கரையான், திடீர் ஈசல் தொல்லைகள்

உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா? அழைக்கவும் 1800 கஜமுஜ கஜமுஜ என்று ஆங்காங்கே நம்பர் தொங்குவதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கரையானை வைத்து நம் முன்னோர்கள் நடத்திய அதிசயத்தை இப்போது பேஸ்புக், வாட்சப்பில் படித்து வியந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கரையான் புற்றைப்பற்றி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஸ்காட் டர்னரும், மகாதேவனும் கடந்த 26 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்கிறார்கள். புற்றுகளை புரொப்பேன் கொண்டு நிரப்புவது, லேசர் மூலம் அளப்பது, பிளாஸ்டர் மூலம் மூடிப்பார்ப்பது, microscopic beads, fluorescent green water போன்றவற்றை உணவில் கொடுத்து புற்று பக்கத்திலேயே படுத்துக்கொண்டு ஆராய்ச்சிசெய்து பல அறிவியல் சஞ்சிகைகளில் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள்.

கரையான் புற்று என்பது நுரையீரல் மாதிரி ஒரு சுவாசிக்கும் அமைப்பு. தரைக்கு மேலே பல அடி உயரம் இருந்தாலும் கரையான்கள் குடியிருப்பது என்னவோ மண்ணுக்குள் வெகு ஆழத்தில். வெயில் பட்டு புற்றின் மேல்பகுதியில் உள்ள காற்று சூடாகி விரிவடையும்போது அடியிலிருந்து குளிர்ந்த காற்று வேறு துளைகள் வாயிலாக உள்ளே நுழைந்து வெப்பநிலையை மட்டுப்படுத்துகிறது. குளிர் அதிகமாக இருக்கும்போதும் இது பின்னோக்கி நடக்கிறது. அதனால் புற்றின் ஆழத்தில் வெப்பநிலையும், ஆக்சிஜன் அளவும் திறம்பட நிர்வகிக்கப்பட்ட மிகவும் அருமையான சூழல் இளம் கரையான்களுக்கும், மொத்த காலனிக்கும் கிடைக்கிறது. காற்று வீசும் திசை, காற்றின் ஈரப்பதம், வெப்பம், காற்றிலுள்ள நச்சுப்புகைகளின் அளவை கருத்தில்கொண்டு எந்த பகுதியில் திறக்கவேண்டும், மூடவேண்டும் என்பதை வேலைக்கார கரையான்கள் செய்துவிடுகின்றன.

ஒரு இராணி கரையான் 15 ஆண்டுகள் உயிர்வாழும், புற்றை அழிக்கவேண்டுமெனில் வெகு ஆழத்துக்கு தோண்டி இராணியை கண்டுபிடித்து நசுக்குவதுதான் ஒரே வழி. அல்லது அவ்வளவு ஆழத்துக்கு செல்லுமளவுக்கு பல துளைகளையிட்டு விஷத்தை ஊற்றவேண்டும். இராணி குறைந்தது ஒரு இன்ச் நீளத்துக்கு ஒரு பெரிய புழுவாக தெரியும்.

பருவசூழ்நிலை சரியாக இருக்கும்போது புதிய இடத்தில் காலனி அமைக்க வேண்டுமல்லவா? அதற்காக பாதி அளவிற்கான கரையான்கள் புற்றிலிருந்து இறக்கை முளைத்து ஈசலாகி (Alates) பறக்க ஆரம்பிக்கும். அந்த Nuptial flight-இன் போது ஈசல்கள் இலக்கில்லாமல் குத்துமதிப்பாக பறந்து ஆண்பூச்சிகள், பெண்பூச்சிகளின் வாசனைமூலம் உணர்ந்து கலவியில் ஈடுபட்டபின் எங்காவது விழுந்து இராணியாகி புதிய காலனியை ஆரம்பிக்கிறது. Inbreeding ஆகக்கூடாது என்பதற்காகவே எல்லா காலனிகளிலிருந்தும் ஈசல்கள் ஒரே நேரத்தில் கிளம்பி வருகின்றன.

கரையான் புற்றின் ventilation system மாடலை Bio-mimicry அல்லது Bio-inspiration அடிப்படையில் பயன்படுத்தி ஜிம்பாப்வேயில் ஒரு பெரிய கட்டடத்தையே கட்டியிருக்கிறார்கள். கட்டடக்கலை நிபுணர்கள் பலர் அந்த மாதிரியான மாடலில் ஆராய்ச்சி செய்கிறார்கள். கீழே இருக்கும் சுட்டிகளைப் படித்து பார்க்கவும்.

richard wolff என்ற பேராசிரியர் மக்களின் வர்க்க வித்தியாசங்களை அழகாக வீடியோ மூலம் விளக்குகிறார். கரையான் புற்றுகளில் இருக்கும் Worker, Soldier, Male, Queen போன்றவற்றில் யார் யாரை ஆள்கிறார்கள் என்பதும், ஆனால் உண்மையில் யார் யாரால் ஆளப்படுகிறார்கள் என்பதும் வித்தியாசமான கோணத்தில் வருபவை. சமூகத்தின் Working lower class, Working middle, Upper middle and Elite class குறித்த ரிச்சர்ட் உல்ப் வீடியோவும் அருமையான ஒன்று. ஈசல்கள் வருவதைப்போல நமது சமூகத்திலும் திடீர் குபீர் போராளிகள் வருகிறார்கள். ஈசல்களுக்காவது காலனியைப் பெருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான், ஆனால் நமது போராளிகளுக்கோ ஏகப்பட்ட மறைமுக குறிக்கோள்கள். அதற்காகவே இருக்கும் standard template-களில் கருணாநிதி ஒழிக, இந்தி தெரியாததால் வீணாப்போனோம், இட ஒதுக்கீடால் குவாலிட்டி போச்சு சார், இப்பலாம் யார் சார் சாதி பாக்குறா, இலவசத்தால நாடு குட்டிச்சுவரா போச்சு, யூனியன் வெச்சுத்தான் ஸார் நாடு கெட்டுது, திராவிட கட்சிகளால்தான் தமிழ்நாடு கேட்டுது போன்றவற்றில் ஏதாவது ஒரு டெம்ப்ளேட்டை பிடித்துக்கொண்டு சிலகாலம் ஈசல் மாதிரி ரேண்டமாக பறப்பார்கள். ஆண்ட பரம்பரை, பெண்ணியம் போன்ற peculiar template-களும் உண்டு.

அத்தகைய டெம்ப்ளேட் பிடிக்க முடியாதவர்கள் ‘என்னே நம் முன்னோர்களின் மதிநுட்பம்’ என்ற கான்செப்ட்டை எடுத்துக்கொள்வார்கள். கரையான் புற்றை தோண்டி கிணறு வெட்டினால் நிறைய தண்ணீர் வரும், மெட்டி அணிவதின் பிஸியாலஜிகல் சிறப்புகள், ஜட்டி அணியாமல் பட்டாபட்டி அணிவதின் இரகசியங்கள், திருமணத்தின்போது பட்டுசேலை அணியக் காரணம் ஓசோன் கதிர்வீச்சை தடுப்பது, அந்த காலத்தில் இயற்கை விவசாயம் செய்து அத்தனைபேரும் நூறாண்டு வாழ்ந்தார்கள், எல்லாருமே பத்து குழந்தைகள் பெற்றார்கள், நெருப்பு கண்டுபிடிக்கும் முன்னரே A2 பால் குடித்து வளர்ந்தவன் தமிழன் என்று முட்டாள்தனமான விசயங்களுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் பரப்புவார்கள். ஆயிரம் விஷயங்கள் அந்தகாலத்தில் இருந்திருந்தாலும் அதை அறிவியல்பூர்வமாக ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்டுவிட்டு எல்லாமே வேதத்தில் இருந்தது, புராணத்தில் இருந்தது அவை அழிந்துபோக ஆங்கிலேயனும், திராவிட அரசுகளும்தான் காரணம் என்ற சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தால் இன்னும் பின்னாடிதான் போவோம்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கோஷ்டி அகமதாபாத்தில் புல்லெட் ரயில் ஓடுகிறது என்று ஜப்பானின் ரயிலைக் காட்டுவது, சூரத்தின் எக்ஸ்பிரஸ் ஹைவே என்று சீனாவின் இடதுபுற ஸ்டியரிங் உள்ள பேருந்தை காட்டுவது, நெதர்லாந்தில் வனவிலங்குகள் நெடுஞ்சாலையைக் கடக்க அமைக்கப்பட்ட வன மேம்பாலங்களை கிர் காட்டில் இருக்கிறது என்று போட்டது, ஜெர்மனியில் சிறிய கப்பல்கள் செல்லும் ஆற்றைக்காட்டி முதன்முறையாக ஆற்று ஓரத்தில் காற்றாலையுடன் கூடிய நெடுஞ்சாலையில் வலப்புறம் செல்லும் வாகனங்களும் ஆற்றில் கப்பலுமாக ஜாம்நகருக்கு பக்கத்தில் போவதாக வளர்ச்சி வளர்ச்சி என்று காட்டிக்கொண்டிருந்த கோஷ்டி இது Off-season என்பதால் “நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல” என்ற சீரிஸ் ஆரம்பித்து பரப்புகிறார்களோ என்று தோன்றுகிறது!

எது எப்படியோ, கரையான் புற்றுக்கடியில் கிணறு வெட்டினால் நிச்சயம் தண்ணீர் வரும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது என்பதற்காகவே இந்தப் பதிவு.

http://news.nationalgeographic.com/news/2014/07/140731-termites-mounds-insects-entomology-science/

The termite mound: A not-quite-true popular bioinspiration story

http://www.esf.edu/efb/turner/termitePages/termiteGasex.html

https://www.amentsoc.org/insects/glossary/terms/nuptial-flight

How Class Works:

Author: Prabu RS

* Views expressed here are personal * With consent, anyone can use the essays anywhere * Write to me at PRABU48@GMAIL.COM * In HAM radio VHF repeaters of Tamil Nadu, call me as VU3WWD *