கூடு திரும்புதல் என்ற பெயரிலான சமகால சூழலியல் பயங்கரவாதம்

தாராபுரத்தில் பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்றபோது நாட்டுக் கடுகு விதைக்க தன்னார்வலர்கள் தாராபுரம் வருவதாக அங்கிருந்த துண்டேடுகள் சொன்னது.

கடுகு தமிழகத்தில் வர்த்தக ரீதியாகவோ, வீட்டுப் பயன்பாட்டுக்காகவோ விளைவிக்கப்படுவதில்லை. அப்படியே யாராவது முயற்சித்தாலும் வணிகரீதியாக வட இந்தியாவில் வளரும் இரகங்களை வாங்கி பயிரிடுவார்கள். அத்தகைய பயிர் அறுவடைக்குப் பின்னர் பிசிறில்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும் (அழிந்தும்விடும்). நாட்டுக் கடுகு இரகங்கள் என்பது பரவலாக வர்த்தகரீதியிலான சாகுபடியில் இல்லாதவை. ஆனால் wide adaptability உடையவை என்பதால் பலதரப்பட்ட பருவ சூழலிலும் தாக்குப்பிடிக்கவல்லவையாகவே இருக்கும்.

மரபணு மாற்றப்பட்ட கடுகு இரகத்தை எதிர்க்கிறேன் பேர்வழி என்று நாட்டுக் கடுகு இரகத்தை தமிழ்நாடு முழுவதும் திரு. ம. செந்தமிழன் அவர்களின் சீடர்கள் விதைத்து வருகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு டன் அளவிலான விதை பரப்பப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓர் உயிர்ச்சூழலில் இல்லாத ஒரு தாவரம் செயற்கையாக அறிமுகப்படுத்தப்படும்போது அதற்கு பரந்த தகவமைப்புத்திறன் இருக்கும்பட்சத்தில் அங்குள்ள இயல்பான உள்ளூர் தாவரங்களைக் காட்டிலும் மிக வேகமாகப் பல்கிப் பெருகி ஆக்கிரமித்துக்கொள்ளும். அழகுச் செடியாக அறிமுகப்படுத்தப்பட்ட Lantana camara செடி இன்று காடுகளுக்குள்ளும் ஆக்கிரமித்திருக்கிறது (கமென்ட்டில் படம் இருக்கிறது). தெரியாமல் வந்திறங்கிய பார்த்தீனியம், விவசாய நிலங்களை ஆக்கிரமித்தது குறித்து பெரிய விளக்கம் தேவையில்லை.

மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து நாட்டுக் கடுகு இரகங்களை விதைப்பதாக இருந்தால் பஞ்சாப், இராஜஸ்தான் மாநிலங்களுக்குச் சென்று ஊர் ஊராக விதைத்திருக்க வேண்டும். தமிழகத்துக்கும் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கும் சம்பந்தமே இல்லாதபோது அதை எதிர்ப்பதாகச் சொல்லி, புழக்கதில் இல்லாத, எந்த விதத்திலும் தேவையும் இல்லாத நாட்டுக் கடுகு இரகங்களை பரப்புவது என்பது தெரிந்தே ஒரு புதிய களைச்செடியை அறிமுகம் செய்யும் செயலாகும்.

ஒரு நாட்டுக்குள் நாசகார கிருமிகள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை அனுப்பி மக்களை நூதனமாகக் கொல்வது Bio terrorism எனப்படுகிறது. மக்களை நேரடியாகக் கொல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார ரீதியாக நலிவடையச் செய்யும் உத்திகள் ஒருவகையான மறைமுக bio terrorism ஆகும். அதில் களைச்செடிகளைப் பரப்புதல், ஆபத்தான பாசி, பூஞ்சாணம், மீன் இரகங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவையும் அடங்கும்.

தற்சமயம் சந்தையில் இருக்கும் ஒரே systemic, non-selective, post emergent herbicide என்பது மான்சாண்டோவின் Roundup (கிளைஃபோசேட்) மட்டுமேயாகும். தமிழகத்தில் இன்று வலிந்து திணிக்கப்பட்டுவரும் நாட்டுக் கடுகுச்செடிகள் களையாக மாறி விவசாய நிலங்கள், ஏரிகள், கண்மாய்களை ஆக்கிரமிக்கும்போது ரவுண்டப் தெளிக்காமல் கட்டுப்படுத்தவே இயலாது எனும்போது களைக்கொல்லி வர்த்தகம் யாருக்காக நடக்கும் என்பதற்கு இதற்கு மேலும் விளக்கம் தேவையிருக்காது. கடுகுச்செடியினை களையாகக் கருதி அதை அழிப்பதற்கு திட்டமிடுதல், செயல்படுத்துதல் என வேளாண்மைத்துறையினரின் நேரம் மட்டுமல்லாது அதை சீராய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் முதல் அமைச்சர்கள் வரை எவ்வளவு பேரின் நேரத்துக்கும், மக்களின் வரிப்பணத்துக்கும் வீண் விரயம் வர இருக்கிறது என்பதை சமூகப் பொறுப்புள்ளவர்கள் அறிவார்கள்.

கடுகு குறித்த உரையுடன் விதைச் சட்டம் குறித்தும் திரு. ம. செந்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றை பேஸ்புக்கில் கேட்க நேரிட்டது. அதன்படி விதைச் சட்டம் என்பது விவசாயிகளை நசுக்கும் ஒரு கொடுங்கோல் சட்டம் என்று பேசுகிறார். அதை 15 நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்த வேண்டியிருந்தது. விவசாயிகள் ஒருவருக்கொருவர் இலவசமாக விதைகளைப் பரிமாறிக்கொள்ளலாம்; அதில் எந்த சட்டரீதியான தடையும் இல்லை. ஆனால் ஒரு விவசாயி இன்னொரு விவசாயிக்கு விற்றால் விதைச் சட்டத்துக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது, இது பெரிய மோசடி என்ற ரீதியில் பேசுகிறார். விவசாயம், வியாபாரம், நுகர்வோர் பாதுகாப்பு, உற்பத்தியாளர் பாதுகாப்பு, அரசாங்க கட்டுப்பாடுகள், வரி போன்ற எதுவுமே தெரியாத ஒருவரால்தான் அவ்வாறு பேச முடியும். தினந்தோறும் நாம் சந்திக்கும் நபர்களில் யாராவது இவ்வாறு பேசினால் மொக்கை ஆசாமி என்றோ, அறுவைக் கேசு என்றோ சொல்லி, பார்த்தாலே ஓட்டம்பிடிக்க ஆரம்பிப்போம்.

விதைகளை உற்பத்தி செய்தவர் விற்பனை செய்யும்போது வியாபாரி ஆகிவிடுகிறார். வியாபாரம் செய்யும்போது எடை, தரம், எண்ணிக்கை என பலதரப்பட்ட விசயங்கள் கணக்கில் வருவதோடு அரசாங்கத்துக்கு அதில் வரி வருவாயும் கணக்கில் வந்துவிடுகிறது. ஊருக்குள் விதை விற்பனை செய்பவர் பெரிய நாட்டாமையாக இருந்து வாங்கிபவர் சாதாரண ஆளாக இருந்து, விதையானது எடை குறைவாகவோ, முளைப்புத்திறன் குறைவாகவோ இருந்தால் வாங்குபவருக்கு பாதுகாப்பு சட்டம் இல்லாமல் போனால் எப்படி கிடைக்கும்? விற்பவர் சாதாரண நபராக வாங்குபவர் பெரும்புள்ளியாக இருந்து, அந்த நபர் பொய்யாக எடை குறைவாக இருக்கிறது, முளைக்கவில்லை என்று தகராறு செய்தால் விற்பவருக்கு சட்டம் இல்லாமல் போனால் எப்படி பாதுகாப்பு கிடைக்கும்? நாளையே திரு. செந்தமிழன் போன்ற செல்வாக்குமிக்க நபர்கள் விற்கும் விதை முளைக்கவில்லை அல்லது எடை குறைவு என்று யாராவது புகார் செய்தால் சட்டம் என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் வாடிக்கையாளருக்கு எப்படி நியாயம் கிடைக்கும்? சட்டப்படி கணக்குவழக்கு இல்லாவிட்டால் அரசாங்கத்துக்கு வரி வருவாய் எப்படி கிடைக்கும்?

தந்தை மகனுக்கோ, மகளுக்கோ அவரது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை எழுதி வைக்கும்போது கூட அரசுக்கு செலுத்தவேண்டிய குறைந்தபட்ச முத்திரைத்தாள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஒரு விவசாயி (தன் மகனாக இருந்தாலும்) இன்னொரு விவசாயிக்கு நிலத்தை எழுதிவைக்க எதற்காக கட்டணம் செலுத்தவேண்டும் என்று நாம் கேட்பதில்லை. ஆனால் திரு. செந்தமிழன் அவர்கள் கேட்கக்கூடும். ஏனென்றால் சுற்றுச்சூழல் போராளிகள் வானத்திலிருந்து குதித்தவர்கள்; எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாதவர்கள்.

ஆயிரம்தான் நாம் விமர்சனம் செய்தாலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை இந்தியாவிலேயே சிறப்பான ஒன்று. தமிழகத்தில் ஏன் வட இந்தியாவைப்போல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை என்றால் அதில் பல ஆயிரக்கணக்கான வேளாண் அதிகாரிகளின் உழைப்பு இருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய Compliance சுமை தமிழகத்தில்தான். ஒவ்வொரு நிகழ்வையும் நெருக்கமாக கவனிப்பதும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன், தொழில் முனைவோருடன் அரசு அதிகாரிகள் நல்லமுறையான தகவல் தொடர்புகளைப் பேணுவதிலும் தமிழக அரசு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்னோடிகளாகவே திகழ்கின்றனர். மற்ற மாநிலங்களில் வேளாண்மைத்துறை, விவசாயப் பல்கலைக்ககழக அதிகாரிகளுடன் நெருங்கி பணிபுரிந்த பலருக்கும் இது தெரியும். பூச்சிக்கொல்லி, உரம், விதைக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை தீவிரமாக மதித்து அமுல்படுத்தும் மாநிலங்களுள் தமிழகம் முதலிடத்தில்தான் இருக்கிறது.

சூழலியல் குறித்த எந்த புரிதலும் இல்லாமல் நாட்டு இரகம், வனம் வளர்ப்பு என்று கிளம்பிவரும் மறைமுக உயிரியல் தீவிரவாதம் நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கவல்லது.

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *