வெல்ஸ்பன் – மூத்த ஊழியர்களின் தவறுகளைச் சுமக்கப்போகும் பச்சாக்கள்

தரக்கட்டுப்பாடு என்பது ஒரு நிறுவனத்தின் நம்பகத்தன்மையை சந்தையில் உறுதிப்படுத்தக்கூடிய ஒன்று. அதில் ஓட்டைகள் ஏற்படுவது என்பது நிர்வாகத்தின் உயரதிகாரிகளுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பேயில்லை. குஜராத்தின் Welspun நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக, அமெரிக்காவின் Target Corp-க்கு அனுப்பிய 7,50,000 மெத்தை விரிப்புகள், தலையணை உறைகளை, உயர்தர எகிப்து பருத்தி என்று இந்திய பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதை அனுப்பி ஏமாற்றி வந்திருக்கிறது. தணிக்கை மூலமாகவோ அல்லது யாரோ சிலர் போட்டுக்கொடுத்த வகையிலோ விஷயம் தெரிந்ததும் மொத்தமாக வணிக உறவைத் துண்டித்திருக்கிறது அமெரிக்க நிறுவனம். Target Corp-இடம் இருந்து துணி வாங்கிய வால்மார்ட் மற்றும் பல நிறுவனங்கள் டார்கெட்டை டார்கெட் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. பங்குசந்தையில் 42% மதிப்பை இழந்ததோடு முப்பது ஆண்டுகால மரியாதையையும் இழந்திருக்கிறது Welspun. நம்பிக்கை, நாணயம், தரம், என்பதெல்லாம் தனி நபர்கள் மட்டுமல்லாது பிராண்டை உண்டாக்கும் நிறுவனங்களும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்பதற்கு மேலாண்மை மாணவர்களுக்கு மறுபடியும் ஒரு பாடம் கிடைத்திருக்கிறது. யாரோ ஒரு டஜன் நபர்கள் செய்த தவறுக்காக சில ஆயிரம் பேர் வேலையிழக்க போகிறார்கள்.

தனியார் நிறுவங்களில் Performance என்பது நாம் என்னதான் முக்கி மூழ்கி முத்தெடுத்தாலும் ஒருசிலர் செய்யும் தவறால் பலரது மொத்த திறமையும், வாழ்வும் வீணடிக்கப்படுவதும், தொழிற்சங்கங்கள் மூலம் குறைந்தபட்ச பணிப்பாதுகாப்பும் இல்லாத மொன்னையான சூழலில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் இருப்பதை ஒப்புக்கொள்ளாமல் பணியிட பாதுகாப்பு குறித்த குறைந்தபட்ச புரிதல் இல்லாமல் இருப்பதும் நம் சாபக்கேடு. அண்மையில் Ola நிறுவனம், ஒருங்கிணைப்பு என்ற பெயரில் Taxi for Sure நிறுவனத்தை 1300 கோடிக்கு வாங்கி பின்னர் மூடியபோது 750 பேர் வேலையிழந்ததையும், SnapDeal நிறுவனம் Exclusively.in-ஐ மூடியபோது ஏற்பட்ட அதிர்வுகளையும் செய்தியாக மட்டுமே பார்க்கிறோம். சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்யவில்லையா என்ற கேள்வி எழாமல் இல்லை.

எகிப்திய பருத்தி என்பது Gossypium barbadense, எனப்படும் extra-long staple cotton என்ற நீண்ட இழை பருத்தியாகும். இந்திய பருத்தி என்பது Gossypium hirsutum எனப்படும் மத்திய தர அல்லது long-staple பருத்தி என்பதாகும். சுவின் போன்ற நீண்ட இழை பருத்தி ரகங்கள் தொடர்ந்து இந்திய பருத்தியுடன் இணைத்து கலப்பினங்களை உண்டாக்கி பஞ்சின் நீளம் கூட்டப்பட்டது. மான்சான்டோவின் பி.டி. தொழில்நுட்பம் காய்ப்புழு தாக்குதலைத் தடுத்ததால் பஞ்சு நாரின் நீளம் அடிபடாமல் கிடைத்ததோடு விதைகளையும், பஞ்சையும் பிரித்தேடுக்கும் ஜின்னிங்-இன் தரமும் உயர்ந்தது. எகிப்திய பருத்தி ரகங்களை அடிப்படையாக வைத்து உண்டாக்கப்பட்ட இந்திய பருத்தி ரகங்கள், மான்சான்டோவின் காய்ப்புழு தடுப்பு தொழில்நுட்பமும் இணைந்து டெக்ஸ்டைலில் ஒரு மறுமலர்ச்சியை உண்டாக்கியது. அந்த தரத்தின் அடிப்படையில் கிடைத்த குருட்டு தைரியத்தில் இறங்கி Welspun நிறுவனம் மாட்டிக்கொண்டதாக தெரிகிறது. எந்த ஒரு ஜின்னிங், ஸ்பின்னிங் ஆலைக்குள்ளும் சென்று அறியாமல், காலங்காலமாக பருத்தி விவசாயம் செய்து வருபவர்களையும் கேட்டறியாமல் மரபணு மாற்றப்பட்ட பருத்தியால்தான் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று பல போலி ஆர்வலர்கள், நிபுணர்கள் கூறி வருகின்றனர். அனால் களநிலவரம் சரியாகத்தான் இருக்கிறது. தனியார் நிறுவனங்கள் வணிகம் செய்வதில் அரசு ஒருபோதும் தலையிடாது, லைசென்ஸ் ராஜ் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று சொல்லி ஆட்சிக்குவந்த மோடி அரசு பருத்தி விதை விலையை நிர்ணயம் செய்கிறேன் பேர்வழி என்று மான்சாண்டோவும், பல தனியார் நிறுவங்களும் செய்துகொண்ட ராயல்டி ஒப்பந்தத்தில் உள்ளேபுகுந்து கட்டைப்பஞ்சாயத்து செய்தது வேறு கதை.

மேலும் படிக்க:
https://www.wsj.com/articles/more-u-s-retailers-probe-indian-supplier-of-egyptian-cotton-1472070815
http://www.cicr.org.in/pdf/ELS/general1.pdf
http://farmhub.textileexchange.org/learning-zone/glossary/measurements

நம்ம கம்பெனிக்குத் தேவை இன்னோவேஷன் ப்ரோ!

பெரும்பாலான நிறுவனங்களில் பெரிய தலைகள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்றால் நிச்சயமாக Innovation, Quality, Pipeline, Deliverables, Out of box thinking போன்ற பதங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும். அதிலும் மீட்டிங் முடித்தபிறகு பாரில் பாட்டிலைத் திறந்தவுடன் சொற்பொழிவு என்றால் சொல்லவே வேண்டாம். தான் ஆக்டிவா வண்டியில் பக்கத்திலுள்ள மளிகைக்கடைக்கு சென்று உப்பு வாங்கியபோது கற்றுக்கொண்ட மேனேஜ்மென்ட் லெஸன், புத்தாண்டன்று ஜிம்மில் சேர உறுதிபூண்டு அதை பொங்கல்வரை பின்பற்றியதால் கிடைத்த அசாத்திய வில்-பவர் என பல அரிதான விசயங்களைக் என்னைப்போன்ற பச்சாக்களுக்கு கற்றுத்தருவார்கள். அந்த அதிகாரி சைவப்பிராணி என்றால் கடைசிவரை பனீர் டிக்காவை மட்டுமே பல்லுக்குச்சியில் குத்தி விழுங்கிக்கொண்டே இருக்கவேண்டியதுதான்.

எல்லா நிறுவனங்களும் பத்து கிராம் விதையை 15×12 சென்டிமீட்டர் கவரில் போட்டு காலங்காலமாக விற்றுக்கொண்டிருக்கிறார்கள். நான் முன்னர் பணிபுரிந்த நிறுவனத்தில் ஒரு புதிய விற்பனைத்துறை உயரதிகாரி ஆட்டோமொபைல் துறையிலிருந்து வந்தார். வருவாயைக் கூட்ட புதிதாக வரும் ஒவ்வொரு அதிகாரியும் செய்யும் முதல் வேலை காஸ்ட் கன்ட்ரோல் என்றபெயரில் செலவினங்களைக் குறைப்பது; அதில் அடிப்படையே சிலநேரங்களில் ஆட்டம் கண்டுவிடும். அவரது ஆலோசனைப்படி திடீரென விதை பாக்கெட்டின் அளவைக் குறைத்து சந்தைக்கு அனுப்பினார்கள். பேக்கிங்களில் மாற்றம் செய்தாலும் அதைப்பற்றி வர்த்தகச் சங்கிலியில் உள்ளவர்களுக்கு முறையாக போஸ்டர் ஒட்டி தெரிவிக்கவேண்டும் என்ற அடிப்படையும் பின்பற்றப்படவில்லை. வணிகர்கள் ‘என்னய்யா இது ஹான்ஸ் பாக்கெட் மாதிரி, பத்து கிராமுக்கு முன்னூறு ரூவா வாங்கறீங்க கொஞ்சம் பெரிய பாக்கெட் போட்டாத்தான் என்ன கேடு?’ என்று இரைந்தார்கள். விவசாயிகள் இது போலி விதை பாக்கெட் என்று நிராகரித்துவிட்டு பழைய பாக்கெட் விதைதான் வேண்டும் என்று கேட்க ஆரம்பிக்க விசயம் மேலிடத்துக்குச் சென்றது. If you innovate something there will be initial resistance; but you should not give up என்றெல்லாம் கதை சொல்லி பழைய பாக்கெட் திரும்ப வந்தது. பாக்கெட் அளவைக் குறைப்பதில் வாடிக்கையாளரின் எந்த ஒரு பிரச்சினை அல்லது எதிர்பார்ப்புக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதால் இதில் என்ன இன்னோவேஷன் என்று நாங்களெல்லாம் குழம்பித்தான் போனோம்.

ஃபார்ச்சூனர் போன்ற மகிழுந்துகளில் ஒரு சக்கரத்திற்கு ஆறு போல்ட் இருக்கும். ஏனைய பன்முக, விளையாட்டு பயன்பாட்டு ஊர்திகள், செடான்களில் ஐந்து போல்ட் இருக்கும். அடுத்தகட்ட ஸ்விஃப்ட், ஆல்ட்டோ போன்ற ஹேட்ச்பேக் வகையறாக்களில் நான்கு போல்ட் என்பது industry standard. அண்மையில் பிஸினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் Renault நிறுவன உயரதிகாரி ஒருவரின் பேட்டி வந்திருந்தது. அவர்களது ஆராய்ச்சிப்பிரிவு அதிகாரிகள் கடுமையாக உழைத்து புத்திசாலித்தனமாக வாகனத்தின் டிசைனை வடிவமைத்தார்களாம். ஒரு காருக்கு 16-18 கிலோ நட், போல்ட், ஸ்க்ரூக்கள் வழக்கமாக தேவைப்படுவதாகவும், ரெனோ தங்களது சாமர்த்தியமான டிசைன் காரணமாக 5-6 கிலோ அளவுக்கு குறைத்ததால்தான் Kwid மாடல் வெற்றிகரமாக குறைந்தவிலை காராக அறிமுகப்படுத்த முடிந்தது என்று பெருமிதத்துடன் தெரிவித்திருந்தார். அடடா இது தெரியாமல் பல டன் இரும்பு பொருட்களை பல நிறுவனங்கள் வீண்டிக்கின்றனரே என்ற ஆச்சரியத்துடன் ஒரு க்விட் காரை சுற்றிவந்து பார்த்தபோது சக்கரத்தில் மூன்று போல்ட் மட்டுமே இருந்தது. ஒரு டன் எடையுடைய மகிழுந்து நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்போது அதன் எடை ஐந்து போல்ட்டுகள் வழியாக தரைக்கு கடத்தப்படும்போதும், மூன்று போல்ட் வழியாக கடத்தப்படும்போதும் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஒரேமாதிரியாக இருக்குமா என்பதை அந்த துறை சார்ந்த பொறியாளர்கள்தான் சொல்லவேண்டும். நம் முன்னோர்கள் கடையாணி மட்டுமே உள்ள கட்டை வண்டிகளை பயன்படுத்தியதைக் காட்டி வருங்காலத்தில் ஒரு போல்ட் மட்டுமே இருக்கும் டிசைனும் வரலாம்.

ஆனால் இதை இன்னோவேஷன் என்று எப்படி சொல்கிறார்கள், வாடிக்கையாளர்களின் தேவையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பூர்த்திசெய்ய புதிதாக எதை சேர்த்திருக்கிறார்கள் என்று பார்த்தால் வெறும் வார்த்தை ஜாலங்கள் மட்டுமே எஞ்சியிருக்கிறது.

கணக்கதிகாரம்

கணக்கதிகாரம் கண்டுபிடித்து வைத்த நம் முன்னோர்களின் அறிவை வியந்துகொண்டே அந்த வாய்ப்பாட்டின் மூலமாக பூசணிக்காய் விதைகளை எண்ண முனைந்தபோது…

நெதர்லேந்து மற்றும் தைவான் கம்பெனிகளின் இரகத்தில் விதைகள் குறைவாகவும், சதைப்பற்று அதிகமாகவும் இருந்ததால் முயற்சி தோல்வியில் முடிந்தது. வாட்சப்பில் வந்தது லாஜிக்படி சரிதான் என்றாலும் நம் சவுகரியத்துக்கு இன்று ரகங்களை breed செய்வதால் பழைய சூத்திரங்கள் பொருந்துவதில்லை.

கணக்கதிகாரம் நூல் இங்கே:
https://archive.org/stream/balagzone_gmail/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D#page/n0/mode/1up

ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?

ஒரு பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது இந்த தமிழ் செய்யுள்.

“கணக்கதிகாரம்” கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்

“கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்”

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை “அ” என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது “90அ” ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது “45அ” ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது “135அ” ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?

சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.

“பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி – வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை.”

– கணக்கதிகாரம்

விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம்.

கோடைகாலத்தில் தக்காளி விலையேறுவதும், நுகர்வோர் புலம்பல்களும்

னி சதியைப் பார்த்தித்தீர்களா என்று ஆரம்பித்துவிடுவார்கள். மற்றபடி அதன் அறிவியல் பின்னணி என்ன, எதிர்கால விளைவுகள் எப்படியிருக்கும் என்பதெல்லாம் யாருக்கும் கவலையில்லை. அப்போதைக்கு வல்லுனராக, நிபுணராகக் காட்டிக்கொள்ளவேண்டும்; யாரையாவது திட்ட வேண்டும்.

தக்காளியில் இரவு வெப்பநிலை 22 டிகிரியை தாண்டினால் பூவிலுள்ள மகரந்தம் அதன் முளைக்கும் செயல்திறனை இழந்துவிடும். Heat set எனப்படும் வெயிலை தாங்கி வளரும் பண்பு இருந்தாலும் இதுதான் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் இரகங்களின் அதிகபட்ச அளவு. அவ்வாறு மகரந்தம் கிடைக்காதபட்சத்தில் சூலகம் தானாகவே ஓரளவுக்கு வளர்ந்து விதையில்லாத சிறிய காயைத் தரும். படத்தில் இருப்பது அதுதான். கடந்த மாதம் தாறுமாறாக விலையேறக் காரணம் இந்த இரவுநேர வெப்பநிலை விளைவுதான்.

இந்த களேபரத்துக்கிடையில் ஓர் ஆர்வலர் பன்னாட்டுக்கம்பெனிகளின் விதைகள் heat set என்ற பண்பு இல்லாதவை அதனால் கோடையில் காய்கள் வராது. அரசிடம் இருக்கும் ‘மருதம்’ என்ற இரகம் வெயிலைத்தாங்கி வரும் ஆனால் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சதி செய்து அதை சந்தைப்படுத்தாமல் செய்துவிட்டனர் என்று சொன்னதாக விகடன் கட்டுரை வெளியிட்டிருந்தது. அதைப் படித்தபின் ‘யாருய்யா நீ, எனக்கே உன்னை பாக்கனும்போல இருக்குதே’ என்று ஆச்சரியப்பட்டுப் போனோம்.

மாடுகளுக்கு சினை ஊசி போட்டு கலப்பினம் உண்டாக்கி A2 பால் கிடைக்காமல் செய்து, சர்க்கரை நோயை பரப்பியதால் இது பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் சதி என்று சமூக அக்கறையுடனும், மாடுகளுக்கு உடலுறவுகொள்ள காளை கிடைப்பதில்லை என்று தார்மீக அக்கறையுடனும் பேஸ்புக்கில் கண்துஞ்சாது களப்பணியாற்றும் ஆர்வலர்களின் வாய்க்கு இன்னொரு அவல் கிடைத்திருக்கிறது.

கால்நடைகளில் காளைக்கன்று பிறந்தால் சில மாதங்களுக்குப் பிறகு கறிக்கு விற்றுவிடுவது நடைமுறை. பெரும்பாலான நேரங்களில் போதுமான பால், தீனி கிடைக்காமல் காளைக்கன்றுகள் சாகக் கிடக்கும்; சில நேரங்களில் செத்துவிடும். அதேநேரம் கிடாரியாக இருந்தால் ஆறேழு மாதங்கள் கழித்து கருவுற்றபின் விற்றால் கூடுதல் வருவாய்; சிலநேரங்களில் அதை வைத்துக்கொண்டு ஆறேழு ஈற்றுகளைத் தாண்டிய வற்றிய தாய்க்கறவைகளை கறிக்கு விற்றுவிடுவர்.

விந்தணுவில் இருந்து XX நிறப்புறி (குரோமோசோம்) உடைய, அதாவது பெண் கன்றுகள் மட்டுமே ஈனக்கூடிய சினை ஊசிகளை மட்டும் சந்தைக்கு அனுப்ப தற்போது அரசின் National Dairy Research Institute மூலமாக ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் Flow Cytometry மூலமாக 90% பெண் குரோமோசோம்களைப் பிரித்தெடுக்க முடியும் என்றாலும் அது நடைமுறைக்கு ஒத்துவராத விலையில் இருக்கிறது. நமது விஞ்ஞானிகள் இத்தகைய தொழிநுட்பத்தை உண்டாக்கினால் ஊரக கால்நடை வளர்ப்பின் மூலம் வரும் வருவாய் கிட்டத்தட்ட 30% வரை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. எதிர்காலத்தில் காளைக்கன்றுகள் முழுவதுமாகக் கிடைக்காமல் போனால் மாட்டுக்கறி வணிகம் முழுவதும் கழித்துக்கட்டப்படும் வத்தக்கறவைகளை நம்பியே இருக்கவேண்டிவரும். ஒரு மாடு அதன் முழு உற்பத்தித்திறனை இழந்தபிறகே கறிக்கு அனுப்பப்படும் என்பதால் மாட்டுக்கறி, தோல், எலும்பு போன்றவை விலையேற வாய்ப்பிருக்கிறது. சுத்த சைவ மக்கள் சாப்பிடும் மாத்திரைகளின் base material-கூட மாட்டு எலும்புதான் என்பதால் மாத்திரைகளும் ஓரளவுக்கு விலையேறலாம். ஆனாலும் தொழில்நுட்பத்தின் விளைவு நல்லதா கெட்டதா என்ற நமது ஊகங்களின் அடிப்படையில் ஆராய்ச்சிகளை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது.

கோமாதாவின் காவலன் மோடி அரசுதான் இதற்கு முழு ஆதரவு அளித்து முன்னெடுத்திருக்கிறது. //The research has been on for several years. It got a push after the change of government in 2014 at the Centre. A team of 25-30 scientists are working on the project, assisted by research scholars //

இருப்பினும் பளிச்சென்று சூழ்நிலைக்குத் தக்கவாறு ஒரு விளக்கத்தைக் கொடுத்து இந்த புராஜெக்ட்டை முன்னெடுத்திருக்கும் பெயர் தெரியாத அந்த விஞ்ஞானியின் ராசதந்திரத்தைக் கண்டு வியக்கிறேன். //”If you don’t have ox and bulls, there won’t be any issues around cow slaughter, as killing of female milch cows is strictly prohibited,” the scientist explained.//

மேலும் படிக்க:
http://www.business-standard.com/article/current-affairs/bullish-about-female-calves-116061900776_1.html

கரையான், திடீர் ஈசல் தொல்லைகள்

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா? அழைக்கவும் 1800 கஜமுஜ கஜமுஜ என்று ஆங்காங்கே நம்பர் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கரையானை வைத்து நம் முன்னோர்கள் நடத்திய அதிசயத்தை இப்போது பேஸ்புக், வாட்சப்பில் படித்து வியந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கரையான் புற்றைப்பற்றி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்காட் டர்னரும், மகாதேவனும் கடந்த 26 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்கிறார்கள். புற்றுகளை புரொப்பேன் கொண்டு நிரப்புவது, லேசர் மூலம் அளப்பது, பிளாஸ்டர் மூலம் மூடிப்பார்ப்பது, microscopic beads, fluorescent green water போன்றவற்றை உணவில் கொடுத்து புற்று பக்கத்திலேயே படுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து பல அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கரையான் புற்று என்பது நுரையீரல் மாதிரி ஒரு சுவாசிக்கும் அமைப்பு. தரைக்கு மேலே பல அடி உயரம் இருந்தாலும் கரையான்கள் குடியிருப்பது என்னவோ மண்ணுக்குள் வெகு ஆழத்தில். வெயில் பட்டு புற்றின் மேல்பகுதியில் உள்ள காற்று சூடாகி விரிவடையும்போது அடியிலிருந்து குளிர்ந்த காற்று வேறு துளைகள் வாயிலாக உள்ளே நுழைந்து வெப்பநிலையை மட்டுப்படுத்துகிறது. குளிர் அதிகமாக இருக்கும்போதும் இது பின்னோக்கி நடக்கிறது. அதனால் புற்றின் ஆழத்தில் வெப்பநிலையும், ஆக்சிஜன் அளவும் திறம்பட நிர்வகிக்கப்பட்ட மிகவும் அருமையான சூழல் இளம் கரையான்களுக்கும், மொத்த காலனிக்கும் கிடைக்கிறது. காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், வெப்பம், காற்றிலுள்ள நச்சுப்புகைகளின் அளவை கருத்தில்கொண்டு எந்த பகுதியில் திறக்கவேண்டும், மூடவேண்டும் என்பதை வேலைக்கார கரையான்கள் செய்துவிடுகின்றன.

ஒரு இராணி கரையான் 15 ஆண்டுகள் உயிர்வாழும், புற்றை அழிக்கவேண்டுமெனில் வெகு ஆழத்துக்கு தோண்டி இராணியை கண்டுபிடித்து நசுக்குவதுதான் ஒரே வழி. அல்லது அவ்வளவு ஆழத்துக்கு செல்லுமளவுக்கு பல துளைகளையிட்டு விஷத்தை ஊற்றவேண்டும். இராணி குறைந்தது ஒரு இன்ச் நீளத்துக்கு ஒரு பெரிய புழுவாக தெரியும்.

பருவசூழ்நிலை சரியாக இருக்கும்போது புதிய இடத்தில் காலனி அமைக்க வேண்டுமல்லவா? அதற்காக பாதி அளவிற்கான கரையான்கள் புற்றிலிருந்து இறக்கை முளைத்து ஈசலாகி (Alates) பறக்க ஆரம்பிக்கும். அந்த Nuptial flight-இன் போது ஈசல்கள் இலக்கில்லாமல் குத்துமதிப்பாக பறந்து ஆண்பூச்சிகள், பெண்பூச்சிகளின் வாசனைமூலம் உணர்ந்து கலவியில் ஈடுபட்டபின் எங்காவது விழுந்து இராணியாகி புதிய காலனியை ஆரம்பிக்கிறது. Inbreeding ஆகக்கூடாது என்பதற்காகவே எல்லா காலனிகளிலிருந்தும் ஈசல்கள் ஒரே நேரத்தில் கிளம்பி வருகின்றன.

கரையான் புற்றின் ventilation system மாடலை Bio-mimicry அல்லது Bio-inspiration அடிப்படையில் பயன்படுத்தி ஜிம்பாப்வேயில் ஒரு பெரிய கட்டடத்தையே கட்டியிருக்கிறார்கள். கட்டடக்கலை நிபுணர்கள் பலர் அந்த மாதிரியான மாடலில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கீழே இருக்கும் சுட்டிகளைப் படித்து பார்க்கவும்.

richard wolff என்ற பேராசிரியர் மக்களின் வர்க்க வித்தியாசங்களை அழகாக வீடியோ மூலம் விளக்குகிறார். கரையான் புற்றுகளில் இருக்கும் Worker, Soldier, Male, Queen போன்றவற்றில் யார் யாரை ஆள்கிறார்கள் என்பதும், ஆனால் உண்மையில் யார் யாரால் ஆளப்படுகிறார்கள் என்பதும் வித்தியாசமான கோணத்தில் வருபவை. சமூகத்தின் Working lower class, Working middle, Upper middle and Elite class குறித்த ரிச்சர்ட் உல்ப் வீடியோவும் அருமையான ஒன்று. ஈசல்கள் வருவதைப்போல நமது சமூகத்திலும் திடீர் குபீர் போராளிகள் வருகிறார்கள். ஈசல்களுக்காவது காலனியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான், ஆனால் நமது போராளிகளுக்கோ ஏகப்பட்ட மறைமுக குறிக்கோள்கள். அதற்காகவே இருக்கும் standard template-களில் கருணாநிதி ஒழிக, இந்தி தெரியாததால் வீணாப்போனோம், இட ஒதுக்கீடால் குவாலிட்டி போச்சு சார், இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா, இலவசத்தால நாடு குட்டிச்சுவரா போச்சு, யூனியன் வெச்சுத்தான் ஸார் நாடு கெட்டுது, திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு கேட்டுது போன்றவற்றில் ஏதாவது ஒரு டெம்ப்ளேட்டை பிடித்துக்கொண்டு சிலகாலம் ஈசல் மாதிரி ரேண்டமாக பறப்பார்கள். ஆண்ட பரம்பரை, பெண்ணியம் போன்ற peculiar template-களும் உண்டு.

அத்தகைய டெம்ப்ளேட் பிடிக்க முடியாதவர்கள் ‘என்னே நம் முன்னோர்களின் மதிநுட்பம்’ என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொள்வார்கள். கரையான் புற்றை தோண்டி கிணறு வெட்டினால் நிறைய தண்ணீர் வரும், மெட்டி அணிவதின் பிஸியாலஜிகல் சிறப்புகள், ஜட்டி அணியாமல் பட்டாபட்டி அணிவதின் இரகசியங்கள், திருமணத்தின்போது பட்டுசேலை அணியக் காரணம் ஓசோன் கதிர்வீச்சை தடுப்பது, அந்த காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அத்தனைபேரும் நூறாண்டு வாழ்ந்தார்கள், எல்லாருமே பத்து குழந்தைகள் பெற்றார்கள், நெருப்பு கண்டுபிடிக்கும் முன்னரே A2 பால் குடித்து வளர்ந்தவன் தமிழன் என்று முட்டாள்தனமான விசயங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் பரப்புவார்கள். ஆயிரம் விஷயங்கள் அந்தகாலத்தில் இருந்திருந்தாலும் அதை அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்டுவிட்டு எல்லாமே வேதத்தில் இருந்தது, புராணத்தில் இருந்தது அவை அழிந்துபோக ஆங்கிலேயனும், திராவிட அரசுகளும்தான் காரணம் என்ற சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தால் இன்னும் பின்னாடிதான் போவோம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோஷ்டி அகமதாபாத்தில் புல்லெட் ரயில் ஓடுகிறது என்று ஜப்பானின் ரயிலைக் காட்டுவது, சூரத்தின் எக்ஸ்பிரஸ் ஹைவே என்று சீனாவின் இடதுபுற ஸ்டியரிங் உள்ள பேருந்தை காட்டுவது, நெதர்லாந்தில் வனவிலங்குகள் நெடுஞ்சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட வன மேம்பாலங்களை கிர் காட்டில் இருக்கிறது என்று போட்டது, ஜெர்மனியில் சிறிய கப்பல்கள் செல்லும் ஆற்றைக்காட்டி முதன்முறையாக ஆற்று ஓரத்தில் காற்றாலையுடன் கூடிய நெடுஞ்சாலையில் வலப்புறம் செல்லும் வாகனங்களும் ஆற்றில் கப்பலுமாக ஜாம்நகருக்கு பக்கத்தில் போவதாக வளர்ச்சி வளர்ச்சி என்று காட்டிக்கொண்டிருந்த கோஷ்டி இது Off-season என்பதால் “நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற சீரிஸ் ஆரம்பித்து பரப்புகிறார்களோ என்று தோன்றுகிறது!

எது எப்படியோ, கரையான் புற்றுக்கடியில் கிணறு வெட்டினால் நிச்சயம் தண்ணீர் வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது என்பதற்காகவே இந்தப் பதிவு.

http://news.nationalgeographic.com/news/2014/07/140731-termites-mounds-insects-entomology-science/

The termite mound: A not-quite-true popular bioinspiration story

http://www.esf.edu/efb/turner/termitePages/termiteGasex.html

https://www.amentsoc.org/insects/glossary/terms/nuptial-flight

How Class Works:

சினிமா விமர்சனம் எனும் புள்ளப்பூச்சி டார்ச்சர்கள்

இதுக்கு பேர்தான் புள்ளப்பூச்சி. பேர்தான் புள்ளப்பூச்சி (mole cricket) என்றாலும் இதற்கு சுவாரசியமான பின்னனி இருக்கிறது. இது மண்ணுக்குள் பதுங்கியிருந்து இரவில் இரைதேடும் பழக்கமுடையது. மண்ணை தோண்டுவதற்கு ஏதுவாக இதன் முன்னங்கால்கள் மிக வலுவானவை மேலும் அதிவேகமாக தோண்டக்கூடியவை. இராணுவத்திலும், காவல்துறையிலும் அந்த காலத்தில் குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைப்பதற்காக செய்யப்படும் சித்ரவதைகளில் இந்த புள்ளப்பூச்சி முக்கிய பங்காற்றியிருக்கிறது. இரண்டு மூன்று பூச்சிகளைப் பிடித்து குற்றவாளியின் தொப்புள்மீது விட்டு டம்ளர் அல்லது கொட்டாங்குச்சியை வைத்து மூடி பிடித்துக்கொள்வார்கள். இந்த பூச்சி குழிபறிக்க ஆரம்பித்தால் நேர்கோட்டில் வெறித்தனமான வேகத்தில் தோண்டி மண்ணை ஓரத்தில் வீசிக்கொண்டே உள்ளே நுழையும். அதே பாணியில் தொப்புளை மூன்று, நான்கு பூச்சிகள் இரத்தம் வரவர தோண்டினால் எந்த அசாதாரண மனிதனும் கதறிவிடுவான்.

இரவுநேரத்தில் கிரிக், கிரிக், கிரிக் என்ற ஓசையை எழுப்புவது இந்த பூச்சிதான். பழைய படங்களில் இரவில் வில்லன் வரும்போதும், சிலநேரங்களில் ரொமான்ஸ் பாட்டின்போதும் பின்னணி ஓசையாக இந்த சத்தத்தைக் கேட்டிருக்கக்கூடும். இந்த சத்தங்களின் ஆராய்ச்சியும் சுவாரசியமானது. http://www.brisbaneinsects.com/brisbane_crickets/MoleCricket.htm

இது மட்டுமல்லாது பல பூச்சிகளின் பங்கு Forensic entomology-யில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு பிணத்தின் மீது இருக்கும் பூச்சிகள், அதன் வளர்ச்சி, பருவசூழ்நிலை எந்தெந்த வகையான பூச்சிகள் இருக்கின்றன என்பதை வைத்து இறந்து எத்தனை நாள் ஆகியிருக்கலாம் என்பதை spot postmortem செய்கையில் உறுதிப்படுத்திக்கொள்வார்கள். ஒருவேளை பூச்சிகளே இல்லாமல் பிணம் அழுகியிருக்கிறது என்றால் விஷம் மூலமாக மரணம் நேர்ந்திருக்கிறது என்ற கோணத்தில் வழக்கு நகரும்.
https://en.m.wikipedia.org/wiki/Forensic_entomology
இராஜேஷ்குமார் நாவல்கள் படித்து வளர்ந்த சமூகம் இதை நன்றாக அறியும்.

ஓரிடத்தில் கழுகுகள், பறவைகள் வட்டமிடுவது, குறுக்கே பறக்கும் பூச்சிகளின் வகைகளை வைத்து தூரத்தில் பிணம் கிடக்கிறது என்பதை சொல்லிவிடலாம். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமல் அமெரிக்கா சென்று ஓரிடத்தில் இருக்கும் புழுக்களைப் பார்த்து அங்கே தோண்டச்சொல்லி பிணத்தை எடுப்பது forensic entomology-யில் தமிழ்ப்படங்களில் வந்த கிளாசிக். பல மெடிக்கோ, சைக்கோ, லீகல், என்டமாலஜிக்கல் குறியீடுகள் நிறைந்த அந்ந படத்தைப் பற்றி இதற்குமேலும் பேசினால் பலரும் இதெல்லாம் அந்தக்கால கருடபுராணத்திலேயே கிருமிபோஜனம், மிருகினஜம்போ என்றெல்லாம் இருக்கிறது, வெள்ளைக்காரன் கண்டுபிடிப்பதற்கு முன்னரே forensic entomology பாரதத்தில் இருந்தது, ஓரிடத்திற்குள் நுழையும்போது அங்கிருக்கும் உயிரினங்களை scouting செய்து செத்த விலங்கு எவ்வளவு தூரத்தில் உள்ளது, செத்து எத்தனை நாளானது என்பதெல்லாம் கிராமப்புறத்தில் ஆடுமேய்த்த அனுபவமுள்ளவர்களுக்கே தெரியும், அதைத்தான் ‘ராகவன் இன்ஸ்ட்டிங்ட்’ என்று குறியீடு வழங்கினர். மேலும் திராவிட அரசுகள்தான் வேண்டுமென்றே நமது பாரம்பரியத்தை அழித்து ‘பேசிக் இன்ஸ்ட்டிங்ட்’ போன்ற படம் மூலம் எரோட்டிக் குறியீடுகளை நிறுவினர் என்று சொல்லக்கூடும்.

இத்தகைய காத்திரமான சமகால விமர்சனங்கள் நமது தொன்ம விகுதிகளைப் பகடி செய்வதால் சமகாலப் படிமங்களை காட்சிப்பொருளாக்காமால் விட்டு, முதிர்ச்சியடைந்த சமூக சிந்தனைக்களத்தை எதிர்பார்ப்பது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது என்பதோடு அது நானாகவே புள்ளப்பூச்சியை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டதாகிவிடும்.

அறுபது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்துவிட்ட ஒரே காரணத்துக்காக காத்திரமான விமர்சனப்பார்வை என்றபெயரில் சகமனிதனை சாகடிக்கும் இந்த சமகாலக் கொடூரம் இந்த லிங்கில் பத்தாவதாக சேர்கிறது.
http://mentalfloss.com/article/23038/9-insane-torture-techniques

#இறைவி அலப்பறைகள்

மண்வளம் குறித்த மூடநம்பிக்கைகள் – வெகுசன ஊடகங்களில்.

மண்ணியல் என்பது ஒரு தனித் துறை, அங்கே பல விஞ்ஞானிகள் இருக்கிறார்கள். அவர்களது கண்டுபிடிப்புகள் விவசாயம் மட்டுமின்றி சிவில் கட்டுமானம் மற்றும் இராணுவத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி பசுமை விகடனில் வந்த ஓர் அதிசயத்தகவலை நண்பர்  Raghavan Sampathkumar சுட்டிக்காட்டினார். அதாவது ஒரு பாட்டிலில் மண்ணைப்போட்டு தண்ணீரை ஊற்றி மண்ணின் பிரச்சினைகளைக் கண்டுபிடிக்கும் அரிய Do It Yourself வகையறா தகவல்.

B.Sc agri படிக்கையில் மண்ணைப்பற்றி கதறக்கதற சொல்லிக்கொடுத்தார்கள். போதாக்குறைக்கு பலதரப்பட்ட மினரல்களை, GCT-யில் உள்ள Geology துறைக்கு அழைத்துச்சென்று காட்டி எங்களுக்கு புரியவைக்க பேராசிரியர்கள் முயன்றபோதும் “இதுவும் கவர்மெண்டு காலேஜ்தான், ஆனால் எப்படி இங்க மட்டும் இவ்ளோ பிகர்கள் உலவுகிறார்கள்?” என்ற யோசனையிலேயே என்னைப்போன்ற பலரும் இருந்ததால் சுமாராகத்தான் பாடம் புரிந்தது. மண்ணியலின் தந்தை இரஷ்யாவின் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்ற அளவில் படித்து பாஸ் செய்தோம். படித்து முடித்தபிறகு நாட்டரசன்கோட்டையில் சிலகாலம் நில அளவைத்துறையில் மண் படிமங்களை GIS mapping செய்ய வகைப்படுத்தும் களப்பணியில் இருந்துபோது கற்றுக்கொண்டது கொஞ்சம் ப்ராக்டிகல் வகை. ஆறடி ஆழத்துக்கு குழி வெட்டி உள்ளேயிறங்கி மண்ணின் profile மாதிரி எடுத்து அதன் குணாதிசயங்களை எழுதும் வேலை.

மண் துகள்களின் பலதரப்பட்ட தன்மைகளில் நீருடன் இணையும்போது அதன் பெருந்துகள்கள் சிறிய துகள்களாக உடைந்து பரவும் Slaking என்பதும், சிறிய துகள்கள் கரைந்து மண்ணின் முதன்மை படிமங்களான மணல், வண்டல் மற்றும் களிமண்ணாக (sand, silt, clay) மாறும் dispersion என்பதும் முக்கிய கூறுகள். படத்திலுள்ள Shepard’s sediment classification diagram என்பது Geology-யில் அடிப்படையான ஒன்று. அதன் மதிப்பீடுகள் 4,3,2,1,0 எனவும் 4 என்பது கரையவேயில்லை எனவும், 0 என்பது முழுவதும் கரைந்துவிட்டது என்றும் சொல்கிறது. இந்த களச் சோதனையும் இரண்டு மணிநேரத்தில் முடிந்துவிடவேண்டும். பீர்ல்காம்ப் ஸ்கேல் (Peerlkamp Scale) என்பது கொஞ்சம் வேறுமாதிரியானது என்பதால் அது இங்கு தேவையில்லை (சும்மா பார்க்க மட்டும் படம் இணைக்கப்பட்டுள்ளது). மண்ணில் தண்ணீரை கலக்கி லட்டு செய்வது, திரி செய்வது, முக்கோணம் செய்வது என சிறுபிள்ளைகளின் விளையாட்டு மூலமும் மண் படிமங்களை கண்டுபிடிக்க முடியும் என்றாலும் அது இந்த இடத்தில் out of scope என்பதால் இத்தோடு நிறுத்திக்கொள்வோம்.

தமிழில் அறிவியல் கருத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது எந்த அடிப்படையில், எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை தராமல் இது ஆபத்தானது, இது நல்லது என்று அடித்துவிடுவது தவறான முன்னுதாரணம். பாலைவன மண்கூட அதற்கென சில சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. விவசாயத்துக்கு ஏற்றதல்ல என்றால் அது முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியது என்றெல்லாம் அவசியமில்லை.

ஆர்வக்கோளறுகள் சிலர் பரப்பும் தவறான தகவல்களை உண்மை என நம்பித்தொலைப்பது தமிழனின் தலையெழுத்து. இங்கே மட்டுமல்லாது ஹாலிவுட்வரை உண்டு. Journey to the Center of the Earth என்ற படத்தில் ஒரு குகைக்குள் நடந்து செல்லும்போது Muscovite என்ற ஒரு பாறையின்மீது நடப்பதாகவும், அது ஒரு thin type of rock formation என்று சொல்லும் ஹீரோ, அது உடைந்து கீழே செல்லும் மொக்கை சீன் இதோ.

அதில் வரும் geology குறித்த தகவல்களை ஒருவர் எப்படியெல்லாம் கழுவி ஊற்றியிருக்கிறார் என்பதைக் காண http://paleopix.com/blog/2012/12/08/bad-geology-movies-journey-to-the-center-of-the-earth-2008/

இதை நினைவில்கொண்டு அண்மையில் கோவையில் உள்ள Gass Forest Museum-திற்கு சென்றபோது மஸ்கோவைட்டை கொஞ்சநேரம் வெறித்துப்பார்க்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட அத்தனை மினரல் வகைகளையும் ஒரே இடத்தில் பார்க்கவேண்டுமானால் இந்த அருங்காட்சியகத்தை பார்த்துவிடுங்கள்.

நேரமிருப்பின் படித்துப்பார்க்க மண் குறித்த Self study தகவல்கள் இந்த சுட்டியில் இருக்கிறது

http://www.fao.org/docrep/010/i0007e/i0007e00.htm

பசுமை விகடன் பலருக்கு தெய்வநூலாக இருந்தாலும் எனக்கு பார்த்தாலே வீண் மன உளைச்சல் வரும் என்பதால் அதை ஒருபோதும் படிப்பதில்லை. அப்படியிருந்தும் இந்தமாதிரி ஹார்லிக்ஸ் பாட்டில் சோதனைகள் மூலம் மண்ணைப்பற்றி ஒரு முடிவுக்கு வருவது என்பது கழுதை**** தூக்கிப்பார்த்து மணி சொன்ன கதைதான்!

இணைய வணிகத்தின் தேனிலவு

சமகால வணிக சூழலில் அதிகம் தவறாக பயன்படுத்தப்பட்ட பதங்கள் என்றால் Asset light model மற்றும் Digital disruption -ஆகத்தான் இருக்கமுடியும். அமேசானும், பிளிப்கார்ட்டும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பதற்காக பல “பொருளாதார நிபுணர்கள்” கோட்டு சூட்டோடு வந்து எல்லோருடைய காதிலும் அசெட் லைட் மாடல்தான் இனிமேல் எதிர்காலம்; நிலக்கரி, இரும்பு, டெலிகாம், உரம் போன்ற தொழில்களெல்லாம் அவ்வளவு இலாபகரமானதாக இருக்காது, RoI குறையும் என்றெல்லாம் எல்லோருடைய காதிலும் காய்ச்சி ஊத்தி நம்ப வைத்தார்கள். அதை கொஞ்சம் விரிவாக அலசலாம்; பொறுமை இல்லையெனில் இங்கேயே நிறுத்திவிடுங்கள்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் பல மாணவர்களின் கனவாக இருந்தாலும் அதில் ஒரு நவீன ஊழல் மறைந்திருக்கிறது என்பதும் நிதர்சனம். உண்மை, உழைப்பு, நம்பிக்கை, தன்னம்பிக்கை, நாணயம், சரவணா ஸ்டோர்ஸ் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். Start up என்பது ஒரு புதிய கோணத்திலான வணிக சிந்தனை அசுரத்தனமான வளர்ச்சிபெற்று கோடிகளைக் கொட்டும் என்பதால் venture capital funding செல்வதே சிறந்தது என்றும், Small business என்பது ஆண்டுதோறும் 15-50% வேகத்தில் வளரக்கூடிய time tested business process என்பதால் Bank Credit செல்வதே சிறந்தது என்றும் நிதி ஆலோசகர் Chellamuthu Kuppusamy தெரிவிக்கிறார்.

ஸ்டார்ட்அப்-களின் தோல்விக்கு முக்கிய காரணம் எந்த வழியாக இலாபம் வரும் என்றே தெரியாமல் இருப்பதும், எதிர்பார்த்தபடி வணிகம் வளராவிட்டால் தாக்குப்பிடிக்க Plan B என்னவென்று தெரியாமல் ஆரம்பிப்பதுதான். வணிகத்தின் சமூக dynamics குறித்த புரிதல் இல்லாமல், புத்தகத்தில் வரும் SWOT அனாலிசிஸ் போட்டுப் பார்த்துவிட்டு பெட் கட்டும் மனநிலையும் முக்கியமானது.

தற்போது Purple Squirrel என்ற ஸ்டார்ட்அப் 15 கோடியை செலவு செய்துவிட்டு, ஒன்றும் தேறாது என்று மூட இருக்கிறார்கள். இதன் கான்செப்ட் என்னவென்றால் கல்லூரி மாணவர்களுக்கு புராஜெக்ட் டூர், IV அழைத்துச்செல்ல திட்டமிடும் tool. ஹைதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற இடங்களுக்கு அழைத்துசெல்லும் planner போன்ற ஒன்றை தயார் செய்தபிறகு மாணவர்களிடம் பேசினால் கோவா, குலு மணாலி, பாண்டிச்சேரி போன்ற இடங்களுக்கு IV செல்லவேண்டும், நீங்கள் சொல்லும் இடங்களுக்கு நாங்கள் வரமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒன்றிரண்டு ஆசிரியர்கள் வற்புறுத்தினாலும் மாணவர்கள் நிராகரித்துவிட, Plan B இல்லாததால் மூடப்படுகிறது. http://www.business-standard.com/…/purple-squirrel-shuts-do… இந்த கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப்-களின் ஆரம்பப்புள்ளி பிளிப்கார்ட் அல்லது ஸ்னாப்டீல் co-founder-ஆக இருந்த யாரோ ஒரு ஷர்மா. அவர் யாரென்று நினைவில்லை. பல கோடிகளுடன் மகிழ்ச்சியாக அதைவிட்டு விலகி யாரோ குருவிடம் யோகா கற்றுக்கொண்டு தியானத்தில் இருக்கும்போது அவரது உள்மனதில் வாத்தியாராக இருந்து செத்துப்போன தாத்தா வந்து கல்விமீது கவனம் செலுத்தத் சொன்னாராம். உடனே இவர் ஒரு கல்வி சார்ந்த ஸ்டார்ட்அப் ஆரம்பிக்க, இராசியான கைக்கு சொந்தக்காரர் என்று பலரும் பணம் போட வந்தபோது வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதையொட்டி கசமுசவென்று கல்வி தொடர்பான ஸ்டார்ட்அப்-கள் உண்டாயின. அதில் ஒன்றைத்தான் மேலே பார்த்தோம்.

ஒரு ஓட்டல்கூட இல்லாமல் உலகின் பல நாடுகளில் அறைகளை ஒருங்கிணைத்து வரும் நிறுவனம் Airbnb. அதாவது வாடகைக் கார் வணிகத்தின் Uber போல. அதே மாடலில் இந்தியாவில் உருவானதுதான் Oyo Rooms. ‘எங்களை காப்பியடித்து உண்டான பல நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன அதனால் அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை’ என்று சொல்லிவிட்டு இந்தியாவில் கடைதிறக்க வேலை செய்கிறார் Airbnb CEO. இந்தியாவில் தொழில்முறையில் நடத்தப்படும் பிராண்டு ஹோட்டல்கள் தாண்டி மற்றவை பெரும்பாலும் கருப்பு பணத்தை வெள்ளையாக்கவும், கருப்புப்பணத்தை அப்படியே பராமரிக்கவும் உண்டாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. அதனால் we are disrupting the hospitality industry for people’s needs என்று சொல்பவை சாதாரண டிக்கெட், ரூம் புக்கிங் போர்ட்டல்-களான yatra, makemytrip, tripadvisor போன்றவற்றின் போட்டியை எப்படி தாக்குபிடிக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Uber மாடலில் உருவான Ola, பல புதுமைகளைப் புகுத்தி Fastrack, NTL, Meru போன்றவைகளுக்கு மரண அடி கொடுத்தாலும் அவர்கள் ஆரோக்கியமான லாபத்துடன் இயங்கியதால் சுதாரித்துக்கொண்டார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பணம் கரையும்வரை அமைதிகாக்கிறார்கள். Uber, Ola-வின் தள்ளுபடிகள், டிரைவர் மற்றும் பேசன்ஜர் ரேட்டிங் குளறுபடிகள், இன்சென்டிவ் தகராறுகள், surge pricing போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக வீதிக்கு வர ஆரம்பித்திருக்கின்றன. கார் வாடகைக்கு எடுப்பதுதான் சிரமம் ஆனால் ஆக்டிங் டிரைவர்கள் கிடைப்பது எளிது என்றுசொல்லி Zuver என்று ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பித்திருக்கிறார்கள். அதில் மணிக்கு 100 ருபாய் கட்டணம் என்றும் 20% கம்பெனி கமிஷன் என்று சொல்லுகிறார்கள். Ola–வும் 20% கமிஷன் என்றுதான் தற்சமயம் செயல்படுகிறது. வெளிநாட்டு முதலீடு கரைந்தபிறகு நடக்கப்போகும் போட்டிகள்தான் சுவாரசியமானவை.

Food tech start ups என்றபெயரில் வந்த food delivery கம்பனிகள் Foodpanda, Zomato, Swiggy மாடல் அலாதியானது. ஒவ்வொரு பெரிய உணவகமும் இலவச டெலிவரி கொடுக்கும் இடத்தில் தள்ளுபடியுடன், ஒரு ஆளுக்கு சம்பளமும் கொடுத்து டெலிவரியும் கொடுத்துவிட்டு வருவாய் எங்கிருந்து வரும் என்றே தெரியாமல் அல்லோலகல்லோலப்படுகிறது. உணவகத்துக்கு ரேட்டிங் கொடுக்கிறோம் அதனால் வாடிக்கையாளர்கள் சிறப்பான வரவேற்பு தருவார்கள் என்கிறார்கள். இந்த ரேட்டிங், சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேசன் லோலாயிகள் குறித்து தனியாகவே ஒரு கட்டுரை எழுத முடியும். http://www.livemint.com/…/r…/The-trouble-with-Foodpanda.html

அடுத்து இத்தனை மில்லியன், அத்தனை மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட காய்கறி, மளிகை சாமான்கள் டெலிவரி. PepperTap, Grofers, BigBasket என வரிசையான வரவுகள். பிளிப்கார்ட்டின் NearBy ஆரம்பித்தவுடனே வரவேற்பு இல்லையென மூடப்பட்டது. இப்போது PepperTap ஒவ்வொரு ஊராக குடோனை சாத்துகிறது. “இந்திய மக்களுக்கு வாரயிறுதியில் மளிகை சாமான் வாங்கிவருவது ஒரு பிக்னிக் போன்றது, இல்லத்தரசிகள் கொஞ்சம் அடுப்படியில் இருந்து ரிலாக்ஸாக இருக்க மளிகை, காய்கறி வாங்கிக்கொண்டு, பிள்ளைகளுடன் வெளியே சுற்றிவிட்டு வருகிறார்கள்” என்று தனது அதிசய கண்டுபிடிப்பை இப்போது சொல்லியிருக்கிறார் PepperTap CEO. இதைத்தான் கிஷோர் பியானி காலங்காலமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது It Happened in India நூலை 200 ரூபாய்க்கு வாங்கி படித்திருந்தால் பல கோடி மிச்சமாகியிருக்கும்.

Brick & Mortar மாடல் எனப்படும் offline, retail channel based model. அதாவது நமது அண்ணாச்சி கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் போன்றவை. சுகுணா மட்டுமல்லாது ரிலையன்ஸ் நிறுவனமும் Frozen Chicken விற்பனையில் இறங்கி, போதிய வரவேற்பில்லாமல் மூடியது நினைவிருக்கலாம். ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது மளிகைக்கடையில் கறி விற்பது மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதால் மூடுவதாக அறிவித்தபோது மீசையில் மண் ஒட்டிக்கொண்டது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் 70% விற்பனை அதன் துணை நிறுவனமான WS Retail என்ற நிறுவனத்திலிருந்து வருகிறது. அந்த WS Retail நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளது இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் Catamaran ventures. அமேசான் நிறுவனத்தின் 40% விற்பனையைத் தரும் Cloudtail நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதும் அதே நிறுவனம்தான். அண்மையில் மத்திய அரசு ஆன்லைன் வணிக நிறுவனங்கள் 25%-க்கு மேல் ஒரே நிறுவனத்தில் இருந்து பொருட்களை வாங்கக்கூடாது என்று விதிமுறைகள் வகுத்திருப்பதால் பல மாற்றங்கள் வரவிருக்கின்றன.
http://www.livemint.com/…/Amazons-JV-Cloudtail-is-its-bigge…
இந்த களேபரத்துக்கு மத்தியில் Fidelity, Morgan Stanley போன்றவை பிளிப்கார்ட்டின் மதிப்பை 25-35% குறைத்துள்ளன. இந்த மதிப்பு குறைப்பு என்பது வெறும் theoretical exercise-தான், எங்கள் பரிவர்த்தனையின் மீது அல்ல என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் CEO சச்சின் பன்சால்.

வியாபார பரிவர்த்தனையில் இலாபம் எங்கே கிடைக்கும், தள்ளுபடியை நிறுத்தி பொருளோடு வரும் இலாபத்தில் நிறுவனத்தை நடத்தும்போது Brick & Mortar மாடல் கடைகளுடன் போட்டிட்டு தாக்குப்பிடிப்பது எப்படி என்ற தெளிவே இல்லாமல் இலாபம் வந்துவிடும் என்று வறட்டு நம்பிக்கையின் மீது வெறும் Number of Transactions என்ற அடிப்படையில் இணைய வணிகம் நடந்துகொண்டிருக்கிறது. மற்றபடி இங்கே வாடிக்கையாளர்களிடம் நன்றி உணர்வும் பெரிதாக கிடையாது, நிறுவனங்களிடம் professionalism என்பதும் சொல்லிக்கொள்ளும்படி கிடையாது. அப்படியே இருந்தாலும் பிராண்டுக்கான மதிப்பை அந்த நிறுவனமே உண்டாக்கிக்கொள்ளவேண்டும், நாங்கள் வெறும் டீலர் என்ற அடிபடையில்தான் நமது வணிக புரிதல் இயங்குகிறது. ஒரு சிறிய ரன்னிங் ரிப்பேருக்காக மெர்சிடஸ் பணிமனைக்கு சென்றிருந்தேன். கோவையில் TVS Sundaram Motors-தான் மெர்சிடஸ் பென்ஸ் டீலர். அசோக் லேலண்ட் LCV லாரி, பஸ்களுக்கும் TVS-தான் டீலர். கோவை மாநகராட்சியின் குப்பை லாரிகள், மெர்சிடஸ் ஷோரூமின் வளாகத்திலுள்ள பணிமனையில்தான் சர்வீஸ் செய்யப்படுகிறது. அங்கே நிறுத்திவிட்டு சிறிதுநேரம் உள்ளே சென்றுவிட்டு வருவதற்குள் ஒரு குப்பைலாரி ஓட்டுனர் “குறுக்க ஏன் சார் வண்டிய போடறீங்க எனக்கு லேட் ஆகுதுல்ல” என்று சலித்துக்கொண்டே சென்றார். Brand Equity குறித்தெல்லாம் கோட்டுசூட்டு நிபுணர்கள் டிசைன் டிசைனாக பேசினாலும் அந்த பிராண்டு குறித்த புரிதல் வாடிக்கையாளர்களுக்கு இருந்தாலும் டீலர்களின் professionalism இல்லாமல் வெற்றியடையாது.

நமது மிகப்பெரிய சாபக்கேடு அவநம்பிக்கை, நாம் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் நம்புவது இல்லை என்கிறார் FreeCharge நிறுவன CEO குணால் ஷா. ஒரு வண்டியை சர்வீஸுக்கு விடும்போது பெட்ரோல் அளவு எவ்வளவு இருக்கிறது என்றுதான் பார்க்கிறோம்; சர்வீஸ் அட்வைசர்கள் வண்டியை சுற்றிவந்து எத்தனை இடத்தில் ஒடுங்கியிருக்கிறது, பெய்ன்ட் போயிருக்கிறது, என்னென்ன சாமான்கள் இருக்கின்றன என்று குறித்துகொண்ட பின்னர்தான் என்ன பிரச்சினை என்றே கேட்க ஆரம்பிக்கின்றனர். தொடர்ந்து அரசுகளையும், வணிக நிறுவனங்களையும் நம்பி கொஞ்சம் கொஞ்சமாக ஏமாற்ற உணர்வுடன் திரும்புவதால் நமக்கு யார்மீதும் நம்பிக்கை கிடையாது. நமது வளரும் சூழலும் அப்படித்தான் இருக்கிறது. கல்விமுறையும் அதற்கான ஏற்பாடாகத்தான் இருக்கிறது.

ஒரேதிசையில் மந்தையாக சென்று இறங்குவது நமக்கு பழகிப்போன ஒன்று. பிளிப்கார்ட்டில் wellness products என்று ஆரம்பித்ததும் அதேபாணியில் பல தனி போர்ட்டல்கள் வந்தன. அதில் ஒன்று, Erotic section என்ற ஒன்று எங்களிடம் தனியாக இருக்கிறது என்று விளம்பரம் செய்தது. அடடா, பல பலான டில்டோ சமாச்சாரங்கள் இருக்கும், எப்படியும் ஒரு பாலியல் புரட்சி வரும் என்று நம்பி போய்ப் பார்த்தால் பலவித ஆணுறைகள் மட்டுமே இருந்தன. ஆணுறையை ஆன்லைனில் ஆர்டர் செய்துவிட்டு ‘காண்டம் வரட்டும்னு காத்துட்டு இருக்கோம்’ என்று சொல்லும் சுயகட்டுப்பாடுடைய தம்பதிகள் எப்படி இருப்பார்கள், எங்கே இருப்பார்கள் என்று பலவாறாக யோசித்துக்கொண்டு இருந்தகாலத்திலேயே அந்த போர்ட்டல் மூடப்பட்டது!

குத்து ரம்யா நமக்கெல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் austerity drive என்றபெயரில் செலவைக் குறைக்கவேண்டும் என்றபோதும் தாஜ் ஓட்டலின் சூட் அறையில்தான் தங்குவேன் என்று அடம்பிடித்து மருமகனின் கம்பெனி அக்கவுண்ட்டில் பில் செட்டில் செய்த எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தாவின் கம்பெனிகள் குறித்து இதில் பார்க்கவும். http://articles.economictimes.indiatimes.com/…/59339821_1_t…

இந்தியர்களின் அகவுரிமை (privacy) அலாதியானது. தனது வியாபாரம், வருமானம், செலவுகள் தன்னிடமே இருக்கவேண்டும், யாரையும் நம்பக்கூடாது போன்ற பாலபாடங்கள்தான் பிற்காலத்தில் நாம் ஆரம்பிக்கும் தொழில்களின் அடிப்படை. உதாரணமாக நாம் வாடிக்கையாளரிடம் செய்யும் வணிகம், அதன் லாப நட்டம், தகராறுகள் எல்லாமே மூன்றாவது நபர் குறுக்கிடாமல் தொழில்நுட்பம் மூலம் இணைக்கபடுமெனில் அது தாறுமாறான வெற்றியடையும். அதன் உதாரணம் JustDial. நாம் எவ்வளவுக்கு வாங்கினோம், அதில் கடைக்காரருக்கு லாபம் எவ்வளவு, கடனா ரொக்கமா என்றெல்லாம் நம் பரிவர்த்தனையில் மூக்கை நுழைக்காத லிஸ்டிங் மாடல் வெற்றிபெற்றது. ஆண்டுக்கு 20000 ருபாய் கட்டணம் செலுத்த வியாபாரிகள் தயாராக இருக்கிறார்கள். அதேநேரம் ஆன்லைனில் 30 Days Replacement Guarantee வாடிக்கையாளருக்கு வேண்டுமானால் இனிமையாக இருக்கலாம். நீங்கள் 25-ஆவது நாள் பொருளைத் திருப்பியனுப்பினால் பணம் இரண்டுநாளில் திரும்பி வருகிறது எனில் எத்தனை நாட்கள் கழித்து அந்த ஒரிஜினல் விற்பனையாளருக்கு பணம் போய்சேரும் என்பதை யோசிக்கவும். Number of Transactions-தான் இணைய வணிகத்தின் வெற்றி எனில் JustDial-இல் ஒருநாளைக்கு எத்தனை விசாரணைகள். கம்பெனி பல்லாயிரம் கோடிக்கு மதிப்பிடப்பட்டிருக்க வேண்டுமே.

நம்முடைய பணம், வியாபாரம் வேறு ஒருவரிடத்தில் போகக்கூடாது என்பது நம் அடிப்படை பாதுகாப்பு உணர்வு. ஒவ்வொரு வங்கிகளும், பல தனி நிறுவனங்களும் e-wallet என்றபெயரில் நமது பணத்தை அதில் சேமித்து வைக்கச்சொல்லி ஆலோசனை வழங்குவதும், அதன்வழியாக பரிவர்த்தனை செய்தால் தள்ளுபடிகள் வழங்குவதும் இந்திய வாடிக்கையாளர்களை பெரிதாக கவருவதில்லை. E-wallet தயார் செய்ய, பல நிறுவனங்களை அதில் கொண்டுவர, ஊடகங்களில் விளம்பரம் செய்ய, அதை தாங்கிப்பிடித்தவாறே ஏர்போர்ட்டுகளில் வாழும் நிறுவன உயரதிகாரிகளின் கடும் உழைப்பின் களைப்பைப் போக்க APAI பேக்கேஜில் ஆகும் ஸ்பா செலவுவரை எல்லாம் வாடிக்கையாளரே ஏற்கவேண்டும். அதற்கு என் பணம் வங்கிக் கணக்கிலேயே இருந்துவிட்டு போகட்டும் என்று வாடிக்கையாளர்கள் நினைப்பது இயல்பு.

மாப்பிள்ளை செத்தால் என்ன, பொண்ணு செத்தால் என்ன, எனக்கு வேண்டியது மாலைப் பணம் என்று என்ன நடந்தாலும் வருமானம் பார்ப்பது, ஆடிட்டர்கள், வங்கிகள், வெப் டிசைன், ஹோஸ்டிங் ஆட்கள்தான். அமெரிக்காவில் தங்க வேட்டை நடந்த காலத்தில் அதிகம் சம்பாதித்தது ட்ரான்ஸ்போர்ட் ஆட்கள்தான் என்று சொல்வார்கள். மின்னணு பரிவர்த்தனைகளுக்கு மறைமுகமாக மக்களை மாறவிடாமல் செய்வது பெரும்பாலும் வங்கிகள்தான். ஒரு வங்கிகூட PoS பொறிகளை fixed rate-இல் வழங்குவதில்லை. RBI-யைகாட்டி நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வணிகர்களை வங்கிகள் சுரண்டுவது தலையில் இருக்கும் ஈரும், பேனும் போல. நம்மை ஒரேடியாக கொல்லாது, ஆனால் அரித்துக்கொண்டே இருக்கும்.

ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் தரைதட்டிவிட்டதால் மும்பை IIT, இனிமேல் முதல் சுற்று placement-இல் asset light start up-களுக்கு எவ்வளவு சம்பளம் அறிவித்தாலும் இடமில்லை என்று போர்டு வைத்துவிட்டது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கும்போது IIT, IIM முன்னாள் மாணவர் யாரேனுமிருந்தால் சீக்கிரம் பணம் கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வழக்கில் உள்ளது. முதலீட்டு நிறுவனங்களின் Fund manager-களின் உள்ளடி வேலைகள் இந்த ஆண்டு சில வெளியே வரும் என்று பேசிக்கொள்கிறார்கள். Ola, Flipkart போன்றவற்றில் பெருமளவு முதலீடு செய்த SoftBank-இன் CEO நிகேஷ் அரோராவுக்கு ஆண்டுக்கு 900 கோடி சம்பளம் எதற்கு, அவர் முதலீடு செய்த ஒரு நிறுவனமாவது break-even அடைந்திருக்கிறதா என்று வங்கியின் முதலீட்டாளர்கள் ஓலை அனுப்பியிருக்கின்றனர்.

Social entrepreneurship என்பது நமது சமூகத்தின் இன்றைய முக்கியமான தேவை. பெண்களுக்கான சானிடரி நாப்கின் தயாரிக்கும் இயந்திரங்களைத் தயாரித்து வழங்கும் ஜெயாஸ்ரீ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் பத்மஸ்ரீ முருகானந்தத்தின் வரலாறை கூகுளில் பார்க்கவும். Time இதழின் அட்டையில் வந்து இன்று பில் கேட்சுடன் சமமாக உட்கார்ந்து பேசும் முருகானந்தத்தின் கண்டுபிடிப்பின் பலனை ஊரகப்பகுதியில் விசாரித்துப்பார்க்கவும்.

எது எப்படி நடந்தாலும் ஆட்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும், ஆயிரம் பிசினஸ் மாடல் வந்தாலும் சம்பளம் என்பது அடிப்படை என்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி, அவர்களுக்கான payroll பராமரித்து வரும் staffing கம்பெனிகள் இன்று வளர்ச்சி கண்டுவருகின்றன. TeamLease பங்குச்சந்தைக்கு வந்துவிட்டது. கனடா வாழ் இந்தியரான பிரேம் வத்ஸாவின் Quess Corp விரைவில் பட்டியலிடப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஊழியர்களை இந்த நிறுவனங்கள் third-party employee, vendor employee என்ற பல பெயர்களில் முறைப்படுத்தி வருகின்றன. PF, ESI போன்றவை உறுதி செய்யப்படுவதால் விவசாயக்கூலியாக இருப்பதைக் காட்டிலும் ஒரு டெக்ஸ்டைல் கம்பெனிக்கு வேலைக்குப் போகலாம் என்று வருகிறார்கள். சாதி மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளிலிருந்து விடுதலை கிடைப்பதோடு வேலையை விட்டு நிற்கும்பட்சத்தில் PF தொகை கொஞ்சம் மொத்தமாக கிடைக்கும் என்று நம்பித்தான் சேருகிறார்கள். அண்மையில் மோடி அரசு அதில் கை வைக்க நினைத்தபோதுதான் பெங்களூருவில் பேருந்துகளை எரித்து அடித்தட்டு ஊழியர்கள் எதிர்ப்பைக் காட்டினார்கள். இத்தகைய சூழலில் நாம் வாழும்போது அவநம்பிக்கைதானே முதலில் வரும்.

அவநம்பிக்கை, போட்டி, பொறாமை என வாழும் விவசாயிகளிடம் ஸ்டார்ட்-அப் கான்செப்ட்கள் வெற்றிபெற வேண்டுமெனில் அது ஒரு மேஜிக் ஐடியாவாக இருக்கவேண்டும். அல்லது ஆட்களின் தேவையைத் தாறுமாறாக குறைக்கும் தொழில்நுட்பமாக இருக்கவேண்டும். Bt பருத்தியின் வெற்றியே மருந்தடிக்க தேவையான செலவு மற்றும் ஆட்களை ஒரேடியாக குறைத்ததுதான். மான்சாண்டோவின் மார்கெடிங் பட்ஜெட்தான் காரணம் என்று ACAC Critics-தான்(Air Conditioned room Arm Chair Critics) சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இன்றும் களைக்கொல்லிகள் கன்னாபின்னாவென்று விற்க காரணம் ஆட்களின் தேவையைக் குறைப்பதுதான். விவசாயிகளைப் புனித பசுக்கள், வாழும் தெய்வங்கள் என்றெல்லாம் பேஸ்புக்கில் ‘நைஷ் பதிவு தோழி’ வகையறா ஆட்கள்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இயற்கை விவசாயம் தாண்டி ஏதேனும் புதிய முயற்சிகள் வெற்றிபெறுவதாக தெரிந்தால் கார்ப்பரேட் சதி என்று பாட ஆரம்பித்துவிடுவார்கள்.

விவசாயத்தில் சார்தொழில்களில் மண்டப முதலீட்டாளராக பல இடங்களில் முதலீடு செய்து வெற்றிகரமாகவும், சிலவற்றில் சில இலட்சங்களை இழந்தும், பல இடங்களில் பல்பு வாங்கியும், இன்னமும் தினசரி பல ஊர்களில், சாதிவாரியாக, சீசன்வாரியாக, பயிர்வாரியாக பலதரப்பட்ட தகவல்களோடு அதற்குள்ளேயே சுற்றி வருவதால் ஒரளவுக்கு நமக்கு நடைமுறை சிக்கல்களில் புரிதல் உண்டு. இடுபொருள் விற்பனை சங்கங்கள் நீண்டநாள் தாக்குபிடிக்காது என்று நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னபோது பலர் நம்பவில்லை. அதேபோல் இன்று Farmer Producer Company என்று ஆரம்பிக்கப்படும் பெரும்பாலான உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்கள் அதிலிருக்கும் முக்கிய புள்ளிகளின் vested interest காரணமாகவே இன்று வெற்றிகரமாக நடந்துகொண்டிருப்பது போல தெரிகிறது. இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து பார்ப்போம்.

இன்று சந்தைக்கு வரும் 90% விவசாய ஸ்டார்ட்-அப்-கள், IT-யின் ஒரு நீட்சியாகவே தெரிகிறது. இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு சொல்பவையாக இல்லாமல் கூடுதல் சுமையாகவே பெரும்பாலானவை வருகின்றன. அரிதாக சில ஸ்டார்ட்அப்-கள் நல்ல பொருள்+ஐடியாவுடன் இறங்கி ஒரு MSME நிறுவனமாக பரிணமிக்கின்றன. பல Marketing Innovation ஸ்டார்ட்அப்-கள் வந்து, காணாமல் போகின்றன. விவசாய விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் ஒரு புரட்சியை செய்யப்போகிறோம் என்று இதுவரை ஏழெட்டு பேராவது வந்து சொல்லி சென்றிருப்பார்கள். நம்மிடம் ஒரு வலுவான வயல்வெளி உற்பத்தி அணி இருக்கிறது. வல்லாரை போன்ற கீரைகளைக்கூட தினசரி நூறு கிலோ வேண்டுமென்றாலும் தருகிறோம், ஆனால் போக்குவரத்து, சேமிப்பு உங்களை சேர்ந்தது, ஒரே விலையில் கடைசிவரை எடுத்துக்கொண்டால் போதும், சந்தையில் என்ன விலைக்கு நீங்கள் விற்கிறீர்கள் என்றுகூட எங்களுக்கு சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டு “அப்ப, நம்ம ப்ரொடக்சன் எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்?” என்றால் ஊருக்கு போயிட்டு சொந்தபந்தங்களிடம் கலந்துகிட்டு கடுதாசி போடறோம் என்று கிளம்புபவர்கள் திரும்ப வருவதேயில்லை. குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள், காபி டே-க்களில் உட்கார்ந்து SWOT analysis, Number of transactions, MoM growth, RoI, Break-even என்றெல்லாம் சொல்ல நன்றாகத்தான் இருக்கிறது. இயற்கை விவசாயம் இன்னும் ஜோராக இருக்கிறது. யாராவது புரட்சிகரமான ஆட்கள் வரமாட்டார்களா, மேஜிக் நடக்காதா என்று என்னைப்போல பலர் காத்திருக்கிறோம்.

#Start_UP #Farming #Ventures

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது!

போர் என்பது நம் வீட்டின்முன் நடக்காதவரை ஒரு சாகசமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கான காரணங்கள் மிக அற்பமானவை. எளிதாக மக்களாட்சியில் சாதித்துக்கொள்ள முடிந்தவை. கடையேழு வள்ளல்களில் போரில் மடிந்தவர்களின் வரலாறு, அதன் தோற்றுவாய் என்னவென்பதை கொஞ்சம் பார்ப்போம்.

கடையேழு வள்ளல்களில் கொல்லிமலையை மையமாக வைத்து ஆண்டுவந்த ஓரியின் வில்வித்தைத் திறனை வன்பரணர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“வேழம் வீழ்த்த விழுத்தடை பகழி
பேழிவா யுளுவையைப் பெரும்பிறி துறீஇப்
புழற்றலை புகர்க்கலை யூருட்டி யுரற்றளைக்
கேழற்பன்றி வீழ வயலது
ஆழற் புற்றத் துடும்பிற் செற்றும்
வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ?
சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ!”

– புறநானூறு 152

ஒரு யானை, ஒரு புலி, ஒரு புள்ளிமான், ஒரு காட்டுப்பன்றி ஆகியவற்றைத் துளைத்து வீழ்த்திவிட்ட நிலையில் ஒரு அம்பு புற்றுக்கு அருகிலிருந்த உடும்பின் உடலில் சொருகி இருந்ததைக் காண நேர்ந்த ஒரு பாணர் கூட்டம், இப்படி ஒரே அம்பால் ஐந்து உயிரினங்களையும் கொல்லும் ஆற்றல் படைத்தவன் வல்வில் ஓரியோ? யாரோ? என்பது மேற்காணும் பாடலின் பொருளாகும்.

அற்புதமான இயற்கை வளங்கள் நிரம்பிய மலையை ஆண்டுவந்த, வில்வித்தையில் சிறந்த மாவீரன் ஓரியின் கொல்லிமலையைக் கைப்பற்ற சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு ஆசை வருகிறது. இன்று தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சி, திருக்கோவலூரை ஆண்டுவந்த காரி-மீது (மலையமான் திருமுடிக்காரி) படையெடுத்து வெல்கிறான். அப்போது பெருஞ்சேரல் இரும்பொறையிடம் அடைக்கலம் சென்ற காரி, ஒருகட்டத்தில் ஓரிமீது படையெடுத்துச்சென்று பெரும்போர் புரிகிறான். வில்வித்தையில் பெரும் சூரனான ஓரி, போரின்போது மார்பில் வில் துளைத்து உயிரை விடுகிறான். கொல்லிமலையைக் கைப்பற்ற உதவிய (கிட்டத்தட்ட கூலிப்படையாக சென்ற) மலையமான் திருமுடிக்காரிக்கு முள்ளூர் மலையை வழங்கிவிட்டு கொல்லிமலையை தன்வசம் வைத்துக்கொள்கிறான் பெருஞ்சேரல் இரும்பொறை.

பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரையும் மணமுடித்து தரச்சொல்லிக் கேட்ட பாண்டிய மன்னருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் அந்த வேண்டுகோளை நிராகரிக்கிறார். அதனால் மூவேந்தர்களும் பாரியின் கோட்டையை முற்றுகையிட்டும் வெல்ல முடியாததால் பாணர்களைப்போல் வேடமிட்டு பாடல்களைப்பாடியும், இசை மீட்டியவாரும் கோட்டையினுள் சென்ற ஒற்றர்கள் கூர்வாளால் பாரி நெஞ்சில் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவரது மகள்களை அழைத்துசென்ற கபிலர், விச்சிக்கோன் என்னும் சிற்றரசனிடம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி வேண்டுகோள் வைக்கிறார். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள அஞ்சிய விச்சிக்கோன் மறுத்துவிடவே, அவர்களை ஒரு அந்தனரிடத்தில் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உயிர்விடுகிறார் கபிலர். பாரி மகளிர் இருப்பதையறிந்த ஒளவையார், அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று திருக்கோவலூரை ஆண்டுவந்த மலையமான் திருமுடிக்காரிக்கு மணமுடித்து வைக்கிறார்.

தர்மபுரி எனப்படும் தகடூரை ஆண்டுவந்த அதியமான் நெடுமான் அஞ்சியின் நாட்டை தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய தொண்டைமான் இளந்திரையன் போருக்கு ஆயத்தமாகிறான். போரால் பெரும் உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படும் என்றெண்ணிய அதியமான், ஒளவையாரை தூதனுப்புகிறார். இளந்திரையனைச் சந்தித்த ஒளவை அவனது படைக்கலக் கொட்டிலைப் பார்வையிட்டுவிட்டு அவை வரிசையாக அடுக்கிவைத்து அழகாக இருப்பதாகவும் அதேநேரத்தில் அதியமானின் படைக்கருவிகள் தொடர்ந்து போரில் ஈடுபடுவதால் கொல்லர் பட்டறையில் கிடப்பதாகவும் கூறி இளந்திரையனுக்கு போரில் ஈடுபட்டால் தோல்விதான் ஏற்படும் என இடித்துரைத்துப் போரை தடுத்துவிடுகிறார். ஆனாலும் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை தன்மீது போர் தொடுத்துவிடுவானோ என்று அஞ்சிய அதியமான், ஆயர் தலைவனான கழுவுள் என்பவனோடு இணைந்து இரும்பொறையின்மீது போர் தொடுக்கிறான்.

அரசன் உறங்கும் முரசுக்கட்டிலில் உறங்குவோருக்கு மரணதண்டனை உண்டென்றாலும் களைப்பினால் அதில் உறங்கிவிட்ட மோசிகீரனார் புலவர் என்பதால் அவரை எழுப்பாமல் கவரி வீசிய இரும்பொறைக்கு அதியமான் மீது சினமேற்பட்டு போருக்கு ஆயத்தமானான். இரும்பொறையின் அரசவையிலிருந்த புலவர் அரிசில்கிழார், அதியமானுக்கு நிச்சயமாக தோல்வி ஏற்படும் என்பதையறிந்து அவனைச் சந்தித்து போரை தவிர்க்கும்படி வேண்டுகோள் வைக்கிறார். அதை புறந்தள்ளிய அதியமான் போரில் ஈடுபட்டு மடிகிறான்.

மயில் போர்த்திக்கொள்ளாது என்று தெரிந்தும் அதற்கு போர்வை தந்த பேகன் மனைவியை மதித்து வாழாததை கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றூர் கிழார் போன்றோர் இடித்துரைத்தும் கேளாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து மடிகிறான்.

இதையெல்லாம் சமகால அரசியல் சூழலில் பொருத்திப்பார்த்தால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நீங்களே பொறுப்பு.

நண்பர் ஜெயநாதன் எழுதியதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்

“படை பெருத்ததால் பார் சிறுத்ததோ
பார் சிறுத்ததால் படை பெருத்ததோ”

ஜெயங்கொண்டார், கலிங்கத்துப்பரணியில் இதைச் சொன்னாலும் சொன்னார், மேடைக்கு மேடை, பார்த்தாயா தமிழனின் புஜபல பராக்ரமத்தை என்று கொக்கரிப்பு எங்கும்.
விஷயத்துக்கு வருவோம். தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னன், குலோத்துங்கன். அவன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான் என்ற கேள்வி பொதுவாக கேட்கப்படுவதில்லை. Iron Man, Hulk, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற கற்பனை வீரசாகச படங்களை பார்த்து வளர்ந்த சமூகம் போரிற்கான விலையை யோசிப்பதில்லை. போர் என்பது ஏதோ, தொடையை தட்டி என் மச்சினிச்சிக்கு மஞ்சள் அரைத்தாயா, என்னை எதிர்க்க உங்களிடம் திராணி இருக்கிறதா போன்ற உப்பு பெறாத கேள்விகளை கேட்பது என்று எண்ணுகிறார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம் வளரும்பொழுது, நமக்கு கூறப்பட்ட கற்பிதங்கள் அப்படி. அது தான் அவர்களை நரம்பு புடைக்க பேசும் எவரையும் நம்ப வைக்கிறது, நயமாய் பொய் சொன்னாலும், உரக்கச் சொன்னால் அதற்காக உயிரை கொடுக்க வைக்கிறது.
ஆக, குலோத்துங்கன் ஏன் கலிங்கம் மீது போர் தொடுத்தான், யார் மீது போர் தொடுத்தான்?
அவன் போர் தொடுத்தது, ஆனந்தவர்மன் சோட கங்கன் மீது. இன்னும் தெளிவாய் கூறவேண்டுமானால், ஆனந்தவர்மன் சோட கங்கனின் தாய் வழி மாமன் முதலாம் குலோத்துங்கன். காரணம், வரி கட்டாதது.
ஆக, இரத்த சம்பந்தம் கொண்ட இரண்டு உறவினர்கள் அடித்துக்கொண்டு, பின்னர் படை பெருத்ததால் பார் சிறுத்ததோ, பார் சிறுத்ததால் படை பெருத்ததோ என்று உயர்வு நவிற்சி அணி சொட்ட சொட்ட நயமாய் மண்டப கவிஞரை கவி பாட வைத்திருக்கின்றனர் கலிங்கத்துப்பரணி என.
எனது கவலை, அந்த அத்துவான கலிங்க காட்டில் தங்கள் உயிர் நீத்த பெருத்த படை குறித்து, இந்த வரிகளை வீரத்தின் அடையாளமாய் நம்பிக்கொண்டிருக்கும் அண்ணனின் விழுதுகள் குறித்து.
இதை எழுதிய பின், வரும் பெருத்த பயம், கீழை கங்க நாட்டின் ஆனந்தவர்மன் சோட கங்கன் சோழ வம்சத்துடன் இரத்த சம்பந்தம் கொண்டிருந்த தகவலை இங்கு பதிந்தமையாலும், அவன் தான் உலகப் புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தை எடுப்பித்து கட்டினான் என்ற வரலாற்று உண்மையினாலும்.
யாருக்கு தெரியும். நாளையே தம்பிகளின் தம்பிகள், நம்மில் இது எத்தனை பேருக்கு தெரியும் – கலிங்கம் ஆண்ட வீர பரம்பரை நம் சோழ பரம்பரை என்று WhatsApp இல் களமாடினாலும் ஆச்சரியம் இல்லை. அகண்ட பாரதம் போல் அகண்ட தமிழகத்தை வென்றெடுப்போம் என்று இவர்கள் கிளம்பினாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.
அதுவும் சரி தான். மெய்நிகர் உலகில், இணையத்தில் போர் செய்ய, புரட்சியை வித்திட எதற்கு வீரமெல்லாம்.

#அட்டகத்தி #மாமன்மருமகன்சண்டை #கலிங்கத்துப்பரணி

திருவோட்டுக்காய்

‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த பிச்சைப்பாத்திரம் ‘திருவோட்டுக்காய்’ எனப்படும் Beggar’s Bowl அல்லது Calabash tree மரத்தின் விதைதான். Crescentia cujete என்ற அறிவியல் பெயருடன் Bignoniacea குடும்பத்தை சேர்ந்தது. இதன் ஒரு குறிப்பிடத்தக்க பண்பு என்னவென்றால் Cauliflorus flowers – அதாவது வளரும் குருத்தில் பூ உண்டாகாமல் தண்டுப்பகுதியில் உண்டாகும். வௌவால் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று காய் உண்டாகிறது (பப்பாளி, பலா மரங்களும் தண்டுப்பகுதியில் காய் வைக்கக்கூடியவை என்றாலும் அதன் மகரந்தச்சேர்க்கைக்கு வௌவால்கள் தேவையில்லை).

நம்மூர் பருவநிலைக்கு சாதாரணமாக வளரக்கூடியது. அறிவியல் பெயருடன் இருக்கும் படம் பேராசிரியர் Balasubramani Venkatasamy அவர்களால் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி வளாகத்தில் எடுக்கப்பட்டது. ஏனைய படங்கள் கோயமுத்தூரில் எடுக்கப்பட்டவை. காய்களை கிட்டத்தட்ட ஒருமாதம் காயவைத்து, அறுத்து விதைகளை எடுத்து வைத்திருக்கிறேன். முளைக்கவைத்து பின்னர் தனியாக படத்தை ஏற்றுகிறேன். ஏதாவது வித்தியாசமான மரங்களை வளர்க்க விரும்பினால் முயற்சித்து பாருங்கள். வீட்டில் திருவோட்டுக்காய் விதை/மரங்கள் இருக்ககூடாது என்ற மூட நம்பிக்கையை யாரேனும் சொல்லக்கூடும். அதில் உண்மை ஏதுமில்லை. முருங்கை, இலவம்பஞ்சு போன்றவை வீட்டுக்கருகில் இருக்கக்கூடாது என்பதற்கு காரணம் அதன் கிளைகள் சாதாரணமாக காற்றடித்தாலே முறிந்துவிழுந்து ஆபத்தை உண்டாக்கும் என்ற காரணம்தான்.

தினத்தந்தியில் வந்த தகவல்களில் பாதி தவறானது. வேண்டுமானால் இந்த லிங்கில் பார்க்கலாம். https://www.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/1031777490172197/?type=3&theater
அப்புறம் உலகத்திலேயே பெரிய விதை எது என்ற சிறுவர்மலரில் அடிக்கடி வரும் பொது அறிவு கேள்விக்கான விடையும் ஒரு படத்தில் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த ‘லொடைசியா மால்தீவிக்கா’ விதை கோவையில் காஸ் வன அருங்காட்சியகத்தில் (Gass Forest Museum) இருக்கிறது.

மாமனார் வீட்டில் தண்ணீர் தொட்டிக்கடியில் உட்கார்ந்து அந்த காய்களை சுரண்டிக்கொண்டிருந்தபோது அந்தப்பக்கமாக வந்தவர் “என்ன பண்றீங்க” என்றார். “திருவோடு ரெடி பண்ணிட்டுருக்கிரனுங்” என்றதும் அமைதியாக சென்றுவிட்டார். சிலவினாடிகள் கழித்துதான் இடம், பொருள் அறியாமல் பேசக்கூடாது என்று புரிந்தது!