நடுத்தர வர்க்கத்தின் நாசகார சிந்தனைகளின் தொகுப்பு

ரேஷன் கார்டு பயனாளியின் தேவையைப் பொருத்து வெவ்வேறு வண்ணங்களில் வழங்கப்பட்டாலும் அதில் ஒரு சமத்துவம் இருக்கிறது. தனக்கு தேவைப்பட்டதை மட்டும் வாங்கிக்கொண்டாலும் எல்லோருக்கும் ஒரே வரிசை, ஒரே கட்டணம்தான். பணக்காரனுக்கு தனி வரிசை, தனி மொழி, பஞ்சத்துக்கு வந்தவனுக்கு தனி வரிசை, தனி ஆபிசர் என்று பாரபட்சம் காட்டுவதில்லை.

எல்லோரும் வங்கிச்சேவைக்குள் வரவேண்டும் அதுவே கறுப்புப்பணத்தை ஒழிக்கும் எளிய வழி என்று ‘படித்த வர்க்கத்தினர்’ கருத்துத் தெரிவிக்கின்றனர். வங்கியில் கணக்கு வைக்கும்போதே சாதா கஸ்டமர், பிளாட்டினம் கஸ்டமர் என்ற ஏற்றத்தாழ்வு ஆரம்பித்துவிடுகிறது. சாதா கஸ்டமர் என்றால் வரிசையில் நின்று சேவையைப் பெற்றுக்கொள்ள வேண்டும், பிளாட்டினம் கஸ்டமரை மேனேஜரே வாயெல்லாம் பல்லாக வாசற்படிவரை வந்து அழைத்துச்சென்று தனது கேபினில் உட்காரவைத்து காபி கொடுத்து, சேவையும் வழங்கி அனுப்புவார். சில இடங்களில் லுங்கி அணிந்து உள்ளே வரக்கூடாது என்ற அறிவிப்புப் பலகையும் உண்டு.

பாங்கி அதிகாரி நண்பர்கள் பலர் We are not here for charity, everything is business; this is hard reality of life bro என்று மூஞ்சியில் பஞ்ச் விடக்கூடும். இதே தர்க்கம் அரிசிக்கடைகளுக்கும் உண்டு. நிறைய வாங்கும் பிளாட்டினம் டைப் வாடிக்கையாளர்களுக்கு, சமையல்காரர்களுக்கு பிரத்தியேக கவனிப்பு, தனி ரேட், கடன் சலுகை என பல உண்டு. வாரம் இரண்டு கிலோ, நான்கு கிலோ வாங்கும் லுங்கி அணிந்த கஸ்டமருக்கு இத்தகைய பிரிவிலேஜ் கிடைக்காது.

அதனாலேயே அந்த லுங்கிக்கார கஸ்டமர் வேலை செய்யுமிடத்தில் கூலியாக வரும் பணத்தில் கொஞ்சம் நெல்லை வாங்கி வந்து ரைஸ் மில்லில் கொடுத்து தானே அரைத்துவந்து வைத்துக்கொள்கிறார். நெல் வாங்கி அரைத்து தவிட்டையும் மாட்டுக்காக எடுத்துவரும் ஒருவரை அரிசி தனியாக, தவிடு தனியாக கடைகளில்தான் வாங்கவேண்டும் என்பதுதான் இந்த Banking for all சிஸ்டம்.

oOOOOo

ரொக்கம் கொடுத்து வாங்கிவந்த மீனைத் தட்டில் வைத்துக்கொண்டு தொலைக்காட்சியை போட்டதும் கறுப்புப்பண விவாதம் குறித்த ‘நீயா நானா’ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது.

கணவனும் மனைவியுமாக சேர்ந்து தினமும் ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு சிறிய உணவகம் வைத்திருக்கும் ஒருவரை டை கட்டிய ஆசாமி ஒருவர் கிடுக்குப்பிடி கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். தினம் ஆறாயிரம் ரூபாய் என்றால் கிட்டத்தட்ட வருடத்துக்கு இருபது இலட்சத்துக்கு வியாபாரம், நீங்கள் ஏன் வங்கிச்சேவையை பயன்படுத்துவதில்லை என்று புத்தசாலித்தனமாக மடக்குவதாக நினைத்துக்கொண்டு கேள்வி கேட்டவண்ணம் இருந்தார்.

வணிகர்கள் மீதான ஒரு பொதுப்புத்தியில் ஒன்று அவர்களது கல்லாவில் விழும் பணம் அனைத்தையும் அவர்களே வைத்துக்கொள்வார்கள் அல்லது குறைந்தது 40% இலாபம் இருக்கும் என்பதுமாதிரியான சிந்தனை.

வங்கியின் இலாபம் என்பது ஊழியர்களின் சம்பளம், காப்பீடு மற்றும் இதர பணிசார் அனுகூலங்கள், செலவினங்கள், புதிய பொருட்கள் வாங்கும் செலவுகள், ஏற்கனவே இருக்கும் சொத்துக்களின் மீதான தேய்மானம், கடன் மற்றும் அதற்கான வட்டி கழித்துதான் கணக்கிடப்படுகிறது. ஒருவர் தானே இயக்குனராக இருந்து நடத்தும் கம்பெனியாக இருந்தாலும் தனது சம்பளம் போகத்தான் கம்பெனி இலாபத்தைக் கணக்கிடுவார்.

காலை ஆறுமணியிலிருந்து இரவு பத்து மணிவரை ஓய்வில்லாமல் வருடம் முழுவதும் வேலை செய்யும் ஒரு நபருக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும், போனஸ் தரவேண்டும்? ஏதாவது ஒரு காரணத்தால் பணிபுரிய முடியாமல் போனால் இழப்பீடு உண்டா, மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் உண்டா, வேறு ஏதாவது படிகள் உண்டா, விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியூர் சென்றால் வேறு யாராவது அவரது வேலையை பதிலீடு செய்வார்களா, ஓய்வூதியம் உண்டா? அது எப்படி சொந்தத் தொழில் செய்பவர்களின் வருமானத்தை பிரித்துப் பார்க்காமல் ஒரு மொன்னையான ஊகம் செய்ய முடிகிறது?

அவர்களின் வாழ்க்கையையும், குடும்பத்தின் எதிர்காலத்தையும் தனது உழைப்பின் மீதான நம்பிக்கையில் ரிஸ்க் எடுப்பவரை லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்கும் ஒருவரோடு ஒப்பிட, தடித்த தோல் வேண்டும். கம்பெனியின் புரமோட்டருக்குக்கூட கடைசியில் sweat equity என்ற ஒன்று உண்டு; சிறிய, அமைப்புசாரா தொழிலில் இருப்பவர்களுக்கு அது வெறும் வியர்வை மட்டுமே. அந்த வியர்வையைத்தான் ஏசி அறையில் உட்கார்ந்திருக்கும் டை கட்டிய ஆசாமிகள் கிடுக்குப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு பரிகசிக்கிறார்கள்.