வேளாண் பட்டதாரி மாணவிகளுக்கு இடுபொருள் நிறுவனங்களில் வேலை தரப்படுவதில்லையா?

கேள்வி: வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் பட்டப்படிப்பை முடித்த பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Companies எனப்படும் விதை, உரம், பூச்சிக்கொல்லி, பயோகன்ட்ரோல், சொட்டுநீர்ப் பாசனம், டிராக்டர், பண்ணை இயந்திரக்கருவிகள் வர்த்தகத்தில் உள்ள நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இஃது உண்மையா? கொஞ்சம் விளக்கமாக இதுகுறித்து எழுதவும்.

பதில்: ஆமாம், பெண் விண்ணப்பதாரர்களை Core Sector Input Companies பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றன. இதற்குக் காரணம் 70% மாணவிகளும், 30% கம்பெனி நிர்வாகத்தில் உள்ள ஆண் அதிகாரிகளுமே காரணமாவர்.

கம்பெனிகள் இலாப நோக்கில் செயல்படுபவை. அதற்கான மனநிலை, செயல்திறன், தன்னூக்கம், அசாதாரண சூழ்நிலைகளைக் கையாளும் திறன் போன்றவை அவசியம். ‘எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டேன், மற்றபடி எது நடந்தாலும் நான் பொறுப்பாக முடியாது’ என்ற attitude தனியார் நிறுவன வேலைகளுக்கு மட்டுமல்ல, சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இருக்கவே கூடாத ஒன்று. Ownership என்பது மிக முக்கியம்.

மாணவிகள் சந்தை சார்ந்த வேலைவாய்ப்புகளுக்கு வராததற்கான காரணத்தில் அவர்களது மனத்தடையே பெரும்பங்கு வகிக்கிறது. அத்தகைய மனத்தடையை உருவாக்குவதில் உதவிப் பேராசிரியர்களும், சீனியர் மாணவிகளும், ‘எக்ஸாம் பிரிப்பேர் பண்றேன்’ என்று வீட்டில் பணம் வாங்கி செலவு செய்துகொண்டு சும்மா சுற்றும் பட்டதாரி மக்களும் முக்கியமானவர்கள். மூத்த பேராசிரியர்கள் தங்களது ஆராய்ச்சித்திட்டத்தில் வேலை செய்து வாழ்க்கை முழுவதும் தற்காலிக ஒப்பந்தப் பணியாளராக அடிமையாகவே வாழும் ஒரு கும்பலை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இந்த முத்தரப்பு கும்பல், குருடர்கள் யானையைத் தடவிப்பார்த்த கதையாக input industry குறித்த பல மாயக் கதைகளைப் பரப்பிவிட்டவண்ணம் உள்ளனர்.

Open Market Jobs எனப்படும் சந்தை சார்ந்த வேலைகளில் வெற்றிகரமாகப் பணிபுரிய 80% தனிநபரின் குணாதிசியங்களே முக்கியமானது. Technical Knowledge 20% இருந்தாலும் போதுமானது. தெரியாதவற்றை யாரிடமாவது ஃபோன் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம், கூகுள் செய்திடலாம். ஆனால் எதிரில் உட்கார்ந்திருக்கும் நபரை எப்படிக் கையாளப் போகிறோம் என்பதுதான் நாம் செய்யப்போகும் வேலையின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறது.

எடுத்த எடுப்பிலேயே ஏர்கன்டிஷன்டு க்யூபிக்கிளில் உட்கார்ந்து For your information and necessary action என்று மின்னஞ்சலைத் தட்டிவிடும் வேலை மட்டுமே வேண்டும் என்று பல மாணவிகள் இருக்கின்றனர். இதற்கு அவர்களுடைய அப்பா ஏதாவது கம்பெனி ஆரம்பித்துக் கொடுத்தால்தான் உண்டு.

இன்புட் இன்டஸ்ட்ரி வேலை என்றதும் விவசாயிகளின் தோட்டத்துக்குச் சென்று தங்கள் கம்பெனி மருந்து, விதைகளை சீட்டு எழுதித் தருவதுதான் என்று இண்டஸ்ட்ரி வேலைக்கே சென்று பார்த்திராத ஒரு கும்பல் எழுதி வருகிறது. இவர்கள் பெரும்பாலும் நம்மாழ்வார் பக்தர்களாவர். கடைசி வரைக்கும் யாரையாவது குறைசொல்லிக்கொண்டே அரசாங்க வேலை கிடைக்கும்வரை கார்ப்பரேட் சதி, இலுமினாட்டி என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பர். இவர்களிடம் எந்த வேலையையும் சொந்தமாகச் செய்யக்கூடிய தன்னூக்கமோ, உற்சாகமோ இருக்காது; நல்ல பொழுதையெல்லாம் வீணாகப் பேசிக் கழித்திடுவர்.

மார்க்கெட்டிங் வேலை, மார்க்கெட்டில் வேலை என்றதும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்வி வரும். தமிழ்நாடு, கார்நாடகா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஓப்பீட்டளவில் பாதுகாப்பானவை. பெண்களைப் பணியிலமர்த்தும்போது ஓரளவுக்கு பாதுகாப்பான பகுதியில் மட்டுமே பணிபுரிய உயரதிகாரிகள் அனுப்புவார்கள். பெற்றோர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்பது பெரும்பாலும் ஒரு சாக்கு மட்டுமே. தினசரி பல புதிய மனிதர்களை, இடங்களைப் பார்க்கத் துணிந்த மாணவிகளுக்குப் பெற்றோரை சம்மதிக்க வைப்பது அவ்வளவு கடினமான காரியமன்று.

தனியார் நிறுவன சந்தை சார்ந்த வேலை என்றால் எக்கச்சக்கமாக வேலை வாங்குவார்கள் என்ற கருத்தாக்கம் உண்டு. அது பல்கலைக்கழகத்துக்குள் சும்மா இருந்து பழகியவர்களால் சொல்லப்படுவது. உங்களுக்குத் தெரிந்த இன்புட் இண்டஸ்ட்ரி ஆட்கள் எத்தனை பேர் அப்படி சொல்கின்றனர் என்று சிந்திக்க வேண்டும். இதே ஆட்கள் வெளிநாடு சென்றதும் எப்படி வேலை செய்கின்றனர் என்று பார்க்க வேண்டுமே.

சந்தையில் வேலை செய்யும்போது பெண் என்ற முறையில் சீண்டல்கள் வருமா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாக வரும். வங்கி அதிகாரியாக, வேளாண்மைத்துறை அதிகாரியாக பணிபுரிவது என்பதில் பெண்களுக்கு அந்த பணியால் கிடைக்கும் ஒரு பாதுகாப்பு வளையம் இருந்துகொண்டே இருக்கும். ஒரு பெண், வங்கி அதிகாரியாகக் ஒரு கிளையன்ட்டைப் பார்க்க செல்வதும், உரக்கம்பெனி அதிகாரியாக கிளையன்ட்டைப் பார்க்கச்செல்வதும் நிச்சயமாக ஒன்றல்ல.

எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்தான். சிலர் வாட்சப்பில் குட்மார்னிங் அனுப்புவார்கள், இரவு சரக்கடித்துவிட்டு மிஸ்டுகால் கொடுப்பார்கள், தேவையில்லாமல் போன் போட்டு வழிவார்கள், செட்டாகுமா என்று நூல் விட்டுப் பார்ப்பார்கள். இதையெல்லாம் மிகச் சாதாரணமாக சிரித்துக்கொண்டே (மனதிற்குள் “போடா மயிறு, உன்னை மாதிரி எத்தனை பேரைப் பாத்திருப்பேன்” என்ற நினைப்புடன்) இடதுகையால் புறந்தள்ளிவிட்டு முன்னோக்கிச் செல்லத் தெரிந்த மாணவிகளுக்கு Core sector company-களில் வானமே எல்லை.

அண்மையில் பிரபல பன்னாட்டு நிறுவன கருத்தரங்கில் பார்த்தபோது, கலந்துகொண்ட 170 பேர்களில் இரண்டு பேர் மட்டுமே அக்ரி படித்த பெண்கள்; அவர்களும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். இன்று அத்தனை நிறுவனங்களிலும் ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே பெண்கள் பணியில் உள்ளனர். Gender equality குறித்து அதிகம் பேசுகிறார்கள், ஆனால் மாணவிகள் வேலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.

இன்புட் கம்பெனிகளில் எல்லா வேலைகளையும் நாமேதான் செய்யவேண்டும் என்றதுமே பல பெண் விண்ணப்பதாரர்கள் பயந்து விடுகின்றனர். மேலை நாடுகளில் வாழ்க்கை முறையே அதுதான் என்றாலும் நமக்கு இங்கு கீழே குற்றேவல் புரிய ஆட்கள் இல்லாவிட்டால் கை நடுங்குகிறது.

ஆமாம், நீங்களேதான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும். அந்த வாரத்திற்கான பயணத் திட்டம், அன்றைக்கு எங்கெங்கு செல்ல இருக்கிறோம், யாரையெல்லாம் சந்திக்க இருக்கிறோம், அதன் நோக்கம் என்ன, சம்பந்தப்பட்ட நபர்கள் நாம் செல்லும்போது இருப்பார்களா என எல்லாவற்றையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமே கார் அல்லது பைக்கை தினசரி 100 – 200 கிமீ ஓட்ட வேண்டும், பஞ்சரானால் கூட நாமேதான் கழட்டி ஸ்டெப்னி மாட்ட வேண்டும். ஊர் ஊராகச் சென்று சாப்பிடுவது, தேநீர் பருகுவது, தபால் அனுப்புவது, மின்னஞ்சலுக்குப் பதில் சொல்வது, வாடிக்கையாளர் புகார்களைக் கையாளுவது, இடையில் ஆடியோ கான்பரன்ஸ் வீடியோ கான்பரன்ஸ் என அனைத்தையும் on the move-இல் நீங்களேதான் செய்ய வேண்டும். கார் சேற்றில் சிக்கலாம், விபத்துக்குள்ளாகலாம், டிராபிக்கில் சிக்கி நமது மொத்தத் திட்டமும் பாழாகலாம் – எல்லாவற்றையும் நீங்களேதான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக வேலைநேரத்தில் 80% தனியாகவே வேலை செய்துகொண்டிருக்க வேண்டியிருக்கும்.

Travelling எனக்கு ரொம்ப புடிக்கும் என்று கதை விடுவது வேறு. அழகாக வால்வோ பேருந்து, இரயில், விமான டிக்கெட் அல்லது டேக்சி எடுத்துக்கொண்டு சென்று நல்ல ரிசார்ட்டில் வெல்கம் டிரின்ங் குடித்துவிட்டு செல்பி எடுத்து ஹேஷ்டேக் போட்டு travelling is my hobby என்று சொல்வதும், தினசரி ஊர் ஊராகப் பணி நிமித்தமாக பயணிப்பதும் முற்றிலும் வேறு.

வரச்சொல்லிவிட்டு போன் எடுக்க மாட்டார்கள், நாமும் முகவரி, வழி, வண்டித்தடம் என எதையும் கேட்காமல் 150 கிலோமீட்டர் போன பிறகு கூப்பிட்டால் switched off என்று வரும். அவர்களது இடத்தைத் தேடுகையில் டீசல் நிரப்பாமல் நீண்டதூரம் போயிருப்போம, பங்க்கைக் கண்டுபிடித்து நுழைந்ததும் டீசல் தீர்ந்துவிட்டது என்ற அதிர்ச்சி கிடைக்கும். மழை பெய்ய ஆரம்பித்திருக்கும். ஏடிஎம்-இல் பணம் எடுக்க காலையில் கிளம்பும்போது மறந்திருப்பிருப்பீர்கள். உங்கள் கணவரோ, பாய்ஃபிரண்டோ அந்த நேரத்தில் கூப்பிட்டுக் கொஞ்சவோ அல்லது கத்தவோ செய்யலாம். இவை எல்லாவற்றையும் நீங்களே சமாளிக்க வேண்டும்.

இருக்கறது ஒரு வாழ்க்கை. அதில் இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டுமா என்று தோன்றலாம். உண்மையில் இது எதுவுமே கடினமானதல்ல. உள்ளே நுழைந்து பழகிவிட்டால் தினசரி புதுப்புது அனுபவங்கள் கிடைத்தவண்ணம் இருக்கும். வேலையில், வாழ்க்கையில் ஒருபோதும் சலிப்புத் தட்டாது. சும்மா போரடிக்கிறது என்ற எண்ணமே வராது. நேற்றுப் பார்த்த அதே அலுவலகம், அதே ஆட்கள், அதே வேலை என்ற சூழ்நிலை நீங்களே எதிர்பார்த்தாலும் வராது. ஐந்து, பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் இந்த சமுதாயம் குறித்த உங்களது புரிதல் முற்றிலும் மாறியிருக்கும்.

கல்யாணம், ஹனிமூன், குழந்தைகள், கணவன், மாமியார், அலுவலகப் பணிச்சுமை, பணச்சிக்கல்கள், உடல் உபாதைகள் என்பதெல்லாம் எந்த வேலையாக இருந்தாலும் கூட வந்துகொண்டேதான் இருக்கும். வீட்டுக்கு வீடு வாசற்படி. ஒருவேளை அந்த வேலைக்குப் போயிருந்தால் ஜாலியாக இருந்திருக்கலாமோ என்பது மிகப்பெரிய மாயை. அடுத்தவர்களது கணவன் அழகாகத் தெரிவது போலத்தான் இதுவும்.

வங்கிப் பணிகள், அரசு வேளாண்மைத்துறை பணி, குரூப் 1, சிவில் சர்வீசஸ், உதவிப் பேராசிரியர் பணி என வழக்கமான வட்டத்தைத் தாண்டி வெளியேறி புதிய சூழலுக்குள் நுழைய வேண்டும், ஒப்பந்த ஆராய்ச்சியாளராகப் பல்கலைக்கழகத்துக்குள் இளமைக்காலத்தை வீணடிக்கக்கூடாது, விரைவில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், சீனியாரிட்டிக்காக நாட்களை ஓட்டக்கூடாது, எந்த சூழ்நிலை வந்தாலும ஒரு கை பார்க்கவேண்டும், I’m not someone என்ற மனநிலை கொண்ட மாணவிகளுக்கு Input industries எப்போதும் திறந்தே இருக்கிறது.

அரசாங்க வேலைக்குச் செல்ல முடியாதவர்கள், கிடைக்காதவர்கள் மட்டுமே அக்ரி இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்வதாக நீங்கள் நம்பினால் அஃது உங்களது அறியாமை மட்டுமே. ஆண்டுக்கு ஐம்பது இலட்சம், ஒரு கோடி சம்பளம் வாங்குபவர்கள் அங்கே ஏராளம். நாற்பது வயதில் ஆண்டுக்கு 75 இலட்சம் சம்பளம் வாங்கும் பல பெண்கள் அக்ரி இண்டஸ்ட்ரியில் இருக்கின்றனர். சொந்த தொழிலில் இருப்பவர்கள் பலர் ஒரு காலத்தில் ஏதாவது ஒரு கம்பெனியில் பணிபுரிந்து வெளியேறியிருப்பார்கள். மார்க்கெட் அனுபவமே அவர்களது முதலீட்டுக்கான பாதுகாப்பு.

வெறும் Designation-இல் ஒன்றுமே இல்லை நிறைய சம்பாதிக்க வேண்டும், பல இடங்களை மக்களைப் பார்க்க வேண்டும், ஒருகட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், 35 வயதிற்குள் பிஎம்டபிள்யூ வாங்கி பார்த்திடனும், ஓய்வுபெறும்போது நூறு சர்வதேச ஆராய்ச்சி சஞ்சிகைகளில் உள்ள ஆய்வுக்கட்டுரைகளை மகன்/மகளுக்கு விட்டுச்செல்வதை விட நூறு கோடி மதிப்புள்ள சொத்தையோ/கம்பெனியையோ விட்டுச்செல்ல வேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவிகள் வேளாண் தொழில்துறையில் நுழைவது மிகவும் நல்லது. கேரியர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. த்ரில் இல்லாத ஒரு சோகையான, சோம்பேறி வாழ்க்கை வாழவா பிறந்திருக்கிறோம்?

அக்ரோ இண்டஸ்ட்ரி சார்ந்த வேலைவாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவுசெய்யும் மாணவிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விசயங்கள்:

1) படிப்பு முடிந்தததும் முற்றிலுமாக கல்லூரி/பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும். அடிக்கடி அங்கு செல்வதை, விடுதி அறைகளில் தங்குவதை, குறிப்பாக பிஎச்டி படிக்கும் தோழிகளின் சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும். கல்யாணம் ஆகும்வரை கற்போம், கல்யாணம் ஆனபிறகு கற்பிப்போம் என்ற கொள்கையுடைய தோழிகளுடன் கண்டிப்பாக சேரவே கூடாது.

2) பேராசிரியர்கள் பாடம் சொல்லித்தர மட்டுமே தகுதியானவர்கள். வாழ்க்கைப் பாடத்தை வெளியில்தான் கற்க முடியும். எனவே படிப்பு முடிந்தபிறகு – டெக்னிகல் விசயங்களைத் தவிர – அடிக்கடி பேராசிரியர்களிடம் ஆலோசனை கேட்பதை முற்றாக நிறுத்திவிட வேண்டும். (ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி என்று அக்ரி பிசினஸ் பேராசிரியரிடம் சென்று கேட்பதற்குப் பதிலாக சும்மாவே இருந்துவிடலாம். தெரிந்தால் அவர் பண்ணியிருக்க மாட்டாரா?)

3) ஓர் அலைபேசி எண்ணைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். ஏழு நம்பர் வைத்திருந்தாலும் நீங்கள்தான் எடுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சரி.

4) தகுதியான நபர்களை – ஆண், பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் – முடிந்தவரை நேரில் சென்று சந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் சொல்லும் சில தகவல்கள் உங்கள் எதிர்காலத்தையே மாற்றியமைக்கலாம். நமக்குத் தேவையானதை நாம்தானே தேட வேண்டும். வீட்டில் வந்து யார் சொல்லிவிட்டுப் போவார்கள்?

5) ஒவ்வொரு ஆண்டும் புதிதாக ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும். படிப்பு மட்டுமே அல்ல – புகைப்படக்கலை, போன்சாய், மலையேற்றம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

6) வாசிப்பு மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் தவிர பொதுவான புத்தகங்களை மாதம் ஒன்றாவது படித்திட வேண்டும்.

7) பைக், கார் ஓட்டுவது இன்று அத்தியாவசியம். பாதுகாப்பாக வாகனம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

8) புதிதாக தொழில் ஆரம்பித்தவர்கள், வெற்றிகரமாக நடத்துபவர்கள் மட்டுமல்லாது ஏதோ காரணத்தால் தொழிலை மூடியவர்களையும் தேடித்தேடி சந்தித்து உரையாட வேண்டும். அந்த உரையாடல்களால் கிடைக்கும் ஞானத்தை எந்த பவர்பாய்ன்ட்டாலும் உங்களுக்கு வழங்கிட முடியாது.

9) தேவையில்லாத வாட்சப் குழுக்கள்,கெட்-டுகெதர், மீட்-அப், ஹேங்ஓவர்-களில் இருந்து வெளியேறிட வேண்டும். சில வருடங்கள் ஏற்கனவே உங்களுடன் பழகிய நண்பர்களுடன் குறைவான தொடர்பில் இருப்பதில் தவறில்லை. அவர்களுடன் touch-இல் இல்லை என்பதால் நீங்கள் யாருடனும் பழகாமல் aloof ஆகச் சுற்றுகிறீர்கள் என்றாகிவிடாது.

10) தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அந்த லைனில் உள்ளவர்களை அணுகி ஆலோசனை பெற்று உடனே ஆரம்பித்திட வேண்டும். ஒருவேளை அது தோல்வியடைந்தாலும் கவலைப்படக்கூடாது. Project பெயில் ஆகிவிட்டது என்று தூக்கிப்போட்டுவிட்டு அடுத்ததற்கு நகர வேண்டும். தேங்கக்கூடாது, We have to move on.

11) வேலை தேடுவதாக அல்லது மாறுவதாக இருந்தால் அந்தந்த துறைகளில் இருப்பவர்களைத் தொடர்புகொண்டு அதற்கான முறையான வழிமுறைகளில் செய்ய வேண்டும். வாட்சப்பில் சி.வி. அனுப்புவது போன்றவற்றைத் தவிரக்க வேண்டும்.

12) இன்புட் இண்டஸ்ட்ரியில் வேலைக்கு எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று உங்கள் தோழிகளிடமும், சீனியர்களிடமும், உதவிப் பேராசிரியர்களிடமும் புலம்பும் நேரத்தில் நாலு கம்பெனிக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே அதில் இருப்பவர்களின் சிபாரிசைக் கோரலாம். உங்கள் ஹாஸ்டலுக்கு, கேன்டீனுக்கு வந்து உங்களைப் பெயர்சொல்லி அழைத்து யாராவது வேலை கொடுப்பார்களா?

13) மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உயர்ந்த பதவிக்கோ, மிகப்பெரிய கம்பெனிக்கோ போக முடியவில்லையே என்ற வருத்தமெல்லாம் தேவையே இல்லை. நாளை என்ன நமக்காக இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாது. அதனால் அடுத்த ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்களைத் தீட்டி அதை நோக்கி பயணிக்க வேண்டும்.

14) Relationship இல்லாமல் யாரும் இல்லை. காதல் தோல்வி, கல்யாண ஏக்கம் போன்றவற்றை மாலை ஆறு மணிக்குப் பிறகு மட்டுமே வைத்துக்கொள்ள வேண்டும். பகல் நேரங்களில் சுறுசுறுப்பாக உருப்படும் வழியைப் பார்க்க வேண்டும்.

15) ஒவ்வொரு சூழ்நிலையையும் handle செய்ய அசாத்தியமான துணிச்சல் வேண்டும். “இந்த ஜாப் உனக்கு செட் ஆகாதும்மா” என்று சொல்லப்பட்டபோது “வேலை என்னன்னு மட்டும் சொல்லுங்க, என்னால செய்ய முடியலன்னா நானே போயிடறேன்” என்று கேட்டு, அதை சவாலாக எடுத்துக்கொண்டு வேலைக்கு வந்த பல பெண்கள் இன்றளவும் மார்க்கெட்டில் சிறப்பாக பணிபுரிகின்றனர். பயந்தாங்கொள்ளிகளுக்குத்தான் சொல்வதற்கு ஆயிரம் காரணம் இருக்கும். துணிந்தவர்களுக்கு அதை செய்துகாட்ட வேண்டும் என்ற ஒரே காரணம் மட்டுமே.

ஒரு வேலை, சம்பளம், கல்யாணம், குழந்தைகள், கொஞ்சூண்டு சேமிப்பு, ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு என்று வாழ்ந்துவிட்டு செத்துப் போய்விடுவோமா? ரிட்டயர் ஆனபிறகு மெல்ல கதவைப் பிடித்து, தலையணையை சாய்த்து வைத்து உட்கார்ந்து, டிரைவரை ஓட்டச்சொல்லிவிட்டு பின்சீட்டில் சாமி பாட்டு கேட்டுக்கொண்டு பயணிப்பதற்கு பென்ஸ் இருந்தால் என்ன ஃபியட் பத்மினி இருந்தால் என்ன?

படித்து முடித்து இருபத்தைந்து வயதில் கேரியரை ஆரம்பித்து, நாற்பத்தைந்து வயதில் எவரெஸ்ட் பேஸ் கேம்புக்குச் சென்று சும்மா காபி குடித்துவிட்டு திரும்பி வருமளவுக்குப் பொருளாதார சுதந்திரமும், அன்றாட வேலைகளில் இருந்து ஓய்வும் பெற்றிடுமளவுக்கு சுறுசுறுப்பாக இயங்கிட வேண்டும். எதற்காகவும் தேங்கிடவே கூடாது. Now, get up and move. Keep going…

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *