பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். 

தமிழகப் பாடநூல் வெளியீடுகள் வரலாற்றில் முதன்முறையாக பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.

இலக்கிய நூலாக இருந்தால் காத்திரமான விமர்சனம் என்று குறிப்பிடலாம். பாடநூல் என்பதால் ஆத்திரமான விமர்சனம் அல்லது சீராய்வு என்று வைத்துக்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): +1 மாணவர்களின் வேளாண்மைப் பாடநூலை சும்மா புரட்டிப்பார்க்க ஆரம்பித்ததில் பல பிழைகள் கண்ணில் பட, அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டால் மாணாக்கர்களுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதியிருக்கிறேன். கல்லூரிப்படிப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக வேளாண் தொழிற்துறையில் பணிபுரிந்திருந்தாலும் Academia, teaching என்பதெல்லாம் எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் +1 வகுப்புக்குப் பாடத்திட்டத்தின் சுமை குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் Concept, Fact, அறிவியல் விதிமுறைகளில் பிழை இருக்கும்போது அது அனைவராலும் பிழையாகவே பார்க்கப்படும். இதைத் தொகுப்பதற்கு எனக்குப் பின்னணியில் எந்த இயக்கமும், நபர்களும் இல்லை. இந்தக் கட்டுரையில் பிழையென சுட்டிக்காட்டப்படும் எதுவும் சரியென நிறுவும்பட்சத்தில் அவை நீட் உட்பட இதர நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் சரியாக இருக்குமா என்பதைத் துறைசார் நூல்களிலும், இணையத்திலும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் அறிவியல் – கருத்தியல் (Theory)

பக்கம் 30: /சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உருவாகி ஓசோன் படலத்தை அரித்து அதன் அடர்த்தியைக் குறைக்கிறது/

CFC என்பது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் CFC-யால் ஓசோன் படலம் ஓட்டையாகிறது என்பது இன்றைய பிரச்சினை அல்ல.சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உண்டாகி ஓசோன் படலத்தை அரிக்கிறது என்பதெல்லாம் குழப்பமான வாசகம்.

பக்கம் 34: /மண்ணியலின் தந்தை ஃபிரடெரிக் ஆல்பர்ட் ஃபேலோ (1794-1877)/

Friedrich Albert Fallou அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரை நவீன மண்ணியலின் தந்தை என்று விக்கிபீடியா மட்டுமே சொல்கிறது. TNAU-வின் மண்ணியல் பாடங்கள் உட்பட இதர நூல்கள் உருசிய அறிஞர் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்பவரையே மண்ணியலின் தந்தை என்று குறிப்பிடுகின்றன.

பக்கம் 57: /கொழுப்புச்சத்தானது கொழுப்பில் கரையாதது மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது என இரு பிருவுகளைக் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K வின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. இக்கொழுப்புச்சத்தால் உருவாகும் ஒமேகா 3 உடல் நலத்திற்கு ஏற்றது/

இந்த வாசகங்களில் இருந்து பெறப்படும் தகவல் என்ன? முதல் வரியும் கடைசி வரியும் என்ன பொருளைத் தருகிறது?

பக்கம் 109: /1995 ஆம் வருடத்தில் முளைத்த தாமரையின் விதையே இன்றுவரை நீண்ட உறக்கநிலை கொண்ட விதையாக ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உறக்க நிலை 1300 வருடங்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்/

Seed Dormancy என்பதற்கும் Seed Viability என்பதற்கும் உள்ள தொடர்பையும் வேற்றுமையையும் கவனமாகப் பார்க்க வேண்டும். 1300 வருடங்கள் விதை உறக்க நிலையில் இருந்தது என்பதைவிட விதைக்கு Viability இருந்தது என்பதே சரியான interpretation. விதை உறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி தொடர்கிறது – 1000 வருடங்கள் தாண்டியும் – என்றால் அது விதை உறக்கத்தினால் மட்டும்தான் நிகழ்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. சைபீரியாவில் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய விதை ஒன்றையும், இஸ்ரேலில் 2000 வருடங்களுக்கு முந்தைய விதை ஒன்றையும் ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கண்டுபிடித்ததோடு முளைக்கவும் வைத்திருக்கிறார்கள். இது இந்த அத்தியாயத்தை எழுதிய ஆசிரியருக்கே வெளிச்சம்!

பக்கம் 116: TNAU தானியங்கி விதை மற்றும் நாற்று வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது என்பது குறித்த தகவலைக் கட்டம் கட்டி +1 மாணாக்கர்களுக்கு போதிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நூறு கோடி ரூபாய்க்கு நெருக்கமாக காய்கறி விதை விற்பனை நடக்கும் தமிழகத்தில் ஒரு கோடிக்குக் கூட விதைகளை விற்பனை செய்ய முடியாத தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் செய்யும் தேவையில்லாத PR stunt-களில் இதுவும் ஒன்று. இந்த இயந்திரத்தை என்னமோ இவர்களே கண்டுபிடித்திருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கோடிக்கணக்காண ரூபாய்க்கு விதைகளை விற்பனை செய்யும் கம்பெனிகள் கூட செய்யாத வேலைகளை எப்படி வெட்கமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறார்களோ?!

பக்கம் 142: ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த அட்டவணையில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை மெக்னீசியத்திலும், மெக்னீசியத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை இரும்புச்சத்திலும் கொடுத்துள்ளனர். Interveinal chlorosis என்பது இரும்புச்சத்து பற்றாக்குறையின் முக்கிய அடையாளமாகும். போட்டித் தேர்வுகளிலும் இது தவறாமல் கேட்கப்படும். Indicator plants குறித்து ஓரிரு வரிகள் கூட கொடுக்கப்படவில்லை.

பக்கம் 168: விதைக்கும் முன் தெளித்தல் களைக்கொல்லியின் உதாரணமாக பாராகுவாட் டை குளோரைடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதிய, சரிபார்த்து ஒப்புதல் அளித்த ஆசிரியர் குழுவை எந்த கெட்ட வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். பாராகுவாட் என்பது முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லி. டிரைஃபுளூரலின் தேர்திறன் அற்ற களைக்கொல்லிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் தவறு. டிரைஃபுளூரலின் என்பது தேர்த்திறன் உடைய களைக்கொல்லி. மேலும் சந்தையில் தேடினாலும் கிடைக்காத களைக்கொல்லியைப் பாடத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பக்கம் 169: கரும்புக்கு மெட்ரிபூசின் எனும் களைக்கொல்லி முளைப்பதற்கு முன் தெளிக்கும் களைக்கொல்லியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிபியூசின் என்பது முளைத்தபின் தெளிக்கும் வகை. இந்த மாதிரியான அடைப்படைத் தவறுகளெல்லாம் மன்னிக்கவே முடியாதவை.

பக்கம் 183: குளோர்பைரிபாஸ் எல்லாம் சந்தையில் தடை செய்ய காத்திருக்கும் அதரபழசான இரசாயனம். இதையெல்லாம் உதாரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

பக்கம் 190: /1943 ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது நெல் குலை நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது இந்திய வரலாற்றில் வங்காளப் பஞ்சம் என/

இது கட்டம் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்.

1943-இல் வங்காளப் பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது Rice Brown spot or Fungal Blight எனப்படும் பழுப்புப் புள்ளி நோய் . இது Helminthosporium oryzae எனும் பூஞ்சாணத்தால் வருவது. பஞ்சத்துக்குப் பல்வேறு காரணங்கள் இந்த நோயைத் தவிர இருக்கின்றன; பல நூல்கள் அந்தப் பஞ்சம் குறித்து வந்திருக்கின்றன. நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வங்காளப் பஞ்சம் குறித்த இந்த கேள்வி தவறாமல் இடம்பெறும். இதுகூடத் தெரியாமல் அந்த ஆசிரியர் குழு என்ன செய்தது என்று ஆச்சரியமாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறது.

நெல் குலை நோய் என்பது Pyricularia grisea எனும் பூஞ்சாணத்தால் வரும் Paddy Blast disease.

பக்கம் 208: /சேமிப்பிற்கு பயன்படும் சாக்குப் பைகள் புதியதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப் பைகளை மாலத்தியான் 50 சதம் ஈ.சி. அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்.சி. 0.1 சதம் கரைசலில் நனைத்து நன்கு உலர்த்திய பிறகு உபயோகிக்க வேண்டும்/

மாலத்தியான், டைக்குளோர்வாஸ் எல்லாம் விரைவில் தடை செய்யப்பட இருப்பவை. தானிய சேமிப்புக் கிடங்குகளில் 1980-களுக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும்.

பக்கம் 235: பாஸ்ச்சுரைசேசன் குறித்த தகவலில் குறைந்த வெப்பம் கூடுதல் நேரம், அதிக வெப்பம் குறைந்த நேரம் என்பது எத்தனை டிகிரி வெப்பம், எவ்வளவு நிமிடங்கள் என்பதைக் குறிப்பிடாமல் மொட்டையாக இருக்கிறது.

வேளாண் அறிவியல் – செய்முறை (Practical)

பக்கம் 11: தானியப்பயிர்கள்(Cereals) எல்லாம் கிராமினே என்ற குடும்பத்தில் வருபவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தாவர வகைப்பாட்டியலில் கிராமினே என்பது போயேசியே (Poaceae) என்றே வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தைகளே இருக்கும் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

பக்கம் 12: எண்ணெய் வித்துக்களில் எள், டில்லியேசியே குடும்பம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனால் இன்று எள், பெடாலியேசியே (Pedaliaceae) என்ற குடும்பத்தில்தான் வருகிறது. (டில்லியேசியே என்பதும் அச்சுப்பிழை. அதை டிலியேசியே என்றே குறிப்பிட வேண்டும்).

பக்கம் 20: சோற்றுக் கற்றாழைச் செடியின் குடும்பம் லில்லியேசியே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று Aloe vera என்பது ஆஸ்ஃபோடேலேசியே (Asphodelaceae) என்ற குடும்பத்தில் வருகிறது.

பக்கம் 21: புதினா மற்றும் மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்) போன்றவை லேபியேட்டே குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அனால் இன்று லேபியேட்டே குடும்பம் என்பது லேமியேசியே (Lamiaceae) என்றே வழங்கப்படுகிறது.

இதுவும், அதுவும் ஒன்றுதான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும் தாவர வகைப்பாட்டியலில் இன்றைய பெயரிடுமுறை (Nomenclature) என்ன சொல்கிறதோ அதையே பயன்படுத்த வேண்டும். பழைய பெயர்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றாலும் சரியென்றாகிவிடாது.

பக்கம் 44: நுண்ணியிரிகளினால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல் என்ற அத்தியாயத்தில் நோய்க்காரணியின் (Causal Organism) பெயர், வைரஸ் நோயாக இருப்பின் கடத்தியின் (Vector) பெயர், கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை இல்லாமல் மொட்டையான தகவல்களாக வெறும் படங்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

பக்கம் 50, 51: நன்மை செய்யும் உயிரினங்கள் என்ற அத்தியாயத்தில் இரை விழுங்கிகள் (Predators) என்ற அட்டவணையில் வழங்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் அறிவியற்பெயர் எழுதும் முறை முற்றிலும் தவறாக இருக்கிறது.

அறிவியற்பெயர் எனில் ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினத்தின் முதல் எழுத்து Capital letter-உம், ஏனைய எழுத்துகள் Small letters-உம் சாய்வெழுத்தாக (italic) எழுதியிருக்க வேண்டும். கையால் எழுதும்போது பேரினம், சிற்றினம் இரண்டையும் தனித்தனியாக அடிக்கோடிட வேண்டும். இதையெல்லாம் பத்தாம் வகுப்பில் லின்னேயஸ் வகைப்பாட்டியல் பயில ஆரம்பிக்கும்போதே சொல்லித்தரப்படும். புத்தக ஆசிரியர் குழுவின் ஞானம், Scientific name எப்படி எழுத வேண்டும் என்று வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லித்தர வேண்டிய நிலைமையில் இருக்கிறது எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கம் 51: ஐசோட்டிம்மா முட்டை ஒட்டுண்ணி நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க்கிறது. ஐசோடிமியா ஜாவென்சிஸ் (Isotimia javensis) கரும்பு குருத்துப்புழுவுக்கு நல்ல கட்டுபாட்டைக் கொடுத்தாலும் நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பூச்சியியல் நிபுணர்களின் கருத்து. நிலைமை இவ்வாறிருக்க இதையெல்லாம் +1 மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

பக்கம் 52: டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி புழு, கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி கரும்பு உச்சிக் குருத்துப்பூச்சித் (Top Shoot Borer) தாக்குதலைக் கட்டுப்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. தண்டு துளைப்பான் என்பதும் இடைக்கணுப்புழு (internode borer) எனபதும் நடைமுறையில் ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. PhD மாணாக்கர்களுக்கு தரப்படும் அளவுக்கான விஷயங்களை +1 மாணாக்கர்களுக்குத் திணிக்கக்கூடாது.

பக்கம் 60: இயற்கைப் பயிர் பாதுகாப்பு முறைகள் பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், தசகவ்யா என நிருபிக்கப்படாத முறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக உயிரியல் கட்டுப்பாடு முறைகளை நிறையவே சேர்த்திருக்கலாம்.

பக்கம் 66: பயிர்ப் பாதுகாப்பு இரஸாயனங்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்து சொல்லும் அத்தியாயத்தில் இரசாயனங்களின் நச்சுத்தன்மை குறித்த முக்கோணங்கள், என்னென்ன வகையினங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை ஆரம்பிக்காமல் நேரடியாக application-க்கு நுழைந்திருக்கிறார்கள்.

கருத்தியல் நூலில் வந்திருக்கும் புகைப்படங்கள் செய்முறைப் புத்தகத்திலும் பெரும்பாலும் இருக்கிறது. கிட்டத்தட்ட 40% புத்தகம் படங்களாலேயே – அதுவும் தேவையில்லாத படங்களால் – நிரப்பப்பட்டிருக்கிறது. வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கம் என்ற அத்தியாயம் சும்மானாச்சுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வி என்ற Concept-இன் நோக்கம் என்ன என்பதே புரிந்துகொள்ளப்படாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்காங்கே வாங்கி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

பூச்சியியல் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவரைப் பாடநூல் வல்லுனராக நியமித்திருக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே பூச்சியியல் குறித்த அத்தியாயத்தில்தான் அதிக பிழைகளும், முரண்பாடுகளுடைய விஷயங்களும் இருக்கின்றன.

பாடநூல் மேலாய்வாளராக பயோடெக்னாலஜி துறையின் இணைப்பேராசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களில் பயோடெக்னாலஜி என்ற அத்தியாயமே இல்லை. ஆய்வகங்களைவிட்டு வெளியே செல்லுவதற்கு அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஒருவரிடம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், உரம், நீர், பூச்சிக்கொல்லி, விதை, உழவியல் முறைகள், அறுவடைத் தொழில்நுட்பங்கள், மண்வளம் என அனைத்தையும் தொகுக்கும் பணியை வழங்கினால் என்ன நடக்கும்?

மாப்பிள்ளை செத்தால் என்ன மணப்பெண் செத்தால் என்ன, நமக்கு வேண்டியது மாலைப்பணம். நானும் பாடநூல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன் என அனைவரும் அவரவர் C.V-யில் எழுதிக்கொள்வார்கள்.

அதுதான் நடந்திருக்கிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *

3 thoughts on “பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். ”

  1. இது போன்று ஒவ்வொரு பாட நூலுக்கும் விமர்சனம் செய்யப்பட்டால் பாடபுத்தகத்தை தயாரிக்கும் ஆசிரியர் குழுவினரிடம் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்று நம்புகிறேன். இது போன்ற விமர்சனம் கல்விதிட்டத்தை உயர்த்திடும்.

  2. பூசத்தெரியாதவன் கையில் சுண்ணாம்பு கொடுத்ததை பர்போலா,
    அவனுக்குத் தெரியாதவன் கையில் ஆயிரம் அறுவாலாம்
    பாடநூல் தயாரிப்பின் லட்சனம்

Comments are closed.