பால் வியாபாரம் – மேலும் சில

பால் கறப்பது, குறிப்பாக அடைமழை காலங்களில் மிகவும் சிரமமான வேலை. காலையிலும், மாலையிலும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் கருமமே கண்ணாக செய்யவேண்டிய ஒன்று. நசநசவென்ற சூழல், கொசுக்கடி, ஈக்களின் தொந்தரவு, சாணியும் மூத்திரமும் உலராமல் ஏற்படும் துர்நாற்றம் எல்லாவற்றையும் தாங்கித்தான் மாடு வளர்க்க வேண்டியிருக்கிறது. நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் பால்காரராக இருப்பதற்கு மிகவும் வலுவான உடல்நிலையும், மனநிலையும் கட்டாயம்.

புதிதாக சந்தைக்கு வரும் பால் கறக்கும் இயந்திரங்களைப் பார்த்துப்பார்த்து ஏமாற்றமடைவது பால்காரர்களாகத்தான் இருக்கும். விலைகுறைந்த portable models இயங்குவது வேக்குவம் சக்‌ஷன் அடிப்படையில் என்பதால் தொடர்ந்து பாலைக் காம்பிலிருந்து உறிஞ்சும்; ஆங்காங்கே, பாலில் இரத்தம் கலந்து வருகிறது என்பது மாதிரியான விவசாயிகளின் புகார்கள் இந்த வகையிலான ஆரம்பகட்ட கருவிகளால்தான். சில மாடுகள் பாலை அடக்கி வைத்துக்கொண்டு போக்கு காட்டி, கன்றுக்குட்டிக்குத் தரும், சில காம்புகளில் இயல்பாகவே பால் இல்லாமல் இருக்கும்; அதற்காக அதிகநேரம் கருவியை இயக்குவது, அழுத்தத்தைக் கூட்டுவது என செய்யப்படும் உத்திகள் நீண்டகால அடிப்படையில் மாட்டின் பால் உற்பத்தியை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

விட்டுவிட்டு உறிஞ்சி இயங்கக்கூடிய pulsing type கறவை இயந்திரங்கள் 25000 ரூபாயில் ஆரம்பிக்கிறது. இந்த காசுக்கு இன்னொரு மாடு வாங்கலாமே என்று நினைப்பது விவசாயிகளின் இயல்பு. இதிலும் காம்பில் மாட்டக்கூடிய கறப்பான், பாலின் தரத்தை உள்ளீடு செய்து கறத்தலை நிறுத்தும் சென்சார், மதர் போர்டு என சில sensitive components அனைத்தும் இறக்குமதி செய்யப்பட்டே வருகிறது.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி செய்யும் நாட்டில் 99.9 % பால் கைகளாலேயே கறக்கப்படுகிறது எனும்போது பால் கெட்டுப்போவதற்கு ஆயிரக்கணக்கான காரணங்கள் உண்டு. பாலுடன் என்னென்ன இரசாயனங்கள் கலக்கும் என்பதற்கு கறப்பதற்கு முன்னர் ஒவ்வொருவரும் என்ன வேலை செய்துவிட்டு வந்தனர் என்பதை ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். உற்பத்தியாகுமிடத்தில் அத்தகைய சூழலை வைத்துக்கொண்டு, பால்வளத்துறை அமைச்சர் ஒருவர் பாலில் இரசாயனம் இருக்கிறது என்று பேட்டி கொடுப்பதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.

கிராமம் கிராமமாக சிதறிக்கிடக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு கறப்பதற்கு கையடக்க கருவிகள் ஏதும் இல்லாமல், நோயுற்றால் உடனே வந்து பார்ப்பதற்கு போதுமான கால்நடை மருத்துவர்கள் இல்லாமல், கிடைக்கும் விலையும் போதுமான அளவில் இல்லையென்றாலும் பால் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்க காரணம் மாடுகள் குறித்த விவசாயிகளின் புரிதல்தான். எப்போது என்ன செய்யவேண்டும் என்பதை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவுசெய்யும் அவர்களுக்கு தரப்படும் சட்ட ரீதியிலான அழுத்தம் முட்டாள்தனமான ஒன்று.

ஜல்லிக்கட்டு மூலமாக சிறந்த காளைகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு கடும் வறட்சி காலங்களில் கிடாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்பதும் உண்மை. நான்கு கறவைகள் இருக்கும்போது கடும் வறட்சி வந்தால் அதில் உள்ள ஒரு நல்ல மாட்டை வைத்துக்கொண்டு மற்றவைகளை கறிக்கு அனுப்புவது இயல்பு. மரபியிலில் இதை Pureline Selection என்பார்கள். வறட்சி, பஞ்சம் மிகுந்த காலங்கள் கால்நடைகளின் இனத்தூய்மை, விருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன. எதற்கெடுத்தாலும் நதிகளை இணைக்கவேண்டும், பார்க்கும் இடங்களிலெல்லாம் தடுப்பணை அமைக்கவேண்டும், குஜராத் மாதிரி ஆகவேண்டும் என்று கருத்துரைப்பவர்கள் சுற்றுச்சூழல் குறித்த கல்வியறிவோ பட்டறிவோ துளியும் இல்லாத மூடர்கள்.

சினை ஊசிகளில் காளைகளே இல்லாமல் கிடாரிகள் மட்டுமே உருவாக்கக்கூடிய (XX குரோமோசோம்) Sex selective semen மேலைநாடுகளில் உண்டு. அதன்மூலம் காளைக்கன்று பிறந்து அதை ஒரு வருடம் கழித்து கறிக்கு அனுப்பவேண்டிய அவசியம் இல்லாமல் கிடைக்கும் அனைத்து கன்றுகளும் பெண் என்பதால் விரைவில் இனவிருத்திக்கு தயாராகி பண்ணையும், பால் உற்பத்தியும் பெருகும் என்பது அவர்களது நோக்கம்.

ஆண் கன்றுகளை உருவாக்கக்கூடிய Y குரோமோசோம்களை விந்தணுக்களுக்குள்ளேயே சென்று காயடிக்கும் chromosome washing செய்யும் Flow Cytometry போன்ற தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை இருப்பதால் உள்நாட்டு ஃபுளோ சைட்டோமெட்ரி தொழில்நுட்பத்தை உருவாக்க 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் பெரும் நிதி ஒதுக்கியது; அநேகமாக அஃது இந்நேரம் வர்த்தகரீதியில் தயாராகியிருக்க வாய்ப்பிருக்கிறது.

உள்நாட்டு மாட்டு, தாவர இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் ஜெர்சி, ஹோல்ஸ்டைன் ஃப்ரீஸியன் இன மாடுகளிலும் காளைகளே இல்லாத ஒரு சூழல் ethically சரியா என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று. சங்கப்பரிவாரங்கள், விலங்குநல ஆர்வலர்கள் மற்றும் இன்னபிற வானரப்படைகள் இதுகுறித்து வாயே திறக்கவில்லை என்பதை மிக அழுத்தமாக இரண்டுமுறை அடிக்கோடிட்டு காட்டவேண்டியிருக்கிறது.

(தோல் பதனிடும் தொழில்களில் நடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சுரண்டல்கள், கம்யுனிச எழுச்சியின் ஆரம்பகட்டங்களை புரிந்துகொள்ள திண்டுக்கல்லை மையமாக வைத்து எழுதப்பட்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவலை நண்பர்கள் வாசித்துப் பார்க்கலாம்.)

ஆய்வுக்கூடங்களோடு முடிந்துவிட்ட டெர்மினேட்டர் டெக்னாலஜி குறித்து வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சவுண்டு விடும் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் காளைக்கன்றுகள் இல்லாத ஒரு சூழல் உண்டாக இருப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை. RCEP கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் மூலம் விவசாயிகள் விதைகளை வைத்திருக்கவே முடியாது என்ற ஒரே பொய்யை திரும்பத்திரும்ப சொல்லி வருகின்றனர். ஆறாயிரம் பேர் கலந்துகொள்ளும் அந்த convention, வட இந்தியாவில் நடத்த இடமே இல்லாமல் ஐதராபாத்தில் நடத்த இருக்கிறார்கள். அதில் விவாதிக்கப்பட இருக்கும் கூறுகள் பொதுமக்களுக்கு சொல்லப்படவே இல்லை எனும்போது இவர்கள் கம்பு சுற்றுவது எதற்காக என்றும் தெரியவில்லை.

அப்படியே ஏதாவது முடிவு எடுக்கப்பட்டாலும் அது பல்வேறுகட்ட ஒப்புதல்களை வாங்கி, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்டு நடைமுறைக்கு வந்தால்தான் தெரியும். பொது இடங்களில் புகை பிடித்தால், எச்சில் துப்பினால் அபராதம் மாதிரியான சட்டம் போல அதுவும் ஒன்றாகிப் போகலாம். அண்மையில் பலர் ஒரே நேரத்தில் படையெடுத்ததால் இ-சேவை மையங்கள் முடங்கியதற்கு சொல்லப்பட்ட காரணம் ‘வருடத்தில் ஐந்து நாள்தான் இவ்வளவு டிராஃபிக் வரும், மீதி 360 நாட்கள் சும்மாதான் இருக்கும்; அதனால்தான் புதிய சர்வர்கள் நிறுவவில்லை’ என்று. இருபது முப்பது வருடங்களுக்கு ஒருமுறைதான் வெள்ளம் வருகிறது, அதற்காக பல ஆயிரம் டன் கான்கிரீட்டைக் கொட்டி மிகப்பெரிய வாய்க்கால்களை, மதகுகளைக் கட்டவேண்டிய அவசியம் இல்லை; தண்ணீர் வந்தால் அதாகவே போய்விடும் என்பது மாதிரியான தொலைநோக்குப் பார்வைதான் நமது சொத்து.

ஆட்டோமொபைல் துறைக்கான தொலைநோக்குப் பார்வையும் இப்படித்தான் இருக்கிறது. நான்கு மீட்டர் நீளத்துக்கு குறைவான கார்களுக்கு 12.5% எக்ஸைஸ் டியூட்டி, அதைவிட நீளமான கார்களுக்கு 1500 cc-க்குள் இருந்தால் 24% வரி, 1500 cc-க்கு அதிகமாக இருந்தால் 27% வரி. 2000 CC க்கு மேலே இருந்தால் டில்லி போன்ற நகரங்களில் அதற்கு ஒரு வரி. தாடியின் நீளத்தைப் பொறுத்து வரி விதித்த மன்னர்கள் குறித்த கதைகளெல்லாம் இந்த இடத்தில் நினைவுக்கு வரக்கூடும்.

ரேடியோ ஸ்பெக்ட்ரம் கட்டுப்பாடுகள் காரணமாக பல உயர்தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்குள் வரவே முடியாத நிலை இருக்கிறது. இங்கிருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யவும் முடியாத சூழ்நிலையே. 433 – 434 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால்தான் சாவி தேவைப்படாத Keyless Entry சாத்தியமானது. ஆனால் இன்னமும் 434.79 MHz வரை உற்பத்தி, பயன்பாடு இரண்டுக்கும் கட்டுப்பாடுகள் இருப்பதால் radar based automatic breaking, lane direction control போன்ற தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை. உதாரணமாக மெர்சிடஸ் S class கார்களை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யும்போது இத்தகைய terrestrial transmission தொழில்நுட்பங்கள் தொடர்பான நுண்கருவிகள், ஒயரிங், மென்பொருள் என அனைத்தையும் கழட்டிப் போட்டுவிட்டுத்தான் இறக்குமதி செய்யமுடியும். அதனால் இங்கே உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்வதும் உயர்தர சொகுசு கார்களுக்கு சாத்தியமே இல்லை.

ஒன்னேகால் கோடிக்கு S class கார் வாங்கும் கோடீசுவரர்களுக்குத்தானே அந்த தொழில்நுட்பங்களின் பாதுகாப்பு வசதிகள் என்ற அங்கலாய்க்கத் தேவையில்லை. ஒருகாலத்தில் ஏபிஎஸ், ஏர்பேக் என்பது சொகுசு கார்களில் மட்டுமே இருந்தது. வரும் அக்டோபர் முதல் அது எல்லா கார்களிலும் கட்டடாயமாகிறது. காலப்போக்கில் எல்லாமே எல்லாருக்கும் சாத்தியமே. போர்க்களத்தில் துப்பாக்கிகளின் கட்டைகள் அதிக சூடாவதால் சுடமுடியாமல் போவதை தவிர்க்கவே ஆரம்பத்தில் பேக்லைட் (Bakelite) கைப்பிடிகள் பயன்பட்டது; இன்று ஒவ்வொரு வீட்டின் பிரஷர் குக்கரிலும் அதுதான் இருக்கிறது.

Visionary என்ற வார்த்தையே பொருளற்ற ஒன்றாகிவிட்டது. அரசாங்கத்தின் லைசன்ஸ் முறைகளின் நீட்சி இன்னமும் இருப்பதோடு நிலையற்ற கொள்கை முடிவுகள் இந்தியாவை இன்னமும் banana republic தோற்றத்தில்தான் வைத்திருக்கிறது. இந்திய சூழலில் வியாபாரம் செய்ய முடியாது என்று 8000 கோடி நட்டத்துடன் செவர்லே பிராண்டை வைத்திருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது. பல ஆயிரம் பேர் நேரடியாக வேலை இழக்கிறார்கள். இந்தியாவில் இனிமேல் ஒருபைசாகூட முதலீடு செய்யமுடியது என்று டொயோட்டா அறிவித்திருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன வசதிகள், சொகுசு தேவை என்பதை உற்பத்தி செய்யும் நிறுவனமும், வாடிக்கையாளர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்; ஆனால் இந்தியாவில் அரசாங்கம் முடிவு செய்கிறது என்பதால் இங்கு முதலீடு செய்வது தேவையில்லாத ஒன்று என்று ஹோண்டா அறிவித்திருக்கிறது.

பால்வளம், ஆட்டோமொபைல் மட்டுமல்லாது டெக்ஸ்டைல் துறைக்கும் இருண்டகாலம் ஆரம்பிக்கவிருக்கிறது. பி. டி. தொழில்நுட்பம் வந்தபிறகு தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவந்த பருத்தி வியாபாரத்துக்குள் புகுந்து தேன்கூட்டை கலைத்துவிட்டார்கள். மான்சான்டோ இந்தியாவுக்கான பருத்தி ஆராய்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தெரிகிறது. ஆங்காங்கே இந்த ஆண்டு பருத்தியில் இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்குதல் ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆண்டு இது இன்னும் தீவிரமடையும். 2019-வாக்கில் புதிய தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாத நிலையில் பருத்திக்கு பல இலட்சம் டன் பூச்சிக்கொல்லிகளைக் கொட்டவேண்டிவரும். உலகின் தடை செய்யப்பட்ட அத்தனை வகையான பூச்சிக்கொல்லிகளும் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு மிகப்பெரிய குப்பைத்தொட்டியாக மாறும். மான்சான்டோவை அடித்து விரட்டிவிட்டோம் பார்த்தாயா என்று நம்மாழ்வாரிய மூடர்கள் கொண்டாடக்கூடும். பேயர், மான்சான்டோவைக் கையகப்படுத்திவிட்டதால் இன்னும் சில மாதங்களில் மான்சான்டோ என்ற நிறுவனம் தானாகவே கரைந்துவிடும். பருத்தியில் பூச்சி எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லாதபோது சந்தையில் பூச்சிக்கொல்லிகளின் ஜாம்பாவானான பேயர்-இன் வியாபாரம் எகிடுதகிடாக வளரும். அதனால் என்ன, சீப்பை ஒளித்துவைத்து கல்யாணத்தை நிறுத்திவிட்டதாக நம்மாழ்வாரிய மூடர்கள் மகிழ்வார்கள். அந்த மகிழ்ச்சியே நமக்கு நிறைவானதாக இருக்கும்!

அச்சே தின் ஒவ்வொரு துறையிலும் வந்துகொண்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்து செட்டில் ஆகும் எண்ணமிருந்தால் உடனடியாக மறுபரிசீலனை செய்யவும்.

உர மானியம் தொடர்பான சர்ச்சைகள், சில நல்ல முன்னேற்றங்கள்

உர மானியமானது இவ்வளவு ஆண்டுகளாக இரயில்களில் ஏற்றியவுடனோ அல்லது மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட கிட்டங்கியை வந்தடைந்தவுடனோ தரப்படும் பில்களை வைத்து உரத் தயாரிப்பு கம்பெனிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஜூன் மாதம் முதல் விவசாயிகளுக்கு உரம் வழங்கியதற்கான இரசீது ஆதார் எண்ணுடன் விவசாயினுடைய கைரேகையை வைத்து உறுதிப்படுத்திய பிறகே கம்பெனிகளுக்கு வழங்கப்படும். உர விற்பனையாளர்களுக்கு PoS கருவியை உரத் தயாரிப்பு கம்பெனிகளே வழங்குகிறது. அந்த கடைக்காரர்களுக்கான பயிற்சியை அரசு வேளாண்மைத்துறை வழங்குகிறது.

கேஸ் மானியம் மாதிரி பயனாளிகளுக்கு நேரடியாக வழங்காமல் பயனாளிகளை சேர்ந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு கம்பெனிகளுக்கு வழங்குவது ஒரு நல்ல ஆரம்பம்; பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திருட்டுக்களை தடுக்கமுடியும் என்பதோடு உண்மையாகவே எத்தனைபேர் நேரடி விவசாயிகள், எத்தனைபேர் விவசாயி என்ற போர்வையில் வரி ஏய்ப்பு செய்கின்றனர் என்ற மேப்பிங் செய்யவும் அரசுக்கு ஒரு வாய்ப்பு. கிடைக்கப்போகும் அந்த தரவுகளின் அடிப்படையில் 2019-வாக்கில் விவசாயிகளுக்கே நேரடி உர மானியம் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மானியங்களை ஒழித்து விவசாயத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட இஃது ஒரு ஆரம்பம் என்ற வழக்கமான பல்லவியை ஒருபக்கமாக வைத்துவிட்டு கடந்தகாலத்தைக் கொஞ்சம் பார்ப்போம்.

உலகப்போர்களின்போது மிச்சமான வெடிமருந்துகளை விவசாயத்துக்கு திருப்பிவிட்டு பசுமைப்புரட்சி உண்டாக்கி விவசாயத்தைக் கெடுத்தார்கள் என்ற வசனம் ரொம்பவும் அறுவையாக இருக்கிறது. அதனால் அதுவும் இப்போது வேண்டாம்.

உர நிறுவனங்களுக்கு யூரியா, பாஸ்பரஸ், பொட்டாஷ் உரங்களில் 21 கிரேடுகள், ஆலைகளில் பலதரப்பட்ட எரிபொருட்கள் பயன்பாடு இருப்பதால் மானியமும் பல்வேறு வகையில் வழங்கப்படுகிறது. உதாரணமாக யூரியா தயாரிக்க 80% செலவு கேஸ் வாங்குவதற்கு மட்டுமே. அந்த கணக்குகளின் அடிப்படையிலேயே மானியம் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல பங்களாதேசத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்குகள் பிரசித்தி பெற்றவை. சிட்டகாங் துறைமுகத்தில் நின்ற ஒரு கப்பலிலிருந்து 13500 டன் யூரியாவைக் காணவில்லை என்ற வழக்கு உலகப் புகழ் பெற்ற ஒன்று. தமிழகத்திலும் உரத்தைக் ‘காணவில்லை’ என்ற வழக்கு ஒன்றை சிபிஐ விசாரித்தது நினைவிருக்கலாம்.

1995-ஆம் ஆண்டு நரசிம்மராவ் மகன் பிரபாகர் ராவ் National Fertilizers Ltd நிறுவனத்தின் இரண்டு இலட்சம் டன் யூரியா இறக்குமதியில் ஊழலில் சிக்கி கைதானது ஒரு புகழ்பெற்ற வழக்கு. 2008-ஆம் ஆண்டு 3153 டன் பொட்டாஷ் சென்னை துறைமுகத்திலிருந்து ‘காணாமல் போன’ வழக்கை CB-CID விசாரித்தது மற்றொரு புகழ்பெற்ற வழக்கு. பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு பொட்டாசியம் குளோரைடு மடைமாற்றம் செய்யப்படுவது சாதாரணமாக நடந்துவந்த ஒன்று. மானியவிலையில் ஒரு டன் பொட்டாஷ் 4500 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு கிடைத்தபோது அதன் இண்டஸ்ட்ரியல் கிரேடு விலை 30000 ரூபாய்.

தனிநபர்கள்தான் என்றில்லை. அரசு நிறுவனங்களும் இத்தகைய மானிய உரங்களை ஆட்டையைப்போடுவது புதிதல்ல. TANFED மூலம் விவசாயிகளுக்கு வழங்கவிருந்த DAP உரத்தை TNPL நிறுவனமானது Sludge treatment-க்காக வாங்கியதும் மற்றொரு அரசுத்துறை நிறுவனமான பால்மர் லாரீ (Balmer Lawrie) உரங்களை ஒரு இரசாயன இடுபொருளாக ஆலைகளில் பயன்படுத்தியதுமாக ஒரு வழக்கு குளித்தலை நீதிமன்றத்தில் நடந்தது துறைசார் மக்களுக்கு நினைவிருக்கும்.

பல்லாயிரம் கோடிகள் புரளும் இந்திய உரச்சந்தை உலகளவில் பல கோடீசுவரர்களால் உற்றுநோக்கப்படும் ஒன்று. நார்வே நாட்டைச்சேர்ந்த புகழ்பெற்ற, மிகப்பெரிய உர நிறுவனமான யாரா (Yara) இந்தியாவில் அரசுத்துறை நிறுவனமான கிரிப்கோ (Krishak Bharathi Cooperative Ltd) உடன் ஒரு கூட்டு வர்த்தகத்தில் ஈடுபட ஒரு மில்லியன் டாலர் இலஞ்சம் கொடுத்து, பின்னர் அதை ஒப்புக்கொண்டு 48 மில்லியன் டாலர் அபராதம் கட்டியது வரலாறு.

உள்நாடு, வெளிநாடு என்றில்லை உள்ளூர் பிரமுகர்களும் உர மானியத்தை சாப்பிட ஊழலில் ஈடுபடுவது புதிதல்ல. கலப்பு உரம் தயாரிக்க மானியத்தில் வரும் நேரடி உரங்களை திருடும் பாணி அலாதியானது. பெரிய கிட்டங்கி உரிமம் வைத்திருக்கும் பலரும் கலப்பு உரத் தொழிற்சாலை வைத்திருப்பர். Use No Hooks என்று அத்தனை உரமூட்டைகளின் மீதும் எழுதியிருக்கும். ஆனால் லோடிங், அன்லோடிங் செய்யும்போது குத்தூசியைப் பயன்படுத்தி மூட்டைகளை கையாளுவதை ஊக்குவித்து கொஞ்சூண்டு உரம் சிந்திக்கொண்டே செல்லும்படி செய்யவேண்டியது; மூட்டைக்கு அரைகிலோவரை கொட்டிவிடும். அதைக் கூட்டி அள்ளி கலப்பு உரத்துடன் கலந்துவிட்டால் காசு!

வேப்பெண்ணெய் பூசப்பட்ட யூரியா வருவதற்குமுன் கோழித்தீவனம், டெக்ஸ்டைல், மீன்பண்ணை என பல இடங்களில் மானியவிலை யூரியா மடைமாற்றம் செய்யப்பட்டது வரலாறு.

விவசாயி என்ற போர்வையில் பல்லாயிரம்பேர் சுரண்டித்தின்று வயிறு வளர்க்கின்றனர். வெகுசிலர் அதன் உச்சகட்ட சுரண்டலின் அடையாளமாக திகழ்கின்றனர். ஓராண்டில் ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டிய ஒரு புகழ்பெற்ற விவசாயி ஜெயலலிதா; வேட்புமனுவில்கூட தொழில் என்ற இடத்தில் விவசாயி என்று குறிப்பிட்டிருந்தார். சரத் பவார் மகள் கடலைமிட்டாய் புகழ் சுப்ரியா சூலே ஏக்கருக்கு ஒரு கோடி வருமானம் ஈட்டும் மற்றொரு விவசாயி. வடக்கில் அமிதாப் பச்சன் என்ற இன்னொரு விவசாயிகூட இருக்கிறார்.

ஊழலை ஒழிப்பது, இயற்கை விவசாயம் செய்வது போன்ற வார்த்தைகள் பொத்தாம்பொதுவான ஒன்று. அதற்கு வழிமுறைகளோ, இலக்குகளோ கிடையாது. சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் போடும்போதெல்லாம் ஒரு ரூபாயில் பத்துகாசு மட்டுமே பயனாளிகளைச் சென்றடைகிறது என்று சொல்வது சம்பிரதாயமாகிவிட்டது.

ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு வழங்கி, மானியங்களை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தி, பயனாளிகளுக்கும் அரசுக்கும் மட்டுமே உறவு இருக்கவேண்டும் ஏனையவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று மன்மோகன்சிங் என்ற ஒருவர் சொன்னபோது உலகவங்கியின் கைக்கூலி என்று வசைபாடப்பட்டார். இந்தியாவில் இதெல்லாம் வாய்ப்பேயில்லை என்று கெக்கலித்த அமாவாசைகள், நாகராஜசோழன்களாகி கடைசியில் அதே வழிமுறைகளை ஒரு சமஸ்கிருதப் பெயர்மட்டும் வைத்துவிட்டுப் பின்பற்றுவதையும் “வரலாறு என்னை மதிப்பிடட்டும்” என்று அவர் சொன்னதையும் நினைத்துப்பார்க்க வேண்டயிருக்கிறது.

விவசாயிகளின் வருமானத்துக்கும் வரிவிதிக்கவேண்டும் என்று பிபேக் தேப்ராய் அண்மையில் சொன்னபோது அஃது அவருடைய சொந்தக்கருத்து என நிதி ஆயோக் கூட பின்வாங்கிக்கொண்டதும், அதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்ட கருத்தலைகளையும் கண்டோம். விவசாயம் என்ற புனித பசுவைத் தொட யாரும் விரும்புவதில்லை. நிலம் வைத்திருந்தாலே விவசாயி என்ற அடைப்பு கிடைத்துவிடுகிறது. குத்தகை வருமானத்துக்கு ஏன் வரிவிதிக்கக்கூடாது என்ற கேள்வியைக்கூட கேட்க பயப்படவேண்டிய சூழலே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பி விமான நிலைய வாசலை மிதித்தவுடன் விவசாயி ஆகிவிடுகின்றனர்.

ரோலக்ஸ் வாட்ச் நாவலில் வரும் பவர் புரோக்கரான நாயகன் ஒருமுறை விருது ஒன்றை ‘வாங்கித்தர’ டெல்லி போனவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பார். அங்கிருக்கும் கொள்கைப்பிடிப்புமிக்க அதீத தொழில்நுட்ப அறிவு கொண்ட மாணாக்கர்களுடன் உரையாடும்போது பல கருத்துக்களை நடகமுறைக்கு ஒவ்வாதவொன்று மனதளவில் புறக்கணிப்பார். ஆனாலும் ஆரம்பகாலத்தில் அவருடைய அம்மா நூறுநாள் திட்டத்துக்கு வேலைக்கு போனபோது கமிசன் இல்லாமல் சம்பளம் கிடைக்காததையும் அதற்கு அத்தகைய மாணக்கர்களே போராடி கமிசன் இல்லாமல் கூலி கிடைத்ததையும், அவர்களே சமூகத்தின் அடித்தளத்தில் ஒருவகையான சமநிலையைக் கொண்டுவருவதையும் நாவலாசிரியர் சரவணன் சந்திரன் அழகாக விளக்கியிருப்பார். மன்மோகன்சிங், பிபேக் தேப்ராய் போன்றவர்களை அப்படித்தான் பார்க்கவேண்டியிருக்கிறது.

உர விற்பனையை குறைந்தபட்ச தொழிற்கல்வியறிவு உடையவர்கள் மட்டுமே நடத்தவேண்டும் என்று மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை பின்வாசல் மூலமாக உடைத்துவிட்டிருக்கும் உள்ளூர் பிரமுகர்களை நினைத்தாலே சிலிர்க்கிறது. உபரிகளைச் சுரண்டித் தின்னத்தான் எவ்வளவு கூட்டம்.

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து

அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் குறித்து பலரும் கவலை தெரிவித்தாலும் சில அருவருப்பான கருத்துக்களையும் பார்க்கமுடிகிறது. சம்பளம் பத்தலன்னா வேற வேலைக்கு போலாம்ல, இலஞ்சம் கொடுத்து வேலைக்கு வந்தவனுக்கெல்லாம் போராட தகுதி உண்டா, கடைசியில் வழக்கமான பல்லவியான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது மாதிரி சில.

சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு போகலாமே என்று போக்குவரத்துக் கழக ஓட்டுனர், நடத்துனரைப் பார்த்து கருத்து முத்தை உதிர்ப்பவர்கள் நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்களைவிட கீழான தற்குறிகள். அவர்களுக்கு கீழ்மட்டத்திலிருக்கும் தொழிலாளர் சமூக இயக்கத்தைப் பற்றிய புரிதல் துளியும் கிடையாது என்றே சொல்லலாம்.

ஓட்டுனர், நடத்துனர் அத்தனைபேரும் தங்களது குலத்தொழிலைவிட்டு வெளியேறி ஏற்றுக்கொண்ட ஒரு நாகரிகமான ஆரம்பகட்ட தொழில். ஏதாவது ஒரு கல்லூரி, பாலிடெக்னிக், ஐடிஐ போன்றவற்றில் படிப்பை முடித்தோ முடிக்காமலோ தட்டுத்தடுமாறி அடைந்த தொழில். யாருக்கும் டிரைவர் ஆகவேண்டும் என்ற இலட்சியமெல்லாம் இருக்காது; ஒரு வேலைக்கு அலைமோதுபவர்களை தானாகவே இழுத்துக்கொள்ளும் தொழில்.

இன்றைய தேதியில் போர்வெல் லாரிகளில் பணிபுரியும் டிரில்லருக்கு மாதம் முப்பதாயிரம் சம்பளம். குறைந்தது ஒரு இலட்சம் அட்வான்ஸ்; கார்ப்பரேட் வார்த்தையில் சொன்னால் அது இம்ப்ரெஸ்ட் கேஷ். வடமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் (இதன் டெக்னிகல் டெர்ம் லைன் வண்டி) கேஸ்/பெட்ரோல் டேங்கர், டிரைலர், காற்றாலை விசிறி லாரி ஓட்டுனர்களுக்கு குறைந்தபட்ச ஆரம்ப சம்பளம் இருபதாயிரம். BE படித்தவனுக்கு 10000 சம்பளத்தில் வேலை கிடைக்காதபோது டிரைவர்களுக்கு ஆரம்ப சம்பளமே 20000 என்பது போதாதா என்ற கேள்வி எழக்கூடும்.

வேறு தொழிலில் புகாமல் குலத்தொழில் செய்யும்போது எப்படி ஒரு இழிவான பார்வை சொந்த சாதிக்காரர்களாலேயே வைக்கப்படுகிறதோ அதே பார்வைதான் லைன் வண்டி ஓட்டுனர்களுக்கும். விவசாயந்தான் பண்றான், சலூன்கடைதான் வச்சிருக்கான், ஸ்வீப்பராத்தான் இருக்கான் என்ற அளவில்தான் டிரைவராத்தான் போறான் என்ற அங்கீகாரமும். கல்யாண சந்தையில் ஒரு VAO சம்பாதிப்பதைவிட அதிகமாக சம்பாதிக்கும் ஓட்டுனர்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பட்டவர்கள். அந்த ஒரே காரணத்துக்காக கல்யாணம் ஆகும்வரை CL Driver-ஆக லாரி கிளீனர் சம்பாதிப்பதைவிட குறைவான சம்பளத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரிகின்றனர். சிலர் மினி ஆட்டோ ஓட்டுவது, ஜேசிபி, பால்வண்டி, டேக்ஸி என நாட்களைக் கடத்துகின்றனர்.

நல்ல வேலையும் அமையாமல், திருமணமும் செய்யமுடியாமல், சொற்ப சம்பளத்தில் படிக்கவும், வேலைக்கும் செல்லும் பெண்களை எந்நேரமும் பார்த்துக்கொண்டே பணிபுரிவது முப்பதைத் தொடும் இளைஞர்களுக்கு நரகம். PhD முடித்துவிட்ட ஒரே காரணத்துக்காக பல்கலைக்கழகமே வேலைபோட்டுத் தரவேண்டும், வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் போகமாட்டேன் என்று தடித்தனத்துடன் பொழுதைக்கழிப்பவர்களுடன் ஓட்டுனர், நடத்தனர்களை ஒப்பிடுவது சாடிஸ்ட் மனநிலை.

பி. எஃப், கிரிஜுட்டி, படி என்பதெல்லாம் தொழிலாளர்களின் உரிமை. ஒரு நல்ல முதலாளிக்கு தெரியும் திறமையான ஊழியர்கள் இருக்கும்வரைதான் தனக்கு ஃபைவ் ஸ்டார் வாழ்க்கை என்று. இந்த அடிப்படை புரிதல்கூட இல்லாத ஒரு தட்டையான மனநிலை கொண்ட ஒருசாரார் நம்மிடையே இருப்பது குறித்து அதிர்ச்சியடைய தேவையில்லை. கடைநிலை மக்களின் உபரியைச் சுரண்டி வளர்ந்த ஆண்டபரம்பரை சிந்தனை அவ்வாறுதானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதி, இட ஒதுக்கீடு குறித்து பேசும்போதெல்லாம் எல்லா உயர்சாதியினரும் பணக்காரர்கள் அல்லர்; பல பிராமணர்கள் வறுமையில் உழல்கின்றனர் என்ற வாதத்தை அடிக்கடி கேட்டிருக்கலாம். வறுமையில் உழன்றாலும் லாரி டிரைவராக, கிளீனராக இருக்கும் பிராமணரைக் கண்டதுண்டா? அப்படியெனில் அந்த தொழில் யாருக்கானது, ஏன் அதன்மீது இவ்வளவு வன்மம் என்பது எளிதாக விளங்கும்.

பவர் ஸ்டியரிங் இல்லாத டிராக்டரை ஓட்டிய அனுபவமிருந்தால் சாதாரண ஸ்டிரியங் உள்ள பேருந்தை ஓட்டுபவர்களின் உழைப்புகுறித்து யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். லைன் வண்டி ஓட்டுனர்களுக்காவது தூக்கம் வந்தாலோ, வயிற்று உபாதைகள் ஏற்பட்டாலோ தங்கள் விருப்பப்படி வண்டியை நிறுத்தமுடியும். ஆனால் அரசு பேருந்து ஓட்டுனர்கள் அந்த பஸ் ஸ்டாண்டு ஓட்டல், கக்கூஸ் தாண்டி எதையும் கற்பனைகூட பண்ணமுடியாது. சம்பளம் கொடுக்கவே வழி இல்லாததால் அளவுக்கதிகமாக ஓவர்டைம் பார்க்கும் ஓட்டுனர் நடத்துனர்கள் படும் பாடு ஏசி அறையில் இருப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

திருமண அழைப்பிதழ்களில் TNSTC நடத்துனர், TNSTC ஓட்டுனர் என்று பெருமையாக போட்டுக்கொண்டாலும் அவர்களுக்கு கிடைக்காத கல்வியும், நல்ல வேலையும் அவர்களது வாரிசுகளுக்கு கிடைத்திருப்பதை அந்த அழைப்பிதழே சொல்லும். அதைத் தாண்டி கான்ட்ராக்டுகளில், ஸ்பேர் பார்ட்ஸ் வாங்குவதில் ஓட்டுனர், நடத்துனர், டிக்கெட் செக்கர் போன்றவர்களுக்கும் கட்டிங் உண்டு என்பதெல்லாம் அளவுக்கதிமான இன்டெலெக்சுவல் ஹேவிளம்பியின் பின்விளைவுகள்.

போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கேட்பது அவர்களுக்கு முறைப்படி வந்து சேரவேண்டிய பணத்தை. இன்று அதிமுக தொழிற்சங்க அணி சார்பாக பேருந்துகளை இயங்கிக்கொண்டிருக்கும் ஊழியர்களின் உரிமைக்கும் சேர்த்துதான் இந்த பணிநிறுத்தம். ஏதோ ஒரு விமான நிலையத்தை இராஜ்கோட் பஸ் ஸ்டேன்ட் என்று போட்டோஷாப் செய்து போட்டு ஹேவிளம்பி செய்யும் கூட்டத்துக்கு இதெல்லாம் புரியாது.

வெற்று பந்தாவுக்காக எழுப்பப்படும் கல்விமுறை குறித்த கோஷங்கள்

ஒருசாரார் சமச்சீர் கல்விமுறையானது சிபிஎஸ்ஈ-க்கு குறைவான பாடத்திட்டத்தையே கொண்டிருக்கிறது என்ற பழைய பல்லவியை விடாது பாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படியே இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். பலதரப்பட்ட சமூக, பொருளாதார சூழலில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவது அரசின் கடமை; அதை செவ்வனே செய்கிறது அரசு இயந்திரம்.

ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், சாதீய வெறி குறித்த நோக்கங்களை மறந்தும் தொடமாட்டார்கள்; சமச்சீர் கல்வித்திட்ட புத்தகங்கள் அச்சடிப்பதை, திருவள்ளுவர் படத்துக்குமேல் போஸ்டர் ஒட்டுவதை, நடுவணரசு நிதியிலிருந்து பள்ளிகளின் உள்கட்டமைப்பை உயர்த்த தரப்பட்ட பெருந்தொகையில் எட்டணா செலவு செய்யாமல் திருப்பியனுப்பி தனியார் பள்ளிகளின் வியாபாரத்துக்கு துணைபோவதை சிபிஎஸ்ஈ-தான் உசத்தி எனப் பாடும் அறிவுசீவிகள் மறந்தும் தொடமாட்டார்கள்.

பள்ளி முடித்து, கல்லூரியில் சேர்ந்து எப்படியாவது ஒரு பி. ஏ, ஒரு பிஎஸ்சி வாங்கிக்கொண்டு பெரும்பாலோனோர் நகர்ந்துவிடுகிறார்கள். பல தலைமுறைகள் கல்வி வாசனையே இல்லாமல் இருந்தவர்களுக்கு அஃது ஒரு சாதனை. அவனவன், அவனவன் குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்ற வர்ணாசிரம சிந்தனையை தகர்த்த முதல் அடி அனைவருக்குமான கல்வியில்தான் ஆரம்பமாயிருக்கிறது. அதை தாங்கமுடியாத ஒரு கூட்டம் குலக்கல்வியை ஒருவிதமான modernized protocol மூலம் நிறுவ முயற்சிப்பதன் நாகரிக வெளிப்பாடுதான் சிபிஎஸ்ஈ உசத்தி, நாட்டுமாடு, இயற்கை விவசாயம், எட்சட்ரா.

ஒரு பி.ஏ., பி.எஸ்.சி வரை நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதற்கப்புறம் நடக்கும் கூத்துகளை அந்த சிபிஎஸ்ஈ உசத்தி எனப் பாடும் ஆர்வலர்கள் தொடக்கூட மாட்டார்கள்.

தமிழகத்தின் ஆறேழு பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர துணைவேந்தர்கள் கிடையாது. அண்ணா பல்கலைக்கழகம் துணைவேந்தர் கையொப்பம் இல்லாத பட்டங்களை வழங்கக்கூடாது என இரமதாசு அறிக்கை விட்டு கேட்டும் பதில் சொல்லும் நிலையில் உயர்கல்வித்துறை இல்லை.

பத்தாண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர்களைத்தான் துணைவேந்தராக நியமிக்கவேண்டும் என்ற விதியைக் காற்றில்விட்டு இணைப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது ஒரு பல்கலை என்றால் உதவிப்பேராசிரியரை துணைவேந்தராக்கியது இன்னொரு பல்கலைக்கழகம்.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிகளுக்கு ஆளே கிடைக்காத பற்றாக்குறை நிலவுவதாகச் சொன்னால் பீகார், சட்டீஸ்கார் வரை சிரிப்பார்கள். ஓய்வுபெற்றவர்களை துணைவேந்தர்களாக்குவது, பதவிநீட்டிப்பு செய்வது எதனால் என்பது அவர்களது சாதிய பின்புலத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தமிழக பல்கலைகளுக்கு முழுநேர வேந்தரும் கிடையாது என்பது கொடுமைக்கு வந்த கொடுமை.

முழுநேர ஆய்வுப்பணிகளில் இருந்து விலகி பதிவாளர், முதல்வர், துணைவேந்தர், திட்டக்குழு போன்ற மாநில அரசுக்கான சிறப்பு திட்டங்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் பேராசிரியர்கள் PG, PhD மாணக்கர்களுக்கு எதற்காக கைடு ஆகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். பாதிநாட்கள் கேம்ப், மீட்டிங் என்றபெயரில் அலுவலகத்தில் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் மற்ற மீட்டிங்குகளில் பிசியாக இருப்பார்கள். ஏதேனும் ஒப்புதல் பெற, ஆய்வுமுடிவுகள் குறித்து கலந்துரையாட ஆள் இல்லாதபட்சத்தில் மாணாக்கர்கள் சும்மா நாட்களைக் கடத்துவது தவிர்க்க இயலாத்தாகிவிடுகிறது. கூடுதல் பதவிகளைக் கொண்டிருக்கும் பேராசிரியர்களை கைடு ஆகக் கொண்டிருக்கும் மாணாக்கர்கள் எத்தனைபேரால் சரியான நேரத்துக்கு கோர்ஸ் முடிக்க முடிந்த்து என்பதை பார்த்தாலே தெரியும்.

ஜெனரிக் மருந்துகள் குறித்த செய்திகளைப் படித்துவருகிறோம். இந்த ஜெனரிக் கெமிக்கல் மாதிரியான சிந்தனைதான் ஆய்வுகளுக்கு இருக்கும் பெரிய முட்டுக்கட்டை. சில நுண்ணிய ஆய்வுகளுக்கு உயர்தரமான high precision இரசாயனம், சாதனங்கள் இல்லாமல் செய்யமுடியாது. ஆனால் நடப்பது என்ன? Price contract அல்லது Rate Comparison List என்றபெயரில் மூன்று கொட்டேஷன் வாங்கி குறைவான விலையைக் குறிப்பிடும் முகவர்களிடமிருந்து ஆண்டுமுழுவதும் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்படும்.

உயரதிகாரிகளை அனுசரித்து மனம்கோணாமல் நடக்கும் சிலர் அத்தகைய கமிட்டியில் இருந்து இந்த கெமிக்கலை/சாதனத்தை இந்த கம்பெனியிலிருந்து இன்ன விலைக்குத்தான் வாங்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள். அதில் பெரும்பாலும் ஜெனரிக் வகைகளே இருக்கும். பொட்டாசியம் பெர்மாங்கனேட் லேப் கிரேடு என்றால் இருபது கம்பெனிகள் சப்ளை செய்யும். அதில் குறைவான விலையில் வருவதைத்தான் வாங்குவார்கள். அத்தகைய பொருட்களால் சில ஆய்வுகளின்போது எதிர்பார்த்த precision-ஐத் தர இயலாது. உனக்கு தேவை பொட்டாசியம் பெர்மாங்கனேட்தானே, இந்தா புடி, அந்த கம்பெனி இந்த கம்பெனின்னு கேக்கற வேலையெல்லாம் இருக்கப்படாது என்று சொல்லப்பட்டுவிடுகிறது. குறிப்பிட்ட கம்பெனி தயாரிப்பு இன்வாய்சில் இருந்தாலும் சப்ளை செய்யப்படுவது பெரும்பாலும் ஏதாவது குப்பையாகவே இருக்கும்.

இந்த சூழலில் Current Science சஞ்சிகையைத் தாண்டி Cell, Science, Nature-இல் ஆய்வுக்கட்டுரைகள் வரும் என்பதெல்லாம் சர்க்கரை என்று எழுதி தொட்டு நக்கிப் பார்ப்பது மாதிரிதான். பத்து இருபது இலட்சம் கொடுத்து வேலைக்கு சேர்பவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

மார்க்கெட்டிங் மாயாஜாலங்கள்

குஜராத்தின் இராஜ்கோட் நகரை மையமாக வைத்து ஜுனாகத், பாவ்நகர், ஜாம்நகர், சுரேந்திரநகர், அம்ரேலி எல்லாம் சேர்த்து செளராஷ்ட்ரா பிராந்தியம் எனப்படுகிறது. அப்பகுதி மக்களின் பண்புக்கூறுகளுள் ஒன்று நன்றாக எண்ணெய்/நெய் வடிய வடிய மதியம் சாப்பிட்டுவிட்டு ஒரு குட்டித்தூக்கம் போடுவார்கள். மதியம் 1 – 3 பெரும்பாலான அலுவலகங்கள் மூடிக்கிடக்கும். போன் எடுக்க மாட்டார்கள்; சிலர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தூங்குவார்கள். வியாபார ரீதியாக வரும் வெளியூர்வாசிகள் அனுசரித்து போகவேண்டிய முக்கியமான நாகரிகம் இது.

அங்கிருந்த காலகட்டங்களில் மதிய உணவுக்குப் பிறகு எங்காவது மரத்தடி கடைகளில் உட்கார்ந்து மூலிகை பானம் பருகிக்கொண்டு ‘ஜீஸ் படி ஹை மஸ்த் மஸ்த்’ போன்ற கவித்துவமான பாடல்களைக் கேட்டவாறு அலைபேசி வழியாக காதலித்துக்கொண்டு நேரத்தைக் கொல்வது வாடிக்கையாக இருந்தது. 25 வயதுக்குள் கல்யாணமாகிவிடுவதை இயல்பாகக் கொண்டிருந்த சமூகத்தையும், கால்களில் காப்பு, வண்ணமயமான உடை, கைத்தடி, பெரிய மீசை, கடுக்கன் சகிதம் சுற்றிக்கொண்டிருக்கும் விவசாயிகளையும், பார்ப்பதற்கு எளிமையான வாழ்க்கை என்றாலும் ஷேர் ஆட்டோக்களில்கூட உயர்சாதி ஆட்களின் அருகில் உட்காராமல் தள்ளி உட்கார்ந்து செல்லும் மக்களைப் பார்த்து புரிந்துகொள்வதற்கு அந்த மதிய வேளைகள் உதவியது.

அப்போது, ஒரு வட இந்திய நிறுவனத்தின் பிரபலமான பருத்தி விதை இரகமாக “அக்கா” (Akka) இருந்தது. அந்த இரகத்துக்கு ஏகப்பட்ட கிராக்கி. MRP-க்கு மேல் கொடுத்து விவசாயிகள் வாங்கினார்கள். பல விவசாயிகள் தொலைதூரங்களில் இருந்து வந்து மார்க்கெட் முழுவதும் விசாரித்தும் விதை கிடைக்காமல் திரும்பிச் சென்றார்கள். விதைப்பெட்டிகளை ஏற்றிவரும் லாரி குஜராத் எல்லையைத் தொட்டுவிட்ட தகவல் வந்தாலே பரபரப்பு தொற்றிக்கொள்ளுமளவுக்கு இருந்தது.

பரிச்சயமான வியாபாரிகளின் கடைகளில் அமர்ந்திருக்கும்போது அங்கு வந்து விசாரிக்கும் விவசாயிகளைக் கூர்ந்து கவனித்து குஜராத்தியில் சில வார்த்தைகளைக் கற்க ஆரம்பித்திருந்தேன. “அக்கா பியாரன் ச்சே?” (அக்கா விதை இருக்கிறதா?) என்று கேட்டு பலர் தொலைதூர ஊர்ப்பெயர்களைச் சொல்லி ஒருவர் பின் ஒருவராக சிறிது இடைவெளியில் பலர் வந்து சென்றார்கள். மதியம் ஒரு சாலையோரக் கடையில் மூலிகைப்பானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாமல் தெரிந்த அந்த வண்ணமயமான உடையணிந்த விவசாயிகள் ஒரே வேனில் ஏறிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்தநாள் இதே ஆட்களை பக்கத்து ஊர் மார்க்கெட்டில் பார்க்கையில் அடையாளம் தெரிந்தது; அவர்கள் வந்திருந்த வேன் உட்பட. சிலமாதங்கள் கழித்து அந்த கம்பெனியில் வேலை செய்த ஒருவர் நண்பரானார். நேரடியாக அவரிடம் இதைப்பற்றி கேட்டபோது சீசன் ஆரம்பிப்பதற்கு முன்பாக டிமாண்டை கூட்டவும், கடைக்காரர்களிடம் இரகத்திற்கு டிமாண்ட் இருப்பதற்கான நம்பிக்கையை உண்டாக்கவும், மற்ற ஊர்களில் தட்டுப்பாடு நிலவுவதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவும் கம்பெனி தரப்பில் ஒரு புதிய உபாயத்தைக் கையாண்டதாகவும் தெரிவித்தார்.

********************************************

திண்டுக்கல் அருகே ஒரு புதிய உணவகம் திறந்தார்கள். விசாலமான பார்க்கிங் வசதியுடன் பிரதான சாலையில் அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் ஒரு திறமையான இளைஞர். அருகிலிருந்த ஆட்டோ பைனான்ஸ் கம்பெனி அதிபரிடம் ஒரு டீல் பேசியிருக்கிறார். அதன்படி தவணை கட்டாததால் ஜப்தி செய்யப்பட்ட வாகனங்களை பைனான்ஸ் கம்பெனியின் இடத்திலிருந்து எடுத்துவந்து உணவகத்தின் முன்புறம் உள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திக்கொள்வது. கார், பைக் என எதை ஜப்தி செய்து எடுத்துவந்தாலும் உணவகத்தின் முன் நிறுத்தச்செய்து, அவற்றைத் துடைத்து சுத்தபத்தமாக பார்த்துக்கொண்டார்.

பளிச்சென்ற கார், பைக்குகள் நிறைய நிற்பதால் நிச்சயமாக நல்ல உணவகமாக இருக்கும் என்று காரோட்டிகள் நிறுத்தி, குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு செல்ல ஆரம்பித்தனர். ஒருகட்டத்தில் வோல்வோ பேருந்துகள்கூட நின்று செல்ல ஆரம்பித்தன. ஒரு செக்யூரிட்டி நிறுத்தி கார்களை ஒழுங்குபடுத்தி பார்க் செய்யுமளவுக்கு வியாபாரம் வளர்ந்துவிட்டது.

************************************

மேற்கண்ட இரண்டுமே விற்பனையை அதிகரிக்க செய்வதற்கான தந்திரோபாயங்கள். முன்னது ஒரு கார்ப்பரேட் கம்பெனியால் செய்யப்பட்டது. பின்னது ஒரு தனிநபரால் செய்யப்பட்டது. இரண்டிலுமே வாடிக்கையாளருக்கு பொருள் குறித்த தவறான தகவல்களைத் தந்தோ, தரக்குறைவான பொருளை விற்றோ ஏமாற்றவில்லை. இஃது ஒரு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜி என்று வைத்துக்கொள்வோம்.

ஆனால் பொதுப்புத்தியில் தனிநபர் செய்தால் புத்திசாலித்தனம் என்றும், கம்பெனி செய்தால் ஏமாற்றுவேலை, சதி, தில்லுமுல்லு என்றும் சொல்லப்படுகிறது. தனிநபரின் face value-க்காக அனுசரித்துக்கொள்ளும் நாம், முகமில்லாத கம்பெனி என்பதால் முஷ்டியை மடக்குகிறோமா அல்லது different formats of business என்பது குறித்த புரிதல் இல்லையா? இது சரியா, தவறா, வேறு ஏதாவது வழிவகை உண்டா?

உங்களுக்கு தோன்றுவதை கமென்ட்டில் சொல்லுங்கள்.

ஹைபிரிட் தக்காளியும், மியூடன்ட் தக்காளியும் – சில முட்டாள் ஆர்வலர்களும்

தமிழகத்தில் ஹைபிரிட் தக்காளி விதைகள் ஆண்டுக்கு தோராயமாக ஐந்து டன் விற்கிறது. ஓர் ஏக்கர் நடவுசெய்ய 60 கிராம் மட்டுமே போதுமானது. ஏக்கருக்கு 20 டன் தக்காளிப்பழ மகசூல் கிடைக்கும். அப்படியேனில் ஓராண்டுக்கு எத்தனை ஏக்கர்களில் எத்தனை டன் தக்காளி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதில் கணிசமான அளவு கேரளாவுக்குச் செல்கிறது.

நாட்டுத் தக்காளி ஓர் ஏக்கர் நடவுசெய்ய 150 கிராம் விதை தேவைப்படும். ஓர் ஏக்கருக்கு தோராயமாக 10 டன் மகசூல் கிடைக்கும். இதன்படி எத்தனை டன் விதை ஆண்டுக்குத் தேவை, ஹைபிரிட் இரகங்களின் பாதி மகசூல் மட்டுமே ஏக்கருக்கு கிடைப்பதால் கூடுதலாக எத்தனை ஆயிரம் ஏக்கர் வேண்டும், அதற்கான தண்ணீர், இடுபொருட்கள், உடலுழைப்பு என ஆகும் கூடுதல் விரயம் எவ்வளவு என்ற கணக்கையும் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நாட்டுத்தக்காளி இரகங்களை மட்டுமே உண்ணவேண்டும், ஹைபி்ரிட் இரகங்களை புறக்கணிக்கவேண்டும் என்று அவ்வப்போது சில நம்மாழ்வாரிசம் பேசும் மூடர்கள் கருத்து வெளியிடுவார்கள். அத்தகைய மூடத்தனத்தின் ஏகபோக குத்தகையை வைத்திருந்த பசுமை விகடனை விஞ்சுமளவுக்கு குமுதத்தின் ‘மண்வாசனை’ இப்போது களம் இறங்கியிருக்கிறது.

விவசாய ஆர்வலர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ஒரே நாட்டுத்தக்காளி இரகம் பெரியகுளம் 1 எனப்படும் PKM 1. கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் இரகங்கள் அதிக வெயிலைத் தாங்கும் தன்மையற்றவை, செயற்கையாக விலையேற்றம் செய்ய விதைகளைப் பதுக்கிவிட்டார்கள், அரசு விதைப்பண்ணை அதிகாரிகளும் அதற்கு துணைபோகிறார்கள் என்று ஓர் ஆர்வலர் விகடனில் எழுதியதை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அடிப்பொடிகள் ஆடியதைப் பார்த்து தொழில்முறையில் விதை விற்பனையில் ஈடுபட்டுள்ள பலரும் முகம் சுழித்தனர்.

விஷயத்துக்கு வருகிறேன். நாட்டு, சுதேசி ஆர்வலர்களின் ஆதரவைப் பெற்ற இரகமான PKM1 என்பது அன்னஞ்சி என்ற உள்ளூர் இரகத்தின் mutant ஆகும். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நியூக்ளியோடைடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி mutants உண்டாக்கப்படுகிறது. ஹைபிரிட் இரகங்களில் ஒரு செடியிலுள்ள மகரந்தத்தூள் மற்றொரு செடியின் சூல்முடி மீது தூவப்பட்டு விதை உண்டாக்கப்படுகிறது. Mutant இரகங்களில் விளையும் காய்கள் எவ்வளவு பாதுகாப்பனவையோ அதே அளவுக்கு ஹைபிரிட் இரகங்களில் விளையும் காய்களும் பாதுகாப்பானவை. மியூடன்ட்-களை ஏற்றுக்கொள்பவர்கள், ஹைபிரிட்-களை அறிவியலுக்கு புறம்பாணது இயற்கைக்கு மாறானது எனும்போது மூடர்கள் என்று சொல்லாமல் என்னவென்று சொல்வது?

பள்ளி, கல்லூரிகள் ஒரேநேரத்தில் திறக்கப்படுவதோடு வைகாசி மாதம் பல முகூர்த்தங்கள் இருப்பதால் ஆண்டுதோறும் ஜூன் மாதம் காய்கறிகளின் விலை அதிகமாகவே இருக்கும். அதையொட்டி அடுத்தமாதம் பல ஆர்வலர்கள் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கப்போவதைக் காண தயாராகுங்கள்!

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு கொண்டுவந்த ஒரு சட்டத் திருத்தம் – அதில் ஓட்டை போடும் சில்லறைத்தனங்கள்

உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்க மத்திய அரசு ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவந்தது. அதன்படி, உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியாக டிப்ளமோ அக்ரியாவது முழுநேரப் பாடத்திட்டத்தில் படித்திருக்கவேண்டும். இதுவரை குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற எதுவுமே இல்லாததால் எஸ்எஸ்எல்சி பெயிலானவர்கள்கூட உரிமம் வாங்கிக்கொண்டு புண்ணாக்கு, தவிடு, மூக்கணாங்கயிறு போல ஒரு சாதாரண சரக்காகவே விற்பனை செய்துவருகின்றனர்.

இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் சங்கம் பல்வேறு வகையில் கோரிக்கையாகவும், நெருக்கடியாகவும் அரசிடம் வேண்டுகோள் விடுத்ததன் விளைவாக ஐதரபாத்திலுள்ள MANAGE வாயிலாக Diploma in Agricultural Extension Services for Input Dealers என்ற பட்டயப்படிப்பு வழங்க ஏற்பாடானது. இதன்படி பிரதி ஞாயிறு ஒரு வகுப்பு என்றவீதம் 48 நாட்கள் ஓராண்டில் முடித்து தேர்வெழுதினால் பட்டயம் வழங்கப்படும்; இதன்மூலம் அவர்களது உரிம நீட்டிப்பு செல்லுபடியாகும் என்பது ஏற்பாடு.

நஞ்சில்லா உணவு, மரபுவழி மாண்பு, சிறுதானிய சிற்றுண்டி என்றெல்லாம் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நம்மாழ்வாரியம் பேசும் மூடர்கள் வேளாண்மைப் பல்கலைக்கழத்தை இழுத்து மூடவேண்டும் என்கிற தொணியிலும் பேசிவருகின்றனர். ஜெயமோகன் போன்ற இந்துத்வா ஆதரவு எழுத்தாளர்கள் விவசாய பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவாக்கறைகள் என்று நம்மாழ்வார் புகழ்பாடும் புத்தகங்களுக்கு முன்னுரை எழுதிக்கொடுத்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக்கொள்கின்றனர். ஆனால் நஞ்சில்லா உணவு என்பது எப்படி திடீரென்று சாத்தியமாகும், அதற்கான முதற்படி எது, படிப்படியாக எப்படி, எந்த திசையில் அரசாங்க திட்டங்கள், வேளாண்மைத்துறை கொள்கை முடிவுகள், தனியார் இடுபொருள் நிறுவனங்களின் உட்கட்டமைப்புகள் பயணிக்கவேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாமல் Cow excreta மூலம் வல்லரசாகிவிடலாம் என்று கனவுகாணும் அவர்களது அறியாமையையும் நாம் அரவணைத்தே செல்ல வேண்டியிருக்கிறது.

தமிழ்நாடு வேளாண் கவுன்சில் சட்டம் 2009 முன்மொழிந்தது இத்தகைய பல சீர்திருத்தங்களைத்தான். ஆனால் அஃது இங்கே கிடப்பில் போடப்பட்டாலும் மத்திய அரசால் வேறு பெயரில் கொஞ்சம் உயிரூட்டப்பட்டது. அதை முடக்கும் முயற்சியில ஈடுபட்ட வியாபாரிகள் சங்கங்கள் பின்வாசல் வழியாக நுழைந்தது இருக்கட்டும். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும் இத்தகைய வகுப்புகளை நடத்திவருவது அங்கிருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். இதற்கு, அரசின் கொள்கை முடிவுகளுக்கு பல்கலைக்கழகம் கட்டுப்பட்டாகவேண்டும் என்று கொடுக்கப்படும் வழவழா கொழகொழா விளக்கங்களைக் கேட்டு பச்சைக்குழந்தைகூட சிரிக்கக்கூடும்.

இரண்டு ஆண்டுகள் டிப்ளமோ அல்லது நான்கு ஆண்டுகள் பி. எஸ். சி விவசாயம் முழுநேரக் கல்லூரியில் பயின்றவர்களுக்கு போதுமான ஞானம் இருக்காது என்றால் வாரம் ஒரு வகுப்பு வீதம் 48 வாரங்கள் முடித்த ஒரு நபரால் என்ன செய்துவிட முடியும்? 45 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த 48 மணிநேர படிப்புகூட தேவையில்லை என்பது எவ்வளவுதூரம் இந்தியர்களுக்கு Regulatory Compliance குறித்து எத்தகைய புரிதல் இருக்கிறது என்பதற்கு ஒரு கேவலமான உதாரணமாகும். மாற்றங்கள் மேஜிக் மூலம் வராது. அதற்கு ஒரு துறைசார்ந்த ஆழ்ந்த புரிதல்கள், அதற்கான வழிமுறைகள், செயல்திட்டங்கள், வழிகாட்டுதல்கள் வேண்டும். அக்ரி படித்தவர்கள் மட்டும் லைசன்ஸ் வாங்குமளவுக்கு வந்தால் அவர்கள் மட்டுமே லாபி அமைத்து சம்பாதிப்பார்கள், விவசாயிகளுக்கு இதனால் என்ன இலாபம் என்று சிலர் கேட்கக்கூடும்.

பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் – இந்தியாவில் அனுமதிக்கப்படாத – பூச்சிக்கொல்லி மருந்துகள் 200 லிட்டர் பேரல்களில் மதுரைக்கு பல்வேறு பெயர்களில் கடத்திக் கொண்டுவரப்பட்டு Bio-pesticide என்றபெயரில் பேக்கிங் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்படுவது அவ்வளவாக விவசாயிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தெரிய வாய்ப்பில்லை. காலவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை எடுத்துச்சென்று உண்மை எது, போலி எது என்றே தெரியாத அளவுக்கு போலி லேபிள்களை ஒட்டித்தரும் கும்பல்கள் கோயமுத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி பகுதிகளில் புழங்குவதும் வெளியில் தெரிய வாய்ப்பில்லை.

உரிமம் இரத்து செய்யப்பட்டாலும் மறுபடியும் வேறு யாராவது பெயரில் வாங்கிக்கொள்ளலாம் என்ற இன்றைய நிலை மாறாதவரை விவசாயிகளுக்கு விடிவில்லை. முறையாக கல்லூரி வாயிலாக அக்ரிக்கல்ச்சர், ஹார்ட்டிக்கல்ச்சர் போன்ற படிப்புகளைப் படித்தவர்கள் மட்டுமே உரிமம் பெறமுடியும், முறைகேடுகளில் ஈடுபட்டால் ஆயுட்காலத்துக்கும் வேளாண் இடுபொருள் செய்வதிலிருந்து blacklist செய்யப்படுவார்கள் என்பது மாதிரியான சட்டம் நடைமுறையில் இருந்தால் பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.

சிக்கினால் பிளாக்லிஸ்ட் செய்யப்படுவார்கள் என்பதால் லாபி அமைத்து விலையை செயற்கையாக உயர்த்துவது, போலிகளை விற்பது இருக்காது என்றாலும் படித்தவர்களை உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கைக்கூலிகளாக்கி விடுவார்கள் அல்லவா என்ற கேள்வி வாட்சப், பேஸ்புக் வழியாக விவசாயத்தைப் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு தமிழனுக்கும் தோன்றுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சந்தா வசூல்செய்து, கால்நடை மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வேண்டும் என்று கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தியதற்கு பிறகு தமிழக அரசு வேளாண் அலுவலர் சங்கம், துறைசார்பாக சொல்லிக்கொள்ளும்படியாக ஏதாவது அதிரடியைச் செய்திருக்கிறதா, நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ள இயைந்திருக்கிறதா என்ற கேள்விக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படத்தில் 5-வது இலக்கமிட்ட இடத்தில் பதில் இருக்கிறது. உரிமம் புதிதாக வழங்குவது, புதுப்பிப்பது, மாறுதல்கள் செய்வது என எல்லாவற்றிலும் எந்த ஒரு வெளிப்படைத்தன்மையோ, கால வரையறையோ இல்லாமல் பல மாதங்கள் அலைக்கழிக்கப்பட்டு, பின்தேதியிட்டு கையொப்பமிட்டுக் கொடுப்பதுதான் 99% அலுவங்களில் நடைபெறுகிறது. பாலிதீன் பைகள்கூட 50 மைக்ரான் தடிமனில் கிடைக்கையில், வேளாண்துறையின் விண்ணப்பங்கள் 40 மைக்ரான் மாதிரியான தடிமனுள்ள ஒரு தினுசான காகிதத்தில் இருக்கிறது; இந்நிலையில் கணினி மூலம் விண்ணப்பித்து டிஜிட்டல் சிக்நேச்சர் மூலம் ஒப்புகை வாங்கி, உரம் பூச்சிக்கொல்லி இருப்பு நிலவரத்தை அலைபேசி செயலிமூலம் இடுபொருள் விற்பனையாளர்கள் துறைக்கு தினசரி தெரியப்படுத்துவது நடைமுறைக்கு வரும்போது இதைப் படிக்கும் அத்துனைபேரும் ஓய்வு பெற்றிருப்பார்கள். மேலே உள்ள பத்தியில் எழும்பிய ஐயத்துக்கான விளக்கம் இந்த பத்தியில் விலகியிருக்கக்கூடும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் ஆயிரக்கணக்கான உரிமங்களை பட்டதாரிகளைக்கொண்டு replace செய்ய போதுமான எண்ணிக்கையில் பட்டதாரிகள் இருக்கிறார்கள். இந்த துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை முறைப்படுத்தாமல் இருப்பதாலும், தொழில் ஆரம்பிக்க போதுமான வழிகாட்டுதல் இல்லாததாலும் வேறு வழியில்லாமல் திறமையான பலர் வங்கிகளில் தங்களை சுருக்கிக்கொள்கின்றனர். மாணக்கர்களுக்கு ஏன் போதுமான தொழில்முனைவு குறித்த திறமையில்லை என்ற கேள்விக்கான பதில் இந்த சுட்டியில் இருக்கிறது. https://www.rsprabu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89/58/

தனியார் வேளாண்கல்லூரிகள் பலவும் அக்ரி சீட்டுகளை கூவிக்கூவி விற்பதை பொறியியல் கல்லூரியோடு ஒப்பிட்டு வேளாண்மைக்கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற பீதியை சிலர் தொடர்ந்து கிளப்பிவருகின்றனர். அதற்கான பதில் இந்த சுட்டியில்: https://www.rsprabu.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82/52/

2022-இல் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுவரும் மோடி அவர்களின் நோக்கத்தைத் தகர்த்து அவப்பெயர் ஏற்படுத்த செயல்பட்டுக்கொண்டிருக்கும் இலுமினாட்டிகளின் சூழ்ச்சிகளை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தனியார் நிறுவனங்கள் Droneகளை பரீட்சார்த்தமுறையில் வயல்களில் பயன்படுத்தி ஆய்வுகளை செய்ய ஆரம்பித்திருக்கும் சூழலில் மறுமலர்ச்சி உண்டாக வேண்டுமெனில் நமக்கு எதற்கு வம்பு என்றிருக்கும் ஒரு comfort zone-ஐ விட்டு வெளியே வந்து சிந்திப்பதும், செயல்படுவதும் அவசியமாகும். ஏன் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்ற பொதுவான தலைப்பைத்தவிர பொதுவெளியில் சொல்லிக்கொள்ளும்படியான உரையாடல்களை காணமுடிவதில்லை. மானியம் வழங்குவது, கடன் வழங்குவது, பின்னர் தள்ளுபடி செய்வது, ஏரி குளம் தூர்வாருவதைத் தாண்டி அரசாங்க அமைப்புகள் செய்யவேண்டிய பல விசயங்கள் பேசப்படாமலேயே இருக்கிறது. அதை முன்னெடுக்கும் பொறுப்பு – சம்பந்தப்பட்டவர்கள் காதில் விழும்வரை – இதைப் படித்துக்கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ளவர்கள் அனைவருக்கும் இருக்கிறது.

லிப்ஸ்டிக் மிளகாய்!

கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்திலுள்ள பியாடகி (Byadagi) நகரைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் அங்கு நடைபெறும வறமிளகாய் வர்த்தகம் ஆண்டுக்கு சுமார் 300 கோடி. பியாட்கி லோக்கல் என்றழைக்கப்படும் அந்த உள்ளூர் மிளகாய் இரகத்துக்கு Geographical Indicator மதிப்பு கொடுத்திருக்கிறார்கள்.

அதன் சிறப்பம்சமே மிகக்குறைந்த காரத்தையும், அதீத சிவப்பு வண்ணத்தையும் உடையது. காரத்தை SHU (Scoville Heat Units) என்ற அலகாலும், வண்ணத்தை ASTA value (American Spice Trade Association) என்ற அலகாலும் அளக்கிறார்கள்.

இந்த வறமிளகாய்களில் இருந்து குறைந்த வெப்பநிலையில் பல்வேறு படிநிலைகளின் மூலம் எடுக்கப்படும் ‘ஒலியோரெசின்’தான் லிப்ஸ்டிக், நெய்ல் பாலிஷ் போன்றவற்றின் வண்ணத்துக்கான அடிப்படைப் பொருள். பல கோடி ரூபாய் வர்த்தகம் இதில் உண்டு.
எதற்காக இந்த முன்னுரை என்றால் இவ்வளவு மதிப்புள்ள இந்த மிளகாய் வர்த்தகத்தில் ஹைப்ரிட் இரகங்களைப் அறிமுகப்படுத்தி விவசாயிகளின் வருமானத்தைக் கூட்ட, பெண்களுக்கு தரமான லிப்ஸ்டிக்கைத் தர ஒருசாரார் எப்படியெல்லாம் உழைக்கிறார்கள் என்பதை பேஸ்புக்வாழ் சமூகத்துக்கு தெரிவிப்பதற்காகத்தான்.

ஓர் இந்திய நிறுவனமும் இரண்டு பன்னாட்டு நிறுவனங்களும் ஹைபிரிட் இரகங்களை அறிமுகப்படுத்தியிருந்தாலும் உள்ளூர் இரகத்தின் அடர் சிவப்பு வண்ணமளவுக்கு வர இயலவில்லை. இதனால் லிப்ஸ்டிக், நக பாலிஷ் தயாரிப்புக்கு ஏதாவது பங்கம் வருமா என முப்பதுக்கும் மேற்பட்ட தடிதடியான ஆண்கள் உட்கார்ந்து தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்தின் கொடுமையை உணரமுடிந்தது.

விரைவில் திருமணமாகவிருக்கும் ஒரு சகா, ”பாத்தவுடனே கிஸ் பண்ணனும்னு தோணற மாதிரி கலர், பிளேவர் எதுனா மார்க்கெட்ல இருக்கா, அதுக்கு சப்போர்ட் பண்ற ஆஸ்பெக்ட்ல நம்மகிட்ட புராஜெக்ட் எதாச்சும் ஆன்கோயிங்ல இருக்கா?” என்று கேட்டார். நாம விதை விற்க போறோமா, உறை விற்க போறோமா என்று தொண்டைவரை வந்த கேள்வியை அடக்கிக்கொண்டு ‘அப்படி ஏதும் இருக்கறதா எனக்கு தெரியல’ என்று முடித்துக்கொண்டேன்.

#நெடுஞ்சாலை #பார் #தடை #பின்விளைவுகள்

குளத்தில் தாமரை வளர்த்து தண்ணீரைச் சேமித்த தமிழன் – வாட்சப் பார்வர்டு முட்டாள்கள் சூழ் உலகு

குளங்களில் தாமரை, அல்லி போன்ற தாவரங்களை வளர்த்து நீர் ஆவியாவதைத் தடுத்த நம் முன்னோர்களின் பெருமையை தெர்மாகோல் சோதனை சிறுமைப்படுத்திவிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் ஆதங்கப்படுகின்றனர். அதைப் பார்க்கும்போது தாமரைக்கு தமிழகத்தில் எத்தனை சோதனைகள் என்று கவலை வந்துவிட்டது.

தாமரை குளங்களில் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது என்பதற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அப்படி ஏதாவது இருப்பின் தெரியப்படுத்துங்கள்; நானும் கற்றுக்கொள்கிறேன்.

Hydrological cycle மிகவும் பெரிய சப்ஜக்ட் என்றாலும் நமக்குத் தேவையான அடிப்படைகளைப் பார்ப்போம். மழையாக வரும் நீரானது ஆவியாகி (evaporation) வளிமண்டலத்தில் திரும்பவும் நுழைகிறது. தாவரங்களால் உறிஞ்சப்படும் நீரானது இலைகளின் மேல் உள்ள நுண்துளைகளான ஸ்டொமேட்டா (stomata) வழியாக பகல்நேரத்தில் ஆவியாகிக்கொண்டே இருக்கும் நிகழ்வு transpiration எனப்படுகிறது. இஃது இலைப்பரப்பின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதோடு, தொடர்ந்து நீரை இழுப்பதால் மண்ணிலுள்ள சத்துக்கள் தாவரத்தை வந்தடைய உதவுகிறது. இந்த Evaporation, Transpiration, வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான நீர் மூன்றையும் சேர்த்து Consumptive Use (CU) என்கிறோம். இருந்தாலும் வளர்சிதை மாற்றத்துக்குத் தேவையான தண்ணீர் என்பது evaporation & transpiration-ஐ ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஒன்று என்பதால் மண்ணிலிருந்து ஏற்படும் நீர் இழப்பானது Evapotranspiration (ET) என்ற அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ET-யை அளவிடும் Lysimeter சோதனைகள், மண்ணுக்கு அடியில் நீர் கசிந்து செல்லும் Sub Surface Runoff போன்றவை இங்கு தேவையில்லை என்பதால் விட்டுவிடலாம்.

தாவரத்துக்குத் தேவையான நீரைத் தொடர்ந்து தருமளவுக்கு மண்ணில் ஈரப்பதம் இருப்பது Field Capacity (FC) எனப்படும். ET மூலமாக நீரிழப்பு ஏற்படுகையில் மழையாலோ, பாசனத்தாலோ நீரானது replace செய்யப்படாதபோது மண்ணுக்குள் வறட்சி ஏற்படுகிறது. இருந்தாலும் ஸ்டொமேட்டாக்கள் தொடர்ந்து நீரை வெளியேற்றி இலைப்பரப்பின் வெப்பநிலையை கட்டுப்படுத்துகின்றன (மனித உடலின் வியர்வைச் சுரப்பிகளை ஓரளவுக்கு ஒப்பிடலாம்). இலைகளில் வெளியேற்றப்படும் நீரின் அளவுக்கு வேர் வழியாக உறிஞ்சப்படும் நீர் இல்லாதபோது turgidity குறைந்து செடி வாடத்தொடங்குகிறது.

பயிர்களால் உறிஞ்சப்படும் நீரில் கிட்டத்தட்ட 99% transpiration மூலம் வெளியேறிவிடுகிறது என்பதால் இரசாயனங்கள் மூலம் ஸ்டொமேட்டா துளைகளை அடைப்பது அல்லது சூரிய ஒளியின் intensity-யைக் குறைப்பது போன்ற வகையிலான ஆய்வுகள் நிறைய உண்டு. ஒரு புதிய வகை anti-transpirant இரசாயனத்தைத் தெளிப்பதன் மூலம் இலைத்துளைகளை அடைத்து நீர்த்தேவை குறைகிறதா என அண்மையில் பல்வேறு dosage மூலம் நிறுவிக்கொண்டிருந்தோம். T. Stanes நிறுவனம்கூட சந்தையில் Green Miracle என்றபெயரில் ஒரு anti-transpirant திரவத்தை விற்கிறது; எங்கள் ஊர்ப்பக்கம் வெற்றிலை விவசாயிகளிடம் அது பிரபலம் என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

பயிரில் செயற்கையாக உண்டாக்கப்படும் வறட்சி, கட்டுப்படுத்தப்பட்ட இலைத்துளை நீராவிப்போக்கு, வறட்சியைத் தாங்கும் இரகங்கள், மண்ணுக்கடியில் ஏற்படும் வறட்சியை Electrical Conductivity மூலம் அளவிட்டு வெப்பநிலை, காற்றின் வேகம், ஈரப்பதம், சூரிய ஒளி அளவு மற்றும் பல காரணிகளுடன் இணைத்து உண்டாக்கப்படும் சமன்பாடுகளின் மூலம் நிறுவி புதிய இரகங்களை இனங்காணும் ஓர் ஆய்வுத்திட்டத்தில் சிலபல ஆண்டுகள் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றேன். ஒற்றை இலக்க Coefficient of Variation உள்ள தரவுகளை தருமளவுக்கு துல்லியமாக திட்டத்தை நடத்திய அனுபவமுண்டு என்பதோடு ஒரு சிப்பம் மிக்சர் சாப்பிட்டு முடிக்கும் நேரம் அளவுக்கு இது தொடர்பான பயிற்சி பட்டறைகளில் உட்கார்ந்திருந்ததால் இந்த தாமரை மேட்டர் ரொம்பவும் டிஸ்டர்ப் செய்கிறது.

தாவரங்கள் வளரும் சூழலைக்கொண்டு மூன்று பெரும் வகையாக பிரிக்கலாம். 1) Hydrophytes – நீர் அதிகமாக உள்ள சூழலில் வளர்வன. 2) Mesophytes – போதுமான நீர் உள்ள பகுதிகளில் வளர்வன. அதாவது அதிக நீரும், அதிக வறட்சியும் இல்லாத சூழல். 3) Xerophyte – வறண்டநில/பாலைவனச் சூழலில் வளர்வன.

ஒவ்வொரு தாவரமும் வாழும் சூழலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. தாமரையானது நீரில் மிதப்பதற்காக அகலமான இலையையும், நீர் ஒட்டாமல் இருக்க மெழுகுபோன்ற படலத்தையும் பரிணாம வளர்ச்சியில் பெற்றிருக்கிறது. ஆனால் வேர், தண்டுப்பகுதிகளுக்கு தண்ணீருக்குள் போதுமான ஆக்சிஐன் கிடைக்காது என்பதால் ஸ்டொமேட்டா வாயிலாக காற்று உள்ளே சென்று வருவதையும், உள்ளே உண்டாகும் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு ஏரன்கைமா செல்களில் சேமித்து வைக்கப்படுவதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதால் Transpiration மற்ற தாவரங்களைக் காட்டிலும் தாமரை, அல்லிச் செடிகளில் அதிகமாகவே நடக்கிறது. மேலும் இந்த transpirationஆனது குளங்களில் இயல்பாகவே நடக்கும் evaporation-க்கு சமமானது என்பதை ஜப்பானிய ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர். அதனால் தாமரை இலைகளால் water conservation என்பது வெறும் நம்பிக்கை அளவிலான hypothesis என்ற அளவில்தான் தெரிகிறது.

அதிக நீர் உள்ள சூழலில் வளரும் தாமரையானது தன்னுடைய இனப்பெருக்கத்திற்காகத்தான் தண்ணீரில் வாழ்கிறதே தவிர தண்ணீரைச் சேமித்து மற்ற உயிரினங்களுக்கு அளிக்க அல்ல. பாலைவனத்தில் இருக்கும் கள்ளிச்செடி, தான் வளர்வதற்காகத்தான் போராடுகிறது என்பதோடு ஏதாவது விலங்குகள் கடித்து காயத்தை உண்டாக்கினால் நீர் இழப்பு ஏற்படும் என்பதற்காகத்தான் பரிணாமத்தில் முட்களைப் பெற்றிருக்கிறது. ஓர் உயிரி மற்ற உயிரியைச் சார்ந்து வாழும் symbiotic relationship வேறு கோணத்தில் வருகிறது. அதுவும் அந்த இரண்டு உயிரிகளின் நலனுக்குத்தானே தவிர மனிதனின் சுயநலத்துக்கு அல்ல.

தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள இடங்களில் அதிக transpiration potential கொண்ட தாவர இனங்களை வளர்ப்பதன் மூலம் நீரை அப்புறப்படுத்துவது Bio-drainage எனப்படுகிறது. இவற்றின் ஆணிவேர்கள் வெகு ஆழத்திற்கு சென்று நீரை உறிஞ்சி ஆவியாக்குவதால் phreatophytes எனப்படுகின்றன. யூகலிப்டஸ் மரம் ஆரம்பத்தில் biodrainage-க்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும் சமீபத்திய ஆய்வுகள், அவை அதிக நீரை உறிஞ்சுபவை அல்ல என்று ‘நிறுவுகின்றன’. ஆனால் ICAR-இன் Handbook of Agriculture யூகலிப்டஸை இன்னமும் phreatophyteஆகவே வைத்திருக்கிறது என்பதைக் குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன். அப்படின்னா சீமைக் கருவேலமரம் பற்றியும் சொல்லுங்கள் என தயவுசெய்து யாரும் கேட்டை ஆட்டவேண்டாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை வேளாண்மையை உணர்ச்சிபூர்வமாக பார்ப்பதைத்தான் பாரம்பரியம் என்று பெரும்பாலோனோர் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை உடைக்கப்படுவதை பலரும் விரும்பாததால் ஏற்படும் வெற்றிடத்தை சுற்றுச்சூழல் அறிவியல் குறித்த எந்த அறிவும் இல்லாத நம்மாழ்வாரிய மூடர்கள் முன்னோர்களின் மரபுவழி ஞானம் என பல்வேறு பொய், புரட்டுகளை கலந்துகட்டி அடித்துவிட்டு நிரப்பி வருகின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்கிறோம். ஆனால் எந்த கிராமமாவது காலியாகியிருக்கிறதா, உணவுப்பொருட்களின் விலை ஏறியிருக்கிறதா, அப்படியெனில் இவ்வளவு மக்களுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கர்னாடகாவின் தும்கூர் மாவட்டத்திலுள்ள ஹிரியூர் மற்றும் மைசூர், மாண்டியா, ஷிமோகா பகுதிகளுக்கு 1960, 70-களில் தமிழர்கள் ஏன் குடியேறினார்கள் என்று விசாரித்துப் பாருங்கள்.

நம் முன்னோர்களின் ஞானம் மிக அற்புதமானது. ஏரிக்கரையில் குளிக்க வந்த பெண்ணிடம் “என்ன அருக்காணி, மச்சான் வெளியூர் போயிட்ட மாதிரி தெரியுது” என்று மைனர்கள் கேட்டுவைத்ததுகூட வருங்காலத்தில் மரபுவழி சிலேடை இலக்கியத்துக்கு உதாரணமாக வாட்சப்பில் வந்து தொலைக்கலாம்.

நாமகரண அக்கப்போரும், நிலையாமையும்

பெயரிடுதலில் உள்ள அறம், அரசியல், மொழித்திறன் குறித்து டிசம்பர் மாத தடம் இதழில் வெளியான நக்கீரன் அவர்களின் ‘தமிழ் – நம் நிலத்தின் கண்ணாடி’ கட்டுரையை மறுவாசிப்பு செய்துகொண்டிருந்தபோது, தொழில்நிமித்தமாக பல கிராமங்களுக்கும் சென்றுவருகையில் கண்ணில் படும் பெயர்ப்பலகைகள் ஒரு புது வகையான மாற்றங்களை, மாற்றங்கள் என்பதைவிட செயற்கையான திணிப்புகளை உணர்த்தியது.

ஒவ்வொரு ஊரிலும் அங்குள்ள நிலத்தின் வளமை, நீர் இருப்பு, மரஞ்செடிகொடிகள், வனம், புவியியல் தகவமைப்புகள், அங்கிருந்த பூர்வகுடிகள், அவர்களது மூதாதையர்கள், அங்குள்ள நிலவுடைமைச் சாதி போன்றவற்றைப் பொறுத்து நிலங்களுக்கு/தோட்டங்களுக்கு பெயர்க்காரணம் அமைகிறது. பெரும்பாலான ஊர்களின் பெயர்களும் அவ்வாறே இருக்கின்றன. இருட்டுப்பள்ளம், எதிர்மேடு, தட்டாங்காடு என பல ஊர்களின் பெயரே அந்தந்த நிலவமைப்பை உணர்த்தும்.

வெறும் காடாக இருந்த நிலப்பரப்புகளைப் புனரமைத்து விவசாயத்துக்கு கொண்டுவந்தவர்கள் அல்லது அங்கிருக்கும் பெருவாரியான சாதியைச் சாராதவர்களால் உண்டாக்கப்பட்ட விளைநிலங்கள் நாயக்கர் தோட்டம், வண்ணாந்தோட்டம், ஒட்டந்தோட்டம், துலுக்கந்தோட்டம் என்றபெயர்களில் இயல்பாகவே வழங்கப்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் தனி நபராக அல்லது எளிய குழுக்களாக வந்து அழுத்தமான இடத்தைப் பெற்றதன் அடையாளம் அது.

பிற்காலத்தில் விவசாயத்திலிருந்து விலகி வேறு தொழில்களை ஏற்றுக்கொண்டவர்களை சற்று வேறுபடுத்தியும், உயர்வாகவும் காட்ட தொழில்சார் அடைமொழிப்பெயர்கள் – வாத்தியார் தோட்டம், கணக்கன் தோட்டம், பிரசிடன்டு தோட்டம், பால்காரர் தோட்டம், அமெரிக்காக்காரர் தோட்டம் – வழக்கமானது.

அண்மையில் ஒரு தோட்டத்துக்குச் செல்ல வழி கேட்கையில் ‘ஸ்வஸ்திகா கார்டன்’ என்றனர். அதுசெரிங்னா, ஊருக்குள்ள வந்து என்னன்னு கேக்கோனும் என்றதும் வறட்டுப்பள்ளம் என்றது எதிர்முனை. ஒவ்வொரு ஊரிலும் கார்டன், எஸ்டேட், ஃபார்ம்ஸ், மீடோஸ், வேலி(valley), அவென்யூ என்றெல்லாம் பெயரிடப்படுபவை அந்த ஊர்களுக்கு துளியும் தொடர்பில்லாத வந்தேறி புதுப்பணக்காரர்களால் வலிந்து திணிக்கப்படுபவை. அந்த பெயர்ப்பலகைகள் கழட்டி வீசப்பட்டால் 99% பக்கத்து தோட்டத்துக்காரர்களாலேயே ஒரு மாதத்துக்குள் மறக்கப்பட்டுவிடும். கிரயப்பத்திரங்களில் தாமாகவே எழுதிக்கொண்டாலும், அந்த நிலங்கள் விற்கப்பட்டபின் இயல்பான பெயர்களே எஞ்சியிருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றுவரை எங்கேயும் பெண்களின் பெயரில் நிலங்கள் அடையாளம் காட்டப்படுவதை தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நான் கண்டதில்லை. ஊருக்குள் பாக்கியம் டீச்சர் வீடு என்று வழிகாட்டப்படுவது, வயலுக்குச் சென்றதும் பண்ணையக்காரர் தோட்டம் என்றாகிவிடுகிறது. கணவனை இழந்ததும் தனி ஆளாக விவசாயம் செய்யும் பெண்களின் வயல்கள் அவர்களது ஆயுளுக்குப் பின்னர் அவர்களது பெயர்களை உதிர்த்துவிடுவது அவ்வளவு இயல்பானது என்று சொன்னால் நிலவுடைமைச் சமூகங்களின் ஆணாதிக்க முகங்களை நாம் மறைத்துக்கொள்வதேயாகும்.

நான் பணிபுரியும் நிறுவனத்தின் கிட்டங்கி இருக்கும் பகுதியிலுள்ள ஒரு அடுக்ககத்திற்கு ஏதோ சமஸ்கிருதப் பெயர் இருந்தது. அதன் பொருள் என்னவாக இருக்கும் என்பதைவிட தயிர் இட்டேரி சாலை என்ற அந்த சாலையின் பெயர்க்காரணம் எப்படி வந்திருக்கும் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

பி. எஸ். ஜி சமுதாய வானொலியில் ஒரு சொற்பொழிவாளர் பேசியதை பாதியிலிருந்து கேட்க நேரிட்டது. பண்டைய சமூகத்தில் பெயரில் முன்னொட்டு சேர்க்கும் அங்கீகாரம் மருத்துவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே இருந்ததாகவும், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள வீட்டை எளிதில் அடையாளம் காணவும், கல்வியறிவற்றவர்கள் யாரும் தடுமாறக்கூடாது என்பதற்காக எழுதப்படிக்கத் தெரிந்த ஆசிரியர்கள் வீட்டை விரைந்து அடையவும் அவர்களது பெயர்களைவிட தொழிலின்பால் அழைக்கப்பட்டனர். பின்னர் வக்கீல்களுக்கு இந்த அடையாளம் வந்து சேர்ந்தது என்று குறிப்பிட்டார்.

புதிய ஊர்களுக்கு செல்கையில் திசைகளை வைத்து நகர்வதும், ஊரின் சரிவு, ஓடைகள் செல்லும் திசை போன்றவற்றைப் பார்த்துக்கொண்டே செல்வது இயல்பான ஒன்றாகிவிட்டபடியால் அலைபேசியில் கூகுள் மேப் பார்ப்பது எனக்கு ஒரு விநோதமான பழக்கமாகவே தெரிகிறது. ‘தெக்கு வடக்கு தெரியாத பயல்’ பல வயதானவர்கள் திட்டுவதைக் கேட்டதுண்டு. அவர்களைப் பொறுத்தவரை இரவு பகல் எந்நேரத்திலும், எந்த இடத்துக்குச் சென்றாலும் திசை தெரியாதவர்கள் வெளியுலக பயண அனுபவம் இல்லாதவர்கள் என்ற புரிதல்.

2014-இல் சென்னையில் மராத்தான் ஓட்டம் ஒன்றில் கலந்துகொள்ளச் சென்றபோது பள்ளிக்கரணைப் பகுதியில் சவரம் செய்ய ஒரு கடை தேடி வெகுதூரம் நடந்துசெல்கையில் பாதுகாக்கப்பட்ட சதுப்புநிலப்பகுதிக்கு அடிமடையில் உள்ள வீடுகிளி்ல் ஒன்றில்தான் தங்கியிருப்பது புரிந்தது. வேளச்சேரி புகாரி உணவகம் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்று பயணிக்கையில் கோவையிலுள்ள சங்கனூர் கண்முன் வந்துசென்றது. சங்கனூரை சங்கனூர்ப்பள்ளம் என்றே குறிப்பிடுகின்றனர். அந்தகாலத்தில் யானைகளே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட இடம் எனவும், கோவை மக்களின் மணல் தேவைகளைப் பூர்த்திசெய்த இடம் எனவும், வெள்ளப்பெருக்கைக் காண மக்கள் வண்டிமாடு கட்டி வருவார்கள் எனவும், பல தீர்க்க முடியாத கணக்குகள் தலை தனியாக முண்டம் தனியாக வெட்டி வீசப்பட்ட இடமான சங்கனூர்ப்பள்ளம் இன்று வெறும் இருபது அடி அளவில் சுருங்கிவிட்டது. அதற்கு சற்றுத் தள்ளி வந்துகொண்டிருந்த கெளசிகா நதி இன்று தேடப்படும் நதியாகிவிட்டது. என்றாவது ஒருநாள் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யப்போகும் கனமழை சென்னையில் மழையினால் உண்டான பாதிப்பைவிட அதிக சேதத்தை சங்கனூர், இரத்தினபுரி, கணபதி பகுதிகளில் உண்டாக்கக்கூடும். ஃபெர்ன்ஹில், ஆர்க்கிட் கவுன்ட்டி, மேப்பிள் மீடோஸ் எனப்படும் நவயுக நாமகரணங்கள் சங்கனூர்ப்பள்ளம் என்று தூசி தட்டப்படலாம்.

கூவத்தூர் என்பதும் இயல்பாகவே ஒரு பொருளைக் கொண்டிருக்கும். நெய்தல் நிலங்கள், தொழில்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாலும் அங்கிருக்கும் இடங்களுக்கு நிச்சயமாக பெயர்க்காரணங்கள் ஆழ்ந்த பொருளுடன் இருக்கும். கோல்டன் பே என்பது வலிந்து திணிக்கப்பட்ட பெயர் என்பதுடன் அது உள்ளூர் மக்களுக்கு தோட்டக்காரர், சரக்குந்து ஓட்டுனர் போன்ற ஒருசில அடிமட்ட வேலைகளுடன் நின்று காவலாளி முதல், மசாஜ் பார்லர் வரை வெளியூர் ஊழியர்களைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் இத்தகைய நாமகரணங்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.

கோட்டை கட்டி அடக்கி ஆண்டவர்கள், பல புரட்சிப் பட்டங்களை முன்னொட்டாகக் கொண்டவர்கள், அரசர்கள், அதிகார மையங்கள் என பலவும் மண்மேடாகிப் போவதைப் பார்க்கையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் மண்தான் நம்மை வெல்கிறது. இடைப்பட்ட குறுகிய காலத்தில் அந்த மண்ணுக்கு நாம் பெயர்சூட்டுவதை மண் எப்படிப் பார்க்கும்?