மரச்செக்கு எண்ணெய் குறித்த சில சர்ச்சைகள்

கேள்வி: அண்மையில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரிகளை கடும் கோபத்திற்குள்ளாக்கிய அரசாங்க விதிமுறைகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து விளக்க முடியுமா?

பதில்: உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய்வித்துப் பயிர்களை மொத்த வியாபாரிகளுக்கோ, ஆலைகளுக்கோ விற்றுவந்த விவசாயிகள் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்றால் இலாபம் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டனர். அதில் தவறேதுமில்லை; பல தொழில்முனைவோர்கள் அவ்வாறு ஒரு குண்டுசட்டி வாழ்க்கையை உடைத்துக்கொண்டு வெளியில் வந்தவர்களே. அஃது அந்தந்த காலகட்டத்துக்கேற்ப பரிணமித்து வந்தவரைக்கும் எந்த சர்ச்சையும் இல்லாமல் இருந்து வந்தது. கூடு திரும்புதல், மரபுக்கு மாறுதல், பாரம்பரியத்துக்கான பாய்ச்சல், கார்ப்பரேட்டைக் காவு வாங்குதல் போன்ற பெயர்சூட்டல்களோடு வந்தவர்களாலேயே தொடர்ச்சியாக சர்ச்சைகள் தோற்றுவிக்கப்பட்டு விளம்பரத்திற்காக பரப்பப்பட்டும் வருகிறது.

மரச்செக்கு எண்ணெய் என்றாலே பரிசுத்தமானது, புனிதமானது என்றே மார்க்கெட்டிங் செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய தோட்டத்தில் விளைந்த்தையோ, அக்கம்பக்கத்திலோ எண்ணெய்வித்துக்களை வாங்கி அருகிலுள்ள செக்கில் கொடுத்து ஆட்டும்போது நாமே நின்று வாங்கி வருவதில் தூய்மை, தரம், கலப்படம், சரியான அளவு, விலை என்ற எந்த கேள்வியுமில்லை. அரசாங்கத்துக்கும் இம்மாதிரியான நிகழ்வுகளில் எந்த அக்கறையுமில்லை.

இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்துத் தரும் பணத்தைப் பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபடும்போது இந்திய அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கும், அவ்வப்போது கொண்டுவரப்படும் சட்டதிருத்தங்களையும் மதித்தே பரிவர்த்தனைகளில் ஈடுபடவேண்டும் என்பது Terms & Conditions-இல் தன்னிச்சையான ஒன்றாகும்.

மரச்செக்கு எண்ணெய் விற்றாலும், மாவடு விற்றாலும் FSSAI-யிடம் அனுமதி பெற்றாக வேண்டும். தயாரிப்பு தேதி, காலாவதி நாள், குவியல் எண், தயாரிப்பாளர் முகவரி, FSSAI உரிம எண் போன்றவை கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். மரச்செக்கு எண்ணெய் உற்பத்தியாளர் என்றால் கேள்விக்கு அப்பாற்பட்ட, பணம் கொடுத்து எண்ணெய் வாங்கிய நுகர்வோருக்கு பதில் சொல்ல அவசியமில்லாத தாதா கிடையாது என்று அரசாங்கம் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டது. இந்த ஒரே அறிவிப்பிற்காக அரசாங்கம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக செயல்படுவதாக மரச்செக்கு எண்ணெய் வியாபாரிகள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கின்றனர்.

அப்பாவி விவசாயிகளை ஆயிரம் கேள்வி கேட்கும் அரசு, கார்ப்பரேட் கம்பெனிகளைக் கேட்பதில்லை, அய்யகோ பன்னாட்டு எண்ணெய் விற்பனைக் கம்பெனிகளின் அட்டகாசம், அதானியின் அடக்குமுறை என்று பேஸ்புக் பதிவுகளைக் கண்டு சஞ்சலப்படத் தேவையில்லை. இந்த அப்பாவி மரச்செக்கு விவசாயிகள் தரமில்லாத, கலப்பட எண்ணெயை பள்ளிகளுக்கோ, திருமண மண்டபங்களுக்கோ, உணவகங்களுக்கோ சப்ளை செய்துவிட்டு ஏதாவது விபரீதம் நடந்தவுடன் ஆளும் அரசு அதிகார வர்க்கம் இதை ஓழுங்குபடுத்தவில்லை, செயல்தலைவர் செயல்படவில்லை, சிஸ்டம் சரியில்லை என நடுநிலையாளர்கள் பேட்டி கொடுப்பதைத் தவிர்க்க, குடிமக்களின் உடல்நலனில் அக்கறையில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் இயல்பாக நடக்கும் ஒன்றாகும்.

வாகை மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் என்பதற்காக புனிதமான ஒன்றாகிவிடாது. சமூக அக்கறையுடன் பேஸ்புக்கில் பதிவு இடுகிறார்கள் என்றாலும் எண்ணைய்வித்துக்கள் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட வயல்களிலிருந்து வாங்கப்பட்டு எண்ணெய் பிழியும்போது அவற்றின் concentration அதிகமாகி ஆபத்தில் முடியவும் வாய்ப்பிருக்கிறது. இதை ஒப்பிடுகையில் ரிஃபைன்டு எண்ணெய்கள் நிச்சயமாக பாதுகாப்பானவை. எண்ணெய் வித்துக்கள் எங்கிருந்து தருவிக்கப்படுகிறது, எங்கு எப்போது ஆட்டப்படுகிறது, எத்தகைய பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது என்பது தெரியாதபட்சத்தில் FSSAI உரிமமாவது இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கை விவசாயம் செய்வதாக பேஸ்புக்கில் படம் போட்டு விற்பனை செய்யும் ஆசாமிகளை நம்பி குடும்பத்தின் உடல்நிலையை அடகு வைக்கக்கூடாது.

ஒரு கிலோ கடலை இன்ன விலை, ஒரு கிலோவுக்கு இத்தனை மி.லி எண்ணெய் மட்டுமே வரும், இத்தனை கிலோ கடலைக்கு இத்தனை கிலோ புண்ணாக்கு வரும், ஒரு கிலோ புண்ணாக்கு இன்ன விலை, ஆட்டுவதற்கு ஆகும் மின்சார, இயந்திரத் தேய்மான, ஆட்கூலி செலவு இவ்வளவு, ஆண்டுக்கு இத்தனை மாதங்கள் மட்டுமே இன்ன விலைக்கு கடலை கிடைக்கும் எனும்போது கடலை எண்ணெய் மட்டும் எப்படி இன்ன விலைக்கு ஆண்டு முழுவதும் கிடைக்கிறது என்ற அதே கணக்கு மரச்செக்கு எண்ணெய்க்கும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

நிலவேம்பு கசாயம் நல்லது என்று பேஸ்புக்கில் சூரணம் விற்பனை செய்தவர்கள் அதன் செயல்திறன் குறித்த சில அடிப்படை கேள்விகள் எழுந்தவுடன் ஓட்டம்பிடித்துவிட்டதையும், டெங்குவால் தமிழகத்தில் நிகழ்ந்த மரணங்களையும் நினைவில் கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர் என்பது சமகாலத்தின் ஸ்டேண்டர்டு ஸ்டேட்மெண்ட். ஆம், அவர்கள் வியாபாரம் செய்ய வந்தவர்களை வியாபாரிகளாகத்தான் பார்த்ததனர். இன்றைய சமூகம் வியாபாரிகளை எல்லாம் விஞ்ஞானிகளாகக் கருதுவதால் நமது வருங்கால சந்ததி நிச்சயமாக நமக்கு ‘எம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்’ என்ற அங்கீகாரத்தை தராது.