கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்

கோயமுத்தூரில் வீடுகளுக்குக் குடிநீர் வழங்கும் பணியை பிரான்சு நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்துக்கு 26 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பது பெரும் விவாதப்பொருளாக ஆகியிருக்கிறது.

அவ்வளவுதான், இனிமேல் அந்தக் கம்பெனி சொன்ன விலைக்குத்தான் தண்ணீர் வாங்கிக் குடிக்கவேண்டும், வீட்டில் போர்வெல் தண்ணியைக்கூட பயன்படுத்த முடியாது, மழைநீரை சேகரித்து வைத்திருந்தாலும் அந்த கம்பெனிக்காரன் காசு கேட்பான், கோவையின் குளங்களெல்லாம் CSR Fund மூலமாக பிரிக்கால் நிறுவனம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது, சுடுகாடெல்லாம் ஈஷா கட்டுப்பாட்டில் இருக்கிறது, பொலிவியா நாட்டில் சூயஸ் நிறுவனம் குடிநீர் வழங்கலை எடுத்த பிறகுதான் உள்நாட்டுப் போரே மூண்டது என ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் கட்டுரை எழுத, உடனே பலரும் ஹாலிவுட் படங்களில் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகள் துப்பாக்கிகளோடு திறந்த ஜீப்புகளில் செல்லும் காட்சிகளை கோயமுத்தூர் வீதிகளில் கற்பனை செய்துகொண்டு களமாடினார்கள். இப்படியெல்லாம் எழுதினால்தானே சுற்றுச்சூழல் ஆர்வலராக முடியும்! யதார்த்தத்திற்கு அருகில் போகும்போது ஏழை, பணக்காரன், ஆண்ட சாதி, அடிமைச் சாதி என்றெல்லாம் வந்துவிடுகிறது; இது ஜீரணிப்பதற்கு கஷ்டமாக இருப்பதால் சுகமாக இருக்கும்படி ஒரு சைடு வாதத்தை மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்.

இதன்மூலம் ஏழைகளுக்குத் தண்ணீர் கிடைக்காது, காசு கொடுப்பவனுக்குக் கூடுதல் நீர் கிடைக்கும், பணக்காரன் வீட்டில் புல்தரைக்குக் கிட்டும் தண்ணீர் ஏழைக்குக் குடிக்க இருக்காது, கார்ப்பரேட் கம்பெனிக்கு அள்ளித்தருவார்கள், குடிக்கும் தண்ணீருக்கு விலை வைப்பதா, Welfare state-னா என்னான்னு தெரியுமா என்று எத்தனை விதமான விவாதங்கள்! 2017-இல் கடந்த நூறாண்டுகளில் இல்லாத வறட்சி. குடிதண்ணீர் வழங்க அணையில் தண்ணீர் இல்லை; அணைக்குள் ஆள்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்துவரப்பட்டது. ரேஸ் கோர்ஸ் குடிமக்களுக்கு வாரம் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்டது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் புலியகுளத்து குடிமக்களுக்கு இருபது நளைக்கு ஒருமுறை தண்ணீர்; அங்கிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பாப்பாநாயக்கன்பாளையத்து குடிமக்களுக்கு மாதக்கணக்கில் தண்ணீரே வரவில்லை. லாரியில் பெயரளவுக்கு ஊற்றிவிட்டுப் போனார்கள். ஆமாம், ரேஸ் கோர்ஸில் இருக்கும் ஏழைபாழைகள் தண்ணீருக்கு என்ன செய்வார்கள், பாவம்! அசோகமித்திரனின் தண்ணீர் நாவல் நினைவுக்கு வருகிறது. ஒருசாராருக்கு வாழ்க்கையில் பாதுகாப்பாக எல்லாம் கிட்டிவிடும்போது குழாயில் தண்ணீர் பிடிப்பது மட்டுமே வாழ்க்கையின் பெருந்துயரமாகத் தெரியும்.

ஏழைகள், விளிம்புநிலை மனிதர்கள் குடிநீருக்குத் தடுமாறுவார்களாம். கார்ப்பரேட்டுகளின் ஆக்டோபஸ் கரங்கள் எளிய மனிதர்களைச் சுரண்டுகிறதாம். உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பாலத்திற்காக டோபிகானா பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை (தற்போது பட்டா வைத்திருக்கிறார்கள்) காலிசெய்ய 15 நாள் அவகாசம் வழங்கியிருக்கிறது மாநகராட்சி; மலுமிச்சம்பட்டியில் குடிசைமாற்று வாரிய வீடுகள் தரப்பட்டிருக்கின்றன. உக்கடம் ஹவுசிங் போர்டு மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் ஜஸ்ட் 20 கிலோமீட்டர் தள்ளி கீரநத்தத்தில் வீடு வழங்கியிக்கிறார்கள். ஆங், அப்புறம் விளிம்புநிலை மனிதர்களின் வேலைவாய்ப்பு? அங்கிருந்து இரண்டு பர்லாங் தூரத்தில் பருத்தி, மக்காச்சோளம், கொண்டைக்கடலை விளையும் அற்புதமான கரிசல்மண் பூமியில் சிறப்புப் பொருளாதார மண்டலமாக வானுயர வீற்றிருக்கும் Cognizant, Bosch, Ford போன்ற மென்பொருள் நிறுவனங்களில் ஹவுஸ்கீப்பிங், செக்யூரிட்டி, டேக்சி ஓட்டுனர், எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்ற வேலைகளுக்குச் சென்றுவிடலாம். மென்பொருள் பொறியாளர்கள் குடியிருக்கும் அபார்ட்மெண்டுகளுக்கு வேலைக்காரம்மா, ஆயாம்மா போன்ற வேலைகளுக்குச் செல்வதன் மூலம் அவர்கள் அலுவலக cab-இல் அரை கிலோமீட்டர் பயணித்து வேலைக்குச் செல்கையில் ‘துடைத்தெரியப்படும் எளிய மக்கள்’ என்றெல்லாம் பேஸ்புக் பதிவு போட்டு உலகத்திற்கு புரிய வைப்பார்கள். அந்தப்பக்கம் ஜக்கி வாசுதேவன் என்றால் இந்தப்பக்கம் ஐ.டி. கம்பெனிகள். யார் எடுக்கிறார்கள் என்று தண்ணீருக்குத் தெரியவா போகிறது? எல்லோருமே ஏழைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றுபேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆமாம், ஏழைகளை ஏழைகளாகவே பாதுகாக்க வேண்டும். மறந்தும் அவர்களுக்கு வாய்ப்புகளோ, ஓய்வுநேரமோ, உபரி வருமானத்திற்கு வழிகளோ வந்துவிடக்கூடாது.

தற்போது கோவை மாநகராட்சி 1000 லிட்டர் தண்ணீரை 4.50 ரூபாய்க்கு வீடுகளுக்கு வழங்குகிறது. லிட்டருக்கு ஒரு பைசா கூட இல்லை. உப்பிலிபாளையம் சிக்னலில் இருந்து நஞ்சப்பா சாலை, காட்டூர் பகுதியில் மட்டும் 1000 கடைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். ஒரு கடைக்கு நாளொன்றுக்கு ஒரு தண்ணீர் கேன் 40 ரூபாய் விலையில் என்று வைத்துக்கொண்டால்கூட 40000 ரூபாவை 20000 லிட்டர் தண்ணீருக்காக கடைக்காரர்கள் செலவிடுகிறார்கள். முறையாக விநியோகிக்கப்படும்பட்சத்தில் இந்த இருபதாயிரம் லிட்டர் குடிநீருக்கு மாநகராட்சி வாங்குவதோ வெறும் 90 ரூபாயாகத்தானே இருக்கும்?

மனிதனின் அடிப்படை உரிமையான தண்ணீரைத் தனியார்வசம் வழங்குவது தற்சார்பைக் குலைத்துவிடுமாம். இன்று குடிநீரை வழங்குவதற்கு காசு கேட்பவர்கள் நாளை கழிவுநீரை வெளியேற்றவும் காசு கேட்பார்களாம். ஆயிரம் அடிக்கு துளையிட்டு பிவிசி குழாயில் கட்டடத்தின் மேலே சைன்டிஃபிக் வாஸ்து சொன்னபடி தென்மேற்கு மூலையிலிருக்கும் சின்டெக்ஸ் தொட்டிக்கு ஏற்றி வெஸ்டர்ன் வாட்டர் குளோசெட்டில் உட்கார்ந்து அலசிவிடுவதை பாதாள சாக்கடையின் வாயிலாக பாதுகாப்பாக எடுத்துச்சென்று சூலூருக்கு அந்தப்பக்கமாக நொய்யலில் கலந்துவிட்டு அங்குள்ள குடிமக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்வது தற்சார்பு என்பதில் எந்த அத்தியாயத்தில் வரும்? ஆர். எஸ். புரத்திலும், சிங்காநல்லூரிலும், கவுண்டம்பாளையத்திலும் இருப்பவர்களுக்கு பாதாள சாக்கடை வசதிகளாவது இருக்கிறது. காளப்பட்டிக்கு அருகில், பெரியநாயக்கன்பாளையத்துக்கு அருகில் புதிதாக முளைத்திருக்கும் நகர்களுக்கு அடிப்படை சாக்கடை வசதியே இல்லை; குளியலறை, சமையலறைக் கழிவுநீரை ஒவ்வொரு வீட்டிலும் choke pit அமைத்து அங்கேயே நிலத்துக்குள் செலுத்தி அதையே திரும்ப எடுத்து பயன்படுத்துபவர்களும் அதே வரியைத்தானே செலுத்துகிறார்கள்?

சொல்லப்போனால் கோயமுத்தூரின் 90% வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி பெயரளவில்கூட இல்லை. கான்கிரீட்டால் மூடப்பட்ட நகரில் மழை பெய்தால் ஒருமணிநேரத்தில் வடிந்து விடும். நிலத்தடி நீர் recharge ஆனால்தானே நீர்மட்டம் உயரும். Glossy லுக் குறையாமல், சிறுசிறு திவலைப் படலங்கள் இல்லாமல் இருக்க பில்லூர்/சிறுவாணி அணையின் நீரில் கோவை நகர எல்லைக்குள் கழுவப்படும் ஒவ்வொரு ஃபார்ச்சூனர், பென்ஸ் கார்களுக்கும் பவானி ஆற்றின் கடைமடையில் இருக்கும் விவசாயி வருடம் கொஞ்சமாக முதலீடு செய்து குறைந்த மகசூலில் நிறைய சாகுபடி செய்யும் தொழில் நுட்பங்களுக்கு மாறவேண்டும். (இஃதெல்லாம் Participatory Irrigation Management- இல் வருகிறது. அதைத் தனியாக ஒருநாள் பர்ப்போம்).

நூறு யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஏழைகளுக்கு அரசாங்கம் மானியம் தருகிறது. ஆயிரம் யூனிட் பயன்படுத்துபவர்கள் தங்களது கட்டண விகிதம் மொத்தமாக மாறுகிறது என்பதற்காக மாதாமாதம் கணக்கெடுக்க வேண்டும் என்கிறார்கள், டிஜிட்டல் இன்வெர்ட்டர் தொழில்நுட்பங்களுக்கு வரிக் குறைப்பு அல்லது மானியம் வேண்டும் என்றெல்லாம் என்னென்னவோ சொல்லி லாபி செய்கிறார்கள். இந்த பணக்காரப் பிச்சைக்காரன்கள் இதையெல்லாம் நாளேடுகளில் எழுதி அதை புத்திசாலித்தனம் என்று நிறுவுகிறார்கள். இன்று பல வீடுகளில் தொட்டி நிறைந்து சாலைகளில் ஓடி சாக்கடையில் கலக்கிறது சிறுவாணி நீர். அட விடுப்பா,போனா போகட்டும் என்கிறார்கள்; அதை மூடுவதற்கு ஒரு கேட்வால்வு கூட பல வீடுகளில் இருப்பதில்லை. ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 200 லிட்டர் வீதம் கணக்கிட்டு மிகக்குறைந்த கட்டணமோ அல்லது இலவசமாகவோ வழங்கிவிட்டு மீதிக்கு மின்சார வாரியம் மாதிரி Slab rate போட்டு இழுத்தால் தண்ணீர் தட்டுப்பாடே வராது. மீதமிருக்கும் நீர் ஆற்றிலாவது ஓடிக்கொண்டிருக்கும். இன்றுதான் ஆதார் கார்டு, Big data, Artificial Intelligence என ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கிறதே.

கார்ப்பரேட் கம்பெனியான சூயஸ், இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு ஏழைபாழைகளை நசுக்குமாம். ஆனால் தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், கோவில்கள் போன்றவற்றிற்கு Bulk connection என்றபெயரில் இருக்கும் இணைப்புகளுக்கு இந்த டெண்டரில் இடமே இல்லை. பல்க் கனெக்‌ஷன் எல்லாமே கோவை மாநகராட்சி தன்வசமே வைத்துக்கொண்டிருக்கிறது. அப்ப சரி, மாநகராட்சி வசம் இருக்கிறது என்றால் அதில் ஊழல், குளறுபடி, லாபி என எதுவுமே இருக்காது என்றால் நம்பமாட்டார்கள் அஃதெப்படி, அரசாங்கம் எதையாவது உருப்படியாக நடத்தியிருக்கிறதா என்ற கேள்வி எக்கி நிற்கிறது.

2045-இல் கோவை நகர மக்கள்தொகையை கணக்கிட்டு 24 மணிநேரமும் தண்ணீர் வழங்கும்படியாக ஆயிரத்து சொச்சம் கோடிகளில் ஆங்கிலேயர் காலத்துக் குழாய்களையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு அனைத்து இணைப்புகளிலும் மீட்டர் பொறுத்தி GIS மூலமாக செயல்படுத்தப்பட்டுவரும் இந்த திட்டம், அவினாசி-அத்திக்கடவுத் திட்டம் என்றபெயரில் ஏற்படவிருந்த சுற்றுச்சூழல் சீ்ரழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவையும் வீடுகள், நிறுவனங்களுக்கு வழங்கப்படும்போது மீட்டரில் காட்டும் அளவையும் ஒப்பிடும்போது 20% நீரைக் காணவில்லை என்று மாநகராட்சியே ஓப்புக்கொள்கிறது. மீட்டர் இல்லாமல், மாநகராட்சிக்கே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் திருட்டு இணைப்புகள் தெருவுக்கு இரண்டு இருக்கும் என்பது ஊரறிந்த இரகசியம்.

அறுபது வார்டுகளின் உறுப்பினர்கள் முன்னிலையில் மாநகராட்சில் தீர்மானம் போடப்பட்டு கெஜட்டில் வெளியிடப்படும் விலைதான் மக்களிடம் சூயஸ் நிறுவனத்தால் வசூலிக்க முடியும். GIS மூலம் இணையத்தில் பிணைக்கப்படும் பயனர் விவரம் மூலம் தண்ணீர் பயன்பாடு குறித்த அனைத்து விவரங்களையும் ஒளிவுமறைவில்லாமல் பார்க்கமுடியும் எனபதோடு, கட்டணம் செலுத்துதல், புகார்கள் என அனைத்தும் டிஜிட்டலாகும்.

ஒருசாரார் அணைகள் எல்லாம் அந்த கம்பெனி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று கதை விடுகிறார்கள். அணைகளில் நீர் எடுக்கும் தொட்டிகள், மின் எக்கிகள் (electric motors), குழாய்கள் போன்றவற்றின் பராமரிப்பு மட்டுமே அந்த நிறுவனத்தின் scope-இல் வருகிறது. அணைகளை அந்த நிறுவனம் எடுத்துப் பராமரிக்கும் எனபது கேட்பதற்கே முட்டாள்தனமாக இருக்கிறது.

ஏதோ இத்திட்டம் இரகசியமாக நடந்து முடிந்துவிட்டதாகவும் கதை உலவுகிறது. 2008-இல் திட்டமிடப்பட்டு, பலகட்ட ஆய்வுகள், விசாரணைகள், detailed project report என படிப்படியாக வளர்ந்து ஓப்பன் டெண்டருக்கு வந்துள்ளது. 500 கோடிக்கு மேல் டெண்டர் என்றால் சர்வதேச அளவிலான குளோபல் டெண்டர் முறையைப் பின்பற்ற வேண்டும் என்பது விதிமுறை. நீர் மேலாண்மையில் முறையான அனுபவமுடைய பிரான்சு நிறுவனம் குறைந்த ஒப்பந்தப்புள்ளி கோரி எடுத்திருக்கிறது. ஏப்ரல் மாதம் கம்பெனி பதிவுசெய்து ஜூன் மாதம் 15000 கோடிக்கு இராணுவத் தளவாடங்கள் தயாரிப்புக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத, மோடியின் நண்பரான அம்பானியின் கம்பெனிக்கு அரசுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸை பின்னுக்குத் தள்ளி டெண்டர் கிடைத்தபோது கமுக்கமாக இருந்த தேசபக்தர்கள் இப்போது குதிப்பதில் ஆச்சரியமில்லை.

மேற்கு மாவட்டங்களில் மின்வெட்டு பிரச்சினை திமுகவுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கியது. அதன்பின்னர் அதீத விலைக்கு தனியாரிடம் மின்சாரம் வாங்கி மின்சார வாரியத்தை திவாலுகும் நிலைமைக்கு அதிமுக அரசு கொண்டுசென்றாலும் மக்களுக்கு அதைப்பற்றி கவலை இருந்ததில்லை. சமூக நீதி, உட்கட்டமைப்புகள், சட்டப் பாதிகாப்புகள், வேலைவாய்ப்புகள் என பல கோணங்களிலும் நல்ல எழுச்சி ஏறபட்டு ஒரு பாதுகாப்பான வாழ்க்கை அமையும்போது நான் நன்றாக இருந்தால் போதும் என்கிற சராசரி நடுத்தர வர்க்க மனநிலைக்கு மக்கள் திரும்பி விடுகின்றனர். போராட்ட குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. கம்யூனிசம் கோயமுத்தூரில் காணாமல் போனதே சாட்சி. குடிநீர் வரிக் கட்டணம் ஏறாதபோது தினமும் தண்ணீர் வருகிறது என்றால் மக்கள் வரவேற்கவே செய்வார்கள். அஃது அரசாங்கத்தால் செய்யப்படுகிறதா, தனியாரால் செய்யப்படுகிறதா என்று பொதுசனம் கவலைப்படாது. இந்த திட்டத்தைத் திமுக எதிர்ப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியாக இருக்கிறது.

வீடுகளில் ஆழ்துளைக்கிணறு அமைப்பதையும் அந்த நிறுவனம் கட்டுப்படுத்திம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் போர்வெல் அமைப்பது மாநகராட்சி சட்டதிட்டத்தின் கீழ் வருகிறது. அந்நிறுவனத்துக்கும், போர்வெல்லுக்கும் எதுவுமில்லை. இன்று எல்லோரும் மாநகராட்சி சட்டத்தைக் கடுகளவும் மீறாத மாதிரியும், மக்களது நேர்மையை களங்கப்படுத்துவது மாதிரியும் ரொம்பத்தான் கூவுகிறார்கள்!

லைசன்ஸ் இராஜ்ஜியத்தில் வளர்ந்த பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு சமூக மதிப்பீடுகள், மாறிவரும் வியாபார சூழல்களினால் ஏற்படும் அதிர்ச்சியின் ஒரு வெளிப்பாடாகவே இத்தகைய எதிர்ப்புகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *

3 thoughts on “கோயமுத்தூரின் குடிநீர் வழங்கலைத் தனியார் நிறுவனம் எடுத்திருப்பது தொடர்பான சர்ச்சையின் மறுபரிமாணம்”

  1. நல்லதொரு அலசல் சுருக்கென உறைக்கும் படியான கட்டுரை எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு எதை செய்தாலும் குற்றம் செய்யாவிட்டாலும் குற்றம்

  2. திருப்பூருக்கு குடிநீர் மற்றும் சாயதொழிற்ச்சாலைகளுக்கான நீரை தனியாரிடம் வாங்கசொன்னபோது இதேபோல எதிர்ப்புகள் வந்தது … அனால் இப்போது பஞ்சாயத்துகளே நீரை அந்த கம்பெனியிடம் இருந்துதான் வாங்குகின்றன …

    தண்ணீரலாரிகளின் பேயாட்டம் , விபத்துக்கள் , இலவசமின்சாரத்தை தண்ணீர் விற்பனைக்கு பயன்படுத்துவது , கணக்கில்லாமல் நீர்வளத்தை சுரண்டுவது போன்றவை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது … தொழில்சாலைகளுக்கும் தடையின்றி நீர் கிடைக்கிறது

  3. சூப்பர் ஜி. நல்லா விலாசியிருக்கிங்க. எங்க தடிக்கணுமோ அங்க தடிக்கட்டும்.

Comments are closed.