வெற்று பந்தாவுக்காக எழுப்பப்படும் கல்விமுறை குறித்த கோஷங்கள்

ஒருசாரார் சமச்சீர் கல்விமுறையானது சிபிஎஸ்ஈ-க்கு குறைவான பாடத்திட்டத்தையே கொண்டிருக்கிறது என்ற பழைய பல்லவியை விடாது பாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட சமூக, பொருளாதார சூழலில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவது அரசின் கடமை; அதை செவ்வனே செய்கிறது அரசு இயந்திரம்.

ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சாதீய வெறி குறித்த நோக்கங்களை மறந்தும் தொடமாட்டார்கள்; சமச்சீர் கல்வித்திட்ட புத்தகங்கள் அச்சடிப்பதை, திருவள்ளுவர் படத்துக்குமேல் போஸ்டர் ஒட்டுவதை, நடுவணரசு நிதியிலிருந்து பள்ளிகளின் உள்கட்டமைப்பை உயர்த்த தரப்பட்ட பெருந்தொகையில் எட்டணா செலவு செய்யாமல் திருப்பியனுப்பி தனியார் பள்ளிகளின் வியாபாரத்துக்கு துணைபோவதை சிபிஎஸ்ஈ-தான் உசத்தி எனப் பாடும் அறிவுசீவிகள் மறந்தும் தொடமாட்டார்கள்.

பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்ந்து எப்படியாவது ஒரு பி. ஏ, ஒரு பிஎஸ்சி வாங்கிக்கொண்டு பெரும்பாலோனோர் நகர்ந்துவிடுகிறார்கள். பல தலைமுறைகள் கல்வி வாசனையே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஃது ஒரு சாதனை. அவனவன், அவனவன் குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம சிந்தனையை தகர்த்த முதல் அடி அனைவருக்குமான கல்வியில்தான் ஆரம்பமாயிருக்கிறது. அதை தாங்கமுடியாத ஒரு கூட்டம் குலக்கல்வியை ஒருவிதமான modernized protocol மூலம் நிறுவ முயற்சிப்பதன் நாகரிக வெளிப்பாடுதான் சிபிஎஸ்ஈ உசத்தி, நாட்டுமாடு, இயற்கை விவசாயம், எட்சட்ரா.

ஒரு பி.ஏ., பி.எஸ்.சி வரை நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கப்புறம் நடக்கும் கூத்துகளை அந்த சிபிஎஸ்ஈ உசத்தி எனப் பாடும் ஆர்வலர்கள் தொடக்கூட மாட்டார்கள்.

தமிழகத்தின் ஆறேழு பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர துணைவேந்தர்கள் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் கையொப்பம் இல்லாத பட்டங்களை வழங்கக்கூடாது என இரமதாசு அறிக்கை விட்டு கேட்டும் பதில் சொல்லும் நிலையில் உயர்கல்வித்துறை இல்லை.

பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்களைத்தான் துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்ற விதியைக் காற்றில்விட்டு இணைப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது ஒரு பல்கலை என்றால் உதவிப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது இன்னொரு பல்கலைக்கழகம்.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆளே கிடைக்காத பற்றாக்குறை நிலவுவதாகச் சொன்னால் பீகார், சட்டீஸ்கார் வரை சிரிப்பார்கள். ஓய்வுபெற்றவர்களை துணைவேந்தர்களாக்குவது, பதவிநீட்டிப்பு செய்வது எதனால் என்பது அவர்களது சாதிய பின்புலத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தமிழக பல்கலைகளுக்கு முழுநேர வேந்தரும் கிடையாது என்பது கொடுமைக்கு வந்த கொடுமை.

முழுநேர ஆய்வுப்பணிகளில் இருந்து விலகி பதிவாளர், முதல்வர், துணைவேந்தர், திட்டக்குழு போன்ற மாநில அரசுக்கான சிறப்பு திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பேராசிரியர்கள் PG, PhD மாணக்கர்களுக்கு எதற்காக கைடு ஆகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பாதிநாட்கள் கேம்ப், மீட்டிங் என்றபெயரில் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் மற்ற மீட்டிங்குகளில் பிசியாக இருப்பார்கள். ஏதேனும் ஒப்புதல் பெற, ஆய்வுமுடிவுகள் குறித்து கலந்துரையாட ஆள் இல்லாதபட்சத்தில் மாணாக்கர்கள் சும்மா நாட்களைக் கடத்துவது தவிர்க்க இயலாத்தாகிவிடுகிறது. கூடுதல் பதவிகளைக் கொண்டிருக்கும் பேராசிரியர்களை கைடு ஆகக் கொண்டிருக்கும் மாணாக்கர்கள் எத்தனைபேரால் சரியான நேரத்துக்கு கோர்ஸ் முடிக்க முடிந்த்து என்பதை பார்த்தாலே தெரியும்.

ஜெனரிக் மருந்துகள் குறித்த செய்திகளைப் படித்துவருகிறோம். இந்த ஜெனரிக் கெமிக்கல் மாதிரியான சிந்தனைதான் ஆய்வுகளுக்கு இருக்கும் பெரிய முட்டுக்கட்டை. சில நுண்ணிய ஆய்வுகளுக்கு உயர்தரமான high precision இரசாயனம், சாதனங்கள் இல்லாமல் செய்யமுடியாது. ஆனால் நடப்பது என்ன? Price contract அல்லது Rate Comparison List என்றபெயரில் மூன்று கொட்டேஷன் வாங்கி குறைவான விலையைக் குறிப்பிடும் முகவர்களிடமிருந்து ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்படும்.

உயரதிகாரிகளை அனுசரித்து மனம்கோணாமல் நடக்கும் சிலர் அத்தகைய கமிட்டியில் இருந்து இந்த கெமிக்கலை/சாதனத்தை இந்த கம்பெனியிலிருந்து இன்ன விலைக்குத்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். அதில் பெரும்பாலும் ஜெனரிக் வகைகளே இருக்கும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் லேப் கிரேடு என்றால் இருபது கம்பெனிகள் சப்ளை செய்யும். அதில் குறைவான விலையில் வருவதைத்தான் வாங்குவார்கள். அத்தகைய பொருட்களால் சில ஆய்வுகளின்போது எதிர்பார்த்த precision-ஐத் தர இயலாது. உனக்கு தேவை பொட்டாசியம் பெர்மாங்கனேட்தானே, இந்தா புடி, அந்த கம்பெனி இந்த கம்பெனின்னு கேக்கற வேலையெல்லாம் இருக்கப்படாது என்று சொல்லப்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பு இன்வாய்சில் இருந்தாலும் சப்ளை செய்யப்படுவது பெரும்பாலும் ஏதாவது குப்பையாகவே இருக்கும்.

இந்த சூழலில் Current Science சஞ்சிகையைத் தாண்டி Cell, Science, Nature-இல் ஆய்வுக்கட்டுரைகள் வரும் என்பதெல்லாம் சர்க்கரை என்று எழுதி தொட்டு நக்கிப் பார்ப்பது மாதிரிதான். பத்து இருபது இலட்சம் கொடுத்து வேலைக்கு சேர்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள்

குஜராத்தின் இராஜ்கோட் நகரை மையமாக வைத்து ஜுனாகத், பாவ்நகர், ஜாம்நகர், சுரேந்திரநகர், அம்ரேலி எல்லாம் சேர்த்து செளராஷ்ட்ரா பிராந்தியம் எனப்படுகிறது. அப்பகுதி மக்களின் பண்புக்கூறுகளுள் ஒன்று நன்றாக எண்ணெய்/நெய் வடிய வடிய மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார்கள். மதியம் 1 – 3 பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கும். போன் எடுக்க மாட்டார்கள்; சிலர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தூங்குவார்கள். வியாபார ரீதியாக வரும் வெளியூர்வாசிகள் அனுசரித்து போகவேண்டிய முக்கியமான நாகரிகம் இது.

அங்கிருந்த காலகட்டங்களில் மதிய உணவுக்குப் பிறகு எங்காவது மரத்தடி கடைகளில் உட்கார்ந்து மூலிகை பானம் பருகிக்கொண்டு ‘ஜீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்’ போன்ற கவித்துவமான பாடல்களைக் கேட்டவாறு அலைபேசி வழியாக காதலித்துக்கொண்டு நேரத்தைக் கொல்வது வாடிக்கையாக இருந்தது. 25 வயதுக்குள் கல்யாணமாகிவிடுவதை இயல்பாகக் கொண்டிருந்த சமூகத்தையும், கால்களில் காப்பு, வண்ணமயமான உடை, கைத்தடி, பெரிய மீசை, கடுக்கன் சகிதம் சுற்றிக்கொண்டிருக்கும் விவசாயிகளையும், பார்ப்பதற்கு எளிமையான வாழ்க்கை என்றாலும் ஷேர் ஆட்டோக்களில்கூட உயர்சாதி ஆட்களின் அருகில் உட்காராமல் தள்ளி உட்கார்ந்து செல்லும் மக்களைப் பார்த்து புரிந்துகொள்வதற்கு அந்த மதிய வேளைகள் உதவியது.

அப்போது, ஒரு வட இந்திய நிறுவனத்தின் பிரபலமான பருத்தி விதை இரகமாக “அக்கா” (Akka) இருந்தது. அந்த இரகத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி. MRP-க்கு மேல் கொடுத்து விவசாயிகள் வாங்கினார்கள். பல விவசாயிகள் தொலைதூரங்களில் இருந்து வந்து மார்க்கெட் முழுவதும் விசாரித்தும் விதை கிடைக்காமல் திரும்பிச் சென்றார்கள். விதைப்பெட்டிகளை ஏற்றிவரும் லாரி குஜராத் எல்லையைத் தொட்டுவிட்ட தகவல் வந்தாலே பரபரப்பு தொற்றிக்கொள்ளுமளவுக்கு இருந்தது.

பரிச்சயமான வியாபாரிகளின் கடைகளில் அமர்ந்திருக்கும்போது அங்கு வந்து விசாரிக்கும் விவசாயிகளைக் கூர்ந்து கவனித்து குஜராத்தியில் சில வார்த்தைகளைக் கற்க ஆரம்பித்திருந்தேன. “அக்கா பியாரன் ச்சே?” (அக்கா விதை இருக்கிறதா?) என்று கேட்டு பலர் தொலைதூர ஊர்ப்பெயர்களைச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளியில் பலர் வந்து சென்றார்கள். மதியம் ஒரு சாலையோரக் கடையில் மூலிகைப்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் தெரிந்த அந்த வண்ணமயமான உடையணிந்த விவசாயிகள் ஒரே வேனில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தநாள் இதே ஆட்களை பக்கத்து ஊர் மார்க்கெட்டில் பார்க்கையில் அடையாளம் தெரிந்தது; அவர்கள் வந்திருந்த வேன் உட்பட. சிலமாதங்கள் கழித்து அந்த கம்பெனியில் வேலை செய்த ஒருவர் நண்பரானார். நேரடியாக அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக டிமாண்டை கூட்டவும், கடைக்காரர்களிடம் இரகத்திற்கு டிமாண்ட் இருப்பதற்கான நம்பிக்கையை உண்டாக்கவும், மற்ற ஊர்களில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவும் கம்பெனி தரப்பில் ஒரு புதிய உபாயத்தைக் கையாண்டதாகவும் தெரிவித்தார்.

********************************************

திண்டுக்கல் அருகே ஒரு புதிய உணவகம் திறந்தார்கள். விசாலமான பார்க்கிங் வசதியுடன் பிரதான சாலையில் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் ஒரு திறமையான இளைஞர். அருகிலிருந்த ஆட்டோ பைனான்ஸ் கம்பெனி அதிபரிடம் ஒரு டீல் பேசியிருக்கிறார். அதன்படி தவணை கட்டாததால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்களை பைனான்ஸ் கம்பெனியின் இடத்திலிருந்து எடுத்துவந்து உணவகத்தின் முன்புறம் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திக்கொள்வது. கார், பைக் என எதை ஜப்தி செய்து எடுத்துவந்தாலும் உணவகத்தின் முன் நிறுத்தச்செய்து, அவற்றைத் துடைத்து சுத்தபத்தமாக பார்த்துக்கொண்டார்.

பளிச்சென்ற கார், பைக்குகள் நிறைய நிற்பதால் நிச்சயமாக நல்ல உணவகமாக இருக்கும் என்று காரோட்டிகள் நிறுத்தி, குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வோல்வோ பேருந்துகள்கூட நின்று செல்ல ஆரம்பித்தன. ஒரு செக்யூரிட்டி நிறுத்தி கார்களை ஒழுங்குபடுத்தி பார்க் செய்யுமளவுக்கு வியாபாரம் வளர்ந்துவிட்டது.

************************************

மேற்கண்ட இரண்டுமே விற்பனையை அதிகரிக்க செய்வதற்கான தந்திரோபாயங்கள். முன்னது ஒரு கார்ப்பரேட் கம்பெனியால் செய்யப்பட்டது. பின்னது ஒரு தனிநபரால் செய்யப்பட்டது. இரண்டிலுமே வாடிக்கையாளருக்கு பொருள் குறித்த தவறான தகவல்களைத் தந்தோ, தரக்குறைவான பொருளை விற்றோ ஏமாற்றவில்லை. இஃது ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் பொதுப்புத்தியில் தனிநபர் செய்தால் புத்திசாலித்தனம் என்றும், கம்பெனி செய்தால் ஏமாற்றுவேலை, சதி, தில்லுமுல்லு என்றும் சொல்லப்படுகிறது. தனிநபரின் face value-க்காக அனுசரித்துக்கொள்ளும் நாம், முகமில்லாத கம்பெனி என்பதால் முஷ்டியை மடக்குகிறோமா அல்லது different formats of business என்பது குறித்த புரிதல் இல்லையா? இது சரியா, தவறா, வேறு ஏதாவது வழிவகை உண்டா?

உங்களுக்கு தோன்றுவதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

ஹைபிரிட் தக்காளியும், மியூடன்ட் தக்காளியும் – சில முட்டாள் ஆர்வலர்களும்

தமிழகத்தில் ஹைபிரிட் தக்காளி விதைகள் ஆண்டுக்கு தோராயமாக ஐந்து டன் விற்கிறது. ஓர் ஏக்கர் நடவுசெய்ய 60 கிராம் மட்டுமே போதுமானது. ஏக்கருக்கு 20 டன் தக்காளிப்பழ மகசூல் கிடைக்கும். அப்படியேனில் ஓராண்டுக்கு எத்தனை ஏக்கர்களில் எத்தனை டன் தக்காளி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதில் கணிசமான அளவு கேரளாவுக்குச் செல்கிறது.

நாட்டுத் தக்காளி ஓர் ஏக்கர் நடவுசெய்ய 150 கிராம் விதை தேவைப்படும். ஓர் ஏக்கருக்கு தோராயமாக 10 டன் மகசூல் கிடைக்கும். இதன்படி எத்தனை டன் விதை ஆண்டுக்குத் தேவை, ஹைபிரிட் இரகங்களின் பாதி மகசூல் மட்டுமே ஏக்கருக்கு கிடைப்பதால் கூடுதலாக எத்தனை ஆயிரம் ஏக்கர் வேண்டும், அதற்கான தண்ணீர், இடுபொருட்கள், உடலுழைப்பு என ஆகும் கூடுதல் விரயம் எவ்வளவு என்ற கணக்கையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாட்டுத்தக்காளி இரகங்களை மட்டுமே உண்ணவேண்டும், ஹைபி்ரிட் இரகங்களை புறக்கணிக்கவேண்டும் என்று அவ்வப்போது சில நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்கள் கருத்து வெளியிடுவார்கள். அத்தகைய மூடத்தனத்தின் ஏகபோக குத்தகையை வைத்திருந்த பசுமை விகடனை விஞ்சுமளவுக்கு குமுதத்தின் ‘மண்வாசனை’ இப்போது களம் இறங்கியிருக்கிறது.

விவசாய ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே நாட்டுத்தக்காளி இரகம் பெரியகுளம் 1 எனப்படும் PKM 1. கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் இரகங்கள் அதிக வெயிலைத் தாங்கும் தன்மையற்றவை, செயற்கையாக விலையேற்றம் செய்ய விதைகளைப் பதுக்கிவிட்டார்கள், அரசு விதைப்பண்ணை அதிகாரிகளும் அதற்கு துணைபோகிறார்கள் என்று ஓர் ஆர்வலர் விகடனில் எழுதியதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடிப்பொடிகள் ஆடியதைப் பார்த்து தொழில்முறையில் விதை விற்பனையில் ஈடுபட்டுள்ள பலரும் முகம் சுழித்தனர்.

விஷயத்துக்கு வருகிறேன். நாட்டு, சுதேசி ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இரகமான PKM1 என்பது அன்னஞ்சி என்ற உள்ளூர் இரகத்தின் mutant ஆகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி mutants உண்டாக்கப்படுகிறது. ஹைபிரிட் இரகங்களில் ஒரு செடியிலுள்ள மகரந்தத்தூள் மற்றொரு செடியின் சூல்முடி மீது தூவப்பட்டு விதை உண்டாக்கப்படுகிறது. Mutant இரகங்களில் விளையும் காய்கள் எவ்வளவு பாதுகாப்பனவையோ அதே அளவுக்கு ஹைபிரிட் இரகங்களில் விளையும் காய்களும் பாதுகாப்பானவை. மியூடன்ட்-களை ஏற்றுக்கொள்பவர்கள், ஹைபிரிட்-களை அறிவியலுக்கு புறம்பாணது இயற்கைக்கு மாறானது எனும்போது மூடர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

பள்ளி, கல்லூரிகள் ஒரேநேரத்தில் திறக்கப்படுவதோடு வைகாசி மாதம் பல முகூர்த்தங்கள் இருப்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருக்கும். அதையொட்டி அடுத்தமாதம் பல ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப்போவதைக் காண தயாராகுங்கள்!

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம் – அதில் ஓட்டை போடும் சில்லறைத்தனங்கள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக டிப்ளமோ அக்ரியாவது முழுநேரப் பாடத்திட்டத்தில் படித்திருக்கவேண்டும். இதுவரை குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற எதுவுமே இல்லாததால் எஸ்எஸ்எல்சி பெயிலானவர்கள்கூட உரிமம் வாங்கிக்கொண்டு புண்ணாக்கு, தவிடு, மூக்கணாங்கயிறு போல ஒரு சாதாரண சரக்காகவே விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் பல்வேறு வகையில் கோரிக்கையாகவும், நெருக்கடியாகவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாக ஐதரபாத்திலுள்ள MANAGE வாயிலாக Diploma in Agricultural Extension Services for Input Dealers என்ற பட்டயப்படிப்பு வழங்க ஏற்பாடானது. இதன்படி பிரதி ஞாயிறு ஒரு வகுப்பு என்றவீதம் 48 நாட்கள் ஓராண்டில் முடித்து தேர்வெழுதினால் பட்டயம் வழங்கப்படும்; இதன்மூலம் அவர்களது உரிம நீட்டிப்பு செல்லுபடியாகும் என்பது ஏற்பாடு.

நஞ்சில்லா உணவு, மரபுவழி மாண்பு, சிறுதானிய சிற்றுண்டி என்றெல்லாம் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மாழ்வாரியம் பேசும் மூடர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழத்தை இழுத்து மூடவேண்டும் என்கிற தொணியிலும் பேசிவருகின்றனர். ஜெயமோகன் போன்ற இந்துத்வா ஆதரவு எழுத்தாளர்கள் விவசாய பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவாக்கறைகள் என்று நம்மாழ்வார் புகழ்பாடும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதிக்கொடுத்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றனர். ஆனால் நஞ்சில்லா உணவு என்பது எப்படி திடீரென்று சாத்தியமாகும், அதற்கான முதற்படி எது, படிப்படியாக எப்படி, எந்த திசையில் அரசாங்க திட்டங்கள், வேளாண்மைத்துறை கொள்கை முடிவுகள், தனியார் இடுபொருள் நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் பயணிக்கவேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாமல் Cow excreta மூலம் வல்லரசாகிவிடலாம் என்று கனவுகாணும் அவர்களது அறியாமையையும் நாம் அரவணைத்தே செல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண் கவுன்சில் சட்டம் 2009 முன்மொழிந்தது இத்தகைய பல சீர்திருத்தங்களைத்தான். ஆனால் அஃது இங்கே கிடப்பில் போடப்பட்டாலும் மத்திய அரசால் வேறு பெயரில் கொஞ்சம் உயிரூட்டப்பட்டது. அதை முடக்கும் முயற்சியில ஈடுபட்ட வியாபாரிகள் சங்கங்கள் பின்வாசல் வழியாக நுழைந்தது இருக்கட்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இத்தகைய வகுப்புகளை நடத்திவருவது அங்கிருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதற்கு, அரசின் கொள்கை முடிவுகளுக்கு பல்கலைக்கழகம் கட்டுப்பட்டாகவேண்டும் என்று கொடுக்கப்படும் வழவழா கொழகொழா விளக்கங்களைக் கேட்டு பச்சைக்குழந்தைகூட சிரிக்கக்கூடும்.

இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ அல்லது நான்கு ஆண்டுகள் பி. எஸ். சி விவசாயம் முழுநேரக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு போதுமான ஞானம் இருக்காது என்றால் வாரம் ஒரு வகுப்பு வீதம் 48 வாரங்கள் முடித்த ஒரு நபரால் என்ன செய்துவிட முடியும்? 45 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த 48 மணிநேர படிப்புகூட தேவையில்லை என்பது எவ்வளவுதூரம் இந்தியர்களுக்கு Regulatory Compliance குறித்து எத்தகைய புரிதல் இருக்கிறது என்பதற்கு ஒரு கேவலமான உதாரணமாகும். மாற்றங்கள் மேஜிக் மூலம் வராது. அதற்கு ஒரு துறைசார்ந்த ஆழ்ந்த புரிதல்கள், அதற்கான வழிமுறைகள், செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் வேண்டும். அக்ரி படித்தவர்கள் மட்டும் லைசன்ஸ் வாங்குமளவுக்கு வந்தால் அவர்கள் மட்டுமே லாபி அமைத்து சம்பாதிப்பார்கள், விவசாயிகளுக்கு இதனால் என்ன இலாபம் என்று சிலர் கேட்கக்கூடும்.

பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் – இந்தியாவில் அனுமதிக்கப்படாத – பூச்சிக்கொல்லி மருந்துகள் 200 லிட்டர் பேரல்களில் மதுரைக்கு பல்வேறு பெயர்களில் கடத்திக் கொண்டுவரப்பட்டு Bio-pesticide என்றபெயரில் பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது அவ்வளவாக விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை. காலவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துச்சென்று உண்மை எது, போலி எது என்றே தெரியாத அளவுக்கு போலி லேபிள்களை ஒட்டித்தரும் கும்பல்கள் கோயமுத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளில் புழங்குவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.

உரிமம் இரத்து செய்யப்பட்டாலும் மறுபடியும் வேறு யாராவது பெயரில் வாங்கிக்கொள்ளலாம் என்ற இன்றைய நிலை மாறாதவரை விவசாயிகளுக்கு விடிவில்லை. முறையாக கல்லூரி வாயிலாக அக்ரிக்கல்ச்சர், ஹார்ட்டிக்கல்ச்சர் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே உரிமம் பெறமுடியும், முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆயுட்காலத்துக்கும் வேளாண் இடுபொருள் செய்வதிலிருந்து blacklist செய்யப்படுவார்கள் என்பது மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

சிக்கினால் பிளாக்லிஸ்ட் செய்யப்படுவார்கள் என்பதால் லாபி அமைத்து விலையை செயற்கையாக உயர்த்துவது, போலிகளை விற்பது இருக்காது என்றாலும் படித்தவர்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளாக்கி விடுவார்கள் அல்லவா என்ற கேள்வி வாட்சப், பேஸ்புக் வழியாக விவசாயத்தைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு தமிழனுக்கும் தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சந்தா வசூல்செய்து, கால்நடை மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தியதற்கு பிறகு தமிழக அரசு வேளாண் அலுவலர் சங்கம், துறைசார்பாக சொல்லிக்கொள்ளும்படியாக ஏதாவது அதிரடியைச் செய்திருக்கிறதா, நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ள இயைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் 5-வது இலக்கமிட்ட இடத்தில் பதில் இருக்கிறது. உரிமம் புதிதாக வழங்குவது, புதுப்பிப்பது, மாறுதல்கள் செய்வது என எல்லாவற்றிலும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையோ, கால வரையறையோ இல்லாமல் பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பின்தேதியிட்டு கையொப்பமிட்டுக் கொடுப்பதுதான் 99% அலுவங்களில் நடைபெறுகிறது. பாலிதீன் பைகள்கூட 50 மைக்ரான் தடிமனில் கிடைக்கையில், வேளாண்துறையின் விண்ணப்பங்கள் 40 மைக்ரான் மாதிரியான தடிமனுள்ள ஒரு தினுசான காகிதத்தில் இருக்கிறது; இந்நிலையில் கணினி மூலம் விண்ணப்பித்து டிஜிட்டல் சிக்நேச்சர் மூலம் ஒப்புகை வாங்கி, உரம் பூச்சிக்கொல்லி இருப்பு நிலவரத்தை அலைபேசி செயலிமூலம் இடுபொருள் விற்பனையாளர்கள் துறைக்கு தினசரி தெரியப்படுத்துவது நடைமுறைக்கு வரும்போது இதைப் படிக்கும் அத்துனைபேரும் ஓய்வு பெற்றிருப்பார்கள். மேலே உள்ள பத்தியில் எழும்பிய ஐயத்துக்கான விளக்கம் இந்த பத்தியில் விலகியிருக்கக்கூடும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான உரிமங்களை பட்டதாரிகளைக்கொண்டு replace செய்ய போதுமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் இருக்கிறார்கள். இந்த துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்தாமல் இருப்பதாலும், தொழில் ஆரம்பிக்க போதுமான வழிகாட்டுதல் இல்லாததாலும் வேறு வழியில்லாமல் திறமையான பலர் வங்கிகளில் தங்களை சுருக்கிக்கொள்கின்றனர். மாணக்கர்களுக்கு ஏன் போதுமான தொழில்முனைவு குறித்த திறமையில்லை என்ற கேள்விக்கான பதில் இந்த சுட்டியில் இருக்கிறது. https://www.rsprabu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/58/

தனியார் வேளாண்கல்லூரிகள் பலவும் அக்ரி சீட்டுகளை கூவிக்கூவி விற்பதை பொறியியல் கல்லூரியோடு ஒப்பிட்டு வேளாண்மைக்கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற பீதியை சிலர் தொடர்ந்து கிளப்பிவருகின்றனர். அதற்கான பதில் இந்த சுட்டியில்: https://www.rsprabu.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/52/

2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் மோடி அவர்களின் நோக்கத்தைத் தகர்த்து அவப்பெயர் ஏற்படுத்த செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் Droneகளை பரீட்சார்த்தமுறையில் வயல்களில் பயன்படுத்தி ஆய்வுகளை செய்ய ஆரம்பித்திருக்கும் சூழலில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமெனில் நமக்கு எதற்கு வம்பு என்றிருக்கும் ஒரு comfort zone-ஐ விட்டு வெளியே வந்து சிந்திப்பதும், செயல்படுவதும் அவசியமாகும். ஏன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்ற பொதுவான தலைப்பைத்தவிர பொதுவெளியில் சொல்லிக்கொள்ளும்படியான உரையாடல்களை காணமுடிவதில்லை. மானியம் வழங்குவது, கடன் வழங்குவது, பின்னர் தள்ளுபடி செய்வது, ஏரி குளம் தூர்வாருவதைத் தாண்டி அரசாங்க அமைப்புகள் செய்யவேண்டிய பல விசயங்கள் பேசப்படாமலேயே இருக்கிறது. அதை முன்னெடுக்கும் பொறுப்பு – சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழும்வரை – இதைப் படித்துக்கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

லிப்ஸ்டிக் மிளகாய்!

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்திலுள்ள பியாடகி (Byadagi) நகரைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அங்கு நடைபெறும வறமிளகாய் வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 300 கோடி. பியாட்கி லோக்கல் என்றழைக்கப்படும் அந்த உள்ளூர் மிளகாய் இரகத்துக்கு Geographical Indicator மதிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த காரத்தையும், அதீத சிவப்பு வண்ணத்தையும் உடையது. காரத்தை SHU (Scoville Heat Units) என்ற அலகாலும், வண்ணத்தை ASTA value (American Spice Trade Association) என்ற அலகாலும் அளக்கிறார்கள்.

இந்த வறமிளகாய்களில் இருந்து குறைந்த வெப்பநிலையில் பல்வேறு படிநிலைகளின் மூலம் எடுக்கப்படும் ‘ஒலியோரெசின்’தான் லிப்ஸ்டிக், நெய்ல் பாலிஷ் போன்றவற்றின் வண்ணத்துக்கான அடிப்படைப் பொருள். பல கோடி ரூபாய் வர்த்தகம் இதில் உண்டு.
எதற்காக இந்த முன்னுரை என்றால் இவ்வளவு மதிப்புள்ள இந்த மிளகாய் வர்த்தகத்தில் ஹைப்ரிட் இரகங்களைப் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தைக் கூட்ட, பெண்களுக்கு தரமான லிப்ஸ்டிக்கைத் தர ஒருசாரார் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக்வாழ் சமூகத்துக்கு தெரிவிப்பதற்காகத்தான்.

ஓர் இந்திய நிறுவனமும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் ஹைபிரிட் இரகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் உள்ளூர் இரகத்தின் அடர் சிவப்பு வண்ணமளவுக்கு வர இயலவில்லை. இதனால் லிப்ஸ்டிக், நக பாலிஷ் தயாரிப்புக்கு ஏதாவது பங்கம் வருமா என முப்பதுக்கும் மேற்பட்ட தடிதடியான ஆண்கள் உட்கார்ந்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையை உணரமுடிந்தது.

விரைவில் திருமணமாகவிருக்கும் ஒரு சகா, ”பாத்தவுடனே கிஸ் பண்ணனும்னு தோணற மாதிரி கலர், பிளேவர் எதுனா மார்க்கெட்ல இருக்கா, அதுக்கு சப்போர்ட் பண்ற ஆஸ்பெக்ட்ல நம்மகிட்ட புராஜெக்ட் எதாச்சும் ஆன்கோயிங்ல இருக்கா?” என்று கேட்டார். நாம விதை விற்க போறோமா, உறை விற்க போறோமா என்று தொண்டைவரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு ‘அப்படி ஏதும் இருக்கறதா எனக்கு தெரியல’ என்று முடித்துக்கொண்டேன்.

#நெடுஞ்சாலை #பார் #தடை #பின்விளைவுகள்

குளத்தில் தாமரை வளர்த்து தண்ணீரைச் சேமித்த தமிழன் – வாட்சப் பார்வர்டு முட்டாள்கள் சூழ் உலகு

குளங்களில் தாமரை, அல்லி போன்ற தாவரங்களை வளர்த்து நீர் ஆவியாவதைத் தடுத்த நம் முன்னோர்களின் பெருமையை தெர்மாகோல் சோதனை சிறுமைப்படுத்திவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் ஆதங்கப்படுகின்றனர். அதைப் பார்க்கும்போது தாமரைக்கு தமிழகத்தில் எத்தனை சோதனைகள் என்று கவலை வந்துவிட்டது.

தாமரை குளங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏதாவது இருப்பின் தெரியப்படுத்துங்கள்; நானும் கற்றுக்கொள்கிறேன்.

Hydrological cycle மிகவும் பெரிய சப்ஜக்ட் என்றாலும் நமக்குத் தேவையான அடிப்படைகளைப் பார்ப்போம். மழையாக வரும் நீரானது ஆவியாகி (evaporation) வளிமண்டலத்தில் திரும்பவும் நுழைகிறது. தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது இலைகளின் மேல் உள்ள நுண்துளைகளான ஸ்டொமேட்டா (stomata) வழியாக பகல்நேரத்தில் ஆவியாகிக்கொண்டே இருக்கும் நிகழ்வு transpiration எனப்படுகிறது. இஃது இலைப்பரப்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து நீரை இழுப்பதால் மண்ணிலுள்ள சத்துக்கள் தாவரத்தை வந்தடைய உதவுகிறது. இந்த Evaporation, Transpiration, வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான நீர் மூன்றையும் சேர்த்து Consumptive Use (CU) என்கிறோம். இருந்தாலும் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான தண்ணீர் என்பது evaporation & transpiration-ஐ ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஒன்று என்பதால் மண்ணிலிருந்து ஏற்படும் நீர் இழப்பானது Evapotranspiration (ET) என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ET-யை அளவிடும் Lysimeter சோதனைகள், மண்ணுக்கு அடியில் நீர் கசிந்து செல்லும் Sub Surface Runoff போன்றவை இங்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடலாம்.

தாவரத்துக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து தருமளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருப்பது Field Capacity (FC) எனப்படும். ET மூலமாக நீரிழப்பு ஏற்படுகையில் மழையாலோ, பாசனத்தாலோ நீரானது replace செய்யப்படாதபோது மண்ணுக்குள் வறட்சி ஏற்படுகிறது. இருந்தாலும் ஸ்டொமேட்டாக்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றி இலைப்பரப்பின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன (மனித உடலின் வியர்வைச் சுரப்பிகளை ஓரளவுக்கு ஒப்பிடலாம்). இலைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவுக்கு வேர் வழியாக உறிஞ்சப்படும் நீர் இல்லாதபோது turgidity குறைந்து செடி வாடத்தொடங்குகிறது.

பயிர்களால் உறிஞ்சப்படும் நீரில் கிட்டத்தட்ட 99% transpiration மூலம் வெளியேறிவிடுகிறது என்பதால் இரசாயனங்கள் மூலம் ஸ்டொமேட்டா துளைகளை அடைப்பது அல்லது சூரிய ஒளியின் intensity-யைக் குறைப்பது போன்ற வகையிலான ஆய்வுகள் நிறைய உண்டு. ஒரு புதிய வகை anti-transpirant இரசாயனத்தைத் தெளிப்பதன் மூலம் இலைத்துளைகளை அடைத்து நீர்த்தேவை குறைகிறதா என அண்மையில் பல்வேறு dosage மூலம் நிறுவிக்கொண்டிருந்தோம். T. Stanes நிறுவனம்கூட சந்தையில் Green Miracle என்றபெயரில் ஒரு anti-transpirant திரவத்தை விற்கிறது; எங்கள் ஊர்ப்பக்கம் வெற்றிலை விவசாயிகளிடம் அது பிரபலம் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

பயிரில் செயற்கையாக உண்டாக்கப்படும் வறட்சி, கட்டுப்படுத்தப்பட்ட இலைத்துளை நீராவிப்போக்கு, வறட்சியைத் தாங்கும் இரகங்கள், மண்ணுக்கடியில் ஏற்படும் வறட்சியை Electrical Conductivity மூலம் அளவிட்டு வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், சூரிய ஒளி அளவு மற்றும் பல காரணிகளுடன் இணைத்து உண்டாக்கப்படும் சமன்பாடுகளின் மூலம் நிறுவி புதிய இரகங்களை இனங்காணும் ஓர் ஆய்வுத்திட்டத்தில் சிலபல ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றேன். ஒற்றை இலக்க Coefficient of Variation உள்ள தரவுகளை தருமளவுக்கு துல்லியமாக திட்டத்தை நடத்திய அனுபவமுண்டு என்பதோடு ஒரு சிப்பம் மிக்சர் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அளவுக்கு இது தொடர்பான பயிற்சி பட்டறைகளில் உட்கார்ந்திருந்ததால் இந்த தாமரை மேட்டர் ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது.

தாவரங்கள் வளரும் சூழலைக்கொண்டு மூன்று பெரும் வகையாக பிரிக்கலாம். 1) Hydrophytes – நீர் அதிகமாக உள்ள சூழலில் வளர்வன. 2) Mesophytes – போதுமான நீர் உள்ள பகுதிகளில் வளர்வன. அதாவது அதிக நீரும், அதிக வறட்சியும் இல்லாத சூழல். 3) Xerophyte – வறண்டநில/பாலைவனச் சூழலில் வளர்வன.

ஒவ்வொரு தாவரமும் வாழும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. தாமரையானது நீரில் மிதப்பதற்காக அகலமான இலையையும், நீர் ஒட்டாமல் இருக்க மெழுகுபோன்ற படலத்தையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கிறது. ஆனால் வேர், தண்டுப்பகுதிகளுக்கு தண்ணீருக்குள் போதுமான ஆக்சிஐன் கிடைக்காது என்பதால் ஸ்டொமேட்டா வாயிலாக காற்று உள்ளே சென்று வருவதையும், உள்ளே உண்டாகும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஏரன்கைமா செல்களில் சேமித்து வைக்கப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதால் Transpiration மற்ற தாவரங்களைக் காட்டிலும் தாமரை, அல்லிச் செடிகளில் அதிகமாகவே நடக்கிறது. மேலும் இந்த transpirationஆனது குளங்களில் இயல்பாகவே நடக்கும் evaporation-க்கு சமமானது என்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால் தாமரை இலைகளால் water conservation என்பது வெறும் நம்பிக்கை அளவிலான hypothesis என்ற அளவில்தான் தெரிகிறது.

அதிக நீர் உள்ள சூழலில் வளரும் தாமரையானது தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகத்தான் தண்ணீரில் வாழ்கிறதே தவிர தண்ணீரைச் சேமித்து மற்ற உயிரினங்களுக்கு அளிக்க அல்ல. பாலைவனத்தில் இருக்கும் கள்ளிச்செடி, தான் வளர்வதற்காகத்தான் போராடுகிறது என்பதோடு ஏதாவது விலங்குகள் கடித்து காயத்தை உண்டாக்கினால் நீர் இழப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் பரிணாமத்தில் முட்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உயிரி மற்ற உயிரியைச் சார்ந்து வாழும் symbiotic relationship வேறு கோணத்தில் வருகிறது. அதுவும் அந்த இரண்டு உயிரிகளின் நலனுக்குத்தானே தவிர மனிதனின் சுயநலத்துக்கு அல்ல.

தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக transpiration potential கொண்ட தாவர இனங்களை வளர்ப்பதன் மூலம் நீரை அப்புறப்படுத்துவது Bio-drainage எனப்படுகிறது. இவற்றின் ஆணிவேர்கள் வெகு ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சி ஆவியாக்குவதால் phreatophytes எனப்படுகின்றன. யூகலிப்டஸ் மரம் ஆரம்பத்தில் biodrainage-க்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சமீபத்திய ஆய்வுகள், அவை அதிக நீரை உறிஞ்சுபவை அல்ல என்று ‘நிறுவுகின்றன’. ஆனால் ICAR-இன் Handbook of Agriculture யூகலிப்டஸை இன்னமும் phreatophyteஆகவே வைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். அப்படின்னா சீமைக் கருவேலமரம் பற்றியும் சொல்லுங்கள் என தயவுசெய்து யாரும் கேட்டை ஆட்டவேண்டாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வேளாண்மையை உணர்ச்சிபூர்வமாக பார்ப்பதைத்தான் பாரம்பரியம் என்று பெரும்பாலோனோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை உடைக்கப்படுவதை பலரும் விரும்பாததால் ஏற்படும் வெற்றிடத்தை சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த எந்த அறிவும் இல்லாத நம்மாழ்வாரிய மூடர்கள் முன்னோர்களின் மரபுவழி ஞானம் என பல்வேறு பொய், புரட்டுகளை கலந்துகட்டி அடித்துவிட்டு நிரப்பி வருகின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறோம். ஆனால் எந்த கிராமமாவது காலியாகியிருக்கிறதா, உணவுப்பொருட்களின் விலை ஏறியிருக்கிறதா, அப்படியெனில் இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹிரியூர் மற்றும் மைசூர், மாண்டியா, ஷிமோகா பகுதிகளுக்கு 1960, 70-களில் தமிழர்கள் ஏன் குடியேறினார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்.

நம் முன்னோர்களின் ஞானம் மிக அற்புதமானது. ஏரிக்கரையில் குளிக்க வந்த பெண்ணிடம் “என்ன அருக்காணி, மச்சான் வெளியூர் போயிட்ட மாதிரி தெரியுது” என்று மைனர்கள் கேட்டுவைத்ததுகூட வருங்காலத்தில் மரபுவழி சிலேடை இலக்கியத்துக்கு உதாரணமாக வாட்சப்பில் வந்து தொலைக்கலாம்.

நாமகரண அக்கப்போரும், நிலையாமையும்

பெயரிடுதலில் உள்ள அறம், அரசியல், மொழித்திறன் குறித்து டிசம்பர் மாத தடம் இதழில் வெளியான நக்கீரன் அவர்களின் ‘தமிழ் – நம் நிலத்தின் கண்ணாடி’ கட்டுரையை மறுவாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, தொழில்நிமித்தமாக பல கிராமங்களுக்கும் சென்றுவருகையில் கண்ணில் படும் பெயர்ப்பலகைகள் ஒரு புது வகையான மாற்றங்களை, மாற்றங்கள் என்பதைவிட செயற்கையான திணிப்புகளை உணர்த்தியது.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள நிலத்தின் வளமை, நீர் இருப்பு, மரஞ்செடிகொடிகள், வனம், புவியியல் தகவமைப்புகள், அங்கிருந்த பூர்வகுடிகள், அவர்களது மூதாதையர்கள், அங்குள்ள நிலவுடைமைச் சாதி போன்றவற்றைப் பொறுத்து நிலங்களுக்கு/தோட்டங்களுக்கு பெயர்க்காரணம் அமைகிறது. பெரும்பாலான ஊர்களின் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன. இருட்டுப்பள்ளம், எதிர்மேடு, தட்டாங்காடு என பல ஊர்களின் பெயரே அந்தந்த நிலவமைப்பை உணர்த்தும்.

வெறும் காடாக இருந்த நிலப்பரப்புகளைப் புனரமைத்து விவசாயத்துக்கு கொண்டுவந்தவர்கள் அல்லது அங்கிருக்கும் பெருவாரியான சாதியைச் சாராதவர்களால் உண்டாக்கப்பட்ட விளைநிலங்கள் நாயக்கர் தோட்டம், வண்ணாந்தோட்டம், ஒட்டந்தோட்டம், துலுக்கந்தோட்டம் என்றபெயர்களில் இயல்பாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் தனி நபராக அல்லது எளிய குழுக்களாக வந்து அழுத்தமான இடத்தைப் பெற்றதன் அடையாளம் அது.

பிற்காலத்தில் விவசாயத்திலிருந்து விலகி வேறு தொழில்களை ஏற்றுக்கொண்டவர்களை சற்று வேறுபடுத்தியும், உயர்வாகவும் காட்ட தொழில்சார் அடைமொழிப்பெயர்கள் – வாத்தியார் தோட்டம், கணக்கன் தோட்டம், பிரசிடன்டு தோட்டம், பால்காரர் தோட்டம், அமெரிக்காக்காரர் தோட்டம் – வழக்கமானது.

அண்மையில் ஒரு தோட்டத்துக்குச் செல்ல வழி கேட்கையில் ‘ஸ்வஸ்திகா கார்டன்’ என்றனர். அதுசெரிங்னா, ஊருக்குள்ள வந்து என்னன்னு கேக்கோனும் என்றதும் வறட்டுப்பள்ளம் என்றது எதிர்முனை. ஒவ்வொரு ஊரிலும் கார்டன், எஸ்டேட், ஃபார்ம்ஸ், மீடோஸ், வேலி(valley), அவென்யூ என்றெல்லாம் பெயரிடப்படுபவை அந்த ஊர்களுக்கு துளியும் தொடர்பில்லாத வந்தேறி புதுப்பணக்காரர்களால் வலிந்து திணிக்கப்படுபவை. அந்த பெயர்ப்பலகைகள் கழட்டி வீசப்பட்டால் 99% பக்கத்து தோட்டத்துக்காரர்களாலேயே ஒரு மாதத்துக்குள் மறக்கப்பட்டுவிடும். கிரயப்பத்திரங்களில் தாமாகவே எழுதிக்கொண்டாலும், அந்த நிலங்கள் விற்கப்பட்டபின் இயல்பான பெயர்களே எஞ்சியிருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றுவரை எங்கேயும் பெண்களின் பெயரில் நிலங்கள் அடையாளம் காட்டப்படுவதை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நான் கண்டதில்லை. ஊருக்குள் பாக்கியம் டீச்சர் வீடு என்று வழிகாட்டப்படுவது, வயலுக்குச் சென்றதும் பண்ணையக்காரர் தோட்டம் என்றாகிவிடுகிறது. கணவனை இழந்ததும் தனி ஆளாக விவசாயம் செய்யும் பெண்களின் வயல்கள் அவர்களது ஆயுளுக்குப் பின்னர் அவர்களது பெயர்களை உதிர்த்துவிடுவது அவ்வளவு இயல்பானது என்று சொன்னால் நிலவுடைமைச் சமூகங்களின் ஆணாதிக்க முகங்களை நாம் மறைத்துக்கொள்வதேயாகும்.

நான் பணிபுரியும் நிறுவனத்தின் கிட்டங்கி இருக்கும் பகுதியிலுள்ள ஒரு அடுக்ககத்திற்கு ஏதோ சமஸ்கிருதப் பெயர் இருந்தது. அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதைவிட தயிர் இட்டேரி சாலை என்ற அந்த சாலையின் பெயர்க்காரணம் எப்படி வந்திருக்கும் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பி. எஸ். ஜி சமுதாய வானொலியில் ஒரு சொற்பொழிவாளர் பேசியதை பாதியிலிருந்து கேட்க நேரிட்டது. பண்டைய சமூகத்தில் பெயரில் முன்னொட்டு சேர்க்கும் அங்கீகாரம் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள வீட்டை எளிதில் அடையாளம் காணவும், கல்வியறிவற்றவர்கள் யாரும் தடுமாறக்கூடாது என்பதற்காக எழுதப்படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வீட்டை விரைந்து அடையவும் அவர்களது பெயர்களைவிட தொழிலின்பால் அழைக்கப்பட்டனர். பின்னர் வக்கீல்களுக்கு இந்த அடையாளம் வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

புதிய ஊர்களுக்கு செல்கையில் திசைகளை வைத்து நகர்வதும், ஊரின் சரிவு, ஓடைகள் செல்லும் திசை போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே செல்வது இயல்பான ஒன்றாகிவிட்டபடியால் அலைபேசியில் கூகுள் மேப் பார்ப்பது எனக்கு ஒரு விநோதமான பழக்கமாகவே தெரிகிறது. ‘தெக்கு வடக்கு தெரியாத பயல்’ பல வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை இரவு பகல் எந்நேரத்திலும், எந்த இடத்துக்குச் சென்றாலும் திசை தெரியாதவர்கள் வெளியுலக பயண அனுபவம் இல்லாதவர்கள் என்ற புரிதல்.

2014-இல் சென்னையில் மராத்தான் ஓட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பள்ளிக்கரணைப் பகுதியில் சவரம் செய்ய ஒரு கடை தேடி வெகுதூரம் நடந்துசெல்கையில் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதிக்கு அடிமடையில் உள்ள வீடுகிளி்ல் ஒன்றில்தான் தங்கியிருப்பது புரிந்தது. வேளச்சேரி புகாரி உணவகம் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்று பயணிக்கையில் கோவையிலுள்ள சங்கனூர் கண்முன் வந்துசென்றது. சங்கனூரை சங்கனூர்ப்பள்ளம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தகாலத்தில் யானைகளே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட இடம் எனவும், கோவை மக்களின் மணல் தேவைகளைப் பூர்த்திசெய்த இடம் எனவும், வெள்ளப்பெருக்கைக் காண மக்கள் வண்டிமாடு கட்டி வருவார்கள் எனவும், பல தீர்க்க முடியாத கணக்குகள் தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி வீசப்பட்ட இடமான சங்கனூர்ப்பள்ளம் இன்று வெறும் இருபது அடி அளவில் சுருங்கிவிட்டது. அதற்கு சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த கெளசிகா நதி இன்று தேடப்படும் நதியாகிவிட்டது. என்றாவது ஒருநாள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யப்போகும் கனமழை சென்னையில் மழையினால் உண்டான பாதிப்பைவிட அதிக சேதத்தை சங்கனூர், இரத்தினபுரி, கணபதி பகுதிகளில் உண்டாக்கக்கூடும். ஃபெர்ன்ஹில், ஆர்க்கிட் கவுன்ட்டி, மேப்பிள் மீடோஸ் எனப்படும் நவயுக நாமகரணங்கள் சங்கனூர்ப்பள்ளம் என்று தூசி தட்டப்படலாம்.

கூவத்தூர் என்பதும் இயல்பாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கும். நெய்தல் நிலங்கள், தொழில்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் அங்கிருக்கும் இடங்களுக்கு நிச்சயமாக பெயர்க்காரணங்கள் ஆழ்ந்த பொருளுடன் இருக்கும். கோல்டன் பே என்பது வலிந்து திணிக்கப்பட்ட பெயர் என்பதுடன் அது உள்ளூர் மக்களுக்கு தோட்டக்காரர், சரக்குந்து ஓட்டுனர் போன்ற ஒருசில அடிமட்ட வேலைகளுடன் நின்று காவலாளி முதல், மசாஜ் பார்லர் வரை வெளியூர் ஊழியர்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் இத்தகைய நாமகரணங்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.

கோட்டை கட்டி அடக்கி ஆண்டவர்கள், பல புரட்சிப் பட்டங்களை முன்னொட்டாகக் கொண்டவர்கள், அரசர்கள், அதிகார மையங்கள் என பலவும் மண்மேடாகிப் போவதைப் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் மண்தான் நம்மை வெல்கிறது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் அந்த மண்ணுக்கு நாம் பெயர்சூட்டுவதை மண் எப்படிப் பார்க்கும்?

யோகக் கலையும், மரம் வளர்ப்பும்

பிப்ரவரி 2017-இல் எழுதியது:

ஈஷா யோகா கம்பெனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அந்த கம்பெனி அதிகாரிகள் (சீடர்கள் என்பது அவர்களாகவே சொல்லிக்கொள்வது) அவ்வப்போது பதிலளித்து வருகிறார்கள். அவர்களது பதில்களானது எப்போதும் How responsible we are என்ற தொணியில் இருக்கிறது. உங்கள் நிறுவனம் மீதோ, அந்த நிறுவனத்தில் இருப்பதால் தனிப்பட்ட முறையிலோ வைக்கப்படும் விமர்சனங்களை நேரடியாக தாக்காமல் பாசிட்டிவ் ஆன விசயங்களை முன்னிறுத்தி உணர்ச்சிவசப்படாமல் பொறுப்பாக பதில் சொல்லவேண்டும் என்பது மாதிரியான பயிற்சிகள் பொதுமக்கள்/வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்கும் அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது கார்ப்பரேட் கம்பெனிகளில் இயல்பாக நடக்கும் ஒன்று. இத்தகைய பொறுப்பான பதில்கள் தருமளவுக்கு அந்த கம்பெனி சீடர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதை கார்ப்பரேட் கம்பெனிகளின் மனித வளத்துறை ஆட்கள் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கிறது.

ஏனெனில் தொழில்முறை யோகா நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள் போல் அல்லாமல் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப அமைப்பிலோ, சமூக, அலுவலக சூழலிலோ ஒரு சராசரி மனிதனாக இணைந்திருக்க முடியாத தற்குறிகளைக் கண்டறிந்து, அவர்களை பயிற்றுவித்து attrition இல்லாமல் கம்பெனி நடத்துவது ஒரு அரிய திறமை.

கோயமுத்தூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏழு முதல் பத்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மாநகராட்சியால் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த சிவராத்திரி விழாவுக்கு மோடி வருவதால் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்த்தப்பட்டிருப்பதாக நாளேடுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு பணிக்காக அழைக்கப்பட்டிருக்கின்றனர். விழா நடக்குமிடத்தில் குறைந்தது ஒருமாத காலமாவது 24 மணிநேரமும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்தாலொழிய இவ்வளவு பெரிய ஏற்பாடுகள் செய்ய இயலாது. அவர்களுக்கும் இந்த விழாவுக்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்கள், காவலர்கள், அதிகாரிகள் என எல்லோருக்கும் எத்தனை மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்? அவர்கள் அவர்களது ஊரிலேயே இருந்தால் மட்டும் தண்ணீர் தேவைப்படாதா என்று சாமர்த்தியமாக சிலர் கேள்வி கேட்கக்கூடும். ஈஷாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து பேசினால் ஏன் காருண்யா செய்யவில்லையா என்று கேட்பதுமாதிரி. இலட்சக்கணக்காணோர் பல மாவட்டங்களில் பரவலாக பயன்படுத்தும் தண்ணீரை, செயற்கையாக ஒரு விழா எடுத்து கூட்டம் கூட்டி வறட்சிகாலத்தில், ஒரு மாநகரத்தின் ஒருவார தண்ணீர் தேவையை ஒரேநாளில் காலி செய்துவிட்டு நீர் மேலாண்மை குறித்து சொற்பொழிவாற்றுவது அறம் என்றாகிவிட்டது. குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களை முன்னுதாரணமாக வைத்து வணங்கும் சமூகத்தில் எதுவும் அறமே.

வனத்தை அழிக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு வரும்போதெல்லாம் ஈஷா யோகா கம்பெனி தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாற்றங்கால்களை அமைத்து மரக்கன்றுகளை வழங்கி பசுமையை பாதுகாக்கிறது என்ற பதில் பிசிறில்லாமல் வருகிறது.

வனங்களிலும், நகர்ப்புறத்திலும் நடப்படும் மரக்கன்றுகளில் 51% மட்டுமே survive ஆகும் என்பது வனத்துறை நிபுணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அதற்கும், நடப்படும் மரக்கன்றுகள் குறைந்தது இரண்டரை அடி உயரமாவது இருக்கவேண்டும். அதற்கு குறைவான உயரமிருப்பின் பல்வேறு காரணங்களால் தாக்குப்பிடித்து வளர்வது கடினம் என்பது தொழில்முறையில் நாற்றங்கால்களில் புழங்கி வருபவர்கள் அறிவர். வனத்துறையினரது நாற்றங்கால்கள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இல்லாவிட்டாலும் அங்குள்ள கன்றுகளின் தரத்தை அவ்வளவு சீக்கிரம் குறைசொல்ல இயலாது.

ஈஷாவின் பல நர்சரிகளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் பெரும்பாலும் ஒன்றரை அடி உயரத்துக்கும் குறைவானவை. அவை தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு குறைந்த விலையில் விற்கப்படுவது, மரம் நடவேண்டும் என்ற ஆர்வமிருக்கும் மக்களுக்கு எளிதாக கிடைக்கச்செய்தது என பல சிறப்புகள் இருந்தாலும் அதன் impact என்பது மிகவும் குறைவு. ஈஷாவின் நாற்றங்கால்கள் வீட்டுமுன் இரண்டு மலைவேம்பு மரங்களை வாங்கிவந்து நடுவதற்கு ஏற்றவை; ஐந்து ஏக்கருக்கு அங்கே மலைவேம்பு வாங்கி நட விஷயம் தெரிந்தவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். ஏன் அங்கே வாங்கக்கூடாது, நான் நட்டு வளர்த்துக்காட்டவா என்று தம் கட்டவேண்டாம்.

ஹியூகோ வுட் (Hugo Wood) என்ற ஆங்கிலேய காட்டிலாகா அதிகாரி ஆனைமலையில் வாழ்ந்தபோது நட்டு வளர்த்த வனத்தின் பரப்பளவு 650 சதுர கிலோமீட்டர். அவரது கல்லறைகூட அங்கேயே எழுப்பப்பட்டது. கடைசிவரை தனியாக வசித்துவந்த அவர் நடந்துசெல்கையில் விதைகளை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கைத்தடியில் குத்திக் குத்தி நட்டுக்கொண்டே செல்வாராம். அவருக்கு முந்தைய அதிகாரிகள் ஏகத்துக்கும் மரங்களை வெட்டி இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்து அரசிடம் நற்பெயர் எடுத்த காலகட்டத்தில் காடுகளின் மறுசீரமைப்பை முன்வைத்து பணியாற்றியவர். அத்தகைய பல அதிகாரிகளின் துணிச்சலான, சுதந்திரமான முடிவெடுக்கும் திறன்களையும் அதன் சாதக பாதகங்களையும் பயிற்சியின்போது பாடமாக படிக்கும் அதிகாரிகள்தான் இன்று செயற்கையான வன மகோத்சவ கொண்டாட்டங்களுக்கு அனுமதி தருகின்றனர்.

அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள் பாவம். உண்மையைச் சொன்னதற்காக உயரதிகாரிகளைப் பணிநீக்கம் செய்த தலைவர் வருகிறார். உண்மையை எழுதியதற்கு ஆசிட் வீசிபவர்கள், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர்களின் படங்களுக்குக் கீழ் அமர்ந்து பணியாற்றுகிறார்கள். ஆக, அவர்களும் அறம் சார்ந்த சமூக கவலைகளால் உந்தப்பட்டு அத்தனைக்கும் ஆசைப்படுவது இயல்புதானே.

நடுத்தர வர்க்கத்தின் நாசகார சிந்தனைகளின் தொகுப்பு

ரேஷன் கார்டு பயனாளியின் தேவையைப் பொருத்து வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டாலும் அதில் ஒரு சமத்துவம் இருக்கிறது. தனக்கு தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக்கொண்டாலும் எல்லோருக்கும் ஒரே வரிசை, ஒரே கட்டணம்தான். பணக்காரனுக்கு தனி வரிசை, தனி மொழி, பஞ்சத்துக்கு வந்தவனுக்கு தனி வரிசை, தனி ஆபிசர் என்று பாரபட்சம் காட்டுவதில்லை.

எல்லோரும் வங்கிச்சேவைக்குள் வரவேண்டும் அதுவே கறுப்புப்பணத்தை ஒழிக்கும் எளிய வழி என்று ‘படித்த வர்க்கத்தினர்’ கருத்துத் தெரிவிக்கின்றனர். வங்கியில் கணக்கு வைக்கும்போதே சாதா கஸ்டமர், பிளாட்டினம் கஸ்டமர் என்ற ஏற்றத்தாழ்வு ஆரம்பித்துவிடுகிறது. சாதா கஸ்டமர் என்றால் வரிசையில் நின்று சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பிளாட்டினம் கஸ்டமரை மேனேஜரே வாயெல்லாம் பல்லாக வாசற்படிவரை வந்து அழைத்துச்சென்று தனது கேபினில் உட்காரவைத்து காபி கொடுத்து, சேவையும் வழங்கி அனுப்புவார். சில இடங்களில் லுங்கி அணிந்து உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையும் உண்டு.

பாங்கி அதிகாரி நண்பர்கள் பலர் We are not here for charity, everything is business; this is hard reality of life bro என்று மூஞ்சியில் பஞ்ச் விடக்கூடும். இதே தர்க்கம் அரிசிக்கடைகளுக்கும் உண்டு. நிறைய வாங்கும் பிளாட்டினம் டைப் வாடிக்கையாளர்களுக்கு, சமையல்காரர்களுக்கு பிரத்தியேக கவனிப்பு, தனி ரேட், கடன் சலுகை என பல உண்டு. வாரம் இரண்டு கிலோ, நான்கு கிலோ வாங்கும் லுங்கி அணிந்த கஸ்டமருக்கு இத்தகைய பிரிவிலேஜ் கிடைக்காது.

அதனாலேயே அந்த லுங்கிக்கார கஸ்டமர் வேலை செய்யுமிடத்தில் கூலியாக வரும் பணத்தில் கொஞ்சம் நெல்லை வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து தானே அரைத்துவந்து வைத்துக்கொள்கிறார். நெல் வாங்கி அரைத்து தவிட்டையும் மாட்டுக்காக எடுத்துவரும் ஒருவரை அரிசி தனியாக, தவிடு தனியாக கடைகளில்தான் வாங்கவேண்டும் என்பதுதான் இந்த Banking for all சிஸ்டம்.

oOOOOo

ரொக்கம் கொடுத்து வாங்கிவந்த மீனைத் தட்டில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியை போட்டதும் கறுப்புப்பண விவாதம் குறித்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.

கணவனும் மனைவியுமாக சேர்ந்து தினமும் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய உணவகம் வைத்திருக்கும் ஒருவரை டை கட்டிய ஆசாமி ஒருவர் கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். தினம் ஆறாயிரம் ரூபாய் என்றால் கிட்டத்தட்ட வருடத்துக்கு இருபது இலட்சத்துக்கு வியாபாரம், நீங்கள் ஏன் வங்கிச்சேவையை பயன்படுத்துவதில்லை என்று புத்தசாலித்தனமாக மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டவண்ணம் இருந்தார்.

வணிகர்கள் மீதான ஒரு பொதுப்புத்தியில் ஒன்று அவர்களது கல்லாவில் விழும் பணம் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்வார்கள் அல்லது குறைந்தது 40% இலாபம் இருக்கும் என்பதுமாதிரியான சிந்தனை.

வங்கியின் இலாபம் என்பது ஊழியர்களின் சம்பளம், காப்பீடு மற்றும் இதர பணிசார் அனுகூலங்கள், செலவினங்கள், புதிய பொருட்கள் வாங்கும் செலவுகள், ஏற்கனவே இருக்கும் சொத்துக்களின் மீதான தேய்மானம், கடன் மற்றும் அதற்கான வட்டி கழித்துதான் கணக்கிடப்படுகிறது. ஒருவர் தானே இயக்குனராக இருந்து நடத்தும் கம்பெனியாக இருந்தாலும் தனது சம்பளம் போகத்தான் கம்பெனி இலாபத்தைக் கணக்கிடுவார்.

காலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஓய்வில்லாமல் வருடம் முழுவதும் வேலை செய்யும் ஒரு நபருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும், போனஸ் தரவேண்டும்? ஏதாவது ஒரு காரணத்தால் பணிபுரிய முடியாமல் போனால் இழப்பீடு உண்டா, மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் உண்டா, வேறு ஏதாவது படிகள் உண்டா, விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றால் வேறு யாராவது அவரது வேலையை பதிலீடு செய்வார்களா, ஓய்வூதியம் உண்டா? அது எப்படி சொந்தத் தொழில் செய்பவர்களின் வருமானத்தை பிரித்துப் பார்க்காமல் ஒரு மொன்னையான ஊகம் செய்ய முடிகிறது?

அவர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் தனது உழைப்பின் மீதான நம்பிக்கையில் ரிஸ்க் எடுப்பவரை லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்கும் ஒருவரோடு ஒப்பிட, தடித்த தோல் வேண்டும். கம்பெனியின் புரமோட்டருக்குக்கூட கடைசியில் sweat equity என்ற ஒன்று உண்டு; சிறிய, அமைப்புசாரா தொழிலில் இருப்பவர்களுக்கு அது வெறும் வியர்வை மட்டுமே. அந்த வியர்வையைத்தான் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் டை கட்டிய ஆசாமிகள் கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பரிகசிக்கிறார்கள்.

மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி – பசுமைப் பத்திரிகைகளின் எழுச்சி

கேள்வி: மூன்றே மாதத்தில் நான்கு இலட்சம் வருமானத்தை அள்ளித்தரும் ஊமத்தை சாகுபடி என்ற ரீதியில் கட்டுரை வெளியிடும் பிரபல பசுமைப் பத்திரிகை, வேளாண்மைத்துறையில் உள்ள அதிகாரிகளில் பலர் பாரம்பரிய விவசாய முறைகளில் ஆர்வம் கொண்டு இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க அயராது உழைத்து வருவதாகவும் அதனால் தமிழகத்தில் பெரிய அலை அடிப்பதாகவும் கூறிவருகிறது. அவ்வாறு அலை ஏதாவது அடித்து கிளர்ச்சி ஏற்பட்டு, புரட்சி உண்டாகி, மலர்ச்சி வந்துகொண்டிருக்கிறதா?

பதில்: ‘இயற்கை விவசாய முறை’ என்று செயற்கையாக இன்று உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கருதுகோளை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்வதை வேளாண்மைத்துறை அதிகாரிகள் செய்வது – ஒருசில திட்டங்கள் தவிர்த்து – அவர்களது அன்றாட கடமைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகும். அவ்வாறு சமூக ஊடகங்களில் செய்துவரும் சிலர் நேரத்தைக் கொல்வதற்காக வேண்டுமானால் செய்துவரலாம். ஏனெனில் ஆலோசனை கொடுப்பதோடு அவர்கள் நின்றுவிடுவதும், அதைப் பின்பற்றி செயல்படுத்துபவரின் நேரமும், பணமும் இவர்களது ரிஸ்க் இல்லை என்பதும் கவனிக்கவேண்டிய ஒன்று.

அதேநேரத்தில் விதை, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை உரிமங்களை வழங்குவது, விற்பனையை ஒழுங்குபடுத்துவது, மாதிரிகள் எடுத்து தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்வது , தேவைப்படின் சட்ட நடவடிக்கை எடுப்பதெல்லாம் துறை அதிகாரிகளின் அடிப்படைக் கடமைகள். இந்த அடிப்படை வேலைகளிலேயே சுணக்கம் இருக்கவே செய்கிறது.

வேளாண்துறையில் பணியாற்றும் நண்பர்கள் பலரும் அப்படியெல்லாம் இல்லை என்று இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும். ஆனால் நடைமுறையில் புதிதாக ஒரு கடை ஆரம்பிக்க விரும்பும் தொழில் முனைவோர் இந்த உரிமங்களுக்காக குறைந்தது இரண்டு மாதங்கள் காத்திருக்கவேண்டும். ஓரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து முன்பணம் செலுத்தி, வாடகை மாதந்தோறும் கட்டி, உரிமங்கள் வரும்வரை காத்திருந்து (சராசரியாக மூன்று மாதம் ஆகும்) பின்னர்தான் வியாபாரத்தை ஆரம்பிக்க முடியும்.

முறையாக விண்ணப்பித்து, அதிகாரி நேரில் வந்து பார்த்துவிட்டுச்சென்று, உரிமம் வழங்கிட இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிடும் என்றாலும் பின் தேதியிட்டே உரிமம் வழங்கப்படுவதால் எல்லாம் முறையாக நடப்பதாகவே தோன்றும்.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்த்தகர்கள் என்றாலே பதுக்கல்காரர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், கொள்ளை இலாபத்துக்கு விற்பவர்கள் என்ற பொதுப்புத்தி சமூகத்தில் பரவலாக உண்டு. நியாயமாக வணிகம் செய்யவேண்டும் என்ற நோக்கில் வர்த்தகர்கள் முன்வந்தாலும் Principal certificate-களை என்டார்ஸ் செய்ய, பழைய உரிமத்தைப் புதுப்பிக்க என எதற்குமே இத்தனைநாள் காலக்கெடு என்ற ஒன்று இல்லாததால் விவசாய இடுபொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மன உளைச்சல்களை யாரும் கண்டுகொள்வதில்லை.

ஒரு துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு சட்டம்தான் என்றாலும் விதைப் பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதிக்கு முப்பது நாட்களுக்கு முன்னரே சரக்குகளை விற்பதை நிறுத்தி திருப்பியனுப்ப வேண்டும் என்பது, உர மூட்டைகளை பிரித்து விற்கக்கூடாது என்பது விதிமுறை என்றாலும் விவசாயிகளுக்கு சேவை செய்ய பிரித்து சில்லரையில் விற்கவேண்டும் என வலியுறுத்துவது என பல அதிகாரிகள் சட்டாம்பிள்ளையாகி விடுவதோடு, ‘இவரு உண்மையிலேயே அக்ரி படிச்சிருப்பாரா?’ என்ற நகைப்புக்கும் வழிகோலுகின்றனர்.

கள யதார்த்தம் இப்படியிருக்க, மரபுவழிக்கு திரும்புங்கள் என்று சட்டைபோடாமல் பேஸ்புக்கில் படம் போட்டு ‘அழைப்பு’ விடுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் கூடியிருக்கிறது.

ஆகவே அலை அடிக்கிறது, எழுச்சி ஏற்பட்டிருக்கிறது என்றெல்லாம் யாரேனும் சொன்னால் தீர விசாரித்து பின்னர் முதலீடு செய்யவும். கஷ்டப்பட்டு நீங்கள் சம்பாதித்த பணம், செலவிடும் நேரம் எல்லாம் போனால் வராது.