வணிக நிறுவனங்களின் வரலாறு என்பது கார்ப்பரேட் சதி என்றுதான் எதிர்காலத்தில் புரிந்துகொள்ளப்படுமா?

கேள்வி: இயல்பாக நடக்கும் அறிவியற் கண்டுபிடிப்புகள், அதன் பயன்பாடுகள், தொழிற்புரட்சியின் தாக்கம், வணிகம், தொழில் போட்டி, தேசபக்தி, அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றை பிற்காலத்தில் கற்பனை கலந்து பீதியை உண்டாக்கும் வண்ணம் பரப்ப இயலுமா? மக்கள் அதை நம்புவார்களா?

பதில்: நீங்கள் திருப்பூரில் ஒரு ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும் உங்கள் சகோதரர் கோவையில் ஒரு ஃபவுண்ட்ரி ஆலை நடத்துவதாகவும் வைத்துக்கொள்வோம். உறவினர்கள், நண்பர்களின் சின்னச்சின்ன யூனிட்கள் மூலம் ஜாப் ஒர்க் செய்து பிழைப்பு நடத்தி வருகிறீர்கள். திடீரென இந்தியாவுக்கும் பக்கத்து நாட்டுக்கும் போர் மூள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாடே பரபரப்பாக யுத்தத்தை கவனிக்கிறது, குடிமகன்கள் எல்லோரும் தன்னாலான உதவிகளை செய்வதன் மூலம் தாய்நாடு போரில் வெற்றிபெறவேண்டும் என துடிக்கிறார்கள். அந்த நேரத்தில் இராணுவ வீரர்களுக்கு போர்க்கள உடைகளைத் தைக்கும் வசதி உங்கள் ஆயத்த ஆடை நிறுவனத்தில் இருப்பதால் இராணுவத்தினர் உங்களுக்கு பெரிய ஆர்டரைத் தருகிறார்கள். போருக்கு நேரடியாகச் செல்ல முடியவில்லை என்றாலும் நெஞ்சில் தேசியக்கொடியைக் குத்தியவாறே கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி இராணுவம் கேட்டதைவிட அதிக தரத்தில் ஆடைகளை தயாரித்து அனுப்பி வைக்கிறீர்கள். உங்கள் ஊழியர்களும் காலை மாலை ஒரு மணிநேரம் கூடுதலாக உழைத்து தேசத்தற்கு தங்களாலான சேவையை நல்குகிறார்கள்.

ஆடை தயாரிப்பில் மிச்சம் விழும் கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட இராணுவம் தளவாடங்களைத் துடைக்கப் பயன்படும் என வாங்கிச் செல்கிறது. உங்களது சகோதரர் நடத்தும் பவுண்ட்ரியும் போர்க்கருவிகளின் உதிரி பாகங்களை தயாரித்து இராணுவத்துக்கு அனுப்பி யுத்தத்துக்கு உதவுகிறது. நாடு போரில் வெல்கிறது. போருக்கு உதவிய நிறுவனங்கள், வங்கிகள், அரசாங்க & தனியார் ஊழியர்கள், தொழிலதிபர்கள் எல்லோரும் பெருமிதத்துடன் கர்வத்துடன் மிடுக்காக வலம் வருகிறார்கள். இராணுவ ஆர்டர் கிடைத்த நிறுவனங்கள் பெருநிறுவனங்களாகின்றன. நாட்கள் மகிழ்ச்சியாக செல்கின்றன. ஊடகங்கள் மக்கள் மகிழும்வண்ணம் செய்திகளை வெளியிட்டவாறே இருக்கின்றன.

யுத்தம் நடக்கும்போது இராணுவத்துக்கு சப்ளை செய்யமுடியாது என்று நீங்கள் மறுப்பதாக வைத்துக்கொள்வோம். மறுநாளே தேசத்துரோகி, அந்நிய நாட்டு கைக்கூலி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். வழக்கமாக நடக்கும் அத்தனை அரசாங்க நெருக்கடிகளும் தரப்படும். தேசத்துரோகி என்பதால் உங்களது சப்ளையர்கள், வாடிக்கையாளர்களே விலகுவார்கள். அல்லது ஒருகட்டத்தில் நிறுவனம் அரசுடைமையாக்கப்பட்டுவிடும். உங்களை ஆதரிப்பவர் யாருமின்றி அநாதையாக சொந்த நாட்டிலேயே சாக நேரிடலாம். நடைமுறை என்னவோ இப்படித்தான் இருக்கும்.

ஆனால் பின்னாளில் வரும் அரைகுறை அறிஞர்கள் நீங்களும் உங்கள் சகோதரரும் யுத்தத்துக்குத் தேவையான நாசகார பொருட்களை தயாரித்து இராணுவத்துக்கு வழங்கி பல இலட்சம் அப்பாவி மக்களை அண்டை நாட்டில் படுகொலை செய்ய துணைபோனதாகவும், கட்டிங் வேஸ்ட் துணிகளைக்கூட விற்று காசு பார்த்ததாகவும், ஊழியர்களை மனசாட்சியே இல்லாமல் ஓவர்டைம் பார்க்க வைத்ததாகவும், உங்களது நிறுவனத்துக்குத் தேவையான ஜாப் ஒர்க் ஆர்டர்களைக்கூட உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி கொள்ளை இலாபம் பார்த்ததாகவும், இதற்கு பல வங்கி அதிகாரிகள் துணைநின்றதாகவும், பின்னாளில் அவர்களும் பதவி உயர்வு பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததாகவும் எழுதுவார்கள்.

பிற்காலத்தில் இதை மல்லாக்கப் படுத்துக்கொண்டு வாட்சப்பில் படிப்பவர்களுக்கு இரத்தம் கொதிக்கும். இன்னொருவாட்டி படித்துப் பார்த்து இனப் படுகொலைக்கு துணைபோன இலுமினாட்டி என்று ஓலமிடுவார்கள்.

காற்றில் 78% நைட்ரஜன் இருந்தாலும் தாவரங்களால் அதை நேரடியாக கிரகிக்க இயலாது. விலங்குகளின் செல்களில் உள்ள புரதத்துக்கும் நைட்ரஜன் அடிப்படை. மக்கள்தொகை பெருக ஆரம்பித்ததால் வேட்டையாடி உண்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதால் விவசாயம் செய்து தானியங்களை சேமித்துவைத்து உண்ணவும், வியாபாரம் செய்யவும் ஆரம்பித்தார்கள். தொடர்ந்து விவசாயம் செய்ததால் மண்ணில் நைட்ரஜன் குறைய ஆரம்பித்தது. சாணங்களாலும், தாவரக் கழிவுகளாலும் நைட்ரஜன் எடுக்கப்படும் வேகத்துக்கு திருப்பியளிக்க முடியவில்லை.

அந்த காலகட்டத்தில் சிலி நாட்டில் அடகாமா பாலைவனத்தின் மணலில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இருந்ததால் கப்பல் கப்பலாக மணலை அள்ளிச் சென்றார்கள். சில வருடங்களில் மணலே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று பூகோளவியலாளர்கள் கவலைப்பட்டார்கள். அங்கிருந்த மக்கள், சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்பு உண்டாகும் என அஞ்சினார்கள்.

அந்நேரத்தில் குறைவான வினைபடுதிறன் கொண்ட நைட்ரஜனை ஹைட்ரஜனுடன் வினைபுரிய வைத்து அம்மோனியாவை செயற்கையாக உண்டாக்குகிறார் ஃப்ரிட்ஸ் ஹேபர் என்ற விஞ்ஞானி. இதற்காக 1918-இல் நோபல் பரிசு பெறுகிறார். இதனடிப்படையில் Haber – Bosch process உருவாகிறது. காலங்காலமாக இருந்து வந்த அம்மோனியா, நைட்ரேட் தேவையை Haber Bosch process மூலமாக நிறைவேற்ற பல ஆய்வகங்கள் முற்பட்டன. தொடர்ந்து பல மூலக்கூறுகளை, ஆய்வு முறைமைகளை ஃப்ரிட்ஸ் ஹேபர் தலைமையிலான குழு கண்டறிகிறது.

BASF, Bayer, Hoechst போன்ற நிறுவனங்களின் இணைப்பில் உருவான IG Farben கம்பெனி, சயனைடு அடிப்படையில் ஃப்ரிட்ஸ் ஹேபர் கண்டுபிடித்த Zyklon B எனும் இரசாயனத்துக்கு தானிய கிட்டங்கிகளில் பூச்சிகளைக் கொல்லும் fumigant-ஆக பயன்படுத்த காப்புரிமை வாங்கி வைத்துக்கொள்கிறது. ஹேபர் ஆரம்பித்த Degesch என்ற கம்பெனியே கடைசியில் IG Farben நிறுவனத்திடம் Zyklon Bயைப் பயன்படுத்த லைசன்ஸ் வாங்கி அமெரிக்காவில் கப்பல்களில் வரும் தானியங்களுக்கு fumigation செய்ய சப்ளை செய்கிறது. பின்னாளில் IG Farben கம்பெனி BASF, Bayer நிறுவனங்களுக்குள் கரைந்துபோனது. அதன் தலைமை அலுவலக கட்டிடம் இன்று University of Frankfurtஇன் நிர்வாக கட்டிடமாக மாறி ஆராய்ச்சிகளைத் தொடர்கிறது. அந்த காலகட்டத்தில் ஐரோப்பாவில் பல விஞ்ஞானிகள் நோபல் பரிசுகளைக் கூடையில் அல்லாத குறையாக வாங்கிக் குவிக்கிறார்கள்.

உலகப்போர் நடக்கும்போது ஹிட்லரின் இராணுவத்தினர் இந்த Zyklon Bயை பெருமளவில் வாங்கி யூதர்களின் முகாம்களில் விஷவாயுவாக செலுத்தி படுகொலை செய்கிறார்கள். ஹேபரின் Degesch கம்பெனியும் கரைந்துபோனது. போருக்கு உதவ மறுத்த பல விஞ்ஞானிகள் காணாமல் போனார்கள். சிலர் அமெரிக்கா ஓடிப் போனார்கள்.

அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் விதைகளை அக்கம்பக்கத்தில் உள்ள விவசாயிகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தனர். வியாபாரம் நன்றாக இருந்ததால் Queeny Monsanto என்ற அந்த பெண்மணியின் பெயரிலேயே மான்சாண்டோ என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து விதை வியாபாரம் செய்ய ஆரம்பித்தனர். பின்னாளில் அது ஒரு பெரிய நிறுவனமாகிறது. அந்நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்த களைக்கொல்லியின் விற்பனையும் அமோகமாக நடந்து வந்தது.

அப்போது வியட்நாம் போர் வருகிறது. கொரில்லா தாக்குதலில் அனுபவம் இல்லாத அமெரிக்கப் படை பலத்த அடி வாங்குகிறது. எப்படி தேடினாலும் வியட்நாம் வீரர்களை நெருங்க முடியவில்லை. ஒரு தளபதிக்கு புதிய யோசனை வருகிறது. மான்சான்டோவின் களைக்கொல்லியை பெரிய பேரல்களில் வரவழைத்து ஹெலிகாப்டர் மூலமாக காடுகளின்மீது தெளிக்கிறார்கள். சில நாட்களில் இலைகள் உதிர்ந்த பின்னர் வியட்நாமிய வீரர்களின் முகாம்களின் மீது வான்வழித் தாக்குதல் நடத்துகிறார்கள். அப்போது ஆரஞ்சு நிற பேரல்களில் வரவழைக்கப்பட்ட களைக்கொல்லியானது ஏஜென்ட் ஆரஞ்சு என்றே அழைக்கப்பட்டது.

எல்லாப் போர்களும், இன அழித்தொழிப்புகளும், காலனிகளும் குரூரமானவையே. போர் என்று வந்துவிட்டால் எல்லாவிதமான போர் முறைகளும் நியாயப்படுத்தப்படும். அதில் உயிரோடு மீண்டு இருப்பது மட்டுமே வரலாறாகக் கருதப்படும். யுத்தத்தை ஆதரித்து உயிரோடு இருக்கவேண்டும், இல்லாவிட்டால் சாகவேண்டும். தேசபக்தி என்பது அவ்வாறுதான் பயிற்றுவிக்கப்படும். போரை எதிர்க்கும் தனிநபர்கள் தினசரி நடவடிக்கைகள்கூட யுத்த ஆதரவு செயலாகவே முடியும்.

இயல்பாக நடந்துவரும் அறிவியல் ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் எல்லாமே நாடுகளால் தேச பாதுகாப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படும். அணு ஆராய்ச்சி, தொலைத் தொடர்புக்கருவிகள் முதல் தானியங்கள்வரை அத்தனையும் தேச நலனுக்காகவே அர்ப்பணிக்கப்படும். அதில் இராணுவம், போர் என்பதும் ஓர் அங்கம்.

அம்மோனியா, நைட்ரேட் போன்றவை வெடிமருந்துக்கு பயன்பட்டதோடு விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டது. போர்களில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளைவிட பாறைகள், மலைகளை உடைத்து சாலைகள், தண்டவாளங்கள், பாலங்கள், அணைகள், குடியிருப்புகள் அமைக்க பயன்படுத்தப்பட்டவையே உலகளவில் அதிகமான ஒன்றாகும். ஆனாலும் வெடிமருந்து என்றாலே ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது வீசவே தயாரிக்கப்படுவதாக கற்பிதம் செய்யப்படுகிறது.

உலகம் அறிவியல் கண்டுபிடிப்புகள், வர்த்தகம், நாடு பிடிக்கும் போட்டிகள் என வேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தபோதும் இந்தியாவில் ஓடுகிற ஆற்றுநீரில் குளித்தாலே, வீதியில் நடந்து சென்றாலே தீட்டுப்பட்டுவிடும் என்ற அளவில் வாழ்ந்துகொண்டிருந்தோம். ஆங்கிலேயர் காலனி வருகைக்கு முன் பஞ்சமே வந்த்தில்லை என இன்றும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு தானியங்களை, எண்ணையை மற்றும் பலவற்றை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.

வெடிமருந்தை விவசாயத்துக்கு விற்ற வெள்ளைக்காரத் துரோகியே என திண்ணைகளில், சாவடிகளில் உட்கார்ந்து அறைகூவல் விடுக்கிறோம். இரண்டாயிரம் வருடத்துக்கும் மேலான வேளாண் வரலாறு கொண்ட சமூகம் ஏன் எலிக்கறி தின்று, அம்மணமாக நின்று வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யச் சொல்லி கையேந்துகிறது என்று சிந்திக்க மறுக்கிறோம். சங்க இலக்கியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் குறித்த தகவல் இருக்கிறது என்கிறோம்; ஆனால் சொட்டுநீர்க்குழாய்க்கான sand filter தொழில்நுட்பம் இஸ்ரேலிலிருந்து வர வேண்டியிருக்கிறது. இதன் பின்னாடி இலுமினாட்டி இருக்கிறான் என்கிறோம், மெக்காலே கல்வியால் கெட்டது என்கிறோம், அந்நிய சக்தி என்கிறோம்.

எல்லாம் தெரிந்திருந்தும் பகுத்தறிவுக்கு முரணான முடிவுகளை ஏன் எடுக்கிறோம் என்பதைச் சொல்லி இந்த ஆண்டு ஒரு அறிஞர் நோபல் பரிசு வாங்குகிறார். இங்கே நாம் technical fault என்று சொல்லி பசப்புகிறோம். பின்னாளில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் வாசிக்கும் சமூகம் இன்றைய சமூகத்தைப் போலவே ஏதேதோ கற்பனைகளில் மிதக்கவே செய்யும்.

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன – இந்த வரிகளின் பின்னணி அரசியலை அலசுவோம்

இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருவதில்லை, விளைநிலங்கள் ரியல் எஸ்டேட் மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற இரண்டு பொத்தாம்பொதுவான வாதங்கள் அனைத்து உரையாடல்களிலும், கட்டுரைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவ்விரண்டு கூற்றுகளுமே சமகாலத்தின் மிகப்பெரிய பொய் என்பதையும் அதிலிருக்கும் நுண்ணரசியலையும் கவனமாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தமிழக சூழலில் மாவட்ட வாரியாக 90% விவசாய நிலங்களை வைத்திருப்பது அந்தந்த பகுதிகளின் ஆதிக்க சாதியினர் மட்டுமே. இன்று வீட்டுக்கு ஒரு கணினி நிபுணரை தமிழகம் உருவாக்கி சென்னை, ஐதராபாத், பெங்களூரு மட்டுமல்லாது அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. வேலையே கிடைக்கவில்லை என்றாலும் மூன்று நான்கு ஆண்டுகள் சென்னை, கோவை போன்ற நகரங்களில் அறை எடுத்து வேலை தேடும் கணிசமான இளைஞர்கள் உண்டு. விவசாய நிலங்களும் பெரும்பாலும் இவர்களது பெற்றோர்களிடம்தான் இருக்கிறது.

ஆண்ட பரம்பரையினர் தங்களது வாரிசுகள் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. தப்பித்தவறி ஊருக்குள் விவசாயம் செய்யும் இளைஞர்கள், 35 வயதானாலும் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை என்று உட்கார்ந்திருப்பதே சாட்சி. சரி, அப்ப என்னதான் பிரச்சினை ஏன் இந்தக்கால இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரப்பப்பட்டு வருகிறது?
காலங்காலமாக நிலவுடைமைச் சாதிகளுக்கு பண்ணை வேலைகள் செய்துவந்த தலித் மக்கள் விவசாயக் கூலி வேலைகளை விட்டு வேறு தொழிலுக்கு சென்றதுதான் பிரச்சினை. நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்து நாடு எதிர்நோக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்று பில்டப் கொடுக்கப்பட்டு வருவது இதைத்தான். உழவு செய்ய, A2 பால் தரும் மாடுகளைப் பராமரிக்க, விதைக்க, அறுக்க, கதிரடிக்க, மரமேற, வண்டிமாடு ஓட்ட மலிவான கூலிக்கு வந்தவர்கள் இப்போது வருவதில்லை என்பதுதான் இன்றைய இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை என்று பாலிஷான மொழிநடையில் சொல்லப்படுகிறது.

கல்வி வாய்ப்புகள், அரசாங்க நலத்திட்டங்கள், இட ஒதுக்கீடுகள் தமிழகம் போன்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் வட மாநிலங்களிலும் சேர்த்து கிடைத்த ஒரு வாய்ப்பு Mobilityயால் கிடைக்கப்பெற்றதே. பஜாஜ், ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்கு இதில் அளப்பறியது. 400 ரூபாய்க்கு விவசாய கூலி வேலை செய்வதைவிட 30 கிலோமீட்டர் சென்று 700 ரூபாய்க்கு கொத்தனார் வேலை செய்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது இந்த வாகனங்கள்தான்.

அபார்ட்மென்ட்டுகளில் வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் ஸ்கூட்டி, சூப்பர் எக்செல்களில் வருவதுதான் அங்குள்ள உயர் நடுத்தர வருவாய் பிரிவு இல்லத்தரசிகளின் கவலையாக இருக்கிறது. வேலைக்காரப் பெண்கள் ஸ்கூட்டி வைத்திருப்பதாலேயே வெஸ்பா வாங்கிய வீடுகள் பல உண்டு (பயாஜியோ கம்பெனிக்கே இப்படி ஒரு மார்க்கெட் செக்மெண்ட்டேஷன் இருப்பது வண்டி அறிமுகப்படுத்தும்வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை). சைக்கிளில் மட்டுமே – அதுவும் பண்ணையார் எதிரில் வரும்போது இறங்கி நின்று – செல்ல விதிக்கப்பட்ட தலித் மக்கள் பைக்குகளில் ஓவர்டேக் செய்து செல்கையில் ‘நேத்து நம்மளகண்டு வேட்டிய இறக்குனதெல்லாம் இன்னிக்கு பைக்ல ஹார்ன் அடிச்சிக்கிட்டு போவுது’ என்பதன் நவநாகரீக வடிவம்தான் ‘இந்தக்கால இளைஞர்கள் விவசாயத்துக்கு வருவதில்லை’ என்பதாகும்.

நிலம் வைத்திருக்கும் சாதியினரே அந்தந்த பிராந்திய விளைபொருட்களின் புரோக்கர், கமிசன் மண்டி, பார்வர்டிங் ஏஜென்ட், உரக்கடை, டிராக்டர் வாடகைக்கு விடுதல்வரை செய்கின்றனர். இவர்களது வாரிசுகளை ஐடி, அயல்நாட்டு, அரசாங்க வேலைகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு மிச்சமிருக்கும் ஓரிரண்டு இளசுகளை பைனான்ஸ் செய்ய அனுப்பிவிட்டு, அதற்கும் தேறாத கேஸ்கள் ஊருக்குள் ஆண்ட பரம்பரை அரசியல் கட்சிகளை வளர்க்கையில் இவர்களது தோட்டத்துக்கு தலித் மக்கள் வேலைக்கு வரவில்லை என்பதே இளைஞர்கள் விவசாயம் செய்யத் தயாராக இல்லை என்பதாகும்.

தொழிற்புரட்சியால் ஏற்படப்போகும் இந்த சமூகவியல் நகர்வுகளைக் கணித்து அரசு திட்டங்களை வகுக்காமல் போனது சமூகப் புரிதல் இல்லாத, தொலைநோக்குப் பார்வை இல்லாத அதிகாரிகளால் ஏற்பட்டதேயாகும். மானியங்களாலும், கடன் தள்ளுபடிகளாலும், குறைந்த பட்ச ஆதார விலைகளாலும் விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என்பது நாளேடுகளில் நடுப்பக்கக் கட்டுரைக்கு மட்டுமே ஏற்புடையதாக இருக்கும். இந்திய விவசாயமும், கிராமங்களும் சாதியும் பிரிக்கவே முடியாதது. இதைக் கவனிக்காமல் நதிநீர் இணைப்பு, இயற்கை விவசாயம் என்பதெல்லாம் கட்டுரைகளோடு முடிந்துவிடும்.

தீவிர இயற்கை விவசாய ஆர்வலர்கள் அப்பட்டமான சாதி வெறியர்கள் என்று சொன்னால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கலாம். ஆனால் இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அந்தக்கால கிராமியச் சூழலில் விவசாயம் நடக்கவேண்டும். அந்த கிராமியச் சூழலில் சாதி இல்லாமல் ஆர்கானிக் இடுபொருட்களை கம்பெனி மூலம் வினியோகித்தால் அய்யகோ விவசாயிகளின் தற்சார்பு எங்கே, கார்ப்பரேட் ஆதிக்கம் வருகிறதே என பாட ஆரம்பிப்பார்கள். ஆர்கேனிக் (கொஞ்சம் ஸ்டைலாக ஆர்கானிக் என்பதை ஆர்கேனிக் என்று சொல்வதே சமகால மேல்தட்டு ஃபேஷன் ஆகும்) உணவு என்பதே நான் உன்னைவிட உயர்வானவன், எனது உணவு நீங்கள் உண்ணும் உணவைவிட உயர்வானது என்பதை நிறுவுவதற்கே இன்று பயன்படுகிறது. வாயில் மலத்தைக் கரைத்து ஊற்றும் கொடுமையைவிட கிலோவுக்கு 50 ppm அளவில் பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கண்டறியப்படுவதே பெருவாரியானோருக்குக் கவலைகொள்ளத்தக்க விசயமாகத் தெரிகிறது.

விளைநிலங்கள் வீட்டு மனைகளாக்கப்பட்டு வருகின்றன என்ற கூற்றை அலசினால் அதுவும் ஒரு மாய பிம்பம் என்பது புலப்படும். சினிமாவில் வருவதுபோல யாரும் குடும்பத்தினரைக் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கையெழுத்து வாங்குவதில்லை. நிலம் இருப்பவர்கள் தாமாக முன்வந்து விற்கிறார்கள். இதில் விற்பனை செய்பவர்கள் வாங்குபவர் என்ன சாதி என்று தெரியாமல் விற்பதில்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களாக பல சாதியினரும் இருப்பது, கமிசனைப் பிரித்துக்கொள்வது அந்தத் துறைக்குள் இருக்கும் ஒரு மிகப்பெரிய நுண்ணரசியலில் ஒன்றாகும்.
கடந்த பதினைந்து ஆண்டுகளில் உங்கள் ஊர்ப்பக்கம் புதிதாக முளைத்த பெட்ரோல் பங்குகள் எத்தனை, அவை விளைநிலங்களின் மீது அமைக்கப்பட்டனவா இல்லையா என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும். ஒரு பெட்ரோல் பங்குக்கு அரை ஏக்கர் என்று வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை இந்த பங்க்குகள் விழுங்கியது என கணக்கிட்டால் புரியும். பெட்ரோல் பங்க் அமைப்பது அந்தந்தப் பகுதி ஆதிக்க சாதியினரால் மட்டுமே முடியும். தலித் கோட்டா என்றாலும் மேனேஜ்மெண்ட் கண்ட்ராக்ட் யாரிடம் இருக்க முடியும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

விவசாயக் கூலி அல்லாத வேளைகளில் கிடைக்கும் அதிக ஊதியமும், பணிசார்ந்த பலன்களும் மிக முக்கியமான ஒன்று. ஒரு ஷாப்பிங் மால், பெரிய அலுவலகக் கட்டிடங்களில் பராமரிப்பு ஊழியர்களுக்கான பார்க்கிங்கில் எத்தனை சைக்கிள்கள், டிவிஎஸ் 50கள் நிற்கின்றன என்று கவனித்தால் போதுமானது. தமிழக அரசின் இலவச மிதிவண்டிகள் அடித்தட்டுப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய mobilityயைக் கொடுத்திருக்கின்றன என்பதற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஊரகப்பகுதிகளில் பயணித்தறிய வேண்டும்.

பி. எஃப், இஎஸ்ஐ போன்ற பலன்கள் மால்கள், பெரிய அலுவலகங்களில் மாதம் எட்டாயிரம் சம்பளம் வாங்கும் ஹவுஸ்கீப்பிங் பெண்களுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கிறது. பெங்களூருவில் ஜவுளி நிறுவன ஊழியர்கள் பி. எஃப் பிரச்சினையின்போது பேருந்து எரிப்பு அளவுக்குச் சென்றதை நினைவுகூர்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறியதாக ஒதுக்கி வைக்கப்படும் அவலங்கள் இதில் ஏதும் இல்லை.

நபார்டு வங்கியால் ஊக்குவிக்கப்படும் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது சாதிவலைக்குள் எப்படி சிக்கி நசுங்குகிறது என்பதையும் அஃது ஏன் தோல்வியைத் தழுவுகிறது என்பதையும் தனியாக பி.எச்.டி-யே செய்யலாம்.

தமிழகத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு VAT exemption இருந்தது. இப்போது மித்ரோன் மோடி பராக்கிரமத்தால் உரத்துக்கு 5%, பூச்சிக்கொல்லிகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. பூஜ்யத்திலிருந்து நேரடியாக 18% வரி விதிக்கப்பட்டதற்கு வேறு துறைகளாக இருந்தால் கடும் எதிர்ப்பைக் காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழக விவசாயிகள் சங்கங்களின் எந்த பிரிவும் பெயரளவுக்குக்கூட கண்டனம் தெரிவித்ததாகக் காணோம். டெல்லிக்குச் சென்று கடனைத் தள்ளுபடி செய்யவும், நதிநீர் இணைக்கவும் மண்சோறு சாப்பிடுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. பூச்சிக்கொல்லிகளுக்கு 18% வரி என்பது விவசாயத்தின் மீதான நேரடியான தாக்குதல் என்பது ஆர்கேனிக் விவசாயக் கனவு கோஷ்டிகளுக்குப் புரியப்போவதில்லை என்பதைவிட விவசாய சங்கங்களுக்கே புரியவில்லை என்பதுதான் அபாயகரமானது.

வர்ணாசிரம முறைகளைத் தாங்கிப்பிடிக்கும் கிராமப்புற வாழ்வியல் முறைகளிலிருந்து வெளிவரும் அடித்தட்டு மக்களுக்கு வாய்ப்பளிப்பது MSME நிறுவனங்களே. இவற்றில் பெருவாரியான மக்கள் அமைப்புசாரா தொழிலாளர்களாக, தினக்கூலிகளாக, சில நேரங்களில் கொத்தடிமைகளாக பணிபுரிவதைத் தடுப்பதிலும், அவர்களை முறையான பதிவுசெய்த தொழிலாளலர்களாக ஆக்குவதிலும் உள்ள நடைமுறை சிக்கல்களை அறிந்தே மனிதவள ஆற்றல்சார் நிறுவனங்கள் தோன்றின. டீம்லீஸ், அடிக்கோ என பல நிறுவனங்களை உதாரணமாகக் காட்டலாம். பிரபல அரசியல்வாதி ஒரிவரின் நிறுவனம் குறித்து சொல்லத் தேவையில்லை. Vendor employee, contractor employee, third party employee என பலதரப்பட்ட பெயர்களில் பணிபுரியும் நிறுவனத்தின் நேரடி payroll-இல் இல்லாமல் வேறு நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்தாலும் PF, ESI, காப்பீட்டு பலன்கள் நேரடியாக கிடைத்துவிடும்.

ஒப்பந்த பணியாளர்களின் payroll வைத்திருக்கும் நிறுவனங்களை ஒருசாரார் தரகுமுதலாளிகள், கார்ப்பரேட் கால்நக்கிகள் என பலவாறாக விளிக்கிறார்கள். தற்போது மித்ரோன் மோடி அரசு minimum wages act மூலமாக மாதத்திற்கு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 18000 ரூபாய் சம்பளம் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை முன்வைத்து நகர்த்தி வருகிறது. ஓர் ஊழியருக்கு எடுத்த எடுப்பிலேயே மாதம் 18000 என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஐம்பது பேருக்கும் குறைவான ஊழியர்களை வைத்து நடத்தப்பட்டு வரும் சின்னச்சின்ன ஆலைகள் 18000 சம்பளம் வழங்கினால் ஆறுமாதம்கூட தாக்குப்பிடிக்க முடியாது. இந்த சட்டத்தை மதிக்காத சிறு நிறுவனங்கள் PF, ESI, காப்பீடு இல்லாமல் கூலி வழங்குவது என்பது கிராமிய விவசாய சூழலில் பண்ணையாரிடம் கூலி வாங்குவதற்கு ஒப்பான சூழலை உண்டாக்கும். இதன்மூலம் சட்டத்தை மதித்து நடந்து கம்பெனியை திவாலாக்கிக் கொள்ளலாம்; தொழிலாளர்களின் payroll-இல் இல்லாமல் கம்பெனி நடத்துவதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு எந்தவித பலன்களும் சென்றடையாமல் பார்த்துக்கொள்ளலாம். பிரச்சினைகள், நிச்சயமற்ற சூழல், பாதுகாப்பின்மை, எதிர்காலம் குறித்த அச்சம், குழப்பங்கள் இருக்கும் இடங்களில்தான் சாதிகளும், மதங்களும், பக்தியும் வேர்விட்டு வளரமுடியும்.

நோட்டை செல்லாக்காசாக்கி கருப்புப் பணத்தை ஒழித்ததுமாதிரி, பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18% வரி விதித்து ஆர்கேனிக் விவசாயத்தை ஊக்குவிப்பது மாதிரி, ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 18000 சம்பளம் வழங்க சட்டமியற்றி தொழிலாளர்களையும், MSMEகளையும் nake in india செய்து 2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்கி, கணிசமான இளைஞர்களை விவசாயத்துக்குத் திருப்பும் ARYA (Attracting and Retaining Youth in Agriculture) திட்டங்களை புரிந்துகொள்ள மண் கீ பாத் கேட்க வேண்டும்.