பசுமை ஆர்வலர், இயற்கை ஆர்வலர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ற ஒரு மேட்டிமைத்தனமான புதிய சாதி

கேள்வி: பசுமைப் போராளி, கார்ப்பரேட் எதிர்ப்புப் போராளி, இயற்கை விவசாயப் போராளி, சுற்றுச்சூழல் ஆர்வலர் போன்ற அடையாளங்களின் பின்னணியில் சாதி ஒளிந்திருக்கிறதா?

பதில்: கிராமப்புறத்தின் பழைமை மாறாமல் இயற்கைக்குத் திரும்புதல் என்பதே சாதிய அடுக்குகளுக்கு ஏற்ப வாழ்வதற்கான அழைப்புதான். பசுமைப் போராளி ஆவதிலும், இயக்கம் அல்லது அமைப்பு நடத்திவதிலும் சாதிய படிநிலைகள் தெளிவாக உண்டு.

இயற்கை விவசாயம் + கார்ப்பரேட் எதிர்ப்பு குறித்த அமைப்புகளில் சாதிக்கு ஏற்பவே பிரபலத்தன்மையும், வசூலும் அமைகிறது.
உங்களுக்குத் தெரிந்த பிரபலமான ஐந்து ஆர்கானிக் ஆக்டிவிஸ்ட் அமைப்புகளைக் கவனித்துப் பார்த்தீர்களேயானால் அதன் நிறுவனர்கள் அல்லது பெருந்தலைகள் பிராமணர்களாக இருப்பதைக் காணலாம். அபூர்வமாக அப்படி இல்லாவிட்டாலும் அசைவ உணவு எதிர்ப்பு, கோசாலை, விவசாயத்தைக் காப்பதில் கோவில்களில் இருக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் முக்கியத்துவம், நீட் தேர்வு ஆதரவு, மெரிட் சிஸ்டம் போன்ற கருத்துகளில் தாராளமாகப் புழங்குபவர்களாக இருப்பர்.

அத்தகைய பிராமணப் பின்புலமுள்ள அமைப்புகளுக்கே பெரும்பாலான நன்கொடை வருவாய்கள், புகழ், பெருமை எல்லாம் கிடைக்கும். தோற்றாலும் வென்றாலும் நல்ல விளம்பரமும், நன்கொடைகளும் கணிசமாக கிடைக்கும் என்பது மாதிரியான ஏரியா எனில் இந்த அமைப்புகள் இறங்கிவந்து வழக்குத் தொடுக்கும். பெரும்பாலும் கார்ப்பரேட் கம்பெனிகளை இவை வழக்குக்கு இழுக்குமே தவிர அரசாங்கத்தை எதிர்த்து வழக்குத் தொடருவதைக் கவனமாகத் தவிர்க்கும்.

பிராமண அடையாளங்களைத் தாங்கிய இந்த அமைப்புகள் அப்பழுக்கற்ற தங்கங்களாக உருவகப்படுத்துப்பட்டு சூத்திர வேசிமகன்களிடம் விளம்பரப்படுத்தப்படும். மனுஸ்மிரிதியால் தேவடியாப்பயல் என்று விளிக்கப்படும் சூத்திர ஆக்டிவிஸ்டுகள் நடத்தும் ஒன்றிரண்டு அமைப்புகளுக்கு அரசாங்கத்தை எதிர்த்து நடத்தும் வழக்குகள், பெரிய கவனம் கிடைக்காத ஆனால் நீதிமன்றங்களுக்கு செருப்புத் தேய நடக்கவேண்டிய விவகாரங்களை எல்லாம் கொடுத்து வழக்குத் தொடரும்படி, பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தப்படும். இவர்களும் செருப்பைத் தூக்கி தலையில் வைத்து விட்டிருக்கிறார்கள் என்றே புரியாமல் தமக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாகக் கருதி கொஞ்சம் கொஞ்சமாகப் போராளி ஆகிவிடுவார்கள்.

மஞ்சளுக்கும், வேம்புக்கும் அமெரிக்கா காப்புரிமை பெற்ற விவகாரத்தில் வந்தனா சிவா அம்மையாருடன் நம்மாழ்வார் இணைந்து போராடி வென்றதாக ஐயாவின் வானகம் ரிசார்ட்டில் இயற்கை விவசாயப் பயிற்சி பெற்ற பலரும் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வேப்பங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் Azadirachtin என்ற பூச்சிக்கொல்லியின் ஒரு பகுதி காப்புரிமையை ஜெர்மானிய கம்பெனி ஒன்றிடம் இராயல்ட்டி கட்டியே இந்தியாவில் பிரபல நிறுவனங்கள் வாங்கி விற்பனை செய்கின்றன என்பதைத் துறையில் புழங்குபவர்கள் அறிவர்.

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இயற்கை வேளாண்மை பிரச்சாரகர்கள் பிராமணர்களாக இருந்தாலும் சூத்திரர் ஆன நம்மாழ்வாரின் வானகம் ரிசார்ட் ஆனது சமகாலத்திய வேளாண் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவல்லதாக நிறுவப்பட்டிருப்பது பெரிய நகைமுரண் கிடையாது. ஐயாவின் கோசாலை, கோசாணம், பாரம்பரிய மருத்துவ ஞானம் குறித்த உரைகளைக் கேட்டவர்களுக்கு வர்ணாசிரம அமைப்பின்மீது அவருக்கு உள்ள அன்பை அறிவார்கள்.

இயற்கை வேளாண்மை சார்பான அமைப்புகள் மட்டுமல்லாது விவசாயிகளின் பல்வேறு அமைப்பு தலைவர்கள் வெளிப்படையாகவே சாதிய ஆதரவாளர்களாவர். மரபுக்குத் திரும்புதல், பாரம்பரிய வாழ்வியல் முறை என்றாலே சாதிக்குத் தக்க வாழ்வியல் முறை என்பதே இந்தியாவில் பொருளாகும். விவசாயத்தைக் காப்போம் என்பதற்கும் “விவசாயிகளைக் காப்போம்” என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பதை உணர்வது முக்கியமானதாகும்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *