்குப்படி போடும்போது கம்பெனியின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரச்சினைகள் கிளம்பும். எதற்கு பிரச்சினை வருகிறது என்றே தெரியாமல் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் கம்பெனி மூடப்படும் அல்லது விற்கப்படும். இந்தியா முழுவதும் நடந்துவரும் வழமையான வழக்கம் இது.

SME வகையறா நிறுவனங்களில் பங்குதாரர்களுடைய குடும்பத்தினரின் தலையீடே பெரும்பாலும் கம்பெனியை முட்டுசந்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது. முப்பது வயதில் ஆரம்பித்து நாற்பது வயதுவரை சிறப்பாகநடத்திவந்த கம்பெனியில் பங்குதாரர்களுடையை அப்பா, அம்மா அல்லது மனைவி வந்து நிர்வாகத்தில் தலையிடும்போது அதன் சரிவு தொடங்கிவிடுகிறது. வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்கும் அன்றாட நிர்வாக முடிவுகளில் தலையிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை. நாற்பது வயது மகனுக்கு ‘உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இர்றா’ என்று உட்கார வைத்து ஆலோசனை வழங்குவது இந்திய அப்பாக்களுடம் உள்ள சிறப்பு.

இந்த நூற்றாண்டில் இருக்கும் அரசியல், தகவல் தொழில்நுட்ப சூழ்நிலைகளில் ஒரு நிறுவன நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சிறப்பான ஆலோசனைகளை வழங்கும் நூல்களுள் ஆகச்சிறந்த ஒன்று, Tom Peters எழுதிய Re imagine. ஒரு பெரிய நிறுவனத்தை உண்டாக்க வேண்டும், மிகப்பெரிய அளவுக்கு அதை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற வேட்கையுடையவர்கள் அவசியம் அலுவலக நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று. புத்தகம் என்றால் முதல் அலகிலிருந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டமைப்பையே உடைத்து எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எழுதப்பட்டது.

இன்றைய millenials நிறுவனங்களை உண்டாக்கி வளரும் வேகத்துக்கும் அவர்களுடைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ளவும் Re-imagine வாசிக்க வேண்டிய ஒன்று.

படத்திலிருக்கும் கட்டுரை Business Standard நாளேட்டில் அண்மையில் வந்தது.

வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…