வாஸ்து கொடுமைகள்

வாழறதுக்குத்தான் வாஸ்து என்று சொல்லிக்கொண்டே பேழறதுக்கும் வாஸ்து பார்த்து உட்கார வேண்டிய நிலைமை. அந்த காலத்தில் திறந்த வெளியில் மலம் கழிக்கப் போகும்போது கிழக்கு அல்லது மேற்கு நோக்கி உட்கார்ந்தால் அந்தரங்க இடங்களில் வெயில் படும், அதனால் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க முடியாது என்பதால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து உட்கார்ந்தனர். சூரிய பகவான் பார்க்கும்படியாக உட்கார்ந்து மலம் கழிப்பது பாவம் என்றும் சொல்லப்பட்டது.

இன்றும் அதையே பிடித்துக்கொண்டு பேஸ்மெண்ட்டில் கழிவறை கட்டினாலும் சரி, அடுக்ககத்தில் பதினைந்தாவது மாடியில் கட்டினாலும் சரி தென்வடலாக பீங்கானைப் பதிப்பது, தொன்மம் என்றபெயரில் மூட நம்பிக்கைகளைப் நம் மக்கள் எவ்வளவு தூரம் பாதுகாத்து வைத்திருக்கின்றனர் என்பதற்கு சான்று.

உயர்மட்ட தண்ணீர் தொட்டி தென்மேற்கு திசையில் அமையவேண்டும் என்பதும் ஐதீகம், வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி 99.99% சதவீத வீடு, தொழிற்சாலைகளில் இன்றும் அப்படியே அமைத்து வருகின்றனர்.

படுக்கை அறை கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் அமையவேண்டும் என்பதும் வாஸ்து சாஸ்திரம் என்று சொல்லி அத்தனை வீடுகளிலும் மேற்குப் புறமாகவே படுக்கையறை அமைக்கப்பட்டு மக்கள் இரவு உறங்கச் செல்கின்றனர்.

அதே நேரத்தில் பிராமணர்களின் வீடுகளில் படுக்கையறை கிழக்கிலும், சூத்திரர்களுக்கு மேற்கிலும் இருக்கவேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரம் சொல்வதாக சொல்லப்படுகிறது.

கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் தண்ணீர் தொட்டி, படுக்கையறை அமையும்போது இயல்பாகவே தண்ணீரும் சூடாக இருக்கும், படுக்கையறையும் சூடாகவே இருக்கும். இதை மட்டுப்படுத்த ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்றவற்றை பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டடாயத்துக்கு சூத்திரர்கள் தள்ளப்படுகின்றனர் என்பதும் உண்மை.

மேலைநாடுகளில் மிகப்பெரிய ஸ்கைஸ்கேரப்பர் வகைக் கட்டிடங்களை வடிவமைக்கும்போது கரையான் புற்று, தேன்கூடு போன்றவற்றில் உள்ள ventilation mechanism-த்தின் சூட்சுமங்களைப் பயன்படுத்தி குறைந்த ஆற்றலில் தட்பவெப்பநிலையை பராமரிக்கும் விதமாக அமைக்கின்றனர். ஆனால் நம்மைப் போன்ற வெப்ப மண்டல நாட்டில் வாஸ்து என்றபெயரில் மக்கள் முட்டாளாக்கப்பட்டு வருகின்றனர்.

தேவையில்லாமல் கதவை, ஜன்னலை உடைத்து வேறு இடத்தில் பொருத்துவது, சம்பந்தமே இல்லாமல் வாசற்படியின் எண்ணிக்கை மாற்றினால் நம்முடைய தரித்திரம் நீங்கிவிடும் என்று அதை உடைப்பது, மூலைக்குத்து இருக்கக்கூடாது என்று பொருந்தாத இடத்தில் கேட் போட்டு காரை சுவரில் உரசிக் கோடு போட்டுக்கொண்டு டிங்கரிங் பட்டறையில் உட்கார்ந்திருப்பது, மதில் சுவரில் ஒரு காடி எடுத்து பிள்ளையார் சிலையை வைத்து கண் திருஷ்டியை டைவர்ட் செய்யும் தொழில்நுட்பம் என்று இருந்த வாஸ்து இன்று அலங்கார வண்ண மீன்களின் மீதும் வந்துவிட்டிருக்கிறது.

தொழிற்சாலைகளில் இயந்திரங்களை நிறுவும்போது நமது செளகரியத்தையும், பாதுகாப்பையும் பார்க்காமல் வாஸ்து சாஸ்திரம் பார்ப்பதால் ஏற்படும் இழப்புகள் நம் நாட்டில் ஏராளம். புதிய விமானம், கப்பல் போன்றவற்றை வெள்ளோட்டம் விடும்போது எலுமிச்சம்பழம் கட்டிவிடும் நாடு நம்முடையது என்பதை மறந்துவிடக்கூடாது.

விஞ்ஞான வாஸ்து என்று சொல்லி ஒப்பேற்றி வயிறு வளர்ப்பவர்கள் அதன் பின்னணியில் உள்ள விஞ்ஞான கோட்பாடுதான் என்னவென்று ஒருபோதும் சொல்வதில்லை. காஸ்மிக் அலை, மின்காந்த அலை, எண்ண ஓட்டங்களின் அலை என்று எதையாவது கலந்துகட்டி அடித்துவிடுவதில் மட்டுமே அவர்கள் நிபுணர்கள்.

ஆந்திரா வாஸ்தும், தமிழ்நாட்டு வாஸ்தும் கணிசமாக வேறானது என்பதால் கோயமுத்தூரில் உள்ள நாயக்கர்மார்களின் கம்பெனியில் வாஸ்து compliance பார்த்து முடிப்பதற்குள் இடைநிலை மேலாளர்கள் இரண்டு கிலோ இளைத்துவிடுகின்றனர் என்று விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஊர்களுக்கு செல்லும்போது தமிழகத்தைப் பொறுத்தவரை யாரிடமும் வழி கேட்காமல், கூகுள் மேப் போடாமல் எந்த திசையில் சொல்ல வேண்டும் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு ஆங்காங்கே வீடுகளின் மேல் உள்ள தண்ணீர் தொட்டிகளைப் பார்த்துக்கொண்டு சென்றாலே போதுமானது. அத்தனை உயர்மட்ட தண்ணீர் தொட்டிகளும் தென்மேற்கு திசையிலேயே அமைக்கப்பட்டிருக்கும்.

ஏதாவது வீட்டுக்குள் ஒரு நபரைக் கடத்தி வந்து கண்ணைக் கட்டி அடைத்து வைத்திருந்தாலும் கழிவறையின் பீங்கான் தென்வடலாகவும், படுக்கையறை வீட்டின் மேற்குப்பகுதியிலும், சமையலறை தென்கிழக்கு மூலையிலும் இருக்கும் என்ற வாஸ்து சாஸ்திர விதியின்படி பிரதான கதவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை ஊகித்து மிகச் சாதாரணமாக வெளியேறலாம் எனும்போது தமிழ் சீரியல்களில் மட்டும் ஏன் ஒவ்வொரு அறையாக, கதவு கதவாகச் சென்று திறந்து பார்த்து வில்லன் வரும்வரை நேரத்தை வீண்டிக்கிறார்கள் என்பது மட்டும் புரியவே மாட்டேங்கிறது!

பசுமை ஆர்வலர், இயற்கை ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற ஒரு மேட்டிமைத்தனமான புதிய சாதி

கேள்வி: பசுமைப் போராளி, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராளி, இயற்கை விவசாயப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அடையாளங்களின் பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா?

பதில்: கிராமப்புறத்தின் பழைமை மாறாமல் இயற்கைக்குத் திரும்புதல் என்பதே சாதிய அடுக்குகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அழைப்புதான். பசுமைப் போராளி ஆவதிலும், இயக்கம் அல்லது அமைப்பு நடத்திவதிலும் சாதிய படிநிலைகள் தெளிவாக உண்டு.

இயற்கை விவசாயம் + கார்ப்பரேட் எதிர்ப்பு குறித்த அமைப்புகளில் சாதிக்கு ஏற்பவே பிரபலத்தன்மையும், வசூலும் அமைகிறது.
உங்களுக்குத் தெரிந்த பிரபலமான ஐந்து ஆர்கானிக் ஆக்டிவிஸ்ட் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் அதன் நிறுவனர்கள் அல்லது பெருந்தலைகள் பிராமணர்களாக இருப்பதைக் காணலாம். அபூர்வமாக அப்படி இல்லாவிட்டாலும் அசைவ உணவு எதிர்ப்பு, கோசாலை, விவசாயத்தைக் காப்பதில் கோவில்களில் இருக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம், நீட் தேர்வு ஆதரவு, மெரிட் சிஸ்டம் போன்ற கருத்துகளில் தாராளமாகப் புழங்குபவர்களாக இருப்பர்.

அத்தகைய பிராமணப் பின்புலமுள்ள அமைப்புகளுக்கே பெரும்பாலான நன்கொடை வருவாய்கள், புகழ், பெருமை எல்லாம் கிடைக்கும். தோற்றாலும் வென்றாலும் நல்ல விளம்பரமும், நன்கொடைகளும் கணிசமாக கிடைக்கும் என்பது மாதிரியான ஏரியா எனில் இந்த அமைப்புகள் இறங்கிவந்து வழக்குத் தொடுக்கும். பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளை இவை வழக்குக்கு இழுக்குமே தவிர அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடருவதைக் கவனமாகத் தவிர்க்கும்.

பிராமண அடையாளங்களைத் தாங்கிய இந்த அமைப்புகள் அப்பழுக்கற்ற தங்கங்களாக உருவகப்படுத்துப்பட்டு சூத்திர வேசிமகன்களிடம் விளம்பரப்படுத்தப்படும். மனுஸ்மிரிதியால் தேவடியாப்பயல் என்று விளிக்கப்படும் சூத்திர ஆக்டிவிஸ்டுகள் நடத்தும் ஒன்றிரண்டு அமைப்புகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் வழக்குகள், பெரிய கவனம் கிடைக்காத ஆனால் நீதிமன்றங்களுக்கு செருப்புத் தேய நடக்கவேண்டிய விவகாரங்களை எல்லாம் கொடுத்து வழக்குத் தொடரும்படி, பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். இவர்களும் செருப்பைத் தூக்கி தலையில் வைத்து விட்டிருக்கிறார்கள் என்றே புரியாமல் தமக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாகப் போராளி ஆகிவிடுவார்கள்.

மஞ்சளுக்கும், வேம்புக்கும் அமெரிக்கா காப்புரிமை பெற்ற விவகாரத்தில் வந்தனா சிவா அம்மையாருடன் நம்மாழ்வார் இணைந்து போராடி வென்றதாக ஐயாவின் வானகம் ரிசார்ட்டில் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் Azadirachtin என்ற பூச்சிக்கொல்லியின் ஒரு பகுதி காப்புரிமையை ஜெர்மானிய கம்பெனி ஒன்றிடம் இராயல்ட்டி கட்டியே இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் வாங்கி விற்பனை செய்கின்றன என்பதைத் துறையில் புழங்குபவர்கள் அறிவர்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மை பிரச்சாரகர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சூத்திரர் ஆன நம்மாழ்வாரின் வானகம் ரிசார்ட் ஆனது சமகாலத்திய வேளாண் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவல்லதாக நிறுவப்பட்டிருப்பது பெரிய நகைமுரண் கிடையாது. ஐயாவின் கோசாலை, கோசாணம், பாரம்பரிய மருத்துவ ஞானம் குறித்த உரைகளைக் கேட்டவர்களுக்கு வர்ணாசிரம அமைப்பின்மீது அவருக்கு உள்ள அன்பை அறிவார்கள்.

இயற்கை வேளாண்மை சார்பான அமைப்புகள் மட்டுமல்லாது விவசாயிகளின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே சாதிய ஆதரவாளர்களாவர். மரபுக்குத் திரும்புதல், பாரம்பரிய வாழ்வியல் முறை என்றாலே சாதிக்குத் தக்க வாழ்வியல் முறை என்பதே இந்தியாவில் பொருளாகும். விவசாயத்தைக் காப்போம் என்பதற்கும் “விவசாயிகளைக் காப்போம்” என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பதை உணர்வது முக்கியமானதாகும்.

வானூர்தி வாழ்விகள் குறித்து சிறு குறிப்பு வரைக

இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாக காணப்படும் வானூர்தி நிலைய வாழ்விகள் குறித்து ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு கட்டுரை வரைக.

பார்ப்பதற்கு பயங்கரமான விலங்காகக் காட்டிக்கொள்ளும் வானூர்தி நிலைய வாழ்விகள் பெரும்பாலும் மிதவெப்ப மண்டல உயிரினங்களாகும். ஆண் விலங்கானது கனத்த தொப்பையுடனும், தலைமுடிக்கு கருப்பு சாயம் பூசியவாறும், முகத்தில் கொஞ்சூண்டு பிரெஞ்சு தாடியும், கையில் ஐஃபோனையும், முதுகில் ஒரு லேப்டாப் பையையும் வைத்துக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும். கண்ணைக் கட்டிவிட்டாலும் Bar இருக்குமிடத்தை வாசனையை வைத்துக் கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை.

பெண் விலங்கானது அடிக்கடி அழகு நிலையத்தில் ஃபேசியல் பிளீச்சிங் செய்யப்பட்ட சருமத்துடனும், straightening செய்யப்பட்டு கருப்பு சாயம் ஏற்றப்பட்ட தலைமுடியுடனும், கழுத்தில் ஒரு முத்து மாலையும், கையில் ஒரு ஐஃபோனுமாக, ஒன்றரை வரி ஆங்கிலத்திலும் அரை வரியைத் தாய் மொழியிலும் பேசியவாறு காணப்படும். Contemporary Ethnic ஆடைகளுடன் இருந்தாலும் Modern outfit அணிந்த சக விலங்குகளை ஓரக்கண்ணால் பார்த்து லேசாக புகைந்தவாறே இருக்கும்.

பெரும்பாலும் நட்சத்திர ஓட்டல்களிலும் விமான நிலையங்களிலும், எப்போதாவது அலுவலகத்திலும் காணப்படும் வானூர்தி நிலைய வாழ்விகளின் குறிப்பிடத்தக்க பண்புக்கூறுகள் பின்வருமாறு:

1) கார்ப்பரேட் கம்பெனி ஊழியமாக இருந்தால் தான் இல்லாவிட்டால் கம்பெனியில் எதுவுமே இயங்காது என்று பில்டப் கொடுத்தவண்ணம் காணப்படும். அரசாங்கப் பணியில் இருக்கும் உயிரினமாக இருந்தால் எப்போதும் சிடு சிடுவென்று உர்ர் என்ற முகத்துடன் காணப்படும்.

2) இந்தி மட்டும் தெரிந்திருந்தால் பொளந்து கட்டியிருப்பேன் என்று அடிக்கடி ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருக்கும்.

3) வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமக்குக் கீழே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு SOPs, protocols, manners & etiquettes குறித்து வகுப்பு எடுத்தவண்ணம் இருக்கும். ஆனால் தான் எதையும் பின்பற்றாது.

4) வானூர்தியின் சக்கரம் ஓடுதளத்தை தொட்ட அடுத்த நொடியே சீட் பெல்ட்டை கழட்டிவிட்டு எழுந்து, லக்கேஜை எடுத்துக் கொண்டு, வயிற்றை இந்தப்பக்க சீட்டில் இருப்பவன் மீதும், பிட்டத்தை அந்தப் பக்க சீட்டில் இருப்பவன் மீதும் இடித்துக்கொண்டு நிற்கும்.

5) தனியார் கம்பெனி ஊழியம் பார்க்கும் உயிரினமாக இருந்தால் தான் தங்கப்போகும் ஓட்டலின் மகிழுந்து ஓட்டுனர் கையில் பெயர் பலகையுடன் நிற்க வேண்டும் என்று எதிர்பார்க்கும். அரசாங்க ஊழியம் பார்க்கும் உயிரினமாக இருந்தால் தமக்குக் கீழே உள்ள அதிகாரிகள், வரவேற்பதற்கு சந்தன மாலையுடன் நிற்க வேண்டும் என்று மனதுக்குள் எதிர்பார்த்த வண்ணம் காணப்படும். ஆனால் வெறும் வாயளவில் “இதெல்லாம் எதுக்கு மேன், I’m a very simple person you know” என்று சொல்லிக்கொள்ளும்.

6) சொந்தப் பணத்தில் வானூர்திப் பயணம் செய்வதாக இருந்தால் இங்கிருந்து பஸ் ஸ்டாப் எவ்வளவு தூரம் இருக்கும் என்று விசாரித்துக்கொண்டிருப்பதை காணலாம்.

7) யாராவது தெரிந்த நபர்களை வானூர்தி நிலையத்தில் சந்தித்தால் voila! என்றெல்லாம் வேறு கண்டங்களில் பேசப்படும் மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி சப்தமிடும். அதற்கு அந்த உயிரிகளும் விக்சனரியில் அர்த்தம் என்னவென்று பார்த்து “என்னமோ இவனோட அப்பத்தா பிரான்ஸ்ல ரெண்டு கப்பல் வாங்கி ஓட்டிகிட்டு இருந்தமாதிரிதான் பில்டப் தர்றான்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாலும் ‘Your command in English is superb Sir’ என்று சொல்லிவிட்டுச் செல்வதைக் காணலாம்.

8)பேன்ட்ரியில் ட்யூப் லைட் எரியவில்லை என்று யாராவது கூறினால் கூட Drop me an email, I’ll approve right away என்றுதான் சொல்லும். ஆனால் ஒரு வாரம் கழித்து கேட்டாலும் when did you sent the mail, man? என்றே கேட்கும்.

9) வருடத்திற்கு 150 வேலை நாட்களுக்கு OoO போட்டு வைத்திருக்கும். தான் அனுப்பும் மின்னஞ்சல்களுக்கு High Importance, Read receipt இல்லாமல் அனுப்பாது. தேவை இல்லாவிட்டாலும் அத்தனை பேருக்கும் cc இருக்கும்.

10) தவிர்க்க முடியாத காரணங்களால் வானூர்தி தாமதமானால் அங்கிருக்கும் ஊழியர்களிடம் ஆங்கிலத்தில் அனாவசியமாக சலம்பல் ஒலி ஏற்படுத்தும். ”அந்தக் கடைசியில் இருக்கும் உணவகத்தில் போர்டிங் பாஸைக் காட்டினால் டோஸா காம்ப்ளிமெண்டரியாகக் கிடைக்கும்” என்றால் உடனே அமைதியாகி உணவகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்துவிடும்.

11) வீட்டில் இட்லி, வடை, மசால் தோசை என்று அள்ளி உள்ளே தள்ளி ஏப்பம் விட்டுவிட்டு, அலுவலகத்தில் கிளெய்ம் செய்து கொள்ளலாம் என்பதால் வானூர்தி நிலையங்களில் இட்டாலியன் சாலட் என்ற பெயரில் 500 ரூபாய் கொடுத்து இலைதழைகளை வாங்கித் தின்று கொண்டிருக்கும்.

12) தனியார் நிறுவனம் ஆனாலும் சரி அரசாங்க அலுவலகமானாலும் சரி, எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கும் இந்த வானூர்தி நிலைய வாழ்விகள் நட்சத்திர ஓட்டல்களிலும், வானூர்திகளிலுமாக பெருமளவு பட்ஜெட்டை காலி செய்துவிட்டு கீழே இருப்பவர்களிடம் Cost control என்ற பெயரில் உயிரை வாங்கும். இந்த உயிரினங்களது ஆண்டு விமானக் கட்டணத்தை விடக் குறைவான சம்பளம் வாங்கும் பொடியன்களுக்கு மூவாயிரம் ரூபாய் இன்கிரிமென்ட் போடுவதற்கு பட்ஜெட் இல்லை என்று இராகம் பாடுவது மிகவும் முக்கியமான பண்புக்கூறாக அறியப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்து விவசாயத்தை விட்டு அப்புறப்படுத்தப்படுவது ஏன்?

கார்ப்பரேட் கம்பெனிகள் நிலங்களை வாங்கி, விவசாயிகளை அப்புறப்படுத்தி விடுவார்கள் என்ற ஊகம் வெகு காலமாக சொல்லப்பட்டு வந்தாலும் அப்படி நடக்குமா நடக்காதா என்று சொல்வதற்கே இன்னும் இருபது ஆண்டுகளாவது ஆகும்.

சிறு விவசாயிகளுக்கு இன்று உருவாகி வரும் பெரிய அச்சுறுத்தல் என்பது நகரிலிருந்து வந்து நிலங்களை வாங்கும் புதுப் பணக்காரர்கள்தான். நிலம் வாங்கிய கையோடு கம்பி வேலி அமைத்து, புதிதாக அதிக ஆழத்துக்கு போர்வெல் அமைத்து/கிணறு வெட்டி ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்வது அல்லது தென்னை மரங்களை நடுவது என தீவிரம் காட்டும்போது முதலில் அடி வாங்குவது அங்குள்ள நிலத்தடி நீர்மட்டம்.

தண்ணீர் கீழே செல்லும் வேகத்துக்கு அந்தப் பகுதியில் இரண்டு ஏக்கர், நான்கு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திவரும் விவசாயிகளால் தொடர்ந்து போர்வெல் போட/கிணறு வெட்ட முதலீடு செய்ய முடியாது.

மின்சார வாரியம் தட்கல் மின் இணைப்பு மூலம் ஒருமுறை செலுத்தும் கட்டணமாக இரண்டரை இலட்சம், இரண்டேமுக்கால் இலட்சம், மூன்று இலட்சம் கட்டினால் முறையே ஐந்து, ஏழரை, பத்து குதிரைத்திறனுள்ள மின் இணைப்பை ஒரு மாதத்தில் வழங்குகிறது. பணம் கட்டினால் உடனடியாக இலவச மின்சாரம். அஃதே இலவச இணைப்புக்கு பதினைந்து வருடங்களுக்கு மேலாக காத்திருப்பவர்கள் காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதில் மிக அதிகமாக நசுங்கி வேறு வழியே இல்லாமல் முதலில் வெளியேறுவது கூட்டுப் பண்ணைய விவசாயிகள். எழுபதுகளில் அண்ணன், தம்பி, பெரியப்பா, சித்தப்பா, பங்காளி வகையறா என கூட்டாக நிலம் வாங்கி, கிணறு வெட்டி விவசாயம் செய்தவர்களின் வாரிசுகள், பேரப்பிள்ளைகள் தங்களது மூதாதையர்களைப் போல சகிப்புத்தன்மை இல்லாததாலும், கல்வியாலும், புதிய தொழில்களுக்குச் சென்றதாலும் கூட்டுக் கிணறுகளில் தங்களது முறைக்காகக் காத்திருக்கத் தயாரில்லை. இத்தகைய கிணறுகளை ஆழப்படுத்துவதோ, புதிய போர்வெல் போடுவதோ இன்று நடக்கக்கூடியதாகத் தெரியவில்லை.

கூட்டுப் பண்ணைகளின் அடுத்த பெரிய சிக்கல் வாகனங்கள் சென்றுவரத் தேவையான பெரிய பாதை (வண்டித் தடம்). அந்தக்காலத்தில் தலைச்சுமையாக எடுத்துச் சென்றதாலும், டிராக்டர்கள் இல்லாததாலும் யாரும் பெரிய பாதைகளைக் கண்டுகொள்ளவில்லை. பங்காளிகளுக்குப் பெரிய வில்லங்கத்தை விட்டுச் செல்வதற்காக வலியச்சென்று வெளியாட்களுக்கு விற்கும் கூட்டாளிகள் உண்டு. அதனால் மற்றவர்களும் தடப் பிரச்சினை காரணமாக வேறு வழியில்லாமல் விற்கின்றனர். இத்தகைய தோட்டங்கள் விரைவாக நகரிலிருந்து முதலீடு செய்பவர்களிடம் கைமாறிக் கொண்டிருக்கின்றன.

விவசாயம் அழிந்து வருகின்றதா என்றால் நிச்சயமாக இல்லை. பத்து குடும்பங்கள் செய்த விவசாயத்தை ஒரு குடும்பம் செய்ய ஆரம்பிக்கின்றது. சிறு குறு விவசாயிகள் கிடைக்கப்போகும் மிகச்சிறிய இலாபத்துக்காக தொடர்ந்து முதலீடு செய்வதைக் காட்டிலும் வேறு தொழில்களுக்குச் செல்வதே உகந்தது என்பதை உணரும்போது அவர்களாகவே வெளியேறி விடுகின்றனர். ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நிலம் உள்ளவர்களின் வாரிசுகள் இன்று நேரடியாக விவசாயத்தில் இல்லாததே இதற்கு சான்று. பெருமைக்கு எருமை மேய்க்கும் வறட்டுக்கிராக்கி ஆசாமிகளை இந்த இடத்தில் விவாதப் பொருளாக்க வேண்டாம்.

இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பை அளிக்கும் தொழில் விவசாயம் என்பதால் அதில் இருக்கும் மக்களுக்கு வேறு நல்ல மாற்று வேலை கிடைக்கும்வரை அதில் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அரசாங்கம் மானியத்தை அள்ளி வீசி மிகப்பெரிய மக்கள்தொகையை under productive ஆக வைத்துக்கொண்டிருக்கிறது.

வாழ்வியல் முறை, வாழ்வாங்கு முறை, டிராக்டர் சாணி போடுமா என எகத்தாளம் பேசி, ஊரான் வீட்டுப் பண்ணைகளுக்கு அட்வைஸ் மட்டுமே வழங்கிவிட்டு, தான் ஒரு ஏக்கர் கூட பண்ணையம் பண்ணி பார்த்திராதவர் நம்மாழ்வார் ஐயா. அவரது வழியொற்றி வரும் பக்தாக்களுக்கு ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்துக்கு பைப்லைன் அமைக்க, ஒரு புதிய மின்கம்பம் போட ஒரு சிறு விவசாயிக்கு மற்ற சக சிறு விவசாயிகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தோ, மற்ற பிரச்சினைகள் குறித்தோ எந்த புரிதலும் இருக்காது. இயற்கை விவசாயம் பண்ணுனா உலகத்துல இருக்கற எல்லாப் பிரச்சினையும் தீர்ந்துடும் என்பார்கள்.

நகரத்தில் பல்வேறு வகையான தொழில்களில் ஈடுபட்டு சம்பாதிப்பவர்கள் கணிசமான பணத்தை கிராமப்புறங்களில் உள்ள நிலங்களில் முதலீடு செய்து அதன்மூலம் வருமானம் வராவிட்டாலும், வந்த மாதிரி கணக்கு காட்டி கணிசமான பணத்தை வெள்ளையாக்கவோ, வரி ஏய்க்கவோ பயன்படுத்துகின்றனர். அதாவது இலாபத்துடன் இலாபமாக சேரும் அந்த தொகையுடன் சிறு குறு விவசாயிகள் போட்டியிட்டு முதலீடு செய்ய முடியாது.

அதிகரித்துவரும் செலவினங்களுக்கு இணையாக முதலீடு செய்து குறைந்த இலாபத்தையோ, நட்டத்தையோ சந்திப்பதைக் காட்டிலும் வெளியேறுவது என்பது இயல்பாக நடக்கவே செய்யும். மற்ற தொழில்களுக்கும் அதுதானே. பெருமைக்காக எவ்வளவு காலம் பல குடும்பங்களை under productive ஆக வைத்திருப்பது? வாழ்வியல் முறை, தகிட ததமி தகிட என்பதெல்லாம் போகாத ஊருக்கு வழி சொல்லும் வேலை. நாலு காசு சம்பாதிக்க துப்பில்லாத பயல் என்று ஒருநாள் சொந்தக் குடும்பமே தூற்றும் அல்லவா?

விவசாயப் பல்கலைக்கழகத்தில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவர்கள் ஏன் சொல்லிக்கொள்ளும்படியாக தொழில்களை ஆரம்பித்து வெற்றி பெறுவதில்லை?

விவசாயப் பல்கலையில் பல பட்டப்படிப்புகள் இருந்தாலும் புழங்குவதற்கு எளிதாக அக்ரி என்று மட்டும் இப்போதைக்கு அழைத்துக் கொள்வோம். அக்ரி ஒருவர் தொழில் முனைவோர் ஆவதற்கு சில காரணங்களே இருந்தாலும், ஆகாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

1) கல்லூரியில் சேரும்போதே அக்ரி படித்தால் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம், பாங்கி அதிகாரி ஆகலாம், அக்ரி டிபார்ட்மெண்ட்டில் அதிகாரி ஆகலாம், குரூப் 1 போகலாம், பெரிய புள்ளி ஆகலாம், நல்ல முரட்டு இடத்தில் கல்யாணம் பண்ணலாம், அப்புறம் ஜாலியா இருக்கலாம் என்று பெற்றோர்களும், உற்றோர்களும் ஒரு மாணவனை மூளைச்சலவை செய்தே சேர்க்கின்றனர். நன்றாக சம்பாதிக்கத்தானே இதெல்லாம் என்று கடைசி வரைக்கும் பணத்தின் முக்கியத்துவத்தை யாரும் உடைத்துப் பேசுவதில்லை.

2) சிலபஸ் முழுவதும் பல்வேறு அரசாங்கத் துறைகளில் வேலை செய்ய பணியாளர்களை உருவாக்கும் வண்ணமே அமைந்துள்ளது. தொழில்முனைவோர் குறித்த தாள்களெல்லாம் ஒப்புக்குசப்பான் மாதிரியான ஜல்லியடிக்கும் சமாச்சாரம். மற்றபடி பல்கலைக்கழக உணவகம், நகலகம் என எங்கேயும் மாணவர் கிளப்கள் பகுதி நேரமாக எடுத்து வியாபாரம் செய்ய அனுமதிப்பதில்லை.

3) பேராசிரியர்களும், சீனியர்களும் ஒரு மாணவன் UG சேர்ந்ததும் எப்படி PG சேருவது, PhD சேருவது, எப்படி உதவித்தொகை பெறுவது, நுழைவுத்தேர்வுகளில் வெற்றிபெறுவது என்பது குறித்து வண்டி வண்டியாக அறிவுரைகள் வழங்குகின்றனர். மேலும் எப்படி சொந்த சாதியில் ஃபிகர் தேற்றுவது, பிஎச்டி முடித்து அங்கேயே RA-வாகி இருவரும் அங்கேயே உதவிப் பேராசிரியராகி, ஒன்றாக ஆராய்ச்சி பண்டு வாங்கி செட்டில் ஆவது என்பதற்குக் கிடைக்கும் வாய்மொழி ஆலோசனைகளை பதிவு செய்தால் ஒவ்வொன்றும் நானூறு பக்கத்துக்கு குறையாமல் மூன்று தொகுதிகள் புத்தகம் வெளியிடலாம்.

4) உயர்கல்வி பயில்வேன், சிவில் சர்வீஸ் எக்சாம் எழுதுவேன், ARS, குரூப் 1, இதர பிற யூபிஎஸ்சி தேர்வுகளில் எதுவும் முடியாதபோது வங்கி அதிகாரி அல்லது அரசாங்க வேளாண்துறை அதிகாரி ஆவதற்கு முயற்சி செய்வேன், வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பேன்/அங்கேயே ஆராய்ச்சியாளராகத் தொடர்வேன், ஆனால் இங்கே உதவிப் பேராசிரியர் வேலை கிடைத்தால் வந்துவிடுவேன். இஃது எதுவும் செட் ஆகவில்லை என்றாலும் தற்காலிக உதவியாளர் வேலைகள் ஏதாவது செய்வேன். இதில் எதுவுமே முடியாதபோது சொந்தமாகத் தொழில் தொடங்கலாமா என்று யோசிப்பேன் என்ற மனநிலையிலேயே 99% மாணாக்கர்கள் அக்ரி படிக்கின்றனர். அதாவது வேலைவாய்ப்பு கிடைத்தால் வேலை செய்வேன். கிடைக்காவிட்டால் வேலை தேடுவேன். சுய தொழில் பற்றிய எண்ணமே மனதில் எழாத அளவுக்கு பார்த்துக் கொள்வது மட்டுமே லட்சியம்.

5) வெளியில் சென்றால் வேலை எதுவும் கிடைக்காது என்று பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியே சென்றே பார்க்காத ஒரு கூட்டம் மாணவர்களை உயர்கல்வி நோக்கி உந்தித் தள்ளுவது. UG முடித்து வெளியேறுபவர்கள் பாக்கியவான்கள். வாழ்க்கையில் நீண்ட அனுபவத்தையும், போதுமான காலத்தையும் கையில் வைத்துக்கொண்டு கரையேறுகிறார்கள். PG படித்துவிட்டு வெளியேறலாம் என்று நினைப்பவர்களைப் பயமுறுத்தி, ‘பிஎச்டி பண்ணலன்னா ஒரு வேலையும் கிடைக்காது, உருப்படாம போயிடுவ’ என்று பயமுறுத்த ஒரு பெரும் கூட்டம் உண்டு.

6) ஒரு ஜெராக்ஸ் கடை நடத்துவது எப்படி என்று கூட தெரியாத பேராசிரியர்கள் என்ட்ரபிரீனர்ஷிப், மார்க்கெட் இண்டெலிஜென்ஸ், டெக்னாலஜி இன்குபேட்டர், பிசினஸ் வென்ட்ச்சர்ஸ் என்று எல்லா இடத்திலும் உட்கார்ந்துகொண்டு தாலி அறுப்பது. இவர்களிடம் பயின்றுவிட்டு வரும் மாணாக்கர்கள் பாங்கி கரண்ட் அக்கவுன்ட், ஜிஎஸ்டி நம்பர், ஐ.டி. ரிட்டர்ன்ஸ் என்பதெல்லாம் எதற்கு என்றுகூட தெரியாமல் வந்து பிசினஸ் ஆரம்பிக்கனும் என்று கேட்கிறார்கள்.

7) தனியார் இடுபொருள் நிறுவனங்களில் தயக்கமின்றி நுழையும் இளைஞர்கள் குறுகிய காலத்தில் முரட்டு சம்பளங்களை அடைந்துவிடுகிறார்கள். தங்களுடைய மனநிலையில் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு உள்ளே இழுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றனர்.

8) காதல் – இஃது உங்களுக்கு அபத்தமாகவும் தோன்றலாம். விவசாயக் கல்லூரிகளில் UG படிக்கும்போது பருவ தாகத்துக்குத் தீனி போட்டு தேக சாந்தி தேடிக்கொண்டவர்கள் யாருமே சொல்லிக்கொள்ளும்படியான தொழில்முனைவோர் ஆனதில்லை என்பது மரபு. காதல் மன்னன், காசனோவா ஆக இருந்து தொழிலதிபரான (ஆண்/பெண்) விதிவிலக்குகள் இருந்தால் தாராளமாக சுட்டிக்காட்டவும்.நமக்கு முன்னும் பின்னும் விவரம் தெரிந்த பல ஆண்டு அக்ரி மக்களையும், தொழில்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றவர்களிடமும் கிடைத்த நீண்ட உரையாடல்களில் இருந்து கணிக்கப்பட்டது. (உழவியல் துறையின் மரியாதைக்குரிய மூத்த பேராசிரியர் ஒருவர் எங்களுக்கு UG முதல்நாள், முதல் வகுப்பு எடுத்தபோது This is not a place to select your life partner என்று சொல்லி, வாழ்த்தி ஆரம்பித்தது இன்றும் நினைவில் இருக்கிறது).

படித்தவுடன் சிலர் பெற்றோர்களின் குடும்பத் தொழில்களைப் பார்க்க சென்றுவிடுகின்றனர். அவர்கள் அக்ரி படித்ததால் மட்டுமே தொழில் முனைவோர் ஆவதில்லை என்பதால் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

பலவிதமான தனியார் நிறுவனங்களில் – இடுபொருள் விற்பனை மட்டுமல்லாது – நுழைபவர்களே பெரும்பாலும் சொந்த தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற திசையில் நகர்கின்றனர். அவர்களது தைரியம், தன்னம்பிக்கை, சந்தையில் மக்களை எதிர்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவம், பலரும் துணிச்சலாக இறங்கி இலாபமீட்டுவதைப் பார்ப்பதால் கிடைக்கும் உத்வேகம் தாண்டி, அவர்களிடம் இருக்கும் ஒருவிதமான வேலை பாதுகாப்பின்மையும் சுயதொழில் ஆரம்பிக்கக் காரணமாகிறது.

வேளாண் இடுபொருட்கள் விற்பனையில் இருக்கும் கணிசமான அக்ரி மக்கள் தனியார் நிறுவனங்களில் இருந்து வெளியில் வந்து தொழில் ஆரம்பித்தவர்களே. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டத்தில் கம்பெனியில் மேல் மட்டத்தில் உள்ளவர்களோடு ஏற்படும் உரசல்களாலோ அல்லது கம்பெனியில் ஏற்படும் நிர்வாக மாறுதல்களின்போது தெருவில் விட்டுச் செல்லப்படும்போதோ கம்பெனிக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் உழைத்தது போதும் என்று ஒரு வைராக்கியத்தில் தொழில் ஆரம்பிக்கின்றனர். இந்த மாதிரியான ஆட்கள் பணத்தை இழப்பதில்லை; இவர்களிடம் வியாபாரம் செய்பவர்களும் பணத்தை இழப்பதில்லை. பணியிடங்களில் கையாடல் செய்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு வழி இல்லாமல் தொழில் முனைவோர் ஆனதாகப் பெரிதாக ஏதும் காணோம்.

எந்தத் தொழிலையும் ஆரம்பிப்பதற்கு வயது ஒரு விசயமில்லை. ஆனால் வியாபாரம், பணம் குறித்த attitude மிகவும் முக்கியமானது. ரிஸ்க் எடுப்பதற்கான ஒரு நபரின் மொத்த தைரியமும், திட்டமிட்ட தெளிவும் home loan எடுக்கும்போது மொத்தமாக முடிவுக்கு வருகிறது. அடிநிலமும் இல்லாமல், கட்டடமும் இல்லாமல் நடு வானத்தில் நான்கு சுவர்களை சதுர அடி நாலாயிரம் ரூபாய் என தனது Form – 16-ஐ நம்பி வங்கியில் வட்டிக்கு வாங்கி அபார்ட்மென்ட் வாங்கும்போது ஒரு நபருடைய தொழில் முனைவோர் quotient முழுவதும் செத்து விடுகிறது. பின்னர் அவர்களாக உத்வேகம் பெற்று எந்தத் தொழில்களையும் ஆரம்பிப்பதில்லை. ஏதாவது அதீத காரணங்களால் வேலை பறிபோனால் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புண்டு.

அரசாங்க முன்னெடுப்புகளில் நபார்டு வங்கியின் Agri clinics & Agri Business Cenrltres என்ற திட்டம் கணிசமான அக்ரி மக்களைத் தொழில் ஆரம்பிக்க உதவி வருகிறது. இருபதுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஐந்து இலட்சம் முதல் ஒரு கோடி வரைக்குமான கடனில் 35% பொதுப் பிரிவினருக்கும், 44% பெண்களுக்கும், பட்டியலினத்தவருக்கும் மானியம் உண்டு. ஆரம்பித்து இரண்டு வருடங்கள் நல்லபடியாக நடத்தப்படும் தொழில்களுக்குத் தரப்படும் மானியம் ஓர் அருமையான ஊக்கத் திட்டம்.

மற்றபடி துணைவேந்தர், பதிவாளர், கமிசனர், செக்ரட்டரி, நபார்டு உயரதிகாரி போன்ற அரசாங்க உயர் பதவிகளில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தொழில் ஆரம்பித்து வியாபாரம் செய்தாலும் அவர்களைத் தொழில் முனைவோர்களாக யாரும் கருதுவதில்லை. அது வியாபாரமே கிடையாது. அவர்களது வாரிசுகள் அக்ரோ இண்டஸ்ட்ரி ஆரம்பித்து நடத்துவதும் ஒரு வகையான கொடுக்கல்வாங்கல் கணக்கின் அடிப்படையில்தான்.

அறுபது, எழுபதாயிரத்துக்கும் அதிகமான சம்பளம் பெறும் அரசாங்க வேலைகளில் இருக்கும் அக்ரி மக்கள் ஏழெட்டு வருடங்களில் ஒருவகையான மனச்சோம்பலை அடைந்துவிடுகின்றனர். அவர்களுக்கு சிறு சிறு வேலைகள் கூட கீழ்நிலைப் பணியாளர்களால் செய்து தரப்பட்டு விடுவதால் எதையாவது தாமாக முன்வந்து செய்யும் ஆர்வத்தை இழந்து இளம் தொப்பையுடன் சோர்வாகி விடுகின்றனர். யாராவது புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது, கேள்விப்படும்போது ஒருவித சலிப்புடனேயே பேசுவதைக் காண முடிகிறது. வங்கியில் இருக்கும் அக்ரி மக்களுக்கும் இது பொருந்தும். அபூர்வமாக அரசாங்க வேளாண்மைத்துறையில் இருக்கும் சிலர் ஓய்வு நேரங்களில் வியாபாரம் செய்து பார்க்கும் முயற்சியில் இறங்குகின்றனர்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று தொழிலதிபர் ஆனவர்கள் குறித்து எந்தவொரு தரவுகளும் எங்கேயும் இருப்பதாகக் காணோம். IIM-யில் பயின்று தொழிலதிபர் ஆனவர்களின் வெற்றிக்கதைகளை ராஷ்மி பன்சால் போன்றவர்கள் புத்தகமாகவே வெளியிட்டிருக்கின்றனர். அந்த புத்தகமும் நல்ல வியாபாரம் ஆகியிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வெளிவரும் மருத்துவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அக்ரி மக்களின் எண்ணிக்கை குறைவு, வேலைவாய்ப்பும் அதிகமாக இருந்தது. இன்று பல தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு அதிக எண்ணிக்கையில் பட்டதாரிகள் வெளிவருவதால் கணிசமான மக்கள் தொழிலதிபர் ஆவார்கள் என்று நம்புவோம்.

அக்ரி படித்து ஏன் ஒரு பயலும் வியாபாரம் பண்ண வர மாட்டேங்கிறான் என்று என்னதான் நமக்கு நாமே கழுவி ஊற்றிக்கொண்டாலும் நமக்கு எல்லாம் இருக்கும் ஒரே ஆறுதல் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம். எத்தனை வெட்னரி டாக்டருங்க சொந்தமா வியாபாரம் பண்றாங்கன்னு பாருய்யா என்று சொல்லி சமாதானம் செய்து கொள்வோமாக!

முகிலினி – விஸ்கோஸ் ஆலை வரலாறு குறித்த அருமையான நாவல்

புத்தக விமர்சனம் என்று எளிதாக ஆரம்பிக்கலாம். ஆனால் ஒரு வரலாற்று ஆவணம் மாதிரியான நூலாக இருப்பதால் முகிலினி நாவலை வெறும் புத்தக விமர்சனமாக சொல்லி கடந்துபோக முடியாது. நாவலாசிரியர் முருகவேள் வழக்குரைஞர் என்பதால் எல்லா தரப்பு நியாயங்களையும் பதிவு செய்திருக்கிறார். மிகைப்படுத்தப்பட்ட பாத்திரம் என்று எதுவுமே இந்த நாவலில் கிடையாது.

இந்தியா சுதந்திரம் பெற்றபின் பவானிசாகர் அணை கட்டும் வேலை ஆரம்பித்த காலத்திலிருந்து புரூக்ஃபீல்ட்ஸ் ஷாப்பிங் மாலில் காஃபி டே-வில் செல்ஃபி எடுப்பது, நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் செல்வது வரைக்குமான காலம் வரைக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜக்கி வாசுதேவன் வரலாறும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பெயர்களை மாற்றி எழுதியிருப்பதால் முதலில் அதன் உண்மையான பின்னணியை தெரிந்துகொண்டு ஆரம்பித்தால் ஒவ்வொரு நிகழ்வுகளின் காரணமும், அழுத்தமும், அதன் நியாயமும் புரியும்.

விஸ்கோஸ் எனப்படும் ரேயான் தயாரிக்கும் ஆலை உருவாகி, வளர்ந்து வீழ்ந்த வரலாறுதான் கதைதான் இந்த முகிலினி நாவல்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பருத்தி விளையும் பெரும் பகுதிகள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட தென்னிந்திய ஆலைகளுக்கு பஞ்சு தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனால் அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு வேண்டும் தேடிய திரு ஆர். வெங்கடசாமி நாயுடு ரேயான் அதற்கு ஒரு மாற்றாக அமையும் என்பதை உணர்ந்து அதற்கான ஆலை அமைக்கும் பணியில் இறங்குகிறார். இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா (SNiA Viscosa) உதவியுடன் ஆலை அமைக்கப்படுகிறது. சவுத் இண்டியா விஸ்கோஸ் கம்பெனியின் 24.5% பங்குகளை மிலன் நகரில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனி, மஸ்கட்டில் சப்பினா (Sapina) என்ற பெயரில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் தனது துணை நிறுவனம் மூலமாக கையில் வைத்திருந்தது. இந்தியா, பிரேசில், தென் அமெரிக்க நாடுகளில் ஸ்நியா கம்பெனியின் சொத்துகளை நிர்வாகம் செய்துவந்த இந்த சப்பினா லக்ஸம்பர்க்கில் (Luxumburg) பதிவு செய்யப்பட்ட கம்பெனி.

விஸ்கோஸ் கம்பெனிக்கு மரங்களை கூழாக்கி பெரிய ஏடுகளாக மாற்றி கச்சாப்பொருளாக ஸ்நியா இத்தாலியிலிருந்து ஏற்றுமதி செய்து வருமானம் பார்த்தது. சிறுமுகையில் பவானிசாகர் அணைக்கு மேலே 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் விஸ்கோஸ் ஆலை அணையலிருந்து தண்ணீரையும், பைக்காரா நீர்மின்நிலையத்திலிருந்து மின்சாரத்தையும் பெற்று நேரடியாக 10000 பேருக்கு வேலை கொடுத்து வந்தது. அப்போது தினசரி 60 டன் ரேயான் உற்பத்தி செய்து, கழிவுநீரை அணைக்குள்ளேயே நேரடியாக திறந்துவிட்டாலும் dilution ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்ததால் அணையின் மீன்களுக்கோ, விவசாயத்திற்கோ பெரிய பாதிப்பில்லாத அளவில் இருந்து வந்திருக்கிறது.

வட இந்தியாவில் ஆதித்யா பிர்லாவின் கிராசிம் நிறுவனம் மிகப்பெரிய ரேயான் உற்பத்தியாளர் என்பதால் விஸ்கோஸை வாங்கிவிட பல வழிகளில் நெருக்கடி கொடுத்து வந்தது. அந்த போட்டியை எளிதாக சமாளித்த வெங்கடசாமி நாயுடு குடும்பத்தினர் கோவையின் அடையாளமாக விளங்கும் பல நிறுவனங்களை தொடர்ந்து ஆரம்பித்து வளர்ந்து வந்தனர். லஷ்மி மில்ஸ், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல், CIT கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை என்பதோடு உரம், பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், ஆட்டோமொபைல் டூலர்ஷிப் என அவர்களது பெரிய குடும்பத்தினை நீக்கிவிட்டு பார்த்தால் கோயமுத்தூர் வெறும் விவசாய பூமியாகத்தான் இருந்திருக்கும்.

அந்த இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஃபேமிலியில் ஒருவர் மட்டும் (கரிவரதன் என்று நினைக்கிறேன்) கார் ரேஸ், விமானி என வேறு பாதையில் பயணித்தார். அவரிடம் தானமாக கொஞ்சம் நிலத்தைப் பெற்று ஆசிரமம் அமைத்தவர்தான் ஜாவா ஜெகதீஷ் என்கிற ஜக்கி வாசுதேவ். (ஆரம்ப காலத்தில் ஜாவா ஜெகதீஷ் காட்டூர், பாப்பநாயக்கன்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பெரிய இடத்து வாரிசுகளுக்கு பொட்டலம் சப்ளை செய்து வந்தார் என்பது செவிவழிச் செய்தி. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை). அவரை ஆஸ்மான் ஸ்வாமிகள் என்று ஏகத்துக்கும் காலாய்த்திருக்கிறார் நாவலாசிரியர்! ஆஸ்மான் ஸ்வாமிகளின் எழுச்சியை நக்கலாக பதிவு செய்திருக்கும் ஒரே நாவல் முகிலினி மட்டும்தான்.

அறுபதுகளில் மோசமாக இருந்த அந்நிய செலாவணி தட்டுபாடு காரணமாக அரசு இத்தாலியில் இருந்து இறக்குமதியைக் குறைத்துக்கொள்ளச் சொல்கிறது. அதற்கு இணையாக ஊட்டி, கூடலூரில் மரம் வெட்டிக்கொள்ளவும், அரியலூர் சுரங்கங்களில் இருந்து சுண்ணாம்பு போன்றவற்றை மலிவு விலையில் அரசாங்கம் தந்தது.

அன்றைய லைசன்ஸ் ராஜ் காலத்தில் 10000 பேருக்கு வேலை தருவது சாதாரண விசயமல்ல. இன்று உலகமயமாக்கம் இல்லாமல் ஐ.டி. தொழில் வேலைகள், வெளிநாட்டு இயந்திரங்கள்+தொழில்நுட்பங்கள் இல்லாமல் வெறும் ஆலை சார்ந்த உற்பத்தித் தொழில்களும், விவசாயமும் மட்டும் இருந்தால் வேலைக்காக தெருத்தெருவாக அலைவதோடு, பெரும் உள்நாட்டுக் கலவரங்கள் பஞ்சம், பட்டினி சாவுகள் என்று ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே இந்தியாவும் இருந்திருக்கும்.

விஸ்கோஸ் ஒரு ரூபாய் செலவு செய்து பத்து ரூபாய் இலாபம் பார்க்கும் நிறுவனமாகி வெற்றிகரமாக நடந்துவருகையில் இத்தாலியில் உள்ள ஸ்நியா விஸ்கோசா கம்பெனியில் நிதி நெருக்கடி ஏற்படுகிறது.

அண்மையில் டாடா நிறுவன சேர்மனாக இருந்து தூக்கியடிக்கப்பட்ட சைரஸ் மிஸ்திரியின் அப்பாவுக்கு விஸ்கோஸ் ஆலை மீது ஒரு கண். அவரது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் டாடா டிரஸ்ட்டில் 18% பங்கு வைத்திருக்கும் மிக மிகப்பெரிய கோடிசுவர கம்பெனி. சவுத் இந்தியா விஸ்கோசின் இலாபம் பிர்லா குழுமம், ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் என பல நிறுவனங்களில் கண்களை உறுத்தியது. விஸ்கோசின் வெற்றிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட உரத் தொழிற்சாலையும் அப்போதைய பெரிய ஆலைகளுள் ஒன்று. அதன் பின்னரே ஸ்பிக் வளர்ச்சி கண்டது.

நிதி நெருக்கடியில் சிக்கிய ஸ்நியா விஸ்கோசாவின் துணை நிறுவனமான சப்பினாவை பி. எஸ். மிஸ்த்ரியின் Look Health Properties Thirty Ltd என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் கையகப்படுத்தியதில் விஸ்கோசின் 24.5% பங்குகள் ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் வசம் சென்றது. வெளி மார்க்கெட்டில் இருக்கும் 49% பங்குகளில் கணிசமான அளவை வாங்க மிஸ்த்ரி முற்படுகிறார். வெங்கடசாமி நாயுடுவும் அதற்கு போட்டியில் இறங்குகிறார்.

அந்நேரத்தில் வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கம்பெனியை முறைகேடாக வாங்கி அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக விஸ்கோஸ் சார்பில் வெங்கடசாமி நாயுடு வழக்கு தொடர்கிறார். நளினி சிதம்பரம் உட்பட பல பெரிய வழக்குரைஞர்கள் விஸ்கோசுக்காக வழக்காடினர். விஸ்கோஸ் கம்பெனி பங்குகள் எதையும் தாங்கள் வாங்கவில்லை எனவும் லக்ஸம்பர்க்கில் பதிவு செய்யப்பட்ட சப்பினா கம்பெனியை மட்டுமே வாங்கியதாகவும் அதனால் சப்பினா வசம் இருந்த விஸ்கோஸ் பங்குகளின்மீது எந்த வியாபாரமும் நடக்கவில்லை எனவே அந்நிய செலாவணி மோசடி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம் தெரிவித்தது; வழக்கில் விஸ்கோஸ் தோற்றது.

இன்று வோடபோன் இதே மாடலில்தான் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றியது. இந்தியாவில் உள்ள பங்குகளை வாங்கவில்லை, மொரீஷியஸில் உள்ள கம்பெனியை மட்டுமே வாங்கினோம், அதனால் இந்தியாவில் உள்ள கம்பெனி பங்குகள் தானாக கிடைத்துவிட்டது என்றது. இந்த டகால்ட்டி வேலைக்கெல்லாம் அப்பன் என்பது போன்றது ஸ்நியா>சப்பினா>விஸ்கோஸ்>ஷப்பூர்ஜி பலோன்ஜி குழும வழக்கு.

பின்னர் வெங்கடசாமி நாயுடு இறந்துவிட அவரது இளையமகன் விஸ்கோஸ் சேர்மன் பதவி தனக்கே தரப்பட வேண்டும் என்று அடம்பிடித்து ஒரு கட்டத்தில் அவரது பங்குகளை மிஸ்த்ரி குழுமத்திடமே விற்றுவிட்டு வெளியேறினார். ஒரு கட்டத்தில் மிஸ்த்ரி நேராக கோவைக்கு வந்து மிகவும் மரியாதையாக அவர்களது வீட்டுக்கே சென்று மிகப்பெரிய தொகைக்கு கம்பெனியைக் கேட்க வெங்கடசாமி நாயுடுவின் குடும்பம் அதை விற்றுவிட்டு மொத்தமாக ரேயான் தொழிலிருந்து வெளியேறியது.

தொழிலை வெறும் முதலீடாக பார்ப்பவர்கள் போட்ட பணத்துக்கு ரிட்டர்ன் மட்டுமே பார்ப்பார்கள். அந்த இடத்தில்தான் முதலாளித்துவத்தின் கோர முகம் வெளிப்படுகிறது. தங்க முட்டையிடும் வாத்தைக் குச்சியை விட்டு குத்தும் வேலைகளைச் செய்து அதை கொல்வார்கள். சொத்தை வச்சு தின்னு பாக்க மாண்டாத திருவாத்தான் என்று கோவைப் பக்கம் சொல்வார்கள். கம்பெனி ஆரம்பித்து, கஷ்டப்பட்டு, அதனுடன் சேர்ந்து வளர்ந்த யாரும் தன் கண் முன் கம்பெனி அழிவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இடையில் வந்து சேர்ந்துகொண்டவர்களுக்கு அப்படி உணர்ச்சிப்பூர்வமான ௮ணுகுமுறைகள் இருப்பதில்லை; கிடைத்தவரைக்கும் இலாபம் என்று சுரண்டித் தின்பார்கள்.

கார்ப்பரேட் சதி, முதலாளித்துவ பம்மாத்து வேலைகள் என கற்பிக்க வேண்டியவற்றை விடுத்து தேவையில்லாதவற்றை இன்றைய இளைஞர்களுக்கு கற்பித்து வருகிறோம். அதனால்தான் ஆன்சைட்டில் சம்பாரிக்கும் வேலைகள் எப்படி இந்தியாவிக்குள் வந்தது என்ற தெளிவே இல்லாத ஒரு மொன்னை தலைமுறை உண்டாகியிருக்கிறது.

Yuval Noah Harari எழுதிய Money என்ற புத்தகம் joint stock company என்பது எதற்காக தோற்றுவிக்கப்பட்டது, அவற்றின் பின்னணி, கடந்து வந்த பாதை என பலவற்றையும் அற்புதமாக சொல்கிறது. Wall Street என்ற பெயற்காரணம் அதன் வரலாற்றைத் தெரிவிக்கிறது. தொழில் நடத்துவதற்கு கிடைக்கும் சட்ட பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்பதை உணர Money-யை வாசிக்க வேண்டும்.

நாளொன்றுக்கு 60 டன் ரேயான் உற்பத்தி என்ற அளவில் வெங்கடசாமி நாயுடு விட்டுச்சென்ற கம்பெனியை 250 டன் அளவுக்கு உயர்த்தியது ஷப்பூர்ஜி பலோன்ஜி குழுமம். நான்கடி விட்டமுள்ள குழாயில் கழிவுநீர் அப்படியே அணைக்குள் வெளியேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அதிகமாகி மக்கள் போராட்டத்தில் இறங்கி கடைசியில் ஆலை இழுத்து மூடப்பட்டது.

நாவலில் வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இரு பாத்திரங்களான ராஜு, ஆரான் இருவரும் கோயமுத்தூரின் வரலாற்றுக்கு சாட்சியாக நாவல் முழுவதும் வருகிறார்கள். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படையில் இத்தாலி நாட்டுக்குச் சென்று வந்ததில் சில இத்தாலிய மொழி வார்த்தைகள் தெரியும் என்ற அடிப்படையில் விஸ்கோசில் பேச்சிலராக வேலைக்கு சேர்ந்து ஓய்வு பெறுகிறார் ராஜு. அவரது மகளுக்கு பவானிசாகர் அணையில் சூப்பிரண்டன்டாக வேலை செய்யும் இளைஞருடன் திருமணமாகிறது. ராஜுவின் பேரன் கெளதம் வழக்குரைஞராகி மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் திருடிய நண்பன் ஒருவன் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கு ஒன்றில் வெற்றிபெறுவது சிறப்பான கதையமைப்பு.

வெள்ளலூரைச் சேர்ந்த ஆரான் தொழிறசங்கப் போராட்டங்களில் கலந்துகொண்டு கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு, பிளேக் நோய் என பலவற்றையும் பார்த்து ஊரைவிட்டு வெளியேறாமல் அங்கேயே இருக்கிறார். வசந்தா மில் மூடப்பட்ட பின் வாழ்க்கையை ஓட்ட கஷ்டப்படும் ஆரானின் வழ்க்கையைப் போல பல ஆயிரம் கதைகள் கோவையில் உண்டு. சின்னியம்பாளையம் கொலை வழக்குகள், ஸ்டேன்ஸ் மில் துப்பாக்கிச் சூடு என சமீபத்திய பிரிக்கால் ஊழியர் கொலை வழக்கு வரை கோவைக்கு மிக நீண்ட தொழிற்சங்க வரலாறு இருக்கிறது.
ஊதிய உயர்வு கேட்டதற்காக ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்கள் ஏழு பேர் புரூக்பாண்ட் டீ கம்பெனி சாலையில் சுடப்பட்டு இறந்தனர். Work from home போட்டுவிட்டு இன்று அந்த சாலையில் உள்ள புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் உட்கார்ந்து தொழிற்சங்கங்கள், திராவிட கட்சிகள் என்ன கிழித்தன என்று வாட்சப்பில் வரலாறு ஃபார்வர்டு செய்யும் இளைய சமுதாயத்திற்கு கார்ப்பரேட் சதி என்ற வார்த்தையைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது என்பது காலக்கொடுமை.

வழக்குரைஞர் கெளதம் இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு திருநாவுக்கரசு என்ற நண்பருடன் இணைந்து புளியம்பட்டி அருகே இயற்கை விவசாயம் செய்வதும், அவருக்கும் திருநாவுக்கரசுக்கும் நடக்கும் உரையாடல்கள் அருமையான எழுத்து. ஒருகட்டத்தில் காந்தியவதியாக மாறி சட்டை அணிவதைக் கூட துறக்கும் திருநாவுக்கரசு நுகர்வைக் குறைத்துக் கொள்வது பற்றியும், மனிதர்களின் மனப்பாங்கை உணர்ந்து அடையும் முதிர்ச்சியையும் நாவலில் தெளிவாக உணர முடிகிறது.

இயற்கை விவசாயம் செய்து கத்தரிக்காய் விளைவித்த கெளதம் ஆசையாக கேர்ள்ஃபிரண்டுக்கு போன்போட்டு ஆர்கானிக் கத்தரிக்காய் கொண்டுவரவ என கேட்ட, ‘நீ அதை காரமடை அண்ணாச்சி கடையில் போட்டுவிட்டு காசை எடுத்துக்கொண்டு புரூக்ஃபீல்ட்ஸ்ல இருக்கற CCD-க்கு வந்துரு’ என்று சொல்வது epic!

திருநாவுக்கரசு பாத்திரம் சட்டையணியா சாமியப்பன் என்பவரை மனதில் நிறுத்தி உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம்மாழ்வாருக்கு விகடன் மூலம் கிடைத்த விளம்பரம் சாமியப்பனுக்கு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விகடனின் வியாபார நோக்கம் தெளிவானது. அப்படி எல்லாம் எல்லை நம்மாழ்வரைக் குறை சொல்வதே உனக்கு வேலையாகப் போய்விட்டது என்பவர்கள் ஸ்டெர்லைட் பிரச்சினையை எவ்வளவு கீழ்த்தரமாக இறங்கி தினமலர் எப்படி வெளியிட்டது என்பதை வைத்து ஒப்பிட்டுக் கொள்ளலாம். விஸ்கோஸ் பிரச்சினைக்கு நம்மாழ்வார் வந்து போராட்டத்தில் கலந்துகொண்டதைச் சொல்லும் அத்தியாயங்கள் நல்லவேளையாக அவரை வராதுவந்த மாமணி என்றெல்லாம் சித்தரிக்கவில்லை.

தொண்டு நிறுவனம் மூலம் சொல்லித்தரப்படும் வாழ்வியல் விவசாய வியாபாரத்தின் பின்னணி, மாடித்தோட்டம், பிராண்டட் சங்கிலித்தொடர் ஆர்கானிக் கடைகள், மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரை நீங்கள் சாப்பிடும் எல்லாம் விஷம் என பயமுறுத்தும் கும்பல் என எதையுமே நாவலாசிரியர் விட்டுவைக்கவில்லை என்பது சிறப்பு. பத்து ரூபாய் நிலவேம்பு பொடியை 120 ரூபாய்க்கு விற்கும் ஆர்கானிக் கடைகள் மீதான திருநாவுக்கரசின் கோபம் நியாயமான ஒன்று. அண்மையில் டெங்கு வந்தபோது நிலவேம்பு விற்ற டுபாக்கூர் மருத்துவ கும்பல் நீலவேம்புக்கு ஆதரவாக போலி ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளிவந்தவற்றக ஆதாரமாகக் காட்டி காசு பார்த்தன. நம்மாழ்வார் அதன் பிரச்சாரக் என்பது முக்கியமான ஒன்று.

சிங்காநல்லூர் குளக்கரை, காரமடை செல்லும் வழியில் ஓரிடத்தில் என ஆறேழு இடங்களில் பிளேக் மாரியம்மன் கோவில் உண்டு. ஒரு காலத்தில் கோயமுத்தூர் பிளேக் நோயால் பீடிக்கப்பட்டு சபிக்கப்பட்ட நகரம் என்று அழைக்கப்பட்டது. குடும்பம் குடும்பமாக பிளேக் நோயால் இறந்தவர்கள் பலர். அத்தோடு நிலவிய கடும் உணவுப் பஞ்சம், அரிசித் தட்டுப்பாடு என பலவற்றையும் நாவல் பதிவு செய்திருக்கிறது. பயந்து பயந்து அரிசியைப் பையில் எடுத்தச்சென்ற காலங்கள், கோரைக் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்ட பசியை அறிந்தவர்கள் இன்று பசுமை விகடன், நம்மாழ்வார் போன்றவர்களின் முட்டாள்தனமான வெடிமருந்தை உரமாக்கிய கதைகளை, பசுமைப் புரட்சி குறித்த எதிர்மறையான கதைகளுக்கு விலைபோக மாட்டார்கள்.

விஸ்கோஸ், ஸ்டெர்லைட் என சுற்றுச்சூழல் பிரச்சினையால் மூடப்பட்ட ஆலைகள் அனைத்தும் தங்க முட்டையிடும் வாத்தை அறுத்த கதைதான். Productivity என்ற பெயரில் குருட்டுத்தனமான வெறியில் இலாபம், இலாபம் என தம்மைச் சுற்றியுள்ள சூழலை, சமூகத்தை மதிக்காமல் இயங்க இந்தியா அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நிலப்பரப்பு அல்ல.

மூடப்பட்ட விஸ்கோஸ் ஆலையில் இயந்திரங்களைத் திருடி கோடீசுவரனானவர் பலர். அதில் வரும் கோவிந்து என்று திருடன் கொலைவழக்கில் இருந்து வெளியே வந்தபின் குதிரைமீது அமர்ந்து கத்தியை உயர்த்தியபடி இருக்கும் தீரன் ஒருவரது படத்தை வைத்துக்கொண்டு சாதிச் சங்கம் ஆரம்பிப்பது குறித்த அத்தியாயத்தில் நாவலாசிரியர் முருகவேள் மிளிர்கிறார்!

திண்டுக்கல்லின் தோல் ஷாப்புகளின் தொழிலாளர் போராட்டங்களை டி. செல்வராஜ் அவர்களின் ‘தோல்’ நாவல் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து பதிவு செய்திருக்கும். சாகித்ய அகாடமி விருது பெற்ற அது NCBH வெளியீடு என்பதால் தொழிற்சங்கம் என்பது அப்பழுக்கற்ற பத்தரைமாற்றுத் தங்கம் என்ற தொணி இருக்கும். முகிலினியில் விஸ்கோஸ் போராட்டத்துக்காக களமிறங்கும் வக்கீல் பழனிசாமி அவரது அலுவலகத்தில் வழக்குரைஞர் பழனிசாமியாக எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பதிவு செய்திருப்பதெல்லாம் நாவலாசிரியர் முருகவேளின் நேர்மையான, தைரியமான எழுத்து நடைக்கு சாட்சி.

நாவலில் வரும் இளம் வழக்குரைஞர் கெளதம் என்ற இளைஞரது பாத்திரம் நீங்கள்தானே என்று அவரிடம் நேரில் சந்தித்தபோது கேட்காமல் விட்டுவிட்டேன்!

அமெரிக்க ஐரோப்பிய வர்த்தக யுத்தம் – தேவையில்லாமல் உடைக்கப்படும் ஃபர்னிச்சர்கள்!

மான்செஸ்டரிலுள்ள ஆலைகளுக்கு தரமான பஞ்சு கிடைப்பதற்காக 1880-களில் ஆங்கிலேயர்களால் ஐதராபாத்தில் கரன்ஜியா பருத்திச் சந்தை உண்டாக்கப்பட்டது. அதன்பின் பல சட்டங்கள் பருத்தி வியாபாரத்தை ஒழுங்குபடுத்த ஐதராபாத்திலும், பம்பாய் மாகாணத்திலும் இயற்றப்பட்டு வர்த்தகம் கண்காணிக்கப்பட்டு வந்தது. உலகளவில் பருத்தி, சர்க்கரை, புகையிலை, சணல், ஓப்பியம் மட்டுமே பல தொழிற்சாலைகளும், வணிகமும், பல போர்களும் உருவாகக் காரணமாக இருந்த தொழிற்புரட்சிக்கான முதலாளித்துவ சரக்குகள்.

அதன் வியாபார பின்னணியில் உற்பத்தியை உயர்த்த பல வீரிய இரகங்கள், பூச்சிகொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தையில் இறக்கிவிடப்பட்டன. அண்மையில் மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பம் பூச்சி, களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் என பல்வேறு முகங்களோடு வளர்ந்து வருகிறது.

உலகளாவிய ஆடை இழைச் சந்தையில் பருத்தி, செல்லுலோஸ், லினன், பட்டு என இயற்கையாக கிடைக்கும் எல்லா apparel fibre-உம் மொத்தமாகச் சேர்த்து சுமார் 35% மட்டுமே பங்களிப்பு செய்கின்றன. மீதம் 65% சந்தை பாலியெஸ்டர், பாலிஅமைட் போன்ற செயற்கை இழைகளால் (synthetic fibre) ஆளப்பட்டு வருகிறது. அவற்றிற்கான மூலப்பொருள் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஆலைகளின் பின்னணியில் இருந்து வருகிறது. சுமார் பத்து சதவீதம் இயற்கை இழைகளின் பங்கு உயர்ந்தால் சின்தெடிக் ஃபைபர் சந்தை எப்படி எதிர்விளைவு ஆற்றும் என்பதை உலக சந்தையின் போக்கை கவனிப்பவர்கள் அறிவார்கள்.

இயற்கை இழைகளை உற்பத்தி செய்ய, தரம் பிரிக்க, நூற்க என பலகட்ட வேலைகள் இருப்பதால் இலாபமும் பலகட்டமாக பிரித்துக்கொள்ளப்படுவது இயல்பு. ஆனால் சின்தெடிக் ஃபைபர் இரண்டு மூன்று ஆலைகளுக்குள்ளேயே முடிந்துவிடுவதால் அதன் இலாப விழுக்காடுகளையும், அதைக் கட்டுப்படுத்தும் சக்திகளையும் அரசாங்கங்களால் அவ்வளவு எளிதாக அடக்கி ஆள முடியாது.

மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு எதிராக இயங்கும் காரணிகளில் முதலில் வருவது கச்சா எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட சின்தெடிக் ஃபைபர் சந்தையைக் கையில் வைத்திருக்கும் சக்திகள். இதுகுறித்து உலக இலுமினாட்டிகள், ஈயம் பித்தளைச் சட்டிகள், யானையணிகளை ஆராயும் குழுக்கள் உட்பட இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் இயற்கை இழை ஆர்வலர்கள் உட்பட யாரும் பேசுவதே இல்லை. அவர்களது நன்கொடைகளின் ஆதரவுடன் பி.டி. பருத்திக்கு எதிராக செயல்படும் NGO-க்கள் மறந்தும் செயற்கை இழைகளைக் குறித்து பேசா.

அடுத்து வருவது பூச்சிக்கொல்லி மருந்து விற்பனையைக் கையில் வைத்திருக்கும் இரசாயன நிறுவனங்கள். பூச்சிகொல்லி விற்பனைக்கு பருத்தி மிக முக்கியமான பயிர். அதை இழப்பதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளாது. அவர்களது offshore companies மூலமாக வரும் நன்கொடைகளையும் எந்த ஒரு சமூக சேவை அமைப்பும் வெளியிடாது.

எவ்வளவு பெற்றோம் என்றுகூட சொல்ல வேண்டாம். யார் யாரிடம் நன்கொடை பெற்றோம் என்ற தகவலைக் கூட வெளியிடாத பல NGO-க்கள், லெட்டர்பேட் அமைப்புகள் பொதுவெளியில் கொக்கரிப்பதைப் பார்க்கும்போது எதில் சிரிப்பது என்று தெரியவில்லை.

பாரம்பரிய விதைத் திருவிழாக்கள் நடத்துவதன் மூலம் பல அரிய germplasm வணிக நோக்கங்களுக்காக எளிதாக கைமாறுகிறது. இதை ஒருவகையில் திருட்டு என்றுகூட சொல்லலாம். பதிவு செய்யப்படாத – விவசாய சேவை செய்யும் – லெட்டர்பேட் அமைப்புகளில் திருடர்கள் உண்டு என்று சொல்பவர்களைக்கூட கார்ப்பரேட் கைக்கூலி என்று சொல்லும் கோமாளித்தனம் தமிழகத்தில் மட்டுமே சாத்தியம்!

களைக்கொல்லி எதிரப்புத்திறன் கொண்ட பருத்தி இரகங்களை வெளியிடாமல் இராயல்ட்டி விவகாரங்களில் அரசாங்கம் உள்நோக்கத்துடன் தலையிட்டு மான்சாண்டோவைப் பின்வாங்க வைத்ததுடன் மொத்தமாக இந்தியாவில் இருந்து வெளியேறுகிறோம் என்று சொல்ல வைத்தது. ஆனால் களைக்கொல்லி எதிர்ப்புத்திறன் மரபணு கொண்ட பல இட்சம் பாக்கெட்டுகள் திருட்டுத்தனமாக சந்தையில் இந்த ஆண்டு விற்றது. அந்த திருட்டு வியாபாரத்தில் மிகப்பெரிய இந்திய கம்பெனிகள் கூட ஈடுபட்டன. தமிழகத்திலும் விற்பனையானது. இந்த ஆண்டும் விற்பனையாவதாகத் தெரியவருகிறது.

பாக்கெட்டுக்கு மூன்று நான்கு டாலர் இராயல்ட்டி கிடைக்கவேண்டிய ஒன்றை எந்த நிறுவனமும் சும்மா சந்தையில் விட்டுவிடாது. ஆனானப்பட்ட மான்சன்டோ போன்ற கம்பெனிகளிடமே இரகங்களைத் திருடி, மறு உற்பத்தி செய்து விற்பனை செய்யக்கூடிய திறன் உடைய சந்தை சக்திகளுக்கு பாரம்பரிய விதைத் திருவிழாவில் திருடுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி! இன்னும் எப்படி விளக்கமாக சொல்ல முடியும் என்று தெரியவில்லை.

புதிய ஜீன்களை ஆராய்ச்சி செய்யும்போது பலதரப்பட்ட காரணிகளை பெரும் பொருட்செலவில் ஆராய்ச்சி செய்வார்கள். தனியார் நிறுவனங்களின் ஆராய்ச்சி முடிவுகள் 99% வெளியிடப்படாது. அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொதுவெளியில் மக்கள் நினைப்பது இயல்பு. உதாரணமாக பருத்தி காய்ப்புழுக்கள் பருத்திச் செடியை உண்டனவா அல்லது வேறு ஏதாவது செடியை உண்டு வளர்ந்தனவா என்பதை வயல்களில் பறக்கும் தாய் அந்துப்பூச்சிகளைப் பிடித்து அதன் இறக்கைகளில் உள்ள பொடியை எடுத்து அதன் gossypol அளவுகளை மிக அதிக திறன்வாய்ந்த துல்லியமான கருவிகள் மூலம் அளவிட்டு முடிவு செய்வார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள் எதிலும் இல்லாத இயந்திரங்கள் மான்சாண்டோ போன்ற நிறுவனங்களில் உண்டு. ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஏதும் வருவதில்லை என்பதற்காக பல நேரங்களில் பொதுமக்கள் குறைத்து மதிப்பிடுவது இயல்பு.

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் பிரச்சினை எழுந்த பின்னணியும் சுவாரசியமானது. நூடுல்சில் காரீயம் இருக்கிறது, கண்ணாடித்தூள்கள் இருக்கிறது, அஜினோமோட்டோ இருக்கிறது என்று பரபரப்பாக எழுதினார்கள். அந்நேரத்தில் பதஞ்சலி நூடுல்ஸ் வளர்ந்தது வேறு கதை. அந்த கண்டுபிடிப்புகளை வெளியிட்ட ஆய்வகத்துக்கு NABL அங்கீகாரம் கூட கிடையாது, அதே முடிவுகளை அவர்களால் திரும்பத் தர இயலவில்லை.

காரீயம் இருக்கிறது என்பதை இந்தியில் சொன்னவர்கள் சீசா என்று சொல்ல அதைக் கண்ணாடி என்று எழுதிவிட்டனர். இரண்டுக்கும் இந்தியில் சீசாதான்! மேட்டர் ஓவர். யாருக்கும் பொறுமையில்லை. ஒரு பிராண்டு அடித்து நொறுக்கப்பட்டது. நீதித்துறையில் innocent until proven guilty என்பார்கள். ஆனால் பணமதிப்பிழப்பு மூலமாக மோடி அதை guilty until proven innocent மாற்றி ரொக்கம் வைத்திருக்கும் அத்தனைபேரையும் அயோக்கியன் என்று முத்திரை குத்தியது மாதிரிதான் நடந்தது.

தற்போது மான்சாண்டோவின் கிளைஃபோசேட் களைக்கொல்லி புற்றுநோயை உண்டாக்கிவிட்டது என்று ஒருவர் தொடர்ந்த வழக்குக்காக பல மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அந்த வழக்கின் பின்னணி சுவாரசியமானது. ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனம் மான்சாண்டோவைக் கையகப்படுத்திய பின்னரே இந்த பெரிய தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. என்னமோ இதுதான் கிளைஃபோசேட்டுக்கு எதிரான முதல் வழக்கு என்பது மாதிரி நீதிபதிகள் அபராதம் விதித்தனர். இது காலங்காலமாக அமெரிக்காவும் ஐரோப்பாவுக்கும் நடந்துவரும் மறைமுக வர்த்தகப் போர். இதேநேரம் பேயர் மான்சாண்டோவால் கையகப்படுத்தப்பட்டிருந்தால் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.

நள்ளிரவில் பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து திருமுருகன்காந்தியைக் கைது செய்ததற்கு சொல்லப்பட்ட காரணம் மாதிரிதான் இதுவும்.

பல வருடங்களாக கோவிலில் மணி ஆட்டிய அர்ச்சகர் ஒருவருக்கு புற்றுநோய் வந்துவிடுகிறது. அதற்கு காரணம் கற்பூர வாசனைதான் என்று ஒரு நிறுவனம் ஆராய்ச்சி செய்து கற்பூரம் ஒரு கார்சினோஜன் என்று ஆராய்ச்சி முடிவு எழுதினால் நீதிபதிகள் கற்பூரம் தயாரிக்கும் கம்பெனிக்கு அபராதம் விதிப்பாரா? டீ மாஸ்டர் ஒருவருக்கு புற்றுநோய் வந்தால் சர்க்கரைதான் காரணம் என்று ஆலைகளின் மீது நீதிபதிகள் அபராதம் விதிப்பாரா?

மிகச் சிக்கலான ஆராய்ச்சி முடிவுகளுக்கு வழக்கு தள்ளுபடி, இழப்பீடு அபராதம், தடை என நீதிபதிகள் முடிவு செய்வதன் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் முக்கியமானது.

ஆடை உற்பத்தியில் இயற்கை இழைகள், செயற்கை இழைகள் இடையிலான போட்டி, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பல நூற்றாண்டுகளாக நடந்துவரும் வர்த்தக யுத்தம் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. அதில் நமது மோடி அரசாங்கம் தேவையில்லாமல் சில பர்னிச்சர்களை உடைத்து வைத்திருக்கிறது. வணிக பின்னணிகளைத் தொடர்ந்து உற்றுநோக்குவோம்; சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு role எதுவும் இதில் இல்லை.

வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கமே விலை நிர்ணயம் செய்வது சாத்தியமா?

கேள்வி: வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலையை நிர்ணயம் செய்து விவசாயிகளுக்கு இலாபம் கிடைக்க செய்திட வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. அது சாத்தியமா? ஏன் எந்த அரசாங்கமும் அதை செய்ய முன்வரவில்லை?

பதில்: அந்த, இந்த, எந்த அரசாங்கத்தாலும் அதை செய்ய முடியாது. அடுத்த 20 வருடங்களில் அதற்கான உட்கட்டமைப்பில் பாதி ஏற்படுத்தினாலே மாபெரும் சாதனையே.

விவசாயம் இன்னும் முறைப்படுத்தப்படாத, போதுமான எந்த தரவுகளும் இல்லாத, வரி இல்லாத வருமானமுடைய கடைநிலைத் தொழிலாகவே இருக்கிறது. அதில் மாபெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், அரசியல், சூழ்ச்சிகள் என எல்லாம் உண்டு. ஜாதி இல்லாமல் இந்தியாவில் விவசாயம் என்ற தொழில் இல்லை. அதனுடன் இணைந்த வர்ணாசிரம பேதங்களும் அதனடிப்படையில் இருக்கும் சுரண்டல்களும் கொஞ்சம் கொஞ்சம் விவசாயம் என்ற பெயரில் தாக்குப்பிடிக்க வைத்தன.

இன்று கல்வி அனைவருக்குமானது என்றாகிவிட்டபடியால் பல்வேறு தொழில் வாய்ப்புகள் – கோவில் அர்ச்சகர் தவிர்த்து – அனைத்து சாதியினருக்கும் கிடைப்பதால் விவசாயத் தொழிலிலிருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி ஆட்கள் குறைகிறார்கள் என்றால் இயந்திரங்களின் எண்ணிக்கை பெருகுகிறது; பல சிறு, குறு
விவசாயிகளும் விவசாயத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்றால் விவசாயிகளின் எண்ணிக்கை குறையத்தானே வேண்டும். குறைவான விவசாயிகள் நிறைய மக்களுக்கான சந்தைக்கு உற்பத்தி செய்து தருகிறார்கள் என்றால் இலாபம் அதிகரிக்கத்தானே வேண்டும்? அப்படியும் நடக்கவில்லையே ஏன்?

காரணம், நம்மிடம் வேளாண்மை குறித்த data என்ற ஒன்று உருப்படியாக இல்லை. பொய்த் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் எதிர்பார்க்கும் விளைவுகளைத் தராது. அவை வெறும் ஊகங்களாகவே இருக்கும். ஊகங்கள் எதிர்மறை விளைவுகளையும் தரும். உதாரணமாக, சில ஆண்டுகளுக்கு முன்னர் உடுமலைப்பேட்டை, பல்லடம் சுற்றுவட்டாரத்தில் அரசு வேளாண்மைத்துறை சமர்ப்பித்த பரப்பளவு கணக்கின்படி தோராயமாக 200 டன் மக்காச்சோள விதைகளே விற்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நண்பர் ஒருவர் மேலாளராக பணிபுரிந்த நிறுவனம் மட்டும் 600 டன் விதைகளை விற்றது. மற்ற முன்னணி நிறுவனங்கள், லெட்டர்பேட் நிறுவனங்கள் எல்லாம் சேர்த்து 800 டன் விதைகள் விற்றிருக்கும். ஆனால் அரசாங்க கணக்கீட்டின்படி இத்தனை ஆயிரம் டன் மகசூல் வரும் என்று ஊகித்து இன்ன விலைக்கு மக்காச்சோளம் விற்கும் என்று எதையாவது சொல்வதும், actual மகசூல் பலமடங்கு அதிகமாக வந்து விலை அதளபாதாளத்திற்கு போவதும் இப்படித்தான்.

சிலநேரங்களில் அரசாங்கப் புள்ளிவிவரம் ஒன்றைச் சொல்லும். ஆனால் அந்த பயிருக்கான பரப்பளவு அதில் பாதிகூட இருக்காது. சில வருடங்களுக்கு முன்னர் பருப்பு விலை எகிறியதை நினைவில் கொள்க. சின்னச்சின்ன வியாபாரிகள் முதல் பெரிய சேட்ஜீக்கள் வரை தங்களால் இயன்ற அளவு சரக்கை இருப்பு வைத்திருப்பார்கள். அஃது எந்த டேட்டாவிலும் வராது. உண்மையில் விலை ஏறினால் இந்த சரக்குகள் அந்த இழுவையில் வெளியேறி சந்தையில் கலக்கும். அதனால் நுகர்வோருக்கு ஓரளவுக்கு இலாபமே. இதைப் பதுக்கல் என்று கூற முடியாது. ஒரு பொருள் அடிமாட்டு விலைக்கு விற்கும்போது நிறைய வாங்கி இருப்பு வைத்து விலை ஏறும்போது விற்பதைப் பதுக்கல் என்று அழைப்பதே தவறு. உற்பத்தி அளவுக்கதிகமாக இருக்கும் பொருட்களில் எல்லாவற்றையும் வாங்கி இருப்பு வைத்து செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்க முடியாது. அடிமாட்டு விலையில் அவர்கள் வாங்கவில்லை என்றால் அவற்றை உற்பத்தி செய்தவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு குப்பையில்தான் கொட்ட வேண்டும். அதே பொருள் விலை ஏறுகையில் இந்த so called பதுக்கல் சரக்கு என்ற ஒன்றும் இல்லாவிட்டால் நுகர்வோருக்கு பெரும் செலவு ஏற்படும். கையிலிருக்கும் உபரி குறைவதால் ஒட்டுமொத்த வாங்கும் திறன் குறையும்; மேற்கொண்டு என்ன ஆகும் என்பதை பல பொருளாதார நிபுணர்கள் அவ்வப்போது விளக்கி வருகிறார்கள். ஆனால் நமக்கு வறட்டு கம்யூனிசம் அல்லது முரட்டு முதலாளித்துவம்தான் பிடிக்கிறது!

காய்கறிகள் விலை ஏறும்போதெல்லாம் குளிர்பதன கிட்டங்கிகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. நமக்கு உற்பத்தியின்மீது எந்த கட்டுப்பாடும் இல்லை என்பதால் குளிர்பதன கிட்டங்கி கான்செப்ட் எப்படி எடுபடும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிலோ பத்து ரூபாய்க்கு விற்கிறது என்பதற்காக மிளகாயைக் குளிர்பதனக் கிடங்கில் போட்டு மூன்று மாதம் வைத்திருந்து எடுக்க நினைக்கையில் வெளிச்சந்தையில் பத்து ரூபாய்க்கே விற்பதாக வைத்துக்கொள்வோம். மேலும் இரண்டு மூன்று மாதங்கள் பொறுமையாக கிடங்கிலேயே வைத்திருக்கலாம். வெளிச்சந்தையில் பத்து, பன்னிரெண்டு ரூபாய்க்கே விற்றால் ஐந்தாறு மாதங்கள் கிடங்கில் வைத்திருந்த வாடகைக்கு என்ன செய்வது? இதில் எல்லாமே ஊகத்தின் அடிப்படையிலான ரிஸ்க்-தான். டேட்டா என்ற ஒன்று இருந்தால்தானே! இரண்டு மாதம் கழித்து விலை ஏறும் என்றால் விவசாயிகளும் உற்பத்தி செய்து குவித்துவிடுவார்களே.

விவசாயிகளும் எதிலும் முறையாக பதிவு செய்துகொள்வதெல்லாம் கிடையாது. அப்படியே ஏதாவது சங்கம், சொசைட்டி என்று ஏதாவது வந்தாலும் சில வருடங்களிலேயே அந்த பகுதியில் உள்ள பெருவாரியான சாதியினரால் அவை hijack செய்யப்படுவதால் பலர் உதிரிகளாகவே நின்றுவிடுகிறார்கள். உழவு ஓட்டி, பார் அமைத்து லேட்டரல் குழாய்களை இழுத்துவிட்ட பின்னர்தான் பல விவசாயிகள் என்ன வெள்ளாமை வைப்பது என்றே முடிவு செய்கின்றனர். ஊரில் எல்லோரும் வாழை என்றால் நாமும் வாழை, எல்லோரும் வெங்காயம் என்றால் நாமும் வெங்காயம், எல்லாரும் தக்காளி என்றால் நாமும் தக்காளி. இல்லாவிட்டால் சந்தையில் அப்போதைக்கு எதற்கு விலை இருக்கிறதோ அதையே நாமும் பயிர் செய்வோம் என பலரும் இறங்குவார்கள். என்ன பயிர் சாகுபடி செய்யப் போகிறோம் என்று கடைசிநேரம் வரைக்கும் ஏகப்பட்ட விவசாயிகள் முடிவே செய்வதில்லை என்பதால் எந்த commodity என்ன விலைக்கு விற்கும் என்று யாராலும் ஊகிக்க முடிவதில்லை.

பண்டிகைகளை ஒட்டி சில பண்டங்கள் நல்ல விலைக்கு விற்கும் என்பது நீண்டகாலமாக புழங்கிவரும் ஒரு கருதுகோள் (hypothesis). உதாரணமாக, ஓணம் பண்டிகைக்கு வாழை, செண்டுமல்லி என சிலவற்றுக்கு விலையேற்றம் இருக்கும். அதையும் இன்று பல விவசாயிகள் அடித்து நொறுக்கிவிட்டார்கள்; எந்த பண்டிகையையும் விட்டு வைப்பதில்லை.

வட இந்தியாவில் ஜூன் மாதம் கரிஃப் பருவம் தொடங்குவதால் அறுவடை சமயத்தில் இருக்கும் பயிர்கள் பெரும்பாலும் இருக்காது என்பதால் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பள்ளி, கல்லூரிகள் திறப்பதாலும், வைகாசி மாதத்தில் பல முகூர்த்தங்கள் இருப்பதாலும் நல்ல விலை கிடைத்துவந்தது. அதை சரியாக புரிந்துகொண்ட கிழக்கிந்திய விவசாயிகள் முரட்டுத்தனமாக சாகுபடி செய்து இங்கே ஏற்றுமதி செய்து, ஜூன் மாதம் வருடந்தோறும் தமிழகத்தில் இயல்பாகவே விலையேற்றம் இருக்கும் என்ற கருதுகோளை இந்த ஆண்டு உடைத்து விட்டனர்.

சாலை வசதிகள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் இன்று பலமடங்கு உயர்ந்துவிட்டது என்பதை வெகுசன பத்திரிகைகளின் கட்டுரையாளர்களும், அதிகாரிகளும் புரிந்துகொள்வதில்லை. வாகனங்களின் திறன்களும் பலமடங்கு உயர்ந்துவிட்டது. பத்து டன் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு ஓர் இரவில் 700 கிலோமீட்டரை ஒரு லாரி கடக்கிறது. 100 கிமீ வேகத்திலேயே இடைவிடாது இயக்குகிறார்கள். கார்களில்கூட இந்த காய்கறி லாரிகளுடன் போட்டியிட இயலாது. Fastag வில்லை ஒட்டப்பட்ட சரக்குந்துகள் வாட்சப்பில் கிடைக்கப்பெற்ற லொக்கேஷனை கூகுள் மேப்ஸில் அந்தந்த மாநில ஓட்டுநர்களின் மொழியிலேயே துரத்திவந்து விடியும்போது டெலிவரிக்கு அணிவகுத்து நிற்கின்றன. ஒரிசா, சட்டீஸ்கரிலிருந்து கோயம்பேடு வருவதெல்லாம் இன்று சப்பை மேட்டர். இன்று நாசிக்கில் பறிக்கப்பட்ட தக்காளி நாளை மறுநாள் சென்னையிலுள்ள அபார்ட்மென்ட் ஏதாவது ஒன்றில் சாம்பாரில் கொதித்துக்கொண்டிருக்கும்.

முன்பெல்லாம் பட்டம் என்ற ஒன்று மிகவும் முக்கியமானது. இன்று வீரிய இரகங்களின் வருகையால் பட்டம் என்ற ஒரு வாரத்தையை உழவர்களே மறந்துவிட்டனர்! பல தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய இரகங்களை சந்தையின் தேவைக்கேற்ப உருவாக்குகிறார்கள். ஆனால் அவை மரபணு மாற்றப்பட்டவையோ, உடலுக்கு தீங்கு தருபவையோ என்று அச்சப்படத் தேவையில்லை. அந்தக் காலம் மாதிரி இல்லாமல் திறமையான ஆட்களைத் தக்க வைத்துக்கொள்ள தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை வாரி வழங்குகின்றன. மென்பொருள் துறையினரை ஒப்பிட்டால் அதே வயதினர் வேளாண் ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் முரட்டு சம்பளம் பெறுகின்றனர். எண்ணிக்கையில் இவர்கள் குறைவு என்றாலும் கூர்மதியும், அயராத தன்னூக்கமும் உடையவர்கள் என்பதால் சந்தையின் போக்கைக் கவனித்து அதை எப்படியாவது நிரப்பிவிடுகின்றனர்.

விதைகள் விற்கும் அளவினை வைத்து மகசூலைக் கணக்கிட முடியுமா என்றால் அதுவும் இல்லை. மகசூல் கூடவோ, குறையவோ செய்வதற்கு இயற்கையும் ஒத்துழைக்க வேண்டும் என்பதோடு அவை எவ்வாறு dispose செய்யப்படுகிறது என்பதைக் கண்காணிக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாது என்பதால் இங்கும் ஊகமே மிஞ்சுகிறது. உதாரணமாக, கோயமுத்தூர், சேலம், திண்டுக்கல் பகுதிகளில் ஏக்கருக்கு இரண்டரை கிலோ வெண்டை விதை பயன்படுத்துவார்கள். விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் ஏக்கருக்கு ஐந்து அல்லது ஆறு கிலோ பயன்படுத்துவார்கள். ஆனால் கோயமுத்தூரில் எடுக்கும் மகசூலைக் காட்டிலும் விழுப்புரத்தில் குறைவாகவே எடுக்கிறார்கள்.

தனியார் நிறுவனங்கள் புழங்காத பயிர்களில் அரசாங்கம் முரட்டுத்தனமான மானியம், இறக்குமதி, அந்த தொழிலில் உள்ள நிறுவனங்களுக்கு கடன், ஊக்கத்தொகை என வழங்கி சரிக்கட்டிவிடுகிறது. கரும்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை என்பதால் அரசங்கமே அதை செய்துகொள்வதுடன் ஆலைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவிசெய்வது ஓர் உதாரணமாகும்.

உலக வர்த்தக மையத்தில் இந்தியாவும் உறுப்புநாடு என்பதால் பல நேரங்களில் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால் ஏற்றுமதி அடிவாங்கும், அந்நியச் செலாவணி வரத்து படுக்கும், டாலர் எகிறும் என்பதால் அரசாங்கம் கொஞ்சம் மென்மையாகவே நடந்துகொள்கிறது. வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் நமக்கு மானியம் கொடுக்க இன்னும் நிறைய provision உள்ளது என்றாலும் பயனாளிகளை அடையாளங் காணுவதிலும், அதைக் கொண்டுபோய் சேர்ப்பதிலும், மானியத்தை வாங்குபவர்கள் நாணயமாக நடந்துகொள்வதிலும் மிகப்பெரிய சந்து இருப்பதால் உலக வர்த்தக மையத்தை இந்தியா கண்ணில் விரல்விட்டு ஆட்டும் சம்பவங்கள் நடக்க வேண்டுமெனில் மோடி கறுப்புப் பணத்தை மீட்டு 15 இலட்சம் நமது அக்கவுண்ட்டில் போடும் காலம் வரை காத்திருக்க வேண்டும். இரண்டும் நடப்பதற்குள் நாமெல்லாம் இயற்கை எய்திவிடுவோம்!

வங்கியாளர்கள் சொத்துப் பத்திரம் மாதிரி ஏதாவது எளிமையான கொல்லேட்டரலோ அல்லது அரசாங்க கியாரண்டியோ இருந்து குறைவான வட்டியில் கடன் வழங்கினால் இந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்கிறார்கள். வங்கிகளுக்கு கொழுந்தியாள் முறையான காப்பீட்டுக் கம்பெனிகள் போதுமான இன்சூரன்ஸ் இல்லாததுதான் பிரச்சினை எனவே எங்களுக்கு பிரீமியத்தை வாரி வழங்கினால் பிரச்சினை ஓவர் என்கிறார்கள்.

Celebrity எழுத்தாளர்கள் என்ற அடைமொழியில் தேவையில்லாத அல்லது தொடர்பில்லாத விசயங்கள் ஊடகங்களின் பிரச்சார காரணங்களுக்காகப் பெரிதுபடுத்தப்படுகின்றன. அதனால் முக்கிய விவகாரங்களைக் கோட்டை விட்டு விடுகிறோம். சாய்நாத் எழுதியதில் பாதி அவ்வகையில் வரும். நம்மாழ்வார் சொன்னதும் எந்த பிரச்சினையையும் தீர்க்காது; வர்ணாசிரம அமைப்பு முறைக்கு எந்த பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதை நீட்டி முழக்கி பாரம்பரியம், இயற்கை என்று சொல்லிக் கொண்டிருந்தார். தேவேந்தர் ஷர்மா என்பவரை உணவுக் கொள்கைகள் ஆராய்ச்சியாளர் என்று சொல்லி தூக்கி நிறுத்துகிறார்கள்; எட்டாம் வகுப்பு மாணவனின் வயதுக்கான IQ இருந்தாலே அவர் சொல்லும் எல்லாம் கதைகள் என்று புரியும்.

இந்தியா மாதிரி அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாத மக்கள்தொகை கொண்ட நாட்டில் அரசாங்கம் ஒரே நேரத்தில் pro-producer, pro-consumer ஆக நடந்துகொள்ள முடியாது. எல்லாவற்றிலும் நீக்கமற பின்னிப் பிணைந்திருக்கும் ஜாதியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஜாதிகளின் வாழ்விடமான கிராமங்களின் தொழிலான விவசாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. ஜாதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதிலும், இணக்கமான சூழ்நிலையையும் வைத்திருக்க முயற்சி செய்யும் மாநிலங்கள் மட்டுமே ஓரளவுக்கு விவசாயத்துறையை சீரமைக்க இயலும். மாடுகள் விவசாயத் தொழிலின் ஓர் அங்கம். அதை வளர்ப்பதும், விற்பதும் இயல்பானது. வளர்ப்பவன் புனிதமானவனாகவும், அவனுக்கு தேவையில்லாதவற்றை dispose செய்யும்போதும் புனிதமானவனாகவும் இருக்கிறான். ஆனால் அவற்றை வாங்கிச்செல்பவன் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் இடத்தில் சமநிலை எப்படி வரும்? மாடுகளை Dispose செய்யவே கூடாது என்றால் வேளாண்மையின் பொருளாதாரச் சங்கிலி என்ற ஒன்று அறுந்துவிடும் என்ற அடிப்படையே தெரியாத நம்மாழ்வார் போன்றவர்கள் இயற்கை வாழ்வியல் விஞ்ஞானி என்று பிரச்சாரம் செய்யப்படும் ஊரில் ஜப்பான் போன்ற நாடுகளின் விவசாயத்தை உதாரணம் மட்டுமே காட்ட முடியும்.

ஆகவே, வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் விலை நிர்ணயம் செய்து நட்டம் ஏற்படாமல் விவசாயிகளைக் காப்பாற்றும் என்பதெல்லாம் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு சாத்தியமில்லாத ஒன்று.

கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்

கோயமுத்தூரில் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை பிரான்சு நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.

அவ்வளவுதான், இனிமேல் அந்தக் கம்பெனி சொன்ன விலைக்குத்தான் தண்ணீர் வாங்கிக் குடிக்கவேண்டும், வீட்டில் போர்வெல் தண்ணியைக்கூட பயன்படுத்த முடியாது, மழைநீரை சேகரித்து வைத்திருந்தாலும் அந்த கம்பெனிக்காரன் காசு கேட்பான், கோவையின் குளங்களெல்லாம் CSR Fund மூலமாக பிரிக்கால் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, சுடுகாடெல்லாம் ஈஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது, பொலிவியா நாட்டில் சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்கலை எடுத்த பிறகுதான் உள்நாட்டுப் போரே மூண்டது என ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் கட்டுரை எழுத, உடனே பலரும் ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகள் துப்பாக்கிகளோடு திறந்த ஜீப்புகளில் செல்லும் காட்சிகளை கோயமுத்தூர் வீதிகளில் கற்பனை செய்துகொண்டு களமாடினார்கள். இப்படியெல்லாம் எழுதினால்தானே சுற்றுச்சூழல் ஆர்வலராக முடியும்! யதார்த்தத்திற்கு அருகில் போகும்போது ஏழை, பணக்காரன், ஆண்ட சாதி, அடிமைச் சாதி என்றெல்லாம் வந்துவிடுகிறது; இது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருப்பதால் சுகமாக இருக்கும்படி ஒரு சைடு வாதத்தை மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் ஏழைகளுக்குத் தண்ணீர் கிடைக்காது, காசு கொடுப்பவனுக்குக் கூடுதல் நீர் கிடைக்கும், பணக்காரன் வீட்டில் புல்தரைக்குக் கிட்டும் தண்ணீர் ஏழைக்குக் குடிக்க இருக்காது, கார்ப்பரேட் கம்பெனிக்கு அள்ளித்தருவார்கள், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதா, Welfare state-னா என்னான்னு தெரியுமா என்று எத்தனை விதமான விவாதங்கள்! 2017-இல் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வறட்சி. குடிதண்ணீர் வழங்க அணையில் தண்ணீர் இல்லை; அணைக்குள் ஆள்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. ரேஸ் கோர்ஸ் குடிமக்களுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் புலியகுளத்து குடிமக்களுக்கு இருபது நளைக்கு ஒருமுறை தண்ணீர்; அங்கிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாப்பாநாயக்கன்பாளையத்து குடிமக்களுக்கு மாதக்கணக்கில் தண்ணீரே வரவில்லை. லாரியில் பெயரளவுக்கு ஊற்றிவிட்டுப் போனார்கள். ஆமாம், ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஏழைபாழைகள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள், பாவம்! அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் நினைவுக்கு வருகிறது. ஒருசாராருக்கு வாழ்க்கையில் பாதுகாப்பாக எல்லாம் கிட்டிவிடும்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது மட்டுமே வாழ்க்கையின் பெருந்துயரமாகத் தெரியும்.

ஏழைகள், விளிம்புநிலை மனிதர்கள் குடிநீருக்குத் தடுமாறுவார்களாம். கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் எளிய மனிதர்களைச் சுரண்டுகிறதாம். உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்காக டோபிகானா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை (தற்போது பட்டா வைத்திருக்கிறார்கள்) காலிசெய்ய 15 நாள் அவகாசம் வழங்கியிருக்கிறது மாநகராட்சி; மலுமிச்சம்பட்டியில் குடிசைமாற்று வாரிய வீடுகள் தரப்பட்டிருக்கின்றன. உக்கடம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் ஜஸ்ட் 20 கிலோமீட்டர் தள்ளி கீரநத்தத்தில் வீடு வழங்கியிக்கிறார்கள். ஆங், அப்புறம் விளிம்புநிலை மனிதர்களின் வேலைவாய்ப்பு? அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் பருத்தி, மக்காச்சோளம், கொண்டைக்கடலை விளையும் அற்புதமான கரிசல்மண் பூமியில் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வானுயர வீற்றிருக்கும் Cognizant, Bosch, Ford போன்ற மென்பொருள் நிறுவனங்களில் ஹவுஸ்கீப்பிங், செக்யூரிட்டி, டேக்சி ஓட்டுனர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற வேலைகளுக்குச் சென்றுவிடலாம். மென்பொருள் பொறியாளர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டுகளுக்கு வேலைக்காரம்மா, ஆயாம்மா போன்ற வேலைகளுக்குச் செல்வதன் மூலம் அவர்கள் அலுவலக cab-இல் அரை கிலோமீட்டர் பயணித்து வேலைக்குச் செல்கையில் ‘துடைத்தெரியப்படும் எளிய மக்கள்’ என்றெல்லாம் பேஸ்புக் பதிவு போட்டு உலகத்திற்கு புரிய வைப்பார்கள். அந்தப்பக்கம் ஜக்கி வாசுதேவன் என்றால் இந்தப்பக்கம் ஐ.டி. கம்பெனிகள். யார் எடுக்கிறார்கள் என்று தண்ணீருக்குத் தெரியவா போகிறது? எல்லோருமே ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றுபேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், ஏழைகளை ஏழைகளாகவே பாதுகாக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு வாய்ப்புகளோ, ஓய்வுநேரமோ, உபரி வருமானத்திற்கு வழிகளோ வந்துவிடக்கூடாது.

தற்போது கோவை மாநகராட்சி 1000 லிட்டர் தண்ணீரை 4.50 ரூபாய்க்கு வீடுகளுக்கு வழங்குகிறது. லிட்டருக்கு ஒரு பைசா கூட இல்லை. உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து நஞ்சப்பா சாலை, காட்டூர் பகுதியில் மட்டும் 1000 கடைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். ஒரு கடைக்கு நாளொன்றுக்கு ஒரு தண்ணீர் கேன் 40 ரூபாய் விலையில் என்று வைத்துக்கொண்டால்கூட 40000 ரூபாவை 20000 லிட்டர் தண்ணீருக்காக கடைக்காரர்கள் செலவிடுகிறார்கள். முறையாக விநியோகிக்கப்படும்பட்சத்தில் இந்த இருபதாயிரம் லிட்டர் குடிநீருக்கு மாநகராட்சி வாங்குவதோ வெறும் 90 ரூபாயாகத்தானே இருக்கும்?

மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரைத் தனியார்வசம் வழங்குவது தற்சார்பைக் குலைத்துவிடுமாம். இன்று குடிநீரை வழங்குவதற்கு காசு கேட்பவர்கள் நாளை கழிவுநீரை வெளியேற்றவும் காசு கேட்பார்களாம். ஆயிரம் அடிக்கு துளையிட்டு பிவிசி குழாயில் கட்டடத்தின் மேலே சைன்டிஃபிக் வாஸ்து சொன்னபடி தென்மேற்கு மூலையிலிருக்கும் சின்டெக்ஸ் தொட்டிக்கு ஏற்றி வெஸ்டர்ன் வாட்டர் குளோசெட்டில் உட்கார்ந்து அலசிவிடுவதை பாதாள சாக்கடையின் வாயிலாக பாதுகாப்பாக எடுத்துச்சென்று சூலூருக்கு அந்தப்பக்கமாக நொய்யலில் கலந்துவிட்டு அங்குள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்வது தற்சார்பு என்பதில் எந்த அத்தியாயத்தில் வரும்? ஆர். எஸ். புரத்திலும், சிங்காநல்லூரிலும், கவுண்டம்பாளையத்திலும் இருப்பவர்களுக்கு பாதாள சாக்கடை வசதிகளாவது இருக்கிறது. காளப்பட்டிக்கு அருகில், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகில் புதிதாக முளைத்திருக்கும் நகர்களுக்கு அடிப்படை சாக்கடை வசதியே இல்லை; குளியலறை, சமையலறைக் கழிவுநீரை ஒவ்வொரு வீட்டிலும் choke pit அமைத்து அங்கேயே நிலத்துக்குள் செலுத்தி அதையே திரும்ப எடுத்து பயன்படுத்துபவர்களும் அதே வரியைத்தானே செலுத்துகிறார்கள்?

சொல்லப்போனால் கோயமுத்தூரின் 90% வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி பெயரளவில்கூட இல்லை. கான்கிரீட்டால் மூடப்பட்ட நகரில் மழை பெய்தால் ஒருமணிநேரத்தில் வடிந்து விடும். நிலத்தடி நீர் recharge ஆனால்தானே நீர்மட்டம் உயரும். Glossy லுக் குறையாமல், சிறுசிறு திவலைப் படலங்கள் இல்லாமல் இருக்க பில்லூர்/சிறுவாணி அணையின் நீரில் கோவை நகர எல்லைக்குள் கழுவப்படும் ஒவ்வொரு ஃபார்ச்சூனர், பென்ஸ் கார்களுக்கும் பவானி ஆற்றின் கடைமடையில் இருக்கும் விவசாயி வருடம் கொஞ்சமாக முதலீடு செய்து குறைந்த மகசூலில் நிறைய சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்களுக்கு மாறவேண்டும். (இஃதெல்லாம் Participatory Irrigation Management- இல் வருகிறது. அதைத் தனியாக ஒருநாள் பர்ப்போம்).

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அரசாங்கம் மானியம் தருகிறது. ஆயிரம் யூனிட் பயன்படுத்துபவர்கள் தங்களது கட்டண விகிதம் மொத்தமாக மாறுகிறது என்பதற்காக மாதாமாதம் கணக்கெடுக்க வேண்டும் என்கிறார்கள், டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பங்களுக்கு வரிக் குறைப்பு அல்லது மானியம் வேண்டும் என்றெல்லாம் என்னென்னவோ சொல்லி லாபி செய்கிறார்கள். இந்த பணக்காரப் பிச்சைக்காரன்கள் இதையெல்லாம் நாளேடுகளில் எழுதி அதை புத்திசாலித்தனம் என்று நிறுவுகிறார்கள். இன்று பல வீடுகளில் தொட்டி நிறைந்து சாலைகளில் ஓடி சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி நீர். அட விடுப்பா,போனா போகட்டும் என்கிறார்கள்; அதை மூடுவதற்கு ஒரு கேட்வால்வு கூட பல வீடுகளில் இருப்பதில்லை. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் வீதம் கணக்கிட்டு மிகக்குறைந்த கட்டணமோ அல்லது இலவசமாகவோ வழங்கிவிட்டு மீதிக்கு மின்சார வாரியம் மாதிரி Slab rate போட்டு இழுத்தால் தண்ணீர் தட்டுப்பாடே வராது. மீதமிருக்கும் நீர் ஆற்றிலாவது ஓடிக்கொண்டிருக்கும். இன்றுதான் ஆதார் கார்டு, Big data, Artificial Intelligence என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கிறதே.

கார்ப்பரேட் கம்பெனியான சூயஸ், இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு ஏழைபாழைகளை நசுக்குமாம். ஆனால் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், கோவில்கள் போன்றவற்றிற்கு Bulk connection என்றபெயரில் இருக்கும் இணைப்புகளுக்கு இந்த டெண்டரில் இடமே இல்லை. பல்க் கனெக்‌ஷன் எல்லாமே கோவை மாநகராட்சி தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்ப சரி, மாநகராட்சி வசம் இருக்கிறது என்றால் அதில் ஊழல், குளறுபடி, லாபி என எதுவுமே இருக்காது என்றால் நம்பமாட்டார்கள் அஃதெப்படி, அரசாங்கம் எதையாவது உருப்படியாக நடத்தியிருக்கிறதா என்ற கேள்வி எக்கி நிற்கிறது.

2045-இல் கோவை நகர மக்கள்தொகையை கணக்கிட்டு 24 மணிநேரமும் தண்ணீர் வழங்கும்படியாக ஆயிரத்து சொச்சம் கோடிகளில் ஆங்கிலேயர் காலத்துக் குழாய்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அனைத்து இணைப்புகளிலும் மீட்டர் பொறுத்தி GIS மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் இந்த திட்டம், அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் என்றபெயரில் ஏற்படவிருந்த சுற்றுச்சூழல் சீ்ரழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவையும் வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும்போது மீட்டரில் காட்டும் அளவையும் ஒப்பிடும்போது 20% நீரைக் காணவில்லை என்று மாநகராட்சியே ஓப்புக்கொள்கிறது. மீட்டர் இல்லாமல், மாநகராட்சிக்கே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் திருட்டு இணைப்புகள் தெருவுக்கு இரண்டு இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

அறுபது வார்டுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் மாநகராட்சில் தீர்மானம் போடப்பட்டு கெஜட்டில் வெளியிடப்படும் விலைதான் மக்களிடம் சூயஸ் நிறுவனத்தால் வசூலிக்க முடியும். GIS மூலம் இணையத்தில் பிணைக்கப்படும் பயனர் விவரம் மூலம் தண்ணீர் பயன்பாடு குறித்த அனைத்து விவரங்களையும் ஒளிவுமறைவில்லாமல் பார்க்கமுடியும் எனபதோடு, கட்டணம் செலுத்துதல், புகார்கள் என அனைத்தும் டிஜிட்டலாகும்.

ஒருசாரார் அணைகள் எல்லாம் அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கதை விடுகிறார்கள். அணைகளில் நீர் எடுக்கும் தொட்டிகள், மின் எக்கிகள் (electric motors), குழாய்கள் போன்றவற்றின் பராமரிப்பு மட்டுமே அந்த நிறுவனத்தின் scope-இல் வருகிறது. அணைகளை அந்த நிறுவனம் எடுத்துப் பராமரிக்கும் எனபது கேட்பதற்கே முட்டாள்தனமாக இருக்கிறது.

ஏதோ இத்திட்டம் இரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாகவும் கதை உலவுகிறது. 2008-இல் திட்டமிடப்பட்டு, பலகட்ட ஆய்வுகள், விசாரணைகள், detailed project report என படிப்படியாக வளர்ந்து ஓப்பன் டெண்டருக்கு வந்துள்ளது. 500 கோடிக்கு மேல் டெண்டர் என்றால் சர்வதேச அளவிலான குளோபல் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது விதிமுறை. நீர் மேலாண்மையில் முறையான அனுபவமுடைய பிரான்சு நிறுவனம் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரி எடுத்திருக்கிறது. ஏப்ரல் மாதம் கம்பெனி பதிவுசெய்து ஜூன் மாதம் 15000 கோடிக்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத, மோடியின் நண்பரான அம்பானியின் கம்பெனிக்கு அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை பின்னுக்குத் தள்ளி டெண்டர் கிடைத்தபோது கமுக்கமாக இருந்த தேசபக்தர்கள் இப்போது குதிப்பதில் ஆச்சரியமில்லை.

மேற்கு மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்சினை திமுகவுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன்பின்னர் அதீத விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி மின்சார வாரியத்தை திவாலுகும் நிலைமைக்கு அதிமுக அரசு கொண்டுசென்றாலும் மக்களுக்கு அதைப்பற்றி கவலை இருந்ததில்லை. சமூக நீதி, உட்கட்டமைப்புகள், சட்டப் பாதிகாப்புகள், வேலைவாய்ப்புகள் என பல கோணங்களிலும் நல்ல எழுச்சி ஏறபட்டு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையும்போது நான் நன்றாக இருந்தால் போதும் என்கிற சராசரி நடுத்தர வர்க்க மனநிலைக்கு மக்கள் திரும்பி விடுகின்றனர். போராட்ட குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. கம்யூனிசம் கோயமுத்தூரில் காணாமல் போனதே சாட்சி. குடிநீர் வரிக் கட்டணம் ஏறாதபோது தினமும் தண்ணீர் வருகிறது என்றால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அஃது அரசாங்கத்தால் செய்யப்படுகிறதா, தனியாரால் செய்யப்படுகிறதா என்று பொதுசனம் கவலைப்படாது. இந்த திட்டத்தைத் திமுக எதிர்ப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியாக இருக்கிறது.

வீடுகளில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதையும் அந்த நிறுவனம் கட்டுப்படுத்திம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் போர்வெல் அமைப்பது மாநகராட்சி சட்டதிட்டத்தின் கீழ் வருகிறது. அந்நிறுவனத்துக்கும், போர்வெல்லுக்கும் எதுவுமில்லை. இன்று எல்லோரும் மாநகராட்சி சட்டத்தைக் கடுகளவும் மீறாத மாதிரியும், மக்களது நேர்மையை களங்கப்படுத்துவது மாதிரியும் ரொம்பத்தான் கூவுகிறார்கள்!

லைசன்ஸ் இராஜ்ஜியத்தில் வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சமூக மதிப்பீடுகள், மாறிவரும் வியாபார சூழல்களினால் ஏற்படும் அதிர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்தகைய எதிர்ப்புகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம். 

தமிழகப் பாடநூல் வெளியீடுகள் வரலாற்றில் முதன்முறையாக பதினோறாம் வகுப்பு வேளாண் அறிவியல் தொழிற்கல்விப் பாடத்தின் கருத்தியல் மற்றும் செய்முறை (Theory & Practical) புத்தகங்களுக்காக வெளியிடப்படும் பிழைக்களஞ்சியம்.

இலக்கிய நூலாக இருந்தால் காத்திரமான விமர்சனம் என்று குறிப்பிடலாம். பாடநூல் என்பதால் ஆத்திரமான விமர்சனம் அல்லது சீராய்வு என்று வைத்துக்கொள்வோம்.

பொறுப்புத் துறப்பு (Disclaimer): +1 மாணவர்களின் வேளாண்மைப் பாடநூலை சும்மா புரட்டிப்பார்க்க ஆரம்பித்ததில் பல பிழைகள் கண்ணில் பட, அதையெல்லாம் தொகுத்து ஒரு கட்டுரையாக வெளியிட்டால் மாணாக்கர்களுக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் எழுதியிருக்கிறேன். கல்லூரிப்படிப்புக்குப் பிறகு பத்தாண்டுகளுக்கும் மேலாக வேளாண் தொழிற்துறையில் பணிபுரிந்திருந்தாலும் Academia, teaching என்பதெல்லாம் எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று. அதனால் +1 வகுப்புக்குப் பாடத்திட்டத்தின் சுமை குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் Concept, Fact, அறிவியல் விதிமுறைகளில் பிழை இருக்கும்போது அது அனைவராலும் பிழையாகவே பார்க்கப்படும். இதைத் தொகுப்பதற்கு எனக்குப் பின்னணியில் எந்த இயக்கமும், நபர்களும் இல்லை. இந்தக் கட்டுரையில் பிழையென சுட்டிக்காட்டப்படும் எதுவும் சரியென நிறுவும்பட்சத்தில் அவை நீட் உட்பட இதர நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் சரியாக இருக்குமா என்பதைத் துறைசார் நூல்களிலும், இணையத்திலும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேளாண் அறிவியல் – கருத்தியல் (Theory)

பக்கம் 30: /சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உருவாகி ஓசோன் படலத்தை அரித்து அதன் அடர்த்தியைக் குறைக்கிறது/

CFC என்பது மனிதர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் CFC-யால் ஓசோன் படலம் ஓட்டையாகிறது என்பது இன்றைய பிரச்சினை அல்ல.சுற்றுச்சூழல் வெப்பமடைவதால் CFC உண்டாகி ஓசோன் படலத்தை அரிக்கிறது என்பதெல்லாம் குழப்பமான வாசகம்.

பக்கம் 34: /மண்ணியலின் தந்தை ஃபிரடெரிக் ஆல்பர்ட் ஃபேலோ (1794-1877)/

Friedrich Albert Fallou அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். அவரை நவீன மண்ணியலின் தந்தை என்று விக்கிபீடியா மட்டுமே சொல்கிறது. TNAU-வின் மண்ணியல் பாடங்கள் உட்பட இதர நூல்கள் உருசிய அறிஞர் வசிலி வசிலேவிச் டோக்குச்சேவ் [Vasilii Vasilevich Dokuchaev (1846-1903)] என்பவரையே மண்ணியலின் தந்தை என்று குறிப்பிடுகின்றன.

பக்கம் 57: /கொழுப்புச்சத்தானது கொழுப்பில் கரையாதது மற்றும் கொழுப்பில் கரையக்கூடியது என இரு பிருவுகளைக் கொண்டது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான A, D, E மற்றும் K வின் உறிஞ்சுதலை அதிகரிக்க உதவுகிறது. இக்கொழுப்புச்சத்தால் உருவாகும் ஒமேகா 3 உடல் நலத்திற்கு ஏற்றது/

இந்த வாசகங்களில் இருந்து பெறப்படும் தகவல் என்ன? முதல் வரியும் கடைசி வரியும் என்ன பொருளைத் தருகிறது?

பக்கம் 109: /1995 ஆம் வருடத்தில் முளைத்த தாமரையின் விதையே இன்றுவரை நீண்ட உறக்கநிலை கொண்ட விதையாக ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் உறக்க நிலை 1300 வருடங்கள் என்பது ஆச்சரியமான ஒன்றாகும்/

Seed Dormancy என்பதற்கும் Seed Viability என்பதற்கும் உள்ள தொடர்பையும் வேற்றுமையையும் கவனமாகப் பார்க்க வேண்டும். 1300 வருடங்கள் விதை உறக்க நிலையில் இருந்தது என்பதைவிட விதைக்கு Viability இருந்தது என்பதே சரியான interpretation. விதை உறக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி தொடர்கிறது – 1000 வருடங்கள் தாண்டியும் – என்றால் அது விதை உறக்கத்தினால் மட்டும்தான் நிகழ்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியாது. சைபீரியாவில் 32000 ஆண்டுகளுக்கு முந்தைய விதை ஒன்றையும், இஸ்ரேலில் 2000 வருடங்களுக்கு முந்தைய விதை ஒன்றையும் ரேடியோ கார்பன் காலக் கணிப்பு மூலமாக கண்டுபிடித்ததோடு முளைக்கவும் வைத்திருக்கிறார்கள். இது இந்த அத்தியாயத்தை எழுதிய ஆசிரியருக்கே வெளிச்சம்!

பக்கம் 116: TNAU தானியங்கி விதை மற்றும் நாற்று வழங்கும் இயந்திரத்தை நிறுவியிருக்கிறது என்பது குறித்த தகவலைக் கட்டம் கட்டி +1 மாணாக்கர்களுக்கு போதிப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. நூறு கோடி ரூபாய்க்கு நெருக்கமாக காய்கறி விதை விற்பனை நடக்கும் தமிழகத்தில் ஒரு கோடிக்குக் கூட விதைகளை விற்பனை செய்ய முடியாத தோட்டக்கலைத்துறை விஞ்ஞானிகள் செய்யும் தேவையில்லாத PR stunt-களில் இதுவும் ஒன்று. இந்த இயந்திரத்தை என்னமோ இவர்களே கண்டுபிடித்திருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கிறது. கோடிக்கணக்காண ரூபாய்க்கு விதைகளை விற்பனை செய்யும் கம்பெனிகள் கூட செய்யாத வேலைகளை எப்படி வெட்கமே இல்லாமல் மக்கள் வரிப்பணத்தில் செய்கிறார்களோ?!

பக்கம் 142: ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த அட்டவணையில் இரும்புச்சத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை மெக்னீசியத்திலும், மெக்னீசியத்தின் பற்றாக்குறை அறிகுறிகளை இரும்புச்சத்திலும் கொடுத்துள்ளனர். Interveinal chlorosis என்பது இரும்புச்சத்து பற்றாக்குறையின் முக்கிய அடையாளமாகும். போட்டித் தேர்வுகளிலும் இது தவறாமல் கேட்கப்படும். Indicator plants குறித்து ஓரிரு வரிகள் கூட கொடுக்கப்படவில்லை.

பக்கம் 168: விதைக்கும் முன் தெளித்தல் களைக்கொல்லியின் உதாரணமாக பாராகுவாட் டை குளோரைடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை எழுதிய, சரிபார்த்து ஒப்புதல் அளித்த ஆசிரியர் குழுவை எந்த கெட்ட வார்த்தை சொல்லி வேண்டுமானாலும் திட்டலாம். பாராகுவாட் என்பது முளைத்தபின் தெளிக்கும் களைக்கொல்லி. டிரைஃபுளூரலின் தேர்திறன் அற்ற களைக்கொல்லிக்கு உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கிறது. இதுவும் தவறு. டிரைஃபுளூரலின் என்பது தேர்த்திறன் உடைய களைக்கொல்லி. மேலும் சந்தையில் தேடினாலும் கிடைக்காத களைக்கொல்லியைப் பாடத்தில் சேர்க்கவேண்டிய அவசியம் என்ன?

பக்கம் 169: கரும்புக்கு மெட்ரிபூசின் எனும் களைக்கொல்லி முளைப்பதற்கு முன் தெளிக்கும் களைக்கொல்லியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்ரிபியூசின் என்பது முளைத்தபின் தெளிக்கும் வகை. இந்த மாதிரியான அடைப்படைத் தவறுகளெல்லாம் மன்னிக்கவே முடியாதவை.

பக்கம் 183: குளோர்பைரிபாஸ் எல்லாம் சந்தையில் தடை செய்ய காத்திருக்கும் அதரபழசான இரசாயனம். இதையெல்லாம் உதாரணம் காட்ட வேண்டிய அவசியமே இல்லை.

பக்கம் 190: /1943 ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப்பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது நெல் குலை நோய் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது இந்திய வரலாற்றில் வங்காளப் பஞ்சம் என/

இது கட்டம் கட்டி கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்.

1943-இல் வங்காளப் பஞ்சம் ஏற்படக் காரணமாக இருந்தது Rice Brown spot or Fungal Blight எனப்படும் பழுப்புப் புள்ளி நோய் . இது Helminthosporium oryzae எனும் பூஞ்சாணத்தால் வருவது. பஞ்சத்துக்குப் பல்வேறு காரணங்கள் இந்த நோயைத் தவிர இருக்கின்றன; பல நூல்கள் அந்தப் பஞ்சம் குறித்து வந்திருக்கின்றன. நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகளில் வங்காளப் பஞ்சம் குறித்த இந்த கேள்வி தவறாமல் இடம்பெறும். இதுகூடத் தெரியாமல் அந்த ஆசிரியர் குழு என்ன செய்தது என்று ஆச்சரியமாகவும், ஆத்திரமாகவும் இருக்கிறது.

நெல் குலை நோய் என்பது Pyricularia grisea எனும் பூஞ்சாணத்தால் வரும் Paddy Blast disease.

பக்கம் 208: /சேமிப்பிற்கு பயன்படும் சாக்குப் பைகள் புதியதாக இருக்க வேண்டும். பழைய சாக்குப் பைகளை மாலத்தியான் 50 சதம் ஈ.சி. அல்லது டைக்குளோர்வாஸ் 76 சதம் எஸ்.சி. 0.1 சதம் கரைசலில் நனைத்து நன்கு உலர்த்திய பிறகு உபயோகிக்க வேண்டும்/

மாலத்தியான், டைக்குளோர்வாஸ் எல்லாம் விரைவில் தடை செய்யப்பட இருப்பவை. தானிய சேமிப்புக் கிடங்குகளில் 1980-களுக்குப் பிறகு எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொல்ல வருகிறார்கள் போலும்.

பக்கம் 235: பாஸ்ச்சுரைசேசன் குறித்த தகவலில் குறைந்த வெப்பம் கூடுதல் நேரம், அதிக வெப்பம் குறைந்த நேரம் என்பது எத்தனை டிகிரி வெப்பம், எவ்வளவு நிமிடங்கள் என்பதைக் குறிப்பிடாமல் மொட்டையாக இருக்கிறது.

வேளாண் அறிவியல் – செய்முறை (Practical)

பக்கம் 11: தானியப்பயிர்கள்(Cereals) எல்லாம் கிராமினே என்ற குடும்பத்தில் வருபவை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று தாவர வகைப்பாட்டியலில் கிராமினே என்பது போயேசியே (Poaceae) என்றே வழங்கப்படுகிறது. நுழைவுத்தேர்வுகள், போட்டித்தேர்வுகளில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய வார்த்தைகளே இருக்கும் என்று என்ன நிச்சயம் இருக்கிறது?

பக்கம் 12: எண்ணெய் வித்துக்களில் எள், டில்லியேசியே குடும்பம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனால் இன்று எள், பெடாலியேசியே (Pedaliaceae) என்ற குடும்பத்தில்தான் வருகிறது. (டில்லியேசியே என்பதும் அச்சுப்பிழை. அதை டிலியேசியே என்றே குறிப்பிட வேண்டும்).

பக்கம் 20: சோற்றுக் கற்றாழைச் செடியின் குடும்பம் லில்லியேசியே என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று Aloe vera என்பது ஆஸ்ஃபோடேலேசியே (Asphodelaceae) என்ற குடும்பத்தில் வருகிறது.

பக்கம் 21: புதினா மற்றும் மருந்துக்கூர்க்கன் (கோலியஸ்) போன்றவை லேபியேட்டே குடும்பம் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அனால் இன்று லேபியேட்டே குடும்பம் என்பது லேமியேசியே (Lamiaceae) என்றே வழங்கப்படுகிறது.

இதுவும், அதுவும் ஒன்றுதான் என்று நாமே சொல்லிக்கொண்டாலும் தாவர வகைப்பாட்டியலில் இன்றைய பெயரிடுமுறை (Nomenclature) என்ன சொல்கிறதோ அதையே பயன்படுத்த வேண்டும். பழைய பெயர்களைப் பயன்படுத்துவது தவறில்லையென்றாலும் சரியென்றாகிவிடாது.

பக்கம் 44: நுண்ணியிரிகளினால் ஏற்படும் நோய் அறிகுறிகளைக் கண்டறிதல் என்ற அத்தியாயத்தில் நோய்க்காரணியின் (Causal Organism) பெயர், வைரஸ் நோயாக இருப்பின் கடத்தியின் (Vector) பெயர், கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை இல்லாமல் மொட்டையான தகவல்களாக வெறும் படங்களாலும், வார்த்தைகளாலும் நிரப்பப்பட்டிருக்கிறது.

பக்கம் 50, 51: நன்மை செய்யும் உயிரினங்கள் என்ற அத்தியாயத்தில் இரை விழுங்கிகள் (Predators) என்ற அட்டவணையில் வழங்கப்பட்டிருக்கும் பூச்சிகளின் அறிவியற்பெயர் எழுதும் முறை முற்றிலும் தவறாக இருக்கிறது.

அறிவியற்பெயர் எனில் ஆங்கிலத்தில் எழுதும்போது பேரினத்தின் முதல் எழுத்து Capital letter-உம், ஏனைய எழுத்துகள் Small letters-உம் சாய்வெழுத்தாக (italic) எழுதியிருக்க வேண்டும். கையால் எழுதும்போது பேரினம், சிற்றினம் இரண்டையும் தனித்தனியாக அடிக்கோடிட வேண்டும். இதையெல்லாம் பத்தாம் வகுப்பில் லின்னேயஸ் வகைப்பாட்டியல் பயில ஆரம்பிக்கும்போதே சொல்லித்தரப்படும். புத்தக ஆசிரியர் குழுவின் ஞானம், Scientific name எப்படி எழுத வேண்டும் என்று வெளியில் இருந்து ஆட்கள் வந்து சொல்லித்தர வேண்டிய நிலைமையில் இருக்கிறது எனும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பக்கம் 51: ஐசோட்டிம்மா முட்டை ஒட்டுண்ணி நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருக்க்கிறது. ஐசோடிமியா ஜாவென்சிஸ் (Isotimia javensis) கரும்பு குருத்துப்புழுவுக்கு நல்ல கட்டுபாட்டைக் கொடுத்தாலும் நெல் குருத்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது என்பதெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பூச்சியியல் நிபுணர்களின் கருத்து. நிலைமை இவ்வாறிருக்க இதையெல்லாம் +1 மாணாக்கர்களுக்கு சொல்லித்தருவதெல்லாம் கொஞ்சம் ஓவர்!

பக்கம் 52: டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி புழு, கூட்டுப்புழு ஒட்டுண்ணியானது கரும்பு தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் டெட்ராஸ்டிக்காஸ் ஹோவர்டி கரும்பு உச்சிக் குருத்துப்பூச்சித் (Top Shoot Borer) தாக்குதலைக் கட்டுப்படுத்தவே பரிந்துரைக்கப்படுகிறது. தண்டு துளைப்பான் என்பதும் இடைக்கணுப்புழு (internode borer) எனபதும் நடைமுறையில் ஒன்றாகவே பாவிக்கப்படுகிறது. PhD மாணாக்கர்களுக்கு தரப்படும் அளவுக்கான விஷயங்களை +1 மாணாக்கர்களுக்குத் திணிக்கக்கூடாது.

பக்கம் 60: இயற்கைப் பயிர் பாதுகாப்பு முறைகள் பஞ்சகாவ்யா, அமிர்தக்கரைசல், தசகவ்யா என நிருபிக்கப்படாத முறைகளைப் பயிற்றுவிப்பதற்குப் பதிலாக உயிரியல் கட்டுப்பாடு முறைகளை நிறையவே சேர்த்திருக்கலாம்.

பக்கம் 66: பயிர்ப் பாதுகாப்பு இரஸாயனங்களைத் தயாரிக்கும் முறைகள் குறித்து சொல்லும் அத்தியாயத்தில் இரசாயனங்களின் நச்சுத்தன்மை குறித்த முக்கோணங்கள், என்னென்ன வகையினங்கள் இருக்கின்றன என்பது போன்ற அடிப்படை ஆரம்பிக்காமல் நேரடியாக application-க்கு நுழைந்திருக்கிறார்கள்.

கருத்தியல் நூலில் வந்திருக்கும் புகைப்படங்கள் செய்முறைப் புத்தகத்திலும் பெரும்பாலும் இருக்கிறது. கிட்டத்தட்ட 40% புத்தகம் படங்களாலேயே – அதுவும் தேவையில்லாத படங்களால் – நிரப்பப்பட்டிருக்கிறது. வேளாண் பொருளியல் மற்றும் விரிவாக்கம் என்ற அத்தியாயம் சும்மானாச்சுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கிறது. தொழிற்கல்வி என்ற Concept-இன் நோக்கம் என்ன என்பதே புரிந்துகொள்ளப்படாமல் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஆங்காங்கே வாங்கி ஓட்ட வைத்திருக்கிறார்கள்.

பூச்சியியல் துறையின் மூத்த பேராசிரியர் ஒருவரைப் பாடநூல் வல்லுனராக நியமித்திருக்கிறார்கள். ஆனால் இருப்பதிலேயே பூச்சியியல் குறித்த அத்தியாயத்தில்தான் அதிக பிழைகளும், முரண்பாடுகளுடைய விஷயங்களும் இருக்கின்றன.

பாடநூல் மேலாய்வாளராக பயோடெக்னாலஜி துறையின் இணைப்பேராசிரியர் ஒருவரை நியமித்திருக்கிறார்கள். இந்த புத்தகங்களில் பயோடெக்னாலஜி என்ற அத்தியாயமே இல்லை. ஆய்வகங்களைவிட்டு வெளியே செல்லுவதற்கு அவசியமே இல்லாத பணியிலிருக்கும் ஒருவரிடம் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பயிர்களைத் தாக்கும் நோய்கள், பூச்சிகள், உரம், நீர், பூச்சிக்கொல்லி, விதை, உழவியல் முறைகள், அறுவடைத் தொழில்நுட்பங்கள், மண்வளம் என அனைத்தையும் தொகுக்கும் பணியை வழங்கினால் என்ன நடக்கும்?

மாப்பிள்ளை செத்தால் என்ன மணப்பெண் செத்தால் என்ன, நமக்கு வேண்டியது மாலைப்பணம். நானும் பாடநூல் கமிட்டியில் உறுப்பினராக இருந்தேன் என அனைவரும் அவரவர் C.V-யில் எழுதிக்கொள்வார்கள்.

அதுதான் நடந்திருக்கிறது.