ஆந்திராவின் கடியம் பகுதியிலுள்ள நர்சரிகள் – குறிப்புகள்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடியம் பகுதியில் 1950-களில் அண்ணன் தம்பிகளுக்கு சொத்து பிரிக்கும்போது ஊனமுற்ற தம்பி ஒருவருக்கு வெறும் அரை ஏக்கரைக் கொடுத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை அண்ணன்கள் வைத்துக் கொள்கின்றனர். அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அரை ஏக்கர் கிடைத்ததே என்று ஏற்றுக்கொள்கிறார் திரு. பல்ல வெங்கண்ணா. விதவிதமாக பல செடிகளை பதியனிட்டு, தொட்டிகளில் அடைத்து வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். நல்ல தரம், தொழில் சுத்தம் காரணமாக அவரது செடிகளை பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக நாற்றங்காலை விரிவுபடுத்துகிறார். சொந்தமாக நிலம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் வருவதுபோல கடின உழைப்பால் சில ஆண்டுகளில் அண்ணன்களை அசால்ட்டாக மிஞ்சிச் செல்கிறார் பல்ல வெங்கண்ணாகாரு.

இன்று கடியம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட நர்சரிகள் 20000-க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் தொழிற்சாலை கணக்காக இயங்கி வருகின்றன. கடியம் நர்சரி என்று கூகுளிட்டால் வரும் முதலில் வரும் ஸ்ரீ சத்யநாராயணா நர்சரி பல்ல வெங்கண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அந்த நர்சரி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, ஊனமுற்ற ஒருவரால் ஒரு பிராந்தியத்தின் அடையாளமே மாறி விட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க பலவகையான அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள், மரங்களை கடியம் பகுதிதான் அனுப்பி வைக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும் ஏதாவது நர்சரியில் விசாரித்துப் பார்த்தால் ஆந்திராவில் இருந்து வருகிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த அலங்காரச் செடி தொழிலில் 70-80% ஆந்திர சப்ளைதான்.

நகரங்களில் சாக்கடை தோண்டுவதற்கு மரங்களுக்குப் பின்னாலும், அலைபேசி சேவைகளுக்காக மரங்களுக்கு முன்னாலும் தோண்டி போதுமான அளவுக்கு பக்கவாட்டு வேர்களை அறுத்துவிடுகிறார்கள். விளம்பரத் தட்டிகள் தொங்க விடுவதற்கு ஆணி அடித்து, அது துரு ஏறி, ஒரு நல்ல நாளில் மரத்தின் மையப்பகுதியில் துளை உண்டாகி ஒரு மிக நல்ல நாள் பார்த்து வாகனங்கள் மீது விழுகிறது. சில உயிர்களை அவ்வப்போது பலி வாங்குகிறது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டி அகற்றப்படும் மரங்களை வேரோடு தோண்டி எடுத்துச்சென்று பிறிதொரு இடத்தில் நடுவதை ஏதோ வேள்வி போலவும், சாதனையாகவும் ஒருசாரார் கொண்டாடி வருவதைப் பார்க்க முடிகிறது. இருபது முப்பது ஆண்டுகள் வளர்ந்த ஆணிவேரை சில அடி ஆழத்தில் வெட்டிவிட்டு எடுத்துவிட்டு வேறொரு இடத்தில் வைத்தால் மறுபடியும் அதே வலுவில், பருமனில் ஆணி வேர் வளருமா, பாதுகாப்பானதா என்பது ரூபாய் நோட்டை மாற்றிவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடு்மா என்பதைப் போன்ற பதில் இல்லாத கேள்வியாகும்.

கிட்டத்தட்ட இருபது அடி உயரமுடைய மரங்களை 3×3 அடி அளவுள்ள பைகளில் வளர்த்து 500-1000 ரூபாய் விலையில் கடியம் நர்சரிகளில் விற்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்களை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக செலவிடும்போது ஓரிரண்டு இலட்சங்களை தரமான பெரிய மரக்கன்றுகளுக்காக செலவிடுவதில் தவறில்லை. மேலும் சிறிய மரங்களுக்கான வேலி செலவு, ஆடு மாடுகள் தொந்தரவு என எதுவும் கிடையாது என்பதோடு நடப்பட்ட அனைத்து மரங்களும் அடுத்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழு மரங்களாகிவிடும். 100% survival இருக்கவும் சாத்தியம் அதிகம். நிச்சயமாக ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துச்சென்று நடுவதற்கு ஆகும் செலவை விட குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பின்குறிப்பு:
1) TQM என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் என்றாலும் அந்த அளவுக்கான உற்பத்தித்திறனை அங்குள்ள தொழிலாளர்கள் வெளிப்படுத்துவதால் ஆர்கானிக் நர்சரி கசமுசாவெல்லாம் அங்கு கிடையாது.

2) ஆணிவேரை கணிசமாக வெட்டிவிட்டு மரத்தை வேரோடு பிடுங்கிவந்து வேறிடத்தில் நடும் eco green orgasmic கோஷ்டிகளோடு எனக்கு எந்த பஞ்சாயத்தும் கிடையாது; அதனால் எங்கேயும் கோத்துவிட வேண்டாம்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *