தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

கேள்வி: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?

பதில்: மாணாக்கர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சர்வதேசத் தரத்திலான சஞ்சிகைகளில் வெளியிடவேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கு முன்னர் நிர்வாக சீர்திருத்தத்தை மேலிருந்து தொடங்கவேண்டும்.

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரது ஓய்வுபெறும் வயது 70 என நிர்ணயித்து திருத்தம் வெளியிடப்பட்டிருப்பது மிக விரிவான ஊழல்களுக்கு கால்கோள்விழா நடத்தப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

ஓய்வுபெற்று வீட்டில் பேரக்குழந்தைகளுடன் விளையாட வேண்டியவர்களை அழைத்துவந்து நிர்வாகத்தை நடத்துவதற்கு விடுவது தற்போது பணியிலிருப்பவர்களை கேவலப்படுத்தும் ஒன்றாகும். என்னவோ இவர்களை விட்டால் பணியில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தை நடத்தவே தெரியாத மாதிரியும், ஆராய்ச்சிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஆளே இல்லாமல் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிடும் என்பது மாதிரியும் பில்டப் கொடுத்து வாழும் வாஸ்கோடகாமாவே, நடமாடும் ஐன்ஸ்டைனே என்று புகழ்மாலை பாடுவதுற்கு ஒரு கூட்டம் இருப்பதும் பல்கலைக்கழகம் எந்த அளவுக்கு சொம்புகலைக்கழகமாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது.

பணி ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சிகளைத் தொடரும் பேராசிரியர்களுக்குப் பல்கலையில் இடமும் ஆய்வகமும் வழங்குவது உலகெங்கிலும் நடைமுறையில் உண்டு. பல பேராசிரியர்கள் ஓய்வுபெற்ற பின் பல்கலையைவிட்டு வெளியேறி தத்தம் துறைகளில் ஆலோசகர்களாகவோ, நிறுவனங்களில் அதிகாரிகளாகவோ, தனியார் கல்லூரிகளில் கெளரவ பேராசிரியர்களாகவோ, தனியாக நிறுவனம் தொடங்கி வியாபாரம் செய்யவதோ உண்டு. அவர்களெல்லாம் உண்மையில் வணங்கத் தக்கவர்கள்.

சில பேராசிரியர்கள் ஏதாவது மந்திரிமார்கள், ஆட்சியாளர்கள் காலில் விழுந்து பணி நீட்டிப்பு வாங்குவதோடு துணைவேந்தர் பதவி வாங்கி வந்து உட்கார்ந்துகொண்டு சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது இப்போதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. போதாக்குறைக்கு அண்டை மாதிலங்களில் ஆள்பிடித்து வந்து துணைவேந்தனாக்கும் அவல நிலைக்கு அண்ணா பல்கலை வந்தமாதிரி தநாவேப வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஓய்வுபெற்று பல்கலையை விட்டு வெளியேறிய பேராசிரியர்கள் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கிவிடும்போது அவர்களுக்கான accountability என்ற ஒன்று முற்றிலும் இல்லாமல் போகிறது. அவர்கள் போட்ட காசை எடுப்பதிலும், பதவிக்காலம் முடிவதற்குள் பை நிறைய சில்லறைகளைத் தேற்றிவிடலாம் என கண்ணில் பட்டவைகளையெல்லாம் விலைபேசி விற்கும் அவலமும் நடப்பதோடு, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ, அரசாங்கப் பதவிகளிலோ இல்லாத ஊழல் குற்றவாளிகளைக் கண்டு கைகட்டி நின்று ‘பதவில இருக்கனும்னா இப்படிலாம் நக்கித்தான் ஆகனும்’ என்று மாணவர்களுக்கும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றனர். அண்மையில் இலஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தன் ஒரு துணைவேந்தன்கள் பட்டாளத்தையே அழைத்துக்கொண்டுபோய் ஊழல் குற்றவாளி சசிகலாவைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

தநாவேப சர்வதேச தரத்துக்குச் சொல்ல வேண்டுமானால் சர்வதேசத் தரத்திலான நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஆண், பெண் பாலின பேதமில்லாத வளாகம் உருவாகவேண்டும் என கொள்கை முடிவுகளை எடுத்து 24 மணிநேரமும் திறந்திருக்கும் ஆய்வகங்களோடு முதுநிலை, ஆராய்ச்சி மாணவிகள் 24 மணிநேரமும் சென்றுவரும்வண்ணம் விடுதிகள் நிர்வகிக்கப்பட்டதும் இதே வேளாண் பல்கலையில்தான். தமிழகத்திலேயே 24 மணிநேரமும் ஆராய்ச்சிகளுக்காகத் திறந்திருந்த ஒரே பல்கலைக்கழகமாக ஒருகாலத்தில் இருந்தது.

இன்று தாவரவியல் பூங்காவுக்கு ஜோடியாக வருபவர்கள் திருமணச் சான்றிதழைக் காட்டவேண்டும் என்று கட்டாயப்படுத்தும் நவீன இந்துத்வா கும்பலின் கூடாரமாக மாறியிருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒருபக்கம் இயற்கை விவசாயம் என படம் காட்டிவிட்டு மறுபக்கம் எட்டாம்கிளாஸ் படித்தவர்களெல்லாம் பூச்சிக்கொல்லி விற்பனை செய்யக்கூடாது என்று மத்திய அரசு கொண்டுவந்த தடைச்சட்டத்துக்கு ஓட்டை ஏற்படுத்தும்விதமாக ஒரு டுபாக்கூர் டிப்ளமோ படிப்பை அறிமுகப்படுத்தி நுகர்வோருக்கோ, விவசாயிகளுக்கோ, விவசாயப் பட்டதாரிகளுக்கோ எந்த பலனையும் தராத, காசு கொடுத்தால் எதை வேண்டுமானலும் செய்து தருகின்ற போலி ஆராய்ச்சி நிலையமாக மாறியதும் ஓய்வுபெற்ற துணைவேந்தன்களாலேயே நடந்து வருகிறது.

பல பாராட்டுகளையும், முன்னெடுப்புகளையும் பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே முதன்முறையாக என்ற பல்வேறு சான்றுகளையும் உடைய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ICAR இரத்து செய்தது மிகவும் கேவலமான ஒரு நிகழ்வாகும். அங்கீகாரம் இரத்தாகும் அளவுக்கு போர்டு நட்டு அஸ்திவாரம் மட்டுமே போடப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதற்குக் காரணம் எந்த accountability-யும் இல்லாத ஓய்வுபெற்ற நபர்களைத் துணைவேந்தன் என நியமிக்கும் அரசியல் போக்கும் அதற்கு துணைபோகும் ஆசிரியர் சங்கங்களுமே இதற்கு காரணமாகும். தற்போது 70 வயதுவரை துணைவேந்தன் பதவி என சட்டத்திருத்தம் செய்யப்பட்டிருப்பது மிகவும் அபாயகரமான சீரழிவின் ஆரம்பமுமாகும்.

தநாவேப உருப்பட வேண்டும் எனில் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு பதவிக்காலத்திலேயே துணைவேந்தர், முதல்வர், பதிவளர் போன்ற பதவிகள் கொடுக்கப்படவேண்டும். ஓய்வுபெற்ற பின் துணைவேந்தன் பதவி “வாங்கி” வந்து சில்லறைகளைத் தேற்றி சொத்து சேர்க்க முயற்சிக்கும் அல்ப கேஸ்களை தவிர்த்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும். அப்போதுதான் திறமைக்கு மதிப்பு கிடைப்பதோடு உண்மையான ஆராய்ச்சியாளர்களுக்கு, நிர்வாகத் திறமையுடைய பேராசிரியர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அதன்மூலம் உள்ளே பணியிலிருப்பவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதுடன் மாணாக்கர்களின் தரமான ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் என விவசாயிகளுக்கும் பலன் ஏற்படுவதோடு ஆண்டுக்கு நூறு கோடி அளவுக்கு செலவிடப்படும் மக்களின் வரிப்பணத்துக்கு ஒரு மதிப்பு ஏற்படும். அப்போதுதான் உதவிப் பேராசிரியர் பதவியில் சேர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு மேல்நோக்கிச் செல்ல விரும்புபவர்களுக்கு சமூகத்தில் ஒரு மரியாதை ஏற்படும்; எங்குமே வெளியில் சென்று பிழைக்க வழிதெரியாதவர்களெல்லாம் உதவிப் பேராசிரியராகி விடுகின்றனர் என்ற அவச்சொல்லும் நீங்கும்.

ஏனெனில் ஆராய்ச்சியிலோ, நிர்வாகத்திறமையோ இல்லாமல் ஓய்வுபெற்றபின் துணைவேந்தன் ஆனவர்களும் அவர்களது சொம்புகளும் ”இன்னிக்கு வர்ற பசங்களுக்கு ஒரு மண்ணும் தெரியறதில்லப்பா. எப்படித்தான் படிச்சு பாஸ் பண்ணித் தொலைச்சிட்டு வர்றானுங்களோ. இந்த கூமுட்டைங்கள வச்சிகிட்டு எப்படி நாங்க ரிசர்ச் புரோகிராம் நடத்தறதுன்னே தெரியல. அந்த காலத்துல நாங்கள்லாம் படிச்சப்போ பாத்தீங்கன்னா…” என்று இன்றைய இளைஞர் சமுதாயத்தையும், நடுவயதில் இருக்கும் பேராசிரியர்கள் கூட்டத்தையும் தொடர்ந்து மட்டம் தட்டி பிரச்சாரம் செய்து தங்கள் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கின்றனர். இத்தகைய பிரச்சார யுக்திகளை நம்பும் மாணாக்கர் கூட்டம் தவறான முன்னுதாரணங்களால் கல்வி, கேள்வி, ஆராய்ச்சி, வர்த்தகம் என எதிலுமே ஒரு நிறைவான ஆளுமையாக மாறாமல் கார்ப்பரேட் எதிர்ப்பு, பன்னாட்டு சதி என வாட்சப் பார்வர்டுகளில் அரசியல் பயிலுகின்றனர்.

ஆகவே, தநாவேப முன்னோக்கிச் செல்லவேண்டும் எனில் ஓய்வுபெற்ற பின் காசு கொடுத்து துணைவேந்தன் பதவி வாங்கும் நபர்களையெல்லாம் பெரிய ஆளுமை என்று நம்பும் மாயையில் இருந்து வெளிவர வேண்டும். அதற்கு ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அங்கு தூங்கிக்கொண்டிருக்கும் அமைப்பே இதற்கான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும்; அல்லது அதை கலைத்துவிட வேண்டும்.

கட்டுரையாளர்கள்:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *

One thought on “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்ற உப்புமா பல்கலைக்கழகங்கள் போல் மாறாமல் உருப்படுவதற்கு என்ன செய்யவேண்டும்?”

  1. Why this Kolaveri on TNAU VC🙈
    Views expressed by the author clearly shows the current scenario in the university.
    As an alumnus I really appreciate the bold expression of the views by the author.
    This has to be circulated to the staffs and students of the university.
    Great job Prabu
    Keep writing ✍️

Comments are closed.