மாதொருபாகன் சாகித்ய அகாடமி விருது சர்ச்சை – போலி சாதிப் பெருமை பேசும் அன்றாடங்காய்ச்சிகள்

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான One Part Woman-க்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. பெண்களின் கண்ணியத்துக்கு களங்கம் வரும்படி நாவலில் சில பகுதிகள் உள்ளதாக நம்புகிறார்கள். இதில் 99.9% ஆட்கள் அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு கூவுகிறார்கள். அப்படியெல்லாம் பார்த்தால் இராமாயணம், மகாபாரத்தைவிட பெண்களை இழிவாக பாவிக்கின்ற நூல்கள் இருக்கவே முடியாது.

திருச்செங்கோடு மலையடிவாரத்தில் ஒரு தெருவைத் திருவிழா நாளின்போது தேவடியாள் தெரு என்றே மக்கள் சொல்வதாகவும், அன்றைய தினம் அங்கு வரும் அனைவருமே தேவடியாள்தான் என்று மக்கள் எளிதாக எடுத்துக்கொள்வதாகவும் கதையின் போக்கில் வருவதுதான் பிரச்சினை. அதை செவிவழி வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் எழுதியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அதற்கு ஆதாரம் இல்லாதபோது அஃது ஒரு கற்பனைக் கதையாகிவிடுகிறது. கதை மாந்தர்களான காளியும் பொன்னாளும் கவுண்டர் என்பதற்கு பதிலாக வன்னியர் என்றோ, நாயக்கர் என்றோ இருந்திருந்தால் கேள்வியே வந்திருக்காது.

திருச்செங்கோட்டு மலைமீது ‘வறடிக் கல்’ இருப்பதையும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அதை சுற்றிவந்து வணங்கினால் குழந்தை உண்டாகும் என்பதும் ஒரு நம்பிக்கை என்பதைச் சுற்றிலும் கதை நகர்கிறது. திருச்செங்கோட்டுத் தேர்த் திருவிழா மட்டுமல்ல பல ஊர்களிலும் திருவிழாக்கள் என்பது வெறும் சாமி கும்பிடும் நிகழ்வன்று. வேளாண் குடிகளின் ஓய்வுக்காக, களிப்பிற்காக, வணிக வாய்ப்புகளுக்காக, திருமண ஏற்பாடுகள் செய்ய, கால்நடைகள், நிலங்கள் வாங்க விற்க என ஒரு பெரிய பண்பாட்டு அசைவாகவே இருந்திருக்கின்றன. சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, தேர்களின் மீது ஒருசாரார் உட்கார்ந்துகொள்ளவும் மற்றவர்கள் இழுக்கவுமான காலகட்டம்வரை திருவிழாக்கள் என்பது மக்களுக்கானதாக இருந்து, கடவுளுக்கானதாக மாறிவிட்டிருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்கள், crushகள், காதல்கள், காமங்கள் எல்லாம் part of the game. இதையெல்லாம் பார்த்தேயிறாதவர்கள் நிச்சயமாக ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. அப்படியெல்லாம் எங்க ஊர் திருவிழாவுல இல்ல தெரியுமா என்று சொல்வதாக இருந்தால் தயவுசெய்து என்னை அன்ஃபிரன்ட் செய்துவிடவும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களை விதைத்த குற்ற உணர்ச்சிக்கு நான் ஆளாக நேரிடும்.

கவுண்டர் சமூகம் என்பது ஒரு மிக உயர்வான கற்பு நெறிகளைக் கொண்டதாகவும் அதை நாவல்களில், கற்பனைக் கதைகளில்கூட சீண்டக்கூடாது என்பதும் கொங்கு கவுண்டர் சமுதாய அடிப்படைவாதிகளின் வாதம். கடுமையாக உழைத்து ஒரு குடும்பம் முன்னேறி கொஞ்சம் வசதி வாய்ப்போடு வாழப்பெற்றால் அக்குடும்பத்திலுள்ள பெண்களின் கற்பொழுக்கத்தை உறவினர்களே கேலி செய்து நகைப்பது கவுண்டர் சாதியினரின் ஒரு peculiar trait. ‘எல்லாம் காலைத் தூக்கி சம்பாரிச்சதுதான’ என்று ஒரு குடும்பத்தின் உழைப்பை, தன்னூக்கத்தைக் கேவலமாக பேசும் வழக்கம் வேறு எந்த சாதியினரிடத்தும் காண முடியாத ஒன்று. இதை நான் சந்தித்த கவுண்டர் சாதியினரில் யாருமே மறுத்ததில்லை.

நோ, நோ, எங்க சாதிசனத்துல அப்படியெல்லாம் கிடையாது என்று மறுப்பவர்கள் வீரமாத்திகளின் வரலாறு, அண்ணமார் கதை என எதுவுமே தெரியாமல் மீசைய முறுக்கு போன்ற பாட்டு கேட்டு வளர்ந்த சுள்ளான்களாக இருப்பார்கள்.

நம்மைச் சுற்றிலும் எல்லாமே பரந்து விரிந்து கிடக்கிறது. நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அப்படி எதுவுமில்லை என்று ஆகிவிடுவதில்லை. ‘மரப்பல்லி’ நாவலில் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு போகும் இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவில் விழுவதையும், அதில் ஆதிக்கம் செலுத்தும் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதையும் வா. மு. கோமு இயல்பாக எழுதியிருப்பார். ஊத்துக்குளி பகுதியில் வரும் இந்த கதையில் பெண்ணியவாதிகளின் மனம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சில விசயங்கள் இயல்பாக வந்துபோகும். பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவை இல்லை என்றாகிவிடா. ஊத்துக்குளியின் பெயரில் லெஸ்பியன் கதையா என்று ஒரு கும்பல் கிளம்பி அவரிடம் சண்டைக்குப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வா. மு. கோமுவின் ‘சயனம்’ நாவலும் கவுண்டர் பந்தாவின் பலவற்றை இயல்பாக உடைத்துச்செல்லும். மற்றபடி அன்பும், பண்பும், ஈகையும், தர்மமுமாக வாழ்ந்து வருவது கவுண்டர் சாதி என்று பேஸ்புக்கில் மீம்ஸ் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.

மாதொருபாகன், குழந்தை இல்லாத தம்பதிகளை உறவினர்கள் அவமதிக்கும் பல நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதோடு, சொத்துப்பிரச்சினையின் பல பரிமாணங்களையும் பேசுகிறது. காளியின் சித்தப்பா பாத்திரம் பல ஜீரணிக்க முடியாத உண்மைகளை பேசுகிறது. அது மட்டுமல்லாது அர்த்தநாரி, ஆளவாயன் நாவல்களும் முக்கியமானவை.

வழக்கம்போல பல தேசபக்தர்கள் இதில் புகுந்து விளையாடியதால் ஹிந்து மதப் பிரச்சினை என்று சில பத்திரிகைகள் எழுதியது. ஆனால் திருச்செங்கொட்டை அடுத்த நாமக்கல், பரமத்தியிலெல்லாம் ‘இந்து மதப் பிரச்சினையா, அப்படின்னா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் எழுதி இரண்டு வருடமாகியும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென்று பெண்கள் மீது பாசம் பொங்கி வழிந்தது எப்படி? அரசியல் கேரியர் வளர்ச்சிக்காக ஈமு கோழித் திருடர் (ர் – ரெஸ்பெக்ட்) ஒருவரால் பிடுங்கப்பட்ட தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் வன்னியர்களுக்கும், கவுண்டர்களுக்கும் அடிதடியாகி நீதிமன்றம் வரை சென்றது தனியரசு முதன்முறை எம்எல்ஏ ஆன தேர்தல் முடிவுகளின்போதுதான். ஒவ்வொரு ஊராக தனியரசு படம் போட்ட போர்டு வைக்கும் முன்புவரை அங்கு கவுண்டர்களுக்கும், பட்டியலினத்தவருக்குமான மோதல் என்பது மிக அரிதான ஒன்று. தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையால் அந்த பகுதியில் சாதிய ரீதியிலான தேவையே இல்லாத உரசல்களைத் தாண்டி கவுண்டர் சாதிக்கான மூன்று நான்கு பலன்களை யாராவது பட்டியலிட்டால் இந்த பதிவை நீக்கிவிடவும் தயார்.

கொங்கு டா, கவண்டன் டா என்று சொல்லித் திரியும் சில பல சில்லறைப்பயல்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்து பல ஊர்களுக்குள் தேவையே இல்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதில் அமெரிக்காவாழ் கொங்கு கவுண்டர் சாதிச்சங்க கழிசடைகளில் சிலருக்கு முக்கிய பங்குண்டு.

மாதொருபாகன் ஒரு பிரச்சினையே இல்லை. அது பெண்களின் கற்புக்கு களங்கம் விளைவிக்கும்வண்ணம் உள்ளது என்று சொல்லும் நபர்களின் உண்மையான ஆதங்கமெல்லாம் பெண் என்றால் ‘ஏனுங் மாமா கூப்டீங்ளா, காப்பித்தண்ணி போட்டாரனுங்ளா?’ என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமாகத்தான் இருக்கும். மற்றபடி கற்புக்கு விளக்கு பிடிக்கும் டகால்ட்டி எல்லாம் சும்மா.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அந்தக் காலத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கோவில்களுக்கு இருந்தன. அவை எப்படி பிராமணர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தன, அவர்கள் எப்படி கவுண்டர், நாயக்கர் சமூகத்திற்கு விற்றார்கள் என்பதை பொதுவெளியில் பேசினால் வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என ஒரு கும்பல் கிளம்பி வருவார்கள். (பேக்கரி டீலிங் அக்ரிமென்ட்தானே என்பவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள்).

பின்குறிப்பு: பரமத்திவேலூர் எனது சொந்த ஊர் என்பதோடு மேற்கு மாவட்டங்களில் மிக விரிவாக பயணம் செய்து வருபவன் என்ற முறையில் இங்குள்ள சாதியக் கட்டமைப்பு எனக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி நான் எந்த சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *