உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்னும் மாய மான்!

உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் என்பது வழக்கம்போல ஒரு கண்துடைப்பு, நிச்சயமாக take off ஆகாத மாடல் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவற்றின் பிரச்சாரம் உச்சத்தில் இருந்தபோது நான் குறிப்பிட்டபோதெல்லாம் பலர் – குறிப்பாக academia மக்கள் – என்னை வறுத்தெடுத்தார்கள். வயல் வரப்புகளுக்கே சென்றிராத ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் ஓய்வூதியதாரர்கள் ஆனபிறகு அவர்களது NGOக்கள் மூலம் “சேவை” செய்வதற்கு மக்கள் வரிப்பணத்தைப் பயன்படுத்துவதைத் தாண்டி இவற்றால் பலன் ஒன்றும் விளையப்போவதில்லை.

சாதிச்சிக்கல், உள்குத்து, வெளிக்குத்து போன்ற எதுவும் இல்லாத உழவர்சந்தை மாடல்களே நடைமுறையில் எளிமையான தீர்வுகள். கர்னாடகாவும் ரயத்பஜார் என்றபெயரில் இதே மாடலை வைத்திருக்கிறது. உழவர்சந்தை மாடலை இன்னும் மேம்படுத்தலாமே தவிர அதைவிட எளிமையான மார்க்கெட்டிங் மாடலை விவசாயிகளிடம் செயல்படுத்துவது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று. Value addition, supply chain management, cold storage போன்றவை நேரடியாக விவசாயிகளால் செயல்படுத்த முடியாதவை; அதிக முதலீடும், சந்தை தேடுதல்களும் திரும்பவும் இடைத்தரகர்களை ஊக்குவிக்கும் செயலாகவே அமையும்.

End to end integration என்பதெல்லாம் விவசாயத் தொழிலில் கனவாகவே இருக்கிறது. ஈஷா போன்ற கம்பெனிகள் கூட உழவர் உற்பத்தியாளர்கள் கம்பெனியை ஊக்குவிக்கின்றனவே என்ற கேள்வி எழக்கூடும். அலுவலக சூழலிலும், தனிப்பட்ட குடும்ப வாழ்விலும், சமூக அமைப்பிலும் ஒரு சராசரி மனிதனாகத் தன்னைப் பொறுத்திக்கொள்ள முடியாத தற்குறி ஸம்ஸப்தகர்கள் ஊரான்வீட்டு காசில் நடத்துவதை உதாரணம் காட்டுவதே தவறான ஒன்றாகும்.

தற்போதைய டிரென்டிங் “உழவர் உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட்” (Farmer Producer Company Ltd.). முதல் இரண்டு ஆண்டுகள் அவை நபார்டு வங்கியின் தாங்கலில் இயங்கும். பின்னர் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். தேவைப்பட்டால் இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். 2020-இல் எத்தனை உஉக லிமிடெட் வெற்றிகரமாக இயங்குகிறது, எத்தனை மூடப்பட்டது என்று பார்ப்போம்.

Will Farmer Producer Organizations address Agrarian distress?

கூடு திரும்புதல் என்ற பெயரிலான சமகால சூழலியல் பயங்கரவாதம்

தாராபுரத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றபோது நாட்டுக் கடுகு விதைக்க தன்னார்வலர்கள் தாராபுரம் வருவதாக அங்கிருந்த துண்டேடுகள் சொன்னது.

கடுகு தமிழகத்தில் வர்த்தக ரீதியாகவோ, வீட்டுப் பயன்பாட்டுக்காகவோ விளைவிக்கப்படுவதில்லை. அப்படியே யாராவது முயற்சித்தாலும் வணிகரீதியாக வட இந்தியாவில் வளரும் இரகங்களை வாங்கி பயிரிடுவார்கள். அத்தகைய பயிர் அறுவடைக்குப் பின்னர் பிசிறில்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் (அழிந்தும்விடும்). நாட்டுக் கடுகு இரகங்கள் என்பது பரவலாக வர்த்தகரீதியிலான சாகுபடியில் இல்லாதவை. ஆனால் wide adaptability உடையவை என்பதால் பலதரப்பட்ட பருவ சூழலிலும் தாக்குப்பிடிக்கவல்லவையாகவே இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகு இரகத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நாட்டுக் கடுகு இரகத்தை தமிழ்நாடு முழுவதும் திரு. ம. செந்தமிழன் அவர்களின் சீடர்கள் விதைத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு டன் அளவிலான விதை பரப்பப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் உயிர்ச்சூழலில் இல்லாத ஒரு தாவரம் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு பரந்த தகவமைப்புத்திறன் இருக்கும்பட்சத்தில் அங்குள்ள இயல்பான உள்ளூர் தாவரங்களைக் காட்டிலும் மிக வேகமாகப் பல்கிப் பெருகி ஆக்கிரமித்துக்கொள்ளும். அழகுச் செடியாக அறிமுகப்படுத்தப்பட்ட Lantana camara செடி இன்று காடுகளுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கிறது (கமென்ட்டில் படம் இருக்கிறது). தெரியாமல் வந்திறங்கிய பார்த்தீனியம், விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது குறித்து பெரிய விளக்கம் தேவையில்லை.

மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து நாட்டுக் கடுகு இரகங்களை விதைப்பதாக இருந்தால் பஞ்சாப், இராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சென்று ஊர் ஊராக விதைத்திருக்க வேண்டும். தமிழகத்துக்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கும் சம்பந்தமே இல்லாதபோது அதை எதிர்ப்பதாகச் சொல்லி, புழக்கதில் இல்லாத, எந்த விதத்திலும் தேவையும் இல்லாத நாட்டுக் கடுகு இரகங்களை பரப்புவது என்பது தெரிந்தே ஒரு புதிய களைச்செடியை அறிமுகம் செய்யும் செயலாகும்.

ஒரு நாட்டுக்குள் நாசகார கிருமிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை அனுப்பி மக்களை நூதனமாகக் கொல்வது Bio terrorism எனப்படுகிறது. மக்களை நேரடியாகக் கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் உத்திகள் ஒருவகையான மறைமுக bio terrorism ஆகும். அதில் களைச்செடிகளைப் பரப்புதல், ஆபத்தான பாசி, பூஞ்சாணம், மீன் இரகங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

தற்சமயம் சந்தையில் இருக்கும் ஒரே systemic, non-selective, post emergent herbicide என்பது மான்சாண்டோவின் Roundup (கிளைஃபோசேட்) மட்டுமேயாகும். தமிழகத்தில் இன்று வலிந்து திணிக்கப்பட்டுவரும் நாட்டுக் கடுகுச்செடிகள் களையாக மாறி விவசாய நிலங்கள், ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமிக்கும்போது ரவுண்டப் தெளிக்காமல் கட்டுப்படுத்தவே இயலாது எனும்போது களைக்கொல்லி வர்த்தகம் யாருக்காக நடக்கும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையிருக்காது. கடுகுச்செடியினை களையாகக் கருதி அதை அழிப்பதற்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல் என வேளாண்மைத்துறையினரின் நேரம் மட்டுமல்லாது அதை சீராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை எவ்வளவு பேரின் நேரத்துக்கும், மக்களின் வரிப்பணத்துக்கும் வீண் விரயம் வர இருக்கிறது என்பதை சமூகப் பொறுப்புள்ளவர்கள் அறிவார்கள்.

கடுகு குறித்த உரையுடன் விதைச் சட்டம் குறித்தும் திரு. ம. செந்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றை பேஸ்புக்கில் கேட்க நேரிட்டது. அதன்படி விதைச் சட்டம் என்பது விவசாயிகளை நசுக்கும் ஒரு கொடுங்கோல் சட்டம் என்று பேசுகிறார். அதை 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்த வேண்டியிருந்தது. விவசாயிகள் ஒருவருக்கொருவர் இலவசமாக விதைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்; அதில் எந்த சட்டரீதியான தடையும் இல்லை. ஆனால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு விற்றால் விதைச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது, இது பெரிய மோசடி என்ற ரீதியில் பேசுகிறார். விவசாயம், வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு, உற்பத்தியாளர் பாதுகாப்பு, அரசாங்க கட்டுப்பாடுகள், வரி போன்ற எதுவுமே தெரியாத ஒருவரால்தான் அவ்வாறு பேச முடியும். தினந்தோறும் நாம் சந்திக்கும் நபர்களில் யாராவது இவ்வாறு பேசினால் மொக்கை ஆசாமி என்றோ, அறுவைக் கேசு என்றோ சொல்லி, பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பிப்போம்.

விதைகளை உற்பத்தி செய்தவர் விற்பனை செய்யும்போது வியாபாரி ஆகிவிடுகிறார். வியாபாரம் செய்யும்போது எடை, தரம், எண்ணிக்கை என பலதரப்பட்ட விசயங்கள் கணக்கில் வருவதோடு அரசாங்கத்துக்கு அதில் வரி வருவாயும் கணக்கில் வந்துவிடுகிறது. ஊருக்குள் விதை விற்பனை செய்பவர் பெரிய நாட்டாமையாக இருந்து வாங்கிபவர் சாதாரண ஆளாக இருந்து, விதையானது எடை குறைவாகவோ, முளைப்புத்திறன் குறைவாகவோ இருந்தால் வாங்குபவருக்கு பாதுகாப்பு சட்டம் இல்லாமல் போனால் எப்படி கிடைக்கும்? விற்பவர் சாதாரண நபராக வாங்குபவர் பெரும்புள்ளியாக இருந்து, அந்த நபர் பொய்யாக எடை குறைவாக இருக்கிறது, முளைக்கவில்லை என்று தகராறு செய்தால் விற்பவருக்கு சட்டம் இல்லாமல் போனால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? நாளையே திரு. செந்தமிழன் போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் விற்கும் விதை முளைக்கவில்லை அல்லது எடை குறைவு என்று யாராவது புகார் செய்தால் சட்டம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? சட்டப்படி கணக்குவழக்கு இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு வரி வருவாய் எப்படி கிடைக்கும்?

தந்தை மகனுக்கோ, மகளுக்கோ அவரது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை எழுதி வைக்கும்போது கூட அரசுக்கு செலுத்தவேண்டிய குறைந்தபட்ச முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒரு விவசாயி (தன் மகனாக இருந்தாலும்) இன்னொரு விவசாயிக்கு நிலத்தை எழுதிவைக்க எதற்காக கட்டணம் செலுத்தவேண்டும் என்று நாம் கேட்பதில்லை. ஆனால் திரு. செந்தமிழன் அவர்கள் கேட்கக்கூடும். ஏனென்றால் சுற்றுச்சூழல் போராளிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள்; எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

ஆயிரம்தான் நாம் விமர்சனம் செய்தாலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை இந்தியாவிலேயே சிறப்பான ஒன்று. தமிழகத்தில் ஏன் வட இந்தியாவைப்போல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றால் அதில் பல ஆயிரக்கணக்கான வேளாண் அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய Compliance சுமை தமிழகத்தில்தான். ஒவ்வொரு நிகழ்வையும் நெருக்கமாக கவனிப்பதும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன், தொழில் முனைவோருடன் அரசு அதிகாரிகள் நல்லமுறையான தகவல் தொடர்புகளைப் பேணுவதிலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்னோடிகளாகவே திகழ்கின்றனர். மற்ற மாநிலங்களில் வேளாண்மைத்துறை, விவசாயப் பல்கலைக்ககழக அதிகாரிகளுடன் நெருங்கி பணிபுரிந்த பலருக்கும் இது தெரியும். பூச்சிக்கொல்லி, உரம், விதைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை தீவிரமாக மதித்து அமுல்படுத்தும் மாநிலங்களுள் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கிறது.

சூழலியல் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் நாட்டு இரகம், வனம் வளர்ப்பு என்று கிளம்பிவரும் மறைமுக உயிரியல் தீவிரவாதம் நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கவல்லது.

மாதொருபாகன் சாகித்ய அகாடமி விருது சர்ச்சை – போலி சாதிப் பெருமை பேசும் அன்றாடங்காய்ச்சிகள்

மாதொருபாகன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான One Part Woman-க்கு சாகித்ய அகாடமி விருது வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கிளம்பியிருக்கிறது. பெண்களின் கண்ணியத்துக்கு களங்கம் வரும்படி நாவலில் சில பகுதிகள் உள்ளதாக நம்புகிறார்கள். இதில் 99.9% ஆட்கள் அந்த சர்ச்சைக்குரிய இரண்டு பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு கூவுகிறார்கள். அப்படியெல்லாம் பார்த்தால் இராமாயணம், மகாபாரத்தைவிட பெண்களை இழிவாக பாவிக்கின்ற நூல்கள் இருக்கவே முடியாது.

திருச்செங்கோடு மலையடிவாரத்தில் ஒரு தெருவைத் திருவிழா நாளின்போது தேவடியாள் தெரு என்றே மக்கள் சொல்வதாகவும், அன்றைய தினம் அங்கு வரும் அனைவருமே தேவடியாள்தான் என்று மக்கள் எளிதாக எடுத்துக்கொள்வதாகவும் கதையின் போக்கில் வருவதுதான் பிரச்சினை. அதை செவிவழி வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் எழுதியதாக ஆசிரியர் தெரிவிக்கிறார். அதற்கு ஆதாரம் இல்லாதபோது அஃது ஒரு கற்பனைக் கதையாகிவிடுகிறது. கதை மாந்தர்களான காளியும் பொன்னாளும் கவுண்டர் என்பதற்கு பதிலாக வன்னியர் என்றோ, நாயக்கர் என்றோ இருந்திருந்தால் கேள்வியே வந்திருக்காது.

திருச்செங்கோட்டு மலைமீது ‘வறடிக் கல்’ இருப்பதையும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அதை சுற்றிவந்து வணங்கினால் குழந்தை உண்டாகும் என்பதும் ஒரு நம்பிக்கை என்பதைச் சுற்றிலும் கதை நகர்கிறது. திருச்செங்கோட்டுத் தேர்த் திருவிழா மட்டுமல்ல பல ஊர்களிலும் திருவிழாக்கள் என்பது வெறும் சாமி கும்பிடும் நிகழ்வன்று. வேளாண் குடிகளின் ஓய்வுக்காக, களிப்பிற்காக, வணிக வாய்ப்புகளுக்காக, திருமண ஏற்பாடுகள் செய்ய, கால்நடைகள், நிலங்கள் வாங்க விற்க என ஒரு பெரிய பண்பாட்டு அசைவாகவே இருந்திருக்கின்றன. சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, தேர்களின் மீது ஒருசாரார் உட்கார்ந்துகொள்ளவும் மற்றவர்கள் இழுக்கவுமான காலகட்டம்வரை திருவிழாக்கள் என்பது மக்களுக்கானதாக இருந்து, கடவுளுக்கானதாக மாறிவிட்டிருக்கிறது.

கோயில் திருவிழாக்களில் பாலியல் சீண்டல்கள், crushகள், காதல்கள், காமங்கள் எல்லாம் part of the game. இதையெல்லாம் பார்த்தேயிறாதவர்கள் நிச்சயமாக ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை. அப்படியெல்லாம் எங்க ஊர் திருவிழாவுல இல்ல தெரியுமா என்று சொல்வதாக இருந்தால் தயவுசெய்து என்னை அன்ஃபிரன்ட் செய்துவிடவும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகளின் மனதில் பாலியல் வக்கிரங்களை விதைத்த குற்ற உணர்ச்சிக்கு நான் ஆளாக நேரிடும்.

கவுண்டர் சமூகம் என்பது ஒரு மிக உயர்வான கற்பு நெறிகளைக் கொண்டதாகவும் அதை நாவல்களில், கற்பனைக் கதைகளில்கூட சீண்டக்கூடாது என்பதும் கொங்கு கவுண்டர் சமுதாய அடிப்படைவாதிகளின் வாதம். கடுமையாக உழைத்து ஒரு குடும்பம் முன்னேறி கொஞ்சம் வசதி வாய்ப்போடு வாழப்பெற்றால் அக்குடும்பத்திலுள்ள பெண்களின் கற்பொழுக்கத்தை உறவினர்களே கேலி செய்து நகைப்பது கவுண்டர் சாதியினரின் ஒரு peculiar trait. ‘எல்லாம் காலைத் தூக்கி சம்பாரிச்சதுதான’ என்று ஒரு குடும்பத்தின் உழைப்பை, தன்னூக்கத்தைக் கேவலமாக பேசும் வழக்கம் வேறு எந்த சாதியினரிடத்தும் காண முடியாத ஒன்று. இதை நான் சந்தித்த கவுண்டர் சாதியினரில் யாருமே மறுத்ததில்லை.

நோ, நோ, எங்க சாதிசனத்துல அப்படியெல்லாம் கிடையாது என்று மறுப்பவர்கள் வீரமாத்திகளின் வரலாறு, அண்ணமார் கதை என எதுவுமே தெரியாமல் மீசைய முறுக்கு போன்ற பாட்டு கேட்டு வளர்ந்த சுள்ளான்களாக இருப்பார்கள்.

நம்மைச் சுற்றிலும் எல்லாமே பரந்து விரிந்து கிடக்கிறது. நமக்குத் தெரியவில்லை என்பதற்காக அப்படி எதுவுமில்லை என்று ஆகிவிடுவதில்லை. ‘மரப்பல்லி’ நாவலில் டெக்ஸ்டைல் மில்லுக்கு வேலைக்கு போகும் இரண்டு பெண்கள் லெஸ்பியன் உறவில் விழுவதையும், அதில் ஆதிக்கம் செலுத்தும் பெண் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதையும் வா. மு. கோமு இயல்பாக எழுதியிருப்பார். ஊத்துக்குளி பகுதியில் வரும் இந்த கதையில் பெண்ணியவாதிகளின் மனம் ஏற்றுக்கொள்ளவே முடியாத சில விசயங்கள் இயல்பாக வந்துபோகும். பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதற்காக அவை இல்லை என்றாகிவிடா. ஊத்துக்குளியின் பெயரில் லெஸ்பியன் கதையா என்று ஒரு கும்பல் கிளம்பி அவரிடம் சண்டைக்குப்போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வா. மு. கோமுவின் ‘சயனம்’ நாவலும் கவுண்டர் பந்தாவின் பலவற்றை இயல்பாக உடைத்துச்செல்லும். மற்றபடி அன்பும், பண்பும், ஈகையும், தர்மமுமாக வாழ்ந்து வருவது கவுண்டர் சாதி என்று பேஸ்புக்கில் மீம்ஸ் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம்.

மாதொருபாகன், குழந்தை இல்லாத தம்பதிகளை உறவினர்கள் அவமதிக்கும் பல நிகழ்வுகளை பதிவு செய்திருப்பதோடு, சொத்துப்பிரச்சினையின் பல பரிமாணங்களையும் பேசுகிறது. காளியின் சித்தப்பா பாத்திரம் பல ஜீரணிக்க முடியாத உண்மைகளை பேசுகிறது. அது மட்டுமல்லாது அர்த்தநாரி, ஆளவாயன் நாவல்களும் முக்கியமானவை.

வழக்கம்போல பல தேசபக்தர்கள் இதில் புகுந்து விளையாடியதால் ஹிந்து மதப் பிரச்சினை என்று சில பத்திரிகைகள் எழுதியது. ஆனால் திருச்செங்கொட்டை அடுத்த நாமக்கல், பரமத்தியிலெல்லாம் ‘இந்து மதப் பிரச்சினையா, அப்படின்னா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

புத்தகம் எழுதி இரண்டு வருடமாகியும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் திடீரென்று பெண்கள் மீது பாசம் பொங்கி வழிந்தது எப்படி? அரசியல் கேரியர் வளர்ச்சிக்காக ஈமு கோழித் திருடர் (ர் – ரெஸ்பெக்ட்) ஒருவரால் பிடுங்கப்பட்ட தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் வன்னியர்களுக்கும், கவுண்டர்களுக்கும் அடிதடியாகி நீதிமன்றம் வரை சென்றது தனியரசு முதன்முறை எம்எல்ஏ ஆன தேர்தல் முடிவுகளின்போதுதான். ஒவ்வொரு ஊராக தனியரசு படம் போட்ட போர்டு வைக்கும் முன்புவரை அங்கு கவுண்டர்களுக்கும், பட்டியலினத்தவருக்குமான மோதல் என்பது மிக அரிதான ஒன்று. தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையால் அந்த பகுதியில் சாதிய ரீதியிலான தேவையே இல்லாத உரசல்களைத் தாண்டி கவுண்டர் சாதிக்கான மூன்று நான்கு பலன்களை யாராவது பட்டியலிட்டால் இந்த பதிவை நீக்கிவிடவும் தயார்.

கொங்கு டா, கவண்டன் டா என்று சொல்லித் திரியும் சில பல சில்லறைப்பயல்களுக்கு எலும்புத்துண்டுகளை வீசியெறிந்து பல ஊர்களுக்குள் தேவையே இல்லாத பிரச்சினைகளை உண்டாக்குவதில் அமெரிக்காவாழ் கொங்கு கவுண்டர் சாதிச்சங்க கழிசடைகளில் சிலருக்கு முக்கிய பங்குண்டு.

மாதொருபாகன் ஒரு பிரச்சினையே இல்லை. அது பெண்களின் கற்புக்கு களங்கம் விளைவிக்கும்வண்ணம் உள்ளது என்று சொல்லும் நபர்களின் உண்மையான ஆதங்கமெல்லாம் பெண் என்றால் ‘ஏனுங் மாமா கூப்டீங்ளா, காப்பித்தண்ணி போட்டாரனுங்ளா?’ என்று கேட்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்த கூட்டமாகத்தான் இருக்கும். மற்றபடி கற்புக்கு விளக்கு பிடிக்கும் டகால்ட்டி எல்லாம் சும்மா.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அந்தக் காலத்தில் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் கோவில்களுக்கு இருந்தன. அவை எப்படி பிராமணர்களுக்கு அதிகாரப்பூர்வமாக கிடைத்தன, அவர்கள் எப்படி கவுண்டர், நாயக்கர் சமூகத்திற்கு விற்றார்கள் என்பதை பொதுவெளியில் பேசினால் வரலாற்று ஆதாரம் இருக்கிறதா என ஒரு கும்பல் கிளம்பி வருவார்கள். (பேக்கரி டீலிங் அக்ரிமென்ட்தானே என்பவர்கள் பிளாக் செய்யப்படுவார்கள்).

பின்குறிப்பு: பரமத்திவேலூர் எனது சொந்த ஊர் என்பதோடு மேற்கு மாவட்டங்களில் மிக விரிவாக பயணம் செய்து வருபவன் என்ற முறையில் இங்குள்ள சாதியக் கட்டமைப்பு எனக்கு நன்றாகத் தெரியும். மற்றபடி நான் எந்த சாதி என்ற ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

எங்கள் கிராமத்தின் பரிணாம வளர்ச்சி

ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வாத்து-கா-கெபாப் உண்ட கையோடு ஒரு புள்ளிவிவரத்தை தயார்செய்து குறுக்கும்நெடுக்குமாக ஓட்டியதில் சில தகவல்களை குறிப்பிட்டாக வேண்டும் என்று தோன்றியது.

எங்கள் ஊரில் மொத்தமே முப்பது வீடுகள். அதிலும் சில வீடுகள் தோட்டங்களில் உள்ளன. அந்த காலத்தில் பிராமணர்களிடம் இருந்த நிலம் என்பதால் அரசாங்க ரெக்கார்டுகளில் இன்னமும் அக்ரஹார மணப்பள்ளி என்றுதான் இருக்கிறது. அதன்பின் யாரும் நிலங்களை விற்கவோ வாங்கவோ இல்லையென்றாலும் பாகப்பிரிவினை பத்திரங்களில் எல்லாம் கைநாட்டுகளை மட்டுமே பார்க்கமுடியும். முதன்முறையாகவும் கடைசியாகவும் கி.பி. 2001-இல் தார்சாலை போடப்பட்டது.

சராசரி நில உடைமை என்பது சுமார் ஐந்து ஏக்கர்கள், விவசாயம் மட்டுமே பிரதானத் தொழில், வங்கிகளில் கடன் வாங்கி வட்டி கட்டியே வாழ்க்கையை ஓட்டி வந்தனர். ஜெர்சி/சிந்து மாடுகள், எருமைகள், ஆடுகள் இல்லாத வீடு கிடையாது. அதிகபட்ச கல்வித்தகுதி SSLC பாஸ் அல்லது பெயில். பெரும்பாலான பெண்கள் ஐந்தாவது முதல் எட்டாவது வரை படித்தவர்கள், கணிசமான எண்ணிக்கையில் கைநாட்டும் இருக்கிறார்கள். அவர்களது வாரிசு தலைமுறையானது குடும்பக்கட்டுப்பாட்டு பிரச்சாரங்கள் வெற்றிகரமாக செயல்படும்போது ஏற்பட்ட Baby boom மூலமாக 80-களின் இறுதியில், 90-களில் பள்ளி செல்ல ஆரம்பித்தவர்கள். அவர்களது திருமண காரணங்களுக்காகவே பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டன. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பல வீடுகள் விறகு அடுப்பிலிருந்து இலவச கேஸ் இணைப்புத் திட்டம் வாயிலாக LPG சிலிண்டருக்கு மாறியது.

ஊருக்குள் எங்கள் தலைமுறையின் தற்போதைய கல்வித்தகுதியையும் அதன் எண்ணிக்கையையும் கீழே பார்க்கலாம்.
Ph.D – 1
M.V.Sc – 1
M.Sc Agri – 1
M.E. – 1
M.Phil – 1
M.Sc – 7
B.E – 9
B.A – 4
B.Sc – 2
B.B.A – 1
Diploma – 2
+2 – 4
SSLC – 1

அரசாங்க உத்தியோகம், ஆன்சைட், கார்ப்பரேட் வேலை, சொந்தத்தொழில் என வாரிசுகள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டதால் பழைய ஆட்களே விவசாயம் செய்துவருகின்றனர். வெயில் அதிகமாக இருக்கிறதாம்; அதனால் ஒவ்வொரு வீடாக ஏசி பொருத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மூன்று கோடைகளுக்குள் அனைத்து வீடுகளும் ஏசி வந்துவிடும்போல தெரிகிறது. ஆல்ட்டோ, ஸ்விஃப்ட், i20, xuv500, பென்ஸ் கார்கள் புழுதியைக் கிளப்பியவண்ணம் வந்து செல்கின்றன.

கூரை கூட இல்லாமல் பிள்ளையார் என நடப்பட்டிருந்த இரண்டு மூன்று கற்சிலைகளுக்கு நடுவில் அவ்வப்போது நாய்கள் படுத்துக் கிடக்கும். கடந்தவருடம் கோயில் கட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டு ஶ்ரீ செல்வ விநாயகர் என பெயரிடப்பட்டதுடன் கர்ப்பகிரஹத்துக்குள் ஐயரைத் தவிர ஊர்க்காரர்கள் செல்வது தடை செய்யப்பட்டுவிட்டது. பண்டாரம் மணியடிப்பது ஆகம விதிகளுக்குப் புறம்பானது என்பதால் எப்போதாவது ஒருமுறை வந்து சென்றவரும் நிறுத்தப்பட்டுவிட்டார். அமாவாஸ்யை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி என மாதத்தில் மூன்று நான்கு நாட்களுக்கு ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ என ரேடியோசெட்டு ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்குமளவுக்கு பாடுகிறது.

எல்லைக்கருப்பன் இப்போது ஶ்ரீ எல்லை கருப்பனார் சாமி ஆகி கோழி, கிடா வெட்டவேண்டாம் சரக்கரைப்பொங்கல் போதும் என்று சொல்லிவிட்டது. ஜெர்சி, எருமைப் பாலைவிட நாட்டுமாட்டுப்பால் உடலுக்கு நல்லது என்பதால் நாட்டுமாடுகள் வளர்க்க ஆரம்பித்திருக்கின்றனர். சைக்கிள், TVS50-களைவிட ஆக்டிவா, ஸ்கூட்டிகளில் சென்றால் உடம்புவலி ஏற்படுவதில்லையாம். மோடி நிர்வாகம் செம்மையாக இருப்பதாகவும் தமிழகத்தில் பாஜக இல்லாமல் போனது பெரிய இழப்பு என விஷேசங்களின்போது வெற்றிலைபாக்கு குதப்பியவாறே கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவாறு அளவளாவுகின்றனர்.

இதையெல்லாம் பார்த்தபிறகு பாஜக ஆளும் மாநிலங்கள் போல தமிழகமும் ஆக வேண்டும் என்று எனக்கும் தோன்றுவது ஆச்சரியமில்லைதானே?

ஆந்திராவின் கடியம் பகுதியிலுள்ள நர்சரிகள் – குறிப்புகள்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கடியம் பகுதியில் 1950-களில் அண்ணன் தம்பிகளுக்கு சொத்து பிரிக்கும்போது ஊனமுற்ற தம்பி ஒருவருக்கு வெறும் அரை ஏக்கரைக் கொடுத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை அண்ணன்கள் வைத்துக் கொள்கின்றனர். அவருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அரை ஏக்கர் கிடைத்ததே என்று ஏற்றுக்கொள்கிறார் திரு. பல்ல வெங்கண்ணா. விதவிதமாக பல செடிகளை பதியனிட்டு, தொட்டிகளில் அடைத்து வளர்த்து விற்பனை செய்ய ஆரம்பிக்கிறார். நல்ல தரம், தொழில் சுத்தம் காரணமாக அவரது செடிகளை பலரும் வாங்கிச்செல்ல ஆரம்பிக்க கொஞ்சம் கொஞ்சமாக நாற்றங்காலை விரிவுபடுத்துகிறார். சொந்தமாக நிலம் வாங்குகிறார். தமிழ் சினிமாவில் வருவதுபோல கடின உழைப்பால் சில ஆண்டுகளில் அண்ணன்களை அசால்ட்டாக மிஞ்சிச் செல்கிறார் பல்ல வெங்கண்ணாகாரு.

இன்று கடியம் பகுதியில் 600-க்கும் மேற்பட்ட நர்சரிகள் 20000-க்கும் அதிகமான தொழிலாளர்களுடன் தொழிற்சாலை கணக்காக இயங்கி வருகின்றன. கடியம் நர்சரி என்று கூகுளிட்டால் வரும் முதலில் வரும் ஸ்ரீ சத்யநாராயணா நர்சரி பல்ல வெங்கண்ணாவால் ஆரம்பிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அந்த நர்சரி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, ஊனமுற்ற ஒருவரால் ஒரு பிராந்தியத்தின் அடையாளமே மாறி விட்டிருக்கிறது.

இந்தியா முழுக்க பலவகையான அலங்காரச் செடிகள், மரக்கன்றுகள், மரங்களை கடியம் பகுதிதான் அனுப்பி வைக்கிறது. உங்கள் பகுதியில் இருக்கும் ஏதாவது நர்சரியில் விசாரித்துப் பார்த்தால் ஆந்திராவில் இருந்து வருகிறது என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த அலங்காரச் செடி தொழிலில் 70-80% ஆந்திர சப்ளைதான்.

நகரங்களில் சாக்கடை தோண்டுவதற்கு மரங்களுக்குப் பின்னாலும், அலைபேசி சேவைகளுக்காக மரங்களுக்கு முன்னாலும் தோண்டி போதுமான அளவுக்கு பக்கவாட்டு வேர்களை அறுத்துவிடுகிறார்கள். விளம்பரத் தட்டிகள் தொங்க விடுவதற்கு ஆணி அடித்து, அது துரு ஏறி, ஒரு நல்ல நாளில் மரத்தின் மையப்பகுதியில் துளை உண்டாகி ஒரு மிக நல்ல நாள் பார்த்து வாகனங்கள் மீது விழுகிறது. சில உயிர்களை அவ்வப்போது பலி வாங்குகிறது.

சாலை விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டி அகற்றப்படும் மரங்களை வேரோடு தோண்டி எடுத்துச்சென்று பிறிதொரு இடத்தில் நடுவதை ஏதோ வேள்வி போலவும், சாதனையாகவும் ஒருசாரார் கொண்டாடி வருவதைப் பார்க்க முடிகிறது. இருபது முப்பது ஆண்டுகள் வளர்ந்த ஆணிவேரை சில அடி ஆழத்தில் வெட்டிவிட்டு எடுத்துவிட்டு வேறொரு இடத்தில் வைத்தால் மறுபடியும் அதே வலுவில், பருமனில் ஆணி வேர் வளருமா, பாதுகாப்பானதா என்பது ரூபாய் நோட்டை மாற்றிவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடு்மா என்பதைப் போன்ற பதில் இல்லாத கேள்வியாகும்.

கிட்டத்தட்ட இருபது அடி உயரமுடைய மரங்களை 3×3 அடி அளவுள்ள பைகளில் வளர்த்து 500-1000 ரூபாய் விலையில் கடியம் நர்சரிகளில் விற்கின்றனர். கோடிக்கணக்கான ரூபாய்களை சாலை விரிவாக்கப் பணிகளுக்காக செலவிடும்போது ஓரிரண்டு இலட்சங்களை தரமான பெரிய மரக்கன்றுகளுக்காக செலவிடுவதில் தவறில்லை. மேலும் சிறிய மரங்களுக்கான வேலி செலவு, ஆடு மாடுகள் தொந்தரவு என எதுவும் கிடையாது என்பதோடு நடப்பட்ட அனைத்து மரங்களும் அடுத்த சில ஆண்டுகளில் கிட்டத்தட்ட முழு மரங்களாகிவிடும். 100% survival இருக்கவும் சாத்தியம் அதிகம். நிச்சயமாக ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்துச்சென்று நடுவதற்கு ஆகும் செலவை விட குறைவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பின்குறிப்பு:
1) TQM என்றால் என்னவென்றே தெரியாத மக்கள் என்றாலும் அந்த அளவுக்கான உற்பத்தித்திறனை அங்குள்ள தொழிலாளர்கள் வெளிப்படுத்துவதால் ஆர்கானிக் நர்சரி கசமுசாவெல்லாம் அங்கு கிடையாது.

2) ஆணிவேரை கணிசமாக வெட்டிவிட்டு மரத்தை வேரோடு பிடுங்கிவந்து வேறிடத்தில் நடும் eco green orgasmic கோஷ்டிகளோடு எனக்கு எந்த பஞ்சாயத்தும் கிடையாது; அதனால் எங்கேயும் கோத்துவிட வேண்டாம்.

ஜெயமோகனுக்கு ஒரு பதில் கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு நான் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவை மேற்கோள் காட்டி திரு. கே. அவர்கள் உங்களுக்கு வரைந்த கடிதத்தையும் அதற்கான உங்கள் பதிலையும் வாசித்தேன். இதற்காக நேரமெடுத்து உங்களது கருத்துகளைப் பதிவு செய்தமைக்கு நன்றி. அதுகுறித்து சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

(பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு எழுதிய கடிதம்: https://www.rsprabu.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/75/

ஒத்திசைவு இராமசாமி அவர்களின் வலைப்பூ பதிவு: https://othisaivu.wordpress.com/2017/07/09/post-750/

ஜெயமோகன் அவர்களின் பதிவு: http://www.jeyamohan.in/100321#.WXmWGVThWf0 )

விஷ்ணுபுரம் அமைப்பு சார்பாக நம்மாழ்வாரின் வாகனம் அமைப்புக்கு நன்கொடை திரட்டி அளிக்கப்பட்டதை திரு. கே நினைவுகூர்ந்ததையும், அதற்கு பதிலளிக்க நீங்கள் கவனமாக மறந்துவிட்டதையும் என்னைப்போலவே பலர் கவனித்திருக்கக்கூடும். ஏதாவது ஒன்றின்மீது நமக்கு அதீத பிரியம் ஏற்படும்போதுதானே நிதியுதவி அளிக்கப் புறப்படுவோம். அதைச்சார்ந்த பலவும் பொதுவெளிகளில் விமர்சனத்துக்குள்ளாகும்போது ஒரு தர்மசங்கடமான சூழல் உருவாவதையும் அதற்காக பலவாறாக புரியாத வாசகங்களால் முட்டுக்கொடுப்பதையும் இணையம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறது. வந்தேறி, ஒறவுகளே, தந்திரோபாய பின்னகர்வு போன்றவையும் இதில் அடங்கும்.

/இந்தியவேளாண்மையைப் புரிந்துகொள்ளாமல், வெறும் கல்விக்கூடநிபுணர்களால் கொண்டுவரப்பட்ட பசுமைப்புரட்சியின் எதிர்விளைவுகளை நாம் இன்று அனுபவித்து வருகிறோம். நான் விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயம் செய்தவன். அவ்வனுபவத்தில் சொல்கிறேன்./

/இன்று வாழைக்காய்க்குள் நேரடியாக குலைக்காம்பு வழியாக யூரியாவும் பூச்சிமருந்தும் செலுத்தப்படுகின்றன. அதை நாம் உண்கிறோம். கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு வயல்வழியாக காலைநடை செல்லமுடியாது. தும்மலும் மயக்கமும் வரும்.பலநோய்களுக்கு இதுதான் காரணம். அதைக்கொண்டு ஒரு மாபெரும் மருத்துவ வணிகம் கட்டி எழுப்பப் பட்டுள்ளது/

/இடுபொருட் செலவு மிகுந்து விவசாயம் அழிந்துவிட்டது. தமிழகத்தின் தென்பகுதியில் நீங்கள் பயணம்செய்தால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் சும்மா போடப்பட்டிருப்பதைக் காணலாம். பருத்தி காய்கறி விளைந்த நிலங்கள். மாற்றுத்தொழில் வந்தால் விவசாயத்தை மக்கள் விட்டுவிடுகிறார்கள். இதுதான் இந்திய யதார்த்தம். விவசாயம் பொய்க்கிறது, மறுபக்கம் விவசாயநிலத்தில் வாழ்வதனால் வரும் நோய்கள். அதன் மட்டுமீறிய செலவு. அதன் விளைவான கடன், தற்கொலை./

இந்த வரிகளையெல்லாம் படித்தவுடனே “பசுமைப் புரட்சியின் கதை” என்ற நூலுக்கு தாங்கள் எழுதியிருந்த முன்னுரை நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்திரப்பதிவுத் துறையில் முழுநேர ஊழியரான உங்கள் அப்பா, விவசாயப் பட்டதாரியாக இருந்தாலும் தபால்துறையில் ஊழியரான உங்கள் மனைவி, நீங்களும் அரசாங்க உத்தியோகஸ்தராக பாதுகாப்பான வருமானத்துடன் வாழும்போது பசுமைப்புரட்சி வெறும் கல்விக்கூட நிபுணர்களால் கொண்டுவரப்பட்டதாக தெரிவதில் ஆச்சரியமில்லை.

வாழைக்காய்க்குள் குலைக்காம்பு வழியாக யூரியாவும், பூச்சிமருந்தும் செலுத்தப்படுவதாக சொல்கிறீர்கள். யாராவது எதையாவது எங்காவது நூதனமாக செய்துகொண்டு இருப்பதை ஊரே செய்வதாக சொல்லமுடியாது அல்லவா? பூச்சிமருந்தையோ, பூஞ்சாண மருந்தையோ குலைக்காம்பு வழியாக செலுத்த முற்படும் விவசாயிகளை பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை செய்யும் கம்பெனிகளில் வேலை செய்பவர்களே முட்டாள் என்று சொல்லிவிடுவார்கள். வாழை மொட்டு வெளிவரும்போது தேனி, கம்பம் பகுதிகளில் சிலர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் டானிக்குகளை தெளித்துவிடுவது உண்டு; அதற்காக அந்த பிராந்திய விவசாயிகள் அனைவரும் டானிக்குகள், வளர்ச்சி ஊக்கிகளை வரிசையில் நின்று வாங்கிவந்து தெளித்து வாழையை நச்சாக்குகிறார்கள் என்று சொல்வது பல சராசரி சம்சாரிகளை அவுசாரி ஆக்கும் செயலல்லவா?

மேற்கு மாவட்டங்களில் கேரள நர்சுகள் என்றால் ஐட்டம் கேர்ள்ஸ் என்ற மனவோட்டம் நடுத்தர வயது ஆண்களில் பலருக்கு உண்டு. இதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள் என்றால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று இழுத்துக்கொண்டே இருப்பார்கள். பிளாஸ்டிக் அரிசி விற்கிறார்கள், ஜிஎஸ்டி-யால் மளிகைக்கடையில் விலை குறைந்துவிட்டது என்று சொல்பவர்களும் இப்படித்தானே. வாழைக் குலைக்காம்பில் பூச்சி மருந்து செலுத்துவது, காளிபிளவரைப் பூச்சிமருந்துக்குள் முக்கி எடுப்பது எல்லாமே கேரளத்து ஐட்டம் நர்சு கதை மாதிரிதான். எங்காவது விதிவிலக்காக நடைபெறும் சம்பவங்களை சராசரியான நிகழ்வுகளாக்கி நம்மில் எத்தினி பேருக்குத் தெரியும் என்று அடித்துவிடுவதைச் சுட்டிக்காட்டுவதை நான் வழக்கமாகவே வைத்திருக்கிறேன்.

மாற்றுத்தொழில் வந்தால் மக்கள் விவசாயத்தை விட்டுவிடுவது ஒன்றும் நடக்கக்கூடாத ஒரு நிகழ்வன்று. பாதுகாப்பான உபரி வருவாய் இருப்பவர்களே விரைவாக விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள்; அவ்வகையில் தென்மாவட்டத்தினர் தேர்ந்தெடுத்தது ஓரளவுக்கு பாதுகாப்பான வேலை வாய்ப்புகளை என்பதால் அந்த மாற்றம் கண்கூடாக தெரிகிறது. பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டையை தென்னைமரங்கள் நிறைந்த ஊராக மட்டுமே இன்று அனைவருக்கும் தெரியும். அங்கு மட்டுமல்லாது மேற்கு மாவட்டங்களின் தென்னை மரங்களின் சராசரி வயது 25-30தான். அதற்கு முன்பாக பொள்ளாச்சி, சங்ககிரி போன்ற ஊர்கள் கடலை விளைச்சலுக்கு புகழ்பெற்றவை. கடலையில் வரும் சிவப்பு கம்பளிப்புழுக்கள் சாலைகளை மொந்தை மொந்தையாக கடக்கும்போது போக்குவரத்து நிறுத்தப்பட்ட கதைகளை பல பேராசிரியர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். பலவகையான பூச்சிக்கொல்லிகளை அவற்றின்மீது சோதித்துப் பார்க்க MM 540 ஜீப்புகளில் அந்தகாலத்தில் சுற்றிய சிலருடனும் பணிபுரிந்த அனுபவம் உண்டு.

கோவையும், திருப்பூரும் உலகமயமாக்கலை விவசாயக்குடும்பத்தில் இருந்து படித்து வந்த முதல் தலைமுறை இளைஞர்களின் துணையுடனேயே கையாண்டது. அவர்கள் மாற்றுத்தொழிலை நோக்கி சென்றதும் விவசாய நிலத்தை சும்மா போட வேண்டாமே என தென்னை மரத்தை நட்டுவிட்டுச் செல்ல அவை வளர வளர மிக அதிக தண்ணீரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவை தரும் உபரி வருமானம் காரணமாக மக்களும் ஆக்ரோஷமாக இருக்கும் தொழில்நுட்பத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த வருமானத்தை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். அதனால் அடிமடை விவசாயிகள் பாதிக்கப்பட்டது உண்மை. சாயப்பட்டறைகளாலும், தோல்ஷாப்புகளாலும் இதேதான் நடந்தது. தங்களைப் போன்ற நாலும் தெரிந்தவர்களும் கூட அந்த பழியை பசுமைப்புரட்சியின் மீது மட்டும் இறக்கிவைத்து விடுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கவுண்டர் சாதி ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதில் உள்ள சிரமங்களையும் அதற்கான காரணங்களையும் கள ஆய்வுகளோடு Economic & Political Weekly ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது (அதை கமெண்ட்டில் காணலாம்). திருமணத்திற்கு பெண் கிடைக்காத சூழலுக்கும், ஒரு பிராந்தியம் கல்வியில் முதலீடு செய்வதால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களையும், தொழிற்புரட்சியால் விவசாயம் செய்பவர்களுக்கு வரும் சமூக அழுத்தங்களையும் மிகத் தெளிவாக விளக்கும் கட்டுரை அது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் விவசாயம் எப்படி இருந்தது இன்று எப்படி இருக்கிறது என்பதை அறிந்தவர்களுக்கு இஃது எளிதாக புரியும்.

ஆங்கிலேயர்கள் இரயில்வே அமைத்து தானியங்களை எடுத்துச் சென்றதால்தான் இந்தியாவில் பஞ்சம் வந்தது, பூச்சிமருந்து, உரம், வீரிய விதைகள், பசுமைப் புரட்சி, பன்னாட்டு கம்பெனி வியாபாரம், ஃபார்மா கம்பெனி வியாபாரம், தற்சார்பு அழிப்பு, இயற்கை விவசாயம் என்ற பொத்தாம்பொதுவான விவசாய காலம்னிஸ்ட் கட்டுரைகளைச் சார்ந்த தொணியையே நீங்களும் வெளிப்படுத்துகிறீர்கள். விவசாயமும் ஒரு தொழில்தான். சமூக மாற்றங்களை விவசாயத்தொழிலும் உள்வாங்கித்தானே ஆகவேண்டும்.

விவசாயத்தில் பசுக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் பத்தில் ஒருபங்குகூட தலித் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை. அவர்கள் விவசாயத்தொழிலை விட்டு வெளியேறுவதை பெயரளவுக்குக்கூட யாரும் பதிவு செய்ய விரும்புவதில்லை. விதர்பாவில் பி. டி. பருத்தியால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று வரும் கட்டுரைகளில் அங்கிருந்த தலித் மக்கள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் என்ற எந்த விவரமும் இருக்காது. பசுமைப்புரட்சி, பன்னாட்டு ஃபார்மா கம்பெனி வியாபாரம் என்ற குண்டுசட்டியே போதுமானதாக இருக்கிறது.

அறிவியல் ஆதரவு என்பதையும் ஒருவகையான அடிப்படைவாதமாக பாவித்து இதுவும் ஒருவகையான மதப்பூசல் என்று நிறுவுகிறீர்கள். கேள்வி கேட்பவர்களை அறிவியற்பூர்வமாக பேசவில்லை என்று பகடி செய்வதாகவும் இதெல்லாம் ஒருவகையான ஐரோப்பிய சார்பு மனநிலை என்றும் கருதுகிறீர்கள். ஆனால் புனைவுக்கும், அறிவியலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசமே இதுதானே. தவறான வாதத்தை, வார்த்தைகளை, கோட்பாடுகளைத் தவறு என்று சொல்வதுதானே அறிவியல். செம்மெல்வெய்ஸ், கலிலியோ என ஆரம்பித்து லமார்க் வரை எத்தனை எத்தனை சான்றுகள் வரலாற்றில் பரவிக் கிடக்கின்றன.

என்னதான் ஆகச்சிறந்த எழுத்தாளராக இருந்தாலும் தன்னுடைய ஆதர்ச நாற்காலியில் அமர்ந்து பயன்படுத்தும் இங்க் பேனாவையே ஆகாய விமானத்திலும், அண்டார்டிகாவிலும் பயன்படுத்த முடியாது. இதற்கு ஓர் எளிய அடிப்படை அறிவியல் புரிதல் வேண்டும். அதை சுட்டிக் காட்டுபவர்களைக் கூட அறிவியல் மதவாதிகள் என எளிதாக புறந்தள்ளி விடுவது என்பது கிட்டத்தட்ட வாழ்ந்துகெட்ட நாட்டாமையின் மனநிலையின். புத்தக விமர்சனம் எழுதுகிறேன் என்று யாராவது ‘சாரு நிவேதிதாவின் வெள்ளை யானை’ என்றோ ஜெயமோகன் எழுதிய காமரூபக் கதைகள்’ என்று ஆரம்பித்து அதை ஏதேனும் பிரபல ஏடு பதிப்பித்திருந்தால் யாரை முதலில் கடிந்துகொள்வோம்? முட்டாள்தனமான விசயங்களையும், பொய்களையும் பதிப்பித்தாலும் பசுமை விகடனை கவனமாக தவிர்த்துவிட்டு, இருதரப்பையும் ‘டேய் இனிமே ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் பண்ணிகிட்டு இருக்கப்படாது, என்ன, நாஞ்சொல்றது புரியுதா?’ என முடித்து வைத்துவிட்டீர்கள்!

மாசனபு ஃபுகாக்கோவின் ஒற்றை வைக்கோல் புரட்சி படித்ததும் எனக்கு எந்தவிதமான சிலிர்ப்போ, பரவசமோ ஏற்படவில்லை. பள்ளி முடிக்கும்வரை எங்களின் வாழ்க்கையே கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. வேளாண்மைப் பல்கலைக்கழகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அப்போதெல்லாம் எனக்கு தெரியாது. ஃபுகாக்கோவின் இயற்கை விவசாயப் பண்ணை இருக்கும் Matsuyamaவில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு என் நண்பர்கள் பி. எச்.டி-க்கு போனார்கள். சாய்பாபா மகிமைகள், குருடர்கள் பார்க்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் ரேஞ்சுக்கு இங்குள்ளவர்கள் ஃபுகாகோ புராணங்களை இறக்கிவிட்டதால் நானும் அவர்களை அங்கு போய் பார்த்து வரும்படி நச்சரிக்க ஆரம்பித்திருந்தேன். அதிலும் ஒரு வட இந்திய நண்பன் ”தேரி பேன்ச்***” என்று ஆரம்பிக்குமளவுக்கு போய்விட்டதால் நிறுத்திக்கொண்டேன். விவசாயத்தில் மட்டுமல்லாது ஒவ்வொரு துறையிலும் ஜப்பானியர்களைப் பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.

நீங்கள் காரமடை அருகே காட்டுவிளிம்பில் நிலம் வாங்கி விவசாயியாக முயல்வதை ‘பசுமைப் புரட்சியின் கதை’ நூலின் முன்னுரையில் வாசித்தேன். யானை வழித்தடத்திற்கு அருகில், மலை மடுவுகளின் நீர்வழிப்பாதைகளில் வேலி அமைத்து இயற்கை விவசாயம் செய்வது சரியில்லையென்றாலும் தவறென்றாகிவிடாது. அதே பகுதியிலுள்ள நமது இயற்கை விவசாயப் பண்ணைமீது பக்கத்து தோட்டத்துக்காரர் பெட்டிஷன் போட்டுவிட, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆர்கானிக் ஃபார்மிங் செய்கிறோம் என்று விளக்கினோம். நேரில் வந்து பார்த்தவர்கள் ”வெரிகுட் வெரிகுட், உங்களமாதிரி இளைஞர்கள் ஆர்கானிக் ஃபார்மிங் பண்ண வர்றது ஒரு நல்ல ஆரம்பம்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்கள். இப்போதெல்லாம் இந்தமாதிரி ஃபேன்சி வார்த்தைகள் பலரை எளிதாக கவர்ந்துவிடுகிறது.

//”நாம் உருவாக்கி அனுப்பும் வேளாண்மைத் பட்டதாரிகள் நடைமுறையில் வேளாண்மை என்றால் என்ன என்றே தெரியாத அசடுகள். ஆனால் அவர்களுக்குத் தாங்கள் படிக்காத விவசாயிகளை மீட்டெடுக்க வேண்டிய தேவதூதர்கள், ஞானத்தின் அமுதசுரபியுடன் கிராமங்களுக்குச் செல்பவர்கள் என்ற எண்ணம் இருக்கிறது. நம் வேளாண்மையை அழித்ததில் நம் வேளாண் பல்கலைக்கழகங்களுக்கும் அவர்களின் பட டதாரிகளுக்கும் உள்ள பங்களிப்பு சாதாரணமானதல்ல”.// நீங்கள் உதிர்த்திருக்கும் இதே வார்த்தைகளைத்தான் ஹீலர்கள் இன்றைய அலோபதி மருத்துவர்களின் மீது சொல்லி வருகின்றனர். வேளாண்மைப் பட்டதாரியோ, மருத்துவப் பட்டதாரியோ, பொறியியல் பட்டதாரியோ யாராக இருந்தாலும் UG முடித்து வெளியே வருபவர்களின் புரிதல், மனநிலை, அனுபவம் ஒன்றுதான். தஞ்சைப் பெரியகோவிலை மனக்கணக்கில் கட்டிய தமிழனுக்கு இன்று ஒரு சாக்கடை கட்டுவதற்கு ஏகப்பட்ட அளவிகள் தேவைப்படுகின்றன; தமிழனின் கட்டடக்கலையை அழித்ததே இந்த பொறியியல் கல்விதான் என்றும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்ப அந்த கத்திப்பாரா மேம்பாலம் எப்படி நிற்கிறது, மெட்ரோ ரயில் எப்படி சரிந்துவிடாமல் ஓடுகிறது என்று கேட்கவரும் அறிவியல் ஆதரவு அடிப்படைவாதிகளை நாம் புறந்தள்ள வேண்டும். ஏனென்றால் இணையமும், முகநூலும் அந்த மாதிரியான வறண்ட உரையாடல்களுக்கான களம்.

Proprietor, Partnership போலவே Private Limited or Limited என்பதும் different formats of owning a business என்ற எளிமையான விசயங்களைக் கூட நம் இளைஞர்களுக்கு சொல்லித்தராமல் கார்ப்பரேட் சதி என்று விதைக்கிறோம். பிரைவேட் லிமிடெட் கம்பெனிகளில் சம்பளம் வாங்குபவர்களும் கார்ப்பரேட்காரர்களின் சதி என்பது அபத்தமாக இருக்கிறது. கம்பெனி சட்டத்தில் விவசாயிகளே Farmers Producer Company என்றபெயரில் கம்பெனி ஆரம்பித்துக்கொள்ள தனிப்பிரிவு உண்டு. இன்று பல எழுத்தாளர்கள் புத்தகங்களை மின்னூலாக அமேசானில் வெளியிடுகிறார்கள். இதனால் சிறு பதிப்பாளர்கள் என்ன ஆவார்கள், அச்சகங்கள் என்னவாகும், பைண்டிங் தொழில், புத்தகக் கடைகள் என்னவாகும் என்று கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அது தொழில்முறை எழுத்தாளர்களுடைய வாழ்வா சாவா பிரச்சினை; இந்த இடத்தில் மரபு, பாரம்பரியம், இயற்கை வாசிப்பு என்றெல்லாம் பேசக்கூடாது. ஓலைச்சுவடிகளிலில் ஆரம்பித்து, அச்சு கோக்கும் இயந்திரம், மின்சாரம் கண்டுபிடிப்பு என பெரிய பெரிய கட்டுரைகளை புரியாத நடையில் நீட்டி முழக்க ஆரம்பித்து விடுவார்கள்.

விவசாயிகளுக்கும் இதே மாதிரி வாழ்வா சாவா பிரச்சினை இருக்கிறது. நவீனங்களை தனக்கு தேவையான அளவுக்கு உட்கிரகிப்பதில்தான் வெற்றி இருக்கிறது. அல்லது அவர்களுக்கு வேறு தொழிலோ, வருமானமோ இருக்கும்பட்சத்தில் தனது பால்ய காலங்களை சிலாகித்தபடி திண்ணையில் அமர்ந்து தனக்கொப்ப மனநிலையில் இருப்பவர்களுடன் கதைக்கலாம். Jio வருகைக்குப்பிறகு அவர்களது ஒவ்வொரு அறிவிப்பின் வெம்மையும் ஏர்டெல், வோடபோனில் உள்ளவர்களுக்கு புரியும். ஐடியா, ஏர்செல்லில் இருப்பவர்களுக்கு அது நரகம். BSNL-இல் இருப்பவர்களுக்கு ஜியோ என்ற ஒரு புதிய நிறுவனம் வந்திருக்குதாம் என்ற அளவுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்; யூனியன் இருக்கிறது, அது பார்த்துக்கொள்ளும். தொழிற்புரட்சி, அதனால் இந்திய சாதிகளில் ஏற்படும் பொருளியல் நகர்வுகள், உரசல்கள், அனைத்து சாதிகளுக்கும் திறந்துவிடப்பட்ட கல்வி, அதனால் ஏற்படும் எழுச்சிகள் என எதையுமே கவனிக்காமல் பசுமைப்புரட்சியைச் சுற்றிவந்து மணி ஆட்டுவதிலேயே நமது பெரும்பகுதி ஆற்றல் செலவாகிவிடுகின்றது.

இணையமும் முகநூலும் இதற்கென்றே ஆன களங்கள். உண்மையான ஆய்வும் விவாதமும் வேறெங்கோ நிகழ்கிறது என நம்பி ஆறுதல்கொள்வோம்.

அன்புடன்,
பிரபு
27 ஜூலை 2017.

கார்ப்பரேட் விவசாயம் என்பது நடைமுறையில் சாத்தியமா?

கேள்வி: கார்ப்பரேட் விவசாயம் என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே பலர் சொல் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு போருக்கு ஆயத்தமாகும் சூழலில் கள நிலவரம் எப்படி இருக்கிறது? நடைமுறையில் பெருநிறுவனங்கள் விவசாயத்தில் ஈடுபடுமா, விவசாயிகள் ஒப்பந்தக் கூலிகளாக மாற்றப்பட்டு ஒருகட்டத்தில் அப்புறப்படுத்தப்படுவார்களா, சிறு வியாபாரிகளுக்கு, நுகர்வோருக்கு ஏதாவது பலன் உண்டா? வருமான வரி தாக்கல் செய்யும்போதும், விண்டோஸ் மூலமும் விவசாயம் செய்பவர்கள் தாண்டி, உண்மையிலேயே உற்பத்தி செய்யும் விவசாயிகள் இதை வரவேற்கிறார்களா? சந்தையில் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்: பெருநிறுவனங்களால் இந்திய சூழலில் ஒருபோதும் இலாபகரமாக நேரடி விவசாயம் செய்ய முடியாது. விவசாயத்தை விவசாயிகள் மட்டுமே செய்யமுடியும். கூட்டுப்பண்ணையம், கார்ப்பரேட் பண்ணையம் போன்ற ஜிகினா வார்த்தைகள் கட்டுரைகள் எழுத மட்டுமே உதவும். ஒப்பந்த சாகுபடி என்பது வேறு எங்குமே ஓப்பன் மார்க்கெட் இல்லாத நிலையில் ஒருசில நிறுவனங்கள் மட்டுமே வாங்கக்கூடிய பயிர்களுக்கு சாத்தியமாகும். எ.கா. கொக்கோ, வனிலா, ஸ்டீவியா, செர்ரி தக்காளி வகைகள், கெர்கின், ஜுக்கினி, கோலியஸ்.

அரசாங்கம், அரசியலாளர்கள், அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என யாரையுமே நம்பாமல் ஒருவகையான அச்சத்துடன் வாழ்வது இந்தியர்களின் முக்கிய பண்புக்கூறுகளுள் ஒன்று. தங்கத்தை மக்கள் தொடர்ந்து வாங்கி பத்திரப்படுத்துவது இதற்கு ஒரு நல்ல சான்றாகும். இந்த எளிமையான ஒன்றை புரிந்துகொள்ளாமல் மகிந்திரா, ரிலையன்ஸ், பெப்சி போன்ற நிறுவனங்கள் ஒப்பந்த சாகுபடி என்றபெயரில் கையை சுட்டுக்கொண்டதே நடந்தது.

ஒப்பந்த சாகுபடி என்றவுடன் ரேட் கான்ட்ராக்ட் செய்துகொண்டு விலை ஏறினாலும் இறங்கினாலும் ஒரே விலையில் அந்த நிறுவனத்துக்கே விவசாயிகள் விளைபொருளை விற்கவேண்டும், அவர்கள் கொடுக்கும் இடுபொருட்களையே பயன்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் நீதிமன்றத்துக்கு போவதாகச் சொல்லி குண்டர்களை அனுப்பி மிரட்டுவார்கள் ஒருகட்டத்தில் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நிலத்தையே விற்கச் சொல்வார்கள் என்பது மாதிரியான புரிதல் பல விண்டோஸ் விவசாய நிபுணர்களால் வெகு காலமாக பரப்பப்பட்டுவிட்டது (கடன் வாங்கினால் கட்டத்தான் வேண்டும். வட்டி கட்ட இயலவில்லை என்றால் ஒரு நியாயம் இருக்கிறது; அசலையும் தரமாட்டேன் என்று அடாவடி செய்யும் தடித்தனத்தை அறமாக காட்சிப்படுத்துகிறது தமிழ்ச்சமூகம்).

ஒரு விவசாயியை நம்பி அனைத்து இடுபொருட்களையும் கொடுத்து, விளையுமா விளையாதா என்றே தெரியாமல், மற்ற வியாபாரிகள் குறுக்குசந்தில் புகுந்து விளைந்ததை வாங்கிக்கொண்டு போவதைத் தடுக்க எந்த வழியும் இல்லாமல், விளைபொருட்களை வாங்கும்போது இடுபொருட்களுக்கான தொகையை வட்டியில்லாமல் கழித்துக்கொண்டு, விவசாயி உற்பத்தி செய்து வைத்திருக்கும் எல்லா கிரேடு காய்கறிகளை/தானியங்களை வாங்கிச்செல்ல, ஒன்று அந்நிறுவனத்தின் உரிமையாளர் அடிமுட்டாளாக இருக்கவேண்டும் அல்லது கல்லூரி முடித்த பொடுசுகள் ஏதாவது பல்க்காக வென்ச்சர் கேபிடல் நிதி வாங்கி செலவு செய்ய வழி தெரியாமல் market disruption என்றபெயரில் காய்கறி, உணவுதானிய வியாபாரத்திற்கு வந்திருக்க வேண்டும். ஒரு நிறுவனம், 9-5 வேலைநேரம், ஆண்டுக்கு 12% ஊதிய உயர்வு, காப்பீடு, சேமநல நிதி என்ற விதிமுறைகளுடன், உற்பத்தி மீது எந்த உத்தரவாதமும் இல்லாத விவசாயத்தொழிலில் பெருந்தொகையை முதலீடு செய்கிறதென்றால் அதன் தலைமைக்கு வேறு காரணங்கள் இருக்கவேண்டும்.

முதலில் perishable commodities என்ற வகையில் காய்கறிகளின் உற்பத்தியும், சந்தையும் எவ்வாறு செயல்படுகிறது என்று பார்ப்போம். கோயமுத்தூருக்கு அருகில் சுரைக்காய் உற்பத்தி செய்யும் ஒரு விவசாயி அறுவடை செய்து, கழுவி, தரம்பிரித்து, சாக்குப்பைகளில் கட்டி, டெம்போ வாடகை, லோடிங் கூலி, சந்தைக்குச் சென்றதும் அன்லோடிங் கூலி கொடுத்து, ஏலத்தில் கிடைத்த தொகைக்கு மண்டிக்காரருக்கு பத்து சதவீத கமிஷன் கொடுத்து மீதியானதை வைத்துக்கொள்கிறார். மண்டி உரிமையாளர் கிலோவுக்கு குறைந்தது ஒரு ரூபாய் இலாபமாவது வைத்து அருகிலுள்ள சிறு நகரங்களின் மொத்த வியாபாரிக்கு அனுப்புகிறார்; அவரது தலையில் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி இப்போது சுமத்தப்படுகிறது. அதையும் சேர்த்து கிலோவுக்கு ஒரு ரூபாயாவது இலாபம் வைத்து கடைகளுக்கு அந்த வியாபாரி அனுப்புகிறார். திரும்பவும் லோடிங், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, சுங்கக்கட்டணங்கள் வகையறா அந்த கடைக்காரர்களின் தலையில் விடிகிறது. இறுதியாக வாடிக்கையாளர் எல்லாவற்றையும் சுமக்கிறார். கிட்டத்தட்ட GST மாதிரி சங்கிலியில் உள்ள அனைவரும் இன்புட் கிரெடிட் எடுத்துக்கொண்டாலும், விவசாயி மட்டும் இன்புட் எடுக்க முடியாது!

எந்த விவசாய விளைபொருளாக இருந்தாலும் நுகர்வோருக்கு விற்கப்படும் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில்தான் விவசாயிகளிடம் வாங்கப்படுகிறது என்பதே நடைமுறை. சந்தையைக் கட்டுப்படுத்துகிறார்கள், உணவுச் சங்கிலியைக் கட்டுப்படுத்துகிறார்கள் போன்ற வாதங்களை இலுமினாட்டி கோஷ்டிகளே வைத்துக்கொள்ளட்டும். மற்றவர்களைவிட நாம் எந்த இடத்தில் வித்தியாசமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறோம், வாடிக்கையாளர்களுக்கு அதனால் கிடைக்கும் value என்ன என்ற கேள்விதான் ஒரு நிறுவனம் எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதை நிர்ணயிக்கிறது.

இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் ஒரே அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கின்றன. Speciality crops தவிர ஏனைய சாதாரண தானியங்கள், காய்கறி கொள்முதலுக்கு எழுதப்பட்ட ஒப்பந்தம் ஏதும் கிடையாது. கிலோ ஒரு ரூபாய்க்கு சந்தையில் போனாலும் ஐந்து ரூபாய், பத்து ரூபாய் போன்ற ஏதாவது ஒரு குறைந்தபட்ச ஆதார விலையை சீசனுக்கு முன்னரே அறிவித்துவிடுகிறார்கள். அதிகபட்ச விலை அவ்வப்போது சந்தையில் என்ன இருக்கிறதோ அதே விலைக்கு வாங்கிக்கொள்கிறார்கள். நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளின் தோட்டங்களுக்கே சென்று கலந்துரையாடுவதோடு வாகனங்களில் நேரடியாக வந்து எடுத்துக்கொள்கிறார்கள். சாக்குப்பைகள், டெம்போ வாடகை, அன்லோடிங் கூலி, மண்டி கமிஷன் 10%, சந்தையின் சுங்கம் போன்ற எதுவும் கிடையாது. மண்டியில் கிலோ 15 ரூபாய் என்றால் இவர்கள் 17 ரூபாய்க்கு எடுக்கிறார்கள். அவர்களது சில்லரை விற்பனை கடைகளை சென்றடைய கிலோவுக்கு மூன்று ரூபாய் செலவு என்றால் அடக்கவிலை 20 ரூபாய் ஆகிறது. ஐந்து ரூபாய் இலாபத்துடன் 25 ரூபாய்க்கு விற்கமுடியும். Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் மட்டுமே இது சாத்தியமாகும். இலாபம் இல்லாத ஒன்றில் விவசாயிகள் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள்; சித்தாந்தம் வேறு, தொழில் வேறு என்பது அவர்களுக்கு புரியாததல்ல.

கண்ணன் டிபார்ட்மென்டல், ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் மொத்த விற்பனைக் கடைகளாக, சிறு வியாபாரிகளை நோக்கி பயணப்படுவதற்கு இதுதான் காரணம். பெருநிறுவனங்களிடம் கிலோ 25 ரூபாய்க்கு வாங்கும் சிறு வியாபாரி 30 ரூபாய்க்கு விற்றாலே போதுமானது. Traditional channel-இல் 35-45 ரூபாய் அளவில் வாங்கும் நுகர்வோருக்கு இது இலாபகரமானது என்பதுடன் இங்கு அனைவருக்கும் accountability கட்டாயம் என்பதால் வரி ஏய்ப்பும் தடுக்கப்படுகிறது.

இதில் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் கேட்கும் கிரேடு அளவில் இல்லாத விளைபொருளை என்ன செய்வது என்ற ரிஸ்க் விவசாயிகளுக்கு உண்டு. அதை உள்ளூரில் கிடைத்த விலைக்கு தள்ளிவிட்டாக வேண்டும். அந்த கழிவு கிரேடு இல்லாத விளைபொருட்களை உற்பத்தி செய்ய உயர்தர சாகுபடி முறைகளை பின்பற்றியாக வேண்டும் (இந்த இடத்திலிருந்துதான் இப்போது விண்டோஸ் விவசாயிகள் கூவ ஆரம்பிப்பார்கள். பிராய்லர் கோழி போல உற்பத்தியாகும் காய்கறிகள், சுயசார்பு அறுப்பு, ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே…)

கூட்டுக்குடும்பங்களில் இருந்து தனிக்குடித்தன சமூகமாக மாறிவிட்டதால் உணவுப்பொருட்களின் நுகர்விலும் மாற்றம் ஏற்படுவது இயல்பானது. இரண்டு கதவு கொண்ட குளிர்பதன பெட்டிகளைவிட ஒரு கதவுடைய சிறிய குளிர்பதன பெட்டிகளின் விற்பனையே இதற்கு சாட்சி. தர்பூசணி சாதாரணமாக 8-10 கிலோ எடை கொண்டது. நான்குபேர் உள்ள குடும்பத்திற்கு 10 கிலோ எடையுள்ள தர்பூசணியை வண்டியில் கட்டிக்கொண்டு சென்றால் அந்த பழம் தலையிலேயே உடைக்கப்பட வாய்ப்புண்டு. அதனால் Icebox, Personal size segment என்ற பெயர்களில் வந்ததுதான் கருப்புநிறத்தில், அதிக சுவையுடன் இன்று சந்தையில் நீள்வட்ட வடிவில் கிடைக்கும் தர்பூசணி பழங்கள்.

நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாங்கும் திறன், கலாச்சார ரீதியிலான உணவு சார்ந்த மாற்றங்கள், அரசின் கொள்கை முடிவுகள் போன்றவற்றை அனுசரித்துதான் சந்தை தன்னை தகவமைத்துக் கொள்கிறது. ஒரு சில நிறுவனங்கள் எல்லாவற்றையும் கபளீகரம் செய்து அழித்தொழிக்கும் என்பதெல்லாம் இந்தியர்களின் இயல்பான அவநம்பிக்கையினால் தோன்றும் மனப்பிராந்தியாகும். வாய்ப்பு இருந்தால் வியாபாரம் செய்ய தனிநபர்களோ, நிறுவனங்களோ தோன்றுவதும் காணாமல் போவதும் இயல்பான நிகழ்வுகள். அமேசான், பிளிப்கார்ட் வந்தபிறகு இந்தியாவின் வியாபாரமே மாறிவிட்டது என்று சொல்லமுடியாது அல்லவா?

கார்ப்பரேட் விவசாயத்திற்கு எதிர்ப்பு ஆனால் விவசாயிகளின் நலன் பாதிக்கப்படக்கூடாது என்ற பொதுக்கருத்து இடையில் இருக்கும் தரகர்களையே பாதுகாத்து வருகிறது. பலதரப்பட்ட புரோக்கர்களையும், ஒட்டிண்ணிகளையும் அரசாங்கத்தால் விரட்ட முடியவில்லை என்ற சூழலில், வாங்கி விற்கும் ஒரு சாதாரண சேல்ஸ் & மார்க்கெட்டிங் வேலையை செய்யவரும் நிறுவனங்களை நிலத்தை எழுதி வாங்க வந்த பன்னாட்டு பகாசுரன்கள் என்று பில்டப் கொடுப்பவர்கள் உண்மையில் புரோக்கர்களின் வளர்ச்சிக்கே பாடுபடுகிறார்கள். தலைவாசல், எடப்பாடி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், தென்காசி மார்க்கெட்டுகளில் புழங்கியவர்களுக்கு இது எளிதில் புரியும்.

கல்யாணத்திற்கு மளிகை, காய்கறி வாங்கி, கணக்குவழக்கு பார்த்த அனுபவமுடையவர்கள் மிக இதை உணர்ந்திருக்கலாம்.

மாதொருபாகன், கிளாசிக் கற்பு நெறிகள், சமகால சைக்கோக்கள்

பக்தியை ஒரு ஓரமாக தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் மகாபாரதம் கற்றுக்கொடுக்கும் பலவும் நாகரிக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட/தவிர்க்கவேண்டிய கூறுகள்தான்.

பெரும்பாலான பக்திசார் கதைகளும் கீழ்த்தரமானவையாகவே இருக்கின்றன. பெண்கள் குளிப்பதை எட்டி பார்ப்பதையும், ஆடைகளை எடுத்து ஒளித்து வைத்து விளையாடுவதையும் நம் குழந்தைகளுக்கு சொல்லித்தர முடியுமா?

ஏ ஆணாதிக்க சமூகமே என்று என்டர் கவிதைகள் எழுதினாலும் சிறுவயது முதலே பெண் என்பவள் ஆணின் சொத்து, ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் படுக்கைக்குக் கூப்பிடலாம் அதுவும் படிநிலையில் கீழ்சாதியாக இருந்தால் அதில் கேள்வியே கிடையாது, ஒழுக்கம் கற்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான், ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால்கூட அவனது தாயின் ஒழுக்கத்தைக் சந்தேகப்படவேண்டும் என்பதுபோன்ற சிந்தனைகள் பக்தியின் பெயராலேயே வளர்த்தெடுக்கப்படுகின்றன.

தனிமனித ஒழுக்கம் தவிர ஒரு தரமான ஆக்க சிந்தனைகளுடன் கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்கத் தேவையான கருத்துக்களை கொண்டிருக்கிறதா என்றால் அதுவுமில்லை. கிட்டத்தட்ட எல்லா பக்தி புராணங்களும் தனிமனித சுரண்டலை, அடிமைத்தனத்தை, பெண்களை சொத்தாக பார்க்கும் மனநிலையை, கேள்வியே இல்லாத கீழ்படிதலை ஆதரிப்பதும், போரை fancy-ஆக, fantasyஆக romanticize செய்கின்றன.

பெரிய நிறுவனங்களின் தரக்கட்டுப்பாட்டுத் துறையில் ஒரு பிரபல கதை உண்டு. ஒருமுறை IBM நிறுவனம் முதன்முறையாக கணிணி சில்லுகளை தயாரிக்க அமெரிக்காவுக்கு வெளியே ஜப்பான் நிறுவனம் ஒன்றிற்கு ஆர்டர் கொடுத்துப் பார்க்கலாம் என்று நினைத்ததாம். பரீட்சார்த்த முறையில் தரும் முதல் ஆர்டர் என்பதால் ஒரு லட்சம் சில்லுகளுக்கு பத்து சில்லுகள் மட்டுமே defect piece ஆக இருக்கலாம் என்ற நக்கலான குறிப்புடன் ஆர்டர் கொடுத்ததாம். ஜப்பான் நிறுவனம் ஒரு இலட்சம் சில்லுகளை தயாரித்து அனுப்புகையில் ‘எங்களுக்கு அமெரிக்காவின் வர்த்தக விதிமுறைகள் புரியவில்லையா அல்லது உங்களது ஆங்கிலம் புரியவில்லையா என்று தெரியவில்லை. ஒரு மில்லியன் தயாரிப்புகளுக்கு ஒரு defect piece என்பதுதான் எங்களது அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட அளவு. எனவே நீங்கள் கேட்ட ஒரு இலட்சம் சில்லுகளோடு பத்து defect சில்லுகளைத் தனியாக தயாரித்து பேக் செய்து அனுப்பியிருக்கிறோம்; பெற்றுக்கொண்டதற்கான ஒப்புகை அனுப்பிவைக்கவும்’ என்று இருந்ததாம். அத்தகைய உயர்ந்த தரத்தை ஒரு நிறுவனம் கொண்டிருக்கவேண்டுமனால் அது பண்பாட்டுக் கூறாக மக்களிடம் இருக்கவேண்டும். இல்லையெனில் நிறுவனத்தின் மதில் சுவருக்குள் மட்டும் இருக்கும் தரக்கட்டுப்பாட்டுக் கொள்கைகள் ஒருபோதும் வெற்றிபெறாது. நம்மூரில் சிக்ஸ் சிக்மா, 5S, TQM என பலவற்றை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் ஏன் பெரும் பொருட்செலவு செய்கின்றன என்பதற்கு நமது பண்பாட்டுக் கூறுகளும் ஒரு காரணம்.

ஏன் என்ற கேள்வி பகுத்தறிவில் மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்விலும், விளைவுகளுக்குப் பின்னரும் கேட்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அது உண்டாக்கும் implications எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

ஏன் சீதை இராமனுடன் வனவாசம் போனாள்? கணவனின் எந்த முடிவையும் கேள்வியில்லாமல் ஏற்றுக்கொண்டதால். ஏன் இராமன் காட்டுக்குச் செல்ல ஒப்புக்கொண்டான்? தசரதனின் எந்த ஒரு வேண்டுகோளையும் அவன் சீர்தூக்கிப் பார்த்தோ, மறுத்தோ பேசாமல் ஏற்றுக்கொள்ளும் பழக்கத்தால். ஏன் தசரதன் இராமனை காட்டுக்கு அனுப்பினான்? கைகேயி பெற்றிருந்த இரு வரங்களில் ஒன்றை நினைவூட்டி கேட்டு, இராமனது முடிசூட்டுவிழாவை நிறுத்துவதற்குத்தான். ஏன் தசரதன் அத்தகைய வரங்களை கைகேயிக்கு வழங்கினான்? வெகு காலத்துக்கு முன்பு நடந்த போரில் காயமடைந்த தசரதனுக்கு கைகேயி உதவியதன் கைமாறாக இரண்டு வரங்களை அளித்திருந்தான். சிறந்த போர் வீரனான தசரதன் ஏன் போரில் காயமடைந்து கைகேயி உதவும் நிலைக்கு ஆளாகிறான்? போரின்போது எதிர்பாராதவிதமாக தசரதனது தேர்ச்சக்கரம் உடைந்துவிடுவதால் எதிரியின் தாக்குதலுக்கு ஆளாகிறான். அந்த தேர்ச்சக்கரம் உடையாமல் இருந்திருந்தால் இத்தனை லோலாயி நடந்திருக்காதல்லவா? ஆக, சக்கரம் தயாரித்தவர்கள் தரத்தில் கோட்டை விட்டதுதான் இத்தனை இரகளைகளுக்கும் காரணம். இதைத்தான் மேலாண்மையில் Root cause analysis என்பார்கள். தரமில்லாத ஒரு பொருளைத் தயாரித்தால் எதிர்காலத்தில் இந்த மாதிரி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நம் குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்காமல் லீலை என்று தேவையில்லாத கண்ட கருமாந்திரங்களை சொல்லியல்லவா வளர்க்கிறோம்.

இதையெல்லாம் சொன்னால் திருக்குறளில் காமம் இல்லையா, அகநானூறில் காமம் இல்லையா என்று பக்தாஸ்கள் ‘புதிய பரிமாணத்தில்’ கேள்வி கேட்டு சிலிர்க்க வைக்கிறார்கள். மாட்டுக்கறி தின்பது இந்துமத உணர்வுகளுக்கு விரோதமானது என்று உண்பவர்களைக் கொல்லச்சொல்லி தூண்டி விடுபவர்கள் ஏன் மாட்டுக்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்துகிறார்கள் என்ற Root cause analysis செய்வதெல்லாம் அவர்களால் நினைத்துப்பார்க்கவே முடியாத ஒன்று.

மாதொருபாகன் மேட்டரில் இவ்வளவு சத்தம் வரக் காரணம் ஒரு தெருவில் இருக்கும் கவுண்டர் சாதி பெண்களை மொத்தமாக தேவடியாள் என்று சொல்கிறது; அது தனிமனித உரிமை மீறல் என்கிறார்கள். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதியதாக சொன்ன ஆசிரியர் அதற்கான ஆதாரங்களைத் தரவில்லை என்றார்கள். ஆதாரமில்லாமல் இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது என்கிறாரகள். ஆதாரமில்லையெனில் அது ஒரு புனைவு; கற்பனைக் கதை. இதே கவுண்டர் சாதி அந்த பகுதியில் பறையர், சக்கிலியர் சாதியினரை எப்படி நடத்தினார்கள், நடத்தி வருகிறார்கள் என்பதைப்பற்றி பல நூல்கள் வந்திருக்கின்றன. தங்களது பண்பாடுகள் மிக உயர்வானது என்று சொல்லும் இனமான சிங்கங்கள் பேருக்காவது நாங்கள் அப்படியெல்லாம் தரக்குறைவாக யாரையும் நடத்துவதில்லை என்று சொல்லியிருக்கிறார்களா?

ஈமு கோழி திட்டங்கள் சுத்தமான ஃப்ராடு வகை என்றாலும் சுசி ஈமு குருவின் சாதிதானே பல நீதிக்கும், நேர்மைக்கும் பேர்போன கவுண்டர்களை போட்டிக்கு பண்ணை ஆரம்பிக்க வைத்தது? ஊர்ப்பணத்தை ஏமாற்றிவிட்டு ஓட்டம் பிடித்து பின்னர் கொலை வழக்கில் சிக்கி வாட்சப்பில் ஆடியோ ரிலீஸ் செய்த 420 வகை ஆளை மாவீரன் என கொண்டாடுவது இந்த கவரிமான் சமூகம்தானே?

பெண்களை உயர்வாக மதிப்பதில் எங்களைப்போன்ற சாதி வேறு எதுவுமேயில்லை; எழுதிங்கள், இணைச்சீர் எல்லாம் எதற்கு வைக்கிறார்கள் தெரியுமா என்று வெட்டிப்பந்தா பேச்சுகளைக் கேட்டுக்கேட்டு சலித்துவிட்டது. தமிழக சாதிகளிலேயே வீண் பந்தாவிலும், வெட்டி ஜம்பத்திலும், சொந்தக்காரன் ஒருவன் முன்னேறிவிட்டால் பொறாமையிலும், வயிற்றெரிச்சலிலும் வெந்து சாவது இந்த கவுண்டர் சமூகமாகத்தான் இருக்கமுடியும். ஒரு குடும்பம் கஷ்டப்பட்டு முன்னேறினால் பொறாமையினால் பேசுவதில் ஒரு தராதரமே இல்லாமல் அந்த குடும்ப பெண்களின் ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கி கதைப்பது வேறு சாதிகளில் இவ்வளவு இருக்க வாய்ப்பேயில்லை. இதை நான் சொல்லவில்லை. “ஒத்தையடிப் பாதை” என்ற நூலில் சக்தி மசாலா நிறுவனரின் மனைவி சொல்லியிருக்கிறார்.

மாதொருபாகன் அந்த பகுதி பெண்களை சந்தேகப்பட்டதால் வந்த பிரச்சினையல்ல; ஆண்களின் ஆண்மையை சந்தேகப்பட்டதால் வந்த எழுச்சி.

பசுமை விகடன் ஜுனியர் கோவணாண்டிக்கு ஒரு திறந்த மடல்

அன்புள்ள பசுமை விகடன் ஜூனியர் கோவணாண்டிக்கு,

அடியேனின் அநேக நமஸ்காரங்கள். 10.7.2017 தேதியிட்ட பசுமை விகடன் இதழில் தங்களின் சாடல் கட்டுரையை கண்டேன். நம்மாழ்வார் ஐயாவை இணையத்தில் கேள்விகேட்டு கண்டபடி சிலர் விமர்சிப்பதாகவும் அதற்கு பதில் தரும்படியாக கட்டுரை வரைந்திருந்ததையும் மேலும் அந்த இதழில் வந்திருந்த பல கட்டுரைகளையும் வாசித்து இன்புற்றேன். நம்மாழ்வார் ஐயாவின் நாமம்தொட்டு இயற்கை விவசாயத்தையும், கார்ப்பரேட் சதிகளையும் தமிழக மக்களுக்கு புரியவைத்துவரும் பசுமை விகடனை நான் பெரும்பாலும் தொடுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த சுவாரசியமான சாடல் கட்டுரையை வாசிக்கும்படி கேட்டுக்கொண்டதால் வாங்கவேண்டியதாகிவிட்டது.

பசுமை விகடன் என்பது ஆனந்த விகடன் பப்ளிஷர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின்கீழ் வெளியிடப்படும் இதழ்தானே? பசுமை விகடன் என்ற வார்த்தைக்கு நிச்சயம் சட்டபூர்வமான உரிமையை வாங்கியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதை வேறு யாராவது பயன்படுத்தினால் விட்டுவிடுவீர்களா என்ன? காப்பிரைட், பேடன்ட் எல்லாமே ஒரு நிறுவனத்தின் சொத்தல்லவா? ஆனால் விதை வியாபாரத்தில் சொந்த ஆராய்ச்சியாளர்களை வைத்து புதிய இரகங்களை உண்டாக்கி விற்பனை செய்கையில் ஒரு நிறுவனம் காப்புரிமை கோரினால் கார்ப்பரேட் சதி என்கிறோம். இயற்கை விவசாயிகள் என்று அறியப்படுபவர்கள்கூட தங்கள் நிலத்துக்கு பாகப்பிரிவினை/கிரயம் செய்தபிறகு பட்டா மாறுதல் செய்து, வரி கந்தாயம் எல்லாம் கட்டி அதை தங்களின் சொத்து என்பதை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். பிறக்கும்போது என்ன கொண்டுவந்தோம் என தத்துவம் பேசுவதில்லை. இவ்வாறாக விகடன் என்கிற கார்ப்பரேட் குழுமம் பல சிற்றிதழ்களை, கையெழுத்து பத்திரிகைகளை தங்களது பணபலத்தால், விரிவான மார்க்கெட்டிங் பலத்தால் முடக்கியது என்றால் சிரிக்கமாட்டார்களா? மோட்டார் விகடன், நாணயம் விகடன் என வாய்ப்புகள் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து இதழ்களை வெளியிட்டு காலத்துக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்கிற பத்திரிகை குழுமம் என்று சொல்வதுதானே பொருத்தமாக இருக்கும்.

விதை பன்மயத் திருவிழா என்ற ஒரு நிகழ்வை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பை பதிவு செய்யாத போலி லெட்டர்பேட் அமைப்பு என்று நான் குறிப்பிட்டதற்கு பலர் அறச்சீற்றம் கொண்டு கடுமையாக விமர்சித்தனர். வேளாண்மையில் தொழில்முறையில் ஈடுபடும் மக்களுக்கு அதை இரண்டு பத்திகளில் விளக்கியிருக்க முடியும். ஆனாலும் அவ்வளவு பெரிய கட்டுரை எழுதியபின்னரும் பலர் புரியாதமாதிரி நடித்ததே நடந்தது. விதைகளின்/செடிகளின் திருட்டு என்பது விதை விற்பனை செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செய்யும் என்ற தட்டையான புரிதலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

10.7.2017 இதழில் நக்ஸ் வாமிக்கா என்ற எட்டி மரம் குறித்த கட்டுரையில் இங்கிருந்து ஏற்றுமதியாகும் விதைகளில் மருந்துப்பொருட்கள் உருவாக்கப்பட்டு அவை நம்மிடமே அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுதியிருந்தது. ஆனால் விதைப் பன்மய திருவிழாக்களில் உண்மையான விதை சேகரிப்பாள விவசாயிகளின் விதைகளை போலி அமைப்புகள் எதற்காக பல அரிய இரகங்களைக் காட்சிப்படுத்த முயல்கின்றன என்பது மட்டும் பலருக்கு புரியவே புரியாது. அதே கட்டுரையில் இந்தியாவிலிருந்து பல இலட்சம் டன் எட்டி விதைகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு கன்டெயினருக்கு பத்து டன் என்றாலும் ஒரு லட்சம் டன்னுக்கு பத்தாயிரம் கன்டெயினர் இந்தியாவிலிருந்து வெளியேறியிருக்கும். அப்படியென்றால் அரசாங்கம் சிறப்பு திட்டங்களை அறிவித்து என்னென்னவோ செய்திருக்க வேண்டுமே. பல்லாயிரம் ஏக்கர்களில் எட்டிமர சாகுபடி நடக்க வேண்டுமே. ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனது ஆசையைத் தூண்டிவிட வேண்டுமென்ற லாஜிக் இந்த கட்டுரையில் அருமையாக செட் ஆகிறது!

விதைத் திருவிழா குறித்த கட்டுரையில் சித்த மருத்துவர் சிவராமன் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லி மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்று 2006-லேயே நம்மாழ்வார் எச்சரித்ததாகவும், ஆய்வரிக்கைகள் மூலம் இதை கண்டறிந்த ஐரோப்பிய நாடுகள் இதை தடை செய்துவிட்டதாகவும், இந்தியாவில் இன்னமும் உரக்கடைகளில் கிளைக்கோசைடு கிடைப்பதாகவும் மேடையில் பேசியதாக தெரிகிறது.

ஜெய்ப்பூர், இந்தூர், ரட்லாம், பரோடா, ஜுனாகத், இராஜ்கோட் என ஆரம்பித்து கோவில்பட்டி, இராஜபாளையம் வரைக்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு ஐம்பது அறுபது உரக்கடைக்காரர்களை நன்றாகத் தெரியும். கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது முன்னூறு உரக்கடைகளுக்கு மேல் சென்று உரையாடியிருக்கிறேன். சந்தையிலுள்ள பிரபல நிறுவனங்களின் பல்வேறு களைக்கொல்லிகளின் பிராண்டு பெயர், டெக்னிக்கல் பெயர், சிபாரிசு அளவு, சிபாரிசு செய்யப்படும் பயிர், விவசாயிகள் அதன்மீது செய்யும் பலாத்காரம் என பலதரப்பட்ட தகவல்களை விரிவாக அறிந்தவன் என்ற முறையில் கிளைக்கோசைடு என்ற களைக்கொல்லியே கிடையாது என நிச்சயமாக சொல்லமுடியும். ஒருவேளை Tebuconazole என்கிற மருந்தை மிகவும் டெக்னிகலாக ஹைட்ராக்சி டெபுகொனஸோல் கிளைக்கோசைடு என்று குறிப்பிட்டிருக்கலாமோ என்று யோசித்தாலும் டெபுகொனஸோல் என்பது ஒரு சாதாரண பூஞ்சாணக்கொல்லி. பேயர் நிறுவனம் Folicur என்றபெயரில் சந்தைப்படுத்துகிறது. இதைக் களைக்கொல்லி என்பது பாராசிட்டமால் கேன்சரை குணப்படுத்தும் என்பதற்கு ஒப்பானதாகும்.

இல்லாத ஒன்றை மேடையேறிச் சொல்லி மக்களுக்கு பீதியுண்டாக்கி மாற்று மருத்துவம் என மார்க்கெட்டிங் செய்யும் ஏமாற்றுப்பேர்வழி இந்த சித்த மருத்துவர் சிவராமன் என சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதைச்சொல்லிய நம்மாழ்வார் ஒரு பிராடு பேர்வழி என்றும் சொல்லலாம். ஒருவேளை அவர் வேறு எதையாவது சொல்லியிருந்து பசுமை விகடனின் கட்டுரையாளர் கிளைக்கோசைடு என்று எழுதி வந்திருந்தால் அவரை முட்டாள் என்று சொல்வதா அல்லது அதை அப்படியே அச்சுக்கு அனுப்பி ஊரெல்லாம் ஒரு பிரபல சித்த மருத்துவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்திய அதன் பொறுப்பாசிரியரை முட்டாள் என சொல்வதா என நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி. Glycoside is any molecule in which a sugar group is bonded through its anomeric carbon to another group via a glycosidic bond.

பசுமை விகடன் ஒரு முறையான அமைப்புக்குள் வரும் பத்திரிகை என்பதால் தவறு நடந்தால் திருத்திக் கொள்ளலாம், மறுப்போ மன்னிப்போ வெளியிடலாம்; Stakeholders கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். தனிநபர்கள் இந்தமாதிரி பல பொய்த் தகவல்களை பேஸ்புக்கில் அறிவுஜீவி போர்வையில் இருந்து எழுதி வெளியிட்டு, சிக்கினாலும் ஒரு வருத்தம்கூட தெரிவிக்காமல் அகங்காரத்துடன் வலம் வருவதைப் பார்க்கிறோம். ASHA போன்ற போலி லெட்டர்பேட் அமைப்புகளுக்கும் அது பொருந்தும்.

மரத்தடி மாநாடு என்ற தலைப்பில் ‘சுயரூபம் காட்டிய பி. டி. பருத்தி…சோகத்தில் விவசாயிகள்’ கட்டுரையில் வாத்தியார் என்பவர் மேட்டூர் அருகே கொளத்தூர் சுற்றுவட்டாரத்தில் RCH-659 என்ற பருத்தியை விதைத்ததாகவும், அதில் செம்பேன் தாக்குதல் ஏற்பட்டு சாறு உறிஞ்சப்பட்டதால் மகசூல் இழப்பு ஏற்பட்டதாகவும் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாகவும் பேசுகிறார். நாட்டுரக பருத்தி போட்டால் இந்த பிரச்சினை வராது என்று ஆலோசனையும் வழங்குகிறார். 2002-இல் வெளியிடப்பட்ட பி. டி. பருத்தி இரகங்கள் மூன்று நான்கு வகையான காய்ப்புழுக்களை மட்டுமே தடுக்கும், சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு இதில் சம்பந்தமே கிடையாது என்ற அடிப்படை விவசாயிகளுக்கு நன்றாக தெரியும். குறைந்தபட்சம் இந்த வாத்தியாராவது அப்டேட் ஆகிக்கொள்ள வேண்டாமா? RCH-659 இரகத்தை வெளியிடும் இராசி விதைகள் நிறுவனம் ஆத்தூரில்தானே இருக்கிறது; ஒருவாட்டி கேட்டிருக்கலாமே. ஏன் பல்வேறு பெயர்களில் பொய்களை பரப்பவேண்டும்.

சரோஜாதேவி, மருதம் போன்ற அந்தக்கால இரவு இலக்கிய பத்திரிகைகளில் வரும் கதைகளில் வாசகனை பரவசப்படுத்தும்படியாகவே வரிக்கு வரி கதையமைப்பு இருக்கும். பால்காரிக்கே பால் ஊற்றிய கதை என தலைப்பிலேயே தானியாகு பெயர் பீய்ச்சியடிக்கும். அணியிலக்கணம், உவமானம், உவமேயம், எதுகை, மோனை எல்லாம் கனகச்சிதமாக இருக்கும். வாசகனின் மனவோட்டம் அந்த புத்தகத்தை எடுத்தபிறகு மாறிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே கதைகளும் படங்களும் வடிவமைக்கப்பட்டிருப்பதோடு இது ஒரு உண்மைக்கதை என்றே முடிக்கப்பட்டிருக்கும். உள்ளாடையை உருவியதும் அரவம் உருவமெடுத்து ஆடியது என்பதற்கும் முப்பது சென்ட்டில் நான்கு மாதத்தில் மூன்று இலட்சம் வருமானம் தரும் ஜீரோ பட்ஜெட் பண்ணையம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இரண்டின் நோக்கமும் படிக்கும் வாசகனின் மனக்கிளர்ச்சியை தூண்டிவிடுவது மட்டும்தான்.

இயற்கை விவசாயம் என்ற ஒன்றையே நம்மாழ்வார்தான் கண்டுபிடித்தார் எனுமளவுக்கு பூஜை, புனஸ்காரம் போடுவதெல்லாம் விவசாயத்தை பேஸ்புக்கில் செய்பவர்களுக்கு நம்பும்படியாக இருக்கலாம். பஞ்சகவ்மியத்தை குடிப்பது குறித்து மட்டும் விளக்கமாக எழுதி கட்டுரையை முடித்திருக்கிறீர்கள் ஜூனியர் கோவணாண்டி. நம்மாழ்வார், பசுவை வெட்டி திண்ணக்கூடாது, அது இறந்தவுடன் புதைத்துவிடவேண்டும் என்று சொன்னதையெல்லாம் விளக்கமாக பேசியிருக்கலாமே. தரையில் சம்மணமிட்டுதான் அமரவேண்டும், வெள்ளைக்காரன் நாற்காலி கண்டுபிடித்துக் கொண்டுவந்து நமக்கு கொடுத்து நோயை உண்டாக்கினான் என்றும் சொல்கிறார். கி. பி. 1835-இல் வெள்ளைக்காரன்தான் சூத்திரர்கள் நாற்காலியில் அமருவதற்கு இருந்த தடையை சட்டம் மூலமாக நீக்கினார்கள். ‘கண்ட நாயெல்லாம் இன்னிக்கு நம்ம முன்னாடி சேர் போட்டு உக்காருது’ என்ற ஆற்றாமையைத்தான் ஐயா தேன்தடவிய வார்த்தையாக வெளிப்படுத்தினார். காரில் போனாலும் சம்மணம் போட்டு உக்காந்துக்குங்க என்றும் சொல்கிறார். தினமும் குறைந்த்து நூற்றைம்பது கிலோமீட்டர் காரோட்டும் என்னைப்போன்றவர்கள் எப்படி சம்மணம்மிட்டு அமருவது என்று குழப்பமாக இருக்கிறது.

டாக்டருங்க காசுக்கு ஆசைப்பட்டு சிசேரியன் பண்ணிடறாங்க என்று நம்மாழ்வார் சொன்னதையும் நீங்கள் விளக்கியிருக்கலாம். குடும்பத்தில் ஒருவரின் அகால மரணம் அந்த குடும்பத்தை சிதைப்பதோடு, குழந்தைகளின் கனவுகளை நிற்கவைத்து கொல்லும். ஒரு கர்ப்பிணி பிரசவத்தின்போது இறந்தால் அவரது கணவர் படும் வேதனை, சகோதர சகோதரிகளுக்கு திருமணம், சொத்து தகராறு, மறுமணம் செய்வதிலுள்ள சமூக சிக்கல்கள், பாலியல் சார்ந்த தனிமையின் வேதனைகள் என சித்திரவதையை அனுபவிக்கவேண்டியிருக்கும். பொருளாதார ரீதியாக, மன ரீதியாக அந்த நபர் மீண்டுவருவது எவ்வளவு சிரமமானது என்பது தெரியாததா? சாவு எல்லாருக்கும் வரும்தான்; ஆனால் தெரிந்தே சாகவிடுவதுதான் மரபு, பாரம்பரியம் என்றால் அப்படி சொல்பவரை மனநோயாளி என்றல்லவா சொல்வோம். நேரடியாகவே கேட்கிறேன், நம்மாழ்வாரின் குடும்பத்தினர் யாருக்காவது பிரசவத்தின்போது பிரச்சினை என்றால் சிசேரியன் செய்வார்களா அல்லது மரபுதான் முக்கியம் என சித்தாந்தம் பேசுவார்களா? போராலும், மருத்துவத்தை தடை செய்வதாலும் குடும்பங்களை சிதைத்து மரணங்களை, ஊனங்களை சமூகத்தில் பரவலாக வைத்திருப்பதன் மூலம் மத, சாதி அடிப்படைவாதத்தை எளிதாக கட்டிக்காக்க முடியும். சிசேரியன் தடுப்பு, தடுப்பூசி எதிர்ப்பு வகையாறா எல்லாமே அதற்குத்தானே?

ஒருவேளை மான்சாண்டோ அல்லது அதன் துணை நிறுவனங்களிடம் நான் அன்பளிப்பு பெற்றிருப்பேனோ என்று சிலர் ஐயம்கொள்கிறார்கள். பன்னாட்டு கம்பெனிகளில் வேலை செய்ததால் இயற்கை விவசாயத்தை எதிர்ப்பதாக சிலர் கருதுகிறார்கள். சரவதேச தரத்திலான ஆர்கானிக் சான்றுபெற்ற பண்ணை மற்றும் உணவு பதப்படுத்தும் ஆலையை நடத்திவருவதோடு ஆர்கானிக் உணவுப்பொருட்களை ஏற்றுமதியும் செய்துவருகிறேன் என்றதும் இந்த சர்டிஃபைடு ஆர்கானிக் ஃபார்மிங் எல்லாம் பிராடு வேலை என்கிறார்கள். இதுதான் நமது பிரச்சினையே. அன்பே சிவம் மாதிரியான படங்களை பார்த்து ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கிக்கொள்கிறார்கள்.

கல்லூரியில் படிக்கையில் தீவிர பாடிபில்டிங் வேலைகளில் ஈடுபாடு கொண்டு ஒரு ஜிம்மிற்கு சென்றுவருவோம். உள்ளே சென்றதும் ஆஞ்சநேயர் நெஞ்சைப் பிளந்தவண்ணம் இருக்கும் ஒரு படத்தை வணங்கிவிட்டுத்தான் இரும்பைத் தொடவேண்டும். வீர ஆஞ்சநேயர் இருக்குமிடத்தில் ஷூ அணியக்கூடாது என்று அறிவுரை வேறு. அதன்பின்னர் நகரில் உண்டான ஜிம்களில் ஆஞ்சநேயர் இடத்தை அர்னால்டும், ரோனி கோல்மனும் பிடித்துக்கொண்டார்கள். ஆர்கானிக் ஃபார்மிங் என்றதும் நம்மாழ்வார் படத்தை வைத்து கும்பிட்டுவிட்டுத்தான் ஆரம்பிக்கவேண்டும் என்ற அவசியமில்லை என்றதும் பலர் பதட்டமடைகின்றனர். ஆட்டத்தின் விதிமுறைகளை அறிந்து ஜெயிப்பதற்கு விளையாடவேண்டும்; ஏதாவது சித்தாந்தத்திற்காகவும், யாரையாவது திருப்திப்படுத்துவும் ஆடுபவர்களுக்கு நல்ல ஸ்பான்சர் இருக்கும்வரை கவலையில்லை.

நம்மாழ்வார் பக்தாக்கள் பலருக்கு நான் பென்ஸ் கார் வைத்திருப்பது வேதனையாக இருக்கிறது. பொதுவாகவே ஏழைகள், வயதானவர்கள், தாடி வைத்திருப்பவர்கள், தொண்டு நிறுவனம் நடத்துபவர்கள், கதர் ஜிப்பா அணிந்து ஜோல்னாபை வைத்திருப்பவர்கள், கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துபவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்ற பொதுப்புத்தி வந்துவிடுகிறது. அதன் நீட்சியாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. விஞ்ஞானி, இயற்கை வேளாண் விஞ்ஞானி என பில்டப் கொடுத்தாலும் அடிப்படையில் அண்டர்கிராஜுவேட் ஆன அவர் சிலகாலம் மட்டுமே கோவில்பட்டி அரசு வேளாண் பண்ணையில் பண்ணை மேலாளராக பணிபுரிந்திருக்கிறார். பண்ணை மேலாளர் என்பது ஒரு கடைநிலை ஊழியர் பணிதான். அதையும் விட்டு விலகி கிட்டத்தட்ட ஒரு துறவிபோல் எளிமையின் சிகரமாக வாழ்ந்து வந்தவருக்கு கரூர் அருகே 55 ஏக்கர் பண்ணைநிலத்தை வாங்கி வானகம் என்ற இயற்கை விவசாய பண்ணையை உருவாக்க நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்பதை யாராவது கேட்டுவிட முடியுமா? Because some animals are more equal than others.

காந்தி கதராலும், பசுக்களாலும், குலத்தொழிலாலும் இந்தியாவை முன்னெடுக்க விரும்பினார். தொழிற்சாலைகள், சாலைகள், ஆலைகள், அணைகள், அதிக உற்பத்தித்திறன் என்ற கோட்பாட்டில் நேரு இயங்கினார். இதில் யார் சரி, யார் தவறு என்று மதிப்பிட விரிவான தரவுகளும், ஆய்வுகளும் தேவையல்லவா? பத்தாண்டுகளுக்கும் மேலாக மாட்டுக்கறி உண்ணும் வெள்ளைக்காரனின் தலைமையில் கிடைத்த நிதி உதவியில் விவசாயிகளை முன்னுக்கு கொண்டுவர நம்மாழ்வார் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் நல்ல இடுபொருட்கள், சாலைகள், கிட்டங்கிகள், சந்தை வசதிகள் கொடுத்தால் விவசாயிகள் தானாகவே முன்னுக்கு வந்துவிடுவார்ரகள் என்ற நோக்கத்தில் செயல்படும் சர்வதேச நிறுவனங்களில் வெள்ளைக்காரர்களுடன் இணைந்து பணிபுரிபவர்களை வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிக்கு கூட்டி கொடுப்பவர்கள் என வசை பாடுகிறார்கள். இப்படி சொல்பவர்களில் பலர் ஆன்சைட்டில் வெளிநாட்டு வேலைக்கு சென்று அங்கிருக்கும் பூர்வகுடி ஒருவரின் வேலையைப் பிடுங்கி அவர்கள் சோற்றில் மண்ணை அள்ளிப்போட்டவர்கள்தான்!

எங்கிருந்தோ நிதி உதவி எனக்கு கிடைப்பதாக சிலர் எழுதுகிறார்கள். கடனாக, கட்டணமாக, விற்பனையாக, அல்லது தொழில் பங்குதாரராக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பணம் வாங்கவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். இத்தனைக்கும், செயல்படாத கன்சல்டிங் சர்வீசஸ் கம்பெனி ஒன்றையும் வைத்திருக்கிறேன். பிரச்சாரம்தான் நோக்கம் என்றால் சொந்த ஐடியில் சூனியம் வைத்துக்கொள்ள நான் என்ன Coprophagy மனநிலையிலா இருக்கிறேன்? இந்திய விவசாயமும், கிராம அமைப்பும் ஜாதி அமைப்புகளிலிருந்து பிரிக்க முடியாதது. இந்த அடிப்படைகூட தெரியாமல் campaign strategy வடிவமைப்பது நம்மாழ்வார் பக்தாக்களுக்கு வேண்டுமானால் பரவசத்தை உண்டாக்கக்கூடும். எங்கிருந்தாவது காசு வந்தவுடன் பிரச்சாரம் செய்வதும், பாங்காக் போவதும் அப்புறம் பஞ்சாயத்து கூட்டுவதும் தமிழ் ஜோசிய கும்பலுக்கு வேண்டுமானால் இயல்பான ஒன்றாக இருக்கலாம். உங்கள் பெயரில் நாட்டுமாடு வாங்கி நானே வளர்த்து நானே வைத்துக்கொள்கிறேன் என்பது மாதிரியான நவீன ஈமு கோழி வளர்ப்பு திட்டங்களையெல்லாம் பார்க்காமலா இருக்கிறோம். நன்கொடைகள் நம் காலைச் சுற்றிய பாம்பு. பாரம் குறைந்தால்தான் தூரம் வசமாகும் என்பதுதானே மரத்தான் ஓடுபவர்களின் பாலபாடம்.

பாரம்பரிய மலேரியா மருந்துக்கு புத்துருவாக்கம் கொடுத்ததற்கு நோபல் பரிசு கொடுத்தார்கள். அப்படி பஞ்சகவ்யத்துக்கு நோபல் பரிசு வாங்கியிருக்காமல் கொடுமுடி டாக்டரின் தோல்வியடைந்த ஆராய்ச்சியை சிலாகித்து, புனுகுப்பூனை கதைகளையெல்லாம் சொல்லி யாரை நாம் ஏமாற்றுகிறோம் மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி? ஜப்பானின் நம்பர் ஒன் டிராக்டர் நிறுவனம் குபோட்டா என முழுப்பக்க விளம்பரம் போட்டுவிட்டு நாட்டுமாடுகளின் மூலம் உழவு செய்வதின் முக்கியத்துவத்தை கட்டுரை வெளியிடுகிறோம். சர்வதேச தரத்துக்கு நம் இளைஞர்கள் செல்ல வேண்டும், பன்னாட்டு கம்பெனிகளை தமிழகத்து இளைஞர்கள் உருவாக்கி நடத்தவேண்டும் என்றல்லவா நாம் நம் இளைய சமுதாயத்தை வழிநடத்த வேண்டும்.

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதில் மகிமையில்லை. திறமான புலமையெனில் மேநாட்டார் அதை வணக்கஞ் செய்திடல் வேண்டும் என்றல்லவா நம் சமுதாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். பொய், புரட்டு, பித்தலாட்டத்தை சபையிலே நிறுத்தி கேள்வி கேட்பதை விடுத்து மூடி மறைப்பதால் பயனென்ன மிஸ்டர் ஜூனியர் கோவணாண்டி.

பதினைந்து ரூபாய்க்கு பசுமை விகடன் வாங்கியதற்கு பதிலாக நாற்பது ரூபாய்க்கு மியா கலிஃபா-வின் பிலாட்டீஸ் பயற்சி வகுப்பு குறுவட்டை வாங்கிப் பார்த்திருந்தால் மனக்கிளர்ச்சியாவது மிஞ்சியிருக்குமே என்ற வேதனையில் விடைபெறுவது உங்கள் அன்பு பிரபு.

பாரம்பரிய விதைத் திருவிழா என்றபெயரில் நடக்கும் விதை கடத்தல்கள்

சிலை கடத்தல் என்ற ஒன்று நமக்கு அலுப்புத் தரக்கூடியது, சுவாரஸ்யமில்லாதது. கடத்தப்பட்டால்தான் என்ன என்ற ஒரு அலட்சியமும் இருக்கும். ஆனால் அதன் பின்னணியில் ஒரு பெரிய நெட்ஒர்க் பெரும் பணபலத்துடன், நம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் போன்ற இயல்பான தோற்றத்துடன் கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாதது பாரம்பரிய விதைத் திருவிழா என்ற பெயரில் நடக்கும் மரபார்ந்த விதைகளின் திருட்டுகள்.

சில அடிப்படைகளை தெரிந்துகொண்டு உள்ளே நுழைவோம். காலங்காலமாக விவசாயிகளால் பயிரிடப்படும் உள்ளூர் இரகங்களை land races என்பார்கள். ஒருகாலத்தில் வர்த்தக ரீதியில் பயிரிடப்பட்டு இன்று புழக்கத்தில் இல்லாத இரகங்கள் heirloom எனப்படும். விவசாயம் செய்யாமல் ஆங்காங்கே தாந்தோன்றியாக வளர்ந்துகொண்டிருக்கும் இரகங்கள் wild varieties எனப்படும். ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரபியல் ரீதியாக நெருங்கிய தொடர்புடையவைகளை wild relatives என்பார்கள். இவையனைத்தும் சேர்ந்ததே Germplasm எனப்படும்.

ஜெர்ம்பிளாசம் என்பதும் நாட்டின் ஒரு சொத்து. Biodiversity என்பது பல்லாயிரம் தாவர, விலங்கினங்கள் மட்டுமல்ல ஒரே தாவரத்தின்/விலங்கின் பலநூறு வகைகளும் சேர்ந்தது. இதை சேகரித்து, வகைப்படுத்தி பாதுகாக்க அந்தந்த மாநில விவசாய பல்கலைக்கழங்கள், National Bureau of Plant Genetic Resources, Botanical Survey of India மற்றும் ICAR-இன் கீழ் வரும் ஒவ்வொரு பயிருக்கான ஆராய்ச்சி மையங்கள் போன்றவை செயல்படுகின்றன. ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பதை அந்தந்த அமைப்புகள் தங்களின் மிக முக்கிய சொத்தாக கருதி பாதுகாப்பது வழக்கம். தனியார் விதை நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் ஜெர்ம்பிளாசத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றன. விதைத் துறையில் ஒரு நிறுவனம் இன்னொன்றைக் கையகப்படுத்துவதே இந்த ஜெர்ம்பிளாசத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான்.

புதிய இரகங்களை உருவாக்க இந்த ஜெர்ம்பிளாசத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் parent lines மிக முக்கியமானது. பூச்சி, நோய் தாக்காத , புதிய பண்புக்கூறுகளை உருவாக்க உலகளவில் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக பருத்திப்பஞ்சு சிவப்பு, பச்சை என வண்ண வண்ணமாக வந்தால் சாயப்பட்டறைகளே இல்லாமல் நேரடியாக நூல் நூற்க இயலுமல்லவா? அதற்கு parent material-இல் உள்ள diversity மிக முக்கியம். பலவகையான combination மூலம் புதிய கலப்பினங்களை உண்டாக்கக்கூடிய, நன்றாக தொழில் தெரிந்த Breederகளுக்கு சந்தையில் இன்று ஆண்டு சம்பளம் 20 இலட்சத்தில் ஆரம்பிக்கிறது எனும்போது அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பித்து ஜெர்ம்பிளாசத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த கடமை பெரிய அளவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடையாது என்பதால் புகுந்து விளையாடலாம்.

விவசாயிகள் தங்களுடைய விதைகளை சேமித்து வைப்பதை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இலவசமாக பரிமாறிக்கொள்வதை அவர்களது அடிப்படை உரிமையாகக் கருதி சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் வணிகரீதியில் விற்கும்போது விதைச்சட்டம் மற்றும் இதர சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். உலகளவில் விவசாயிகளின் உரிமைகளை மதிக்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. தாவர, விலங்கினங்களின் IP rights குறித்த நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். ஒரு புதிய இரகத்தை அறிமுகப்படுத்தும்போது அதை உண்டாக்கிய பயிர்ப்பெருக்கவியல் விஞ்ஞானி (breeder), நிறுவனத்தின் தலைமை legal counsel மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மூவரும் கையொப்பமிட்டு அரசுக்கு விண்ணப்பிப்பார்கள். அப்போது புதிய இரகத்தின் pedigree, DUS characters என பல ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும். ஏதாவது ஒரு parent-ஆனது public domainலிருந்து திருடப்பட்டிருந்தாலும் அப்போதைக்கு இல்லாவிட்டாலும் சில மாதங்களிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். ஏனென்றால் அரசாங்கத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளத்தக்க தலைமை பெரும்பாலும் வாய்ப்பதில்லை என்பது வேறுகதை.

பொதுவாக வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை நல்ல ஆய்வகங்களில் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நிறுத்தியே காட்டி அனுப்பிவிடுவார்கள். ஓர் இலையைக் கிள்ளி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓட்டலுக்கு வந்து ஐஸ் நிரப்பி ஃபிளாஸ்க்கில் வைத்து எடுத்துவந்து திசுவளர்ப்பு மூலம் regenerate செய்து அதே இரகத்தை உண்டாக்கிய ஆட்களின் கதைகளைக் கேட்டுதான் நாங்கள் படித்தோம். பி. டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக பயிரிட அனுமதிக்கும் முன்னரே அமெரிக்காவிலிந்து பத்து இருபது விதைகளை கேஷுவலாக லக்கேஜ்களுடன் எடுத்துவந்து உள்ளூர் இரகங்களுடன் கலப்பினம் உண்டாக்கி குஜராத்திகள் பயிரிட்டிருந்தார்கள்.

விவசாயி என்ற போர்வையில் பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள் என சொல்லிக்கொண்டு தொழில்முறையில் அதில் ஈடுபடும் சிலர் ஒரு சில அரிய உள்ளூர் இரகங்களை farmer to farmer free exchange of seeds என்றபெயரில் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி “கைமாற்றி” விடுவது பரவலாக நடக்கும் ஒன்று. புரூஃப் இருக்கா என்று கேட்டு யாரும் கேட்டை ஆட்டவேண்டாம். இதெல்லாம் அந்தந்த டிபார்ட்மெண்ட் வாட்ச்மேன் வரை தெரிந்த விசயம். (உண்மையான ஒரு சொந்த ஆர்வத்தில் புதிய புதிய இரகங்களை சேகரித்து வைக்கும் விவசாயிகள் நிறைய இருக்கிறார்கள்; அதனால் பொத்தாம்பொதுவாக சொல்வதாக கருதக்கூடாது).

கடந்த சில நாட்களாக சென்னையில் மரபு விதைத் திருவிழா ஒன்று நடந்ததாகவும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 3000-க்கும் அதிகமான பாரம்பரிய இரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் நாளேடுகள் தெரிவிக்கின்றன. இது சண்டிகர், புதுதில்லி, ஐதராபாத் நகர்களில் நடந்த விதைத் திருவிழாவின் நீட்சி என தெரியவருகிறது. அதை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பு எதிலுமே பதிவு செய்யப்படாத ஒன்று. தொண்டு நிறுவனம், டிரஸ்ட், சொசைட்டி என சட்டத்தின்முன் நிற்க எந்த வடிவமும் இல்லாமல் ஆனால் பொதுமக்களின் நன்கொடையில் இயங்குவதாக சொல்லிக்கொள்கிறது.

எந்தவொரு சட்டபூர்வ அனுமதியும் பெறாத ஒரு நிழல் அமைப்பு பல மாநிலங்களிலுள்ள உண்மையான விதை சேகரிப்பு செய்யும் விவசாயிகளை இந்த போலி இயற்கை ஆர்வலர் ஆட்கள் மூலமாக மூளைச்சலவை செய்து அவர்களிடமுள்ள விதைகளை காட்சிப்பொருளாக்க செய்திருக்கிறது. ஒரே வரியில் சொன்னால் its a vulnerable exposure of country’s genetic resources under one roof by shadow organizations. அங்கு வைக்கப்பட்டிருக்கும் சில முக்கியமான இரகங்களில் பத்து இருபது விதைகளை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டு வருவது பெரிய காரியமன்று. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஒழிக, விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக என்ற கோஷத்துடன் இந்த பாரம்பரிய விதை திருவிழாக்கள் யாருக்காக நடக்கின்றன என்பதை இனியும் விளக்க வேண்டியிருக்காது.

இத்தகைய பதிவு செய்யப்படாத போலி இயற்கை விவசாய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் விருந்தினராகச் சென்று மேடைகளில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Code of Conduct குறித்தும் Conflict of Interest குறித்தும் வேலையில் சேரும்போது எடுக்கப்பட்ட வகுப்புகளை புரபேஷனரி பீரியட் முடியும்போதே மறந்துவிட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. பதிவு செய்யப்படாத நிழல் உலக அமைப்புகளை நாட்டின் சொத்தான genetic diversityயைக் காட்சிப்படுத்த அனுமதி எப்படி கிடைத்தது?

குடியரசு தினவிழாவில் படைக்கலன்களை மக்கள் காட்சிக்கு வைப்பார்கள். அதற்காக எல்லா போர்க்கருவிகளும் அங்கு இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது. எதுவரை பொதுமக்களுக்கு காட்டலாம் என்ற வரையரையை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அதிலும் குறிப்பிட்ட ஆயுதங்களை சில அதிகாரிகள் மட்டுமே அணுகும்படிதான் இருக்கும். அதேமாதிரிதான் விவசாய கண்காட்சிகளில் பொதுமக்களுக்கு எந்தெந்த இரகங்களை காட்சிக்கு வைக்கவேண்டும், எதை தவிர்க்கவேண்டும், எதை மிக இரகசியமாக குறியீடுகள் மூலம் பாதுகாக்க வேண்டுமென்பதை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்து வைத்திருப்பார்கள்.

முறையாக விவசாயம் செய்பவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்ற அனுபவ புரிதல் இருக்கும். உதாரணமாக எல்லா சுண்டைக்காய்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. சில இரகங்கள் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும். எல்லா காளான்களும் உண்ணத்தக்கவை அல்ல. சில காளான்களை சாப்பிட்டால் உடனடி மரணம் நிச்சயம். இன்று உணவுக்காக விவசாயம் செய்யப்படும் அத்தனை வகை பயிர்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்று பலமுறை அனுபவத்தால், ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டவை.

தாத்தா விவசாயம் செய்தார், அப்பா பார்ட் டைமாக விவசாயம் செய்தார் என்பதைத் தாண்டி விவசாயத்துக்கு எந்த தொடர்புமில்லாதவர்கள் வாரயிறுதி நாட்களில் பேக்பேக்கை மாட்டிக்கொண்டு எங்காவது மலையடிவாரத்தில் வளரும் செடிகளை, பாரம்பரிய மரபு இரகங்கள் என எடுத்துவந்து ஊருக்குள் நட்டுவைத்து ஆர்கானிக் இயற்கை காய்கறி அங்காடிகளில் விற்று அதன்மூலம் பல ஒவ்வாமை/நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை உண்டாக்கப்போவது உறுதி. அதற்கும் இயற்கை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து நோய் முற்றியபின் அலோபதிக்கு சென்று ஆர்கானிக் ஃபுட் சாப்பிடும் எனக்கு வேண்டுமென்றே மருத்துவமனைகள் அதிக பில் போட்டு ஏமாற்றுகின்றன, மருந்து வேலை செய்யவில்லை என மருத்துவர்களை அடிக்கப்போவதும் நடக்கத்தான் போகிறது. அனுபவமிக்க வனவியலாளர்களுடன் காட்டுக்குள் செல்லும்போது அவர்கள் தரும் முதல் அறிவுரை எந்த பூக்களையும் முகர்ந்து பார்க்கக்கூடாது; இரண்டாவது அறிவுரை என்னவென்று தெரியாத பழங்களை உண்ணக்கூடாது என்பதுதான். மருத்துவர்கள் தெரிந்த நோய்களுக்குத்தான் மருத்துவம் செய்வார்கள். ஏதாவது காட்டுக்குள் இருக்கும் விஷச்செடியை பாரம்பரிய இரகம் என்று கொண்டுவந்து அரைத்துக் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வார்கள்.

இயற்கை விவசாயம் என்ற பெயரில் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் அடிக்கடி பரிந்துரைப்பது மீன் கரைசல் அல்லது மீன் அமில கரைசல். அதாவது மீன் மார்க்கெட்டில் கழிவாக போடுவதை அள்ளிவந்து கொஞ்சம் வெள்ளத்தைக் கலந்து காற்று புகாமல் ஓரிரு மாதம் மூடிவைத்து பின்னர் எடுத்து தண்ணீரில் கலக்கி பயிரின்மீது தெளிப்பது. மீனின் தசைகளிலுள்ள நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்கும் என்பது இதன் சாராம்சம். காற்றுபுகாத இந்த anaerobic condition-இலும் சில உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் வளரும். இதை பயிர்களின் மீது தெளித்து அது பச்சையாக உண்ணும் காய்கறியாக இருக்கும்பட்சத்தில் கடுமையான உடல் உபாதைகள் வரும். போதுமான அளவுக்கு பாக்டீரியத்தின் லோடு உள்ளே சென்றால் சாவு நிச்சயம். இத்தகைய ஆர்கானிக் உணவுகளை உண்டு அமெரிக்காவில் பல சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மீன் கரைசலுக்கும், செப்டிக் டேங்க் கழிவின் கரைசலுக்கும் டெக்னிக்கலி பெரிய வேறுபாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைகளே பேராயுதம் என அருமையான caption போட்டுக்கொண்டு, எதிலுமே பதிவு செய்யப்படாத நிழல் அமைப்புகள் நாட்டின் genetic diversityயை யாருக்காக காட்சிப்பொருளாக்குகின்றன என சிந்திக்க வேண்டும். இந்த தேசிய, சர்வதேச மாஃபியா கும்பலுக்கு நம்மாழ்வார் கோஷ்டிதான் உள்ளூர் ஏஜென்டு. அதன் துணை ஏஜெண்டுகள் பல்வேறு பெயர்களின் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கடைவிரித்து ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்கிறார்கள். வடக்கே ஆரம்பித்து தமிழகம் வரை அலசிப்பார்த்துவிட்டார்கள். இனி இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் என விதைத் திருவிழாக்கள் நீளும்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.