பாரம்பரிய விதைத் திருவிழா என்றபெயரில் நடக்கும் விதை கடத்தல்கள்

சிலை கடத்தல் என்ற ஒன்று நமக்கு அலுப்புத் தரக்கூடியது, சுவாரஸ்யமில்லாதது. கடத்தப்பட்டால்தான் என்ன என்ற ஒரு அலட்சியமும் இருக்கும். ஆனால் அதன் பின்னணியில் ஒரு பெரிய நெட்ஒர்க் பெரும் பணபலத்துடன், நம் பக்கத்து வீட்டுக்காரர்களைப் போன்ற இயல்பான தோற்றத்துடன் கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்துவார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாதது பாரம்பரிய விதைத் திருவிழா என்ற பெயரில் நடக்கும் மரபார்ந்த விதைகளின் திருட்டுகள்.

சில அடிப்படைகளை தெரிந்துகொண்டு உள்ளே நுழைவோம். காலங்காலமாக விவசாயிகளால் பயிரிடப்படும் உள்ளூர் இரகங்களை land races என்பார்கள். ஒருகாலத்தில் வர்த்தக ரீதியில் பயிரிடப்பட்டு இன்று புழக்கத்தில் இல்லாத இரகங்கள் heirloom எனப்படும். விவசாயம் செய்யாமல் ஆங்காங்கே தாந்தோன்றியாக வளர்ந்துகொண்டிருக்கும் இரகங்கள் wild varieties எனப்படும். ஒரே தாவர குடும்பத்தைச் சேர்ந்த மரபியல் ரீதியாக நெருங்கிய தொடர்புடையவைகளை wild relatives என்பார்கள். இவையனைத்தும் சேர்ந்ததே Germplasm எனப்படும்.

ஜெர்ம்பிளாசம் என்பதும் நாட்டின் ஒரு சொத்து. Biodiversity என்பது பல்லாயிரம் தாவர, விலங்கினங்கள் மட்டுமல்ல ஒரே தாவரத்தின்/விலங்கின் பலநூறு வகைகளும் சேர்ந்தது. இதை சேகரித்து, வகைப்படுத்தி பாதுகாக்க அந்தந்த மாநில விவசாய பல்கலைக்கழங்கள், National Bureau of Plant Genetic Resources, Botanical Survey of India மற்றும் ICAR-இன் கீழ் வரும் ஒவ்வொரு பயிருக்கான ஆராய்ச்சி மையங்கள் போன்றவை செயல்படுகின்றன. ஜெர்ம்பிளாசம் பாதுகாப்பதை அந்தந்த அமைப்புகள் தங்களின் மிக முக்கிய சொத்தாக கருதி பாதுகாப்பது வழக்கம். தனியார் விதை நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் ஜெர்ம்பிளாசத்தை பாதுகாத்து வைத்திருக்கின்றன. விதைத் துறையில் ஒரு நிறுவனம் இன்னொன்றைக் கையகப்படுத்துவதே இந்த ஜெர்ம்பிளாசத்தைக் கைப்பற்றுவதற்காகத்தான்.

புதிய இரகங்களை உருவாக்க இந்த ஜெர்ம்பிளாசத்திலிருந்து பிரித்து எடுக்கப்படும் parent lines மிக முக்கியமானது. பூச்சி, நோய் தாக்காத , புதிய பண்புக்கூறுகளை உருவாக்க உலகளவில் போட்டி போட்டுக்கொண்டு ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக பருத்திப்பஞ்சு சிவப்பு, பச்சை என வண்ண வண்ணமாக வந்தால் சாயப்பட்டறைகளே இல்லாமல் நேரடியாக நூல் நூற்க இயலுமல்லவா? அதற்கு parent material-இல் உள்ள diversity மிக முக்கியம். பலவகையான combination மூலம் புதிய கலப்பினங்களை உண்டாக்கக்கூடிய, நன்றாக தொழில் தெரிந்த Breederகளுக்கு சந்தையில் இன்று ஆண்டு சம்பளம் 20 இலட்சத்தில் ஆரம்பிக்கிறது எனும்போது அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அரசுக்கு முறைப்படி விண்ணப்பித்து ஜெர்ம்பிளாசத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த கடமை பெரிய அளவில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கிடையாது என்பதால் புகுந்து விளையாடலாம்.

விவசாயிகள் தங்களுடைய விதைகளை சேமித்து வைப்பதை, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் இலவசமாக பரிமாறிக்கொள்வதை அவர்களது அடிப்படை உரிமையாகக் கருதி சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் வணிகரீதியில் விற்கும்போது விதைச்சட்டம் மற்றும் இதர சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும். உலகளவில் விவசாயிகளின் உரிமைகளை மதிக்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. தாவர, விலங்கினங்களின் IP rights குறித்த நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இருக்கிறார்கள். ஒரு புதிய இரகத்தை அறிமுகப்படுத்தும்போது அதை உண்டாக்கிய பயிர்ப்பெருக்கவியல் விஞ்ஞானி (breeder), நிறுவனத்தின் தலைமை legal counsel மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மூவரும் கையொப்பமிட்டு அரசுக்கு விண்ணப்பிப்பார்கள். அப்போது புதிய இரகத்தின் pedigree, DUS characters என பல ஆதாரங்களை சமர்ப்பிக்கவேண்டும். ஏதாவது ஒரு parent-ஆனது public domainலிருந்து திருடப்பட்டிருந்தாலும் அப்போதைக்கு இல்லாவிட்டாலும் சில மாதங்களிலேயே கண்டுபிடித்துவிடுவார்கள். ஏனென்றால் அரசாங்கத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட பல அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை முறையாக பயன்படுத்திக்கொள்ளத்தக்க தலைமை பெரும்பாலும் வாய்ப்பதில்லை என்பது வேறுகதை.

பொதுவாக வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களை நல்ல ஆய்வகங்களில் கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நிறுத்தியே காட்டி அனுப்பிவிடுவார்கள். ஓர் இலையைக் கிள்ளி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓட்டலுக்கு வந்து ஐஸ் நிரப்பி ஃபிளாஸ்க்கில் வைத்து எடுத்துவந்து திசுவளர்ப்பு மூலம் regenerate செய்து அதே இரகத்தை உண்டாக்கிய ஆட்களின் கதைகளைக் கேட்டுதான் நாங்கள் படித்தோம். பி. டி. பருத்தி அதிகாரப்பூர்வமாக பயிரிட அனுமதிக்கும் முன்னரே அமெரிக்காவிலிந்து பத்து இருபது விதைகளை கேஷுவலாக லக்கேஜ்களுடன் எடுத்துவந்து உள்ளூர் இரகங்களுடன் கலப்பினம் உண்டாக்கி குஜராத்திகள் பயிரிட்டிருந்தார்கள்.

விவசாயி என்ற போர்வையில் பாரம்பரிய விதை சேகரிப்பாளர்கள் என சொல்லிக்கொண்டு தொழில்முறையில் அதில் ஈடுபடும் சிலர் ஒரு சில அரிய உள்ளூர் இரகங்களை farmer to farmer free exchange of seeds என்றபெயரில் சட்டத்தில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி “கைமாற்றி” விடுவது பரவலாக நடக்கும் ஒன்று. புரூஃப் இருக்கா என்று கேட்டு யாரும் கேட்டை ஆட்டவேண்டாம். இதெல்லாம் அந்தந்த டிபார்ட்மெண்ட் வாட்ச்மேன் வரை தெரிந்த விசயம். (உண்மையான ஒரு சொந்த ஆர்வத்தில் புதிய புதிய இரகங்களை சேகரித்து வைக்கும் விவசாயிகள் நிறைய இருக்கிறார்கள்; அதனால் பொத்தாம்பொதுவாக சொல்வதாக கருதக்கூடாது).

கடந்த சில நாட்களாக சென்னையில் மரபு விதைத் திருவிழா ஒன்று நடந்ததாகவும் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 3000-க்கும் அதிகமான பாரம்பரிய இரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் நாளேடுகள் தெரிவிக்கின்றன. இது சண்டிகர், புதுதில்லி, ஐதராபாத் நகர்களில் நடந்த விதைத் திருவிழாவின் நீட்சி என தெரியவருகிறது. அதை நடத்திய ASHA (Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பு எதிலுமே பதிவு செய்யப்படாத ஒன்று. தொண்டு நிறுவனம், டிரஸ்ட், சொசைட்டி என சட்டத்தின்முன் நிற்க எந்த வடிவமும் இல்லாமல் ஆனால் பொதுமக்களின் நன்கொடையில் இயங்குவதாக சொல்லிக்கொள்கிறது.

எந்தவொரு சட்டபூர்வ அனுமதியும் பெறாத ஒரு நிழல் அமைப்பு பல மாநிலங்களிலுள்ள உண்மையான விதை சேகரிப்பு செய்யும் விவசாயிகளை இந்த போலி இயற்கை ஆர்வலர் ஆட்கள் மூலமாக மூளைச்சலவை செய்து அவர்களிடமுள்ள விதைகளை காட்சிப்பொருளாக்க செய்திருக்கிறது. ஒரே வரியில் சொன்னால் its a vulnerable exposure of country’s genetic resources under one roof by shadow organizations. அங்கு வைக்கப்பட்டிருக்கும் சில முக்கியமான இரகங்களில் பத்து இருபது விதைகளை எடுத்து பாக்கெட்டுக்குள் போட்டு வருவது பெரிய காரியமன்று. பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் ஒழிக, விவசாயிகள் ஒற்றுமை ஓங்குக என்ற கோஷத்துடன் இந்த பாரம்பரிய விதை திருவிழாக்கள் யாருக்காக நடக்கின்றன என்பதை இனியும் விளக்க வேண்டியிருக்காது.

இத்தகைய பதிவு செய்யப்படாத போலி இயற்கை விவசாய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் அரசு வேளாண்மைத்துறை அதிகாரிகள் விருந்தினராகச் சென்று மேடைகளில் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Code of Conduct குறித்தும் Conflict of Interest குறித்தும் வேலையில் சேரும்போது எடுக்கப்பட்ட வகுப்புகளை புரபேஷனரி பீரியட் முடியும்போதே மறந்துவிட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. பதிவு செய்யப்படாத நிழல் உலக அமைப்புகளை நாட்டின் சொத்தான genetic diversityயைக் காட்சிப்படுத்த அனுமதி எப்படி கிடைத்தது?

குடியரசு தினவிழாவில் படைக்கலன்களை மக்கள் காட்சிக்கு வைப்பார்கள். அதற்காக எல்லா போர்க்கருவிகளும் அங்கு இருக்குமா என்றால் நிச்சயமாக இருக்காது. எதுவரை பொதுமக்களுக்கு காட்டலாம் என்ற வரையரையை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். அதிலும் குறிப்பிட்ட ஆயுதங்களை சில அதிகாரிகள் மட்டுமே அணுகும்படிதான் இருக்கும். அதேமாதிரிதான் விவசாய கண்காட்சிகளில் பொதுமக்களுக்கு எந்தெந்த இரகங்களை காட்சிக்கு வைக்கவேண்டும், எதை தவிர்க்கவேண்டும், எதை மிக இரகசியமாக குறியீடுகள் மூலம் பாதுகாக்க வேண்டுமென்பதை அந்தந்த துறை அதிகாரிகள் முடிவு செய்து வைத்திருப்பார்கள்.

முறையாக விவசாயம் செய்பவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்ற அனுபவ புரிதல் இருக்கும். உதாரணமாக எல்லா சுண்டைக்காய்களும் உண்ணத் தகுந்தவை அல்ல. சில இரகங்கள் கடுமையான ஒவ்வாமையை உண்டாக்கும். எல்லா காளான்களும் உண்ணத்தக்கவை அல்ல. சில காளான்களை சாப்பிட்டால் உடனடி மரணம் நிச்சயம். இன்று உணவுக்காக விவசாயம் செய்யப்படும் அத்தனை வகை பயிர்களும் உடலுக்கு தீங்கு விளைவிக்காதவை என்று பலமுறை அனுபவத்தால், ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்டவை.

தாத்தா விவசாயம் செய்தார், அப்பா பார்ட் டைமாக விவசாயம் செய்தார் என்பதைத் தாண்டி விவசாயத்துக்கு எந்த தொடர்புமில்லாதவர்கள் வாரயிறுதி நாட்களில் பேக்பேக்கை மாட்டிக்கொண்டு எங்காவது மலையடிவாரத்தில் வளரும் செடிகளை, பாரம்பரிய மரபு இரகங்கள் என எடுத்துவந்து ஊருக்குள் நட்டுவைத்து ஆர்கானிக் இயற்கை காய்கறி அங்காடிகளில் விற்று அதன்மூலம் பல ஒவ்வாமை/நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களை உண்டாக்கப்போவது உறுதி. அதற்கும் இயற்கை மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து நோய் முற்றியபின் அலோபதிக்கு சென்று ஆர்கானிக் ஃபுட் சாப்பிடும் எனக்கு வேண்டுமென்றே மருத்துவமனைகள் அதிக பில் போட்டு ஏமாற்றுகின்றன, மருந்து வேலை செய்யவில்லை என மருத்துவர்களை அடிக்கப்போவதும் நடக்கத்தான் போகிறது. அனுபவமிக்க வனவியலாளர்களுடன் காட்டுக்குள் செல்லும்போது அவர்கள் தரும் முதல் அறிவுரை எந்த பூக்களையும் முகர்ந்து பார்க்கக்கூடாது; இரண்டாவது அறிவுரை என்னவென்று தெரியாத பழங்களை உண்ணக்கூடாது என்பதுதான். மருத்துவர்கள் தெரிந்த நோய்களுக்குத்தான் மருத்துவம் செய்வார்கள். ஏதாவது காட்டுக்குள் இருக்கும் விஷச்செடியை பாரம்பரிய இரகம் என்று கொண்டுவந்து அரைத்துக் குடித்துவிட்டு வந்தால் என்ன செய்வார்கள்.

இயற்கை விவசாயம் என்ற பெயரில் நம்மாழ்வாரிய மூடர்கள் கூட்டம் அடிக்கடி பரிந்துரைப்பது மீன் கரைசல் அல்லது மீன் அமில கரைசல். அதாவது மீன் மார்க்கெட்டில் கழிவாக போடுவதை அள்ளிவந்து கொஞ்சம் வெள்ளத்தைக் கலந்து காற்று புகாமல் ஓரிரு மாதம் மூடிவைத்து பின்னர் எடுத்து தண்ணீரில் கலக்கி பயிரின்மீது தெளிப்பது. மீனின் தசைகளிலுள்ள நைட்ரஜன் பயிர்களுக்கு கிடைக்கும் என்பது இதன் சாராம்சம். காற்றுபுகாத இந்த anaerobic condition-இலும் சில உயிர்க்கொல்லி பாக்டீரியாக்கள் வளரும். இதை பயிர்களின் மீது தெளித்து அது பச்சையாக உண்ணும் காய்கறியாக இருக்கும்பட்சத்தில் கடுமையான உடல் உபாதைகள் வரும். போதுமான அளவுக்கு பாக்டீரியத்தின் லோடு உள்ளே சென்றால் சாவு நிச்சயம். இத்தகைய ஆர்கானிக் உணவுகளை உண்டு அமெரிக்காவில் பல சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மீன் கரைசலுக்கும், செப்டிக் டேங்க் கழிவின் கரைசலுக்கும் டெக்னிக்கலி பெரிய வேறுபாடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விதைகளே பேராயுதம் என அருமையான caption போட்டுக்கொண்டு, எதிலுமே பதிவு செய்யப்படாத நிழல் அமைப்புகள் நாட்டின் genetic diversityயை யாருக்காக காட்சிப்பொருளாக்குகின்றன என சிந்திக்க வேண்டும். இந்த தேசிய, சர்வதேச மாஃபியா கும்பலுக்கு நம்மாழ்வார் கோஷ்டிதான் உள்ளூர் ஏஜென்டு. அதன் துணை ஏஜெண்டுகள் பல்வேறு பெயர்களின் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் கடைவிரித்து ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்கிறார்கள். வடக்கே ஆரம்பித்து தமிழகம் வரை அலசிப்பார்த்துவிட்டார்கள். இனி இலங்கை, மாலத்தீவு, மொரீஷியஸ் என விதைத் திருவிழாக்கள் நீளும்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *