Professionally Managed Companies – நமது நிலைமை என்ன?

நிறுவனம் ஒன்றை உண்டாக்கி ஆரம்பகட்டத்தில் சிறப்பாக நடத்திச்செல்லும் புரமோட்டர்கள், இந்தியாவைப் பொறுத்தவரை Professionalism என்ற ஒன்றை கடைசி வரைக்கும் பின்பற்றாமல் வீட்டுக்குப் பின்னால் ஆடு மாடு கட்டும் தொண்டுப்பட்டி மாதிரியே கம்பெனி நடத்தி கடைசியில் அதைக் கொண்டுபோய் குப்புற கவிழ்த்து, தான் பாடையில் போகும்போது “சேர்மன், அ.ஆ.இ.ஈ. குரூப் ஆஃப் கம்பெனீஸ்” என்று மாலையாகப் போட்டுக்கொண்டு போய்விடுகின்றனர். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் படிப்படியாக கம்பெனி மூடப்பட்டு விடுவதோ அல்லது விற்கப்பட்டுவிடுவதோதான் பெரும்பாலும் நடக்கிறது.

ஆரம்பத்தில் பங்குதாரர்கள் சிலர் இணைந்து பார்ட்னர்ஷிப் அல்லது பிரைவேட் லிமிடெட் கம்பெனி ஆரம்பிப்பது, மேற்கொண்டு முதலீடு போட்டு விரிவுபடுத்துவது இலாபத்தைக் கூட்டி புதிய அலகுகளை நிர்மானம் பண்ணுவது வரைக்கும் பங்குதாரர்களின் தனிப்பட்ட நடத்தை, சுய ஒழுக்கம், வெளியுலக பழக்கவழக்கங்களே நிறுவனத்தை முன்னோக்கி எடுத்துச்செல்கிறது.

வங்கிகளில் கடன் வாங்கி விரிவுபடுத்தும்போதும், யாரேனும் ஒரு பங்குதாரர் ஒத்துழைப்பு தராமல் சொதப்பும்போதும் அவருடைய பங்குகளை மற்றவர்கள் வாங்கிக்கொண்டு வெளியேற்றும் கட்டம் வரைக்கும் கம்பெனி மீது பங்குதாரர்களுக்கு ஒரு intimate பற்று இருப்பதில் தவறேதுமில்லை.

என்னிடம் நல்ல வியாபார யோசனையும், சந்தை வாய்ப்பும் இருக்கிறது ஆனால் போதுமான மூலதனம் இல்லை என்று சொல்லி, பங்குகளை விற்று மற்றவர்களுடைய மூலதனத்தை உள்ளே கொண்டுவரும்போது கம்பெனி மீதான புரோமோட்டருடைய பற்று குறைந்து Professional Management-க்கு மாறும் பழக்கம் இந்தியாவைப் பொறுத்தவரை கிடையவே கிடையாது.

பணம் போட்டு பங்குகளை வாங்கியவன் தனது முதலீட்டுக்கு ஈவுத்தொகை எவ்வளவு வரும், பங்கு மதிப்பு எப்படி இருக்கும் என்று கணக்குப்போடுவது இயல்பு. அதிலும் 25%-க்கு கீழான பங்குகளை வைத்திருக்கும் புரமோட்டர் அன்றாட நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கிக்கொண்டு ஆலோசனை வழங்குவதோடு நிறுத்திக்கொள்வதே நல்லது. என்றைக்கு முகம் தெரியாத நபர்களுக்கோ, முதலீட்டு நிறுவனங்களுக்கோ பங்குகளை விற்கிறோமோ அன்றே நம்முடைய தார்மீக உரிமை போய்விடுகிறது. பணம் போட்டவன் கேள்வி கேட்கத்தானே செய்வான்?

ஊரான் வீட்டுப் பணத்தை வாங்கி முதலீடு செய்துவிட்டு பின்புறமாக இலாபத்தை உருவி வாரிசுகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் காரியங்களில் இறங்கிய பெரிய மனிதர்கள் பலர் மேற்கு மாவட்டங்களில் உளர். ஆலை அங்கத்தினர்களுக்குப் போகவேண்டிய பணத்தில் பத்து பத்து ரூபாயாக பிடித்தம் செய்து கோவிலுக்கு ஜீரனோத்ர மஹா கும்பாபிஷேகம் செய்துவிட்டு பரிவட்டத்தையும் வாங்கிக்கொண்டதோடு ஒரு “சிறப்பு பட்டம்” ஒன்றையும் பெற்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்ட தொழிலதிபரின் கதை கோயமுத்தூர்ப் பக்கம் பிரபலம்.

கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி (CSR) என்ற பெயரில் எட்டணாவுக்கு சமூக சேவையும் அதற்கு இரண்டு ரூபாய்க்கு விளம்பரமும் பண்ணிக்கொண்டு இருப்பதோடு, கம்பெனி ஆரம்பித்த காலத்தில் இருந்த தனது எடுப்பு தொடுப்புகளின் வாரிசுகள் வைத்திருக்கும் Foundation-களுக்கு நிதி உதவி அளித்து கம்பெனி பேலன்ஸ் ஷீட்டிலேயே சின்ன வீட்டைப் பராமரித்துவந்த பெரிய முதலாளி வைகுண்ட பிராப்தி அடைந்த பிறகு நிர்வாகத்துக்கு வரும் வாரிசுகளுக்கு இந்த நுணுக்கங்களெல்லாம் புரியாது. மிக அதிக விலைக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து கச்சாப்பொருட்கள் தொடர்ந்து வாங்கப்பட்டுக்கொண்டிருக்கும். அல்லது ஏதாவது ஒரு வெண்டர் என்ற பெயரில் மாதாமாதம் பில் பட்டுவாடா செய்யப்பட்டு வந்திருக்கும்.

பெரிய முதலாளியின் இரதசாரதிக்குத் தெரிந்த இந்த இரகசியங்களெல்லாம் சின்ன முதலாளிக்குத் தெரியாது அல்லது புரியாது. Restructuring என்ற பெயரில் பல செலவினங்களில் கிடுக்குப்படி போடும்போது கம்பெனியின் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் பிரச்சினைகள் கிளம்பும். எதற்கு பிரச்சினை வருகிறது என்றே தெரியாமல் குடும்பத்திலும் குழப்பம் உண்டாகும். அடுத்த ஐந்து பத்து ஆண்டுகளில் கம்பெனி மூடப்படும் அல்லது விற்கப்படும். இந்தியா முழுவதும் நடந்துவரும் வழமையான வழக்கம் இது.

SME வகையறா நிறுவனங்களில் பங்குதாரர்களுடைய குடும்பத்தினரின் தலையீடே பெரும்பாலும் கம்பெனியை முட்டுசந்துக்குக் கொண்டுவந்து நிறுத்துகிறது. முப்பது வயதில் ஆரம்பித்து நாற்பது வயதுவரை சிறப்பாகநடத்திவந்த கம்பெனியில் பங்குதாரர்களுடையை அப்பா, அம்மா அல்லது மனைவி வந்து நிர்வாகத்தில் தலையிடும்போது அதன் சரிவு தொடங்கிவிடுகிறது. வளர்ச்சிக்காக ஆலோசனை சொல்வதற்கும் அன்றாட நிர்வாக முடிவுகளில் தலையிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்தியர்கள் பிரித்துப் பார்ப்பதே இல்லை. நாற்பது வயது மகனுக்கு ‘உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மா இர்றா’ என்று உட்கார வைத்து ஆலோசனை வழங்குவது இந்திய அப்பாக்களுடம் உள்ள சிறப்பு.

இந்த நூற்றாண்டில் இருக்கும் அரசியல், தகவல் தொழில்நுட்ப சூழ்நிலைகளில் ஒரு நிறுவன நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என்று சிறப்பான ஆலோசனைகளை வழங்கும் நூல்களுள் ஆகச்சிறந்த ஒன்று, Tom Peters எழுதிய Re imagine. ஒரு பெரிய நிறுவனத்தை உண்டாக்க வேண்டும், மிகப்பெரிய அளவுக்கு அதை எடுத்துச்செல்ல வேண்டும் என்ற வேட்கையுடையவர்கள் அவசியம் அலுவலக நூலகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒன்று. புத்தகம் என்றால் முதல் அலகிலிருந்துதான் படிக்க வேண்டும் என்ற கட்டமைப்பையே உடைத்து எங்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் என்று எழுதப்பட்டது.

இன்றைய millenials நிறுவனங்களை உண்டாக்கி வளரும் வேகத்துக்கும் அவர்களுடைய அணுகுமுறையைப் புரிந்துகொள்ளவும் Re-imagine வாசிக்க வேண்டிய ஒன்று.

படத்திலிருக்கும் கட்டுரை Business Standard நாளேட்டில் அண்மையில் வந்தது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *