Zoom டிடர்ஜென்ட் பவுடர் – Purple Cow மார்க்கெட்டிங் – Zoom மீட்டிங்

Zoom டிடர்ஜென்ட் பவுடர்.

Purple Cow என்று ஒரு மார்க்கெட்டிங் தொடர்பான புத்தகத்தை Seth Godins எழுதியிருக்கிறார். மேற்குலகின் குறிப்பிடத்தக்க மார்க்கெட்டிங் ஜீனியஸ்களுள் ஒருவர்.

ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் பண்ணையில் ஒருமுறை சுற்றி வந்துவிட்டாலே அலுப்புத் தட்டிவிடும். மறுபடியும் வெவ்வேறு வகையான மாட்டினங்கள் இருக்கும் பண்ணையில் சுற்றினாலும் எல்லாமே மாடுதானே என்று ஒருவித சலிப்பு வந்துவிடும். ஆனால் ஊதா நிறத்தில் ஒரு மாட்டைப் பார்த்தால் அஃது என்ன புதிதாக இருக்கிறது என்று ஆர்வத்துடன் அதைப் பார்வையிடுவோம், பால் வாங்கக்கூட முயல்வோம் அல்லவா? அந்த மாதிரி, வாடிக்கையாளர்களுக்குப் புதிய ஒன்றை அலுப்பூட்டாதவண்ணம் தர வேண்டும் என்பதையும் அமெரிக்காவின் ஏகப்பட்ட ஊதா மாடு மார்க்கெட்டிங் உதாரணங்களையும், அதன் வெற்றி தோல்விகளை அலசுகிறார்.

நம்மூர் சந்தையிலும் பலதரப்பட்ட உதாரணங்களைப் பார்க்க முடியும். கும்பகோணம் டிகிரி பில்டர் காபி என்று சில வருடங்களுக்கு முன்னர் பிரபலமான காப்பிக்கடை இருந்தது. மேற்கு மாவட்டங்களில் பேக்கரி ஆரம்பிக்கவே 20 இலட்சம் முதலீடு செய்வார்கள். இவை எல்லாமே ஒரே டெம்ப்ளேட்டில் இருப்பது வழக்கம். கோவையில் பேக்கரி என்றும் திண்டுக்கல்லில் ரிலாக்ஸ் என்றும் சேலத்தில் காபி பார் என்றும் பெயரிட்டிருப்பார்கள். சுவையும் பெரும்பாலும் ஒரே மாதிரியே இருக்கும். தொழிலில் எவ்வித புதிய அணுகுமுறையும் இருக்காது.

அப்போது டிகிரி பில்டர் காபி என்ற பெயரில் செப்பு டம்ளரில் காபி போட்டுக்கொடுத்த கும்பகோணம் டிகிரி பில்டர் காபி கடைகள் பிரபலம் ஆனது. பலர் ஃபிரான்ச்சைசீ எடுத்தார்கள். (அந்தக் கடைகளின் ஊதா நிறத்துக்கும், Purple Cow புத்தகத்துக்கும் தொடர்பில்லை). ஒரே வருடத்தில் பல கடைகள் மூடப்பட்டன. காரணம், டிகிரி காபி என்ற பெயரில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றினார்கள். வாயில் வைக்க முடியாத மொக்கையான சுவை. ஆனால் பழைய டீகபடை மாடல் பேக்கரிகள் அப்படியேதான் இருக்கின்றன; புதிய பேக்கரிகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

பெயரை மாற்றுவது, பெயிண்ட்டை மாற்றுவது, பெயர்ப் பலகையை மாற்றுவது போன்றவை ஒருபோதும் innovation என எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

ஒரு business layer-ஐ உண்டாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். அதில் ஆரம்பத்தில் இருந்து இருந்தவர்கள் தாக்குப்பிடிப்பதோடு அது என்னென்ன பரிமாணங்களை எடுக்கும் என்பதையும் அறிவார்கள். அதற்கு பல்கலைக்கழக படிப்பெல்லாம் தேவையில்லை. அதில் frugal management இருக்கும்வரை மட்டுமே இலாபகரமான தொழில். ஏகப்பட்ட அடுக்கு நிர்வாகம் உள்ளே நுழையும்போது அதன் திறன் குறைவதோடு organic growth என்பது அப்படியே நிற்க ஆரம்பிக்கும். அதை சரிகட்ட கிடைப்பதையெல்லாம் வாங்கிப்போடுவது, தள்ளுபடி விற்பனை என ‘எண் விளையாட்டுகள்’ ஆரம்பமாகும்.

கும்பகோணம், மாயவரம் ஊரகப் பகுதிகளில் வளர்க்கப்படும் வாத்துகளுக்கு கரூர், நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர கிராமங்களே சந்தை. உள்ளூர் உற்பத்தி போதாத காரணத்தால் அங்கிருந்து வாங்கிவந்து விற்பனை செய்கிறார்கள். இரு மாவட்டங்களில் மட்டும் வாரத்துக்கு ஒரு இலட்சம் வாத்துகளுக்கு மேல் விற்பனையாகிறது. இதன் மதிப்பு தோராயமாக 2.5 கோடி. இதில் எந்த பிராண்டும் கிடையாது. எல்லாமே சாலையோர கறிக்கடைகள், வறுவல் உணவகங்கள் மூலமே விற்பனை. வாத்து முட்டை பற்றாக்குறை காரணமாக ஆந்திரா நெல்லூரில் இருந்து பேருந்துகளில் வருகிறது. நான்கு ரூபாய்க்கு வாங்கி பத்து ரூபாய்க்கு விற்கும் தொழில். இதிலும் பிராண்டு எதுவும் கிடையாது. தனிநபர்களின் வார்த்தைகள் வழியாகவே வியாபாரம்.

ஒருகாலத்தில் கவுச்சி அடிக்கிறது என்று நாமக்கல், கரூர் பகுதிகளில் வாத்துக்கறியை யாரும் சாப்பிட மாட்டார்கள். இன்று வாரம் இரண்டரை கோடி ரூபாய்க்கு விற்பனை என்கிற நிலை வர கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகியிருக்கிறது. ஆட்டுக்கறி விலையேற்றமும் இதன் வளர்ச்சிக்கு ஒரு மறைமுக காரணம். ஒரு புதிய இறைச்சி சுவை வியாபாரம் அதாவது ஒரு business layer உருவாக தேவைப்பட்ட காலத்தை நாம் நவீன வியாபார பாடங்களில் அளப்பதே இல்லை.

ஓரளவுக்குப் பெரிய கறிக்கடைகளில் வாத்தின் இறக்கையில் உள்ள பெரிய இறகுகளைத் தனியாகப் பிடுங்கி சேகரித்து வைத்து கிலோ 2000 ரூபாய்க்கு சில முகவர்களிடம் விற்கிறார்கள். அவர்கள் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். அவையே சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெள்ளைச் சாயமிடப்பட்ட இறகுப்பந்து பூவாக (shuttle cock) வருகின்றன. பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் எவ்வளவு பேர் இறகுப்பந்தாட்ட மட்டையை முதுகில் மாட்டிக்கொண்டு காலையில் விளையாடப் போனார்கள், இன்று எவ்வளவு பேர் போகிறார்கள் என்பதை வைத்து அந்த சந்தையின் வளர்ச்சியையும் அளவிடலாம்.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் கோவையின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பல புதிய தக்காளி இரகங்களை ஒரு தோட்டத்தில் நடவு செய்துவிட்டு வாரம் ஒருநாள் அங்கு செல்வது, மதியம் சாப்பிட்டுவிட்டு அந்தப் பகுதியில் சுற்றுவதுமாக இருந்தோம். அந்த தோட்டத்திற்கு அடுத்து ஒரு அட்டை போடப்பட்ட கட்டிடம். உள்ளே என்ன தயாரிக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஒரு லாரியில் வரும் திரவத்தை கேன்களில் பிடித்து வைத்து சோப் பவுடராக்கி பொட்டலம் போட்டு பெட்டியில் அடைத்து அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

புதுகோட்டை அருகே ஒருநாள் மக்காச்சோளம் விதைப்புக்குச் சென்றுவிட்டு பட்டுக்கோட்டை அருகே கீற்றுச் சாமியார் என்று ஒருவர் இருப்பதாகவும் அவர் நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் சொல்லக்கூடிய சித்தர், அவரைப் பார்க்காமல் திரும்பக்கூடாது என்று ஒரு நண்பர் அழைத்துச் சென்றார். அந்த சித்தர் Zoom டிடர்ஜென்ட் பவுடர் பயன்படுத்தியே ஆடைகளை வெளுக்கிறார் என்பதைப் பார்த்தபோது அந்த மார்க்கெட்டிங் சேனல் எவ்வளவு ஆழமானது என்பதை உணர முடிந்தது.

இன்று தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடக விளம்பரம் இல்லாமல் சோப்பு, வாசிங் பவுடர்களை விற்க எம்பிஏ படித்த மேனேஜர்களால் முடியாது. இன்று இருக்கும் பிரபல பிராண்டுகள் மார்க்கெட்டிங் பட்ஜெட்டுகளால் தூக்கி நிறுத்தப்பட்டவையே. ஒரு சுவர் விளம்பரம் கூட இல்லாமல் ஜூம் டிடர்ஜென்ட் பவுடர் போன்ற எண்ணற்ற பொருட்கள் நம்மிடையே கோடிகளில் விற்கின்றன.

இந்த விற்பனைச் சங்கிலியை அவ்வளவு எளிதாக Merger & Acquisition மூலமாகப் பெற்றுவிட முடியாது. Zoom பவுடர் போனால் யாராவது Doom டிடர்ஜென்ட் பவுடர் என்று கொண்டுவருவார்கள்.

மாதம் பத்து கோடிக்கு இரண்டு மாவட்டங்களில் வாத்துக்கறி விற்கிறது என்பதற்காக ஒரு பெரிய நிறுவனம் நுழைந்து சந்தையைக் கைப்பற்ற நினைக்கிறது என்றால் அதற்கு கீழே ஒரு business layer உண்டாகும். அதுவும் பெரும்பாலும் பார்வைக்கே தெரியாத ஒன்றாகவே இருக்கும். வெண்பன்றிக்கறி வியாபாரமும் அப்படித்தான். இதில் தனிநபர்களின் பெயர்களே பிராண்டு. எத்தனை கோடி வியாபாரம் என்பது அரசாங்கத்தின், வங்கிகளின் எந்த ஒரு measurable கணக்கிலும் கொண்டுவரவே முடியாது.

கடந்த இரண்டு வருடங்களில் முலாம்பழம் ஆண்டு முழுவதும் சாலையோரக் கடைகளில்கூடக் கிடைக்கிறது. கோடை காலத்திக்கான ஒரு பழம் எப்படி ஆண்டு முழுவதும் கிடைக்கிறது, யார் பயிரிட்டு விற்பனைக்கு அனுப்புகிறார்கள், விதை எங்கிருந்து வருகிறது என்று யோசித்திருக்கிறோமா?

கண்ணன் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரை ரிலையன்ஸ் வாங்கிவிட்டது என்றபோது பெரிய அதிர்வுகள் ஏதும் வரவில்லை. ஆனால் வால்மார்ட் இந்தியாவில் கடை போடுகிறது என்றதும் லபோதிபோவென குதித்தவர்கள் பலர் (ஆனால் அவர்கள் IKEA கடையை சிலாகித்தது வேறு கதை. அது வேற வாய், இது வேற வாய் மொமென்ட்). ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் கண்ணன் டிபார்ட்மென்ட்டல் கடையைவிட வால்மார்ட்டில் பலன் அதிகம் என்பது தெரியாததல்ல.

நாளையே சென்னை சில்க்ஸ், சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ், டி-மார்ட் கடைகளை ரிலையன்சோ, வால்மார்ட்டோ வாங்கிவிட்டாலும் அவற்றின் வாடிக்கையாளர்களிடத்தில் பெரிய அதிர்வுகள் வராது. இணையதளங்களில் புழங்கும் 50+ வயது கட்டுரையாளர்களது உலகம் வேறு.

இரவில் ஒரு கம்பியில் மண்ணெண்ணெய் விளக்கை வைத்துவிட்டு அடியில் துணிகளைப் பரப்பி ஏலம் விட்டவர்களிடம் எடுத்துத்தான் நமது ‘ஆடையுடுத்தும் மகிழ்வான தருணங்கள்’ கிடைக்கப்பெற்றன. பகல் நேரங்களில் மிதிவண்டியில் கொண்டுவந்து துணி விற்றவர்களிடம் பாவாடை, இரவிக்கைத் துணி வாங்கிக் கட்டிய நம் முன்னோர்கள் இப்போது ஒரு ஜாக்கெட்பிட் எடுக்க டிரைவர் வைத்து இன்னோவா எடுத்துக்கொண்டு சேலத்திலிருந்து கோயமுத்தூருக்குப் போகிறார்கள். இடைப்பட்ட காலம் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே.

இதில் எத்தனை மாறுதல்கள் வந்தாலும், business layers தோன்றி மறைந்தாலும் வாடிக்கையாளர்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளப் போவதில்லை. அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொத்தாம்பொதுவான ஆலோசனை சொல்லப்பட்டாலும், நுகர்வோர் ஒன்றைக் கைவிட்டு விடுகிறார்கள் என்னும்போது அரசாங்கம் எப்படிக் காப்பாற்றும் என்பதற்கு பதிலில்லை.

Zoom மீட்டிங் என்று இப்போது எல்லா பக்கமும் நடக்கிறது. காணொளி மீட்டிங் செயலி என்பது இன்று எல்லா மென்பொருள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு default option-ஆகத் தருகிறது. நம்மூர் Zoho உட்பட கூகுள் வரைக்கும் ஒவ்வொருவரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸ் செயலி இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் Skype for Business என்பதை பெரு நிறுவனங்களுக்கு வழங்கும் மென்பொருள் பேக்கஜில் சேர்த்தே கொடுக்கிறது. இருப்பினும் பல நிறுவனங்கள் Zoom நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி மீட்டிங் நடத்த இடவசதி பெற்றிருக்கின்றன.

ஆர்குட் போய் பேஸ்புக் வந்தது. ஐயகோ ஆர்குட் போய்விட்டதே, அங்கிருந்து மென்பொருள் வேலை செய்யும் ஆட்கள் என்ன ஆவார்கள் என்று வாடிக்கையாளர்கள் கவலைப்படுவதில்லை. பிளாக்பெர்ரி போய் ஆப்பிள் வந்தபோதும் இதே கதைதான்.

அரசாங்கம் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லப்படுவது மிகவும் தட்டையான generic statement. தொழில்கள் அப்படியேதான் இருக்கும். அது செய்யப்படும் முறை, பாணி, உத்தி மட்டுமே மாறுபடும். அது ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான skill set தேவை. மேலை நாட்டு வணிகப் பள்ளிகளில் சொல்லப்படும் consolidation of businesses என்பதை இங்கே பயமுறுத்தும் சொல்லாக மாற்றிவிட்டிருக்கிறோம். அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள், லைசன்ஸ், பெர்மிட் போன்றவற்றைத் தாண்டி தொழில்நுட்பம், business layer என்று வரும்போது தனிநபர்களின் திறமையே செல்லுபடியாகும்.

இன்றைய லாக்டவுன் காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை எதுவென்றால் Zoom டிடர்ஜென்ட் பவுடர் போன்ற பொருட்கள் விற்பனை செய்வதை Zoom மீட்டிங் app மூலமாக செய்யச்சொல்லி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதுதான். நாம் என்ன மாதிரியான வியாபாரத்தில் எந்த மாதிரியான விற்பனை சங்கிலியில் இருக்கிறோம் என்பதையே புரிந்துகொள்ளாத பலர் மேலாளர்களாக இருக்கிறார்கள் என்பது பல நிறுவனங்களில் நடக்கும் Zoom meeting மூலமாகத் தெரிய வந்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி

தேசிய நெடுஞ்சாலைகளில் வளர்க்கப்படும் அரளிச்செடி எதிரில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைத் தடுப்பதைத் தவிர காற்று மாசு அளவைக் குறைப்பதில் எந்த வகையிலும் பயன்படுவதாகத் தெரியவில்லை. எதன் அடிப்படையில் அரளிச்செடியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பரிந்துரைக்கிறது என்பதற்கு வலுவான ஒரு காரணம் கூட கிடைக்கவில்லை. யாராவது ஒரு அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ இராசியான வண்ணமாக, பிடித்த செடியாக இருந்திருக்கக்கூடும் என்ற அளவில் அதை முடித்துக்கொள்வோம்.

காற்றில் கார்பன் மோனாக்சைடு, தூசிகளின் அளவு அதிகரிக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது இலைகளில் உள்ள பசுங்கனிகம் (குளோரோபிளாஸ்ட்). அதிலுள்ள பச்சையம் (குளோரோஃபில்) அளவு குறையும்போது ஒளிச்சேர்க்கை குறைவதால் கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு ஆக்சிஜன் வெளியிடும் திறன் குறைகிறது.

ஒப்பீட்டளவில் காகிதப்பூ செடி அரளியைவிட காற்று மாசு அளவு கூடும்போது நன்றாக தாக்குப்பிடிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். காகிதப்பூச்செடியை விடவும் காற்று மாசைத் தாங்கக்கூடிய செடிகள் சில உண்டு என்றாலும் அவை நெடுஞ்சாலைகளில் வளர்ப்பதற்கு உகந்தவை அல்ல என்பதால் மேற்கொண்டு அலசத் தேவையில்லை.

அரளிச்செடியின் எந்த ஒரு பாகத்தையும் காய வைத்துக்கூட பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளவே கூடாது. தொழில்முறை சித்த மருத்துவர்கள் விதிவிலக்கு. அரளிக் குச்சிகளை வைத்து அடுப்பு எரிக்கவோ, கறி வறுக்கும்போது கிளறவோ பயன்படுத்தக்கூடாது.

நல்லவேளையாக அரளிச்செடியில் (Nerium oleander) மதுரமும், மகரந்தமும் பெரிய அளவில் கிடையாது என்பதால் தேனீக்கள் சீண்டுவதில்லை. பல தேனீ பண்ணைகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே அமைந்துள்ளன.

சிக்கிம், நாகாலாந்து மாநிலங்களின் அடையாள மலர் ரோடோடென்ரான் (Rhododendron). நேபாளத்தின் இமயமலை அடிவாரத்தில் பூக்கக்கூடிய அழகான மலர்கள் இவை. இந்த ரோடோடென்ரான் மலர்கள் பூத்துள்ள பகுதியில் மட்டும் தேனீ பெட்டிகளை வைத்து தேன் எடுக்கிறார்கள். இது உலக அளவில் Mad Honey என்ற பெயரில் பிரபலமானது. இதைக் குடித்தால் சில மணி நேரங்களுக்கு மனப்பிரள்வு (Hallucination – தமிழில் என்ன பொருள்?) ஏற்படுவதால் இதை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கையில் ஊற்றி நக்குகிறார்கள்.

Mad Honey அப்படியொன்றும் அற்புத மருந்தெல்லாம் அல்ல. அதைக் குடித்தால் ஆண்மை பெருகிறது என்ற நம்பிக்கை காரணமாக 40+ வயது ஆண்களே இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். இது ஆன்ட்ரோமீடோடாக்சின் (Andromedotoxin) வகையில் வரும்.

Mad Honey மட்டுமல்லாது அமுக்கிராங்கிழங்கு உட்பட பதினைந்துக்கும் மேற்பட்ட தாவர வகைகள், புனுகுப்பூனை, மான்கொம்பு, புலியின் விதைப்பை என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் “ஆண்மையைப் பெருக்கும்” சந்தையில் உண்டு. ஷிலஜித் எடுக்கிறோம் என்றபெயரில் இமயமலையைச் சுரண்டி விற்கிறார்கள். ஆனால் சந்தையில் இருக்கும் முக்கால்வாசி ஷிலஜித் போலியானவை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அண்மையில் சித்த மருத்துவர் என்ற பெயரில் ஒருவர் கொரோனா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரை டம்ளர் மோரில் இரண்டு சொட்டு ஊமத்தை இலைச்சாற்றை விட்டுக் குடித்தால் பேதி நிற்கும் என்று சொன்னதாகத் தெரியவந்தது. இந்த மாதிரியான ஆலோசனைகளை உண்மையான மருத்துவர்கள் சமூக ஊடகங்களில் வழங்குவது சந்தேகமே.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆட்சி செய்ய ஆரம்பித்த காலகட்டத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது வகை வகையான கொள்ளைக்கூட்டங்கள். அதில் ஊமத்தைக் கொள்ளையர்கள் என்று ஒரு வகை. வெளியூர் சென்றுவரும் வியாபாரிகள், அரண்மனை ஊழியர்கள், கோவிலுக்கு புனித யாத்திரை செல்பவர்களிடம் சாதாரண வழிப்போக்கர்கள் போலப் பழகி தண்ணீர் அல்லது பாலில் ஊமத்தை (Datura) விதைப் பொடியை கலந்து கொடுத்துவிட்டு, அவர்கள் மயங்கியதும் கொள்ளையடித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களைத் தேடித்தேடி பிடித்து தூக்கில் போட்டிருக்கின்றனர். Datura poisoning என்று கூகுலிட்டுப் பார்க்கலாம்.

ஊமத்தை இலை, விதைச் சாறு, பொடி போன்றவை மட்டுமல்ல, எருக்கு, அரளி என பலவகையான செடிகளும் மருந்துப் பொருட்கள் செய்ய உகந்தவை. ஆனால் அதற்குக் கடுமையான பயிற்சியும் அனுபவமும் தேவை. சும்மானாச்சிக்கி பேஸ்புக் பதிவில் ஊமத்தைச் சாறு குடியுங்கள், கள்ளிப்பாலை கண்ணில் இரண்டு சொட்டு விட்டால் சாலேஸ்திரம் குறையும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் போலி மருத்துவர்களே.

செங்காந்தள் மலர்தான் தமிழகத்தின் அடையாள மலர். விடுதலைப் புலிகளின் அடையாள மலரும் இதேதான். கண்வலிக் கிழங்கு என்று சொல்வார்கள். அதன் விதை இன்று பல கோடிக்கு ஏற்றுமதியாகிறது. அதிலிருந்தும் மருந்துதான் எடுக்கிறார்கள். ஆனால் அந்த விதையை அரைத்துக் கொஞ்சம் குடித்தாலும் சாவுதான்.

இன்று எங்கு திரும்பினாலும் பாரம்பரிய அறிவு நிபுணர்கள். இவர்கள் சொல்வதெல்லாம் அதை அரைத்துக் குடி, இதை காயவைத்து சாப்பிடு, அதைப் பிழிந்து பூசு, இதை இடித்துக் கலக்கி விழுங்கு என்று ஆலோசனைகளை அள்ளி வீசுகிறார்கள். கொஞ்சம் எகிறினாலும் கிட்னி போய்விடும், அப்புறம் ஒவ்வொறு உறுப்பாக ஒத்துழையாமை செய்யும் என்கிற எச்சரிக்கை வாசகம் கூட சொல்வதில்லை. செடிகொடிகளிலிருந்து வருவதை அப்படியே கொடுத்தால் பின்விளைவுகளே இருக்காது என்று அப்படியே நம்புகிறார்கள் நம் மக்கள்.

இந்தியாவிலிருந்து சில நூறு கோடிகளுக்கு ஏற்றுமதியாகும் பல்வேறு தாவரங்கள் மருந்துப் பொருட்களாகி சில ஆயிரம் கோடி மதிப்பில் திரும்ப வருகின்றன. இங்கே அவற்றை ஆராய்ச்சி செய்வதுகூட வேண்டாம். அப்படியே reverse engineering செய்து அதே மருந்துகளை சீனா போல அப்படியே உற்பத்தி செய்யக்கூட நாம் தயாரில்லை. Ayush என்கிற ஆமை டிபார்ட்மெண்ட்க்கு அரசாங்கம் கொடுக்கும் பணத்தைத் பத்து கம்பெனிகளுக்கு மானியமாக வழங்கினாலே பெரிய புரட்சி ஏற்பட்டுவிடும்.

Coming back to the அரளிச்செடி. இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் முகப்பு விளக்கு வெளிச்சத்தை மறைக்க ஆமணக்குச் செடியும், ஐந்தடிக்கு ஒரு பனை மரமும் நட்டு வைத்தால் நாட்டில் விளக்கெண்ணைப் புரட்சியும், வாகனங்கள் center median-த் தாண்டி வந்து விபத்து ஏற்படுவதுமாவது தடுக்கப்படும். லாரி வைத்து அரளிச்செடிகளுக்கு ஊற்றப்படும் பல இலட்சம் லிட்டர் தண்ணீருக்கும் தேவையிருக்காது.

சுளுந்தீ – நாவல் – விமர்சனம்

சுளுந்தீ – நாவல்
ஆசிரியர்: இரா. முத்துநாகு
ஆதி பதிப்பகம் வெளியீடு.
விலை ரூ 450, பக்கங்கள்: 472

நாவலாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை ஒன்றே போதும். ஓர் அற்புதமான கட்டுரையை அதாவது வரலாற்றின் போக்கை எழுதி நம் முன்னால் வைத்துவிடுகிறார். 472 பக்கங்கள் எல்லாம் படிக்க முடியாது என்று கருதுபவர்கள் அவசியம் அந்த முன்னுரையையாவது படிக்க வேண்டும்.

தொ. பரமசிவன் நூல்கள், வேல இராமமூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’, பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ யுவல் நோவா ஹராரியின் Sapiens, Homo Deus போன்ற நூல்களை வாசித்திருந்து சுளுந்தீ வாசித்தால் இன்று நமக்கு கிடைத்திருக்கும் வாழ்வுக்கும், இருநூறு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்களுக்குக் கிடைத்திருந்த வாழ்வுக்கும் உள்ள இடைவெளியை, உயிர் பாதுகாப்பை, சமத்துவத்தை மிகச் சிறப்பாக புரிந்து கொள்ளலாம்.

பண்டுவம் எனப்படும் வைத்திய முறைகள் நாவிதர்களிடமே அந்த காலத்தில் இருந்து வந்திருக்கிறது; பண்டுவம் பார்க்கத் தெரிந்த ஆண் நாவிதன் – பண்டுவன் எனவும் பெண், மருத்துவச்சி எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றனர். மனிதர்களுக்கு, விலங்குகளுக்கு வைத்தியம் பார்த்து உயிர்காக்கத் தெரிந்தவர்களே பண்டிதன் என்பதாக இருந்து பிற்காலத்தில் மந்திரம் ஓதும் மந்திரவாதிகளைப் பண்டிதன் என்று அழைக்க நேரிட்டது இயல்பாக நடந்த நிகழ்வன்று.

சுளுந்தீ நாவலைப் பொறுத்தவரை கதை மாந்தர்களின் கலக சிந்தனைக்கான கருத்தாழம், படிமம், நுண்கரு, மையப் புள்ளி, விழுமியம், சமூகப் படிமங்களின் ஒத்திசைவு, அகவொளி தரிசன தற்சார்புக் கோட்பாடு, மைட்டோகாண்டிரியா, கோல்கி அப்பேரட்டஸ், ஹேபர்-பாஸ்ச் கோட்பாடு என்றெல்லாம் தேடக்கூடாது. அச்சுப்பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகள் பல உண்டு. இருப்பினும் வாசகத்தை அவை சிதைக்கவில்லை என்பதோடு பொருள்மயக்கம் தரவில்லை என்பதால் அப்படியே கடந்துவிடலாம். அவற்றை அடுத்த பதிப்பில் ஆசிரியர் திருத்தி விடக்கூடும்.

சுளுந்தீ, மக்களின் மரபான வைத்திய முறைகளில் ஆரம்பித்து ஒவ்வொரு தொழிலிலும் உள்ள survival skills எப்படி அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தப்படுகிறது அதில் என்னென்ன மாற்றங்கள் புதிய குடியேற்றங்களாலும், அரசியல் காரணங்களும் ஏற்படுகின்றன என்பதைப் பதிவு செய்கிறது. இந்த Skills எல்லாமே பெரிய அளவில் பொருளீட்ட, அது சார்ந்த மக்களின் வாழ்க்கைத்தரம் உயரப் பயன்படவில்லை. காரணம், அவை சாதிக் கட்டமைப்புக்குள் இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தன. அதை இந்து ஞான மரபு என்று புனிதப்படுத்தாமல் பளிச்சென உடைத்துக் காட்டுவதே இந்நாவல்.

ஏகப்பட்ட பண்டுவ தகவல்களை நாவலாசிரியர் கதைமாந்தர்களை வைத்து சொல்லிக்கொண்டே வருகிறார். ஒன்று இரண்டு என்றால் குறிப்பிட்டுச் சொல்லிவிடலாம். ஆனால் முப்பது நாற்பது வகையான தகவல்கள் என்பதால் அவற்றை திரும்பப் பதிவு செய்வது கடினமான ஒன்று. களப் பணியாளர்களிடம் எப்போதுமே ஒரு தெளிவான பார்வையும், இது இப்படி ஆரம்பித்தால் இப்படித்தான் வந்துசேரும் என்ற லாஜிக்கும் இருக்கும். அந்த அற்புதமான லாஜிக்கை ஓரிடத்தில் காட்டும் ஆசிரியர் இன்னோரிடத்தில் கோட்டை விட்டுவிடுகிறார்.

சித்த மருத்துவ முறையில் சாதாரண ஒன்றைக்கூட வேண்டுமென்றே வேறு பெயர்களில் சொல்லி அலைய விடுவதில் ஆரம்பித்து இரகசியம் என்ற பெயரில் அதை நாசம் செய்வதும் நமது மரபு. உதாரணமாக, அண்மையில் சிறியாநங்கைச் செடியை நிலவேம்பு என்று சொல்லி கல்லா கட்டியது!

நாவலாசிரியர் அறிவியல் ஆராய்ச்சியாளரோ தொழில் முறை தாவரவியலாளரோ அல்லர் என்பதால் அவரிடம் reference கேட்கக்கூடாதுதான். இருந்தாலும் சில தகவல்களை வெளிப்படையாக வைத்தால்தான் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும், ஆராய்ச்சியாளர்கள் அதை மக்களுக்குப் பயன்படும்வண்ணம் விரைந்து தயாரிக்க இயலும். என்றைக்கு கார்ப்பரேட்டுகள் நமது பாரம்பரிய சொத்தைக் களவாண்டு விடுவார்கள் என்ற முட்டாள்தனம் ஒழிகிறதோ அன்றுதான் சர்வதேச அளவில் நாம் வேற லெவல் இடத்தைப் பெற முடியும்.

அந்த காலத்தில் வெள்ளாவி வைக்க துணி எடுத்துச் செல்கையில் ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒரு குறி இட்டு அடையாளம் போட்டுவிடுவர். துணி அழிந்தாலும் அந்த குறியீடு போகாது. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரே அது இரசாயன மை. அதற்கு முன்னர் சேந்தங்கொட்டையை வேக வைத்து எடுக்கும் சாயமே பயன்பட்டது. மிக ஆபத்தான சாயம், கையில் பட்டால் வெந்துவிடும் என்பதால் ஆய்வகங்களில் அமிலத்தைக் கையாள்வது போன்ற கவனம் தேவை. அதே நேரத்தில் பல மருந்துப்பொருட்களில் சேந்தங்கொட்டை சேர்க்கப்படுகிறது. Semecarpus anacardium என்று NCBI-இல் தேடினால் ஏகப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்கும். மருத்துவ ஆராய்ச்சிகளில் பல இருந்தாலும் அந்த சாயத்தை எப்படி ஆடைகளுக்கு வண்ணமேற்றும் இயற்கை சாயமாக மாற்றுவது என்ற ஆய்வு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய முதலீட்டிய காலகட்டத்தில் பொருட்களை உண்டாக்கும் நிறுவனங்கள் செய்யும் ஆராய்ச்சியும், பல்கலைக்கழக அளவிலான ஆராய்ச்சியும் முற்றிலும் வேறான பார்வை கொண்டவை. ஒரு சாதாரண தகவலைப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சந்தைப்படுத்தும் பொருளாக மாற்றக்கூடிய திறன் அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கைவராது. சேந்தங்கொட்டை குறித்த தகவல் இருக்கும் சுளுந்தீ பக்கத்தை வாட்சப் நிலைத்தகவலாக வைத்திருந்தேன். அதைப் பார்த்த நண்பர் ஒருவர் அந்த சாயம் குறித்தான அத்தனை தகவல்களையும் அலசிவிட்டு ‘லாக் டவுன் முடிந்தவுடன் இரண்டு கிலோ வாங்கி அனுப்பி வை. அந்த சாயத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வோம்’ என்று அனுப்பிய தகவல் ஆச்சரியம் அளிக்கவில்லை. சில ஆண்டுகள் கழித்து ஏதாவது ஒன்றை அவர்கள் சந்தைப்படுத்தும்போது ‘ஐயகோ பார்த்தாயா, நமது பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிக்காரன் கொண்டுபோய்விட்டான். அன்னிக்கே ஐயா இதைத்தான் சொன்னாரு’ என்று ஒப்பாரி வைப்பார்கள். இன்டிகோ சாய வரலாறு தெரியுமா என்பார்கள்.

ஒரு கிடாரிக்குப் பிறக்கும் முதல் காளைக் கன்று ஒன்றை ஏன் கோவிலுக்கு நேர்ந்து விட்டு விடுகிறார்கள் என்பதற்கு ஒரு கதையை நாவலாசிரியர் வைத்திருக்கிறார். மிகச் சிறப்பான விளக்கம். ஏதாவது ஒரு காரணத்தால் காளை இறந்துவிட்டால் இடையர்கள், குடியானவர்கள் இடையே ஏற்படும் தொழில் போட்டியின் காரணமாக பொலிச்சலுக்கு காளை இல்லாதபட்சத்தில் வரும் பிரச்சினையைத் தவிர்க்க ஒவ்வொருவரும் ஒரு காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட வேண்டும் என்று அரண்மனை தீர்ப்பு சொல்லி ஆரம்பித்து வைத்த வழக்கம் அது.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் சொக்காயி என்ற பெயரில் இருக்கும் நாட்டார் தெய்வம் ஒன்றுக்கு எல்லா சாதியினரும் தங்களது எருமைக் கிடாக்கன்றை நேர்ந்துவிட்டு கட்டுத்தறியை விட்டு துரத்திவிடுவார்கள். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த சுற்றுவட்டாரத்தில் திரியும் நூறு, இருநூறு எருமைக் கிடாக்களைப் பிடித்துவந்து நோம்பி போட்டு, வெட்டி ஒரு குழிக்குள் போட்டு மூடி விடுவார்கள். அந்த குழி அக்ரஹாரத்துக்கு வெகு அருகில் இருந்ததால் பலருக்கு அருள் வந்தும், சொக்காயி கனவில் வந்தும் ‘எனக்கு எருமை இரத்தக் கவுச்சி பிடிக்கலடா, நெய்வேத்தியம் மட்டும் பண்ணுங்கோ’ என்று சொல்லிவிட்டது.

அதனால் கடந்த பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அந்த பழக்கம் நிறுத்தப்பட்டது. அப்படியே யாராவது எருமைக் கிடாவை நேர்ந்துவிட்டாலும் அதை விற்று, பணத்தை அந்த உண்டியலில் போட்டுவிடுவது வழக்கமாக்கப்பட்டது. முதல் பலி கொடுப்பது அந்த ஊர் அருந்ததியரின் எருமைக் கிடா. அதுவும் கிட்டத்தட்ட நின்றுவிட்டது. இப்போது சொக்காயி சாமியானது ஸ்ரீ சொக்கநாயகி அம்மன் ஆகிவிட்டது. படிப்படியாக பொலிச்சலுக்கு எருமைக் கிடா இல்லாமல் ஆனதால் இன்று திரவ நைட்ரஜன் கேன்களை பைக்குகளில் கட்டிக்கொண்டு சினை ஊசிகளுடன் இளைஞர்கள் போய் வருகின்றனர். இதன் நீட்சியை சமீபத்திய தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்க அபிவிருத்தி சட்டம் வரைக்கும் பார்க்க வேண்டும். இந்த கிளைக் கதை எதற்காக என்றால் ஒரு பண்பாட்டு அசைவு என்பது எங்கு ஆரம்பித்து எது வரைக்கும் போகிறது என்பதற்காக.

கடும் பஞ்சத்தில் மக்கள் கோரைக்கிழங்கு, மூங்கில் அரிசி, கரையான் புற்றுக்குள் உள்ள அரிசி வரைக்கும் எடுத்து உண்டு உயிர் பிழைத்திருக்கையில் இடையர்களுக்கு தண்ணீர் இருக்கும் பகுதியை அரண்மனை ஒதுக்கித் தருவதின் பின்னணியில் அக்ரகாரத்துக்கும், புலவர்களுக்கும் பால், தயிர், வெண்ணைக்கு எந்த பஞ்சமும் கிடையாது என்பதையும் நாவல் காட்டுகிறது.

அதற்காக நஞ்சை நலங்களை உழுதவர்களை குலநீக்கம் என்ற பெயரில் ஊரைவிட்டு காட்டுக்குள் துரத்தியடிப்பது, மறுப்பவர்களைக் கொலை செய்து அரண்மனை தனக்கான இருப்பை நிலைநிறுத்திக் கொண்டது. பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் விஜயநகர குடிகளைத் தருவித்து குடியேற்றம் செய்ய பூர்விக குடிகள் பலர் குலநீக்கம் செய்யப்பட்டு துரத்தப்பட்ட கதைகள் புத்தகத்தில் கடப்பதற்கு கனமானவை. அதன் நவீன வடிவமாக இன்றைய குடியுரிமைச் சட்ட திருத்தங்களைப் ஒப்பிடலாம்.

சாதாரண சமையல் உப்பு கூட வெடி மருந்துதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் கதையின் நாயகனான நாவிதன் இராமனிடம் இருந்து தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பண்டுவர்களிடம் இருந்த மருந்துப்பொருட்களை குல நீக்கமானவர்கள் பெற்று வெடி செய்து அரண்மனைப் படையினரைக் கொன்றுவிட்டனர் என்பதற்காக பண்டுவம் பார்க்கும் நாவிதர்களைக் கொலை செய்து முச்சந்தியில் வீசி விடுகின்றனர். பழநி அடிவாரத்தில் இருந்த பண்டாரங்கள் சிலர் பண்டுவம் தெரிந்தவர்கள் என்பதால் அவர்களையும் கொன்று விடுகின்றனர். மீதமிருந்தவர்கள் பண்டுவ ஓலைச்சுவடிகளை அதிகாரத்தில இருந்த பிராமணர்களிடம் சரணடைந்து ஒப்படைத்துவிட்டு உயிர் பிழைத்துக் கொண்டனர். சிலர் சேது சீமை எல்லைக்கு ஓடி விட்டனர்.

பழநி கோவில் நிர்வாகம் பண்டாரங்களின் கையில் இருந்தது. அங்கு கொடுமுடி ஐயர் ஒருவரை பூசைக்கு வரவழைக்கப்பட்டதும், பின்னர் அவர்கள் எப்படி கோவிலைக் கைப்பற்றிக்கொண்டனர் என்பது வரலாறு. நவபாஷான மூலவர் சிலை சுரண்டி விற்கப்பட்டது எப்போது ஆரம்பித்தது என்கிற வரலாற்று ஆராய்ச்சி இந்த இடத்தில் தேவையற்றது.

மதுரை மன்னரிடம் அனுமதி பெற்று மதப் பிரச்சாரம் செய்ய வந்த ஏசு சபையினர் சமஸ்கிருதம் பயின்றுவிட்டு, இங்கு வந்து பார்த்தால் யாருமே சமஸ்கிருதம் பேசவில்லை என்பதால் பின்னர் தமிழ் கற்றுக்கொண்டதும் நாவலில் வருகிறது. அவர்கள் குலநீக்கம் செய்யப்பட்டவர்களிடம் மட்டும் மன்னருக்கு எதிராக கலகம் செய்யாதிருக்கும் வண்ணம் ஜெபக்கூட்டம் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வந்திருக்கின்றனர். குலநீக்கம் செய்யப்பட்டவர்களது வாழ்வு, வாழ்வியல் முறை எல்லாம் அரண்மனைத் தெருவில் திரியும் நாய்களைவிட பலமடங்கு கீழே இருந்திருக்கிறது.

அப்படி குலநீக்கம் செய்யப்பட்டவர்கள், போரில் தோல்வி ஏற்படும்போது சிக்கினால் கொன்றுவிடுவார்கள் அல்லது அடிமையாக்கி விடுவார்கள் என்ற நிலையில் காட்டுக்குள் ஓடி விடுவதும் பின்னர் அவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்காக களவு செய்ய ஆரம்பித்தது, ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்த குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றவற்றை வேல இராம மூர்த்தியின் ‘குற்றப் பரம்பரை’ நாவலும், 1839-இல் Philip Meadows Taylor எழுதிய Confessions of a Thug-உம் நமக்கு அப்படியே வரலாற்றைக் காட்டிச் செல்கிறது.

மக்கள் பஞ்சத்தினால் அரண்மனைக்கு வரி கட்டி வாழ முடியாது என்று முடிவெடுத்து ஊரைக் காலி செய்து ஓட்டம் பிடிப்பது, அந்த பஞ்சத்தினால் கிணறு வெட்டி விவசாயம் செய்வதைக் கற்றுக்கொள்வதும் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பித்தவர்கள் செஞ்சி சென்று சுல்தான் படையுடன் இணைந்து பண்டாரப் படை என்று அழைக்கப்படுவதும் அவர்கள் ஏன் ஒரு முஸ்லிம் மன்னனுக்கு ஆதரவாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நியாயமும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பஞ்சத்தினால் ‘பலருக்கு மைனா குஞ்சு போல கடவா வெந்து, வாய் துர்நாற்றம் பொணமா வீசுது’ என்று நாவலில் சொல்லப்படுவது ஸ்கர்வி. 90-கள் வரைக்கும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணக்கர் பலரை வாய் ஓரத்தில், ஈறுகளில் புண்ணுடன் காணலாம். இன்று அப்படிப்பட்ட ஸ்கர்வி அறிகுறியுடன் குழந்தைகளைத் தமிழகத்தில் காண்பது மிக அரிது. கேப்டன் ஜேம்ஸ் குக், வைட்டமின் சி குறித்த ஆய்வு அவரது ஆஸ்திரேலிய பயணத்தை எப்படி புரட்டிப் போட்டது என்பதையும், பின்னர் உலக நாடுகள் கண்டுபிடிப்பு+காலனி+கடல் வணிகத்தை அப்படியே புரட்டிப்போட்டு உலக வரைபடத்தை மாற்றிய நிகழ்வு அது. Sapiens நூலில் இது விரிவாகக் கூறப்பட்டிருக்கும்.

நாவிதன் இராமனின் மகன் மாடன் அரண்மனை நாவிதனாகாமல் குடியானவர்களுக்கு சவரம் செய்ய அனுப்பப்படுவது குறித்து அவனது தாய் வல்லத்தாரை புலம்புவது எல்லாம் அந்தக்காலத்தில் இருந்து அரசாங்க உத்தியோகம் என்பது ஏன் மக்களால் விரும்பப்படுகிறது என்பதற்கு நாவலின் பிற்பகுதியில் மாடனுக்கு நேரும் எல்லா சம்பவங்களுமே சாட்சி.

அந்தந்த சாதியினர் வேறு தொழிலுக்குப் போகவே முடியாத கட்டுப்பாடு, மீறினால் கடும் தண்டனை போன்றவையே அரண்மனைகளை சொகுசாக வைத்திருக்கின்றன.

பெற்றோர்களின் உழைப்பின் உபரியானது சொத்தாகவோ, சமூக அந்தஸ்தாகவோ, பதவியாகவோ வாரிசுகளுக்குக் கடத்தப்படும்போதுதான் சாதியும், குலத்தொழில் மீதான பெருமையும் பற்றும் அப்படியே அடுத்த சந்ததியினரிடம் இருக்கும். வெறும் கையும் காலுமாக குலத்தொழில் ஞானத்தை மட்டும் வைத்துக்கொண்டு ‘எப்படியோ போய் பிழைத்துக்கொள்’ என்று ஒருவன் வீதியில் விடப்படும்போது குலத்தொழில், சாதி மீதான எந்தப் பற்றும் இருக்காது. ஊரெல்லாம் அலைந்தும், கெஞ்சியும் பார்த்துவிட்டு ‘இனிமேல் ஒருபயலுக்கும் நான் சிரைக்க மாட்டேன்’ என்று மாடன் தனது குலத்தொழிலைத் தூக்கி எறிந்துவிடுவதன் நியாயத்தை இவ்வாறாகப் புரிந்து கொள்ளலாம்.

ஈத்தரக் கழுதை, வெங்கம் பயல், வெங்கமேடு, குரளி வித்தை, பேய் பிடிப்பது, முனி பிடிப்பது என்பதற்கான விளக்கங்கள் ஆச்சரியமளிக்கின்றன. அந்தக் காலத்திலும் இப்போது போலவே பண்டுவர்களிடம் முலை பெருக்க, தண்டு நீள வைத்தியம் கேட்டிருக்கிறார்கள்!

சிறியாநங்கைச் சாறு, வீர, பூரச் செந்தூரம் இருந்தாலும் நாகப் பாம்பு கடிக்கு பண்டுவத்தில் மருந்தில்லை என்பதை நாவலாசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டு இதுபோன்ற இடைவெளிகளில் எல்லாம் ஏசு சபை மூலமாக வந்த ஆங்கில மருந்து மக்களைக் காப்பாற்றியதையும் உரையாடலின் போக்கில் தெரிவிக்கிறார்.

சித்து வேலை என்பது பெரும்பாலும் மக்கள் அறியாமையை வைத்து ஏமாற்றுவது, சில இடங்களில் சின்னச்சின்ன trick என்பதை ஒப்புக்கொள்ளும் ஆசிரியர் பூசணிக்காயை வைத்து திருடர்களை விரட்டும் வித்தையில் கொஞ்சம் ஏமாந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. நாகப்பாம்பு வாயில் பூசணி விதையை வைத்துத் தைத்து தலைகீழாக இரண்டு நாட்கள் தொங்கவிட்டால் விஷம் அதில் இறங்கிவிடும். அதை நட்டுவைத்தால் வரும் பூசணிக்காயில் குறைந்த அளவு விஷம் இருக்கும், அதனால் அதைத் திருடிச்சென்று உண்பவர்களுக்கு குறைந்த அளவில் உடல் நலக்குறைவு ஏற்படும், அதனால் களவு போவது நின்றுவிடும் என்று இராமன் சொல்கிறார். உண்மையில் அப்படி எல்லாம் சாத்தியமே இல்லை.

மாடன் மல்யுத்தப் போட்டியில் இறந்துவிட, பிணத்தை எரிக்கையில் அங்கு கழுதைப்புலிகள் ஏதாவது இருந்தால் அவை சேற்றுத் தண்ணீரில் புரண்டுவிட்டு வந்து சிதையின்மீது கூட்டமாக குதித்து நெருப்பை அணைத்துவிட்டு பிணத்தை இழுத்துச் சென்று (கிரில் சிக்கன் போல நினைத்து) சாப்பிட்டுவிடும் என்று வருகிறது. நெஞ்சுக்கூட்டின் மீது பெரிய மரத்துண்டுகளை வைக்காவிட்டால் உடலிலுள்ள கொழுப்பு எரியும்போது நீர் வற்றி நரம்புகள் இழுக்க பிணம் சுருள ஆரம்பிக்கும். அப்படி நடந்தால் குச்சியால் அடித்து திரும்பவும் தள்ளி மரத்துண்டுகளை மேலே போடுவார்கள். அப்படியும் சில நேரங்களில் கையோ, காலோ எரியாமல் அப்படியே வெளியே விழுந்துவிடும்.

அதை நாயோ, கழுதைப்புலியோ இழுத்துச் சென்றுவிடும். அதை துரத்திச் சென்று மீட்டுவந்து எரிப்பார்கள் (நாமக்கல் மாவட்டத்தில் ஒருகாலத்தில் எய்ட்ஸ் மிக அதிகமாக இருந்தபோது யாராவது இறந்தால் பலர் தனக்கும் வந்துவிடுமோ என்று பிணம் எடுக்கையில் வர மாட்டார்கள். அப்போது சிலரது பிணங்களை கடைசி வரைக்கும் எரித்த அனுபவம் உண்டு). கழுதைப்புலி ஆரம்பத்திலேயே வந்துவிடும் என்பது கொம்பேறி மூக்கன் பாம்பு ஆள் செத்தபிறகு மரத்தில் ஏறி பார்த்து உறுதி செய்துகொண்டுதான் புறப்படும் என்பது மாதிரியாகத் தோன்றுகிறது.

நாவலில் வரும் பலவற்றுக்கு புழக்கத்தில் உள்ள பெயர்கள், தாவரங்களின் அறிவியற் பெயர்கள் போன்றவற்றை தனி இணைப்பாகவாவது கொடுத்திருக்கலாம். விகுளிச்சாறு, விகுளிச் செடி என்று வருகிறது. ஆனால் சரியான விகுளிச்செடி எது என்கிற தகவல் இணையத்தில் சுத்தமாக இல்லை.

பதார்த்த குண சிந்தாமணி வரைக்கும் OK. ஆரோக்ய நிகேதினி என்று ஆரம்பித்து சமஸ்கிருத வார்த்தைகள் வரும் நூல்களில் புகுந்தால் திரும்பி வர முடியாது. இங்குள்ள நூல்களை சமஸ்கிருத்ததில் எழுதி, அவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலேயர் வந்த புதிதில் கல்கத்தாவுக்கு ஓடி இதுதான் இந்தியா என்று அவர்களைப் பிராமணர்கள் நம்ப வைத்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வைத்தது வரலாறு. சமஸ்கிருதம் கலவாத தனித்த மொழிக்குடும்பம் தென்னிந்தியாவில் உண்டு என்று அதற்கு மிகப்பெரிய ground work செய்த எல்லிஸ் துரை அதை வெளியிடுவதற்கு முன்னரே விஷம் வைத்துக் கொள்ளப்பட்டதும் வரலாறு. ஆயுர்வேத நூல்களின் மூலம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிகளின் survival medicine ஞானம் மட்டுமே.

பிராமணீயம் என்பது சக மனிதர்களிக்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலியத்துக்கும் கேடு என்பதை வரலாற்று நூல்கள், நாவல்கள் போன்றவற்றை சமூக நிகழ்வுகளோடு இணைத்துப் பார்ப்பவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

வேடசந்தூரில் கிணறு வெட்டி உப்புத் தண்ணீர் வந்ததால் என்ன செய்வது என்று புரியாத நிலையில் சேது சீமையில் ஆங்கிலேய, டச்சுக்கார வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டு புகையிலை என்ற செடி பயிரிடுவதை அறிந்து ஆட்களை அனுப்பி பயிற்சி பெற்றுவரச் செய்து புகையிலையை அறிமுகம் செய்கின்ற தகவல், அரண்மனைகளில் மூக்குபொடி பயன்பாடு, சுருட்டு பிடித்தல் எல்லாம் முறையான கால இடைவெளியில் நாவலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

மலைவாழ் பளியர் மக்கள், விவசாயம் செய்யும் குடியானவர்கள், இராவுத்தர்கள் என்கிற முஸ்லிம் படையினர், ஏசு சபை பாதிரிகள், இடையர்கள், விஜயநகர அரசால் கொண்டுவரப்பட்ட தெலுங்கு பேசும் குடிகள் என பலதரப்பட்ட மக்களும் நாவலில் வந்துபோனாலும் பஞ்ச காலத்திலும் கூட யாரும் மல்லாட்ட (நிலக்கடலை) சாப்பிட்டார்கள், தக்காளி உருளைக்கிழங்கு சாப்பிட்டார்கள் என்று வரலாற்றுக்கு முரண்பட்ட தகவல்கள் ஏதும் ஆசிரியர் குறிப்பிடவில்லை என்பதைப் பார்க்கும்போது அவரது வரலாற்று ஞானத்தின் மீதான grip சிறப்பு.

விஷ்ணுபுரம் என்கிற பண்டைய வரலாற்று நாவலில் ஜெயமோகனார் கதைமாந்தர்கள் மிளகாய் பயன்படுத்தியதாக எழுதியதும் பின்னர் அதை அவரது சீடர்கள் மகாபாரத்ததில் வரும் காந்தாரி மிளகாய் என்று முட்டுக் கொடுத்ததும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. மெக்சிகோவில் தோன்றிய மிளகாய் உலகம் முழுக்க பரவிய வரலாறும், வடகிழக்கு மாநிலங்களில் வளரும் ‘பூத் ஜோலோக்கியா’ மிளகாய்க்கும் காந்தாரி மிளகாய் எனப்படும் சீனி மிளகாய்க்கும் விஷ்ணுபுரம் கதைக்கும் உள்ள தொடர்பை அவரது தற்கொலைப்படையினரால் மட்டுமே நம்ப முடியும்.

சுளுந்தீ விமர்சனம் என்ற பெயரில் தனியாக கிண்டிலில் ஒரு புத்தகமே வெளியிடலாம். அந்த அளவுக்கு எழுத வேண்டியது இருக்கிறது. பன்றிமலைச் சித்தர் குறித்தும் நிறைய சொல்ல வேண்டிவரும். அதனால் இத்துடன் நிறுத்திக்கொள்ளப்படுகிறது.

இன்றைய தமிழக சூழலில் தொழிலாளியாக இருந்து முதலாளி ஆகத் துடிப்பவனுக்கான புத்திமதிக் குறிப்பு எண் 17:

1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.

தொழிலாளி வர்க்கம், ஏழைப் பாட்டாளி, உழைக்கும் எளிய மாந்தர் என்று சமூக ஊடகங்களிலும், அச்சு ஊடகங்களிலும் வரும் பிம்பங்களை முற்றிலுமாகப் புறக்கணி. அதில் வரும் கதை மாந்தர் போல் யதார்த்த உலகில் ஒரு தொழிலாளியும் கிடையாது.

அட்வான்ஸ் பணம் ஒருபோதும் கொடுக்காதே. வேலை ஆரம்பிக்கும் முன்னரே கூலியைப் பேசிவிடு; ஆனால் வேலை முடிந்த பிறகே கூலியைக் கொடு. வேலை தொடர்ந்து இருக்குமானால் கொஞ்சமாவது கூலிப்பணத்தை நிறுத்தி வை. மொத்தமாக முடித்த பின்னரே கணக்கை முடி.

வேலையை விட்டு நிற்கலாம் என்று இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் உடனே ஏற்றுக்கொண்டு அவர்களை வேலையை விட்டு அனுப்பிவிடு. ‘உனக்கு இங்க என்னப்பா குறைச்சல்’ என்று கேட்டு யாரையும் தொங்காதே. அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

சாராயத்துக்கு தினசரி எவ்வளவு என்று வேலை ஆரம்பிக்கும் முன்னரே கேட்டுக்கொள். வேலை ஒழுங்காக நடக்க வேண்டுமானால் ஒருபோதும் தொழிலாளியுடன் அமர்ந்து உணவு உண்ணாதே, மது அருந்தாதே. இதை நவீன தீண்டாமை என்று 1970-களில் தொழிலாளியாக இருந்தவர்கள் சொல்வார்கள். அதைக் கண்டுகொள்ளாதே. சொல்பவனுக்கு என்ன, பணம் போட்டவன் நீயல்லவா?

நானும் ஒருகாலத்தில் தொழிலாளியாக இருந்து ஆரம்பித்தவன்தான் என்று புரட்சி பேசிக்கொண்டு தொழிலாளர்களுடன் தோளில் கைபோட்டு பழகாதே. ஈவு, இரக்கம், தயவு, தாட்சண்யம், கரிசனம் எல்லாம் வாயளவு வார்த்தைகளாக மட்டுமே இருக்கட்டும். அவர்களிடம் அளந்து பேசாத வார்த்தையும், எண்ணிக் கொடுக்காத பணமும் உன்னை தெருவுக்குக் கொண்டுவந்துவிடும்.

சூப்பர்வைசர், மேலாளர் என ஊழியர் அடுக்குமுறை இருந்தால் வேலை வழங்குவதில் அதை அப்படியே பின்பற்று. நேரடியாகத் தொழிலாளர்களுடன் உரையாடாதே.

தொழிலாளர்கள் கேட்டதும் பணம் கொடுக்காதே. இரண்டு மூன்று முறையாவது நடக்க விடு. அவர்களது கூலியைவிட ஐந்து மடங்குக்கு அதிகமான தொகையாக இருந்தால் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக தொழிலாளர்களை நேரில் வைத்துக் கொடு. பணத்தை எண்ணிப்பார்த்து வாங்கிடச் சொல்; அப்படியே வாங்கி பையில் வைத்துச் செல்ல ஒருபோதும் அனுமதியாதே.

Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

வேலையை விட்டுச்சென்ற பழைய தொழிலாளி திரும்ப வந்தால் பழைய கூலியே கொடு. சீனியாரிட்டி, புண்ணாக்கு, புடலங்காய் என்று அன்றைய தினம் பணியில் இருப்பவர்களை உதாசீனப்படுத்தாதே.

மேற்கண்டவற்றைப் பின்பற்றும் உன்னைக் கல்நெஞ்சக்காரன், உழைப்புறுஞ்சி, கார்ப்பரேட் கால்நக்கி என்று சில சீமான்களும், சீமாட்டிகளும் சொல்லக்கூடும். அதை அப்படியே புறந்தள்ளு. தொழிலாளியாக இருந்து முதலாளியாக ஆன உனக்கு இந்த படிப்பினைகளைக் கற்றுத் தந்ததே அந்த தொழிலாளர்கள்தானே.

அடுத்தவன் தாடியில் தீப்பிடித்தால் உன்னுடைய தாடியை முதலில் தண்ணீரில் நனைத்துக்கொள் என்று ஒரு கிரேக்க சொலவடை உண்டு. அக்கம்பக்கத்தில் தொழிலாளர்கள் எப்படியெல்லாம் முதலாளியைக் காலி பண்ணினார்கள் என்று காற்றில் வரும் கதைகளைக் கவனமாகக் கேட்டு அசைபோட்டுக்கொண்டே இரு.

Say again: 1970-களில் தொழிலாளியாக இருந்ததற்காக இன்னும் உழைப்பாளி பாட்டாளி என்று அவர்கள் அனத்திக் கொண்டிருக்கும் கோட்பாடுகளை நம்பாதே.

‘அடேய் உழைப்புறுஞ்சியே’ என்று யாராவது எகிறிக்கொண்டு வந்தால் பதில் சொல்லாமல் அடக்கி வாசி. ‘அப்படியே மூடிக்கிட்டு போயிடு, நானெல்லாம் ஒருகாலத்துல பேசாத பொதுவுடைமை டயலாக்கா?’ என்று எதையும் புரிய வைக்க முயற்சிக்காதே. சீறுபவன் எல்லாம் ஒரு பெட்டிக்கடை கூட வைத்து நடத்தியிருக்க மாட்டான்.

‘குறைஞ்ச கூலிக்கு இந்திக்கார லேபர் வந்தப்புறம் இங்க இருக்கற லேபர யாருமே மதிக்கறதில்ல, வேலை குடுக்கறதில்ல’ என்று சொல்பவனிடம் ஒருபோதும் உரையாடாதே. தமிழகத்தில் இருக்கற லேபர் என்ன இலட்சணத்தில் வேலை செய்கிறார்கள், ஏன் இந்திக்கார்ர்கள் இங்கு வருகிறார்கள் என்று அவர்களுக்குக் கடைசிவரைக்கும் புரியாது.

தமிழ்நாட்டில் 1970-களில் இருந்த தொழிலாளர் வர்க்கமும், 2020-இல் இருக்கும் தொழிலாளர் வர்க்கமும் முற்றிலும் வேறு என்பதை உணர். ஏழைப் பாட்டாளி என்று கதைகள், நாவல்கள் எழுதுபவர்கள் எல்லாம் 50 வயதைத் தாண்டியவர்கள் என்பதை நினைவில் கொள்.

Say again: அன்பு, ஈகை என்றெல்லாம் நெஞ்சை நக்கும் பேஸ்புக், வாட்சப் பதிவுகளைப் படித்து அதை செயல்படுத்திப் பார்க்காதே.

பொன்னி – நாவல் – விமர்சனம்

பொன்னி நாவலைப் படித்துக்கொண்டு இந்தபோது உத்திரபிரதேசத்தில் தங்க வயல் கண்டுபிடிக்கப்பட்ட போலி செய்தி நாலாபுறமும் ஓடிக்கொண்டிருந்தது. வெட்டாட்டம் நாவலைவிட விறுவிறுவென்ற நடையில் பல்வேறு காலகட்டங்களை இணைத்து தங்கத்தின் அழுக்கான, குரூர பின்னணியை ஷான் கருப்புசாமி அற்புதமாக எழுதியிருக்கிறார்.

சோழர்கள் காலத்திலேயே தங்கம் கிடைக்கும் கோலார் பகுதியைக் காப்பதற்காக அமைக்கப்பட்ட இரணிய சேனை, அந்தத் தேரையர் இன மக்களின் வாழ்க்கைமுறை, ஆங்கிலேயர்கள் வருகை, சுரங்க அமைப்புகள், அதிலுள்ள ஆபத்துகள், தங்க வேட்டைக்காரர்கள், இங்கிருந்து அதிகாரப்பூர்வமாகவும் திருடியும் இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தங்கம் என பல காலகட்டங்களில் நாவல் செல்கிறது.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒரே நேரத்தில் கருவூலத்தில் இருந்த தங்கக் கட்டிகள் திருடப்பட்டது, அதைத் திருடியவர்களை சிஐஏ துரத்துவது, அதன் பின்னணியில் தேரையர் வம்சாவழியில் வந்த பலர் சமகாலத்தில் இருப்பது போன்ற பல தனித்தனி நிகழ்வுகளை ஒவ்வொன்றாக முடிச்சுப் போட்டு படிப்பவர்களால் ஊகிக்க முடியாத, ஊகிப்பதற்கு நேரமே தராத சுவாரசியத்தில் நாவல் நகர்கிறது.

தேரையர் வழியில் வந்த செல்லம்மா என்ற பெண் புதிய தங்க வயலை கண்டுபிடிக்க வந்த ஜேம்ஸ் மார்ட்டின் மீது ஒரு இனம் புரியாத காதலுடன் இருந்து ஒரு கட்டத்தில் அவருடைய இரண்டாவது மனைவியாகி இங்கிலாந்து சென்று விடுவது, அவரது பேத்தியாக வரும் பொன்னி சுரங்க நிறுவன அதிபராக கோலார் வருவது, அவர்களைச் சுற்றி விளையாடும் அரசியல் சதுரங்கம் என பல இருந்தாலும் செல்லம்மாவின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்தது.

செல்லம்மாவுக்கு அப்படி ஒரு தர்க்க ரீதியான சிந்தனை வரவும், அச்சமில்லாத போக்குக்கும் அவள் சிறுவயதில் தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேய பெண்மணி ஒருவரிடம் கற்ற கல்வியும், அதைத் தொடர்ந்து அவளது வாசிப்பும் காரணமாக இருந்திருக்கிறது. வீரம், வாழ்வியல் முறை, சமூகக் கட்டுப்பாட்டு என்ற பெயரில் ஓர் இனம் காலங்காலமாக தங்களைத் தாங்களே அடிமையாக வைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர்ந்துகொள்ளவே முடியவில்லை. அதில் பலர் படித்து சிவில் சர்வீஸ் வரைக்கும் போனாலும் அவர்கள் தலைமைக்குக் கட்டுப்பட்டு இனக்குழுவின் கடமையைச் செய்வதைப் பெருமையாகக் கருதி பக்கவாட்டில் சிந்திக்கவே இல்லை என்பதையும் நாவல் பதிவு செய்கிறது.

செல்லம்மாவின் அழகையும், அவளது பேத்தி பொன்னியின் அழகையும் விவரிக்கையில் நாவலாசிரியர் ஷான் கருப்புசாமி வெறும் சைக்கிளை மட்டும் உருட்டிக்கொண்டே இருக்கும் ஆசாமி மட்டுமல்லர் என்பதும் தெளிவாகிறது!

The Last Ship என்று அமேசான் பிரைமில் ஒரு சீரியல் இருக்கிறது. மொத்தம் ஐந்து சீசன்கள். ஒரு வைரஸ் கிருமியின் ஆரம்ப மூலத்தைத் தேட அண்டார்டிகா செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு அந்தத் திட்டக் காலம் முழுவதும் ரேடியோ சைலன்ட் ஆக இருக்கும்படி உத்தரவு. ஆறு மாதம் கழித்து திரும்ப வரும்போது வைரஸ் தாக்குதலில் உலகத்தில் பாதி அழிந்திருக்கிறது. அந்த வாக்சின் வேண்டி இந்தக் கப்பலை பல நாட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் துரத்த, அவர்களது நாட்டின் உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளைத் தாண்டி தப்பித்து வாக்சின் தயாரித்து உலகம் முழுவதும் அனுப்பும்போது ஏற்படும் பிரச்சினைகள் காரணமாக ஒவ்வொரு நாடாக சண்டை போட்டுக்கொண்டே செல்கிறார்கள்.

போர்க் கப்பல் வாழ்க்கைமுறை, கடற்போர் உத்திகள், மின்னணு கருவிகள் துணையில்லாத பழங்கால கடற்சண்டைகள், நீர்மூழ்கி கப்பல்கள், ரேடார், சோனார், ரேடியோ தொடர்புகள், ஹாம் ரேடியோ, அரசியல் விளையாட்டுகள், அணியினர் பலரது எதிர்பாராத மரணங்கள், கன்னி வெடிகள், தாக்குதல் உத்திகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் பூச்சிகள், போதைப்பொருட்கள், கறுப்புச்சந்தை, நாடுபிடிக்கும் போராட்டங்கள், உள்நாட்டுப் போர்கள், கணிணி வைரஸ்கள், நீண்டகாலம் கடலில் போர்க்கப்பலில் பணிபுரிவதால் அவர்களது குடும்ப உறவில் ஏற்படும் பிரச்சினைகள் என இன்னும் ஏராளமான விசயங்களை அவ்வளவு விவரமாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். (அதில் வரும் டெக்ஸ், டெய்லர் வுல்ஃப், அவரது காதலி அஸிமா கேன்டி பாத்திரங்களின் வெறித்தனமான இரசிகனாகியிருந்தேன்).

அத்தகைய நீண்ட சீரியல் எடுப்பதற்குத் தகுதியான நாவல் பொன்னி; அத்தனை தனித்தனி plot-கள் நாவலில் வருகிறது. வெட்டாட்டம் நாவலைப் படமாக எடுத்த மாதிரி இதை ஒரு இரண்டரை மணிநேர படமாக எடுத்தால் அதில் சுவாரசியமே இருக்காது; திரைப்படங்களில் குறிப்பாக சுரங்கம் சார்ந்த காட்சிகளில் கேஜிஎஃப், கேங்ஸ் ஆஃப் வஸிர்பூர் போன்ற படங்களில் காட்டிய அளவுக்கே கொண்டு வர முடியும் என்று தோன்றுகிறது.

கோலாரைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் இதுவரைக்கும் சுமார் நாற்பது ஐம்பது முறைக்கும் மேல் சுற்றியிருக்கிறேன். கேஜிஎஃப்-இல் ஏதாவது ஒரு சுரங்கத்துக்குள் கொஞ்சூண்டு எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிட வேண்டும் என்ற ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. பலரிடம் கேட்டுப்பார்த்தும் இன்னும் நடக்கவில்லை. ஊட்டி கூடலூரில் இருக்கும் சில சுரங்கங்களில் ஏதாவது ஒன்றிலாவது இறங்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையும் இன்னும் நிறைவேறவில்லை.

ஏதாவது ஒரு கைவிடப்பட்ட சுரங்கத்தை டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாற்றி அரசாங்கமே மக்களுக்கு சுற்றிக்காட்டி நாம் பயன்படுத்தும் தங்கம், இரும்பு, ஈயம், தாமிரம் என ஒவ்வொரு உலோகமும் எப்படி நம்மை வந்தடைகிறது என்பதைப் புரிய வைக்கலாம்.

அற்புதமான நாவலாக இருந்தாலும் சில இடங்களில் வரும் வரிகளை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பதவிகளுக்கு வருபவர்கள், குறிப்பாக அதிலேயும் முதல் மதிப்பெண் எடுப்பவர்கள் அதிபயங்கரமான திறமைசாலிகள் என்று நாவலாசிரியர் இன்னும் நம்புகிறார். பள்ளி, கல்லூரிகளைப் போலவே போட்டித் தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் மாணாக்கார்கள் வாழ்க்கை ஓட்டத்தில் அந்தந்த பதவிகளின் சராசரி குமாஸ்தாவாகி காணாமல் போய்விடுகின்றனர் என்பதை அவர் உணரவில்லை. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் ஐஏஎஸ் என்ற ஒரே ஒரு தேவையில்லாத பதவிதான் இன்று இந்தியாவைப் பீடித்திருக்கும் மிகப்பெரிய நிர்வாக ரீதியிலான தரித்திரம் என்று சொன்னால் உன்னால் ஐஏஎஸ் ஆக முடியாத கடுப்பில் பேசுகிறாய் என்று எளிதாக கடந்து போய்விடுவார்கள். அப்துல் கலாம் ஐயா ஒரு அணு விஞ்ஞானி என்று சொன்னால் நம்புவது மாதிரி ஐஏஎஸ் என்றால் திறமை என்று நம்பிக்கொள்ள வேண்டியதுதான்!!

பொன்னி அமெரிக்க உளவுத்துறையிடம் சரண்டைந்து பெங்களூருவின் யெலஹங்கா விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க கடற்படையின் C 130 ஹெர்குலிஸ் விமானத்தில் நேவி சீல் வீரர்கள் பாதுகாப்புடன் நாடுகடத்தபபடுகிறாள். நடுவானத்தில் பொன்னி, ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த விஷப் பாம்புகளை எடுத்து வீசுவது, அதற்கு பயந்த நேவி சீல் வீரர்கள் பாராசூட் ramp-ஐத் திறந்துவிட்டால் பாம்பு போய்விடும் என்று நம்பி திறக்க, அதில் பொன்னி குதித்துத் தப்பித்து விடுவது என்கிற கதையமைப்பை எல்லாம் பார்க்கும்போது, நாவலைப் படித்துப் பார்த்து புத்தகம் அச்சுக்குப் போவதற்கு முன்னால் விமர்சனம் கொடுத்த நாவலாசிரியரின் நண்பர்களை ‘ஏய்யா, நீங்களாவது அவருக்கு எடுத்துச் சொல்லக்கூடாதா?’ மண்டையிலேயே கொட்ட வேண்டும் போலிருக்கிறது.

தங்கம் என்கிற உலோகத்தால் மனிதனுக்கு எந்த பலனும் இல்லை. சக மனிதர்கள், சமூகம் மீது இருக்கும் அவநம்பிக்கையால் ஒவ்வொருவரும் தமது பாதுகாப்புக்காக வைத்துக்கொள்வது மட்டுமே அதன் பயன். மற்றபடி அதனால் பொருளாதார ரீதியாக இழப்பு மட்டுமே. தங்கம் மட்டுமல்ல, விலை உயர்ந்த பல தனிமங்களும் அதற்காக சேகரிக்கப்படுபவையே. நாகப்பாம்பு மாணிக்கக்கல்லை அமாவசை அன்று கக்கி, வழிபட்டுவிட்டு விழுங்கிவிடும் என்பதை நம்பி இன்னும் நாகமாணிக்கம் தேடி அலையும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரி நல்ல நல்ல நாவல்களை இளைஞர்கள் எழுதும்போது “ஆமாமா, லைட்டா சுஜாதா பாணி, லைட்டா இராஜேஷ்குமார் பாணில 300 பக்கத்துக்கு எதையாச்சும் எழுதிடறதுதானே இன்னிக்கு ட்ரெண்டிங். ஆனா இதெல்லாம் இலக்கியத்துல வராது. இப்படித்தான் போஜ்பூரி லாங்வேஜ்ல கூட ஒரு நாவல் வந்துது, அதனோட தழுவல்தான் இது. இன்னும் அவருக்கு வாசிப்பானுபவம் பத்தல, அந்த மொழிநடை இருக்கு பாத்தீங்களா, அதுல தெரியுதே” என்று எதையாவது சொல்லி பொச்செரிச்சல் அடைபவர்களே தமிழ் எழுத்துலகில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

நாவலில் கடினமான தமிழ் வார்த்தைகளோ, முற்றுப்புள்ளியே இல்லாமல் அமைக்கப்பட்ட பத்திகளோ இல்லை. நல்ல எழுத்துநடையில் ஷான் விறுவிறுப்பைக் குறையவிடாமல் சென்றிருக்கிறார்.

கிட்டத்தட்ட நூறாண்டு காலம் நாவலில் பயணிக்கும் சிலப்பதிகாரம் புத்தகம் ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த மோர்ஸ் குறியீட்டால் புற ஊதாக் கதிர்களை வைத்துக் de-code புதிய தங்கச் சுரங்கத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். மோர்ஸ் குறியீட்டுக்கு அடிக்குறிப்பு எழுதிய நாவலாசிரியர், ஒவ்வொரு அத்தியாயத்திலும் கல்வெட்டு வரிகள் சிலவற்றைக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கான விளக்கங்கள் எங்கேயும் தரப்படவில்லை என்பது மட்டுமே ஒரு வருத்தம்.

கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலம்

கோயமுத்தூரில் கட்டப்பட்டுள்ள அதிசய இரண்டடுக்குப் பாலத்தைப் பலரும் பரிகசித்து வருகின்றனர். ஆனால் அதன் பின்னால் உள்ள அறிவியல் உண்மையையும், பண்டைய உரோமானியப் பேரரசுகளுக்கும் உள்ள தொடர்பையும் குறித்த இரகசியத் தகவல்களை வெளியிடுவது இப்போது அவசியமாகிறது.

இந்தியாவில் உள்ள இரயில்வே பிராட்கேஜ் தண்டவாளங்கள் ஐந்தரை அடி (1676 மிமீ) அகலமுடையவை. கிட்டத்தட்ட எல்லா தண்டவாளங்களும் இன்று பிராட்கேஜ் ஆகிவிட்டன.

ஸ்டேண்டர்டு கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் (1435 மிமீ) இடைவெளி கொண்டவை. டில்லி, பெங்களூர், சென்னை மெட்ரோ போன்றவை, டிராம் இரயில்கள் எல்லாம் ஸ்டேண்டர்டு கேஜ் அகலமுடைய தண்டவாளத்தில்தான் இயங்குகின்றன. இந்தியாவின் முதல் இருப்புப்பாதை ஸ்டேண்டர்டு கேஜ் அகலத்தில்தான் அமைக்கப்பட்டது.

அதை அமைத்தவர்கள் ஆங்கிலேயேப் பொறியாளர்கள். தளவாடங்கள், இரயில் பெட்டிகள் அங்கிருந்தே எல்லா இடங்களுக்கும் சென்றதால் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பிராட்கேஜ் என்பது 4 அடி 8.5 அங்குலம் அல்லது சற்றுக் கூடுதலாக மட்டுமே அமைந்துவிட்டது.
அமெரிக்காவிலும் முதல் இரயில்வழித்தடங்களை அமைத்தவர்கள் ஆங்கியேயர்களே என்பதால் அங்கும் ஸ்டாண்டர்ட் கேஜ் என்பது அதே அளவுதான்.

ஏன் ஆங்கிலேயப் பொறியாளர்கள் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலமாக வடிவமைத்தனர்? இன்னும் பெரிதாக எட்டு அடி, பத்து அடி அகலத்தில் அமைத்திருக்கக்கூடாதா?

ஆரம்பத்தில் டிராம் தண்டவாளங்களை 4 அடி 8.5 அங்குலத்தில் வடிவமைத்த பொறியாளர்கள் அதே தளவாடங்களைப் பயன்படுத்தி நெடுந்தூர இருப்புப்பாதைகளையும் வடிவமைத்தனர்.
ஏனெனில் அதைவிட அகலமான தண்டவாளங்கள் போட்டால் அதன் பெட்டிகளை சாலைகளில் எடுத்துவர முடியாது.

சாலைகளில் இரயில் பெட்டிகளை எடுத்துவரும் சரக்கு வண்டிகளிலும் இரு சக்கரங்களுக்கு இடையேயான இடைவெளியும் 4 அடி 8.5 அங்குலமே இருந்தது.

காரணம், இங்கிலாந்து உட்பட அந்தக் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சாலைகளை அமைத்தவர்கள் உரோமானிய பேரரசர்கள். மக்கள் குதிரைமீது அமர்ந்து மட்டுமே போருக்கும், வியாபாரத்துக்கும் பயணப்பட்ட காலங்களில் அவர்கள்தான் முதன்முதலில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்ட இரதங்களைப் போருக்கும், சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தினர்.

அந்த உரோமானிய பேரரசர்களின் இரதங்களில் இரண்டு சக்கரத்துக்கு இடையே இருந்த அகலம் 4 அடி 8.5 அங்குலம். இரண்டு போர்க்குதிரைகளை ஒரு இரதததில் பூட்டும்போது தேவைபட்ட இடைவெளிதான் இது. அதாவது the width of two horses’ asses. என்பதே.

இன்று விண்வெளிக்கு மனிதர்களை எடுத்துச் சென்றுவரும் விண்வெளி ஓடங்கள்தான் உலகின் அதிநவீன போக்குவரத்துக் கருவி. அதில் நடுவில் உள்ள மைய எரிபொருள் தொட்டியுடன் solid rocket booster எனப்படும் துணை எரிபொருள் தொட்டிகள் ஏன் தனியாக இணைக்கப்படுகின்றன? ஏன் அதற்கென மிக விரிவான எலக்ரிகல், எலக்ட்ரானிக் தொடுப்புகள் உண்டாக்க வேண்டியிருக்கிறது?

Solid rocket booster-ஐயும், மைய எரிபொருள் தொட்டியையும் தயாரிப்புக் கூடத்திலிருந்து பெரிய சரக்கு லாரிகளில்தான் கொண்டுவர வேண்டும். எரிபொருள் நிரப்பப்பட்ட பூஸ்டர்கள் விண்வெளி ஓட தயாரிப்பு மையத்திலிருந்து ஏவுதளத்திற்கு இரயில் தண்டவாளங்கள் வழியாகத்தான் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்குத் தேவையான இதர கருவிகள் அனைத்தும் இரயில் பெட்டிகளில் வைத்தே எடுத்துச் செல்ல முடியும்.

உரோமானியப் பேரரசில் சக்கரங்களை இரதத்தில் பொருத்த இரண்டு குதிரைகளின் ass அகலத்தை அளந்து பார்த்துக்கொண்டிருந்த நபர்களுக்குத் தாங்கள் செய்தது எப்பேர்ப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் என்று தெரியாது.

இப்போது கோயமுத்தூர் பாலத்திற்கு வருவோம். பண்டைய உரோமானியப் பேரரசில் இருந்த இரண்டு குதிரைகளின் ass-தான் இன்று வடிவமைக்கப்படும் இரயில், கார், லாரிகளுக்கு ஆரம்ப மூலம் என்பது மாதிரி இந்த பாலத்திற்கும் இரண்டு ass-களின் அகலமே போதும் என்று படத்தில் உள்ள இரண்டு ass-கள் முடிவு செய்ததாலேயே பாலம் அவ்வளவு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வருகிறது.

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவத்தைச் செய்கையில் சின்ன மிஸ்டேக் ஆகிவிட்டதால் What an ass! என்று சொல்வதற்குப் பதிலாக Bloody assholes என்று சொல்லும்படி ஆகிவிட்டதாம்.

நம்முடைய முன்னோர்களின் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் காரணங்கள் கொட்டிக் கிடக்கிறது என்று சொல்வார்கள். இதைப் படித்த பின்னர் எந்த asshole அப்படி சொன்னது என்று கேட்கக்கூடாது.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஐஏஎஸ் என்ற பதவியும் தேவையே இல்லாமல் சும்மா அலங்காரத்துக்குத் தொங்கிக் கொண்டிருப்பவையா?

ஆளுநர் என்ற ஒரு பதவி எதற்காக இருக்கிறது என்று யாருக்குமே தெரியாத மாதிரி சமகாலத்துக்குப் பொருந்தாத, தேவையே இல்லாத, outdated பதவிகளில் ஐஏஎஸ் என்ற பதவியும் ஒன்று. ஆங்கிலேயர் காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எந்த மாற்றத்திற்கும் ஆளாகாமல் அப்படியே இருப்பதால் இன்றைய காலகட்டத்திற்கு relevance இல்லாத ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது.

என்பதுகள் வரைக்கும் படித்த, பல்துறை ஞானம் நிறைந்த இளைஞர்கள் நிர்வாகத்திற்கு கிடைப்பது அரிதாக இருந்தது. பின்னர் பல்கலைக்கழங்கள் பல வந்த பிறகு, இட ஒதுக்கீட்டு முறை புகுத்தப்பட்ட பிறகு சமுதாயத்தின் ஒவ்வொரு அடுக்கிலிருந்தும், வெவ்வேறு பின்புலங்களிலிருந்து இளைஞர்கள் நிர்வாகத்துக்கு வர ஆரம்பித்தனர்.

தொன்னூறுகளில் சந்தை திறந்துவிடப்பட்ட போதும், 2000-க்கு பிறகான ஐ.டி. புரட்சிக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று உட்கார்ந்திருக்கிறது இந்த நிர்வாக அமைப்பு முறை.

ஒரு தேர்வில் 80 மதிப்பெண் வாங்குபவருக்கும், 85 மதிப்பெண் வாங்குபவருக்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடும் என்று நம்புகிறீர்கள்? ஏற்றுமதி வியாபாரம் செய்பவர்களுக்குத் தெரியும். ஒரு நபருடைய கடின உழைப்பு, நீதி, நேர்மை, திட்டமிடல், நேரந்தவறாமை லஜக், மொஜக், பஜக் என்று எத்தனை வார்த்தைகளில் எழுதினாலும் அவை 49%-உம், அதிர்ஷ்டம் என்பது 51%-உம் உண்டு. குடிமைப் பணித் தேர்வுகளில் வெற்றிபெறுவதிலும் 49% உழைப்பு, 51% அதிர்ஷ்டம் என்ற லாஜிக்-தான் வேலை செய்கிறது.

ஐந்து நேர்முகத்தேர்வுக்குச் சென்று தோற்றவர்களும் உண்டு. முதல் தேர்விலேயே வெற்றிபெற்று ஐஏஎஸ் ஆனவர்களும் உண்டு. ஒரே ஒரு கேள்வி சரியாக உட்கார்ந்த காரணத்தினால் ஒருவர் பத்து இருபது மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்று ஐஏஎஸ் ஆகிறார் என்றால், காலத்திற்கும் அவர்தான் திறமையின் மறுவடிவம் என்று அத்தனை துறைகளுக்குமான முதன்மை அதிகாரியாகப் போடுவதுதான் நமது நிர்வாகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனம். (இந்த இடத்தில், அந்த ஒரு கேள்விக்கு சரியாக பதில் எழுத அவர் போட்ட உழைப்பு எவ்வளவு தெரியுமா என்று முட்டுக்கொடுப்பது, தான் எவ்வளவு பாசிடிவ் திங்கிங் உள்ள நபர் என்று காட்டிக்கொள்ளத்தானே அன்றி வேறில்லை).

மொத்தமுள்ள 24 பணிகளில் ஐஏஎஸ் தவிர மீதமுள்ள அனைத்தும் Speciality வகையைச் சேர்ந்தவை. காவல்துறை அதிகாரியாக, தபால்துறை அதிகாரியாக, etc என அதில் சேருபவர்கள் கடைசிவரைக்கும் அதிலேயே இருக்கின்றனர். அதனால் அந்தத் துறையின் ஆழமான ஞானத்துடன் விற்பன்னராகின்றனர்.

எந்தத் தொழிலாக இருந்தாலும் சரி – படிப்பு/பயிற்சிக் காலம் முடிந்த பிறகு – வாரத்துக்கு ஒரு புதிய விஷயம்தான் கற்க முடியும். நான் தினசரி புதுப்புது விசயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று சும்மா கதைவிடுவது வேறு. பத்து வருடங்களில் விடுமுறை எல்லாம் போகப் பார்த்தால் (10×50=500) ஒரு நபர் 500 விஷயங்களைக் கற்றிருக்க முடியும். அவர்கள்தான் ஒரு துறையின் expert category. 15-20 வருடங்களில் அவர்கள் veteran வகையினர். சும்மா சீட்டைத் தேய்த்திருந்தாலும் கூட அந்தந்த்த் துறை சார்ந்த குறைந்தபட்ச ஞானம் வந்திருக்கும்.

ஐஏஎஸ்-ஐப் பொறுத்த வரையில் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வெவ்வேறு துறைகளுக்கு மாறிவிடுவதால் இந்தப் பிரிவினர் எதிலுமே எக்ஸ்பர்ட் ஆவதில்லை. Career beaureucrat என்று அழைக்கப்படும் குடிமைப் பணி அதிகாரிகளில் ஐஏஎஸ்-கள் Cocktail beaureucrat வகையினர். அதாவது எல்லாம் தெரியும் ஆனால் எதுவும் முழுமையாகவோ ஆழமாகவோ தெரியாது வகையறா.

தமிழில் இவர்களைப் புரோட்டோகால் புகுத்திகள் என்று அழைக்கலாம். புரோட்டோகால் என்பதைத் தாண்டி வேறு உலகமே கிடையாது. மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று பேட்டி கொடுத்தாலும் மக்களுக்கும் இவர்களுக்கும் சுமார் பத்து மட்டங்களில் இடைவெளி பராமரிக்கப்படும். Feedback mechanism என்பது குடிமைப்பணி அதிகாரிகளுக்குக் குறிப்பாக ஐஏஎஸ் ஆபிசர்களுக்குப் பிடிக்காத ஒன்று.

சக அதிகாரிகளின் friendly comment-ஐக்கூட offensive எடுத்துக்கொள்ளுமளவுக்கு ‘உங்கள மாதிரி திறமையான ஆபிசர் இன்னிக்கு வரைக்கும் இங்க வந்ததே இல்ல சார்’ என்று அலுவலக சிஸ்டம் அவர்களுக்கு வெற்று கெளரவத்தையும், கொஞ்சம் கொஞ்சமாக அகங்காரத்தையும் புகுத்தி விடுகிறது. அப்படி ஒரு சூழலில் இருந்து பழகியவர்களால் கீழே உள்ள அதிகாரிகளோ பொதுமக்களோ ஏதாவது சொல்லிவிட்டால் தாங்கமுடியாத ஈகோ பிரச்சினை ஆகிவிடுகிறது.

இதற்குக் காரணம் முசெளரி, டேராடூன், நாக்பூர், ஐதராபாத் என அந்தந்த சர்வீஸின் பயிற்சிக் காலத்தில் Officer Like Qualities (OLQ) என்று சொல்லித் தரப்படுபவைகளை 99% அதிகாரிகள் கேடருக்கு வந்தபிறகு மறுசீராய்வு செய்வதில்லை. அதை மனப்பூர்வமாக நம்பி தங்களை ஒரு புதிய species ஆக மனதுக்குள் கற்பிதம் செய்து அதிலேயே இருந்துவிடுகின்றனர். பல்வேறு வகையான சாதி, பொருளாதார, அரசியல் பின்புலங்கள் உள்ள, ஏகப்பட்ட யூனியன் இரவுடித்தனத்தைக் கொண்ட Subordinate ஊழியர்கள் பட்டாளத்தை நிர்வகிக்க கடுமையான தொணியும், சற்று அதிகாரத் தோரணையும் அகங்காரப் பார்வையும் தேவைதான்.

ஆனால் அதிகப்படியான OLQ சின்ட்ரோம் காரணமாக மற்றவர்களிடம் இருந்து அந்நியப்படுத்திக் கொள்கிறோம் என்பதையும், சிறிய விசயங்களைக்கூட எவ்வளவு ஆணவத்துடனும், ஈகோவுடனும் அணுகுகின்றோம் என்பதையும் அறியாமலேயே இருந்துவிடுகின்றனர்.

பாடத்துக்குப் பத்து மதிப்பெண் அதிகமாக வாங்கிவிட்டதற்காக ஓய்வுபெறும் வரைக்கும் எல்லாத் துறைக்கும் உயரதிகாரியாக ஐஏஎஸ் ஆபிசர்தான் இருக்கவேண்டும் என்ற புரோட்டோகால் இன்றைய காலகட்டத்துக்கு outdated. மற்ற நாடுகளில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் அந்தத் துறையின் எக்ஸ்பர்ட் நபர்களை அழைப்பார்கள். நம் ஊரில்தான் போர்வெல்லில் குழந்தை விழுந்துவிட்டால் ஐஏஎஸ் அதிகாரியை அழைக்கிறார்கள். அவர் வந்து கை காட்டும் திசையில்தான் அரசு இயந்திரம் பயணிக்கும். அதிகாரம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டு துறை சார்ந்த அதிகாரிகளை வெறும் ஏவல் ஆட்களாகவே வைத்திருப்பதன் சாபக்கேடு இது.

மாநில காவல்துறை தலைமை அதிகாரியாக ஓர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் கீழே இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான team morale இருக்கும்? ”இந்தாளுக்கு Policing பத்தி ஒரு எழவும் தெரியாது, பத்து பேர்கிட்ட தனித்தனியா ஓப்பீனியன் கேட்டுட்டு ஒரு முடிவு பண்ணிக்குவாப்ல, மீட்டிங்ல அதே கேள்விய கேப்பாரு. இவர் ஏற்கனவே முடிவு பண்ணுனத யாராவது சொன்னா அதை சூப்பர் ஐடியான்னு சொல்லி implement பண்ணச் சொல்லுவாரு. அதே ஆதிகாலத்து மேனேஜ்மெண்ட் உத்தி. இவரால எதுவும் முடிவு பண்ண முடியலன்னா கீழ இருக்கற விவரம் தெரிஞ்ச ஆபிசரக் கூப்பிட்டு ‘துரைசிங்கம் இந்த புராஜக்ட்ல உங்களுக்கு முழு சுதந்திரம் தர்றேன், சிறப்பா முடிச்சிட்டு வாங்க’னு சொல்லிடுவாப்ல. சும்மா தெண்டத்துக்கு சம்பளம் குடுத்து எங்கள மாதிரி அஞ்சாரு பேர அல்லைக்கை வேலைக்கு நிறுத்தியிருக்காங்க” என்று மகிழுந்து ஓட்டுநர் கூட சிரிப்பார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற species-இல் நிறைய sub species மற்றும் biotype-களும் உண்டு. அதில் நேர்மையான அதிகாரிகள் என்ற sub species வகையினர் மிகவும் notorious and naughty ஆவர். விளம்பர, புகழ் மோகிகள் என்பதெல்லாம் biotype மட்டுமே. நேர்மையாக இருக்க வேண்டும், ஏமாற்றக்கூடாது, பொய் பேசக்கூடாது, வார்த்தை தவறக்கூடாது என்பதெல்லாம் குழந்தையாக இருக்கும்போதிருந்தே நமக்கெல்லாம் கற்பிக்கப்படுபவைதான். இவர்தான் என் மனைவி என்று அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக இவர்தான் என் பத்தினி மனைவி என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? அவர் ரொம்ப நேர்மையான அதிகாரி என்றால் மற்ற அதிகாரியெல்லாம்??!!

இரண்டு ஆண்டுகள் மீன்வளத்துறை விற்பன்னர், மூன்று ஆண்டுகள் வேளாண்துறை விற்பன்னர், இரண்டு ஆண்டுகள் கதர் வாரிய விற்பன்னர், மூன்று ஆண்டுகள் கல்வியியல் துறைக்கு விற்பன்னர், மறுபடியும் இரண்டு ஆண்டுகள் சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவர் என்று ஒரு நபர் எப்படி எல்லா துறைகளுக்கும் விற்பன்னராக இருக்க முடியும்?

ஒவ்வொரு துறையிலும் ஐஏஎஸ் ஆபிசர்கள் நிர்வாக நடைமுறைகளைக் கண்காணிக்கும் அதிகாரியாகத்தானே இருக்கிறார்கள், கீழே டெக்னிக்கல் ஆட்கள் இருக்கிறார்களே என்று தோன்றலாம். ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை நடத்துபவரையும், ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி நடத்துபவரையும் மேல்மட்டத்தில் மாற்றிப் போட்டால் நிர்வாகம் எப்படி நடக்கும்? Cross functional changes என்ற எம்பிஏ வார்த்தை ஜாலங்கள் எல்லாம் ஒரே நிறுவனத்துக்குள் பேச வேண்டியவை. நூறு கோடி வியாபாரம் பண்ணும் வங்கிக் கிளைக்கு மேலாளராக இருப்பதும், சீட்டுக் கம்பெனி நிர்வாகியாக இருப்பதும் ஒன்றல்ல. இரண்டுமே பண நிர்வாகம் சார்ந்ததுதானே என்று பொதுமைப்படுத்த முடியாது/கூடாது.

உலகச்சந்தை நம் படுக்கையறை வரைக்கும் வந்துவிட்ட காலத்தில் இன்னமும் மாறாத விக்டோரியா மகாராணி காலத்து நிர்வாக முறையில் ஐஏஎஸ் என்பதுதான் முதலில் அகற்றப்பட வேண்டியது. இன்றைய தேவை ஒவ்வொரு துறைக்கும் ஆழமான அகலமான ஞானமுடைய நபர்கள்தான். அவர்களுக்கு நிர்வாகம் தெரியாது ஐஏஎஸ் ஆபிசர்தான் வழிகாட்ட வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. மாவட்ட ஆட்சியர் இல்லாமல் எப்படி நிர்வாகம் நடக்கும் என்று அபத்தமாக கேள்வி கேட்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் என்பவர் ஐஏஎஸ் அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை. புதிய நிர்வாக முறையைத் தேடினால்தானே கிடைக்கும். அப்படி ஒன்று வருவதற்கு இந்த அதிகாரிகள் குழாம் எப்போதுமே ஒப்புக்கொள்ளாது என்பதுதானே உண்மை.

நாங்க எவ்வளவு உழைக்கிறோம் தெரியுமா, எவ்வளவு பிரஷர் இருக்கு தெரியுமா, எவ்வளவு வேலைப்பளு இருக்குது தெரியுமா என்பது ஒவ்வொரு அரசு ஊழியரும் சொல்வதுதான். வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமலேயே தனியார் நிறுவனங்களில் எவ்வளவு உழைக்கிறார்கள் என்பது இவர்களுக்குத் தெரியவோ புரியவோ போவதில்லை. மாதத்தில் 15 நாட்கள் இந்தியா முழுவதும் இரவு விமானப் பயணங்களிலும், டேக்சியிலும் தூங்கியவாறேதான் தனியார் நிறுவன நடுமட்ட, உயர் மட்ட அதிகாரிகள் கழிக்கின்றனர். ஐந்து நட்சத்திர ஓட்டல் வாசம் என்றாலும் ஒருநாளும் நிம்மதியாகத் தூங்கிவிட முடியாத அழுத்தம் சந்தையில் புராடக்ட் விற்கும் ஒவ்வொரு நிறுவன ஊழியர்களுக்கும் உண்டு. இரண்டு வருடங்கள் இலாபம் காட்டவில்லையென்றால் வேலை போய்விடும் என்ற யதார்த்தமெல்லாம் மேல்மட்ட அரசு அதிகாரிகளுக்குப் புரியாது.

Peepli Live என்ற ஒரு படத்தில் ஓர் இளம் அதிகாரி ஒரு பிரச்சினையான சூழ்நிலையில் உடனடியாக முடிவெடுத்து எதையாவது செய்யத் துடிக்கையில் அவரது உயரதிகாரி எப்படி coach செய்கிறார் என்பதை அற்புதமாக அமைத்திருப்பார்கள். “இதெல்லாம் எதுக்கு நாம செஞ்சுகிட்டு, அந்த சான்மான்ட்டோ கம்பெனிக்காரன்கிட்ட குடுத்துடு, வா டீ சாப்பிடு” என்று சொல்லுவார். அதாவது எதற்குமே சுரணையில்லாத, மழுங்கிய உயிரினமாக காயடிப்பதுதான் அந்த coaching. பயிற்சி அதிகாரிகளுக்கு முசெளரி அகாடமியிலேயே இந்தப் படத்தைப் போட்டுக் காட்டுகிறார்களாம்!

Indian Forest Service என்று தனியாக ஒரு தேர்வில் உயிரியல் பின்புலமுடையவர்களை மூன்றாண்டுகள் பயிற்சி அளித்து வனத்துறை உயரதிகாரிகளாக இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். கேடருக்குச் சென்ற அதிகாரிகள் எப்படியாவது காக்கா பிடித்து சொந்த மாநிலத்துக்கு வந்து பாஸ்போர்ட் அதிகாரி, கவர்னர் குதிரைக்கு முடிவெட்டிவிடும் இலாகா இயக்குநர் என்று உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும் பொதுமக்கள் என்ன நினைப்பார்கள்? பாஸ்போர்ட் ஆபிசர் வேலைக்கு IFS ஆபிசர் எதற்கு? அப்புறம் ஸ்பெஷாலிட்டி என்பது எங்கிருந்து வரும்? கடைசிவரைக்கும் யெல்லோஸ்டோன் நேஷனல் பார்க் ஓநாய் கதைகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். குறைந்தபட்சம் இத்தகைய லோலாக்கு டோல் டப்பிமா போஸ்ட்டிங்குகளை அதிகாரிகளது பதவி உயர்வு சீனியாரிட்டியில் சேர்க்காமலாவது இருக்க வேண்டும். அப்படி நடக்க விட்டுவிடுவார்களா என்ன?

அரசு அதிகாரிகளாக வேலைக்குச் சேரும்போது எல்லோருமே மிகத் திறமையான நபர்கள்தான். நடுமட்டத்திலும், மேல்மட்டத்திலும் சேரும் அதிகாரிகளை வீணடித்து, மக்களிடம் இருந்து அப்புறப்படுத்தி, தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே வைத்திருப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்லைக்கை பட்டாளம். ஓட்டுநர், வீட்டு வேலைக்கு, அலுவலக வேலைக்கு என கிட்டத்தட்ட 10 பேர் சும்மாவே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சூழலில் எப்பேர்ப்பட்ட நபரும் அந்த அதிகார போதையில் மயங்கி சோம்பேறியாகிவிடுவர். ஆனால் அது அவர்களுக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது என்பதே பேரவலம்.

அதனால்தான் பிளாட்பார கடையில் இட்லி சாப்பிட்டுவிட்டு எளிமை குறித்து பேஸ்புக்கில் ஒரு பதிவு போட்டு ஆரம்பிக்கின்றனர். இது முற்றிய நிலையில் கவிதை எழுதி ஃபோலோயர்களை கும்மி எடுக்கின்றார்கள். சமத்துவம் மிகுந்த உரையாடல்கள் புழங்கும் சிவில் சமூகத்திலிருந்து ஆரம்பத்திலேயே இவர்கள் விலகி விடுவதால் “டேய் ங்கோத்தா, நீ ட்ரெயினிங்ல இருந்தது ரெண்டு வருசம், கேடருக்கு வந்து மூணு வருசம், அதுக்குள்ள என்ன மயிற கண்டுட்டன்னு மேனேஜ்மெண்ட் கிளாசெல்லாம் எடுக்கற?” என்பது போன்ற கமென்டுகளை யாரும் போடுவதில்லை. இவர்களும் அதை விரும்புவதில்லை. Excessive OLQ Syndrome-இன் பக்க விளைவுகளில் இதுவும் ஒன்று.

அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கார் டிரைவர் என்பதை முதலில் நிறுத்த வேண்டும். காவல்துறை, மருத்துவத்துறை, பேரிடர் மேலாண்மை போன்ற எமர்ஜென்சி தேவைகள் இருக்கும் துறைகள், மாற்றுத் திறனாளி அதிகாரிகள் தவிர மற்ற அனைவருக்கும் ஓட்டுநர் என்ற தனி ஊழியரை அகற்றுவதே அரசாங்க அதிகாரிகள் என்ற தனி வர்க்கத்தை ஜனநாயகப்படுத்துவதன் முதல் படி.

வீட்டிலிருந்து அழைத்துச் செல்வது முதல் இரவு கொண்டுவந்து இறக்கி விடப்படும்வரை அதிகாரி அப்படியே நாட்டைத் தூக்கி நிறுத்துவது குறித்துதான் யோசிக்கிறார் என்று முட்டு கொடுக்கக்கூடாது. இதே ஊரில் பன்னாட்டு நிறுவன ஊழியர்கள் தினசரி 200 கிலோமீட்டருக்கு குறைவில்லாமல் self driving-இல்தான் செல்கிறார்கள்.

ஆண்டுக்கு 500 கோடிக்கு வியாபாரம் செய்யும் கம்பெனிகளின் சிஈஓ-க்கள் கூட தானேதான் கார் ஓட்டுகிறார்கள். இந்தக் குறைந்தபட்ச ஃபிட்னெஸ் கூட இல்லாத அதிகாரிகளுக்கு அலுவலகப்பணி போதுமே, களப்பணி எதற்கு? அவர்கள் சொந்த செலவில் ஓட்டுநர் வைத்துக்கொண்டால் 15000 சம்பளம் கொடுப்பார்கள். ஆனால் அரசாங்கம் 50000 கொடுக்க வேண்டும். அப்போதாவது தங்களையும் தொழிலாளி வர்க்கம் என்று நினைத்துக்கொண்டு வறட்டு தொழிற்சங்கவாதம் பேசாமல் இருப்பார்கள்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை, சாலை வடிவமைப்பில் உள்ள பிரச்சினையில் ஆரம்பித்து கார் சர்வீஸ் சென்டர் அனுபவம், எங்காவது இடித்துவிட்டு மோட்டார் வாகன தீர்ப்பாயத்துக்குச் செல்லுதல், இத்தனைக்கும் இடையில் பணியாற்றி நாட்டை முன்னேற்றுதல் என்கிற first hand அனுபவம் அதிகாரிகளுக்கே தேவை. அப்போதாவது இந்த நாட்டில் பைக், காரில் சென்று வேலை செய்து மாத சம்பளம் வாங்குவது எவ்வளவு கேடுகெட்ட நரகமான வாழ்க்கையாக இருக்கிறது என்று புரியும்.

தினசரி கார் ஓட்டி அலுவலகம் செல்லும் ஒரு அதிகாரியாவது Fastag திட்டமிடல் குழுவில் இருந்திருந்தால் இத்தனை சொதப்பல்கள் நடக்குமா? எத்தனை இலட்சம் மக்களின் நேரத்தை வீணடித்து, பணத்தைக் காணாமல் போகச் செய்துவிட்டிருக்கிறார்கள்?

மேலைநாடுகளில் பொதுமக்கள் நடப்பதற்கு, சைக்கிள் ஓட்டுவதற்கு தனித்தனி நடைபாதைகள் இருப்பதைப் பார்த்துவிட்டு வந்து இங்கே ஸ்மார்ட் சிட்டி அமைத்து இருந்த பிளாட்பாரங்கள் மீதும் தார் ஊற்றுகிறார்கள். ஐயாயிரம் மாணாக்கர்கள் படிக்கும் கல்லூரி முன்னர் நடைபாதை கிடையாது. வாகனங்களுக்குள் புகுந்து ஓடி, வருடம் ஒருவராவது ஊனமாகிறார்கள். இதுதான் நமது வருங்கால மனிதவள ஆற்றலுக்கு நாம் செய்யும் தொண்டு. சாலை வடிவமைப்பதை அந்தந்த துறை அதிகாரிகளிடமாவது விட வேண்டும். டிரைவர் இல்லாமல் peak hour-களில் அதிகாரிகளே கார் ஓட்டினால்தானே இதெல்லாம் தெரியும்.

அந்த காலத்திலே பல்லக்கில் அமர்ந்து, யானைமீது அமர்ந்து நகர்வலம் செல்வது மாதிரி டிரைவர் வைத்து சைரன் பொறுத்திய கார்களில் செல்பவர்களுக்கு சாலைகளில் பைக்கில் செல்பவனது கஷ்டத்தையும், நடந்து செல்பவனது வாழ்வா சாவா மரணப் போராட்டத்தைப் பற்றியும் எப்படி புரியும்?

உணவகங்களிலும், நெரிசல் மிகுந்த சாலைகளிலும் நடுவில் நிறுத்தி வைத்துக்கொண்டு அரசு அதிகாரிகளின் கார் ஓட்டுநர்கள் செய்யும் இடையூறுகள் எத்தனை? அப்படி அவர்கள் செய்வதை சட்டையே செய்யாத அதிகாரிகளை என்னவென்று சொல்வது? நீதிபதிகளுக்கு டோல் கேட்டுகளில் தனி வழி வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றால் எந்த அளவுக்கு அதிகார மமதையில் ஊறிக் கிடக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியிருக்கிறது.

Secrecy broods corruption. நமது நிர்வாக சீர்திருத்தம் என்பது சிவில் சர்வீஸ் மற்றும் நீநிமன்ற மட்டங்களில் ஆரம்பிக்கப்பட வேண்டும். அவர்களது பணிகளில் வெளிப்படைத்தன்மையும், தேவையற்ற அடிமை முறையை ஊக்குவிக்கும் ஆங்கிலேயர் காலத்து அதிகார படிநிலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இன்றைய சூழலில் ஐஏஎஸ் என்ற பதவியும், அரசாங்கத்தில் கார் ஓட்டுநர் என்ற பணியிடமும் நீக்கப்பட வேண்டியவை. அரசாங்கம் என்பது மக்களுக்கானது என்ற உணர்வு மக்களிடம் வர வேண்டுமானால் சீர்திருத்தம் என்பது அதிகாரம் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதை rubbish என்று ஒதுக்கித் தள்ளுவதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன…

5 முதலாளிகளின் கதை – நூல் விமர்சனம்

5 முதலாளிகளின் கதை.
ஆசிரியர்: ஜோதிஜி.
கிண்டில் மின்னூல் பதிப்பு.

முதலாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பைக் கண்ட தொழிலாளி படிப்படியாக வளர்ந்து வந்ததே அத்தனை முதலாளிகளின் கதையும் என்றாலும் நாம் கடைசியில் காட்டப்படும் பிரமாண்ட பங்களா, சொகுசு காரை மட்டும் பார்த்துவிட்டு எந்த முயற்சியும் எடுக்காமலேயே இருந்துவிடுகிறோம்.

டாலர் நகரம் புத்தகத்தில் சொல்லாமல் விட்ட பல விசயங்களை ஜோதிஜி விரிவாகவே சொல்லியிருக்கிறார். முதலாளிகள் எப்படி வளர்கின்றனர், எப்படி தொழிலை விரிவுபடுத்துகின்றனர், எந்த இடத்தில் சறுக்குகின்றனர், அதில் மீட்சியடைவது அல்லது மொத்தமாக நொடித்துப்போவது எப்போது, பணம் தேவைக்கு அதிகமாக வந்தவுடன் அவர்களது நடத்தையில் ஏற்படும் மாறுதல்கள், அதனால் தொழிற்சாலை நிர்வாகத்தில் ஏற்படும் விளைவுகள் என கிட்டத்தட்ட அத்தனை கோணங்களையும் அவர் பணிபுரிந்து வந்த நிறுவனங்களின் முதலாளிகள், சக தொழிலாளர்கள் வாயிலாக அற்புதமாக பதிவு செய்திருக்கிறார்.

அதேநேரத்தில் ‘5 முதலாளிகளின் கதை’ சுயமுன்னேற்றப் புத்தக வகையும் அல்ல.

கண்ணும் கருத்துமாக ஒரு சின்ன யூனிட்டை ஒரு கம்பெனியாக மாற்றும்வரை நிர்வாகத்திறனின் அத்தனை உத்திகளையும் அனுபவத்தால் பயின்று செயல்படுத்தும் தொழில்முனைவர்கள் சறுக்குவது பெண்கள் விவகாரமும் மதுவும் என்றால் அதற்கு இணையாக புகழ் மயக்கமும் ஒருவரை அழித்தொழிக்கக் காரணமாக இருக்கிறது.

முதலாளிகளுக்கு பெண்கள் என்றாலே போகப்பொருள்தானே, அதிலும் அவர்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் என்றாலே விலையில்லா மாது என்ற எண்ணம்தானே அவர்களுக்கு என்ற வறட்டுப் பெண்ணியம் இப்போது பேச வேண்டாம். பணிபுரியும் இடங்களில் தங்களுக்குத் தேவையானதை எளிதாக சாதித்துக்கொள்ள, மேலே வளர, இன்னும் சில பல மறைமுக ஆதாயங்களுக்காக மட்டுமல்லாது, ஒரு மாறுதலுக்காக, கொஞ்சம் புதிய variety-களைப் பார்ப்பதற்காக I’m available என்று குறிப்பால் உணர்த்தும் பெண்கள் நிறைய உண்டு.

ஐம்பது வயதுவரை ஒழுக்கசீலனாக இருந்த முதலாளிகள் பேரன் பெயர்த்தி எடுத்த பிறகு ஆசைநாயகிகளை குடும்ப நண்பர் என்று சொல்லிக்கொண்டு மகிழுந்துகளில் அழைத்துக்கொண்டு ஊட்டி, மூணார் பயணப்படுவது எந்த ஊரில் நடக்கவில்லை?

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தும் முதல் ஐந்து வருடங்களில் எண்ணற்ற நபர்களைச் சந்திக்க வேண்டி வரும். அந்த காலகட்டத்தில் எல்லாவற்றையும் நாமே செய்தாக வேண்டும். காரணம், அதற்கெல்லாம் சம்பளம் கொடுத்து ஒர் ஆள் வைத்துக்கொள்ள முடியாது, ஆரம்பத்தில் நமது டேஸ்ட்டுக்கு பொருட்களை வாங்கிடாவிட்டால் நாம் எதிர்பார்த்த finishing வராது. அதுவும் manufacturing தொழில் என்றால் சொல்லவே வேண்டாம். கட்டுமானப் பொருட்கள், கச்சாப்பொருட்கள், பேக்கேஜிங் மெட்டீரியல், டிரான்ஸ்போர்ட், இத்யாதி, இத்யாதி என பலரையும் சந்திக்க வேண்டி வரும். சில இடங்களுக்கு நடையாய் நடக்க வேண்டியும் வரும்.

அத்தகைய இடங்களில் எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். கடை உரிமையாளர்களாக, உரிமையாளரின் மனைவியாக, அங்கு பணிபுரிபவர்களாக, முகவர்களாக, வங்கி அதிகாரியாக, வாடிக்கையாளராக வரும் பெண்கள் எல்லோரும் I’m available என்று குறிப்பால் உணர்த்துவதில்லைதான். அதேநேரத்தில் இதில் நடக்கும் casual encounters சில படுக்கையறை வரை செல்வதுண்டு. நம் நாட்டில் ‘ஓரிரவுத் தங்கல்’ என்பது இன்னமும் பரவலாகவில்லை. எனவே பெரும்பாலானவை ‘ஒருமுறை கூடல்’ என்ற அளவிலேயே முடிந்துவிடும். மீறிப்போனால் இரண்டொரு ஆண்டுகளில் இரண்டொரு கலவிகளுடன் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும்.

அதைத் தொடர்ந்து வளர்க்க நினைப்பவர்கள் தங்களுக்கான ஆப்பைத் தாங்களே எடுத்து சொருகிக்கொள்கின்றனர் என்பதே அக்கம்பக்கத்தில் நடக்கும் சம்பவங்கள் வரலாறாகி நமக்கு போதிக்கின்றது. கோயமுத்தூரில் இப்படித்தான் ஏதோ இசகுபிசகாக ஆரம்பித்ததை அப்படியே வளர்த்தெடுத்து அடுத்தவன் மனைவியை அபகரிக்க நினைக்க, அந்த நபரை அவளது கணவன் ஆள் வைத்து வெட்டிக் கொன்றுவிட, சம்பந்தப்பட்ட நபர் ஏதோ ஒரு துக்கடா கட்சியில் இருந்து தொலைக்க, இப்போது ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கொண்டாடுகின்றனர்.

ஜோதிஜி, பாலுறவு சார்ந்த விசயங்களில் அவரது conservative பார்வையை அப்படியே புத்தகம் முழுவதும் வைத்திருக்கிறார். திருப்பூர் ஒருவகையில் அங்கு வரும் மக்களுக்கு ஒரு குறைந்தபட்ச பாலுறவு சுதந்திரத்தை வழங்குகிறது. இதை கலாச்சார சீர்கேடாகவே அவர் பார்க்கிறார். ஆனால் நமது நாட்டுக்கே உண்டான பாலியல் வறட்சியை அவர் கவனத்தில் எடுத்துக்கொண்டிருந்தால் ‘பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான், வாய்ப்பு இருக்கறவன் வாகாக இழுத்து அணைக்கிறான்’ என்று எளிதாகக் கடந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.

நேர்கொண்ட பார்வை படம் பார்த்துவிட்டு பொங்கித் தள்ளியவர்கள் வேறு ஒரு extreme. நல்லவேளையாக அந்த அளவுக்கு அறச்சீற்றம் எதுவும் புத்தகத்தில் இல்லை.

பெண்கள் விவகாரத்திலோ, ஓரினச்சேர்க்கையிலோ வியாபாரத்தைக் கோட்டை விட்டவர்களைக் காட்டிய ஜோதிஜி, இரண்டாம் தலைமுறை வாரிசுகளால் கம்பெனி நடுத்தெருவுக்கு வந்ததையும் விலாவரியாகப் பேசுகிறார். காசு இருக்கிறதே என்பதற்காக ஊட்டி கான்வென்ட்டில் விட்டு, அங்கிருந்து நேராக அமெரிக்காவுக்குப் படிக்க அனுப்பி, இறக்குமதி செய்த மகன்/மகள்களை நேரடியாக வெஸ்-பிரசிடென்ட் பதவியில் அமர்த்திவிட்டு ஆன்மிகச்சேவை, பள்ளி கல்லூரிகளில் சொற்பொழிவு, மரம் நட்டு இயற்கை விவசாயம் செய்தல் என்று போய்விட்டு இரண்டாண்டுகள் கழித்து வந்து பார்த்தால் பாங்கி ஏல நடவடிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். பெரிய முதலாளிக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும்.

வாரிசுகள் புதிய நிர்வாக உத்தியைப் புகுத்துகிறேன் என்று போடும் ஆட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. பல கம்பெனிகளின் அடிப்படையே வாரிசுகளாலேயே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த பிரபல மூன்று ஷா நடிகைக்கு பிளாங்க் செக் கொடுத்து வரவழைத்த தொழிலதிபர் மகனைப்பற்றி இந்த புத்தகத்தில் எதுவும் எழுதவில்லை. ஒருவேளை ஜோதிஜி திருப்பூரைவிட்டு நிரந்தரமாக வெளியேறிய பிறகு எழுதக்கூடும்.

பாதி புத்தகத்துக்குப் பிறகுதான் ஜோதிஜியின் அனுபவங்கள் வார்த்தைகளாக மாறி கொட்டுகின்றன. அவையெல்லாம் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று யோசனை செய்து கொண்டிருப்பவர்கள், ஏற்கனவே நடத்திக்கொண்டிருப்பவர்கள், நடத்தித் தோல்வி கண்டவர்கள், சிறு நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் அவசியம் படிக்க வேண்டியவை.

தனியார் நிறுவனங்களின் front line-இல் பல்வேறு தரப்பட்ட கிளையண்ட்டுகளைச் சந்திக்கச் செல்லும் ஊழியர்களும் இத்தகைய புத்தகங்களையும், அனுபவங்களையும் படிக்கும்போதுதான் ஏன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை செல்லும்போதும் ஒரு புதிய நடத்தையைக் காட்டுகின்றனர், பின்னணியில் நடக்கும் சமாச்சாரங்கள் என்ன என்பது போன்ற புள்ளிகளை இணைத்து ஒரு கோடு போட்டுப் பார்க்க முடியும்.

சிறுதொழில்களைப் பொறுத்தவரை நம் நாட்டில் பைனான்ஸ்காரர்களை நம்பியே செயல்படுகிறது. ஓரளவுக்கு வெற்றி பெற்ற பின்னரே வங்கிகள் தேடி வர ஆரம்பிக்கும். அதற்கும் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். வெறும் திறமை மட்டுமே இருந்தால் மட்டும் வங்கிகளுக்குப் போதாது. ஆனால் முறையாக நடத்தப்படும் சிறுதொழில்களே மிக அதிகமான இலாபத்தைத் தரவல்லது. ரிஸ்க் அதிகம்தான். சரியான நபர்கள் கையாளும் சிறுதொழில்கள் தாறுமாறான வேகத்தில் வளர்ந்து குறுகிய காலத்தில் mainstream நிறுவனங்களாக அடையாளம் பெறுகின்றன.

அத்தகைய அனுபவம் ஒன்றை ஜோதிஜி பகிர்ந்துகொள்கிறார். முப்பது இலட்ச ரூபாயை மஞ்சள் பையில் எடுத்துவந்து தந்த முதலீட்டாளரின் கதை சுவாரசியமானது. சர்வதேச விவகாரங்கள் எப்படி ஒரு ஊரின் வியாபாரத்தை காவு வாங்குகிறது என்பதற்கும் அவரது அனுபவமே சாட்சி.

அரசாங்க ஊழியர்கள், இரண்டாவது மூன்றாவது தலைமுறையாக அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள், கல்லூரியின் வளாகத் தேர்வு மூலம் வேலை கிடைத்து ஐ.டி கார்டைக் காட்டிவிட்டு கியூபிக்கிளில் அமர்ந்து கணிணி முன்னர் மட்டுமே வேலை செய்பவர்கள், முதலாளி என்ற வார்த்தையின்மீது ஒவ்வாமை கொண்ட தொழிற்சங்க வெறியர்கள் மாற்றுப்பாதையில் செல்லவும். அவர்களுக்கு இது சுத்தமாகப் புரியாது.

சில தொழிலதிபர்கள் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் பொது நலனுக்காக செலவு செய்ததும் உண்டு. இன்னும் செய்கிறார்கள். அதே நேரத்தில் தொழிலாளர்களைச் சுரண்டுவது, சப்ளையர்கள் பணத்தை ஏமாற்றும் பெரிய தொழிலதிபர்களும் உண்டு. திருப்பூர் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லைதான். அப்படி எந்தத் துரும்பும் உள்ளே வந்துவிடக்கூடாது என்று கவனமாகத் தவிர்த்த தொழிலதிபர்களும் உண்டு.

குஜராத்தில் குறிப்பாக படேல் சமூகத்தினரிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராவது இறந்துவிட்டால் அவரது நினைவாக ஒரு சிமென்ட் பெஞ்ச் ஒன்றை பொது இடத்தில் வைப்பார்கள். அதனால் அங்கு ஹாலோ பிளாக், செங்கல் விற்கும் அத்தனை இடங்களிலும் சிமென்ட் பெஞ்ச் 1500 ரூபாய் முதல் விற்பனைக்குக் கிடைக்கும். சொகுசு வில்லா முதல், சாதாரண சொசைட்டி வகை குடியிருப்புகள் வரைக்கும் அத்தனை இடங்களிலும் உட்கார பெஞ்ச் இருக்கும்.

மக்கள் நிம்மதியாக உட்கார்ந்து ஆற அமரப் பேசி, தங்களது பாரத்தைக் குறைத்துகொள்வதோடு, எதிர்காலத்தில் ஏதாவது செய்வது குறித்தும், கடந்த கால அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதற்கு அவர்களது பெஞ்ச் கலாச்சாரம் மிக முக்கியமானது. குஜராத்தில் ஏகப்பட்ட கிராமங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் கண்டது இது.

நமக்குப் பொது இடங்களில் உட்கார இடமே இல்லை. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிறுத்த இருக்கைகள் மனிதர்கள் உட்காரத் தகுதியே இல்லாதவை. மின் கம்பிகளுக்கு அடியிலேயே பேட்டரி – சோலார் பேனல் வைத்த தெருவிளக்கு அமைக்கும் அரசுக்கு ஒரு பெஞ்ச் போடக்கூட தோன்றவில்லை என்பது யதேச்சையானது என்று நாம் நம்ப வேண்டும் அல்லவா? யாருக்காவது காத்திருக்க வேண்டுமென்றால் கூட பேக்கரிகளிலும், ஓட்டல்களிலும் சென்று உட்கார்ந்திருக்கும்படி அரசாங்கத்தால் துரத்தி அடிக்கப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

திருப்பூர் தொழிலாளர்கள் உட்கார்ந்து பேச சாதாரண சிமென்ட் பெஞ்ச்சுகள், காலார நடக்க பூங்காக்கள் என எதுவும் வந்துவிடக்கூடாது, கம்பெனி வேலை முடிந்தால் குடியிருப்புக்குச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட தொழிலதிபர்களும் நம்முடனேயே வாழ்கிறார்கள் என்பதை 5 முதலாளிகளின் கதை திரும்பவும் நினைவுபடுத்துகிறது.

தமிழில் சுயமுன்னேற்ற புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள் தாண்டி தனிப்பட்ட நபர்களது அனுபவக்குறிப்புகள், குறிப்பாக வியாபாரம் சார்ந்த விசய ஞானம் உடையவர்கள் எழுதிய புத்தகங்கள் மிகக்குறைவு. வியாபாரத்தில் ஓகோவென்று வருவது எப்படி, தொழிலில் சாதிக்க நினைப்பவர்களுக்கான சூட்சுமங்கள் என்பது மாதிரியான வழவழா கொழகொழா புத்தகங்களுக்கு மத்தியில் இத்தகைய புத்தகங்கள் வர ஆரம்பித்திருப்பது நல்ல ஆரம்பம்.

ஜோதிஜி யாராவது பெரிய தொழிலதிபர்களுக்கு ghost writer-ஆக இருந்து இத்தகைய புத்தகங்களைக் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு எழுதினால் பல ஆயிரம் பிரதிகள் விற்பதோடு எம்பிஏ மாணாக்கர்களுக்குத் துணைப் பாட நூலாக வைக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

வேளாண் விளைபொருட்களின் ஒப்பந்த சாகுபடி சட்டம் – பார்வை

கேள்வி: தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி குறித்த சட்டம் வேளாண்மையில் பெரிய புரட்சியை உண்டு பண்ணுமா?

பதில்: ஒரு புண்ணாக்கும் பண்ணாது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வேளாண் விளைபொருட்களைக் குறிபிட்ட வியாபாரிகள் மூலமாகத்தான் விற்க வேண்டும் என்பது மாதிரியான APMC Act முதலில் இருந்தே இல்லை. கிட்டத்தட்ட ஒரு free market முதலில் இருந்தே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் வியாபாரி ஆகலாம், விவசாயிகளும் யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம். மண்டிக்கு அனுப்பி சீட்டு வாங்கித்தான் விற்க வேண்டும் என்ற நிர்பந்தம் எதுவுமில்லை.

தற்போது அமுலுக்கு வந்துள்ள ஒப்பந்தச் சாகுபடி சட்டம் draft ஆக கடந்த ஆண்டு சுற்றிக்கொண்டு இருந்தபோது கிண்டிலில் போட்டு வரி வரியாக படித்துப் பார்த்ததில் கொஞ்சம் புதிய பதவிகள் உருவாக்கப்பட்டு இருபது முப்பது அதிகாரிகள் சும்மா மிக்சர் தின்னுகொண்டு உட்கார்ந்திருக்கப் போவது உறுதி என்பது உறுதியாகப் பட்டது.

மற்றபடி ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் எக்காரணத்துக்காவும் விவசாயிகளின் நிலத்தில் உரிமை கோர முடியாது. கார்ப்பரேட் கம்பெனிக்காரன் நிலத்தையெல்லாம் வாங்கிவிடுவான் என்ற வாட்சப் வதந்திக்காரன்களை நம்ப வேண்டாம். பிரச்சினைகள் ஏதாவது வந்தால் உரிமையியல் வழக்காக வருடக்கணக்கில் நீதிமன்றத்துக்கு நடந்து பாரத்துக்கொள்ள வேண்டியதுதான்.

ஒப்பந்தத்தில் ஈடுபடும் நிறுவனம் ஒப்பந்த மதிப்பில் 0.3%-உம் அதற்கு 18% ஜிஎஸ்டி-யும் கட்ட வேண்டும். இப்படி ஒப்பந்தம் எல்லாம் போட்டால் அப்புறம் அதிகாரிகளுக்கு தீபாவளி மாமூல் அழுது தொலைக்க வேண்டும் என்று கம்பெனிகளுக்கு தெரியாததல்ல.

இந்த சட்டத்தின் draft-இல் ______ state/UT என்று இருந்தது. அந்த கோடிட்ட இடங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று எழுதி வைத்து ஒப்புதல் வாங்கப்பட்டிருக்கிறது.

சொல்லப்போனால் பழுது பார்க்க வேண்டியது அரசு வேளாணமைத்துறையைத்தான். அதை விடுத்து என்னென்னமோ பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பணியிட மாறுதலுக்கு குறைந்தது ஒன்றரை இலட்ச ரூபாய், பதவி உயர்வுக்கு இரண்டு இலட்சம் என ரேட் கார்டு போட்டு வசூல் செய்கின்றனர்.

இந்த தொகையை ஈடுகட்ட விதை, பூச்சிக்கொல்லி, உர விற்பனை உரிமம் பெற்ற கடைக்காரர்களிடம் ஆயிரம் கொடு, இரண்டாயிரம் கொடு என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏதாவது ஒரு சிறப்புத் திட்டம் மூலம் மானியம் வழங்க வழிவகை செய்து அவர்கள் கெளரவத்துடன் வாழ ஏதாவது அரசாங்கம் செய்ய வேண்டும். அதிகாரிகளின் ஜீப் கிளம்பிய பின்னர் ”கை, கால் நல்லாத்தானே இருக்குது, இவனுங்களுக்கு என்ன கேடு?” என்று கடைக்காரர்கள் ஏக வசனத்தில் பேசுவது நாரசாரமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

டாலர் நகரம் – நூல் விமர்சனம்

டாலர் நகரம்.
ஆசிரியர்: ஜோதிஜி.
4தமிழ் மீடியா வெளியீடு.

காரைக்குடி அருகே புதுவயலைச் சேர்ந்த ஜோதிஜி கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஏதோ ஒரு உத்வேகத்தில், மன்மோகன்சிங் இந்திய சந்தையைத் திறந்துவிட்டு லைசன்ஸ் ராஜ்யத்துக்கு முடிவுரை எழுதிய 1991-வாக்கில் திருப்பூருக்கு வந்து வேலைதேடியதில் ஆரம்பித்து இன்றுவரைக்கும் தனது வாழ்க்கையில் நடந்தவற்றைப் பற்றி சுருக்கமாகவும், திருப்பூர் எப்படியெல்லாம் உருமாறியது என்பதை விரிவாகவும் பதிவு செய்திருக்கிறார்.

திருப்பூர் என்றாலே பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜாகுவார் கார்கள் வைத்திருக்கும் கொழுத்த பணக்காரர்கள் நிறைந்த ஊர், தொழிலாளர்களைச் சுரண்டும் ஊர், வரி ஏமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற ஊர், திருப்பூர் முழுக்க வெள்ளாளக்கவுண்டர்கள் மட்டுமே தொழில் செய்யக்கூடிய ஊர் என்ற பிம்பம் புத்தகம் முழுவதும் உடைபட்டுக்கொண்டே இருக்கிறது.

திருப்பூரில் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் பேட்டியைப் படிக்கும்போது அதன்பின்னால் பெயர்தெரியாத 20 தோல்வியடைந்த நபர்களை நினைத்துக்கொள்ளலாம். திருப்பூர் உங்களிடம் எதிர்பார்ப்பது உழைப்பு, உழைப்பு, உழைப்பு. ஒருநாளைக்கு 15 மணிநேரம் வேலை செய்தே ஆக வேண்டும். மீதமிருக்கும் நேரமும் தொழில் குறித்த எண்ணங்களே மண்டையில் ஏறி ஆட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட உழைப்பாளர்கள் மட்டுமே அந்த ஊரில் தாக்குப்பிடிக்க முடியும்.

ஏற்றுமதி வியாபாரம் ஒரு உலகம் என்றால் உள்நாட்டு வியாபாரம் முற்றிலும் வேறு உலகம். திறமை, உழைப்பு, அர்ப்பணிப்பு, நேர்மை, வாய்மை அது இது என தன்முன்னேற்றப் புத்தகங்களில் படித்த அத்தனை பண்புகளையும் சேர்த்து 51% என்றால் அதிர்ஷ்டம் என்பதும் ஏற்றுமதியில் 49% முக்கியம். ஏற்றுமதிக்குப் போன அனைவரும் பணத்தை அள்ளிக் குவித்துவிட்டார்கள் என்று சொல்லவே முடியாது. இதை ஆசிரியர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அந்த அதிர்ஷ்டம் ஏன் வருகிறது எப்படி வருகிறது என்று யாருக்கும் தெரியாது, பூசை புனஸ்காரங்களாலும் வரவழைக்க இயலாது.

அயராத உழைப்பும், நீதி, நேர்மை, யோக்கியவான் பண்புகள் மட்டுமே ஒருவரை வெற்றியாளராக்கிவிடாது. சிலநேரங்களில் இத்தோடு போதும் என்று அகலக் கால் வைக்காமல் நிறுத்திக்கொள்வது கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள உதவும். பத்து கோடிக்கு ஏற்றுமதி செய்த நபர் அடுத்த ஆண்டு வாரச்சம்பளத்துக்கு வேலைக்குச் சென்ற கதைகள் திருப்பூரில் ஏகப்பட்டது உண்டு. ஜோதிஜியும் அத்தகைய தோல்வியுற்ற தொழில் முனைவோர்களை, தொழிலதிபர்களைக் கடந்து வந்ததை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தியர்களின் வாழ்க்கையில் புரஃபஷனல், பர்சனல் ஸ்பேஸ் என்றெல்லாம் கிடையாது. நமது சமூகக் கட்டமைப்பு அப்படி. ஒரு கம்பெனி/தொழிலின் ஆரம்பத்தில் குடும்பத்தினர் அனைவரும் உழைத்து அதை ஒரு வடிவத்துக்குக் கொண்டுவருவது இந்தியாவுக்கே உண்டான சிறப்பு என்றால், ஓரளவுக்கு வளர்ந்ததும் அதை விட்டு விலக மாட்டேன் என்று கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைப்பது அம்பானி குடும்பம் வரைக்கும் இயல்பான ஒன்று.

மூடுவிழாக் காண இருந்த கம்பெனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்த ஜோதிஜி அதை படிப்படியாக மேலே கொண்டுவர நிர்வாகத்தில் ஓனரின் மனைவி, மைத்துனருக்குச் சொந்தம் என்ற பெயரில் அட்டைப்பூச்சிகளாக இருந்தவர்களை நீக்கி, இலாபத்தில் கொண்டுவந்து நிறுத்தியபோது ஓனரின் மனைவி திரும்பவும் உள்ளே நுழைந்து கணக்குவழக்குப் பார்க்கிறேன் என்ற பெயரில் நெருக்கடி கொடுத்த கதையை விளக்கமாக சொல்லியிருக்கிறார். கடைசியில் அந்த ஓனரும் மனைவி சொல்லை மீற முடியாத காரணத்தால் நெருக்கடி முற்றி பேப்பர் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறியதையும் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். திருப்பூர் மட்டுமல்ல, எல்லா ஊர்களிலும் குடும்பத்தினர் தலையீடு என்பது தொழிலை விரிவாக்கவோ, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வதைத் தடுப்பதாகவே இருக்கிறது என்பது நிதர்சனம்.

நாம் ஏன் அமேசான், அலிபாபா, ஆரக்கிள் மாதிரி கம்பெனிகளை உருவாக்க முடிவதில்லை என்பது தனியாக அலசப்பட வேண்டியது.

இரண்டாவது தலைமுறைக்காவது தேவலாம், மூன்றாவது தலைமுறைக்கு ஒரு தொழிலைக் கடத்துவது என்பது சாதாரண விசயமல்ல. சர்வதேச வணிகம் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரக்கூடிய அத்தனை சட்டதிட்டங்களையும், தரம் குறித்த விவகாரங்களையும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தரம் என்பது உலகம் முழுவதும் ஒரே அளவில் இருக்கவேண்டும் என்பதற்காகவே ISO, HACCP என ஒவ்வொரு தொழலுக்கும் ஏகப்பட்ட third party சான்றளிப்புகளை வாங்க வேண்டியது அவசியமாகிவிட்டது.

ஜோதிஜி பல சர்வதேச பிராண்டு நிறுவனங்களுடன் ஒரு கம்பெனியின் பொது மேலாளர் என்ற அளவில் தொடர்பில் இருந்தாலும் எந்த ஒரு பன்னாட்டு நிறுவனத்திலும் நேரடியாகப் பணிபுரியவில்லை. அதனாலேயே அவர்கள் எதிர்பார்க்கும் தரக்கட்டுப்பாடு விவகாரங்கள், தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடக்கும் நிர்வாக முறை, ஊழியர்களுக்கான ஊதியம், தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், அவர்களது குழந்தைகளின் கல்வி போன்றவற்றை Buyer எனப்படும் இறக்குமதியாளர் நோண்டும்போது நமது பிரைவசி விவகாரத்தில் தலையிடுவது மாதிரியும், இத்தகைய விவகாரங்கள் ஒரு வகையான சதித்திட்ட மாயவலை என்பது போன்ற அச்சத்தோடே பார்க்கிறார்.

அதேநேரத்தில் இறக்குமதி செய்யப்பட்ட நவீன இயந்திரங்கள் தொழிலாளர்களின் உடல்நலனை கணிசமான அளவுக்கு பாதுகாக்கும் வகையில் இயங்குகின்றன என்பதையும் ஒப்புக்கொள்கிறார். இதைத்தான் மன்மோகன்சிங் முதல் அபிஜித் பானர்ஜி வரைக்கும் Access to technology will improve the health and livelihood of downtrodden people என்று குறிப்பிடுகின்றனர். குவார்ட்டர் பாட்டிலில் திரி போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி படித்த காலம் நமக்கு உண்டு. இன்று சீனத்து எல்ஈடி விளக்குகள் மண்ணெண்ணெய் விளக்கை அழித்தேவிட்டன. இன்று எந்தக் குழந்தையும் மண்ணெண்ணெய் புகையில் கூரை வீட்டில் சுவாசிக்க சிரமப்படுவதில்லை, ஆடைகளில் தீப்பிடித்த கதைகளும் இல்லை. இந்த எல்ஈடி டார்ச் லைட்டுகளாலேயே இரவு தண்ணீர் பாய்ச்சச் சென்று பாம்பு கடி வாங்கும் விவசாயிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டிருக்கிறது.

இங்குதான் நமது பழையதனத்து ஆட்கள் புதியவை எதையும் அனுமதிக்ககூடாது, அவையெல்லாம் சதி வேலை, நமது பாரம்பரிய வாழ்வே சிறந்தது என்று பரப்புரை செய்கின்றனர். அடிமை வேலை முறையில் தொழிலாளர்களை வைத்திருந்தால் ஆர்டர் தர மாட்டோம், முறைப்படி எல்லோரும் ஊழியர்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று துணி வாங்க வரும் வெளிநாட்டு கம்பெனி சொன்னால் ‘ஐயோ பார்த்தாயா, நமது தற்சார்பை WTO மூலமாக எப்படியெல்லாம் சிதைக்கிறார்க்ள’ என்று அனத்த வேண்டியது.

குஜராத்தில் பருத்திச் செடி ஆறு முதல் எட்டு அடி உயரம் சாதாரணமாக வளரும். ஒரு பூச்சிக்கொல்லி ஸ்பிரேயர் 14 கிலோ, அதில் ஊற்றப்படும் தண்ணீர் 16 கிலோ. ஓர் ஏக்கருக்கு 20 டேங்க் பூச்சிக்கொல்லி தெளிக்க வேண்டுமெனில் 30 கிலோ எடையைச் சுமந்துகொண்டு ஒரு விவசாயி குறைந்தது மூன்று கிலோமீட்டர் நடந்திருக்க வேண்டும். கூடவே தண்ணீர் ஊற்ற ஒரு ஆளும் குடத்தைச் சுமந்துகொண்டு நடக்க வேண்டும். வாரம் ஒருமுறை பருத்திக்கு பூச்சிக்கொல்லி கட்டாயம். குறைந்தது 25 முறை தெளித்தால் மட்டுமே பஞ்சு கண்ணால் பார்க்கும்படியாக இருக்கும்.

இந்த இடத்தில் ஒரு தொழில்நுட்பத்தை மான்சான்டோ இறக்கி காய்ப்புழுக்களை அழிக்கும் பூச்சிக்கொல்லித் தெளிப்பை முற்றிலும் நிறுத்திக் காட்டியது (சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்கு மூன்று நான்கு முறை தெளிப்பது வேறு). நமது பஞ்சின் தரம் உயர்ந்ததோடு இறக்குமதி செய்த நாம், பஞ்சு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர முடிந்தது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் ஜோதிஜி ஓரிடத்தில் மான்சான்டோவைத் திட்டிவிட்டு செல்கிறார். நமது தமிழக பாரம்பரியப்படி ஒருவர் சமூக அக்கறையுள்ளவராகக் காட்டிக்கொள்ள வேண்டுமெனில் மான்சான்டோவைத் திட்டு, கார்ப்பரேட் சதி அது இதுன்னு ரெண்டு வார்த்தை சேர்த்துக்கோ என்ற புரோட்டோக்காலைப் பின்பற்றுகிறார். பஞ்சு ஜின்னிங் ஆலைக்குள் வந்தபிறகு என்னவெல்லாம் ஆகிறது என்பதில் அவருக்கு மிகப்பெரிய பாண்டித்யம் இருக்கலாம், ஆனால் பருத்தி சாகுபடியில் நமக்கு எதுவும் தெரியாது என்றால் குறைந்தபட்சம் அந்த ஏரியாவைத் தவிர்த்திருக்கலாம்.

இது நல்லது, இது கெட்டது என்று இன்றைய வியாபாரச் சூழலில் எதையுமே சொல்லிவிட முடியாது. திருப்பூரில் Buying House என்ற பெயரில் இருக்கும் புரோக்கர் ஆபிஸ்களும் இப்படித்தான். ஒரு தொழில் வளரும்போது அதனுடன் சேர்ந்து கண்ணுக்குத் தெரியாமல் வளரும் தொழில்கள்தான் இந்தியாவின் வரமும், சாபமும். ஏனெனில் இலாபம் வரும்போது அதைப் பகிர்ந்துகொள்வது போலவே நடடத்தையும் ஓரளவுக்கு பகிர்ந்துகொள்வதுதான். (பகிர்ந்துகொள்ளுதல் என்றால் இலாபத்தில் கமிஷன் கேட்பது, நட்டம் வந்தால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை ஏப்பம் விட்டுவிட்டு ஃபோன் எடுக்காமல் இருப்பது என்று படிக்கவும்).

திடீரென சட்டதிட்டங்கள் மாறினாலோ, இறக்குமதியாளர்கள் வேறு நாட்டுக்குச் சென்றுவிட்டாலோ ஏற்படும் நட்டத்தை கண்ணுக்குத் தெரியாத, கணக்கில் வராத பல layerகளில் உள்ளவர்கள் பகிர்ந்துகொள்வதாலேயே திடீரென ஒரு பிராந்தியமே சரிந்துவிடாமல் செயல்படுகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு அத்தியாத்திலும் ஜோதிஜி அரசியல்வாதிகளைத் திட்டுகிறார். அவர்களே நமது எல்லாப் பிரச்சினைக்கும் மூல காரணம் என்று நம்புகிறார். ஆரம்பம் முதலே சொந்தமாக ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தாலும் தொடர்ந்து ஒரு ஊழியராகவே இருப்பதால் தொழில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை நேரடியாக அனுபவித்துப் பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

நீங்கள் சுமார் 20 பேர் வேலை செய்யும் ஒரு சிறுதொழிலை நடத்திக்கொண்டு Frontline customer facing person ஆக நிற்பவராக இருந்தால் அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் என்ற ஒரு பிரிவினர் மீதான உச்சக்கட்ட அதிருப்தியும், வெறுப்பும், அறிந்த கெட்ட வார்த்தைகள் அனைத்தையும் சரளமாகப் பயன்படுத்தித் திட்டிக்கொண்டே இருக்கும் நபராகவே இருக்க முடியும். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கான நயத்தக உரைத்தல், நல்லவை கூறல், நட்பொழுகல், நண்பர்கள் நலம் பேணல், முக்காலமும் அறிந்து முகமன் கூறல் போன்றவற்றால் அடக்கி வாசித்துக்கொண்டு இருப்பவராக மட்டுமே இருக்க இயலும்.

எழுபதுகளில் கல்வி, மின்சாரம், மருத்துவம், பாசனம், நவீன வேளாண்மை போன்றவற்றை கிராமங்களுக்கு முதன்முறையாக கொண்டுசென்ற அரசு ஊழியர் வர்க்கம் வேறு. அப்போது இருந்த பயனாளிகள் எனப்படும் பொதுமக்களும் வேறு. உள்நாட்டு வியாபாரம் மட்டுமே இருந்த சமூகப் பொருளாதார சுழலும் வேறு. அப்போது இருந்த ஊழியர்களும் ஓய்வுபெற்றுவிட்டனர், பயனாளிகளும் வாரிசுகளிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிட்டனர், கணிசமானோர் இறந்தும் விட்டனர்.

2000-க்குப் பிறகு வந்த தொழில் வேகம், சர்வதேச சந்தை வரவுக்குத் தகுந்தவாறு அரசு ஊழியர் வர்க்கம் மாறவே இல்லை. தொழிற்சங்க பார்வைகளும் மாறவே இல்லை. அரசாங்கத்தின் அத்தனை சட்டதிட்டங்களையும் ஏற்றுக்கொண்டு, வரி கட்டி, வட்டி கட்டி வாழும் முதலாளிகளை ஏமாற்றுக்காரன் என்றும், அறக்கட்டளை வைத்து பள்ளி கல்லூரி நடத்தி வரியே இல்லாமல் வெளிப்படையாகவே சம்பாரிப்பவர்களைக் கல்வித்தந்தை என்றும், கடமையைச் செய்யமால் உரிமையை எப்படி கேட்க முடியும் என்ற சுரணையே இல்லாத அரசு ஊழியர் தொழிற்சங்கங்கள் இன்னும் அப்படியே இருக்கின்றன.

இரண்டாயிரத்துக்குப் பிறகு வந்த இயந்திரங்களின் வேகமும், துல்லியமும் மிக அதிகம். அதேநேரத்தில் அவை இயங்குவதற்கு மின்சாரத் தேவையும் மிக அதிகம். திருப்பூர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களிலும் புதிய இயந்திரங்கள் நிறுவப்பட்டதோடு ஆட்டோமொபைல், கணிணிசார் தொழில்கள் வேகமாக வளர்ந்த வேகத்துக்கு அரசாங்கத்தின் மின் உற்பத்திக்கானத் திட்டங்கள் செயல்வடிவம் பெறவில்லை. அதன் விளைவுதான் தொடர் மின்வெட்டுப் பிரச்சினை. தமிழகத்தில் இருப்பது ஒரே மின்சார வாரியம். அவர்களுக்குத் தெரியாது என்பதல்லாம் வடிகட்டிய பொய். அந்த அதிகார வர்க்கத்தின் கையாலாகாத்தனத்தால் அத்தோடு தமிழக அரசியலில் இருந்து திமுக அரசியல்வாதிகள் அப்புறப்படுத்தப்பட்டது வரலாறு.

பிரமிடின் உச்சியில் இருக்கும் சிறு எண்ணிக்கைதான் அரசியல்வாதிகள். ஆசிரியர் ஜோதிஜி குறிப்பிடுவது போல எல்லாவற்றையும் அரசியல்வாதிகள் மேலேயே எழுதிவிட்டுத் தப்பிக்க இயலாது. கிராம நிர்வாக அதிகாரிகளே, கிராமத்திலேயே தங்கியிருந்து பணியாற்ற வேண்டும் என்ற சட்டத்தை மதிக்கமாட்டேன் என்கிறார்கள். அவர்கள் தரும் அந்தந்த கிராமத்தின் சாகுபடிப் பரப்பு, கால்நடைகள் எண்ணிக்கை, அங்கு இருக்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள் என எல்லாத் தரவுகளுமே தவறானவையாகத்தான் இருக்கின்றன. இதை வைத்துக்கொண்டு அரசியல்வாதிகள் கொள்கை முடிவு எடுத்தால் எப்படி இருக்கும்?

இன்றைய தேதிக்கு மிகவும் over rated valuation என்பது சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வரும் அதிகாரிகள்தான். குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் மட்டும் திறமையின் உச்சகட்ட வடிவமாக காட்டப்படுகின்றனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்களது எல்லாத் திறமைகளும் 51% என்றால் அவர்களது அதிர்ஷ்டம் 49% என்பது போலவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளின் அதிர்ஷ்டமும் 49% உண்டு. மீதமிருக்கும் சர்வீஸ்களின் அதிகாரிகள் ஐந்து பத்து மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்ட காரணத்தினால் திறமை குறைந்தவர்களாகிவிட மாட்டார்கள். ஆறுமுறை நேர்முகத்தேர்வு சென்று தோற்றவர்களும் உண்டு, முதல் தேர்வில் ஐஏஎஸ் வாங்கியவர்களும் உண்டு. சிவில் சர்வீஸ் தேர்வு குறித்தும், அதன் அருமை பெருமைகள் குறித்தும் அவர்களே புத்தகம் எழுதிக்கொள்வதால் சமகாலத்தில் திறமை குறித்து உருவாக்கப்பட்ட பெரிய பிம்பங்களுள் சிவில் சர்வீஸ்ஸ் தேர்வும் ஒன்று. குரூப் 1 அதிகாரிகளைப் பார்த்தால் அவர்களுக்குக் கொஞ்சம் இளக்காரம்!

இந்த அதிகாரிகளே கீழ்மட்டத்திலிருந்து வரும் தகவல்களை சரிபார்த்து மேலே அனுப்பி திட்ட வடிவமாக்கி வைக்கின்றனர். இவர்கள் சொல்லுவதை அரசியல்வாதிகள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வதைத் தாண்டி எதுவும் இருப்பதில்லை. வைகை அணையில் தெர்மாகோல் விட்ட மாதிரி, கோயமுத்தூரில் விண்வெளிப் பயண பாலம் அமைத்தது மாதிரி பல உதாரணங்கள் உண்டு.

ஜோதிஜி குறிப்பிடும் நிர்வாகத் திறமைக்கும், ஒரு தேர்வில் வெற்றிபெற்று வருவதும் தொடர்பே இல்லாதவை (நீட் தேர்வு உட்பட). சிவில் சர்வீஸ் தேர்வுக்குப் பின்னர் அவர்கள் பயில்வது புரோட்டோக்கால் பின்பற்றும் வழிமுறைகளே. ஓட்டுநர் உட்பட ஐந்து முதல் பத்து உதவியாளர்களை 24×7 வைத்துக்கொண்டு, எந்த கட்டத்திலும் வேலையை விட்டு நின்றுவிடாத, கிட்டத்தட்ட zero attrition rate கொண்ட workforce-ஐ வைத்துக்கொண்டு இருக்கும் அதிகாரிகளைத் திறமையின் மறுவடிவம், எளிமையின் சிகரம், தன்னுடைய கார் கதவைத் தானே திறந்து இறங்கும் குணக் குன்று என்று அனைவரும் புகழ்ந்து வைப்பது நமக்கு எதுக்கு வம்பு என்றுதானே? மற்றபடி சாதாரண feedback-ஐக் கூட தாங்கிக்கொள்ள முடியாத அகங்காரத்தில் உளல்பவர்களாகவே 90% இருக்கின்றனர்.

அண்மையில் மத்திய அரசில் இணைச் செயலாளர் மட்டத்தில் ஐஏஎஸ் அல்லாத, அனுபவம் மிகுந்த தனியார் நிறுவன உயரதிகாரிகளும் வரலாம் என்று கொண்டுவந்த சட்டத்திருத்தம் நியாயமானதுதான் என்று ஜோதிஜிக்குத் தோன்றியிருக்காமல் இருக்க வாய்ப்பில்லை. நீதி, நேர்மை, அறமே தரம் என்று வாழ்ந்த அதிகாரிகள் இருந்திருந்தால் திருப்பூர் இப்படி இருக்குமா? கெளசிகா நதி வந்து சேரும் ஏரிக்குள்தானே திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது? தமிழக அரசில் ஒரு ஆணையர் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி அவரது சொந்த மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி எப்படி கட்ட முடிகிறது என்பதெல்லாம் தெரியாததா?

புத்தகம் முழுவதும் அரசியல்வாதிகளைத் திட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் வருவார்கள் போவார்கள். நத்தம் விஸ்வநாதன் என்று ஒருவர் இருந்தார். மு. க. அழகிரி என்றும் ஒருவர் இருந்தார். இன்று அவர்கள் எங்கே? ஆனால் அவர்களிடம் கோப்புகளை வைத்து வாங்கிய அதிகாரிகள் அப்படியேதானே இருக்கிறார்கள்?

சாயப் பட்டறை பிரச்சினைகள் அனைத்தையும் விலாவரியாக அலசியிருக்கிறார். அது கடந்து வந்த பாதை, இன்னும் இருக்கும் பிரச்சினைகள் என சகலமும். அதுதான் உள்ளே இருந்து எழுதுபவர்களின் சிறப்பம்சமே. எடுத்த உடனே மூடி, சீல் வை என்பது 24 மணிநேர செய்திச் சேனல்களின் தீர்ப்பாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அதேபோல பி.டி. பருத்தி விவகாரத்தை பேசினால் கார்ப்பரேட் கைக்கூலி என்கிறார்கள்.

ஏற்றுமதிக்கு உதவும் DGFT, EIC, இன்னபிற ஏகப்பட்ட அமைப்புகள் எதற்காக இருக்கின்றன என்றே தெரியவில்லை என்று ஜோதிஜி குறிப்பிடுவது முற்றிலும் உண்மை. அவர்களது உலகம் வேறு, ஏற்றுமதியாளர்களது உலகம் வேறு. அவர்களது திட்டங்கள் தொழிலில் இருப்பர்களுக்கு எந்தவித உதவியும் செய்யாமல் திவாலாகித் தூக்கில் தொங்க விட்டுவிட்டு, புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு உதவி செய்வதாகக் காட்டிக்கொள்வதையும் விரிவாக அலசியிருக்கிறார்.

மாவட்டத் தொழில் மையம் (DIC – District Industrial Centre) என்ற ஒன்று உண்டு. அங்கே சென்று ஒரு புராஜக்ட் கொடுத்து வாங்கி இலஞ்சம் ஏதும் கொடுக்காமல் நீங்கள் தொழில் ஆரம்பித்துவிட்டால் நிச்சயமாக உங்களுக்கு சிலை வைத்துக் கொண்டாடலாம். DIC என்பதை உண்மையில் dick என்றுதான் சொல்லவேண்டும். அப்பேர்ப்பட்ட நவீன பிச்சைக்காரர்கள் அங்கே அதிகாரிகள் என்ற பெயரில் பணியில் இருப்பார்கள் என்பதை புத்தக ஆசிரியரும் அறிந்தே இருக்கிறார்.

புதிய தலைமுறை ஆலைகள் வந்தபிறகு தொழிற்சங்கங்களின் அடித்தளம் கிட்டத்தட்ட ஆட்டம் கண்டுவிட்டது. சுமங்கலி திட்டம் என்றபெயரில் இளம்பெண்களை நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதெல்லாம் தனியாக ஒரு கட்டுரையில் அலசப்பட வேண்டிய ஒன்று. தென்னக இரயில்வேயில் சாதாரணப் போர்ட்டராக கேரியரை ஆரம்பித்த அந்த தொழிற்சங்கப் பாட்டாளி ஐயா இன்று இரண்டு கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் S கிளாஸ் மகிழுந்தில் வருகிறார், சுமார் 1200 கோடிக்குமேல் சொத்து வைத்திருக்கிறார் என்றால் அதன் அருமை பெருமைகளைப் புரிந்துகொள்ளுங்கள். இரயில்வே மட்டுமல்ல, பெரும்பாலான அரசுத் துறைகளும் விற்றுத் தலைமுழுக வேண்டியவை என்று அரசியல்வாதிகள் நினைக்குமளவுக்குக் கொண்டுவந்தது உள்ளே இருப்பவர்கள்தானே?

இன்னும் ஏகப்பட்ட விசயங்களை எழுதலாம். ஆனால் எப்போதுமே வண்டி வண்டியாக எழுதித் தள்ளுவதால் படிக்க முடியவில்லை என்று நண்பர்கள் புகார் சொல்லுவதால் இத்தோடு நிறுத்திக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

நம் ஊரில் தொழிற்சங்க நண்பர்கள் ஒரு நிறுவனம் நன்றாக வளர்ந்தால் அஃது அதிலுள்ள அனைவரின் பங்களிப்பு என்றும், தோற்றால் அது முதலாளியின் திறமையின்மை, தொலைநோக்குப் பார்வையின்மை, திட்டமிடுதலில் கோளாறு என்றெல்லாம் எழுதிவிடுவது வழக்கம்.

ஆனால் முன்னால் நின்று நடத்துபவர்களுக்கே அதன் அத்தனை பரிமாணங்களும் தெரியும். அத்தகைய frontline workforce நபர்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்களுள் டாலர் நகரமும் ஒன்று.